சக்திவேல் பிறந்ததிலிருந்து அவன் வீட்டின் சூரியன், நட்சத்திரம், நிலா எல்லாம் அவன்தான். தாத்தா, அப்பா, அம்மா, அத்தை என்று அத்தனை பேரின் கவனமும் கவனிப்பும் அரவணைப்பும் அன்பும் எல்லாம் அவன் ஒருவனுக்குத்தான்! காதலனாகவும் அவனுக்கு அதிர்ஷ்டமே. சரோஜினி எப்போதும் அவனை முக்கியமாக நினைப்பாள், அதை அவனுக்கு உணர்த்தவும் தவறியதில்லை அவள்.
அப்படி எல்லாரும் சீராட்டி வளர்த்ததால் சக்திக்கு ஏக்கங்களோ ஏமாற்றங்களோ வாழ்க்கையில் கிடையாது. நன்றாகப் படித்தான், பிடித்த வேலையில் சேர்ந்தான். உண்மையில் அவன் வயது இளைஞர்கள் பொறாமைப்படுமளவு ஒரு வாழ்க்கை.
அப்படியிருக்க எப்போதும் சட்டென சமாதானமாகும் சரோஜினியின் இன்றைய கோபம், ஒதுக்கம் எல்லாம் தாங்கவில்லை. வீட்டிலாவது பேசுவார்கள் என்று தாத்தாவிடம் சொன்னால் அவர் அப்பாவை கை காட்டினார். அந்த நேரம் அவன் அப்பாவுமில்லை, அதைவிட அப்பாவின் மீது நிறைய மரியாதை, தாத்தா, அம்மாவிடம் போல் அப்பாவிடம் வாய்ப் பேசமாட்டான்.
மதியம் வரை உறங்கியவன் உண்டதும் வேலைக்குச் சென்றான்.
சுதந்திர விலாசத்தில் வசுந்த்ரா எல்லாரும் தேனீர் கலந்து வந்தாள். சித்ரஞ்சனும் லாலாவும் நடுவீட்டில் உட்கார்ந்து தேனீர் பருக, லாலா அந்த நேரம் தொலைக்காட்சியில் வேறு சேனலை மாற்றினான்.
“இந்தாங்க ரிமோட் எது வேணுமோ பாருங்க சித்தப்பா” என்று நீட்டிய லாலா
“ஆளு இந்த வயசுலயும் பிட்டா இருக்கார். இவரை ஏன் உங்களுக்குப் பிடிக்காது?” என்றான் கேள்வியாக.
“இந்த ஆள் ஐடியாவை பாலோ பண்ணி நான் தப்புப் பண்ணிட்டேன்.” சித்ரஞ்சன் சமையலறைப் பக்கம் பார்த்தபடி மெல்லிய குரலில் சொல்ல
“என்ன சித்தப்பா ரம்மி விளையாடி பணம் விட்டீங்களா?” லாலா கிண்டலாக சிரிப்பை அடக்கிக் கேட்டாலும் அவன் குரலில் ஆர்வம் அதிகமிருந்தது.
“என்னது ரம்மியா? டேய் நான் அதெல்லாம் விளையாண்டதில்லை, எனக்குத் தெரியாது. சீட்டாட்டமெல்லாம் விளையாடினா உங்க தாத்தா சீட்டுக்கட்டா கலைச்சுப்போட்டிருப்பார். அது அவர் ஒரு படத்துல பிடிக்காத ஹீரோயினுக்குத் தாலி கட்டிடுவார்.”
“சித்தப்பாஆஅ” என்று லாலா சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துவிட்டான்.
“ஆனாலும் நீங்க அவரையெல்லாம் இன்ஸ்பிரேசனா எடுத்து இப்படி பண்ணியிருக்கலாமா?” என்று லாலா கேட்க, அவன் சிரித்த சத்தத்தில் வசுந்த்ராவும் சரோஜினியும் வந்துவிட்டனர்.
சித்ரஞ்சன் வசுந்த்ரா வரவும் “லாலா டீ குடிச்சிட்டன்னா போ” என்று சொல்ல, தொலைக்காட்சியைப் பார்த்த வசுந்த்ரா கணவனை கிண்டலாகப் பார்த்தாள்.
அவளுக்குத் தெரியாதா அந்த கதை?
“சொல்லுங்க சித்தப்பா” லாலா கதை கேட்கும் ஆர்வத்தில் சித்ரஞ்சனின் பேச்சைக் கண்டுகொள்ளவில்லை.
