வினயனின் வருகையை மின்மினி எதிர்ப்பார்க்கவில்லை. சட்டென ஒரு அதிசயம் கண்ட நிலை! அந்தவுணர்வு கூட சில நிமிடங்களே. பின் அவன் என்ன காரணமாய் வந்திருக்கக் கூடும் என்று மின்மினியே ஊகித்திருந்தாள். அதைவிட வேலை முடிந்தால் சென்றுவிடுவான், இவனை நினைக்காதே என்று மனதை அடக்கினாள்.
ஆனால் வினயனின் பேச்சும் பேச்சில் தெரிந்த பிரியமும் மின்மினி எதிர்நோக்கியிருந்த ஒன்றல்லவா?. மின்மினி கண்சிமிட்டாமல் அவன் சொன்ன காதல் கேட்டாள். நம்ப ஆவலும் காதலும் அவன்பால் இருந்தாலும் அவன் காதலை நம்ப மறுத்தாள். இங்கிருந்தவரையில் ஒரு நொடி கூட காதலாய்ப் பார்வை கூடி பகிராதவன் இரண்டே நாளில் வந்து காதல் சொன்னால்?
தாரிணிக்காக என்றே தர்க்கம் செய்தது மின்மினியின் அறிவு.
வினயனுக்கோ என் காதல் சொன்னால் இவள் அதனை அறிந்து ஆராயாமல், தாரிணிக்காக என்பாளா என்று கோபம் வந்தது. தோழிக்காக மின்மினி மேல் காதல் என்று பொய்யுரைப்பானா? அந்த ஆத்திரத்தில் மின்மினியை அஹங்காரி என்றிட அவளும் பதில் கொடுத்து வீட்டினுள் சென்றுவிட்டாள்.
உள்ளே சென்றாலும் மின்மினிக்கு வினயனின் பேச்சு இன்னும் காதருகே ஒலித்தது.
மின்மினிக்கு அவன் சொல்வது உண்மையோ என்று தோன்றியது. அவன் கோபம் அதைத்தான் உணர்த்தியது, அதைவிட அவளுக்கு இந்த சில நாட்களாகத் தெரிந்த வினயச்சந்திரன் எதுவென்றாலும் நேரடியாக சொல்பவன். மின்மினி இப்படி குழம்பி நிற்க, வினயச்சந்திரன் மீண்டும் மின்மினியை அழைத்தான்.
“மின்மினி!” என்று சத்தமாகக் குரல் கொடுக்க, வேகவேகமாக திண்ணைக்கு விரைந்தாள்.
“எந்தோ?” என்று கண்களால் முறைக்க
“இங்க பார் மின்மினி உன்னை பிடிச்சிருக்குனு சொல்றது யாருக்காகவுமில்லை. எனக்கு நிஜமா உன்னை பிடிச்சிருக்கு, அதை எப்படி உன்னை நம்ப வைக்க எனக்குத் தெரியல. நான் முதல்ல சொன்னதெல்லாம் என் மனசுல இருந்து சொன்னது. இப்போ ப்ரீயா பேச முடியாது, நீ ஒரு மூணு மணிக்கு இரப்பன்பாறா வெள்ளச்சாட்டம் வரியா? அங்க பேசலாம்.”
“ஞான் வரில்லா”(நான் வரல) மின்மினி உடனே மறுத்தாள்.
“ப்ளீஸ் மின்மினி. மழை பெய்யுது, யாரும் இன்னிக்கு வரமாட்டாங்க. நான் மின்மினிகிட்ட நிறைய நிறைய பேசணும். இங்க நசீரேட்டா, உன் அச்சச்சன், ஏட்டன்னு யாராச்சும் வருவாங்க. இல்லை அவங்க வந்தாலும் நான் பேசுவேன், உனக்கு ஓகேவா?” என்றான் கைகளை மார்பில் குறுக்கே கட்டிக்கொண்டு மிரட்டலாக.
