கடல் – 21
இரண்டுநாட்களாக ஓயாத வேலை அருளுக்கு. இன்னும் எதையெல்லாம் செய்ய சொல்லியிருக்கிறான் தர்மராஜ் என்று தெரியவேண்டியது இருந்தது அவனுக்கு.
அதனால் தங்கள் காட்டில், தோப்பில், மாட்டு தொழுவத்தில், கிணற்றில் என ஒவ்வொரு இடமாக பரிசோதித்து காவலுக்கான ஆட்களை அதிகப்படுத்தியிருந்தவன் எவரும் எளிதில் நெருங்க முடியாதளவிற்கு சற்று கடினப்படுத்தியும் இருந்தான்.
மின்னொளியின் வாயில் விஷத்தை ஊற்ற இருந்தவன், தன் காட்டில் மோட்டாரை உடைக்க காசை கொடுத்து ஆட்களை ஏற்பாடு செய்யும் அளவிற்கு சென்றிருக்கிறான் என்றால் மேலும் ஏதேனும் செய்ய சொல்லி இருக்கலாமே?
புது மோட்டார் வாங்கி வந்த மறுநாளே மின்னொளியிடம் கூட சொல்லாமல் தர்மராஜை சேர்த்திருந்த மருத்துவமனைக்கு சென்றான் கணேசனுடன்.
தர்மராஜின் உடல்நிலை மிகவும் நலிந்துபோய் இருந்ததால் உடனடியாக வீட்டிற்கு அனுப்பாமல் சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தது அவனுக்கு வசதியாய் போனது. இல்லையென்றால் வீட்டிற்கு தான் செல்லவேண்டியதாக இருக்கும்.
அப்படி செல்லும் பொழுது ஊரில் உள்ளவர்களுக்கும் என்னவென தெரியவரும் என்பதால் அதனை அருள் விரும்பவில்லை.
“இன்னு என்னவே ஒங்களுக்கு? இனி அவேன்கிட்ட சொல்லி வெக்கிதேன். ஒம்மோசரமே வராம நா பாத்துக்கிடுதேன். போயிருய்யா…” என அன்னம் இறங்கிவந்து கண்ணீருடன் கெஞ்ச அவரை பார்த்த அருளின் மனம் அசைவதாய் இல்லை.
“நா ஒன்னு நலத்த விசாரிச்சுட்டு போவ வரல. ஒம்மவேன் இன்னு என்னன்ன கோட்டித்தனத்த இழுத்துவிட்டிருக்கியான்னு தெரியனுமில்ல. அதுக்காங்காட்டித்தேன் இம்புட்டு தொலவுக்கு வந்தேன்…” அருள் சொல்ல கணேசன் பார்வையிலேயே மிரட்டலுடன் நின்றான்.
அருளின் குரலில் உடல் தூக்கிப்போட கண் விழித்தவன் அவர்கள் இருவரையும் பார்த்து,
“அம்மோவ், அம்மோவ் போவ சொல்லு. நா எதுவுஞ்செய்ய மாட்டே. சத்தியங்காட்டி செய்யமாட்டே…” என்று பின்னால் நகர்ந்து உடலை சுருக்கி குறுக்க,
“ஆத்தே ஒண்ணுமில்ல ராசா, ஒன்னிய சும்மா பாத்துப்போட்டு போவத்தேன் வந்திருக்கியானுக…” என அணைத்துக்கொள்ள அவரை இடுப்புடன் சேர்த்து கட்டிக்கொண்டவன் உடல் நடுங்குவதை உணர்ந்த அன்னம் கண்ணீர் உகுத்தார்.
