“மழைதான் நம்மை நனைக்கும், மழை எப்படி நனையும்? கொஞ்சமும் சென்ஸ் இல்ல, இந்த கவிஞர்கள் எல்லாம் சயின்ஸ்ல ஃபெயிலானவங்களா என்ன?” உண்மையில் எழுத்தின் மீது அத்தனை ஆர்வமிருந்தாலும் அப்பாவை வம்பிழுப்பதில் ஒரு அலாதி ஆனந்தம் ஆனந்தனுக்கு.
உண்மையில் கார்த்திகேயனின் பழக்கம் அவனை தொன்றுதொட்டது.
“மழை பெய்ஞ்சா ரோடெல்லாம் சேறும் சகதியுமா ஆகுது, ட்ராஃபிக் ஜாம் ஆகுது, அவன் அவன் கால் வழுக்கி விழறான்? நீங்க எல்லாம் மழையை கோலிரிஃபை பண்றீங்க? மழையால எத்தன பேர் வீடு இழக்குறாங்க, ஸ்டெர்லிங் ரோட்ல அழகான லோகேஷன்ல வீடு இருக்கவும் மழை காலத்தில கவிதை கொட்டுது, மழை பத்தி கவிதை கொட்டுது. இதே வேளச்சேரில இருந்திருந்தா வெயிலில் நனைவோம் வா’ன்னு டைட்டில் வச்சிருப்பீங்க இல்ல கார்த்தி?” என்று மேலும் மேலும் அவரை வெறுப்பேற்றினான்.
“ஒரு எழுத்தாளன் செய்ற மிகப்பெரிய தப்பு என்ன தெரியுமா டா?”
“அதையும் நீங்களே சொல்லுங்க”
“தன் கற்பனைக்கான வேலிடேஷனை இன்னொருத்தன் கிட்ட கேட்கிறதுதான். கற்பனைக்கெல்லாம் எவனாச்சும் கரெக்சன் கேட்பானா?” என்றதும் ஆனந்தன் ஹாஸ்யம் கேட்டது போல் வாய்விட்டு சிரித்தான். கார்த்திகேயனுக்கு ஆனந்தனின் அந்த சிரிப்பு அத்தனை பிடிக்கும். அவர் விரும்பி பார்க்கும் கவிதை! அவர் எழுதிய ஒரே உயிர்க்கவிதை! அவரின் உயிரோட்டமான கவிதை ஆனந்தன்! கை கால் முளைத்த கவிதை! மகன் சிரிப்பை ரசித்தவர் அவனுக்கு ஈடாகப் பதில் பேசினார்.
“என்னா டா சிரிப்பு?”
“இல்ல, கற்பனைக்கு இன்னொரு பெயர் பொய்தானே? உலகத்துல இல்லாத ஒரு விஷயத்தை, இருக்கமாதிரி சொல்றதுக்குப் பெயர் என்ன கார்த்திக்?” என்று சிரிப்பை அடக்கிக் கேட்டான் ஆனந்தன்.
“டேய் ஆனந்தா! அடக்கி வாசிடா! கொஞ்சமாச்சும் உண்மையிருந்தாதான் அது மனசுல நிக்கும். நான் பார்த்த மனுஷங்க, இடம், கேட்ட சம்பவம் இதான் கருவாகுது, அதை நான் கொஞ்சம் கற்பனையில டெவலப் பண்றேன்” கார்த்திகேயன் விடாது பேசினார்.
“உங்க ஸ்டேட்மெண்ட்ல ஒரு பெத்த மிஸ்டேக் நைனா!”
“என்னடா?”
