ஆகாயத்திற்கும் பூமிக்கும் தூதுவனைப் போல மழைத் தூறல்கள், நீலவானிலிருந்து மெதுவாக நிலம் வந்தடையப் போவதை, கன்னங்கருத்த மேகங்களின்றி மிக லேசான கார்வண்ண முகில்கள் பறைசாற்றின.
பரபரப்பான சென்னையின் பிரதானச் சாலையை விட்டுப் பிரிந்து
சென்ற மற்றுமொரு சிறிய சாலையின் கடைக்கோடியில் அமைந்திருந்தது ‘சகலகலாவல்லி’ அரங்கம்.
பகட்டான வாகனங்கள் வெளிப்பரப்பில அணிவகுத்து நின்றிருந்தன.
வெளியில் தெரிந்த பிரம்மாண்டத்தை விட உள் அரங்கம் பொன் வேயப்பட்டதைப் போன்று இளம் மஞ்சள் விளக்குகளால் ஒரு மிதக்கும் விண்வெளி கலம் போல் மின்னிக் கொண்டிருந்தது.
அரங்கத்தின் வரிசைகளில் இருந்த கண்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் மேடையில் குவிந்தன.
ஆரவாரமற்ற ஒரு அழகான புன்னகையுடன் மயில் கழுத்து நிற புடவையில், மிக மெலிதான ஒப்பனையில் அனைவரையும் பணிந்து வந்து அமர்ந்தாள் மாளவிகா.
பக்கவாத்தியங்கள் முனைப்புடன் அவளுக்காக இணைந்திசை வழங்க அவளுக்கு பின்னிருந்த கலைஞர்களின் கைகளுக்குள் குழந்தையைப் போல் மகிழ்வாய் அமர்ந்தன.
மழையின் துளிகளுக்கோ, அவளின் தேமதுர இசைக்கு பக்கவாத்தியமாக இருக்க வேண்டும் என்ற ஆசையில் சிறிது வேகமான சாரல்களாக சன்னல் வழி உள் நுழையத் துவங்கின.
ஆனால் அதற்குள் படபடவென இறுகச் சாத்தப்பட்ட கதவுகளுக்குள் வர அனுமதி வழங்கப்படாததால், பாவம் ஏமாந்து தான் போயின.
ஒரு சிறு சலசலப்புடன் அரங்கம், மழை கச்சேரி மாளவிகாவின் கச்சேரியை ரசிக்க இயலாமல் செய்து விடுமோ என்று பயந்து சுற்று முற்றும் பார்த்தது.
அதை அறிந்ததைப் போல, தென்றல் காற்றை சமாதானத் தூதுவனாக சன்னல்களின் சிறு இடைவெளியில் அனுப்பி, தான் இதமான மழைதான், இசையை ரசிக்கதான் வந்திருக்கிறேன் என்று அனைவருக்கும் அறிவித்தது. அதன்பின் தான் ஆசுவாசமடைந்தது கூட்டம்.
மானசீகமாக பெற்றோரை, குருவை வணங்கி,
முழு முதற் கடவுளை வணங்கத் தொடங்கினாள் மாளவிகா.
ஒரு தோரணையான மயிலின் நடனத்தையும், அதற்கு குயில் போன்ற ஒரு குரலையும் கற்பனை செய்தால் எத்தணை அழகான ஒரு காட்சி தோன்றுமோ அவ்வாறு இருந்தது, அவள் தன்னை சரி செய்து, தன் கானக்குரலால் பாடத் தொடங்கியது. அரங்கம் அமைதியை சொந்தமாக்கியது.
முதல் வரிசையில் அமர்ந்திருந்த நீலகண்டன், தன் மகளும், மாணவியுமாகிய மாளவிகாவின் குரலுக்கு லயத்தோடு, பெருமை பொங்க தாளமிட்டு தலையை அசைத்துக் கொண்டிருந்தார்.