“போயிருங்க சாமி. அவென் ரெம்ப அஞ்சுதான் பாத்தீயல. இனி ஒம்ம வசத்துக்கு வராம பாத்துக்கிடுவேன்…”
“இங்காரு தருமா நாங்க கேக்குததுக்கு மறையாம உள்ளத வெளக்கிடு. இத்தோட விட்டுட்டு போயிருவம். இல்லனா…” என்றவன் பற்களை நறநறவென கடிக்கும் சத்தம் வெளிப்படையாகவே கேட்க அதில் அரண்டுபோனவன்,
“அம்மோவ், நா ஒன்னுஞ்செய்யல, சொல்லு நீ சொல்லு…” என தாயின் பின் முகத்தை மறைக்க,
“அப்ப என்னத்துக்கி எங்காட்டு மோட்டார காச குடுத்து ஒடச்சுப்போட சொன்ன? ஒஞ்சோக்காளி ஒருத்தேன் சிக்கிட்டாம்டி…” என அருள் சொல்ல,
“மருவாதியா உள்ளத சொல்லிப்புட்டீனா உசுரு பொழப்ப. இல்ல…” என கணேசன் கையை முறுக்க,
“இங்கன இருந்துட்டே ஒனக்கு எம்புட்டு ஏத்தமிலே. அம்புட்டு பெரிய ஆளாகிப்போட்டியா? போலீசுல சொன்னோம் தூக்கிப்போட்டு மிதிக்கிறதுல பிந்துங்கிருவ…” என அருள் சொல்ல போலீஸ் என்றதுமே பயந்துபோனான் தர்மராஜ்.
“சத்தியமாங்காட்டி நா வேற ஒன்னுத்தயும் பண்ணல. மோட்டார ஒடைக்க சொன்னது கூட ஓங்கலியாணத்துக்கு மிந்திதேன். அதுக்கு பொறவு நா எவனையு பாக்கல. அதுக்கு மட்டுந்தே காச குடுத்தே…”
அருள் வந்து கேட்டதும், மகன் சொல்லியதும் அன்னத்தை கொஞ்சம் கொஞ்சமாய் கூறு போட்டுக்கொண்டிருந்தது.
என்ன செய்துவைத்திருக்கிறான் மகன்? கூலிப்படை போல சிலரை ஏவி இன்னொருவனின் வாழ்வை பறிக்கும் அளவிற்கு இவனின் குணம் குரூரமாகி போனதா?
அன்னம் தன் நெஞ்சை பிடித்துக்கொண்டவர் இதயம் கனத்து வலிப்பதை போல உணர்ந்தார். கணேசன் அருளின் கையை தட்டி அன்னத்தை கவனிக்க சொல்ல அப்போதுதான் பார்த்தவனுக்கு இரக்கமாகி போனது.
ஆனால் இரக்கப்பட்டால் தான் மட்டும் பாதிக்கப்பட்ட போவதில்லையே. அதனால் மனதை கல்லாக்கிக்கொண்டு,
“இங்காருலே நீ என்னத்த எல்லா செஞ்சி வெச்சிருக்கன்னு தெரியல. இன்னொன்னு எதாச்சு தப்புத்தண்டா பண்ணி வெச்சிருந்த ஒங்கூட்டாளிக கூட சேந்து கம்பிதேன் எண்ணனும் பாத்துக்கிடு…” என்று எச்சரித்துவிட்டு,
“இப்படி பிள்ளைய வளர்த்தா இப்படி ஒரு நிலமையிலதேன் நிக்கனும். இனியாச்சும் கொஞ்சமாட்டு கவனிங்க…” என அன்னத்திற்கும் சொல்லிவிட்டு அருள் நகர,
“ஏலே அவென் விட்டுட்டியான்னு கம்மின்னு இருந்திர மாட்டேன்டி. ஒன்னிய காவக்காக்க ஆள போட்டுட்டுதேன் போவேன். வெளங்குதா?…”என கணேசனும் சொல்லி செல்லவும் மகனை விட்டு தள்ளி நின்றவர் அதன் பின்னர் அமைதியாக அமர்ந்துகொண்டார்.
இங்கு சேர்ந்ததில் இருந்து தாயுடன் ஒரு வார்த்தையும் பேசாமல் தர்மராஜ் பிடிவாதமாய் இருந்தது மறந்து போய் இப்பொழுது தன் தாய் பேசாமல் அமர்ந்தது அவனின் மனதை குத்த,
“அம்மோவ், என்னிய செயிலுக்கு அனுப்பிருவியாங்களா?…” என நடுங்கிக்கொண்டே கேட்கவும் அதன்மேலும் தள்ளியிருக்க முடியாமல் அவனின் நடுங்கும் கரத்தை பற்றியவர்,
“இல்ல சாமி, அம்மா இருக்கேனில்ல…” என ஆறுதல் சொல்லி அவனை தூங்க வைத்தார்.
“நெசமா வேற ஒண்ணுகூட செய்யலம்மோவ்” என்றான் உறக்கத்திலும் பதறி.