லாலா தங்கையிடம், “நம்ம சித்தப்பா இதோ இவர் நடிச்ச படத்துல ஹீரோயினுக்குத் தாலி கட்டிடுவாராம். அதுவும் பிடிக்காத பொண்ணுக்கு. அதைப் பார்த்துதான்…” என்று நிறுத்த சரோஜினி சிரிப்பை அடக்கி சித்தப்பாவைப் பார்த்தாள்.
“உன்னை அவ கேட்டாளாடா?” என்று லாலாவை சித்ரஞ்சன் முறைக்க
“ரொம்பப் பண்ணாதீங்க சித்தப்பா. நீங்க வந்த பின்னாடிதான் இந்த வீட்ல எண்டர்டெயின்மெண்ட்டே இருக்கு. இல்லைனா தாத்தா என்னை படிக்க சொல்லுவார், அப்பா அவர் வேலைப்பார்ப்பார். இவ ஸ்கூல் வர்க் பார்ப்பா, கடுப்பா இருக்கும்.” என்று லாலா அவன் வருத்தத்தை புலம்பலாகப் பகிர்ந்தான்.
சித்ரஞ்சனும் வசுந்த்ராவும் லாலாவின் பேச்சில் கண்களாலே சிரிப்பினை பரிமாறினர். சித்ரஞ்சனும் மனைவியின் பார்வையில் நன்றாக நிமிர்ந்து உட்கார்ந்தவன்,
“டேய்! நீ லவ்’ன்ற வார்த்த எப்ப கேட்டிருப்ப? படத்துல தானே?” என்று மகனை கேட்டான்.
“ஆமா” என்று லாலா சொல்ல “சித்தப்பா நான் உங்களாலதான் கேட்டேன்” என்றாள் சரோஜினி.
“வாலு” என்று வசுந்த்ரா அவள் காதைத் திருகினாள்.
“தப்புடி சரோ. சித்தப்பாவோடது காதல் இல்லாத கதை” என்றான் லாலா நமட்டுச் சிரிப்போடு.
“டேய் நீ குறுக்கப் பேசினா நான் சொல்லமாட்டேன்” என்று சித்ரஞ்சன் கோபப்பட
“சரி சரி சொல்லுங்க சித்தப்பா” என்றான் சமாதானமாக.
“எனக்கெல்லாம் சினிமா பார்த்துதான் டா காதல்’ன்ற வார்த்தையே தெரியும். அந்த வீணாப்போன படம் எடுத்தவன் அப்படி ஒரு சீன் வச்சுட்டான், நானும் இவ கிட்ட லவ் சொல்லி பார்த்தேன் இவ அப்பா கிட்ட பேசுனு சொல்லிட்டா. எனக்கு என்ன செய்றதுனு தெரியல இந்த படம் பார்க்கவும் அப்படி பண்ணிட்டேன். தாலி கட்டிட்டா லவ் கொட்டிடும் நினைச்சேன். படம் ரெண்டு மணி நேரத்துல முடிஞ்சிடும், ஒரு பாட்டுல ஹீரோ ஹீரோயின் சேர்ந்துட்டாங்க, அறிவில்லாத எனக்கு அது புரியல.. உங்க சித்தியை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்” என்று மனைவியைப் பார்த்து சொல்ல,
“படம் பார்த்து யாராவது அப்படி செய்வாங்களா?” லாலா இன்னும் சிரிப்பை அடக்காது கேட்டான்.
சரோஜினி உடனே, “டேய் லாலா அப்படியெல்லாம் நினைக்காத. சினிமா, கதைகள் பொழுதுப்போக்கு எல்லாம் நம்மை ரொம்பப் பாதிக்கும். சினிமா இஷ்டத்துக்கு எடுக்கலாம்னா ஏன் சென்சார் போர்ட் வச்சிருக்காங்க. உனக்குத் தெரியுமா நம்ம சக்திமான் பார்த்துட்டு அந்த காலத்துல சில சின்னப்பசங்க மாடியில இருந்து குதிச்சிருக்கங்களாம். ஏன் கொஞ்ச வருசம் முன்னாடி ஏதோ ஒரு சீரியல் பார்த்துட்டு கர்நாடகாவுல ஒரு குழந்தை நெருப்பு வச்சு இறந்தே போச்சாம். சினிமா இஸ் அ பவர்புல் டூல்” என்றாள்.
