Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

செல்லமான ஊடல் நீயே..

செல்லமான ஊடல் நீயே … 12

அத்தியாயம் 12

வெற்றிவேல் செழியன், கனிகா இருவரின் திருமணம் முடிந்து நாட்கள் வேகமாய் கடந்து கொண்டிருக்க.. கனிகாவிற்கு நாட்கள் எப்படி கழிந்ததோ, வெற்றிவேலுக்கு மிக மிக பரபரப்பானதாகவே போனது, கனிகாவிடம் பேச மட்டுமல்ல பார்க்க கூட நேரமின்றி.

அன்று இரவு கனிகாவின் கதை சொல்லும் படலத்தில் கடுப்பாகி இருந்தவனை பார்த்த போது, 

‘அச்சோ போச்சு.. நம்மாளு போலீஸ்ன்னு மறந்து போய், இப்படி கடுப்பேத்திட்டோமே.. கருப்பு சாமி முறைச்சு பார்க்கற மாதிரியே பார்க்கறாரே..

பொட்டுன்னு துப்பாக்கிய தூக்கி போட்டுடுவாரோ..?’ என்று ஒரு நிமிடம் பயம் வந்தாலும், 

‘ச்சே.. ச்சே.. மாமா நம்மள அப்படியெல்லாம் போட்டு தள்ள மாட்டாங்க..’ என்ற நம்பிக்கை கொடுத்த குருட்டு தைரியத்தில் கொஞ்சம் வெளியே கெத்தாகவே காட்டி நின்றாள்.. அவன் வேகமாய் அவள் புறம் வரும் வரையில்.

வெற்றி எழுந்த வேகத்திற்கும், அவளிடம் அவன் நெருங்கி வந்த வேகத்திற்கும் கனிகாவின் ஒட்டுமொத்த தைரியமும் கற்புரமாய் கரைந்து போக, 



Advertisement

“மாமா.. மாமா.. ப்ளீஸ் மாமா.. தெரியாம வம்பு பண்ணிட்டேன் மாமா.. இனிமே வாயே திறக்க மாட்டேன் மாமா.. நீங்க என்ன சொல்றீங்களோ.. அதே மாதிரி அப்படியே அடி மாறாம இனிமேல் செய்யறேன் மாமா.. அடிச்சிடாதீங்க மாமா.. குழந்தை புள்ள உடம்பு தாங்காது மாமா..” என கண்களையும் காதையும் இறுக மூடிக்கொண்டு மூச்சுக்கு முன்னூறு மாமா போட்டவள்,

சிறிது நேரம் சென்றும் வெற்றி எதுவும் செய்யாமல் இருப்பதை உணர்ந்து, ஒற்றை கண்ணை மட்டும் லேசாக திறந்து மெல்ல தலைநிமிர்த்தி பார்த்தவள், பட்டென விழி விரித்து அதிர்ந்து நின்றாள் வெற்றிவேல் செழியன் நின்ற கோலத்தை கண்டு.

அதுவரை ட்ரக் பேண்ட்டும், டீசர்ட்டுமாய் இருந்தவன், இவள் நிமிர்ந்து அவனை பார்த்த போது, “ம்ம்.. ம்ம்..” என்றபடியே வேக வேகமாய் தனது  பேண்ட்டை கழட்டிவிட்டு, வெளியே செல்வதற்கு தோதாய் பார்மல் பேண்ட்டை அணிவதை கண்டு ஒரு நொடி திகைத்தாலும், தன் முன் அவன் நிற்கும் நிலை கண்டு, “ச்சீ.. மாமா, என்னது இப்படி..?” என்றபடி வேகமாய் திரும்பி நின்றாள் முகத்தை மூடி.

அவளின் எந்த செயலையும் கண்டு கொள்ளாத வெற்றிவேல், உடையை மாற்றிக்கொண்டே காதில் இருந்த ஹெட் போனில், 

“சதீஷ்.. வேற இன்ஃபார்மேஷன் கிடச்சா இமீடியட்டா எனக்கு இன்ஃபார்ம் பண்ணு. 

