மதுவினும் இனியாள் – 14
அத்தியாயம் 14:
“அதற்கும் முன் உன் தோள்ல உள்ள காயத்த நா பாக்கணும் ” என்று இன்னொரு கண்டிஷனும் போட்டான் ஹேரி.
“அதெல்லாம் முடியாது”
“முடியாதுன்னா ஹாஸ்பிடல் போலாம். டாக்டர் பாத்து என்னட்ட ஒண்ணும் இல்லன்னு சொல்லட்டும்”
அவனை முறைத்து கொண்டே போய் சோபாவில் அமர்ந்தாள் மது.
அவனும் கூடவே வந்து அவள் உடையை தள்ளி காயத்தை ஆராய்ந்தான். சிறிதாக காய்ந்து வந்திருந்தது. மருந்தும் அதில் தடவியிருந்தாள் மது. ஆகையால் உடையை சரி செய்துவிட்டு அவள் பக்கத்தில் உட்கார்ந்தான்.
அதுவரை கைகளால் முகத்தை மூடியிருந்தாள் மது. அவள் கைகளை எடுத்துவிட்டு அவள் முகத்தை நிமிர்த்தி “என்னட்ட என்ன வெக்கம் பேபி”என்று அவன் சொல்லி முடிக்கவில்லை.
மது பொரிய ஆரம்பித்துவிட்டாள்.”அது என்ன. எப்ப பாத்தாலும் இதையே சொல்ற. நான்தானே என்னட்ட என்னனு அதே டயலாக் சொல்ற. ஆமாம் தெரியாமத்தான் கேக்கறேன், நீ யார் எனக்கு” என்றவள் தொடர்ந்து தமிழில் “மாமனா,மச்சானா, மானங் கெட்டவனே” என்றவள் சிறிது யோசித்து விட்டு,
“ச்ச ச்ச நீ மானங் கெட்டவன்லாம் இல்ல. நீ குட் பாய்” என்றவள் அதன் தொடர்ச்சியாக அவன் கன்னத்தை அவள் இரு விரலால் கிள்ளி ,விரலை எடுத்து போய் அவள் உதட்டில் வைத்து முத்தம் வைத்து விட்டாள் குழந்தையை கொஞ்சுவது போல்.
செய்துவிட்டு அவனை பார்த்து முழிக்க ஆரம்பித்து விட்டாள். ஹேரியும் ஆர்வமாக அவள் முகத்தை பார்த்து கொண்டிருந்தான்.
சட்டென்று எழுந்து அவனுக்கு நேர் எதிரில் திரும்பி நின்று கொண்டாள். சிறிது நிமிடம் சென்று “வா சாப்பிட போகலாம்” என்று அவனிடம் சொல்லிவிட்டு கிச்சனுக்கு சென்று சாப்பாட்டை எடுத்து வந்து அங்கிருந்த இருவர் அமரும் குட்டி டைனிங் டேபிளில் வைத்தாள்.
அப்போது மெதுவாக எழுந்து வந்த ஹேரி, அவள் பக்கத்தில் நின்று அவள் முகத்தை தன்னை பார்க்குமாறு திருப்பி , அவள் இரு கன்னங்களையும் அவன் இரு கைகளால் தாங்கி, அவள் இரு கன்னத்திலும் நின்ற முடிகளை காதின் பின்னால் ஒதுக்கி “இப்ப என்ன செஞ்ச பேபி ” என்றான்.
அவன் கண்களை சந்திக்காமல் “அதெல்லாம் ஒண்ணுல்ல ஹேரி .எங்க ஊர்ல குழந்தைய இப்படித்தான் கொஞ்சுவாங்க. அதான் ஒரு ப்லொவ்ல அப்படி பண்ணிட்டேன்”
“என்ன பாத்தா குழந்தை மாதிரியா இருக்கு உனக்கு”
“நீ கூடத்தான் என்ன பேபி பேபின்னு கூப்பிட்ற. என்ன பாத்தா பேபி மாதிரியா தெரியுது”
“ஆமா. எனக்கு அப்படித்தான் தெரியுது. பேபிஸ் இப்படித்தான் உன்ன மாதிரியே அழகா குண்டு கன்னத்தோடு இருப்பாங்க. அப்புறம் இப்படிதான் சாஃப்டா இருப்பாங்க” என்று அவளின் கன்னத்தில் இருந்த மச்சத்தை கிள்ளி அவன் உதட்டில் வைத்து கொண்டான் ஹேரி.
