“என்ன சித்தப்பா எட்டி எட்டிப் பார்க்கிறீங்க?” லாலா சித்ரஞ்சன் பின்னே நின்று கேட்டான்.
“ம்ம், உன் சித்தியைத்தான் தேடுறேன். வெளியேவே காணும்.” என்றபடி திரும்பிய சித்ரஞ்சன் தாடையைத் தடவியபடி யோசனையோடு
“டேய் லாலா! காலையில இருந்து உன் சித்தி நம்ம வீட்டுப் பக்கம் வரலயாடா?” என்றான்.
“காலையில போன நீங்களே இப்பதான் வரீங்க. சித்தி பதினைஞ்சு வருச ப்ளாஷ்பேக் சொல்லிட்டு வரணும்ல. லேட்டாகும்தானே சித்தப்பா. வராங்களோ இல்லை தாத்தா விடாம இருக்காரோ?” என்று வேண்டுமென்றே சொல்ல சித்ரஞ்சன் முறைத்தான்.
“அதெல்லாம் வசு வராம இருக்க மாட்டா”
“அப்புறம் ஏன் காம்பவுண்ட் சுவரை எட்டிப்பார்த்து நிக்குறீங்க?”
“போன் வச்சிட்டு போய்ட்டா, எப்படி கூப்பிடுறது தெரியல”
சித்ரஞ்சன் புலம்பினான். வசுந்த்ரா பெற்றவரோடு அண்ணனுடன் நேரம் செலவிடட்டும் என்று நினைத்தாலும் மனைவி வரவில்லையே என்று மனது அடித்துக்கொண்டது.
“என்ன சித்தப்பா சித்தியைக் கூப்பிட இப்படி யோசிக்கிறீங்க? என்னமோ லவ்வரை கூப்பிடற மாதிரி இப்படி தயங்குறீங்க. என் ப்ரண்ட் பார்த்தீங்க இல்ல எப்படி கெத்தா வந்து நின்னான்?” என்றதும்
“ராஸ்கல்! நானே டென்ஷன்ல இருக்கேன் அடிவாங்காம ஓடி போயிடு” என்று சித்ரஞ்சன் முறைக்கவும்
“இன்ஸ்பெக்டருக்கு இருக்க தைரியம் ஏடிஎஸ்.பிக்கு இல்லை.. ஸோ சேட்” என்றபடி லாலா நகர
“டேய்! இந்த சித்ரஞ்சன் சாபம் உன்னை சும்மா விடாதுடா. வசு வரட்டும் அப்புறம் உன்னை கவனிச்சிக்குறேன். நீயும் ஒரு நாள் காதலிப்ப அப்போ பார்த்துக்கிறேன்” என்றான் சித்ரஞ்சன்.
“சித்தப்பா! சின்ன கரெக்ஷன் இல்ல பெரிய கரெக்ஷன். நீங்க செஞ்சது காதல் இல்லை கட்டாயக் கல்யாணம்”
லாலா கண்கள் சிரிப்பில் விரிந்தன.
“டேய் லாலா லத்தி சார்ஜ் தெரியுமா?” சித்ரஞ்சன் கம்பு எதாவது கிடைக்கிறதா என்று சுற்றிலும் பார்க்க
லாலாவுக்கு சித்ரஞ்சனின் உணர்வுகள் அந்த நேரம் புரியவில்லை. சித்ரஞ்சனுக்கு உண்மை சொன்னபின் மனது லேசாக இருந்தது, ஆனாலும் மனைவியைத் தேடினான். அவள் வீட்டில் என்ன சொல்லியிருப்பார்கள் என்ற கேள்வி, கேள்வி தந்த கவலை என்று குழப்பத்தில் சுற்றியவன் வீட்டினுள் நுழைந்தான்.
சித்ரஞ்சன் வீடு வந்து சேர்ந்தபோது பொழுது சாய்ந்திருந்தது. மகன் உள்ளே நுழையவும் அஞ்சம்மா,
“ஏம்பா எங்க போன நீ? உன் பொண்டாட்டியும் காலையில போனவ அந்தி சாஞ்சும் இன்னும் அப்பன் வீட்ல இருந்து வரல” என்று புலம்பினார்.