“மனசுல ஒன்னும் நிக்காது! நம்ம ஞாபகங்கள் எல்லாம் மூளையிலதான் ஸ்டோர் ஆகியிருக்கும், எதாவது ஒரு ப்ரைன் சர்ஜன் எழுதின புக் இருந்தா படிங்க, ஒரு நரம்பு கட் ஆனா உங்க பேச்சே நின்னுடும், ஒரு நரம்புல மிஸ்டேக் இருந்தா உங்களுக்கு மொழித்திறமை, இல்ல நம்பர்ஸ் போயிடும். மனசை விட்டுடுங்க கார்த்திக்”
“டேய் உன் சயின்ஸை நிறுத்து! மனசுன்னா ஹார்ட் இல்ல, மைண்ட்!” கார்த்திகேயன் அழுத்தமாக சொல்ல
“மைண்ட், ப்ரைன் இருக்கு ஹார்ட் இருக்கு. மைண்ட் எங்க இருக்கு?” என்று கேட்டவன்
“ஓகே! போர் அடிச்சதுன்னுதான் பேசினேன், ஸ்டோருக்குப் புக்ஸ் வந்திருச்சாம், நான் கிளம்புறேன். நீங்க சாமன விளக்கிட்டு வந்து சேருங்க” என்ற ஆனந்தன் அவர்களின் கடைக்குக் கிளம்பினான்.
கார்த்திகேயன், பார்க்க ஆனந்தனின் அண்ணன் போல் இருக்கிறார் என்று சொல்ல ஆசைதான்! சொன்னால் ஆனந்தனுக்குப் பிடிக்காது! அது உண்மையுமில்லை! அப்பா மாதிரிதான் இருப்பார், ஆறடி உயரம், நரை ஆங்காங்கே கலந்திருக்க, டை அடித்து மறைத்திருந்தார். ஆனால் ஐம்பது வயதைத் தொடும்போது அடிவயிறைத்தொடும் தொப்பை இல்லை, ஆரோக்கியமாக இருந்தார்.
அவர் அழகின் ரகசியம் கேட்டால் கார்த்திகேயனின் பதில் இதுதான்.
“எங்க வீட்லயே லேடீஸ் கிடையாது, எங்க வாழ்க்கையிலயும் கிடையாது! அழற பொண்ணுமில்ல, அழ வைக்குற பொண்ணுமில்ல.” என்று பதில் சொல்லி சில வருடங்களுக்கு முன் பேஸ்புக்கில் பெண்ணியவாதிகளின் பேசுபொருளாக இருந்தவர். அன்றிலிருந்து பேஸ்புக்கில் முகம் காட்டுவதில்லை என்று நினைத்தால் அது தவறு! ஆண்கள் எல்லாம் ஒற்றுமையானவர்கள், ஒன்று கூடி அவர்களின் ஆதிக்கத்தை ஆதிகாலம் தொட்டு இணையத்திலும் காட்டினர்.
“ஆண்கள் இருக்கணும்னாலே பெண்கள் இருக்கணும்யா டோமரு” என்று பெண்கள் போட்ட போஸ்ட்டையெல்லாம் கண்டும் காணாமல் இருந்துவிட்டார்.
ஆனந்தன் அப்பாவைக் கடிந்துகொண்டான்.
“உங்களை யாரு அப்படி பேச சொன்னது?” என்று.
“என் அழகு ரகசியம் என்னனு கேட்டா அதானே சொல்ல முடியும்?”
“முதல்ல உங்களை அழகுனு சொன்னது எந்த கொங்கனா கொடுக்கா?” என்றான் எரிச்சலாக. தேவையில்லாமல் வம்பை இழுக்கிறாரே என்று அப்போது ஆத்திரப்பட்டிருந்தான். பின் இணையத்தில் அதெல்லாம் சகஜம் என்று புரிய, அமைதியாகிவிட்டான்.