“வரேன்” என்று மின்மினி சொன்னதும் புன்னகை மன்னனின் முகத்தில் அவளை கண்டதால் அதுவரை இருந்த குறுஞ்சிரிப்பு இப்போது பெருஞ்சிரிப்பாய் மாறியது.
“அழகே மின்மினியே..” என்று பாடியபடி வீட்டை விட்டுச் சென்றான். அவன் வந்த நேரம் பொன்னச்சனும் நசீரும் வீட்டில் இல்லை. மதிய உணவு முடிய பொன்னச்சன் உறக்கத்திலிருக்க, தனது ஸ்கூட்டியை எடுத்த மின்மினி நசீரிடம் தோழியைப் பார்த்து வருகிறேன் என்று சொல்லி இரப்பான்பாறா நீர்வீழ்ச்சி நோக்கி பயணித்தாள். பிரதாபனுக்கும் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள்.
மின்மினியின் விருப்பம் என்னவென்று வினயச்சந்திரனுக்குத் தெரியாது. தெரிந்தால் அப்பாவையும் அண்ணனையும் அழைத்து வந்து சம்பந்தம் பேசியிருப்பான். வினயச்சந்திரன் மின்மினியிடம் பேசிவிட்டு மதிய உணவை கடையில் முடித்து இரப்பான்பாறா வந்துவிட்டான்.
வினயச்சந்திரன் பரவசமாக உணர்ந்தான். காதலை தைரியமாக சொல்லிவிட்டாலும் அதற்கான எதிர்வினை அவன் எதிர்ப்பார்த்ததாக இருக்க வேண்டும் என்று எண்ணினான். ஒருவேளை மின்மினிக்குப் பிடிக்கவில்லை என்றால்? அந்த கேள்வி மட்டுமே அவனை உறுத்தியது.
“வந்தாச்சு. உங்க மருமகளைப் பார்த்தாச்சு, லவ்வும் சொல்லியாச்சு. இப்போ அவ பதிலுக்காக வெயிட்டீங்” என்று வினயன் இயல்பாக சொல்ல மகனின் பேச்சில் பாலச்சந்திரனுக்குச் சிரிப்பு வந்தது.
இரண்டு நாட்களாக அவன் செய்த அட்டூழியங்கள் தாங்காமல்தான் அவனை தாமரகுளத்திற்குத் துரத்திவிட்டிருந்தார்.
கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து வந்த மகனை கண்ட பாலச்சந்திரனுக்கு அத்தனை மகிழ்ச்சி. வினயச்சந்திரன் வீட்டுக்குள் நுழையும் முன்னே அவர்களின் செல்லப்பிராணியான ரொனால்டோ வேகமாக ஓடி வந்து அவன் கால்களை சுற்ற, ரொனால்டாவைப் பிடித்துக் கொஞ்சினான் வினயன்.
“டேய்! என்னை மிஸ் பண்ணினியா?” என்று ரொனால்டோவிடம் கேட்க
“நீதான் டா ஜாலியா ஊர் சுத்த போய்ட்ட, நாங்களாம் உன்னை மிஸ் பண்ணினோம்தான்” என்றபடி ரொனால்டோவின் சத்தத்தில் வெளியே வந்தார் பாலச்சந்திரன். ஜெய்ச்சந்திரன் சூர்ய நெல்லி சென்றிருக்க, பாலச்சந்திரன் மகனுக்கு உணவு பரிமாறி அவனோடு கதை பேசினார்.
தாமரக்குளத்தின் கதையை அப்பாவிடம் பகிர்ந்தான் வினயன்.