மது அவன் கையை விலக்கி விட்டு , வேகமாக போய் அவளின் பெட்ரூமில் புகுந்து கதவடைத்து கொண்டு, கதவின் மேலேயே சாய்ந்து நின்று கொண்டாள்.
சிறிது நேரத்தில் மூச்சை சமன்படுத்தி கொண்டு வெளியே வந்து பார்த்தால் , ஒன்றும் நடக்காதது போல் சாப்பிட்டு கொண்டிருந்தான் ஹேரி. “வா பேபி எனக்கு நல்ல பசிச்சுது. அதான் சாப்பிட ஆரம்பிச்சுட்டேன்” என்றான்.
மதுவும் ஒன்றும் சொல்லாமல் பிரிட்ஜில் இருந்த ஃபுரூட் சாலட்டை எடுத்து வந்து டேபிளில் வைத்து விட்டு சாப்பிட அமர்ந்தாள்.
ஹேரியும் சாப்பிட்டு கொண்டே “செம்ம டேஸ்ட் பேபி ஃபுட். நல்லா குக் பண்ற” என்று நன்றாக சாப்பிட்டான்.
“இது உன்ன சந்திச்ச அன்னைக்கு ரெஸ்டாரண்ட்ல சாப்பிட்ட புட் தான. இது பேர் என்ன. இது எதுல செஞ்சது. ஏன் கேக்குறேன்னா அதிக கார்ப்ஸ் மாதிரி தெரியுது. அதுக்கு ஏத்த மாதிரி நா ஒர்க் அவுட் பண்ணனும்”
மதுவும் மற்றவற்றை மறந்து விட்டு இட்லியை பற்றியும், சாம்பாரை பற்றியும் விளக்க ஆரம்பித்து விட்டாள்.
சாப்பிட்டு முடித்து பாத்திரத்தை மது கழுவுவதை பார்த்து ஹேரியும் போய், அவள் விளக்கி வைத்த பாத்திரத்தை எடுத்து இவன் கழுவினான்.
வேலையை முடித்தவுடன் மது பால்கனியில் நின்று தலை முடியை சிக்கெடுத்து பின்னலிட்டு கொண்டிருந்தாள். அவள் செய்வதை பார்த்து கொண்டே , லேப்டாப்பை திறந்து வைத்து ஏதோ வேலை செய்து கொண்டிருந்தான் ஹேரி.
முடியை பின்னி முடித்தவள் பெட்ரூமிற்கு சென்று துப்பட்டாவை எடுத்து ஒன் சைடாக போட்டு கொண்டு வந்தாள்.
ஹேரியிடம் வந்து “உன்னட்ட ஒன்னு சொல்லணும்” என்றாள்.
“என்ன ஹனி”
“இப்பதான் உனக்காக பார்த்தி அண்ணாட்ட பேசலாம்னு இருக்கேன். உன்னோட பிரண்டா இருக்கலாம்னு கேட்டு பாக்கலாம்னு இருக்கேன். நீ என்னோட பிரண்டா இருக்கணும்னா முதல்ல என்ன தொட்டு பேசக்கூடாது.டீல் ஓகே வா ”
அவளை குறு குறுவென்று பார்த்த ஹேரி “சரி .ஓகே. ஒத்துக்கிறேன். ஆனா இன்னைக்கு பண்ண மாதிரியே நீ முதல்ல என்ன தொட்டினா, அப்புறம் என்னால என்ன கண்ட்ரோல் பண்ண முடியாது. அதனால உன் கண்டிஷன் உன் கைலதான் இருக்கு” என்றான்.
மது அவசரமாக “இல்லல்ல. நா ஒன்னும் பண்ண மாட்டேன். நீ ஒழுங்கா இருக்கணும்.சரி நா கோயிலுக்கு கிளம்பிட்டேன். உனக்கு லேட் ஆகுமா” என்றாள்.
அவளை வியந்து பார்த்தவன் ” நீ என்ன இவ்வளவு சீக்கிரம் கிளம்பிட்ட. பொண்ணுங்க மேக்கப் போட நிறைய நேரம் ஆகும்னு கேள்விபட்ருக்கேனே” என்றான்.
“எவன் சொன்னான். எப்ப பாத்தாலும் கிண்டல்ன்ற பேர்ல பொண்ணுங்கள மட்டம் தட்டிட்டே இருக்க வேண்டியது. எல்லா பொண்ணுங்களும் அப்படி கிடையாது. எனக்கு முடிய மெய்ண்டைன் பண்ணத்தான் லேட்டாகும்.
