படயணி முடிந்து இரவு வீடு திரும்பிய பின் திருப்தியோடு கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்திருந்தான் வினயச்சந்திரன்.
“எந்தாடா உறக்கமோ?” என்று வினயனின் தோளில் தட்டினார் நசீர்.
“ஹாஹா இல்ல சேட்டா. நீங்க சொன்ன மாதிரி பைரவி கோலம் அடிபொலி. எங்க ஊர்ல இதெல்லாம் நடக்காது, ஓணம் அப்போ கும்மாட்டகளி, கதகளின்னு டான்ஸ் எல்லாம் நடக்கும். ஒரு மாதிரி வித்தியாசமா நல்லாயிருந்தது, நேர்ல பார்க்க விசேஷமாயிருக்கு” என்றபடி கன்னத்தில் போட்டுக்கொண்டான்.
“இங்க படயணி போல மலபார்ல தெய்யமுண்டு. அதுவும் ரொம்ப விசேஷமாயிருக்கும், நான் அவிட போறப்ப சொல்றேன். பரவாயில்ல நினக்கு பகவதியம்மாவோட ஆசிர்வாதம் உண்டுடா மோனே, சரியா இன்னிக்கு வந்திருக்க பார்த்தியா?” என்று நசீர் சொல்ல
“அது உண்மைதான் சேட்டா! சரியான நாள்ல வந்துட்டேன்” என்ற வினயனின் பார்வை மின்மினியின் அறை ஜன்னல்களைத் தொட்டு மீண்டது.
“சரிடா உறங்கு” என்ற நசீர் படுத்துவிட, வினயனுக்கு நசீர் சொன்னதுபோல் தான் ஆசிர்வதிக்கப்பட்டவன் என்றே தோன்றியது. வரும்போதே அப்பாவிடம் பேசியிருக்க, பாலச்சந்திரன் மகனிடம்,
“டேய் மறுபடி ஊருக்குப் போய்ட்டன்னு ஜெய் கோவத்துல இருக்கான், நீ சொல்லாம வேற போய்ட்ட. என்னை கேட்டான் நீ ப்ரண்டைப் பார்க்க போயிருக்க சொல்லிட்டேன்” என்றார்.
“தேங்க் யூ டாடி” என்ற வினயனின் துள்ளலான குரலில் தேவிகுளத்திலிருந்த பாலச்சந்திரன் மனதில் அத்தனை சந்தோஷம். மின்மினி பற்றி பேசும்போது மின்னிய அவன் முகமும் அவளின் மீது அக்கறைக்கொண்ட அவனின் பேச்சும் மனதை உணர்த்தியிருக்க, அந்த பெண்ணுக்கும் மகன் மீது விருப்பமிருக்கிறது என்று தெரியவும் மிகுந்த மகிழ்ச்சி அவருக்கு.
“ஜெய் கிட்ட நீ லவ் பண்றேன்னு சொல்லத்தான் நினைச்சேன், சொன்னா உடனே வாங்க பொண்ணு கேட்கலாம்னு கிளம்பிடுவான். காஞ்சிபுரத்துக்கே ஒரே நைட்ல போலாம்னு நின்னவன் இங்க இருக்க மாவேலிக்கராவுக்குப் போக யோசிக்க மாட்டான்.” என்று பெரிய மகனை பெருமிதமாக சொல்ல
“அச்சோ டாடி! தப்பித்தவறி அப்படி எதுவும் சொல்லிடாதீங்க, இங்க நான் இன்னும் உண்மை சொல்லல, முதல்ல சேட்டா கிட்ட நான் யார்னு உண்மையை சொல்லி, மின்மினியைப் பிடிச்சிருக்குனு சொல்றேன். அப்புறம் நீங்களோ அச்சம்மாவோ பொண்ணு கேளுங்க, அட்லீஸ்ட் நான் யாருனு உண்மையை சொன்ன பின்னாடி மின்மினியைக் கேளுங்க. இல்லைன்னா அவர் ஒத்துக்கமாட்டார்” என்றான்.