“டேய் ஆனந்தா! மனுஷங்க முன்னாடி நின்னு பேசினாலே ஒழுங்கா புரிஞ்சிக்க மாட்டாங்க, இதுல முகம் காட்டாம பேசும்போது எப்படி சரியா புரிஞ்சிப்பாங்க? என்ன இருந்தாலும் அந்த மார்க் பய மார்க் வாங்காம அவன் ப்ராஜ்க்ட்ல ஃபெயில் ஆகியிருக்கணும்டா, கருமத்தால நல்லதை விட மோசமானதுதான் அதிகம் நடக்குது.” என்று மார்க் ஷூகர்பெர்க்கைக் கொஞ்சம் நேரம் திட்டியிருந்தார்.
அதன்பிறகு நாட்டில் நடந்த வெங்காய விலையேற்றம், பெட்ரோல் விலையேற்றம், பிரபல நடிகரின் நாய்க்கு சிகிச்சை, பிரபல நடிகையின் செண்ட் என்ன போன்ற அதிமுக்கிய பிரச்சனைகளில் இவரை இணைய சமுதாயம் மறந்துவிட்டிருந்தது.
கார்த்திகேயன் சொன்னது போல் அவர் வீட்டில் பெண்கள் இல்லை. அவரும் ஆனந்தனும் ஆனந்தமும் மட்டும் விளையாடும் வீடு! வேலைக்குக் கூட ஆட்களில்லை, எல்லா வேலையும் அப்பாவும் மகனும் பகிர்ந்து செய்துவிடுவார்கள். ஆனந்தனின் தாத்தா பத்மநாபன் அரசு ஊழியர். அப்போதே நகரின் முக்கிய இடங்களில் நிலங்கள் வாங்கி போட்டிருக்க, நுங்கம்பாக்கத்தில் ஆனந்தனின் பெரியப்பா வீடு இருக்கிறது, சித்தப்பா மவுண்ட் ரோட் பக்கமிருந்தவர் இப்போது அண்ணா நகரில் இருக்கிறார், அவர்களின் குடும்பத்தின் அம்பானி அவர். பங்குச்சந்தையில் புகுந்து விளையாடி பணம் சேர்த்து வைத்திருக்கிறார்.
ஆனந்தனின் அப்பா கார்த்திகேயன் சிஎல்ஆர்ஐ(CLRI- மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம்) இல் கேடலிஸ்ட் சைன்ஸ் பிரிவின் தலைவராக இருக்கிறார். உண்மையில் விஞ்ஞானத்தில் பட்டம் பெற்றவர். அவரின் இன்னொரு பிடித்தம், எழுதுவது.
கே.கே என்ற புனைபெயரில் கடந்து பதினைந்து வருடங்களாக கவிதை, சிறுகதைகள், நாவல்கள் எழுதி வருகிறார். அவரின் எழுத்தைக் கொண்டே வாசகர்களுக்கு அவரைத் தெரியும். மற்றபடி காலையில் ஃபார்மல் சட்டையும் பேண்டும் அணிந்துகொண்டு தேசத்தின் முக்கிய ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு விஞ்ஞானியிடம் யார் கவிதை கேட்க போகிறார்கள்?
மவுண்ட் ரோடில் ஆங்கிலேயரின் பழைமையான கட்டிடங்களுக்கு மத்தியில் வெண்மையாக தன்னைத் தனித்துக் காட்டி நின்றது ‘உலா’. கீழே புத்தகங்கள், எழுதுபொருட்கள் விற்கும் கடையிருந்தது, கூடவே இசைக்கருவிகளாக்கான இடமும். தனது இருசக்கர வாகனத்தில் வந்து இறங்கி உள்ளே சென்ற ஆனந்தனை வரவேற்றனர் கீரவாணியும் எஸ்.பி.பியும்.
‘மழையும் நீயே வெயிலும் நீயே நிலவும் நீயே நெருப்பும் நீயே அடடா உனைத்தான் இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா?’
மழை என்றதுமே அப்பாவிடம் காலையில் பேசியது நினைவில் வந்து புன்னகை தந்தது. புத்தகங்கள் விற்பனை செய்யும் கவுண்டரில் இருந்தவரிடம் புன்னகைத்தவன் மெல்ல மாடியேறினான்.