அன்னத்திற்கு புரிந்தது இவனை பயமுறுத்தியோ, மிரட்டியோ, அடக்கியோ மாற்றுவதென்பது இயலாதது என்று.
இத்தனை நாள் அதை செய்து தான் இப்படி வளர்ந்திருக்கிறான். இல்லை வளர்த்திருக்கிறேன். இனியும் அந்த தவறை செய்ய போவதில்லை என்ற முடிவுடன் மகனை பார்த்தபடி அமர்ந்திருந்தார்.
மருத்துவமனையில் இருந்து நேராக வீட்டிற்கு செல்லாது தோப்பிற்கு தான் சென்றான். கணேசன் தனக்கு தெரிந்த இருவரை வரவழைத்திருந்தான்.
தர்மராஜ் பணம் கொடுத்து வேறு எதுவும் யாரிடமாவது செய்ய சொல்லியிருந்தால்? அதனை தெரிந்துகொள்ளாமல் இருக்கமுடியாதே. அதற்காக உதவி செய்ய வந்திருந்தவர்களிடம் விளக்கம் சொல்லி பொறுப்பை அவர்களிடம் ஒப்படைத்து முடித்த பின்னர் தான் மூச்சுவிடவே முடிந்தது அருளுக்கு.
இரவு நேரம் நெருங்க அப்போதுதான் வீடு வந்து சேர்ந்தான் அருள். அவனுக்காக வாசலில் அமர்ந்து கொண்டு பேசிக்கொண்டிருந்தாள் மின்னொளி.
தன் வீட்டை விட இங்கே வேலைகள் மிக மிக குறைவு தான் அவளுக்கு. தொழுவத்தை கூட்டி, அலசிவிட என ஒரு ஆள் வந்துவிடுவார்கள். அவர்களே தண்ணியும் காட்டிவிட எப்போதாவது தான் அதற்கு தீவனம் எடுத்து போடும் வேலை மின்னொளிக்கு.
பால் கறக்க வருபவரும் தங்கள் வீட்டிற்கும், கணேசன் வீட்டிற்கும் போக மிச்சத்தை அப்படியே அளந்து எடுத்து சென்றுவிடுவார். அதனால் அந்த வேலையும் இல்லை.
ராஜாத்தி திருமணமாகி சென்றதும் தனியாக காசியாத்தாவால் அத்தனையையும் செய்ய முடியாது என்பதால் அருள் அனைத்திற்கும் ஆக உள்ள ஏற்பாட்டை பார்த்துவிட்டதால் இங்கே வீட்டினுள் உள்ள வேலைகள் மட்டுமே.
அதுவே மின்னொளியின் மனதிற்கு ஒரு சுணக்கத்தை தந்தது. இரு நாட்களில் பெரிதும் சோர்ந்து போனது போல உற்சாகமில்லாத ஒரு தோற்றம். ஆனாலும் ஒரு பொலிவு புதிதாய் மணமான பெண்களுக்கே உண்டான களை என்பார்களே அப்படி இருந்தது அவளுக்கு.
வேலைகள், தன் நினைவுகளை ஆக்கிரமித்துக்கொள்ளும் நேரமெல்லாம் மற்ற சிந்தனைகள் எதுவும் அவளை அண்டாமல் பாதுகாப்பு கவசமென தாங்கிக்கொள்ளும். உழைத்து ஓய்பவளை படுத்தவுடன் உறக்கம் வாரி அணைத்துக்கொள்ளும். இங்கே இரு நாட்களும் அப்படியல்லவே.
இன்று மதியமும் உணவிற்கு வீட்டிற்கு வராதவனை போனில் பிடிக்க வேலையை முடித்துவிட்டு வருவதாக அவன் வைத்துவிட அழகுப்பாட்டியும் காசியாத்தாவும் பழைய கதைகளை பேச அதை சுவாரஸியமாக கேட்டுக்கொண்டிருந்தாள் மின்னொளி.
“இந்த வந்துட்டானில்ல…” என காசியாத்தா அருளை காண்பிக்கவும் அவனை கண்டதும் மலர்ந்த முகத்துடன் எழுந்து நின்றாள்.