மிகப்பெரிய சங்கீத வித்வான், பல்வேறு விருதுகளை வாங்கியவரும், அவரிடம் இசைக்கற்க விரும்பும் லட்சக் கணக்கானவர்களின் ஆதர்ச குரு.
அருகில் அமர்ந்திருந்த மீனாட்சி, தன் மகளையும், தன் கணவரையும் மாறி மாறி ரசித்துக் கொண்டிருந்தார். இவர்கள் இருவரையும் தன் வாழ்வில் இணைத்ததற்கு இறைவனுக்கு நன்றி சொல்வது தான் அவரின் தினக்கடமை. ஜென்ம சாபல்யம் அடைந்ததை போன்ற திருப்தியில் அவரின் முகம் பளீரென்ற ஸ்படிகம் போல் விளக்கொளியில் மின்னியது.
மாளவிகாவின் வாய் இசையைப் பொழிந்துக் கொண்டிருந்தாலும், மூடியிருந்த கண்கள் மெல்லத் திறந்து ஒவ்வொரு ஜன்னலையும் கதவுகளையும், தளிர் பார்வையால் தவிப்புடன் அளந்தது.
அலைகள் கரை தொட்டு திரும்பும் அவசரத்தில் ஒரு கணம் நின்று திரும்புவதை போன்று, ஓராயிரம் கண்களுக்கு மத்தியில் தன்னை உற்று நோக்கும் அந்த மாயக்கண்களை அரங்க மத்தியில் கண்டுக் கொண்டு அங்கேயே நிலைக் கொண்டன, அவளின் அழகான மைக்கண்கள்.
இதயத்தின் ஒரு அறை திறந்து, நுரையீரலின் சுவாசம் இனிமையாய் நுழைவது அவளுக்குத் தெரிந்தது.
தன்னிச்சையாக அவளின் வாய் அடுத்த வரியான
“மகாதேவ சுதம்…. குரு குகனுதம்….”
அடுத்தடுத்து அதே வரிகள் ஸ்பஷ்டமாய் அரங்கினுள் அதிர, மத்தாப்பாய் பூத்து, மௌனமாய் சிரித்து, இரு கைகளையும் மார்புக்கு கீழ் கட்டிக் கொண்டு தலையை லேசாக சாய்த்துப் பார்த்து, மாளவிகாவின் இதயத்துள் ஒரு ரசவாதத்தை நிகழ்த்திக் கொண்டிருந்தான் மகாதேவன்.
தேர்ந்த நடன மங்கையின் அபிநயத்தை போல அவனுக்கு மட்டும் புரியும்படி கண்களால் தன் குரல் ‘எப்படியிருக்கிறது’ என்று கேட்டாள்.
மாயவனின் குழலோசை இசைப்பது போல மகாதேவனும் இரு கைகளை உதட்டிற்கு அருகில் வைத்து பதில் அபிநயம் பிடித்தான்.
பரம த்ருப்தியில் கணபதியை வணங்கி முடித்து , அடுத்த வர்ணங்களில் அவளின் குரல் இசை மாயங்களை நிகழ்த்தத் துவங்கின.
அரங்கவாசிகள் தாங்கள் வாங்கியிருந்த நுழைவுச்சீட்டுக்கான பணம் வீண் போகவில்லை என்பதாக மகிழ்ச்சியில் தாளங்களால் தங்கள் தொடைகளுக்கு வலி நிவாரணத்தை வழங்கிக் கொண்டிருந்தனர்.
அந்தி வேளை சூரியனும், சந்திரனும் ஒரேக் கோட்டில் சந்திப்பார்கள். மாளவிகாவும், மகாதேவனும் சூரிய சந்திரர்களாய் பார்வையால் அங்குச் சந்தித்திருக்க, அரங்கத்தின் உத்திரம் பிரம்மாண்ட வானமாக, இசையை ரசிப்பவர்கள் நட்சத்திரங்களாய் தெரிந்தார்கள்.