உலாவின் இரண்டாவது தளம் உணவுக்கானது. உணவென்றால் முழுமையான உணவில்லை, ஸ்நாக்ஸ், காஃபி, டீ, ஜூஸ், கேக்ஸ் போன்றவைக்கானது. அன்று விடுமுறை தினமென்பதால் கூட்டம் கொஞ்சம் அதிகம், கிச்சனுக்குள் சென்று பார்வையிட்டவன்,
“எனி ஹெல்ப்?” என்று கேட்க, அவர்கள் மறுத்துவிட கீழே இறங்கினான். மாடியிலிருந்து கீழே பார்க்க உலாவின் வாசல் நன்றாகத் தெரியும்.
இன்னமும் எஸ்.பி.பி மெல்லிய குரலில் பாடுவதை நிறுத்தவில்லை.
‘ஏகாந்தம் இந்த ஆனந்தம்
அதன் எல்லை யாரறிவார்
ஏதேதோ சுகம் போதாதோ
இந்த ஏக்கம் யாரறிவார்
முதலாய் முடிவாய்
இங்கு என்றும் வாழ்வது
காதல் ஒன்றுதான்’
ஏகாந்தம் இந்த ஆனந்தம், அப்படித்தான் ஆனந்தனின் வாழ்க்கை இருக்கிறது. மெல்ல படிகளில் இறங்கியவனின் நைக்கீ ஷூவின் சத்தத்தில் விழியுயர்த்தினாள் வாரிதி. படிக்கட்டின் பக்கவாட்டில் புத்தகங்களைத் தேடியபடி நின்றவள் ஷூ சத்தத்தில் கலைந்தாள். மெல்ல பார்க்க ஆனந்தன் என்றதும் ஒரு பரிட்சய புன்னகை வீசினாள் பாவை.
ஆனந்தனும் அதே பாவனையைத் திருப்பளியத்தவன்,
“என்ன மேடம் என்ன புக் தேடுறீங்க?” என்று வாரிதியின் முன்னால் நின்று கேட்டான்.
“கே கே சாரோட புக் இந்த மாசம் ரிலீஸ் ஆச்சுல, மாசம் ஸ்டார்டிங்ல ஊருக்குப் போய்ட்டேன் சர், இப்போ தேடினா காணும்.” புலம்பலாக சொல்லி ஒவ்வொரு ரேக்’காக கண்களை அலைய விட்டாள் வாரிதி.
“ஆன்லைன்ல ஆர்டர் பண்ணினா கிடைக்கும்” என்று ஆனந்தன் சொல்ல, அதிருப்தியாகப் பார்த்தாள் வாரிதி.
“புக் கடை வச்சிட்டு நீங்களே ஆன்லைனல வாங்க சொல்றீங்களே சர்? புக் கடைக்கு வந்து தேடி பிடிச்சு ஒவ்வொரு புக்கா திறந்து வாசம் பிடிச்சு, நமக்குப் பிடிச்ச ரைட்டர் புக்கை யுரேகான்னு ஆர்கிமிடஸ் மாதிரி கண்டுபிடிச்சு கத்தி, புதுசா ஒரு புக்கை எக்ஸ்ட்ரா வாங்கி எவ்வளவு சந்தோஷமிருக்கு?”
வாரிதி அவள் செய்வதை அப்படியே சொல்ல தலையாட்டிய ஆனந்தன்,
“எதாவது புக் வேணும்னா அப்படியே ரெண்டு மணி நேரம் ஆனாலும் கால் கடுக்க நின்னு படிச்சுட்டு..” அவன் சிரிப்பை அடக்கி இழுக்க வாரிதி
“கேகே சார் புக் இல்லையா?” என்றாள் வருத்தமாக.