“வேலையத்தவனே மத்தியானத்துக்கி வராட்டி ஒத்த வார்த்த சொல்லமாட்டியோ? மின்னு செரியாவே சாப்புடல. என்னவே நீயி. போ, போ போயி உடுப்ப மாத்திட்டு சாப்புடு. வாரியான் ஊரேல்லா திரிஞ்ச கோழி ராவுக்கு அடையிததுக்கு…”
அவனின் வேலையின் அளவை, இன்றைய அலைச்சலை தெரியாது காசியாத்தா அவனை வம்பிழுக்க கோபமாய் முறைத்தவன் அவரின் காதை பிடித்து இழுக்க,
“ஆத்தே காத அத்துப்புட்டானே…” என தெருவே கேட்குமாறு அவர் கத்த,
“கையோட கொண்டுட்டு போயிடறே கெழவி. வாய தெறந்தா வாய்க்கா பறிச்சு வரப்ப வெட்டிறலா. எம்புட்டு பேச்சு ஒனக்கு…” என வேண்டுமென்றே பிடித்து இழுத்துவிட்டு வேகமாய் வீட்டிற்குள் ஓடியேபோனான் அருள்.
“ஏம்த்தா சாப்புடவே வரலன்னா எம்பிட்டு சோலி இருந்திச்சோ. கம்மின்னு இராம என்ன ஒனக்கு அவங்கூட ஒரசலு?…” என அழகுப்பாட்டி சொல்ல,
“நீ வேறத்தா, எப்பவு அவேன்தேன் ஓரண்டைய இழுப்பியான். இன்னிக்கு தேமேன்னு போறானேன்னுதேன் நா கூப்ட்டேன்…”
“நல்லா இழுத்தீக…” என்ற இழுவையுடன் அழகுப்பாட்டி சிரித்தார்.
வீட்டிற்குள் வந்தவன் நேராக குளிக்க செல்ல அவனுக்காக செய்துவைத்திருந்த சாப்பாடுகளை சூடு பண்ண ஆரம்பித்தாள் மின்னொளி.
அதே நேரம் சரியாக செவ்வந்தி பாத்திரத்துடன் வந்து நின்றாள் சாப்பாட்டை வாங்கி செல்ல.
“இந்தா புள்ள, இனி இப்பிடி நீ வந்து வாங்க கூடாது புரியுதா? ஒங்கம்மாட்ட குடுத்துவிடு. இல்ல ஒங்கப்பாரு வரட்டு. சமஞ்ச புள்ள என்னத்துக்கு இத்த தூக்கிட்டு சொமக்குற?…” என கேட்டுக்கொண்டே பாத்திரத்தை வாங்கி வைத்தவள்,
“பேசாம ஒக்காந்து நீயு சாப்புடு…” என குழம்பு, காய்களை எடுத்து கீழே வைக்க செவ்வந்தி திருதிருவென முழித்தாள்.
“என்ன புள்ள அத்துக்கு ஊத்தி குடுத்துவிடாம வம்பு பேசிக்கிட்டு கெடக்க?…” என அருள் வர,
“இவ அப்பாருக்கு போன போடுங்க. இங்கன வந்து சாப்புடட்டு. நித்தோ இவக்கிட்ட சட்டிய குடுத்து சோறு வாங்கிட்டு வர சொல்லுதாக ஒங்க மதினி. அதேன். ஒன்னு அவுக இங்க வரட்டு. இல்ல அவுகளே வாங்கிட்டு போவட்டு…”
மின்னொளி முடிவாய் சொல்லிவிட கணேசனுக்கு அழைத்தான் அருள். எங்கே குணசாலி திட்டுவாளோ என பயந்தே செவ்வந்தி இன்னும் அதே இடத்தில் நிற்க,
“நாந்தேன் இங்கன ஒன்னிய சாப்புட சொன்னேன்னு சொல்லுத்தா. இதுக்கு என்னாத்துக்கு நடுங்குதவ?…” என அவளை தன்னுடன் அமர சொல்லி தானும் ஒரு தட்ட எடுத்துவைத்து சாதத்தை போட்டுக்கொள்ள,
“நாந்தேன் வாரேன்ல. மதியத்துக்கி என்னத்த சாப்புட்டீங்க?…” என்ற மின்னொளியிடம்,
“டீயத்தேன் குடிச்சோம். வேற ஒண்ணுமில்ல…”
“வெறுவவுத்தோட இம்புட்டு நேரமா இருந்துட்டு. ஒன்னிய…” என அவள் முறைக்க,
“சொல்லுத்தா நானு கூட பொரட்டா சாப்புட சொன்னே. கேட்டியானா?…” என கணேசனும் வந்துவிட,
“அதுங்குள்ளையும் குளிச்சிட்டியாடா? நாந்தேன் எங்க போன எதுக்கு போனான்னு ஒம்மதினி சங்கப்புடிக்கிதா. நல்ல சோலியா நீயி போன போட்டுட்ட…” என தானும் கையை கழுவிவிட்டு சாப்பிட அமர சிரிப்புடன் அவனுக்கும் சேர்த்தே பரிமாற ஆரம்பித்தாள்.