Advertisement

இன்னும் கொஞ்ச நேரத்துல நா வந்திடுறேன். நம்ம டீமை மொத்தமா அங்கே அசம்பிள் ஆக சொல்லு.. 

Advertisement

டிஜிபி சார் கிட்ட நானே பேசிடறேன். அரேன்ஜ் பண்ணியிருக்கற மீட்டிங் வெரி காண்பிடன்ஷியல்.. சோ அதுக்கான பார்மாலிட்டிஸ் பார்த்திடு..” என பேசியவனின் பரபரப்பும், கட்டளையாய் சொன்ன தொணியும் ஏதோ சரியில்லை என்பது மட்டும் கனிகாவிற்கு புரியவைக்க, 

இதுவரை இருந்த விளையாட்டு தனத்தை துறந்தவளாய் வேகமாய் அவனின் பர்ஸ், வாட்ச் என அனைத்தையும் அவன் தேடும் முன் எடுத்து கொடுத்தவள் கேள்வியாய் அவன் முகத்தையே பார்த்திருந்தாள், ‘எதாவது சொல்வானா..?’ என்பதாய்.

“ஒரு முக்கியமான கேஸ்டா, இப்போ அது பத்தி விளக்கம் சொல்ல முடியாது. 

நா எப்போ ரிட்டன் வருவேன்னு தெரியாது. அம்மாகிட்ட சொல்லிடு. 

Advertisement

பத்திரமா இருங்க ரெண்டு பேரும். டைம் கிடச்சா கால் பண்றேன்..” என்றபடியே, 

கீழே இறங்கி வந்து ஸ்சூவை அணிந்தவன், அடுத்த சில நிமிடத்தில் அவளிடம் லேசான ஒரு தலையசைப்போடு வாகனத்தில் பறந்திருந்தான் தனது பணிக்காக.

‘என்ன நடந்திருக்கும்..?’ என்பது புரியாமல் சிறிது நேரம் வாசலிலேயே நின்றவளை தழுவிய குளிர்ந்த காற்றில் நிற்கும் இடமும், சூழலும் நினைவில் எழ கதவை அடைத்து விட்டு மேலே அவர்கள் அறைக்கு வந்தவள் குழப்பத்தோடே உறங்கி போனாள்.

மறுநாள் விடியலில் தொலைகாட்சியில் வந்த செய்தியை பார்த்த போது தான் தெரிந்தது வெற்றி அவ்வளவு பதட்டத்தோடு சென்றதன் காரணம். 

தமிழ்நாட்டில் அதுவும் குறிப்பாக சென்னையிலிருந்து மட்டும் ஒரே நாளில் கிட்டத்தட்ட நாற்பது குழந்தைகள் கடத்தப்பட்டிருப்பதாக அனைத்து மீடியாக்களும் ஹாட் டாப்பிக்காக ஒளிபரப்பிக்கொண்டிருந்தது.

அன்று முதல் வெற்றி வீட்டிற்கு வருவதே ரெஃப்ரஸ் செய்வதற்கு மட்டுமே என்பது போல ஆகிற்று.

வெற்றிவேல் செழியன் சொன்னது போலவே அனைத்து ஏற்பாட்டையும் செய்து தயாராய் இருந்த சதீஷிடம் கண்ணால், ‘எல்லாம் சொன்ன மாதிரி ரெடியா இருக்கா..?’ எனக்கேட்க,

அவனும் ஆமோதிப்பான கண்ணசைவை கொடுத்ததும், அந்த மீட்டிங் அறைக்கு சென்றான் வெற்றி.

அங்கு குழுமியிருந்த கூட்டத்தில் நடுநாயகமாக சென்று அமர்ந்தவன், அந்த கேஸ் பற்றிய சிறு குறிப்பை அறிவித்த பின்,

“சதீஷ் குழந்தைங்க காணாம போனது எல்லாமே ஒரு குறிப்பிட்ட ஏரியா இல்ல. 

அப்படின்னா இதுல பல பேர் சம்மந்தப்பட்டிருக்கனும்.

