Skip to content
Post Views: 447
துரைப்பாண்டியின் வீடு மலர்களாலும், தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அன்றுதான் அவரின் தங்கை மகளுக்கு பெயர் சூட்டும் விழா.
உறவினர்கள் அனைவரும், அவர்கள் வீட்டு கூடத்தில் கூடியிருக்க அங்கே தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தாள் சுந்தரம் விஜயாவின் செல்ல மகள், குழந்தைய தாய்மாமா மடியில படுக்க வைங்க என அய்யர் சொல்ல, அதன்படியே குழந்தையை எடுத்து, மனையில் அமர்ந்திருந்த துரைப்பாண்டியின் மடியில் வைத்தார் அவரது மனைவி சுகுணா.
என்ன பேர் வைக்கப் போறீங்க எனக் கேட்டதற்குத் துரையின் அருகிலேயே அமர்ந்திருந்த சுந்தரம் பவித்ரா எனக் கூறினார். இந்த பேர மூனுதடவ குழந்த காதுல சொல்லுங்க என துரையைப் பார்த்து அய்யர் சொல்ல அவ்வாறே மூன்று முறை குழந்தையின் பெயரைக் காதில் கூறினார்
மூதாதையரின் பெயர்கள் குலதெய்வத்தின் பெயர்கள் எனமூன்று பெயரையும் சுந்தரம் கூறக் கூற துரை குழந்தையின் காதில் கூறினார். பின் குழந்தையை தொட்டிலில் படுக்க வைத்தனர்.
Advertisement
தங்கச் சங்கிலியும், கைக்குத் தங்கக் காப்பும், காலுக்குக் கொலுசும் தனது மருமகளுக்கு அணிவித்தனர் துரை சுகுணா தம்பதியினர். முத்துக்கள் பதித்த தங்க அரைஞான் சங்கிலியை தனது மகளுக்கு சூட்டி அழகு பார்த்தனர் குழந்தையின் பெற்றோர்.
இரண்டு பாட்டிகளும் தங்க சங்கும், கெண்டியும், கொடுத்து குழந்தையை ஆசிர்வதித்தனர். பிறகு உறவினர்கள் தங்கள் பரிசுகளை வழங்கிவிட்டு விருந்து உண்ணச் சென்றனர். உறவினர்களை கவனிக்க வீட்டு ஆட்கள் சென்றுவிட, சுகுணா உடை மாற்றச் சென்றார். தொட்டிலில் குழந்தை உறங்குவதைப் பார்த்துக் கொண்டே இரு பாட்டிகளும் கதை பேசிக்கொண்டிருந்தனர்..
அப்போது துரை விஜாவின் மகன் நந்தகுமார் தன் தம்பி அறிவிச்செல்வனை அழைத்துக் கொண்டு தன் அப்பத்தாவின் அருகில் வந்தான். என்ன ராசா, ரெண்டுபேரும் சாப்புட்டிகளா என நந்துவைப் பார்த்துப் பேசிக் கொண்டிருக்க அறிவு மட்டும் தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையின் அருகே சென்றான். புதுத் துணி அணிந்து, நெற்றியிலும், கன்னத்திலும் மையிட்டு உறங்கும் குழந்தையைப் பார்பதற்கு பொம்மை போல இருந்தவுடன், அதன் கையை ஆசையாகத் தொட்டான்.
Advertisement
பஞ்சு போல மிருதுவாக இருந்தவுடன் கையைப் பிடித்து ஆட்டினான். உறக்கத்திலிருந்த குழந்தை வீறிட்டு அழுதவுடன் பயத்துடன் ஓரடி பின்னால் நகர்ந்தான். உடனே பதறிக் கொண்டு வந்த பொன்னாத்தாள், ஏண்டா குழந்த அழுகுது,…. என்னடா செஞ்ச, எனக் கேட்டுக் கொண்டே அறிவின் முதுகில் பட்டென்று அடித்துவிட்டார்,
Advertisement
உள்ளே இருந்த அனைவரும் சத்தம் கேட்டு வெளியே வந்தனர், அவர்களைப் பார்த்த நந்தா,….அறிவு, பாப்பா கையத்தான் பிடிச்சிட்டு இருந்தான், அவன் ஒன்னும் பன்னல எனக் கூறினான். சும்மா அவன எதுவும் சொல்லிட்டே இருக்காதீக அத்த என மருமகனை தனக்கு அருகில் இழுத்துக் கொண்டார் சுந்தரம்.
இப்படி ஏதாவது சொல்லிட்டே இருந்தா பசங்களுக்குள்ள ஒன்னோட ஒன்னு ஒத்து போகாம போட்டி பொறாமைனு வந்து பின்னாடி சண்டை போட்டுகிட்டு நிக்குங்க, பந்தி நடந்துட்டு இருக்கு, அங்க போயிட்டு பந்திய கவனிங்க என இரு மூதாட்டியையும் அங்கே அனுப்பி வைத்தார் துரை.