அழகுப்பாட்டியும், காசியாத்தாவும் சாப்பிட வர குணசாலி வரவே இல்லை. மீண்டும் கணேசன் தான் போன் செய்து வரவழைத்தான். மகளை முறைத்துக்கொண்டே வந்தவள் சத்தமில்லாமல் சாப்பிட்டுவிட்டு செவ்வந்தியையும் இழுத்துக்கொண்டு சென்றுவிட்டாள்.
“அவ கெடக்கா, செரி நாளான்னிக்கு மறுவீடு போவனுமே, நேரமே பொறப்படனு. பாத்துக்கிடு…” என சொல்லி கணேசனும் விடைபெற இரவு சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்க சுப்பு அழைத்தான்.
“ஏலே சோதி, சோதி, ஒம்மருமவன பாக்க ஒடனே கெளம்பி வாலே…”
“என்னாலே ஒளறுத? பைய சொல்லுவே…”
“இளாக்கு மேலுக்கு சொவமில்ல. ஆசுப்பத்திரிக்கி வந்துட்டு போயிருக்காவ அக்காவும், மாமனும்…”
“நெசமாத்தேன் சொல்லுதியா?…” என்றவன் போனை வைத்துவிட்டு,
“ஏத்தா நா போயி தெரு முக்குல ஆட்டோவ அமத்திட்டு வாரேன். அக்கா வீட்டுக்கு போவனு. சாமிக்கி சொவமில்லயாம்…” என பதறிக்கொண்டு அவன் வெளியேற மின்னொளி ராஜாத்தியின் போனுக்கு அழைத்தாள்.
“என்ன மின்னு…” என சாதாரணமாக கேட்க,
“புள்ளைக்கி மேலுக்கு முடியலயோ?…” என நேரடியாக கேட்கவும்,
“எத்தா ஒனக்கு ஆரு சொன்னா?…” என அதிர்ச்சியானார் ராஜாத்தி.
“அப்ப நெசந்தேன், எங்கக்கிட்டக்கதேன் சொல்லல அப்பிடித்தேன?…” என்றவள் பட்டென போனை வைத்துவிட மீண்டும் ராஜாத்தி அழைக்க அதற்குள் அருள் வந்துவிட்டிருந்தான்.
காசியாத்தவை வீட்டில் விட்டுவிட்டு கிளம்பியவன் மின்னொளி, அழகுப்பாட்டியுடன் சென்றான்.
கணேசனுக்கு காசியாத்தா தான் தகவல் சொல்லிக்கொள்வதாக சொல்லிவிட்டார். எப்படியும் மின்னொளி பேசி வைத்ததும் கிளம்பி வந்துவிடுவாள் என நினைத்து வாசலில் ராஜாத்தி அமர்ந்திருக்க முருகய்யன் மடியில் சுருண்டு படுத்திருந்தான் இளவரசன்.
ஆட்டோவில் இருந்து வேகமாய் இறங்கியவன் காசை கொடுத்துவிட்டு உள்ளே வர அதற்குள் மின்னொளி இளவரசனை தூக்கிக்கொண்டு வீட்டிற்குள் சென்றுவிட்டாள்.
உறக்கத்திலும் அவளின் வாசத்தை உணர்ந்தவன் கண் விழித்து “ஆத்தா” என கட்டிக்கொள்ள பார்த்திருந்த அனைவருக்குமே கண்கள் கலங்கி போனது.
“ஏம்லே கிறுக்குப்பயலே, அவேனுக்கு முடியாங்காட்டி ஒத்த வார்த்த போன போடமாட்டியோ? என்னாலே அசமந்தோ? வாடிப்போய் கெடக்கானே?…” என அழகுப்பாட்டி இளவரசனின் தலையை வருடி விட ஒருவரையும் தொட விடவில்லை.
