ராஜ்மோகனும் , ஜோதியும் இருவரையும் ஆவலாக வந்து வரவேற்றனர். ப்ரீதா வெற்றியை முறைத்தபடி ஓரமாக ஒதுங்கி நின்றாள். வெற்றிக்கு முன்பிருந்த கோபம் தன் மனைவியைப் பார்த்ததும், எங்கோ ஓடி விட…. அவன் கண்கள் அவளையே சுற்றி வந்தது.
இந்த வீடு ஏற்கனவே சாதனா வந்த வீடு இல்லை. அது சின்னது என்பதால்…. இன்னொரு பெரிய வீட்டில் குடி வந்து இருந்தனர். ப்ரீதா சாதனாவோடு மட்டும் நன்றாகப் பேசினாள். அவளே அழைத்துச் சென்று அவளுக்கு வீட்டையும் சுற்றிக் காட்டினாள்.
காலையிலேயே இவர்கள் வந்துவிட…. ரிஷி மதிய உணவிற்குக் கூட வீட்டிற்கு வரவில்லை… ஏற்கனவே பேபரில் வந்த விஷயம் எல்லோரின் வயிற்றிலும் புளியை கரைத்துக்கொண்டு இருக்க…சாதனா என்ன நினைப்பாளோ என அது வேறு கலக்கமாக இருந்தது.
தன் கணவனைக் காணப்போகிறோம் என ஆவலில் வந்த சாதனா ரிஷியை காணாது முகம் வாடினாள். அதை எல்லோரும் தவறாகப் புரிந்து கொண்டனர். கொஞ்சம் இளகி வந்த வெற்றி கூட அதைப் பார்த்ததும் ப்ரீதாவிடம் திரும்ப முறுக்கிக்கொண்டான்.
ப்ரீதாவும் அவனைக் கண்டுகொள்ளாமல் ஹாலில் அமர்ந்து ஜோதி சாதனாவோடு பேசிக்கொண்டு இருந்தாள். ஜோதி பிறகு வற்புறுத்தி இருவரையும் மதியம் ஓய்வு எடுக்க அனுப்பி வைத்தார்.
சாதனாவிற்குக் கொடுத்த அறையில் ரிஷி வந்து தங்கியதற்கான அடையாளமே இல்லை. அப்ப அவங்க இங்க இல்லையா எனக் குழப்பத்தில் இருந்தவள், சிறிது நேரத்தில் நன்றாக உறங்கியும் விட்டாள்.
மாலை எழுந்து குளித்துப் புடவை அணிந்து கொண்ட சாதனா…. கீழே இறங்கி வர…. ஜோதி அவளை எதிர்பார்த்து உட்கார்ந்து இருந்தார். மீண்டும் அனைவருமாக உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். வெற்றி வீட்டில் இல்லை… மாலையே கிளம்பி வெளியே சென்று இருந்தான்.
இரவு ஒன்பது மணி போல்… வெற்றி வீடு திரும்பிய போது கூட ரிஷி வந்திருக்கவில்லை. அவன் மேல் ராஜ்மோகன் மிகவும் கடுப்பில் இருந்தார்.
[the_ad id=”6605″]
இதற்கு மேல் வெற்றியை காத்திருக்க வைக்க முடியாது என எண்ணி, ஜோதி அனைவருக்கும் இரவு உணவு எடுத்து வைக்க வேலை ஆட்களை ஏவ… அப்போது வெளியில் ரிஷியின் குரல் கேட்டது.
ஆவல் தாங்காமல் சாதனா எழுந்து வெளியே சென்றாள். அதுவரை வாடி இருந்த அவள் முகம் பளிச்சென்று ஒளிர…. உள்ளே வந்த ரிஷியின் முகமும் புன்னகையில் விரிய, அவளைப் பார்த்தது லேசாகக் கண் சிமிட்டினான்.
அதைப் பார்த்த சாதனாவிற்கு முகம் சிவக்க… அவனை அணைக்க வேண்டும் போல் இருந்த ஆவலை மற்றவர்கள் இருப்பதால்… கஷ்ட்டப்பட்டு அடக்கிக்கொண்டு, அவனோடு உள்ளே வர… அதே நிலை தான் ரிஷிக்கும்.
வெற்றியை பார்த்த ரிஷி, “வாங்க வெற்றி, சாரி கொஞ்சம் லேட் ஆகிடுச்சு.” என இன்று தான் ஒழுங்காக வரவேற்று பேச… அதைப் பார்த்த ராஜ்மோகன் கொஞ்சம் மலை இறங்கினார்.
முதல்ல சாப்பிடுவோம் என அனைவரும் உணவு மேஜைக்குச் செல்ல…. “நான் கை கால் கழுவிட்டு வரேன்.” என்ற ரிஷி சாதனாவையும் உடன் அழைத்துக்கொண்டு சென்றான். அவளும் அவனை உரசிக்கொண்டு பூனைக்குட்டி போல் உடன் செல்ல…. அப்ப இவ ரிஷி மேல கோபமா இல்லையா….. என அனைவருமே வியந்தனர்.