“இந்த பிரதாபன் சேட்டா ரொம்ப மோசம்பா. பாவம் தாரிணி அப்படி அழுதா, எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு தெரியுமா?” என்று புலம்ப
“அந்த பையனுக்கு என்ன கஷ்டமோ யார் கண்டா? விடுடா. உன்னால முடிஞ்சதை நீ பண்ணிட்ட, காதல் எல்லாம் இன்னொருத்தர் சொல்லியா வரும்? உனக்கு நான் பொண்ணுங்க பார்த்திருக்கேன். யாராச்சும் பிடிச்சா சொல்லு, ஊர்மி காஞ்சில இருந்து வந்ததும் நம்ம கல்யாணம் வச்சிடலாம்” என்றார் பாலச்சந்திரன் ஆர்வமாக.
வினயனும் “எங்க காட்டுங்க” என்று பார்த்தவன் கவனம் புகைப்படங்களில் இல்லை. ஏனோ தானோவென்று பார்த்தான்.
“எனக்கு யாரையும் பிடிக்கல” என்றவன்
“ஏம்பா உங்களுக்கு ஜெய்னா மட்டும் உசத்தி. அவனுக்கு மட்டும் பிடிச்ச மாதிரி பொண்ணு பார்த்தீங்க. அதுவும் முதல்ல பார்த்த பொண்ணே அவனுக்கு செட் ஆகுற மாதிரி பார்த்தீங்க? ரெண்டு வருசமா எனக்கு மட்டும் அப்படி பார்க்கல.. போங்கப்பா” என்றான் கிண்டலாக.
“டேய்! நான் பார்த்த பொண்ணை எங்கடா அவன் கட்டினான்? அந்த கதைய சொல்லி என்னை வெறுப்பேத்தாத. அவன் இம்சை பண்ணினது பத்தாதுனு நீயும் பண்றியா? அவனுக்குப் பார்க்காத பொண்ணைப் பார்த்து அவளத்தான் கட்டுவன்னு அவன் நின்னான். நீ யாரை காட்டினாலும் பிடிக்கலன்னா… ஒன்னு லவ் பண்ணியாச்சும் தொலஞ்சியா?” என்று பாலச்சந்திரன் கடுப்பாகக் கேட்டார்.
“பிடிச்ச மாதிரி காட்டினா பிடிக்கும்னு சொல்லப்போறேன். போய்த் தேடுங்க டாடி” என்றவன் அவன் அறைக்குச் சென்று மெத்தையில் அப்படியே சாய்ந்தான்.
அவன் ஊர், அவன் வீடு, அவன் அறை. வீடு சேர்ந்த உணர்வு நிறைவாக இருந்தது வினயனுக்கு. உண்டு, உறங்கி எழ மாலை காபி குடிக்கும் நேரம் வினயனுக்கு மின்மினியின் எண்ணம்.
“அங்க மின்மினி செமையா காபி போடுவாப்பா” என்று தொடங்கியவனின் பேச்சு தொடர்ந்துகொண்டே இருந்தது. மாலை அரக்க பறம்பில் இல்லம் சென்றவன் அச்சச்சனையும் அச்சம்மாவையும் பார்த்து அவர்களோடு சிறிது நேரம் கதைத்து வந்தான்.
அன்று ஜெய்யும் சூர்ய நெல்லியில் தங்கிவிட, வினயன் அப்பாவோடு உறங்கினான். உறங்கும்வரை பூவம்பள்ளில் வீட்டு கதையைத்தான் சொன்னான்.
“பிரதாபன் மட்டும் ஓகே சொல்லியிருந்தா அச்சம்மா எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பாங்க தெரியுமாப்பா? தாரிணியும் நமக்கு சொந்தமாகியிருப்பா. மாதவன் அங்கிளும் அவளைப் பத்தி கவலையில்லாம இருந்திருப்பார். தாரிணி கூட பரவாயில்லப்பா மின்மினி இருக்காளே ரொம்ப பாவம்பா” என்று அடுத்த நாளும் மின்மினி பற்றியே பேசினான்.