“சரோ சொல்றது சரிதான் லாலா. நம்ம பக்கத்து ஊர்ல ஒருத்தர் ஏதோ ஒரு ராஜ்கிரண் படம் பார்த்துட்டு சிங்கப்பூர்ல இருந்து ஊருக்கு வந்துட்டாராம். அந்த படத்துல அம்மா இறந்து போய்டுவாங்களாம், அவருக்கு வெளி நாட்டுல இருக்கும்போது அம்மாவுக்கு எதாவது ஆகிடுச்சுன்னா என்ன பண்றதுனு பயம் வந்து ஊருக்கு வந்து இன்னிக்கு கடை வச்சிருக்காரே.. முரளி படம் பார்த்த காலத்துல பசங்க லவ் சொல்லவே பயப்படுவாங்க, சொல்றதுக்குள்ள அந்த பொண்ணுக்கே கல்யாணம் ஆகிடும்.” என்றதும் சித்ரஞ்சனுக்கும் சரோஜினிக்கும் சிரிப்பு.
“இவ்வளவு ஏன் காந்தி எப்படி திருந்தினார்? ஹரிச்சந்திர நாடகம் பார்த்த பின்னாடிதான் காந்தி மாறினார். இப்படி பொழுதுபோக்கா நம்ம பார்க்கிற விஷயம் பல பேர் வாழ்க்கை மாற காரணமாயிருந்திருக்கு.” சித்ரஞ்சன் சொல்லி முடிக்க அங்கே சில நிமிடங்கள் அமைதி. திடீரென மூவரும் அமைதியாக இருக்கிறார்கள் என்று அவன் பார்வை மூவரையும் அலச, அவர்களோ ஒருவருக்கொருவர் பார்த்துவிட்டு பின் சிரித்துவிட்டனர்.
“என்னடி?” என்று மனைவியைப் பார்க்க,
“அக்மார்க் சுதந்திர விலாசத்துக்காரன்னு ப்ரூவ் பண்ணிட்டீங்க சித்தப்பா. நான் படிக்க போறேன் என்னை எக்கனாமிக்ஸ் வா வாங்குது” என்று லாலா அறைக்குள் போய்விட சரோஜினியும்
“நீங்க சொல்றது சரிதான் சித்தப்பா” என்றாள். வசுந்த்ரா கிண்டலாகப் பார்க்க
“நம்ம ஹிஸ்டரி அறிவைப் பார்த்து இவங்க எல்லாருக்கும் பொறாமைடா சரோ” என்று சித்ரஞ்சன் சொல்ல,
“கரெக்ட்தான் சித்தப்பா! நம்ம குடும்பத்தோட பெயரு வரலாறுல இருக்க காண்டு இவங்களுக்கு எல்லாம்” என்று சித்தியை வம்பிழுத்தவள் வசுந்த்ரா முறைக்கவும் உள்ளே ஓடிவிட்டாள்.
சரோஜினி உள்ளே செல்லவும், “இவளுக்கும் சக்திக்கும் என்ன தகராறு வசு?” என்றான் சித்ரஞ்சன்.
“அதானே பார்த்தேன் ஏடிஎஸ்பி கண்ணுல எப்படி இதெல்லாம் தப்பும்?” என்று கேட்ட வசுந்த்ரா “அவங்களே சரியாகிடுவாங்க. சின்ன பசங்க சண்டைதான், நீங்க முதல்ல நம்ம வீட்டு பெரியவங்க கிட்ட பேசுங்க ரஞ்சன்” என்றாள் வசுந்த்ரா.
“சாய்ந்திரம் வந்ததும் அப்பா கிட்ட பேசுறேன்” என்ற சித்ரஞ்சனுக்கு அலைப்பேசியில் அழைப்பு வர, அவன் உண்ணாமல் கிளம்பிவிட்டான்.
**********
அன்றிரவு சக்திவேல் உணவு முடிந்ததும்
“ம்ம்மாஆஅ” என்று சசிகலா பின் சுற்றினான்.
“என்னடா?”
“எனக்கு சரோஜினியைப் பிடிச்சிருக்கு சொன்னேன்ல. அதுக்கு அப்புறம் நீ ஒன்னுமே சொல்லல”
“நான் என்ன சொல்லணும்?” என்றதும் அம்மாவை முறைத்தான்.
“என்னை ஏண்டா முறைக்கிற? போய் உங்கப்பாவை, தாத்தாவை கேளு. என் இஷ்டமெல்லாம் நீ மதிப்பியா என்ன?” என்று சசிகலா கேட்க
“இப்போ என்ன உன் இஷ்டப்படி நடக்கல?” என்று சக்தி மல்லுக்கு நின்றான்.