“உன் மகன் செஞ்ச வேலைக்கு அவங்கப்பன் அனுப்புறானோ இல்லையோ” என்று திலகர் கோபமாக சொல்ல சித்ரஞ்சன் அதை கேட்டதும் கோபமாக அவன் அறைக்கு வந்துவிட்டான்.
காலையில் சித்ரஞ்சன் சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம் பகத் எழுந்து அம்மா எங்கே என்று கேட்டான். சரோஜினி தாத்தா வீட்டுக்குச் சென்றிருக்கிறார் என்று சொல்லவும் அவனும் யோசிக்காது,
“ஐய் சூப்பர், நானும் தாத்தா வீட்டுக்குப் போறேன்” என்று கிளம்ப லாலா உடனே
“ஏண்டா அப்படியா நாங்க உன்னை கொடுமைப் படுத்துறோம்? உடனே அங்க ஓடனும்னு நிக்கிற. சித்தியே உன்னை வந்து கூப்பிட்டா போகலாம். கொஞ்ச நேரம் இரு” என்றான். அங்கே என்ன சூழலோ, சிறுவன் முன் அதெல்லாம் பேச முடியாதே என்று லாலா தடுக்க திலகர் பேரனை பெருமை பொங்கப் பார்த்தார்.
“அப்படி சொல்லுடா லாலா! உனக்குத்தான் டா நம்ம வீட்டோட அருமை தெரியுது. நீ இந்த கலாட்டாவையெல்லாம் பார்த்துட்டு படிக்காம இருக்காத..” என்றபடி அவரின் கண்ணாடியைப் போட்டவர் கேலண்டரில் தேதியைப் பார்த்து
“இன்னும் இருபது நாள்ல உனக்குப் பரீட்சையிருக்குல. போய் படி” என்றதும்
“சரி தாத்தா” என்று லாலா அறைக்குப் போக, சரோஜினி அண்ணன் பின் போனவள்
“ஆனாலும் இத்தன கலவரத்திலேயும் நீ மட்டும் எஸ்கேப் ஆகிட்ட டா லாலா” என்றாள்.
என்ன என்று லாலா திரும்பிப் பார்க்க “அதான் கொஞ்சம் வருத்தமா இருக்கு. எல்லா அட்டென்ஷனும் சித்தப்பா பக்கம் போனதுல உன் பெஸ்ட் ப்ரண்ட் உன்கிட்ட பேசினதை எல்லாரும் மறந்துட்டாங்க பாரேன்.” என்று தங்கை சொல்ல
“அதுக்கென்னடி இப்போ?” என்றான்.
“நான் லவ் சொல்லி அடிவாங்கினேன், சித்தப்பாவும் அடி வாங்கினார். நீ சிக்காம போயிட்டியே டா”
சரோஜினி உச்சுக்கொட்டி சொல்ல லாலா தங்கையை முறைத்தான்.
“நான் என்னமோ வீட்ல அடியே வாங்காத மாதிரி பேசாதடி. அப்பா ரொம்ப வருஷம் கழிச்சு இப்போதான் உன்னை அடிச்சிருக்கார். என்னையெல்லாம் காலேஜ் படிக்கிற வரைக்கும் அடிச்சிருக்கார் தெரியும். கூட்டிப்பார்த்தா நாந்தான் அதிக அடி வாங்கியிருப்பேன்” லாலா தீவிரமாக சொல்ல
“அடி வாங்கினத ஆஸ்கார் வாங்கினவன் மாதிரி சொல்றான் பாரு, ஆனாலும் நீ அடிவாங்குவன்னு அன்னிக்கே தெரிஞ்சு தாத்தா உனக்கு லாலா லஜ்பதி ராய் பெயரை வச்சிருக்கார் பாரேன்” என்றாள் கிண்டலாக.