“நீ அதை சொல்ல இன்னும் ஒரு மாசமா ஆக்குவியா? ஊர்மிக்கு டெலிவரி டேட் பக்கத்துல வந்தாச்சு. ராஜீவனும் ரெண்டு மூணு வாரத்துல வந்திடுவான். எல்லாரும் வந்ததும் உனக்குக் கல்யாணம் பண்ணிடணும், நீ நாளைக்கே அந்த பையன் பிரதாபன் கிட்ட பேசிடு, இல்லை பயமா இருந்தா நான் பக்குவமா சொல்றேன். நான் வரவா?” என்று பாலச்சந்திரன் கேட்டிருக்க
“பயமெல்லாமில்லப்பா. நானேதான் பொய் சொன்னேன், நான் சொல்றதுதான் சரியா இருக்கும். நீங்க டென்ஷன் ஆகாதீங்க” என்று சமாதானம் செய்திருந்தான்.
மின்மினி ‘இஷ்டம்’ என்றது அவன் படபடப்பையெல்லாம் நீக்கி, உற்சாகமாய் உணர வைத்தத் தருணத்தை மீண்டும் ஆவலாக அசைப்போட்டான்.
“இஷ்டம், வளர இஷ்டம்” என்ற வார்த்தைகள் காதலின் வாகையாய் அவனை வருடிகொடுத்தன. அவளின் இஷ்டம் என்ற வார்த்தையாய் இஷ்டமாய் மீண்டும் மீண்டும் மனதில் கொண்டு வந்து மகிழ்ந்தான். அப்படியே உறங்கியவனை காலையில் நசீர் எழுப்பினார். அன்றாட வேலைகள் தொடங்கிட, களரி பயிற்சி முடியவும் பிரதாபன் அம்பலம் சென்று வந்தான்.
“என்ன விசேஷம் சேட்டா?” என்று வினயன் அம்பலத்திலிருந்து வந்த பிரதாபனை கேட்க,
“பூவம்பள்ளில் தரவாட்டை திருப்பிக் கேட்க போறான் பிரதாபன்.” என்றார்.
“ஏன் சேட்டா இத்தன வருசமில்லாம இப்போ கொடுன்னு கேட்டா அந்த ராஜகோபாலன் கொடுத்துடுவாரா?”
வினயன் புரியாமல் கேட்க
“டா வினயா, ஷங்கரன் குடிபோதையில அஞ்சாறு லட்சம் கடனா கேட்டு ராஜகோபாலனுக்கு ஏதோ பத்திரத்துல கையெழுத்துப்போட்டுக் கொடுத்துட்டான். ஆனா அது ரெஜிஸ்டர் பண்ணாம செல்லாது இல்ல, ராஜகோபாலனுக்கு அந்த தரவாட்டு மேல ஒரு கண்ணு, நூறு வருசம் மேல பழசுன்னாலும் எப்பவும் அதை சுத்தம் பண்ணி புதுசு மாதிரியே வச்சுருப்பாங்க.”