“நீயே தானே உன் கல்யாணத்தை முடிவு பண்ணிக்கிட்ட? நான் பார்க்கிற பொண்ணையா கட்டப்போற?”
“ஏன்மா அன்னிக்கு ராசு பெரியப்பா உன்கிட்ட சரோஜினி பத்தி கேட்டப்ப நல்ல பொண்ணுன்னு அவளுக்கு செர்டிபிகெட் கொடுத்த. யாரோ வீட்டுக்கு மருமகளா போக அவளை பத்தி கேட்டா நல்லவிதமா சொல்ற, நம்ம வீட்டுக்குன்னா உனக்குக் கசக்குதா?” என்று சண்டை போட்டான்.
“டேய்! நான் அவளை பத்தி நல்லவிதமா சொன்னாதானே நாளைக்குப் பக்கத்து வீடுன்னு உன்னைப் பத்தி கேட்கிறப்ப அவங்களும் நல்லவிதமா சொல்லுவாங்க?” என்று சசிகலா பாவனையாக சொல்ல
“அப்போ அவ நல்ல பொண்ணு இல்லையா?” என்று சக்தி முறைத்தான்.
“அவங்க ஆத்தா மாதிரி வாய் அவளுக்கு. என்கூட எல்லாத்துக்கும் மல்லுக்கு நிப்பா, எனக்கு அவளை பிடிக்காது. அதனால இந்த விஷயமா என்கிட்ட பேசாத, வேணும்னா உங்கப்பா கிட்ட பேசிக்கோ” என்று முடித்துவிட்டார்.
பாஸ்கரனோ, “அம்மாவும் தாத்தாவும் ஓகே சொன்னா எனக்கு ஓகேடா சக்தி” என்றார்.
“யாரும் ஓகே சொல்லாதீங்க, ஒரு நாள் நீங்களே வந்து கல்யாணம் பண்ணிக்கோன்னு கெஞ்சுவீங்க, அப்போ பார்த்துக்கிறேன்.” என்று அம்மாவிடம் கத்திவிட்டு அவன் அறைக்குச் சென்றான்.
அறைக்கு வந்த சக்திக்கு சரோஜினியின் ஞாபகங்கள். திருட்டுத்தனமாக அவன் அறைக்கு வந்து அவனுக்குப் பிடித்த உணவினை வைத்துப்போகும் சரோவை நினைத்தான். எல்லாம் நடந்து சில மாதங்கள் கடந்துவிட்டன. அவளை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியவில்லை. அவள் அழைத்தால் வேலை இருந்தால் பேச மாட்டான், ஆனாலும் அவளின் அழைப்பு என்னை தேடுகிறாள் என்ற எண்ணத்தைக் கொடுத்து சந்தோஷமாக உணர வைக்கும். இப்போதெல்லாம் சரோஜினி அழைப்பதில்லை, இம்சையாக ஒரு இடைவெளி இருவருக்குள்ளும்.
சரோஜினியின் எண்ணத்தில் உழன்றபடி மொட்டை மாடியில் நின்று காற்று வாங்கினான். மாடியில் நின்று பக்கத்து வீட்டைப் பார்க்க அந்த நேரத்திலும் ஒரே சத்தமாக இருந்தது.
யோசனையாக அவன் நிற்க, சுதந்திர விலாசத்தில் திலகருக்கும் சித்ரஞ்சனுக்கும் வாக்குவாதம். சித்ரஞ்சன் இரவு உணவு முடியவும் சரோஜினியின் திருமண விஷயம் பேச திலகர் மறுத்துவிட்டார்.
“இங்க பார் சித்து உன் மாமனார் வீட்டோட நீ உறவு கொண்டாடிக்க, அதுக்காக என் வீட்டுப்பொண்ணெல்லாம் அங்க அனுப்ப முடியாது.” என்றார் எடுத்தவுடனே.
திலகருக்கு அத்தனை வருடமாக வெள்ளைக்காரனுக்குக் கூஜா தூக்கிய குடும்பம் என்று அவர்களைப் பேசிவிட்டு இன்று பேத்தியை அதே குடும்பத்தில் கொடுக்க கௌரவம் தடுத்தது. சுதந்திரத்துக்காகத் தியாகம் செய்த குடும்பமும் வெள்ளையனுக்கு வேலை செய்த குடும்பமும் எப்படி இணைய முடியும், பார்ப்பவர்கள் கேலி பேசுவார்களே என்று கவலைப்பட்டவர் பேத்தியின் மனதை நினைக்கவில்லை.