“அமைதியான போராடினவரைதான் அன்னிக்கும் அடிச்சானுங்க இன்னிக்கும் உன் அண்ணனை அடிக்கிறானுங்க. இதுக்கு நீ நியாயமா வருத்தப்படணும் சரோ” லாலா இப்படி சொல்ல சரோஜினி உடனே
“அவர் போராடினாரு சொல்லுடா ஒத்துக்கிறேன். நீயெல்லாம் என்னடா பண்ணின? உங்க எல்லாரையும் விட வச்ச பேரை ஒழுங்கா காப்பாத்தியிருக்கறது நாந்தான் டா. சித்தப்பா இப்போதான் உண்மையை சொல்லியிருக்கார். அட்லீஸ்ட் அவராச்சும் லவ் மேட்டர் பயந்தாரு. நீ ப்ரண்ட்ஷிப்பையே சொல்லாதவன். பேசாதடா லாலா” என்று திட்டினாள்.
“உனக்கென்னமா நீ லவ் பண்றேன் சொல்லிட்டு ஜாலியா சுதந்திரம் வாங்கிட்டு போயிடுவ. சித்தப்பா அப்பவே டாட்டா காட்டிட்டார். அவர் அடிவாங்கினா தடுக்க சித்தியாச்சும் இருக்காங்க, என் நிலைமை அப்படியா? இங்கதான் இருக்கணும். இருக்கவரைக்கும் பொய் சொல்லிட்டு உண்ஂமையை மறைச்சிட்டன்னு அதையே எல்லாத்துக்கும் சொல்லுவாங்க.”
“எனக்கும் உண்மை பேசத்தான் ஆசை, எங்க நம்ம குடும்பம் உண்மையைக் கேட்க தயாரா இல்லையே. நீ பாரு நேர்மையாய் லவ் பண்றேனு சொன்ன.. வேற ஒருத்தன வர வச்சு அவன் முன்னாடி சொல்லி அவனையும் கஷ்டப்படுத்தி நம்ம குடும்பத்தையும் அவமானப்படவில்லை. அதை புரிஞ்சிக்காம யோசிக்காம பொசுக்குனு அடிக்கிறாங்க. இவங்க பேச்சைக் கேட்டு உண்மையா இருந்தா சக்தி மாதிரி எனக்கு ஒரு நல்ல ப்ரண்ட் கிடைச்சிருக்க மாட்டான்” என்று லாலா சொல்ல
“இங்க பாரு சரோ! சக்தி உனக்கு எப்படிப்பட்ட லவ்வர் தெரியல எனக்கு. ஆனா நீயே இன்னிக்குப் பார்த்த இல்ல, உன்னை அடிச்சிட்டாங்கனு தெரிஞ்சதும் எதையும் யோசிக்காம சட்டுனு வந்து நின்னான்! அதுதான் சரோ சக்தி! நமக்கு ஒன்னுன்னா யோசிக்காம சக்தி வருவான்னு ஒரு நம்பிக்கை இருக்குல்ல அதான் அவன்! எனக்கெல்லாம் அந்த தைரியமில்ல.. அவனுக்கும் அவங்க வீட்டு மேல மரியாதை எல்லாம் இருக்கும். நமக்கு பயம்தான் நிறைய இருக்கு.” என்றதும்
சரோஜினிக்கு முதல் நாள் வரை சக்திவேல் மேல் கோபம்தான், ஆற்றாமைதான். இன்று காலை அவன் வந்து நிற்கவும் அந்த நொடி வேறு உணர்வு. எதையும் யோசிக்காது சரோஜினியை மட்டும் நினைத்து அவன் பேசிய கணங்களை அப்படியே நினைவில் நிறுத்தினாள்.
‘எனக்காக வந்தான்’ என்ற நினைவும் எத்தனை அன்பிருக்கு என்று வார்த்தையாக சொன்னாலும் எத்தனமில்லை(முயற்சி) என்றால் எதுவுமில்லைதானே? சக்தி அப்படியொன்றும் காதல் மன்னன் இல்லை.