“அக்சுவலி கேகே சார் புக்ஸ் புது ரேக்ல மாத்தியாச்சு. தேட வேண்டிய இடம் மாறிடுச்சுன்னா தேடுறது கிடைக்காது இல்ல..? என்னதான் இருக்கோ அந்த கேகே சார் புக்ல” ஆனந்தன் குரலில் நக்கலிருந்ததோ?
“கேகே சார்னா அரவிந்தனுக்கு அவ்வளவு இஷ்டம், அவன் சொல்லித்தான் நான் முதன்முதல்ல அவர் கவிதை வாசிச்சேன். அவரோட கதை கூட நல்லாயிருக்கும், நல்ல எழுத்து என்ன செய்யும் சர், யோசிக்க வைக்கணும் இல்லை நேசிக்க வைக்கணும். ரெண்டும் செய்றது கேகே சாரோடது.” என்று வாரிதி பெருமையாக சொல்ல, ஆனந்தனுக்கு அப்பாவைப் பற்றிக் கேட்க பெருமிதம். அவன் அப்பாதான் கார்த்திகேயன் என்று வாரிதிக்குத் தெரியாது. வாரிதி வாரம் ஒரு முறை வரும் வாடிக்கையாளர், அதனால் ஒரு பரிட்சயம்.
“உங்க அரவிந்தன் பயங்கர ஃபேன் போலயே, பேசாம அவரையும் ஒரு நாள் அழைச்சிட்டு வாங்க, கேகே சாரை மீட் பண்ணிடலாம், எனக்குத் தெரிஞ்சவர்தான்” என்றதும் வாரிதியின் கண்கள் பளிச்சிட்டது.
“நீங்க சொன்னதே போதும் சர், கேகே சாரை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம். அரவிந்தனுக்குப் பிடிக்காது, இசையை ரசி, கேளு. அத்தோட நிறுத்திடணும், அவரை மியுசிக்காதானே உனக்கு அறிமுகம், அதை ரசிச்சுப் பழகு, அவரோட பேசி பழகி அப்புறம்… நிலா மாதிரி, சூர்யன் மாதிரி அவரும் சாதாரணம் ஆகிடுவார். என்ன பேசுவோம் நீங்க நல்லா மியுசிக் பண்றீங்க அதானே? அதை லெட்டரா சொல்லு, அதைவிட்டு அவரோட டெய்லி பேசி என்னவாகப்போகுது? அரவிந்தனிடம் யாரையாவது பார்க்க வேண்டும் என்று கேட்டால் இப்படித்தான் சொல்லுவான். ஒரு பிரபல பாடகரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலைப் பகிர்ந்தபோது அவன் சொன்ன பதில் இது.
“கேகே சாருக்கு இவ்வளவு இளம் ரசிகை, ரசிகன் இருப்பாங்கனு எனக்கு உங்களைப் பார்க்கிற வரைக்கும் தெரியாது வாரிதி” என்று ஆனந்தன் சொல்ல
“அப்போ கேகே சார் வயசு அதிகமா?” வாரிதி கேட்க,
“உங்களை விட அவருக்கு அதிகம்” என்றதோடு நிறுத்தினான்.
“அவர் வயசு கூட உங்களுக்குத் தெரியாதா?” என்று அடுத்துக் கேட்க
“எதுவுமே தெரியாது சர், அவர் எழுத்தைத் தவிர! அவர் கதையில வர கேரக்டருக்கு எப்படியொரு உருவம் நாங்களே கற்பனை பண்ணி வச்சிருக்கோமே அப்படித்தான் அவருக்கும். அரவிந்தன் சொன்ன மாதிரி எனக்குப் பிடிச்ச சிங்கரோட குரல் மட்டும் தெரிஞ்சா எனக்குப் போதும்தானே? அப்படித்தான் இங்கயும்” என்ற வாரிதி பேசியபடியே நடந்து கே.கே’வின் புதிய கவிதைத் தொகுப்பினை கண்டுவிட்டாள்.