அதும் தாய் மீனாட்சி அதை கட் பண்ண விட மாட்டாங்க. ரொம்ப கஷ்டப்பட்டு பராமரிப்பாங்க. அதனாலதான் கஷ்டமா இருந்தாலும் மெயின்டைன் பண்ணிட்ருக்கேன்”
“உன் முடிதான் உனக்கு ரொம்ப அழகு ஹனி. ஆனா உனக்கு வெய்ட்டா இல்லியா பேபி”
“அப்படிலாம் இல்ல. குழந்தையிலேருந்தே இப்படி இருப்பதால் பழகிடுச்சி. சரி உனக்கு வேல முடிஞ்சுதா கிளம்பலாமா “
“5 மினிட்ஸ் பேபி” என்றவன் லேப்டாப்பை மூடி வைத்து விட்டு அவனும் கிளம்பிவிட்டான்.
கீழே இறங்கி ஹேரியின் காரில் ஏறி கிளம்பினார்கள்.
காரில் உட்கார்ந்து, சுற்றிலும் பார்த்த மது ” என்ன கார் இது. இத்துனூண்டா இருக்கு. ரெண்டு சீட் தான் இருக்கு. எங்க அப்பா கார்ல 5 பேர் உக்காரலாம்”
“ஓ. உங்க அப்பா என்ன கார் வச்சுருக்காங்க . இந்த கார் உனக்கு பிடிக்கலையா ஹனி. இது என்னோட வெரி ஃபாவ்ரிட் கார் “
“கார் பிடிக்காம இல்ல. பாக்க சூப்பரா லுக்கா இருக்கு. பட் நம்மளுக்கு ஏத்த மாதிரி இருக்கணும்ல. ஷாப்பிங்க்லாம் போனா திங்க்ஸ் வைக்கவே இடம் இருக்காது போல உன்னோட கார்ல. எங்க அப்பா ஹூண்டாய் சான்றோ வச்சுருக்காங்க. அப்பவே கார் 6 லட்சம் தெரியுமா”
நம் மதுவின் காரை பற்றிய அறிவு அவ்ளோதான். பள்ளி கல்லூரிகளுக்கு வேன் ,பஸ்சிலேயே சென்று விடுவாள். டு வீலர், கார்களை பற்றி அதிகமாக தெரியாது. செல்லத்துரை ராயல் என்ஃபீல்டு புல்லட் வைத்திருந்தார் ஆரம்ப காலத்தில். பிறகு அந்த ஊரிலேயே அம்பாசிடர் வாங்கியது அவர்தான். பிறகுதான் அம்பாசிடரை மாற்றிவிட்டு சான்ரோ வாங்கினார். சிறிய குடும்பமாக இருப்பதால் அந்த காரே போதுமென்று இன்னமும் அதையே வைத்திருக்கிறார். அந்த பெருமையைத்தான் மது எடுத்து விட்டு கொண்டிருந்தாள்.
ஹேரி நொந்து விட்டான். பின்ன 4 கோடி ரூபா கார விட 6 லட்சம் ரூபா கார பெருசுன்னு சொன்னா அவனும் என்ன பண்ணுவான்.
“எங்க ஊர்லயே நாங்கதான் முதல்ல கார் வாங்கினோம். கார விட சின்ன வயசுல எங்க அப்பா புல்லட்ல கூட்டிட்டு போவாங்க. அதுதான் எனக்கு ரொம்ப பிடிக்கும். இப்ப ஸ்கூட்டிதான் வச்சுருக்காங்க அப்பா”
மது சலசலத்து கொண்டே வந்தாள்.
அவள் பேச்சை கேட்டு கொண்டே கோயில் எங்கே என்று கேட்டுக்கொண்டு மேப் போட்டு விட்டு காரை ஒட்டி கொண்டிருந்தான்.
“கார் சூப்பரா ஓட்ற ஹேரி “என்றாள் மது.
இவ்வளவு நேரம் 80 ல் தான் சென்றான். பிறகு வேகத்தை சிறிது சிறிதாக கூட்டி 120க்கு போனான்.
அவ்வளவுதான் மது சீட்டோடு சீட்டாக பம்மி விட்டாள்.
“ஹே என்ன இவ்ளோ வேகமா போற. எனக்கு பயமா இருக்கு. ஸ்பீட கொற” என்று சொல்லி கொண்டே கண்களை மூடி கொண்டாள்.
அவன் வேகத்தை குறைத்தும் தான் கண்களை திறந்தாள்.