“விடு, ஆத்தா வேணு, போ போ…” என ஒருவரையும் அதன் பின்னர் நெருங்க விடவில்லை அவன்.
அதன் பின்னர் மின்னொளியே அவனுக்கு கஞ்சி வைத்து புகட்டி மருந்துகளை கொடுக்க பிடிக்கவில்லை என்றாலும் மாட்டேன் என்று சொன்னால் கிளம்பிவிடுவாளோ என அஞ்சியே குடித்துவிட்டான் குழந்தை.
அவன் தூங்கியதும் அவனை தூக்கிக்கொண்டு செல்வதற்காய் ராஜாத்தி வர வந்ததில் இருந்து எதுவும் பேசாத மின்னொளி,
“போது, இவேன் எங்கூடவே இங்கியே ஒறங்கட்டு. நா பாத்துக்கிடுதேன்…” என மின்னொளி முறைத்துக்கொண்டு சொல்ல,
“என்னத்தே பேசுதா இவ, இருட்டுல இந்நியாரம்(இந்நேரம்) வந்ததே தப்புங்கறேன். இதுக்காங்காட்டிதேன் கம்மின்னு இருந்தே. நாளான்னிக்குதேன் மறுவீடு வரனு. இவ என்னான்னா?…”
“ஏம்த்தா புள்ளைக்கி இப்பிடிங்கறப்ப வராம அங்கனவே கெடக்க முடியாதுத்தா. தெரியுந்தான இவேன்னா மின்னுக்கு எம்பிட்டு உசுருன்னு. தப்பு ஒம்மேலதேன்…” அழகுப்பாட்டி ராஜாத்தியை சொல்ல முருகய்யன் ஒன்றும் பேசாமல் அமர்ந்திருந்தார்.
மகன் முதல்நாள் இரவிலிருந்து காய்ச்சலில் அனத்திக்கொண்டிருக்க ராஜாத்தி இப்படியே விட்டால் மகளை கூடவே வைத்திருக்க வேண்டியதுதான். சரியாகிவிடும் என்று சொல்லிவிட அமைதியாகிவிட்டார். ஆனாலும் மகனின் உடல்நிலை.
“எக்கா நீ சாப்புட்டியா?…” என கேட்க அங்கே சமைத்ததை போலவே தெரியவில்லை. வெறும் கஞ்சி வைத்த பாத்திரம் தான் இருந்தது.
“இன்னிக்கு காட்டுக்கு கூட போவலியா?…” முருகய்யனிடம் கேட்க இல்லையென தலையசைத்தவரின் முகத்தில் இருந்த சோர்வை கண்ட மின்னொளி அருளை அழைத்து இளவரசன் அருகில் அமர்த்தியவள் சமைக்க சென்றாள்.
“நீ போத்தா. நா பாத்துகிடுதேன்…” என்ற ராஜாத்தியை பார்த்தவள்,
“மொத போறீகளா? அவேனு படுத்துக்கிட்டு நீக ரெண்டுபேரு உங்காம கொள்ளாம வாடபோறீகளா? என்னத்தியாச்சும் செஞ்சு கொஞ்சமேனு சாப்புடத்தான? போயி ஒக்காருங்க…” அக்கறையாய் இருந்தாலும் அத்தனை கடினமாய் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அவள் பேசியவிதம் கேட்டு அருளுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
ராஜாத்தி வாடிய முகத்துடன் வந்து அழகுப்பாட்டி அருகில் அமர்ந்துகொள்ள இளவரசனின் ஆழ்ந்த உறக்கத்தை கண்டுவிட்டு மெதுவாய் எழுந்து அடுக்களைக்குள் சென்றான்.
“இங்க ஓமக்கென்ன சோலி?…” என கேட்டுக்கொண்டே படபடவென வேலைகளை பார்த்துக்கொண்டிருந்தாள் மின்னொளி.