நிலவுக்கு வழிவிட்டு சூரியன் மெல்ல அகல்வதைப் போல மகாதேவன் உள் அறை நோக்கி நகர்ந்தான்.
அவன் போகும் பாதையில் அவளின் கண்கள் நகர்ந்தாலும், இம்மியளவு பிசகாமல் சந்தங்கள் தேவ கானமாய் ஒலித்தன.
இரவிற்கு ஒரு ஆராதனை போல் சஹானாவில் ராக ஆலாபனை நிகழ்த்தத் துவங்கினாள் மாளவிகா.
ஆத்மார்த்த சமர்ப்பணத்திற்கு ‘சஹானா’ என்று அவளின் அப்பா குருவாய் இருந்து உபதேசித்து இருக்கிறார்.
உபதேசம் என்பது, சிஷ்யையின் மூலம் சரியான இடத்தில், சரியான வகையில் வெளிப்படும் போது தான் அதன் உண்மையான அர்த்தம் விளங்கும். குருவையும் பெருமைப் பொங்க வைக்கும். அதை நிகழ்த்திக் காட்டிக் கொண்டிருந்தாள் மாளவிகா.
நீட்டி முழங்காது சிறிய கால இடைவெளியில்,
மூன்று ஸ்தாயிகளிலும், காருண்யம் பொங்க அவள் பாடப் பாட சஹானா, ப்ரம்ம கமலம் மலர்ந்தது போல் அத்தனை பேரின் முகத்திலும், மனதிலும் அமைதியை மலரச் செய்திருந்தது.
ஒரு சிறு இடைவெளி தாகத்திற்காக எடுத்துக் கொண்டாள் மாளவிகா.
குறிப்பறிந்த சேவகனாய்,
யாரையும் சலனப்படுத்தாமல், அவளுக்கு பின்புறமாய் ஒரு வெள்ளித் தட்டினைக் கொண்டு வந்து அவள் புறமாய் நகர்த்தினான மகாதேவன். குடுவையில் நிரம்பியிருந்த பானத்தில் மகாதேவனின் முகம் பிரதிபலித்தது.
மாளவிகாவின் உணர்வுகளால் நிரம்பிய இதயம், உதடு வழி புன்னகையில் வெளுத்து, கண்கள் வழி சிருங்கார பார்வையில் சிவந்திருந்தது.
மகாதேவனின் கண்களோ கருணையில் நிரம்பியிருந்தது.
தேவியின் தாசனாய் உருகி வழிந்த பக்தியில் திளைத்திருந்த அபிராமி பட்டராய் ஒரு தெய்வீக பந்தத்தில் அவர்களின் பார்வைகள் காதலில் குளித்திருந்தன.
நொடிகள் கரைய, நிதானத்திற்கு வந்து, பலரின் பார்வைகள் தங்கள் மீது படியும் என்று கருதி பின்னோக்கி நகர்ந்தான் மகாதேவன்.
மனம் குழைந்ததும், தழையத் துவங்கியது மாளவிகாவின் குரல்.
அடுத்து வந்த
கல்யாணியில் அவளின் ப்ரயோகங்கள், கூட்டத்தை நீலகண்டனின் மீது பார்வையை ஓட்டி மீண்டும் மாளவிகா மீது திரும்ப செய்திருந்தன. அவள் பாடுவது குரு தந்த வித்தை என்பதை கூட்டம் ஆமோதிப்பது போல அது இருந்தது.
உள் அறையில் மாளவிகாவின் குரலுக்கு காதுகளை தந்து உணவின் ருசிகளை தன் நாக்கின் மூலம் தரம் பிரித்துக் கொண்டிருந்தான் மகாதேவன்.
அரங்கின் உரிமையாளரின் மகனும் மகாதேவனின் நண்பனுமான அரவிந்தன், மகாதேவனிடம் வந்தான்.
“தேவா, ‘ஏன் ஒரு வேலையாள் மாதிரி’ நீ போய் பாடகர்களுக்கு குடிக்க தண்ணீர் கொடுக்கிற, நீ இந்த கேட்டரிங் கம்பெனியோட முதலாளிடா!”