“என்ன ஹனி. இந்த ஸ்பீட்கே பயந்துட்ட. எனக்கு வேகமா போறதுன்னா ரொம்ப பிடிக்கும். வருடா வருடம் கார் ரேஸில் கலந்துக்குவேன். மூணு வருசத்துக்கு முன்னாடி நடந்த ரேஸ்ல பெரிய ஆக்சிடண்ட். அதுக்கு பிறகுதான் என் பிரண்ட் கேட்டுக்கிட்டதால ரேஸ்ல கலந்துகிறத விட்டுட்டேன்”
அவனை பயந்து போய் பார்த்தாள் மது. என்ன ரேஸ்ல கலந்துக்குவானா என்று.
“இனிமே எப்பவுமே கலந்துக்க மாட்டதான ரேஸ்ல”
“அப்டி சொல்ல முடியாது ஹனி. என் மூட பொறுத்து இருக்கு”
“ப்ளீஸ் அப்படி சொல்லாத. இனிமே கலந்துக்காத எனக்காக”
அவளை ஆச்சரியமாக பார்த்த ஹேரி, அவள் கண்களில் பயத்தை பார்த்ததும் “சரி நா கலந்துக்கல ” என்று வாக்குறுதி கொடுத்தான். அதற்கு பிறகுதான் மது இயல்பாகி காரில் தமிழ் பாடலை ஒலிக்க விட்டாள்.
பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
அவள் வந்து விட்டாள்
ஐ பட பாடல் ஓடியது. மதுவும் கூட சேர்ந்து பாடினாள்.
“ஹே ஹனி சூப்பரா பாட்ற. லிரிக்ஸ் புரியலைன்னாலும் சாங் சூப்பர். நீ பாடறது அதை விட சூப்பர்”
” ம் மீனாட்சி ஒரு கிளாஸ் விடாம எல்லாத்துக்கும் அனுப்புவாங்க. வாய் பாட்டு,வீணை,வயலின் இப்படி எல்லா கிளாசுக்கும் போயிருக்கேன். ஆனா ஆறு மாசத்துல டீச்சர்ஸ் தொரத்தி விட்ருவாங்க. ஆனா நா விருப்பப்பட்டு போனது டான்ஸ் கிளாசுக்கு மட்டும் தான். பரத நாட்டியம். எனக்கு ரொம்ப பிடிக்கும். 12 வயசுலேயே அரங்கேற்றம் பண்ணிட்டேன்.எல்லா வருசமும் தஞ்சாவூர் பெரிய கோயில்ல ஆடுவேன். வேலைக்கு வந்தபிறகுதான் ஆட முடியல”
“ஓ.எனக்கும் ஆடி காட்டு ஹனி”
“பாக்கலாம் ஹேரி. இந்த ஊர்ல எங்க நா ஆட போறேன்” என்று சொல்லி முடிக்கவும் கோயில் வந்து விட்டது.
டேண்டினாங் சிவா விஷ்ணு டெம்பிள்.எப்பொழுதும் சனி ஞாயிறுகளில்தான் வருவாள் மது. கூட்டம் இருக்கும். இன்றுதான் வெள்ளிக்கிழமை வந்திருக்கிறாள். அதுவும் மணி 10 தான் ஆனது. அதனால் பெரிதாக யாரும் இல்லை.
காரை பார்க்கிங்கில் போட்டு விட்டு வந்தனர். ஹேரி மதுவிடம் ” இங்க என்ன பண்ணுவாங்க மது” என்று கேட்டான்.
“உங்க சர்ச்ல பண்ற மாதிரி பிரேயர்தான் பண்ணுவாங்க. என்ன, வழிமுறைதான் வித்தியாச படும்”
“நா சர்ச்லாம் பெருசா போக மாட்டேன் ஹனி. அம்மா இருந்தவரை நியூ இயர் அன்னைக்கு அவங்கள மீட் பண்ண சர்ச் போவேன். அதும் பிரேயர்லாம் பண்ண மாட்டேன்”
“அம்மா இருந்தவரைன்னா?”
சிறிது நேரம் அமைதியாக இருந்த ஹேரி “இப்ப இல்ல. உன்ன முதல் முறையா ட்ரெய்ன்ல பாத்தேன்ல, அன்னைக்குதான் அம்மாவோட இறுதி சடங்கு. அதை முடிச்சுட்டு ட்ரைன்ல வரும்போதுதான் உன்னை பாத்தேன்” என்று அவன் குடும்ப கதையை சுருக்கமாக கூறினான்.