“ஏன்டி அவுகளே நொந்துபோயி இருக்காக. நீயி இந்த சாடு சாடுத. வாய அடக்கவே மாட்டியாடி? புள்ளைக்கி இப்படி இருக்கச்ச அவுகளுக்கு என்னன்னுடி தொண்டக்குழிக்குள்ளார சோறு எறங்கு? இல்ல இப்பிடி ஆவுமின்னு அவுகதேன் கண்டாகளா? ஆகிப்போச்சு அத்த செரி பண்ணத்தேன் பாக்கனு. நீ சாமி ஆடுனா செரியாயிடுமா?…” என எரிந்துவிழுந்தவனை திரும்பி அழுத்தமாய் பார்த்தவள்,
“நீ கூடத்தேன் ஒங்கக்கா எங்கப்பார ரெண்டாவதா கெட்டிக்கிட்டதுக்கு எம்மேல காஞ்ச. என்னவோ நா கைய கால புடிச்சு கட்டிவெச்சதாட்டம். ஒங்கக்கா தான அதுவாத்தேன் கெட்டுனா எங்கப்பாவத்தேன்னு கெட்டுச்சு…”
மின்னொளி பட்டென வார்த்தையை விட அருளுக்கு அது சுருக்கென்ற வலியை கொடுத்தது. தன்னுடன் சண்டையிட்ட நாட்களில் கூட தன்னை தவிர வேறு யாரையும் சொல்லி பேசாதவள் இன்று இப்படி பேசுவாள் என எதிர்பார்க்காதவன் வாயடைத்து நிற்க,
“ஒங்கக்காவுக்காக நா யே அப்பனையே விட்டுக்குடுத்துன்னு நின்னே. அநாத மாரி. நீயுந்தேன் அந்த பேச்சு பேசின. கம்மின்னுதேன் கெடந்தே. எல்லாரு ஏசுத தொலவுக்கு நா என்ன பண்ணே நீயே சொல்லு?…” கண்கள் கலங்கிப்போய் அவள் கேட்டவிதம் அவனை, அவனின் மனதை உடைக்க,
“ஏத்தா என்னத்தா இது? ஒளி…” என அவளருகே வர பார்க்க,
“இந்தா மொத போயி ஒங்கக்காவ சீராட்டு, நா சோறு வடியவு கொண்டாறேன். போங்கேன்ல…” என அவனை விரட்ட மனமே இன்றி நகர்ந்தான் அருள்.
அதன் பின்னர் ராஜாத்தி, முருகய்யனை சாப்பிட வைத்து உறங்க செல்ல சொல்ல அவர்களோ கூடத்திலேயே படுக்கையை விரித்துக்கொண்டனர்.
இளவரசனுடன் தனது கட்டிலில் மின்னொளி படுத்துக்கொள்ள அருளின் மனதினுள் பேரலை ஒன்று அவனை சுருட்டிப்போட்டுக்கொண்டிருந்தது.
“ஒங்கக்காவுக்காகத்தேன் எங்கப்பன விட்டுகுடுத்தேன்” இந்த வார்த்தை அவனுக்குள் பலவித கேள்விகளையும் பதில்களையும் அள்ளித்தர உறங்கமுடியாமல் தவித்துக்கொண்டிருந்தான்.
அவனின் காதிற்குள் மின்னொளியின் கொலுசொலி மிக மெல்லியதாய் கேட்க சட்டென எழுந்துகொள்ளாமல் அவள் எங்கே செல்கிறாள் என்று மெதுவாய் கண் திறந்து பார்த்தபடி அசையாமல் படுத்திருந்தான்.
அவன் நினைத்ததை போல அவள் முத்துநகையின் அறைக்குள் நுழைய வேதனையுடன் கண்களை மூடினான் அருள்.
திருமணம் என்ற பேச்சு வந்ததில் இருந்து மின்னொளியின் மனது முத்துநகையை நாடியது அதிகம். அதிலும் இன்று இளவரசனுக்கு முடியவில்லை என்றதுமே பதறிக்கொண்டு வந்தாள்.
அறைக்குள் நுழைந்ததும் கதவை சாற்றியவள் தாய் கடைசியாக உபயோகித்த போர்வையையும் அவரின் புடவையையும் சுருட்டி அணைத்துக்கொண்டு தரையில் சாய்ந்தவள்,
“எம்மோவ் ஆருமே எனக்குன்னு இருந்தா அந்த சாமிக்கு புடிக்காதாம்மோவ். நாந்தேன் பஞ்சிமிட்டாயு, பலூனு கேக்கமாட்டேனே…” என கண்ணீருடன் தாயின் புகைப்படத்தை பார்த்தபடி அமர்ந்திருந்தவளின் கண்களுக்குள் கடைசியாக தாயுடன் சென்ற நிகழ்வுகளும் அதன் தொடர் அதிர்ச்சிகளும் மனக்கண்ணில் படமென விரிந்தது.