அங்கு இருக்கும்வரை தெரியவில்லை. இங்கு வந்த பின் மின்மினியின் இருப்பை மிகவும் தேடினான். ஒரு பொழுது தாண்டியும் கூட அவளின் இல்லாமை சோர்வை கொடுத்தது. தினமும் எழும் பழக்கத்தில் விடியற்காலையில் எழுந்தவன் முற்றத்தில் இருக்கும் ஊஞ்சலில் வந்து உட்கார்ந்தான்.
பாலச்சந்திரன் இயல்பாகவே அதிகாலை எழுபவர். அவர் எழுந்த நேரம் மகனை காணவும் அதிர்ந்தவர்
“என்னடா அந்த ஊர்ல பேய் பிசாசு அடிச்சிடுச்சா? இல்ல கெட்ட கனவு கண்டியா? இந்த நேரம் எழுந்து உட்கார்ந்திருக்க?” என்றதும்
“என்ன டாடீ? கிண்டலா? அங்க எழுந்து பழகிடுச்சு” என்றான்.
“ஓஹ்ஹ்! நீ அங்க மாடு மேய்ச்சிட்டு இருந்த இல்ல.. மறந்துட்டேன் மோனே” என்று பாலச்சந்திரன் சொல்ல, வினயன் முறைக்க அவன் தோளில் தட்டியவர்
“சரிடா, உன் காபியை மிஸ் பண்ணினேன். அதான் எழுந்திட்டியே போய் போட்டு வா. ஜெய் வர எட்டு மணி ஆகிடும். ஊர்மிளாவும் பசங்களும் இல்லை, என் மருமக இருந்தா நல்ல காபி கொடுத்திருப்பா” என்றார்.
வினயன் காபி கலந்து அப்பாவிற்குக் கொடுத்து தானும் பருகினான். ஏனோ தினமும் அதிகாலை மின்மினியும் அவள் கொடுக்கும் காபியும் நினைவில் வந்தது.
“ஹாஹா! காலையில என்ன வேணுமோ சொல்லு சேச்சி சமைச்சு வைப்பாங்க” என்றார்.
“இனிமே எங்கேயும் சொல்லாம போகாத. உன் வால்தனத்தை எல்லாம் மூட்டைக் கட்டி வை.” என்றபடி பாலச்சந்திரன் குளிக்கப் போனார். காலை உணவு முடியவும் இருவரும் அவர்களின் ரிசார்ட் சென்றனர்.
மீண்டும் மதிய உணவுக்கு வீடு வந்தனர். ஜெய்யும் வீட்டிலிருக்க மூவரும் ஒன்றாய் உண்டனர்.
“என்னடா உன் டிரிப் எப்படி போச்சு? எப்பவும் போட்டோவா அனுப்புவ, இந்த டைம் ஒன்னும் காணும்?” புருவம் உயர்த்தி தம்பியிடம் கேட்டான் ஜெய்ச்சந்திரன்.
பாலச்சந்திரன் “மாடு மேய்ச்சதையா அனுப்புவான்” என்று மெல்ல முணுமுணுக்க
“என்னப்பா?” என்றான் ஜெய்.
“ஜெயேட்டா அது என் ப்ரண்ட்ஸ் எடுத்தாங்க. கேமிராவுல எடுத்தோம் பிரிண்ட் போட்டு காட்டுறேன்” என்றான் வினயன்.
“சரிடா. நான் கொஞ்ச நேரம் தூங்கிட்டு வரேன்” என்று ஜெய் மாடியேற
“ஏண்டா இப்ப அவன்கிட்ட உண்மை சொல்லாம பொய் சொன்ன?” என்று பாலச்சந்திரன் மகனை திட்ட
“பொய் சொன்னா அதை அப்படியே மெய்ண்டேய்ன் பண்ணனும். இப்போ மாத்தி சொன்னா அவன் என்னை சும்மா விட மாட்டான் டாடி” என்றான் வினயன்.