நந்தாவையும், அறிவையும் அருகே அழைத்து உட்கார வைத்து அறிவின் மடியில் குழந்தையை படுக்க வைத்தார் சுந்தரம். பாப்பாவ நீங்க தான் பத்திரமா பார்த்துக்கனும், பார்த்துபிங்களா எனக் கேட்டார்.
Advertisement
உடனே நந்தா பாப்பாவ நாங்க பார்த்துக்குவோம், நீங்க கவல படாதிங்க மாமா என பெரிய மனிதனாய் கூறினான். ஸ்கூலுக்கு பத்திரமா கூட்டிட்டு போகனும், எங்கையும் அவள தனியா விடக் கூடாது எனக் கூறியவுடன் நந்தகுமார் வேகமாக தலையை ஆட்டினான். மாமா கூறியதை தன் ஆழ்மனதில் பதியவைத்ததன் விளைவுதான் இன்றும் பவித்ராவை கவனித்துக் கொள்வது,
அதே சமயம் குழந்தையை மடியில் வைத்திருந்த அறிவு, அக்குழந்தையை முறைத்துப் பார்த்துக் கொண்டு இருந்தான். இதுநாள் வரை அனைவருக்கும், முக்கியமாக இரு பாட்டிமார்களுக்கும் செல்லமாக இருந்தான்,
ஆனால் இக்குழந்தை வந்ததிலிருந்து தன்னை அனைவரும் தள்ளி வைப்பதாக நினத்தான். அத்துடன் தன்னை அனைவரும் திட்டுவதால் தன்னை யாருக்கும் பிடிக்கவில்லை என அந்த சிறுவனின் மனதில் பதிந்து போனது.
எது நடக்கக் கூடாது என சுந்தரம் நினைத்து இருவருக்கும் அறிவுரைக் கூறிக்கொண்டிருந்தாரோ அது எப்போதோ நடந்துவிட்டதை அந்த வீட்டில் இருந்த எவரும் அறியவில்லை, அறிவின் மனதில் அக்குழந்தையின் மீது பொறாமையும், போட்டியும் வந்துவிட்டது.
குழந்தை பிறந்ததிலிருந்தே அனைவரும் தன்னைத் திட்டுவதாகவும், அப்பா அம்மாவிற்குக் கூட தன்னைப் பிடிக்கவில்லை, புது பாப்பாவைத்தான் பிடித்துள்ளது என அந்த பிஞ்சு மனதில் பதிந்து விட்டதை யாரும் அறியாமல் காலம் தாண்டி இப்போது அறிவுரைக் கூறிக்கொண்டிருந்தார்.
சரி பாப்பாவ அத்தைக்கிட்ட கொடுத்துட்டு நாம சாப்பிட போகலாம் வாங்க என அவர்களை சாப்பிட அழைத்துச் சென்றார். இப்படியே நாட்கள் நகர, தன் தம்பியைப் போலவே பவித்ராவையும் நந்தா கவனித்துக் கொள்ள, அறிவு அனைவருடனும் இருந்து ஒதுங்க ஆரம்பித்து தனிமையைத் தேர்ந்தெடுத்தான்,
அப்போது அவனுக்குத் துணையாக இருந்தது புத்தகங்கள். ஆம், பாட புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்து, அனைத்திலும் முதல் மதிப்பெண் பெற்றான், அவனது பெற்றோர்கள், அத்தை, மாமா பாட்டிகளின் பாச மழையும், பாராட்டு கிடைக்க மீண்டும் தன்னை கவனிக்கிறார்கள், கொஞ்சுகிறார்கள் என இன்னும் நன்றாக படித்தான்.
ஒவ்வொரு வருடமும் இவனே அப்பள்ளியின் முதல் மாணவனாகத் தேர்ந்தெடுக்கப் பட்டான், படிப்பு மட்டுமின்றி அனைத்துப் போட்டியிலும் அறிவுச்செல்வனே முதலாவதாக வருவதை தனது கடின உழைப்பால் தன்னிடமே தக்க வைத்துக் கொள்வான்.
அக்கிராமத்தில் பலபேர் சிலநேரம் அறிவையும் நந்தாவையும் உதாரணமாகக் காட்டி அவர்கள் குழந்தைகளைத் திட்டுவதும் உண்டு. அறிவும், நந்தாவும் படிக்கும் பள்ளியிலேயே பவித்ராவையும் சேர்த்துவிட்டு வெளியே வந்த சுந்தரம் தனது மகளிடம், அறிவுமாதிரி நீயும் நல்லா படிக்கனும் எனக் கூறினார். தனது குண்டு கண்களால் பயந்து கொண்டே மண்டையை ஆட்டினாள் பவித்ரா. ஏனென்றால் அவளை முறைத்துப் பார்த்துக் கொண்ருந்தது நம்ம அறிவுச்செல்வன்.
error: Content is protected !!