“அது சரிதான், உன் ப்ரண்ட் சுமாரான லவ்வர்தான் பட் பெர்பெக்ட் ஹஸ்பண்ட் மெட்டீரியல்” என்றதும் லாலா கண்கள் விரிய
“அதென்னடி சுடிதார் மெட்டிரியல்? நாங்க பொண்ணுங்களை பிகர்னு சொல்லிட்டா மட்டும் பொங்கிட்டு வருவீங்க, எங்களை மெட்டிரியல் எல்லாம் சொல்றீங்க. நல்லா இருக்கு” என்றதும் சரோஜினி உடனே சிரித்தபடி
“டேய் அண்ணா அது எல்லாரும் சொல்றதுதான் ஹஸ்பண்ட் மெட்டிரியல், வைப் மெட்டிரியல்” என்று விளக்கம் சொல்ல
“சரோஜினி மேடம்! இப்போ நீங்க கொஞ்சம் வெளியே போனீங்கன்னா நான் என் ஸ்டடி மெட்டிரியலை படிச்சு உருப்பட்டு பாஸாகி சீக்கிரம் ஒரு வேலை கிடைச்சிட்டா எஸ்கேப் ஆகிடுவேன்.” என்றான்.
“வேளை வந்தா வேலை வந்துடும்டா லாலா. நீ டென்ஷன் ஆகாம படி”
“டீச்சர் ஆகிட்டாலே இப்படித்தான் பேச்சு வரும் போல. படிக்க சொல்றவனுக்கு டென்ஷன் இருக்காது, ரிசல்ட் எப்படி வந்தாலும் ஓகேன்னு இருக்கவனுக்கு பிரச்சனையுமில்லை பிபியும் இல்லை. எனக்கு அப்படியா? ரிசல்ட் வர அன்னைக்கு ஒரு சொந்தக்காரன் விடாம கேட்டு சாவடிக்கிறானுங்க” என்றான் எரிச்சலாக.
“விடுடா. இந்த வைகாசி வந்துட்டா உனக்கு நல்ல நேரம்னு நம்ம சிந்தனா சொல்லியிருக்காம். ஆத்தா சொல்லிச்சு”
“அடியே! சிந்தனா நந்தனா பேச்செல்லாம் கேட்டா என் நிலைமை துந்தனா துந்தனாதான். வைகாசி வரவரைக்கும் செர்வீஸ் கமிஷனை எக்ஸாமை தள்ளி வைக்கவா சொல்ல முடியும். போய் எனக்கு ஒரு வர டீ எடுத்துட்டு வா” என்றவன் ஜன்னல் கதவைத் திறந்துவைத்து சின்னதாக உள்ள மேஜையை அங்கே போட்டவன் புத்தகத்தை வைத்துக்கொண்டு உட்கார்ந்தான்.
“பால் இருக்குடா” என்று சரோ சொல்ல
“பால் இருக்கட்டும், பால் டீ குடிச்சி பித்தம் ஏறி என் தலை நரைக்கவா? நீ சொன்னதை செய்மா தங்கச்சி” என்றவன் தலை புத்தகத்தை விட்டு திரும்பவில்லை.
அங்கே சக்தி வீட்டில் காலை முதல் ஒரே பேச்சுதான். பாஸ்கரன் மனது ஆறவே இல்லை.
“இப்பவும் அவன்தான் வந்து சொல்லணும் நீ சொன்னா நாங்க கேட்டிருக்க மாட்டோமா வசு? அன்னிக்கே சொல்றதுக்கென்ன?” என்று தங்கையைக் கத்த
“அதானே! ஏன் ஆயி சொல்லாம இருந்த. அப்பா உன்னை நம்ப மாட்டேன் நினைச்சியா?” என்று லட்சுமணன் வருத்தமாகக் கேட்டார்.
“அப்படியில்லப்பா அன்னிக்கு அவர் அப்படி செஞ்சதே எனக்கு அதிர்ச்சி. என் விருப்பம்னு நினைச்சப்பவே நீங்க எல்லாம் அவ்வளவு கோவப்பட்டீங்க, அப்படியில்லனு தெரிஞ்சா அவரை சும்மாவா விட்டிருப்பீங்க?”
“ஏன் சும்மா விடணும்? போகட்டும்னு விட வேண்டிதானே?” என்று சக்தி துடுக்காக சொல்ல வசுந்த்ராவுக்குக் கோபம். தன்னருகே தரையில் உட்கார்ந்திருந்த சக்தியின் தலையில் கொட்டு வைத்தார்.
“ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்!” என்று அவன் கத்த
“டேய் சும்மா இருடா” என்று பேரனை அதட்டினார் லட்சுமணன்.
கணவனை சொல்லவும் வசுந்த்ராவுக்குக் கோபம் வருவதை வீட்டினர் உணர்ந்தனர். சக்திக்குத்தான் அது சட்டென விளங்கவில்லை. இருந்தாலும் சக்தியைப் போல் லட்சுமணனுக்கும் மனது கேட்கவில்லை.
“அதெப்படி சும்மா விடுவேன்?”
“அதான் அப்போ சொல்லலப்பா. அவரை எதாவது செஞ்சு ஒன்னு கிடக்க ஒன்னு ஆகியிருந்தா எவ்வளவு மோசமா போயிருக்கும். சும்மா சண்டையா இருக்க நம்ம குடும்பம் ஒரு உயிர் போயிருந்தா அது காலத்துக்கும் நமக்கும் கஷ்டமா இருந்திருக்கும்ல பா?” என்ற வசுந்த்ராவின் பேச்சில் லட்சுமணனுக்குக் கண் கலங்கியது. எப்போதும் அவருக்கு மகளென்றால் தனி பிரியம், அவருக்கு மட்டுமில்லை பாஸ்கரனுக்கும் தங்கைதான் முதலில்! சக்தியை எப்படி பார்க்கிறாரோ அப்படித்தான் வசுந்த்ராவையும் பார்த்தார்.
அப்படி வளர்த்த பெண் விருப்பத்தை தங்களிடம் பகிராமல் போனது மிக மிக பெரிய அடி! அவமானம், கௌரவம் என்பதெல்லாம் வெளியாட்களின் சொல்தான். லட்சுமணனின் கோபமே சித்ரஞ்சனைப் பிடித்திருந்தால் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே, அப்படியா விருப்பம் சொல்லக் கூட முடியாதளவு கட்டுப்பாடு விதித்தேன் என்ற வருத்தம். அதுவே இத்தனை வருடமாக மகளிடமிருந்து தள்ளி நிறுத்தியது.
“நீ சொல்லி அப்பா நம்பாம இருப்பேன் நினைச்சியா வசு? இத்தன வருஷம் அப்பா பேசலனு கோவமா இருக்கியா? ஒரு வார்த்தை சொல்லிருக்கலாமில்ல, எல்லாம் அந்த திருட்டுப்பயலை சொல்லணும்” என்று லட்சுமணன் பல்லை கடித்தார்.
“அப்படியெல்லாமில்ல பா, அவரை பிடிச்சிருந்தா நான் சொல்லிருக்கணும்னு நீங்க எதிர்ப்பார்த்தது தப்பில்லை. பழச விடுங்கப்பா” என்று வசுந்த்ராதான் அவர்களைத் தேற்றினாள்.
“என்ன இருந்தாலும் ஏடிஎஸ்பியை திட்டாதீங்க தாத்தா” என்று சக்தி வம்பு செய்ய, அன்றைய நாள் முழுக்க இப்படியே சென்றது. மதிய உணவின்போது சக்தி குரல் கொடுக்க பகத் தாத்தா வீடு சென்றான். அதன்பின் சக்தியும் வேலைக்குக் கிளம்பி போய்விட்டான்.
இரவு உணவு உண்ண சரோஜினி சித்ரஞ்சனை அழைக்க போக, அவனோ
“சித்தி வந்துட்டாளா சரோ?” என்றான் ஆவலாக.
“இருந்தாலும் நீங்க செஞ்சது தப்பு சித்தப்பா, சித்தி பாவமில்ல” என்று சரோஜினியும் அவள் பங்குக்கு நியாயம் கேட்க
“தப்புதான் டா சரோ! சித்தப்பாவுக்கு அப்போ உன்னை மாதிரி தைரியமில்ல. உன் சித்தியும் அப்பா கிட்ட பேசுனு சொல்லிட்டா.. எனக்கு அவரை பார்த்தாலே பயம். எங்க பேசுறது..?”