“ஷங்கரன் உடம்பு முடியாம ஹாஸ்பிட்டல்ல இருந்தப்போ அவன் டீரிட்மெண்டேக்கு பல லட்சம் செலவாகிடுச்சு. ஷங்கரன் தொழிலைப் பார்க்கல, சேட்டாதான் எல்லாம் பார்த்தார். அவருக்கும் வயசாக லாபமில்லனாலும் ஏதோ தொழில் போயிட்டிருந்தது, பிரதாபன் அப்போ காலேஜ் படிச்சான். ஷங்கரன் டிரிட்மெண்ட்க்கு பத்து லட்சம் மேல உடனே தேவைப்பட்டுச்சு, எப்படியாவது மகனை காப்பாத்தணும்னு ப்ரைவேட்’ல வச்சுப் பார்த்தார். ஊர்ல அவ்வளவு பெரிய தொகையை உடனே கொடுக்கிற அளவு யாரும் வசதியில்லை, எதையாவது விக்கணும்னாலும் கஷ்டம்”
“ஏற்கனவே மகன் இப்படி கடன் வாங்கியிருந்த விஷயம் தெரிஞ்சாலும் சேட்டா பொறுத்துட்டிருந்தார். எதையாவது வித்து கடனை அடைக்கலாம் பார்த்தார், அதுக்குள்ள ஷங்கரனுக்கு ரொம்ப முடியாம போக, கடனா பத்து லட்சம் தரேன். உங்க தரவாட்டை என்கிட்ட அடமானம் வைங்க சொல்லிட்டான் இந்த தெம்மாடி ராஜகோபாலன். மகனை காப்பாத்த வேற வழியில்லாம குடிச்சே வீணாப்போன மகனுக்காக குடியிருந்த அவங்க தரவாட்டை அடமானம் வச்சிட்டார். கடன் தரணும்னா வீட்டை தரணும்னு கண்டிஷன் போட்டான் பாவி”
கல்லூரி படிப்பை முடிக்காத பேரன், பள்ளி செல்லும் பேத்தி, உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மகன் என்று கடினமான சூழலிலிருந்த பொன்னச்சனுக்கு வீட்டை விட மகன் உயிர் பெரிதாக இருக்க, ராஜகோபாலன் நியாயமின்றி வீட்டினை எழுதிக் கேட்டபோது கூட மகன் நன்றாக திரும்பிவிட்டால் போதும் என்று நினைத்தார்.
“பேரன் எப்படியும் மீட்டுடுவான்னு நம்பி அவரும் கையெழுத்துப் போட்டு கடன் வாங்கிட்டார். இதோ வருஷம் ஓடிடுச்சு பிரதாபன் தலையில் கடனிருக்கு. வீட்டையும் அவனே எடுக்க திட்டம் போடுறான்” வருத்தமாக நசீரேட்டா சொல்ல
“இப்போ பத்து லட்சமும் அதுக்கு வட்டியும் கட்டிட்டா அந்த ராஜகோபாலன் கொடுத்துதானே ஆகணும்?” வினயன் கேட்க
“இந்த ஊர்ல இப்படி ஒரு பெரிய தரவாடு யார்கிட்டயும் இல்லை. அவன் வாங்கிட்டா அது தலவாடி தரவாடு ஆகிப்போகுமில்ல, அதை விட மனசில்ல. அதனால இப்போ திருப்பித் தரணும்னா இன்னிக்கு அந்த இடத்துக்கும் வீட்டோட மதிப்புக்குமான காசையும் கூடவே பத்து லட்சம், வட்டின்னு கேட்கிறான். பிரதாபனுக்கு அது கஷ்டமாச்சே?”
“அதெப்படி பத்திரப்படி பத்து லட்சத்துக்கும், அதுக்கு வட்டியும்தானே கணக்கு?” வினயன் நியாயம் கேட்க
“அந்த பத்திரத்துல என்ன எழுதியிருந்ததுனு சேட்டா அவசரத்துல படிக்கல, இவன் இஷ்டத்துக்கு எழுதி ஏமாத்தி கையெழுத்து வாங்கிட்டான். இத்தன வருஷம்னு போட்டுருக்கும் போல, அதுக்குள்ள கடனை அடைக்கலன்னா அவன் பெயர்ல வீட்டை எழுதிக்கொடுக்கணும். கோர்ட் கேஸ்னு போனா இன்னும் செலவாகி, வருசம் போகும். இப்போ பிரதாபனுக்கு அசலும் வட்டியும் கொடுக்க பணமிருக்கு நினைக்கிறேன். அதான் ஊர்ல பெரிய மனுஷங்களை வச்சுப் பேச நினைக்கிறான், இதுக்காகதான் அவன் கட்சியில இருக்கிறதும் கூட, கட்சி ஆளுங்களும் பிரதாபனுக்குச் சப்போர்ட் பண்ணுவாங்க இல்ல..” என்று நசீர் விளக்கி சொல்லவும் வினயனும் பிரதாபனுக்கு எந்த வகையில் உதவுவது என்று சிந்தித்தான்.