கண்ட நொடி கண்களில் மின்னல். மழையின்றி இடியின்றி இத்தனை இதமான ஒரு மின்னலை யாரும் கண்டிருக்க மாட்டார்கள். புத்தகத்தை நுகர்ந்து வாசம் பிடித்து கண்மூடி வாரிதி நின்றது கவிதையான கணம்!
அப்பா காலையில் பேசியது நினைவில் வர, அவருக்குக் குறுஞ்செய்தி அனுப்பினான்.
‘டைட்டில் நல்லாயிருக்குப்பா! மழையை யார் நனைப்பாங்க? வழக்கமான டைட்டில் இல்லை, ஆனா சொல்ல கேட்க நல்லாயிருக்கு. கோ அஹெட் பா” என்ற ஆனந்தனின் செய்தியைப் படித்த கார்த்திகேயனுக்கு ஆனந்தம்.
‘கற்பனைக்கும் நிஜத்திக்கும் நடுவே கதையெனும் பொய் கொண்டு நிரப்புகிறேன்’
மெல்ல சொல்லிப் பார்த்த வாரிதி முகத்தில் புன்னகை, முதலாம் பக்கமிருந்த வரிகள் அவை! மேலும் பூ வடிவ ஸ்டிக்கி நோட்ஸ், சின்னதாக ஒரு டைரி என்று பொருட்களை வாங்கியவள் பில் போட சென்றாள்.
வாரிதி சென்ற சிறிது நேரத்தில் கார்த்திகேயன் உள்ளே நுழைய,
“ஜஸ்ட் மிஸ்! உங்களோட பயங்கர ஒரு இளம் ரசிகையை உங்களுக்குக் காட்டணும் நினைச்சேன் கார்த்திக், பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்” என்று சிரித்த ஆனந்தனிடம்
“யார்டா அது?” என்று கார்த்திகேயன் விசாரிக்க
“அந்த பொண்ணோட லவ்வர் நினைக்கிறேன் பேரு அரவிந்தன், அவனுக்கு உங்களோட புக்ஸ் வந்த உடனே கொண்டு போய் ப்ரெசெண்ட் பண்ணுவா போல அந்த பொண்ணு. கேகே சார்னு ஒரே புகழ்ச்சி! ம்ம்ம்… “ என்று இழுத்தவன்
“ஃப்ரஸ்ட் டைம் பில் போடும்போதே அவ பெயரை கவனிச்சேன் பா, கேட்கணும்னு நினைப்பேன் மறந்திடுவேன். வாரிதின்னா என்ன?” என்று பெயரின் பொருள் அறியும் ஆவலில் கேட்டான் ஆனந்தன்.
“வாரிதியும் அடங்கி நிற்க மாருதமும் தவழ்ந்து வர
காரிகையென் உள்ளந்தனிலே காற்று சுழன் றடிப்பதுமேன்?” மெல்ல தன் நினைவடுக்கில் பொன்னியின் செல்வன் வரிகளை சொல்லிப்பார்த்த கார்த்திகேயன் மிகவும் இயல்பாக
“வாரிதின்னா கடல்” என்றார்.
அதைக் கேட்டதுமே ஆனந்தனின் முகம் மாறியது. சொல்லிவிட்டு அவன் பதிலை எதிர்ப்பார்த்து கார்த்திகேயன் அவன் பக்கம் பார்க்க, அவனோ உலாவின் கீழ்ப்பகுதியில் இசைக்கருவிகள் விற்பனைக்கு வைத்திருக்கும் பக்கம் சென்றுவிட்டான். செல்லும் மகனை வாஞ்சையோடு பார்த்தவருக்கு, எப்படியாவது அவன் பெயரின் பொருளாக அவனைப் பார்க்க ஆவல்.
“மேடம்! நாளைக்கு உங்களைப் பார்க்க நானும் என் பையனும் வரோம்” என்று குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு அவர் உலாவில் உலாவினார்.