அதே இடத்திலேயே நின்றுவிட்ட மது அவனை பார்த்து “சாரி” என்று வருத்தத்துடன் கூறினாள்.
” ஹே வருத்தப்படாத. உண்மையா சொல்லனும்னா உன்ன பாக்கிறவரைக்கும் அன்னைக்கு நானும் ரொம்ப துக்கத்துலதான் இருந்தேன். ஆனா அதுக்கு பிறகு இப்பவரைக்கும் என் நினைவ நீதான் ஆக்கிரமிச்சுருக்க. அதிலையும் டுடே ஐயம் சோ ஹேப்பி பேபி”
இன்று முழுவதும் அவன் சந்தோசத்தை கெடாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தாள் மது. அவனிடம் ” உனக்கு அப்ப ஒரு தம்பியும், தங்கச்சியும் இருக்காங்களா. சூப்பர்ல”
“ம் இருக்காங்க. அந்த பையன் வெளில போய்ட்டான் வேற கண்ட்ரிக்கு போல. அம்மா டெத்துக்கே வரல. ஆனா ஒலிவியா பாத்தா பேசுவா”
“என்ன இப்படி பேசற. எனக்கெல்லாம் அண்ணன், தம்பி இல்லன்னு எவ்ளோ வருத்தம் தெரியுமா”
“உனக்குத்தான் இங்கவே அண்ணன்கள் இருக்காங்களே. அதும் உன் பார்த்தி அண்ணா ஒருத்தர் போதுமே”
“ஆமா பார்த்தி அண்ணா கண்டிப்புலையும் பாசம்தான் தெரியும் . சத்யன் அண்ணா திட்டிட்டு இருந்தாலும் ரொம்ப பாசம்தான் என்மேல. அதுல நா ரொம்ப லக்கி. உறவுகள்லாம் அருமையான பீல் ஹேரி. அதெல்லாம் மிஸ் பண்ணாத. அம்மா இல்லன்னு உன் தங்கச்சிய போய் பாக்காம விட்றாத. உன்னால அவளுக்கு எதுவும் உதவி தேவைப்படுதான்னு அப்பப்ப தெரிஞ்சுக்க”
“இங்கல்லாம் இப்படித்தான் பேபி. ஆனா நீ சொல்றதால எதுக்கும் அவளை போய் நா பாக்கறேன்” என்றவனை அழைத்து கொண்டு தனியாக வெளிப்புறம் இருக்கும் விநாயகர் சன்னதிக்கு சென்று கைகூப்பி வணங்கினாள் மது.
இன்னைக்கு இருக்க மாதிரியே என்னைக்கும் ஹேரி சந்தோசமாக இருக்க வேண்டுமென்று வேண்டி கொண்டாள்.
திரும்பி பக்கத்தில் நின்ற ஹேரியை பார்த்தால், அவன் கையை கட்டிக்கொண்டு அவளைத்தான் பார்த்து கொண்டிருந்தான்.
“இவர்தான் விநாயகர். பாக்க ஆள் வித்தியாசமா இருக்காருன்னு பாக்காத. ரொம்ப புத்திசாலி. ஞானவேல்னு பெயரெடுத்த அவர் தம்பியையே ஓவர்டேக் பண்ணிருக்காரு. முக்கியமா நம்ம பிரண்ட் இவர். வேண்டுதல் வச்சுட்டு மறந்துட்டோம்னா கோச்சுக்கவே மாட்டாரு. நான்லாம் நிறைய தடவை கொழுக்கட்டை குடுக்காம ஏமாத்திருக்கேன். பெருசா எடுத்துக்க மாட்டாரு. அப்புறம் எந்த வேலை, செயல், தொழில் தொடங்குவதற்கு முன்னாடி இவர வேண்டிக்கிட்டு தொடங்கினோம்னா சூப்பரா முடிச்சு குடுப்பாரு”
“ஓ என்ன கேட்டாலும் நடத்தி கொடுப்பாரா”
“ம் நீ வேணுன்னா கேட்டு பாரு”
சரி என்று விட்டு ஹேரியும் மது செய்தது மாதிரியே இரு கைகளையும் கூப்பி, மது பேபி இன்னைக்கு போலவே எப்பவும் என் கூடவே இருக்கணும். நாங்க ரெண்டு பேரும் கடைசி வரை ஒண்ணா சந்தோசமா வாழணும் என்று வேண்டி கொண்டான்.
(வருவாள்…)