“பேசியிருக்கலாம் சித்தப்பா. சக்தி சொல்லுவான் அவங்க தாத்தா கொஞ்சம் மார்டன்னு”
“போங்க சித்தப்பா. சும்மாவே சக்தி கலாய்ப்பான் நீங்க வேற இப்படி பண்ணிட்டீங்க” என்று சரோஜினி குறைபட சித்ரஞ்சனுக்கு என்ன சொல்ல முடியும். தவறுதான்! நியாயமான காரணம் அவனிடம் உண்டு, ஆனா செயல் நியாயமில்லையே!
அமைதியாக நிற்க “சரி வாங்க சாப்பிடலாம்” என்றழைத்தாள் சரோஜினி.
பக்கத்து வீட்டிலிருந்து யாரும் வெளியே வரவில்லை. பொறுத்துப் பார்த்த சித்ரஞ்சன் சுதந்திர விலாசத்தின் வாசலில் வந்து நின்றான். இரவு எட்டு மணிக்கு மேல் ஆகியிருக்க சக்தி வீடு வந்தான். அவன் சித்ரஞ்சனை பார்த்தபடி வீட்டினுள் நுழைந்தான்.
சித்ரஞ்சன் மாமனார் வீட்டையே எட்டிப்பார்த்து நிற்க, திண்ணையிலிருந்து இதனை பார்த்த வாஞ்சிநாதன்
“மாமியார் வீட்ல கூப்பிடுவாங்களானு பார்த்துட்டு நிக்கிறான் பாரு இவன்” என்று மனைவியிடம் திட்டினார்.
சக்தியும் அந்த நேரம் வெளியே வந்து சித்ரஞ்சனிடம் பேச
“எப்படா அங்க உறவு கொண்டாடலாம்னு இருந்திருப்பான் போல, மச்சான் மகன் கிட்ட குலாவுறான். அந்த பயலும் மாமா மாமான்றான் பாரு வேணும்னே” வாஞ்சி நாதன் தம்பி செயல் பொறுக்காது பொறுமினார்.
“சித்து ஆசைப்படுறதுல ஒன்னும் தப்பில்லையே? மாப்பிள்ளை கிட்ட பேசிட்டு நிக்கிறதுல என்ன தப்புங்க?” என்று சித்ரா கணவரிடம் கேட்க
“ஏட்டி! என்ன மாப்பிள்ளையா?” என்று முறைக்க
“உங்களுக்கு மாப்பிள்ளைனு சொல்லல, முறைப்படி சக்தி நம்ம சித்துவுக்கு மாப்பிள்ளதானே வேணும். உங்களுக்குப் பிடிக்கலன்னு மாமாவை சித்தப்பான்னா கூப்பிடுவான்?” என்று நியாயம் பேச
“போய் வேலையைப் பாருடி” என்று அதட்டினார்.
அங்கே சக்தியோ,
“என்ன மாமா? வெத்தலை பாக்கெல்லாம் வச்சுக் கூப்பிடாத்தான் வருவீங்களோ?” என்றதும் சித்ரஞ்சன் அதற்குப் பதில் சொல்லாது
“வசுவை வர சொல்லு சக்தி” என்றான்.
“எங்கத்தையை எல்லாம் என்னால அனுப்ப முடியாது.” என்று வம்பு செய்ய
“படவா ராஸ்கல்! படுத்தாதடா” என்று சித்ரஞ்சன் கெஞ்ச
சக்தி சிரித்தவன் “சாரி மாமா! நீங்க சொல்றதுக்குள்ள நான் அவசரப்பட்டு சொல்லிட்டேன். திலகர் டென்சன் ஆகிட்டாராமே.. சரோவை அடிச்சாங்கனதும் எனக்கு கோவம்.” என்று மன்னிப்புக் கேட்க
“நீ நான் செய்யாததை ஒன்னும் சொல்லலயே. அதுக்கு ஏன் சாரி? சொல்லப்போனா நீ சரோவுக்காக வந்து நின்னது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம்.” என்று பேசிக்கொண்டிருக்க வசுந்த்ரா மட்டும் கணவன் குரல் கேட்டு வெளியே வந்தாள்.