பிரதாபன் வெள்ளை சட்டையும் முண்டுவும் அணிந்து தயாராகி வெளியே வர, பொன்னச்சனும் கிளம்பியிருக்க, அவரை வர வேண்டாம் என்று மறுத்த பிரதாபன் நசீரைப் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு வினயனோடு தலவாடி ராஜகோபாலனைப் பார்க்க போனான்.
‘பூவம்பள்ளில் தரவாடு’ வெளிப்புற சுவர் எல்லாம் பாசி படர்ந்து பச்சையாய்க் காட்சி அளித்தது. நீண்ட வரண்டாவின் வழி செல்ல வழியெங்கும் கொன்றைப் பூக்கள் கொட்டிக்கிடந்தன.
மிகப்பெரிய மாமரம் வீட்டின் முன்பக்கமிருக்க, இடப்பக்கம் புங்கை மரம் வளர்ந்திருந்தது. மாமரத்தில் ஊஞ்சல் கட்டியிருக்க பிரதாபனுக்கு சிறு வயது ஞாபகங்கள் மெல்ல எழுந்து அவனை என்னவோ செய்தன. கேசவனை கட்டி வைத்திருக்கும் இடத்தைப் பார்த்தவன் மனம் கேசவனை, அந்த அழகிய பூவம்பள்ளில் வீட்டின் பூக்காலத்தைத் தேடின.
வாசலில் நிறைய நாற்காலிகள் போட்டிருக்க, உன்னிகிருஷ்ணன் நண்பன் வரவும் வேகமாக அருகே சென்று
“வா பிரதாபா” என்றழைக்க பிரதாபன் அவனை பார்த்ததோடு சரி. ஒன்றும் பேசவில்லை. ஒரு காலத்தில் அவன் மட்டுமே பிரதாபனின் நெருங்கிய சினேகிதன். இன்று யாரோடும் அந்த சினேகம் பிரதாபனுக்கில்லை.
பிரதாபன் அமைதியாக தாமரகுளத்தின் பிரசிடெண்ட் வர காத்திருந்தான், அவருடன் முன்னாள் எம்.எல்.ஏ ஒருவரும் வர இரு பக்கமும் பேச்சுவார்த்தை நடந்தது.
தலவாடி ராஜகோபாலன் நேர்மையாக நடக்கவில்லை என்று பிரதாபன் தரப்பினர் பேச, பிரதாபன் அமைதியாக இருந்தான். அப்பாவின் நண்பர், தன் நண்பனின் தந்தை என்று நம்பியதற்கு இக்கட்டான சூழ்னிலையில் தன் அச்சச்சனை ஏமாற்றி, சூழ்னிலையைப் பயன்படுத்தி குடியிருந்த வீட்டை வாங்கியிருக்க ராஜகோபாலன் மீதும் மனிதர்கள் மீதுமான நம்பிக்கை மிகுதியாக அடிவாங்கியிருந்தது.
இதில் உன்னியிடம் உன் தந்தை செயல் நியாயமில்லை என்று சொல்ல, தந்தை பற்றி அறியாத உன்னியோ கடனைத் திருப்பிக் கொடுத்தால் அச்சன் வீட்டை தந்துவிடுவார் என்று நண்பனுக்குச் சொன்னான். இருபது வயதில் இருவருக்கும் உலகம் புரியாமல் இருக்க, இதோ இன்று நண்பர்கள் எதிரெதிராய் நின்றனர்.
“அஞ்சு வருஷத்துல திருப்பித் தரலன்னா தரவாடு என் பெயர்ல மாத்திக்க்கொடுக்கணும்னு பத்திரத்துல இருக்கு” என்று ராஜகோபாலன் வாதாட
“படிச்சுப் பார்க்காம கையெழுத்துப் போட்டா அது என் தப்பில்லை” என்று கிண்டலாக சொன்னார் ராஜகோபாலன்.