“இதிலென்னடா இருக்கு. நாமெல்லாம் அந்த கலைவாணிக்கு எப்பவும் வேலையாட்கள் தான். அந்த கலைவாணியோட பிரதிபிம்பங்கள் தான் இந்த பாடகர்கள். அவங்களுக்கு செய்யற சேவையை நான் என்னிக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன்” – மகாதேவன் சிரித்துக் கொண்டே சொன்னான்.
“ உன்னை யாராச்சும் இப்படி பாத்தா என்ன நினைப்பாங்க?. உன் சமையலை ஒரு படி கீழ நினைச்சிட மாட்டாங்களா?”
“என்னைப் பார்த்து என் சமையலை எடைப்போட மாட்டாங்க. ஒவ்வொரு உணவோட சுவையும், தரமும் தான் அதை நிர்ணயிக்கும்” – அழுத்தமாய் வந்தது தேவாவின் குரல்.
“என்னமோ போடா மகாதேவா. எங்க அப்பாக்கிட்ட சண்டைப் போட்டு இந்த கேட்டரிங் ஆர்டரை உனக்குக் கொடுத்திருக்கேன், என்னை கைவிட்டிடாதடா” பாவமாய் கெஞ்சினான் அரவிந்தன். அதையும் ஒரு அமைதியான சிரிப்பில் கடந்தான் தேவா.
அன்றைய இதமான மழைக்கும், அதற்கு இணையான மாளவிகா வின் கச்சேரிக்கும், பொருத்தமாய் அமைந்தது மகாதேவனின் உணவுகள்.
கச்சேரியில் பாடல்களுக்கு இணையாய் விவாதிக்கப் படுவது இசைக்கச்சேரி உணவுகள். . அதற்காக ரசிகர்களும் உண்டு. அதற்காகவே கச்சேரிக்கு வருபவர்களும் உண்டு.
அதற்கு ஏற்றார் போல் நாவின் சுவை அரும்புகளுக்கு ஒரு பிரம்மாண்ட படையலை படைத்ததுப் போலிருந்தது அன்றைய உணவின் அட்டவணை.
அக்கார வடிசலும், ஸ்ரீரங்க ஜீராவும், அசோகாவும், தவல வடையும், முந்திரி பக்கோடாவும், டிகிரி காப்பியும் இசையின் ராக-தாள-பல்லவி போல் பிரிக்க முடியாத, சுவைத்தால் நிறுத்த முடியாத உணவாக இருந்தன.
மாளவிகா தன் குரலாலும்,
மகாதேவன் சுவையான உணவுகளாலும் கூட்டத்தை கட்டி வைத்திருந்தார்கள்.
இன்றைய இரவும், நாளைய பொழுதும் மாளவிகாவும், மகாதேவனும் தான் அனைவரின் ஐம்புலனிலும் நீக்கமற நிறைந்திருப்பார்கள் என்று அரவிந்தனுக்கு, அன்று இரவு அவனது தகப்பனார் இருவரையும் பாராட்டிய பொழுதுதான் புரிந்தது.
முதன் முதலாய் இந்த அரங்கத்தில் இருவரையும் பாடவும், சமைக்கவும் கெஞ்சி அனுமதி வாங்கியிருந்தான் அரவிந்தன். அது வீண் போகவில்லை.
~~~~~~~~~
ஆயிரம் ஜன்னல் வீட்டை போன்ற பாரம்பரிய வீடு.
‘ஸ்ருதிலயா’ மின்னும் பலகை வாசலில் இருந்தது.
உள்ளே ஒரு கோவில் போல அலங்கரிக்கப்பட்டு இருந்த அந்த கூடத்தில், இசை மும்மூர்த்திகளின் சிலைகள் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.
அவர்களுக்கு மேல் ஆளுயர தஞ்சாவூர் ஓவியமாக சரஸ்வதி இருந்தார். சுற்றிலும், இசைக்கருவிகள் சுத்தமாக துடைத்து வைக்கப்பட்டு இருந்தன.