“அதுவும் சரிதான்” என்ற பாலச்சந்திரன்
“டேய் வினய், இந்த வருஷம் உனக்குக் கல்யாணம் பண்ணியே ஆகணும். ஒன்னு நான் காட்டுற பொண்ணை கல்யாணம் பண்ணு இல்லை நீ ஒரு பொண்ணை சொல்லு. யாரை காட்டினாலும் பிடிக்கலன்னா நான் என்னடா செய்யுறது?” என்று மகனை திருமணத்திற்கு வலியுறுத்தினார்.
“பிடிச்ச மாதிரின்னா…” என்று இழுத்தவனுக்கு யோசித்தால் இப்போது மின்மினியைத்தான் பிடித்தது. ஆனாலும் அந்த பிடித்தம் பிரியமா என்று தெரியவில்லை. நிச்சயம் பிரிவின் தாக்கம் இருந்தது, அது சத்தியம்.
எதுவும் பேசாமல் வினயன் போக, பாலச்சந்திரன்
“மின்மினி மாதிரி பொண்ணு பார்ப்போமா டா?” என்று கேட்க, மாடியேறியவன் அப்படியே நின்றான்.
“அப்பா” என்று வினயச்சந்திரன் அதிர்வோடு திரும்ப
“இல்லை மின்மினியேவே பார்க்கணுமா?” என்றார்.
“சொல்லுடா” என்று அவர் அதட்டலாகக் கேட்க
“என்னப்பா தீடீர்னு?” என்று திணறினான் வினயன்.
“பின்ன நேத்து வந்ததிலிருந்து மின்மினியைப் பத்திதானே அத்தன முறை பேசின. அவ அப்படி காபி போடுவா, பூ பறிப்பா. அவ அண்ணன் திட்டினான், அச்சச்சன் திட்டினார்.. அப்படி இப்படின்னு. இதுவரைக்கும் நீ எந்த பொண்ணைப் பத்தியும் அப்படி பேசினதில்லையே. சொல்லுடா என்ன இருக்கு உன் மனசுல?” என்று கேட்க
“எண்ட பகவதியம்மே! ஈ தேவிகுளத்து பாலச்சந்திரனுக்கு இவ்வளவு அறிவா?” என்றான் ஆச்சரியம்போல்.
“டா பட்டி! உண்மையை சொல்லு. என்ன நினைச்சிட்டு இருக்க நீ? மின்மினியைப் பிடிச்சா சொல்லுடா. நம்ம பொண்ணு கேட்போம்” என்றார்.
“நாளைக்கு சொல்றேன்பா” என்றவன் அடுத்த நாள் காலையில் ஜெய் ரிசார்ட் சென்றதும்
“அப்பா! நான் தாமரக்குளம் போறேன். லவ் சொல்லிட்டு வரேன்” என்று நிற்க
“குருவாயூரப்பா!” என்று சிரித்தார் பாலச்சந்திரன்.
“அப்போ நான் சொன்னது சரிதான் இல்ல..?” கேள்வியாக நிறுத்த
“நீங்க பிடிச்ச மாதிரி பொண்ணுன்னு சொன்னா மின்மினியைத்தான் பா எனக்குத் தோணுது. அவளை பார்க்கிறப்ப ரொம்ப க்ளோஸா பீல் பண்ணியிருக்கேன், அதுக்குக் காரணம் நம்ம அச்சம்மா மாதிரி இருப்பா. ரொம்ப நல்ல பொண்ணுப்பா. அவ கூட இருந்தா நேரம் போறதே தெரியாது.” என்று பேசிக்கொண்டே போனவன் அப்பாவின் பார்வையில் நிறுத்தினான்.
“இதெல்லாம் ஏன் உங்ககிட்ட சொல்றேன். எல்லாம் மின்மினி கிட்ட சொல்லணும். அப்புறம் நான் கிளம்புறேன், வீட்டைப் பாத்துக்கோங்க டாடி”
“டேய்! நாங்க பேசுறோம் டா”
“முதல்ல நான் பொண்ணுகிட்ட பேசுறேன். அப்புறம் நீங்க பேசலாம்”