“இப்போ என்ன முடிவு சொல்றீங்க?” என்று தாமரகுளத்தின் ப்ரெசிடெண்ட் கேட்க
“பத்திரப்படி அஞ்சு வருஷத்துல கடனை அடைக்கலன்னா எனக்கு தரவாட்டை எழுதிக்கொடுக்கணும்னு இருக்கு. அப்படி பார்த்தா இப்போ இது என் தரவாடு. இல்லைன்னா இன்னிக்கு இந்த இடத்தோட மதிப்போடு சேர்த்து கடனையும் வட்டியையும் கொடுத்தா நான் பத்திரத்தைத் தரேன்” என்றார்
ராஜகோபாலன்.
நிச்சயம் பிரதாபனால் இடத்தின் இன்றைய மதிப்பிற்கான பணத்தை உடனே தர முடியாது என்று தெரியும். அதையும் மீறி அவன் கோர்ட், கேஸ் என்று சென்றாலும் இழுத்தடிக்கவே நினைத்தார். நூறாண்டு பழமையான தரவாடு, அதன் பின் குளம், சுற்றியும் தாராளமாக இடம். புதிதாய்ப் பார்ப்பவர்கள் எல்லாம் அதிசயமாகத்தான் பார்க்கிறார்கள். அந்த பூரிப்பும் பெருமையும் இழக்க ராஜகோபாலன் தயாராக இல்லை. ராஜகோபாலனின் தந்தை பொன்னச்சனிடம் வேலைப்பார்த்தவர்.
பொன்னச்சன் மரியாதையாக நடத்தினாலும் அவர் பெரிய ஆள் என்ற தோரணையுமிருக்கும். மகனின் நண்பன் என்றாலும் கூட ராஜகோபாலனை தள்ளி நிறுத்துவார், அதெல்லாம் சேர்த்து இந்த பெருமை இருந்தால்தானே என்று ராஜகோபாலனை சிந்திக்க வைக்க, நேரம் பார்த்து அவர்களை கீழே இறக்கிவிட்டார்.
கடனை அடைத்துவிடுகிறோம் என்று சில வருடங்களுக்கு முன் ராஜகோபாலனிடம் பேச, அவர் பிடிகொடுக்கவில்லை. அப்போதுதான் அவரின் பத்திர மோசடி எல்லாம் பிரதாபனுக்கே தெரிந்தது. பணத்தை வைத்துக் கொண்டு பேச வேண்டும் என்பதால் இத்தனை நாள் பேசாமல் பொறுமையாக இருந்தான் பிரதாபன்.
ராஜகோபாலனுக்கு இவர்களை ஏமாற்ற வேண்டுமென்பது எண்ணமாக இருக்க, நேர்மை இவரிடம் வேலைக்காகாது என்று பிரதாபனுக்குப் புரிந்தது. முன்னாள் எம்.எல்.ஏவும் பேச அவர் இறங்கிவரவில்லை.
பிரதாபன் அவனுக்காக வந்திருந்த ஆட்களுக்கு நன்றி சொல்லி அனுப்பியவன், வேட்டியை மடித்துக் கட்டியபடி ராஜகோபாலனைப் பார்த்து,
“நீங்க நேர்மையா நடந்தா நானும் அப்படி நடப்பேன். என் தரவாட்டை எப்படி மீட்கறதுனு எனக்குத் தெரியும். உங்க வழி என்னனு நீங்க காட்டிட்டீங்க இல்ல, என் வழியை நான் காட்டுறேன். வினயா வா” என்றான்.
பிரதாபனின் அந்த பேச்சு உன்னிக்குக் கவலைகொடுத்தது. இத்தனை வருஷ ஒதுக்கமும், அழுத்தமும் பிரதாபன் அவன் பழைய நண்பனில்லை என்பதை நித்தமும் உணர்த்த,
“பிரதாபா ஒரு நிமிஷம்” என்று உன்னி ஏதோ பேச வர, பிரதாபன் நிற்கவில்லை. வேகமாக பிரதாபன் பின்னே வந்து அவனை தடுக்க நினைக்க, பிரதாபனோடு நடந்த வினயச்சந்திரன் உன்னிகிருஷ்ணனின் கையைப் பிடித்து நிறுத்தினான்.