அறைக்குள் வந்ததும் வேகமாகக் கதவை அடைத்த ரிஷி சாதனாவை இறுக அணைக்க… அவளும் அவனோடு விருப்பமாகவே ஒண்டிக்கொண்டாள்.
“ஹாய் பொண்டாட்டி, பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு. அதை விட இப்படிக் கட்டி பிடிச்சு எவ்வளவு நாள் ஆச்சு?” என்றவன், பேசும் ஒவ்வொரு வாரத்தைக்கும் அவளது கன்னத்தில் முத்தமிட…. சாதனா இன்னும் சிவந்து போனாள்.
ரிஷி மேலும் முன்னேற துடிக்க… அவனைத் தடுத்த சாதனா “அப்புறமா… கீழ எல்லோரும் வெயிட் பண்றாங்க.” எனவும் ரிஷி அவளிடம் இருந்து மனமேயில்லாமல் விலகினான்.
“சரி, நீ உன் பொருள் எல்லாம் எடுத்து வச்சுக்கோ… நைட் நாம அந்த வீட்டுக்கு போய்டலாம்.” என்றதும், சாதனாவும் அப்போதே எடுத்து வைக்கத் துவங்க. ரிஷி சென்று முகம் கழுவி வந்தான்.
[the_ad id=”6605″]
ரிஷியும் சாதனாவும் சிரித்துப் பேசியபடி தான் கீழே இறங்கி வந்தனர். வெற்றி ப்ரீதாவை பார்க்க… அவள் இன்னும் அதிகமாக அவனை முறைத்தாள்.
ரொம்ப நாட்கள் கழித்துக் குடும்பமாக அனைவரும் சேர்ந்து சாப்பிடுவது, எல்லோருக்குமே மகிழ்ச்சியாக இருக்க…. பேசிக்கொண்டே சாப்பிட்டனர்.
வெற்றி ரிஷியையே ஆராய்ந்து கொண்டு இருந்தான். தவறு செய்பவன் போல் அவன் முகம் இல்லை…. ரிஷி எப்போதுமே கொஞ்சம் கெத்தாகத் தான் இருப்பான். இப்போதும் அப்படியே தான் இருந்தான்.
“ரிஷி நாளை மறுநாள் எதோ திறப்பு விழான்னு சொன்னியே….நாங்க மூன்னு பேரும் அதுக்கு ஒரே மாதிரி பட்டு புடவை கடிக்கவா….” ஜோதி கேட்க….
“உங்களைக் கொலை பண்ணிடுவேன்…. பட்டிக்காடு மாதிரி மூன்னு பேரும் பட்டு புடவையில வந்தா… உங்களை உள்ள விட மாட்டேன்.” என்று ரிஷி காட்டமாகச் சொல்ல…. ப்ரீதாவும், சாதனாவும் சிரித்தனர்.
“அப்ப என்ன டா போட்டுட்டு வர்றது?” ஜோதி பாவமாகக் கேட்க….
“இருங்க… உங்களுக்கும் ப்ரீதாவிற்கு ம் டிரஸ் வாங்கிட்டு வந்தேன் கார்ல இருக்கு.” என்றவன், வேலை ஆளை அழைத்துக் காரில் இருந்து எடுத்து வர சொன்னான்.
சாப்பிட்டதும் அனைவரும் ஹாலில் சென்று உட்கார்ந்ததும், ரிஷி ஒரு பையை ஜோதியிடமும், இன்னொன்றை ப்ரீதாவிடமும் கொடுத்தான்.
ஜோதிக்கு அழகான டிஸைனர் புடவையும், ப்ரீதாவிற்கு அழகான அனார்கலி சுடிதாரும் இருந்தது.
“நல்லா இருக்கு டா… எப்ப டா வாங்கின?….” ஜோதி புடவையைப் பார்த்துக்கொண்டே கேட்க….
“இப்ப வரும் போது தான் வாங்கினேன். நாளைக்கு ஒருநாள் டைம் இருக்கு… அதுக்குள்ள தைக்க வேண்டியதை தச்சுக்கோங்க. ப்ரீதா நீயும் பிட்டிங் பார்த்துடு…உனக்கு இது பிடிக்கலைனா.. நாளைக்குப் போய் மாத்திக்கோ….நம்ம சுமி கடையில வாங்கினது தான்.” என்றான் ரிஷி.
“இல்லைண்ணா இதே கிராண்டா இருக்கு. நான் இதே போட்டுக்கிறேன்.”
அப்போது தான் நியாபகம் வந்தவராக ஜோதி “ஆமாம், சாதனாவிற்கு ப் புது டிரஸ்.” என்று ஆரம்பித்தவர், “நீயா மறப்ப… எங்களுக்கே வாங்கி இருக்க… உன் பொண்டாட்டிக்கு ஸ்பெஷல் டிரஸ் ரெடி பண்ணியிருப்ப…” என்றார் சரியாகவே…
“கண்டிப்பா… அவ தானே திறந்து வைக்கப் போறா… அதனால அவளுக்கு ஸ்பெஷல் புடவை ரெடி ஆகுது.”