“நான் செஞ்சது தப்புன்னு என்னை பேசினீங்க, சரோ அப்படி செய்யாம அவ விருப்பத்தை சொன்னா அதுக்கும் இப்படி செஞ்சா என்னப்பா அர்த்தம்?” என்று சித்ரஞ்சன் கோபமாகக் கேட்டான்.
வசுந்த்ராவுக்குமே திலகரின் பேச்சில் கோபம்.
“ஏன் மாமா இவர் சொல்றதும் நியாயம்தானே? சக்திக்கு என்ன குறை? நான் மட்டும் இந்த வீட்டு மருமகளா இருக்கலாம், சரோ எங்க வீட்டு மருமகளா இருக்கக் கூடாதா? நம்ம பொண்ணு ஆசைப்படுறதை கூட நிறைவேத்த மாட்டீங்களா? நேர்மையா வந்து சொன்ன பிள்ளைங்க மனசைப் பாருங்க மாமா. சக்தி நீங்க பார்த்து வளர்ந்த பையன் தானே?”
மருமகளின் பேச்சிலிருந்த நியாயம் திலகரைத் தாக்கத்தான் செய்தது. சித்ரஞ்சனுக்கோ அப்பாவின் அமைதி இன்னும் கோபம் தர,
“இங்க பாருங்கப்பா உங்க மேல இருந்த பயத்தால, நீங்க என் ஆசைக்கு ஒத்துக்க மாட்டீங்கன்னுதான் அன்னிக்கு நான் அப்படி ஒரு விஷயம் செஞ்சேன், சரோவையும் வீடு வேண்டாம்னு ஒரு முடிவு எடுக்க வச்சிராதீங்க. அவங்க ரெண்டு பேரும் மேஜர்ஸ், யார் தடுக்க முடியும் அவங்களை?” என்று கேட்டுவிட
வாஞ்சிநாதன், “டேய் நீயே அவளுக்கு யோசனை சொல்லாத” என்றார்.
அவருக்கு அப்பா சொன்னால் சம்மதம்தான். ஆனால் அப்பாவை மீறியெல்லாம் மகளுக்காக நிற்கமாட்டார். லாலா இந்த களேபரத்தில் கலந்துகொள்ளவில்லை. அவன் அறையில் படிப்பில் மூழ்கியிருந்தான். சரோஜினி அமைதியாக இதையெல்லாம் பார்த்து நின்றாள்.
சித்ராவும் அஞ்சம்மாவும் திலகர் என்ன சொல்லுவாரோ என்று பார்க்க, அவரோ தோளிலிருந்த துண்டை உதறிவிட்டு மகனுக்குப் பதில் சொல்லாது வெளியே இருக்கும் அவர் கயிற்றுக் கட்டிலில் சென்று படுத்துவிட்டார்.
“பார்த்தியா இவரை?” என்று சித்ரஞ்சன் வசுந்த்ராவை பார்க்க
“விடுங்க, ஒரே ராத்திரியில எல்லாம் மாறாது” என்று வசுந்த்ரா சொல்ல
“உன்னாலதான் வீட்ல இவ்வளவு பிரச்சனை” என்று மகளை திட்டினார் வாஞ்சிநாதன்.
“நான் இல்லன்னா இந்த வீட்ல பிரச்சனையே இல்லையாப்பா?” என்று சரோவும் கோபத்தில் பேச
“சரோ” என்று சித்ரஞ்சன் அதட்டினான்.
“பின்ன என்ன சித்தப்பா? கல்யாண மேடை வரைக்கும் வந்துட்டு அங்க சொல்லி நிப்பாட்டினா சந்தோஷப்பட்டிருப்பாங்களா?” சரோஜினி பொறுக்காமல் வருத்தமாகக் கேட்டதில் வாஞ்சி நாதனுக்கும் வருத்தமாக இருந்தது.
மகள் சொல்வதும் நியாயம்தானே? தம்பி தவறு செய்தான் என்று பேசினோம். மகள் நேர்மையாக மனதில் உள்ளதை சொல்லியிருக்க, அந்த நேர்மையை மதிக்காது அடிக்கத்தானே செய்தோம். ஒருவேளை திருமணத்தன்று இவள் சொல்லியிருந்தால் எவ்வளவு அவமானமாக இருந்திருக்கும் என்ற கற்பனை கூட கசந்தது.