“சேட்டா உங்ககிட்ட பேச இஷ்டமில்ல சொல்லிட்டார் இல்ல, போங்க சார்” என்றிட
“ஜோலிக்காரன் உன் ஜோலியைப் பார்க்கணும்.” என்று உன்னி வினயனை கோபமாகப் பார்க்க
“என் ஜோலியைத்தான் சார் பார்க்கிறேன்” என்றான் வினயனும்.
“பிரதாபா நான் பேசணும் சொல்றேன்ல” என்று உன்னி சொல்ல
“எனக்கு உன்னோட பேச இஷ்டமில்ல. வினய் நீ வா” என்றான் பிரதாபன்.
“நேத்து வந்த ஒரு வேலைக்காரனை வச்சு என்னைப் பேசுற, நம்ம ப்ரண்ட்ஷிப் அவ்வளவுதானா?” என்று உன்னி வருத்தமாகக் கேட்க
“வினயனைப் பத்தி பேச உனக்கு ரைட்ஸ் இல்ல உன்னி” என்றான் விரல் நீட்டி.
“அவன் ஜோலிக்காரனா இருந்தாலும் உன்னை மாதிரி உன் அச்சன் மாதிரி கூட்டுக்காரனை ஏமாத்தமாட்டான். எப்போ யார் வராங்கன்னு முக்கியமில்லை அவங்க எப்படிப்பட்டவங்கன்னுதான் முக்கியம். மனசிலாயோ?” என்ற பிரதாபன் வேகமாக பூவம்பள்ளில் தரவாட்டை விட்டு வெளியேறினான். அவன் பின்னே வெளியேறிய வினயனின் மனம் ஒரு பக்கம் பிரதாபனின் நம்பிக்கையில் நனைந்து மகிழ, மறுபக்கம் பயந்து மறுகியது.
வீட்டுக்கு வர மின்மினி ஆவலாக ஏட்டனின் முகம் பார்த்தாள். பொன்னச்சனும் பேரன் முகம் பார்க்க,
“அவர் நம்மை ஏமாத்தனும்னுதான் நினைக்கிறார். நேர்மையா போனா நமக்குத் தரவாட்டை தரமாட்டார். கோர்ட் போனா நம்ம தரவாடு நமக்குத்தான் கிடைக்கும். ஆனாலும் டாகுமெண்ட்ஸ் வச்சுப் பார்த்தா கஷ்டம், அவர் என்ன டெர்ம்ஸ் போட்டு வாங்கியிருக்கார் தெரியல. நீங்க கவலைப்படாதீங்க அச்சச்சா, நான் பார்த்துக்கிறேன்” என்றான் பிரதாபன்.
கல்லூரி முடித்தவுடனே அப்பாவின் கடன், அப்பாவின் மருத்துவ கடன் எல்லாம் அடைத்து, தங்கையின் படிப்பு செலவை கவனித்து, வீட்டை, தொழிலை, விவசாயம் என்று எல்லாம் பார்த்து ஓய்வின்றி ஓடியவன் மிகவும் கடினப்பட்டு ராஜகோபாலனுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை தயார் செய்திருந்தான். பணத்தைக் கொடுத்து தரவாட்டின் பத்திரத்தை வாங்க நினைக்க, அதற்கும் ராஜகோபாலன் ஒத்துக்கொள்ளவில்லையென்றதும் பிரதாபன் பிற வழிகளை யோசித்தான்.
பிரதாபன் அந்த வேலை விஷயமாக வெளியே சென்றுவிட, வினயச்சந்திரன் மின்மினியிடம் அங்கே நடந்ததை சொல்ல மின்மினி விழிகள் மின்னின.
“அப்போ ஏட்டனுக்கு வினயன்னா இஷ்டம், அல்லே?” என்று ஆவலாய்க் கேட்டவளை தன் மனதின் குழப்பங்களை சொல்லி பயப்படுத்த நினைக்காதவன் தலையசைத்தான்.
அன்று மாலை கைனகரி சென்ற வினயச்சந்திரன் அவனறியா ஒரு பிரதாபனை கண்டு அதிர்ந்தான்.