ஆனாலும் இவனுக்கு ரொம்பத் தைரியம் தான். முன்னாள் காதலியை வச்சுப் படம் எடுக்கிறதுக்கு… பொண்டாட்டியையே திறந்து வைக்கக் கூடிட்டுப் போறான் என வெற்றி நினைக்க… அதையே தான் ராஜ்மோகனும் நினைத்தார்.
“எனக்கு இதெல்லாம் ஒன்னும் பிடிக்கலை…. இந்தப் படம் எடுக்கிறது எல்லாம் தேவையா…” ராஜ்மோகன் தனது அதிருப்தியை தெரிவிக்க…. ரிஷி இவருக்கு வேற வேலை இல்லை என்பது போல்… சோம்பலாக ஒரு பார்வை பார்த்தான்.
[the_ad id=”6605″]
“நீ என்ன மா சொல்ற?” ராஜ்மோகன் தன் மருமகளிடமே நேரடியாகக் கேட்க… அவர் திடிரென்று தன்னிடம் இப்படிக் கேட்பார் எனச் சாதனா நினைக்கவே இல்லை. அவள் ரிஷியின் முகத்தைத் தயக்கமாகப் பார்த்தாள். ஆனால் அவன் எதுவும் சொல்லவில்லை… உன் பாடு உன் மாமனார் பாடு என்பது போல் இருந்தான்.
“அவர் ஏற்கனவே படம் எடுத்திருக்கார் தான மாமா…”
“ம்ம்… முன்னாடி வேற… ஆனா இப்ப எனக்குப் பிடிக்கலை… உனக்கு எதாவது வருத்தம் இருந்தா சொல்லிடு…” என ராஜ்மோகன் கேட்க…..
“அவருக்குப் பிடிச்ச செய்யட்டும் மாமா…” என்று விட்டாள் சாதனா. ரிஷி தன் தந்தையைப் பார்த்துக் கெத்தாக ஒரு லுக் விட… எப்படியும் போங்க என அவரும் விட்டுவிட்டார். இதையெல்லாம் பார்த்த வெற்றிக்குத் தலையில் அடித்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது.
ரிஷி சாதனாவை பார்த்துக் கிளம்பு என்றான். “எங்க டா போறீங்க? இன்னைக்கும் நீ இங்க தங்கலையா…. நான் எவ்வளவு நாள் கழிச்சு சாதனாவை பார்த்தேன். அவளையுமா கூடக் கூடிட்டு போற…” ஜோதி கேட்க….
“அதுதான் உங்களோட காலையில இருந்து இருந்தா இல்லை… அது போதும். விழாவுக்கு நீங்க இங்க இருந்து வந்திடுங்க. நாங்க அங்க இருந்து வந்திடுவோம்.” என்று ரிஷி சொல்லிக்கொண்டு இருக்கும் போதே… சாதனா தன்னுடைய பொருட்களோடு வந்துவிட…. மேலும் யாரும் எதுவும் சொல்லவில்லை.
அவர்கள் இருவரும் குஜாலாகக் கிளம்ப… இங்கே வெற்றியின் நிலை தான் பரிதாபம். இதுங்க ரெண்டும் நமக்கு டைவர்ஸ் வாங்கிக் கொடுக்கும்னு நினைச்சது உண்மை ஆகிடும் போலவே… என நினைத்தவன், சமாதான புறா பறக்க விடும் எண்ணத்தில்… ப்ரீதாவை பார்க்க…. பதிலுக்கு அவள் பார்த்த பார்வையில் அனல் பறந்தது.
ப்ரீதா அறைக்குள் செல்ல… வெற்றியும் அவள் பின்னால் சென்றான். ப்ரீதா அவனைப் பார்த்ததும் வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்குத் தயாராக….
“நான் செஞ்சது ரொம்பத் தப்பு. என் தங்கையை நம்பி, அதுவும் உங்க அண்ணன் விஷயத்துல…. நான் இறங்கி இருக்கக் கூடாது. அவளுக்காக உன்கிட்ட அப்படிப் பேசி இருக்கவும் கூடாது. இனி இப்படி நடக்கவே நடக்காது.” என வெற்றி பலவாறாகச் சமாதானம் செய்தும், ப்ரீதா மலை இறங்கவே இல்லை….
“உங்க அண்ணன் சாதனாவிற்கு விழாவுக்குப் போட டிரஸ் தான வாங்கித் தந்தான். நான் உனக்கு நாளைக்குத் தங்கமே வாங்கித் தரேன். உனக்குப் பிடிச்ச செட் வாங்கிக்கோ…” என்றதும், ப்ரீதா கொஞ்சம் இறங்கி வர…. மேலும் அவளைக் கெஞ்சிக் கொஞ்சி சமாதானம் செய்வதற்குள் வெற்றிக்கு நாக்கு தள்ளி விட்டது.
டேய் ! வெற்றி, ரிஷி சாதனாவிற்கு விழா அன்று போட வைரமும் முத்தும் சேர்ந்தது போல்… காதணியும், கழுத்தணியும் வாங்கியது ப்ரீதாவிற்கு த் தெரிய வரும் போது… உனக்கு இன்னும் இருக்குடா…