“அதைத்தான் செஞ்சிருக்கணும்” என்று சித்ரஞ்சன் சொல்லிவிட்டு மாடியேற
“டேய் நீ சும்மா இருடா” என்று தம்பியை அதட்டினார் வாஞ்சிநாதன்.
அடுத்த நாள் காலை எழும்போது சித்ரஞ்சன் அறையில் இல்லை. சீக்கிரம் எழுந்துவிட்டான் போல என்று நினைத்த வசுந்த்ரா கீழே இறங்க வீட்டில் எங்குமில்லை.
வேலைக்குக் கிளம்பிக்கொண்டிருந்த சரோஜினியிடம்,
“சரோ உங்க சித்தப்பா எங்கடி?” என்று விசாரிக்க
சமையலில் இருந்த சித்ரா, “தம்பி காலையில வாக்கிங் போறேன் சொல்லிட்டு போச்சு வசு” என்றார்.
“ஓஹ், சரிக்கா” என்ற வசுந்த்ராவும் காபி கலந்து கொண்டு திண்ணையில் நின்று பார்த்தால் தூரத்தில் லட்சுமணன் நடக்க, அவர் பக்கத்தில் சித்ரஞ்சனும் நடந்துவந்தான்.
அதை கண்டதுமே வசுந்த்ரா முகத்தில் புன்னகை மலர்ந்தது. காபி பருகிவிட்டு தண்ணீர் பிடிக்க, சக்திவேல் அவர்கள் வீட்டில் தண்ணீர் பிடித்தவன்
“என்னத்த நைட் உங்க வீட்ல ஒரே சத்தம்?” என்று விசாரித்தான்.
“மாமாவுக்கு என் மேல அக்கறையோ இல்லை அண்ணன் பொண்ணு மேல அக்கறையோ இல்ல. எல்லாம் உன்னை இம்ப்ரெஸ் பண்ண பண்ணியிருப்பார்.”
“டேய்! ஓவரா பேசாத. அவருக்கு சரோஜினின்னா இஷ்டம். சும்மா கலாய்க்காத”
“ஏதோ அவருக்காச்சும் அக்கறையிருக்கே. இங்க எல்லாம் யாருக்கும் என் மேல பாசமில்ல, அக்கறையில்ல” என்றான் குடத்தைத் தூக்க வந்த அம்மாவைப் பார்த்தபடி.
“உனக்குத்தான் என் மேல அக்கறையில்லை, எனக்கு அப்படியில்ல..” என்ற சக்தி அவனே குடத்தைத் தூக்கிக் கொண்டு வீட்டினுள் சென்றான்.
“என்ன சொல்றான் உன் மருமகன்?” என்று சசிகலா புன்னகையோடு மகனைப் பார்த்தபடி வசுந்த்ராவிடம் கேட்க
“புலம்பிட்டு இருக்கான். ஏன் அண்ணி சரோஜினியை நீங்க சின்னதுல இருந்து பார்க்கிறீங்கதானே? நீங்களாச்சும் அப்பா, அண்ணன் கிட்ட பேசக் கூடாதா? சின்னப்பசங்க பாவமில்ல அண்ணி?” என்று கேட்டாள்.
“சரோஜினி நல்ல பொண்ணுதான். உன் அண்ணன் மவன் இருக்கானே சரியான அதப்பெடுத்தவன், கொஞ்சம் கெஞ்சுனானா இல்லையே. இவனே அந்த புள்ளைக்குப் பூ பறிச்சுக் கொடுத்துட்டு அவளும் நானும் சண்டைப்போட்டு நிக்குறோம், இவன் பேசாம நின்னான். இப்போ யோசிச்சுப் பார்த்தா இந்த பயதான் கொடுத்திருப்பான். உங்கப்பா மனசுல என்ன நினைக்கிறார் தெரியல.., கொஞ்ச நாள் போகட்டும் வசு”
“அதுவும் சரிதான். இந்த சக்தியைக் கொஞ்சம் அலைய விட்டாதான் புத்தி வரும்” என்று வசுந்த்ராவும் சிரித்தாள்.
நடைபயிற்சி முடிந்து கடுகடு முகத்தோடு லட்சுமணன் வீட்டினுள் நுழைய, சித்ரஞ்சன் சோகமாக உள்ளே வந்தான்.
“என்னாச்சு? காலையில மாமனார் கூட வாக்கிங்?” என்று வசுந்த்ரா கேட்க