நீலகண்டன் அவரின் மாணவர்களுக்கு அன்றைய தினசரிகளை காண்பித்துக் கொண்டு இருந்தார்.
உள் அறையில் அதே நாளிதழ்களில் அவளை பிரமாதமாக புகழ்ந்திருந்த வரிகளில் மகாதேவனை தேடிக் கொண்டிருந்தாள் மாளவிகா.
அவள் எதிர்பார்ப்பு தவறாது, ‘மாலைப் பொழுதில், பிர்ஹாக்களுக்கும், துக்கடாக்களுக்கும் துணை போன மண்மணம் வீசும் கைமணம். அறுசுவைகளால் அனைவரது நாவினை ஆண்டிருந்த இளைய சமையல் கலைஞர் மகாதேவன்’ என பாராட்டியிருந்தனர். அந்த பெயரின் மீது ஒற்றை விரலால் தடவினாள்.
மயிலிறகால் யாரோ தன் உடலின் மீது ஓவியங்களை வரையத் துவங்கியிருந்தது போல் இருந்தது அதே வரிகளை அவனின் அலுவலகத்தில் படித்துக் கொண்டிருந்த மகாதேவனுக்கு.
சிலிர்த்து அடங்கிய மயிர்க்கால்கள் மாளவிகாவை நினைவுப்படுத்தியது அவனுக்கு.
‘மயூரி’ மனதுள் நினைத்த பெயரால் உதட்டில் புன்னகை நிரம்பியது. அவனின் கனவில் தேவதைகள் சுற்றாமல், மாளவிகாவும், அவனும் மட்டுமே தனிமையில் ஒருவரையொருவர் பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.
“அண்ணா” யாரோ ஒருவர் அழைத்து, அவனின் பகல் கனவை கலைத்து நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தார்.
அதே சமயம், “மாளவி” தந்தையின் குரலால், காதல் கனவில் இருந்து எழுந்து வந்தாள் மாளவிகா.
கூடத்திற்கு வந்து தந்தையின் கால்களை தொட்டு வணங்கி, மூம்மூர்த்திகளையும், சரஸ்வதியையும் வணங்கினாள்.
நீலகண்டன் அவளை ஆசீர்வதித்து, அந்த அறையின் ஒரு மூலையை நோக்கி கண் காட்டினார்.
ஆமோதித்து, அவருக்கு மிக விருப்பமான வீணையை கையிலெடுத்து மடியில் வைத்து மீட்டத்துவங்கினாள் மாளவிகா.
மூன்று தலைமுறைகளாக அவர்களின் வீட்டில் வழிபடும் ஒரு குலதெய்வத்தை போன்றது அந்த வீணை. வழிவழியாக இசை அரசர்கள் என்று அனைவராலும் பாராட்டப்படும் மேதைகளைக் கொண்டது அவளின் குடும்பம்.
அவர்களின் கையில் இருந்த இந்த சரஸ்வதி வீணையை தற்பொழுது மாளவிகாவிற்கு கொடுத்திருந்தார் நீலகண்டன்.
தந்தையை பெருமைப்படுத்தவும், ஏதேனும் மன வருத்தத்தில் இருந்தால் அவரை சமாதானப்படுத்துவதற்கும், மகிழ்விக்கவும் என எல்லாவற்றிற்கும் அவள் கையில் எடுப்பது இந்த வீணையைத்தான்.
இப்போது அவரின் சந்தோஷத்திற்கு, வீணையை மீட்டி அவள் பாடத்துவங்கியது காலை நேர பூபாளத்தை தான்..
பூபாளம் பூத்தூவல்களாக அவள் முன் விரிந்துக் கொண்டே போனது.
அவளும் மகாதேவனும் நடக்க, அந்த பாதையில் முள்ளின்றி பூக்கள் மட்டும் இருக்குமா?