இதுல நமக்கு கிடச்ச க்ளூ ன்னு பார்த்தா ரெண்டு இடத்துல ஜஸ் வண்டில வந்தவங்க மேல டவுட்டுன்னு அந்த ஏரியால இருக்கறவங்க சொன்னது மட்டும் தான்.. சரியா..?” என ஒரு ஏசிபியாய் வெற்றிவேல் செழியன் கேட்க,

“எஸ் ஸார். அந்த ஏங்கில்ல தான் எங்க சைட் விசாரணையை தொடங்கியிருக்கோம்..” என சதீஷ் சொன்னதும்.

“எனி அதர் க்ளூஸ்..?” என அங்கிருந்த மற்றவர்களையும் ஒரு பார்வை பார்த்த படி கேட்க,

“ஸார், அந்த ரெண்டு பேர் மட்டுமில்ல.. அதே மாதிரி குல்பீ, பஞ்சுமிட்டாய் ன்னு குழந்தைங்க விரும்பி சாப்பிடற ஐட்டம்ஸ் விற்கற எல்லாரையும் தான் எங்க சந்தேக வட்டத்துல வச்சுட்டு, காணாம போன பிள்ளைங்க வீட்டுல விசாரணை பண்ணி பார்த்ததுல பாதிக்கும் மேற்பட்ட குழந்தைங்க இப்படி வந்த சிலரால தான் கடத்தப்பட்டிருக்காங்க..” என ஒருவர் சொல்ல,

ஆமோதிப்பான தலையாட்டலோடு அடுத்து அவன் பார்வையை மற்றொருவரிடம் திரும்ப,

“குழந்தைங்க ஆசைப்பட்டு கேட்கறாங்கன்னா வெளியே வந்து வாங்கி கொடுக்காம..  நம்ம வீதியில தானே வாங்கறாங்கன்னு சிலர் காச கொடுத்து வெளியே அனுப்பறதால அவங்க அந்த பசங்களையா நோட் பண்ணி தூக்கியிருக்காங்க.. ஸார்..”

“விசாரிச்சு பார்த்த வரை மேல் மாடியில குடியிருக்கோம் சார்.. குழந்தை கேட்குதுன்னு கீழே மேலேன்னு போக யோசனை பண்ணி அவங்களையே அனுப்பி வச்சோம்.. இப்படி ஆகுமுன்னு நாங்க நினைக்கலன்னு அழுகறாங்க..” என அந்த குழந்தைகளின் ஓரிரு வீடுகளில் விசாரித்த ஒரு காவல் துறை அதிகாரி சொல்ல,

“சார், இவ்வளவு டீட்டெய்ல்ஸ் கிடச்சாலும் அவங்க எல்லாரையும் ஒண்ணு சேர்க்கற மாதிரி இடம் ன்னு எதையும் சரியா கணிக்க முடியல ஸார்.

அது தெரிஞ்சா மொத்தமா பிடிச்சிடலாம்..” என மற்றொருவர் விளக்கம் கொடுக்க,

இப்படியான சில பல விவாதங்களுக்கு பின் மொத்த தொகுப்பையும் ஆராய்ந்த வெற்றிவேலுக்கு சட்டென தோன்றிய யோசனையின் படி, 

“சதீஷ் கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி மால்ல வச்சு ஒரு கிட்னாப்பரை நா அரஸ்ட் பண்ணி அனுப்பி வச்சேனே.. அவன் இப்ப எந்த ஜெயில்ல இருக்கான்..?” என கேட்க,

அதற்கு பதில் சொன்ன நொடி அங்கிருந்து வேகமாய் விரைந்திருந்தான் அந்த கிட்னாப்பரை விசாரிக்கும் நோக்கோடு.

அங்கு அவனுக்கு வெற்றிவேல் செழியனின் அன்பான(?!) விசாரணையில் ஒரு சிறு துப்பு சிக்க,

போலீஸை சில குழுக்களாக பிரித்து.. அவர்கள் செய்ய வேண்டியதை எல்லாம் தெளிவாக்கி ஒவ்வொரு குழுவையும் அவரவருக்கு பிரித்திருந்த பகுதிக்கு அனுப்பி வைக்கும் போதே நேரம் விடியலை கடந்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!