வசுந்த்ராவின் கண்கள் கணவனை கண்டனமாகப் பார்த்தது.
திலகர் மகன் வெளியே நிற்பது கண்டு லாலாவை அழைத்து, “உன் சித்தப்பனும் சித்தியும் வெளியே நிக்குறாங்க. அவனை முதல்ல வர சொல்லுடா” என்று அனுப்பினார்.
லாலாவும் இருவீட்டுக்கும் நடுவில் நின்றவர்களிடம் போனான்.
“என்ன வசு?” என்று சித்ரஞ்சன் கேட்க, அவனுக்குப் பதில் சொல்லாது
“அவன் செஞ்சது தப்பு சாரி கேட்குறான். நீங்க ஏன் வேண்டாம் சொல்றீங்க?” என்று வசுந்த்ரா கேட்க
லாலா உடனே, “சாரி சித்தி! நான்தான் ஒரு ப்லோவுல தெரியாம சொல்லிட்டேன். சக்தி மேல தப்பில்லை” என்று மன்னிப்புக் கேட்க
“டேய் நீ ஏன் டா சாரி கேட்கிற?” என்று நண்பனைத் திட்டினான்.
“சும்மா இரு சக்தி” என்று அவனை அடக்கிய லாலா
“சாரி சித்தி. சாரி சித்தப்பா, தாத்தா அப்படி செய்வார் நான் நினைக்கல” என்றான் மீண்டும்.
“பின்ன கொஞ்சுவார்னு நினைச்சியா மச்சான்? என்ன இருந்தாலும் உங்க தாத்தாவோட நேர்மை ஐ லைக் இட்” என்று சக்தி சொல்ல
“உனக்கு உன் சித்தப்பா மேல வருத்தமிருந்தா ஏன் இப்படி செஞ்சீங்கனு அவரை கேட்டிருக்கணும். அதை விட்டு இவன்கிட்ட சொல்லுவியா? உங்க ப்ரண்ட்ஷிப்ல எங்க விஷயம் ஏன் பேசணும். அது எங்க பெர்சனல் இல்லையா?” என்று வசுந்த்ரா கேட்க
“வசு, விடு” என்று சித்ரஞ்சன் மனைவி கைப்பிடித்து சமாதானம் செய்தான்.
லாலா முகம் சுருங்கிப்போய் நின்றான்.
“வேணும்னே செய்யல சித்தி” என்றதும்
“தெரியும் லாலா. இனிமே இப்படி செய்யாத” என்று வசுந்த்ராவும் அவன் தோளில் தட்டிக்கொடுக்க
“வாட் எ ஓரவஞ்சனை? என்னை மட்டும் அடிச்சிட்டு கொழுந்தனார் மகன்னதும் கொஞ்சுறியா அத்த?” என்றான் சக்தி முறைப்பாக.
“அண்ணன் மகன்’னு உரிமையா அவனை அடிச்சிருக்கீங்க? என்னை வேறயா பார்க்குறீங்க அப்படித்தானே சித்தி?” என்று லாலாவும் நண்பனைப் பார்த்து கண்ணடித்தான்.
“அடப்பாவிகளா?!” என்று சித்ரஞ்சன் இருவரையும் பார்க்க, வசுந்த்ரா கணவனை முறைத்தாள்.
‘இவ ஏன் முறைக்கிறா?’ என்று தெரியாமல் திணறி நின்றான் சித்ரஞ்சன்.
“டேய்ய்ய்ய் லாலா!” என்று திலகர் பேரனை காணாது திண்ணையில் நின்று குரல் கொடுக்க
“சித்தப்பா வாங்க தாத்தா கூப்பிட்டார்” என்று லாலா அழைக்க, சித்ரஞ்சனும் வசுந்த்ராவும் சுதந்திர விலாசத்துக்குள் நுழைந்தனர்.
எல்லாரும் சித்ரஞ்சன் வசுந்த்ரா விஷயத்தில் சரோஜினியின் காதல் விஷயத்தைக் கிடப்பில் போட்டனர்.