Skip to content
Post Views: 517
”கண்மணி இப்ப குணாவோட காதலி வீணா அவளை நினைச்சி ஏங்காத” என்றாள் கமலி
”சரி சரி சொல்லு எங்க இருக்கா“ என உம்மென முகத்தை வைத்துக் கொண்டு கேட்டான் கவின்
”ஹாஸ்டல்ல”
”அட்ரஸ்”
Advertisement
”எதுக்கு கேட்கற“
”தெரிஞ்சிக்கத்தான்”
”தேவையில்லை நான் குணாவோட அட்ரஸ் கேட்டேனா என்ன”
Advertisement
“இல்லை இருந்தாலும்” என இழுக்க
Advertisement
”வேணாம் கவின், நாம பழிவாங்க இறங்கிட்டோம், தேவையில்லாம மனசை அலைபாய வைக்காத, இப்ப நீ கண்மணி கிட்ட போய் பேசினாலும் அவள் உன்னை ஏத்துக்க மாட்டா புரிஞ்சிக்க”
”புரியுது புரியுது”
”அந்த காதல் கடிதத்தை அவங்க படிச்சிருப்பாங்களான்னு தெரியலையே”
Advertisement
”படிக்கறதாவது அது இந்நேரம் குப்பையில கிடக்கும்”
”அதுக்காக அப்படியே விட முடியாது தினமும் ஒரு காதல் கடிதம் எழுதி வைக்கனும்”
”தினமுமா“
”ஆமாம் நான் போய் கடிதம் எழுதறேன், வெட்டியாதானே இருக்க, நீயும் இரண்டு மூணு எழுதி வைச்சிக்க”
”அடிப்பாவி என்ன நீ இப்படி ஆயிட்ட”
”ப்ச் எழுது”
“கடிதமே எழுதிக்கிட்டு இருந்தா எப்படி? போர் அடிக்கும், கிப்ட் ஏதாவது தந்தா நல்லாயிருக்குமே”
”தெரியும் குணாவோட பிறந்த நாள்க்கு தரலாம்”
”அவனோட பிறந்த நாள் எப்போ“
”அது எப்போன்னு எனக்குத் தெரியும் ஆமா கண்மணியோட பிறந்த நாள் எப்போன்னு உனக்கு தெரியுமா“
”ஓ நல்லாவே தெரியும்”
”அது போதும் பிறந்த நாளுக்கு கிப்ட் அனுப்பலாம், ஏதாவது விழா பண்டிகை வந்தா அது சம்பந்தப்பட்ட கிப்ட் அனுப்பலாம், எப்படியாவது அவங்க மனசுல காதலை வரவழைக்கனும்”
”முதல்ல காதல் வருதான்னு பாரு, கண்டிப்பா இரண்டு பேரும் மாத்தி மாத்தி அவமானப்படுத்திக்க போறாங்க”
”இல்லை அவங்களுக்குள்ள காதல் வரனும், ஆரம்பமே அவங்க பிரிஞ்சிடக்கூடாது, காதலிச்சி பிரியனும், அவங்களை காதலிக்க வைக்கனும்”
”காதலிக்க வைச்சி அடுத்து என்ன செய்யப் போற”
”சிம்பிள், அவங்களுக்குள்ள சண்டையை மூட்டிவிட்டு பிரேக் அப் பண்ணிட வேண்டியதுதான், பிரேக் அப்போட வலியை அவங்க உணரனும், கஷ்டப்படனும், கண்ணீர் வடிக்கனும், அதுவரைக்கும் நான் ஓயமாட்டேன்” என வீரா வேசமாக சொல்லிவிட்டு தன் அறைக்குச் சென்று காதல் கடிதம் எழுதலானாள், அவளின் ஆர்வத்தைக்கண்ட கவினுக்கு சோர்வே வந்தது
”இவளோட சேர்ந்து நமக்கு எந்த பிரச்சனையும் வராம இருந்தா சரி, இவள் எழுதறதைப் பார்த்தா இன்னிக்கே 10 கடிதம் எழுதிடுவா போல இருக்கே, சரி நாமளும் எழுதி வைப்போம், ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வொரு கடிதமா அவன் பையில வைக்கனும், என்னிக்கு அவன் கையில நான் மாட்டிக்கப் போறேனோ தெரியலையே, நான் மட்டும் மாட்டிக்கிட்டேன் கமலி பெயரை சொல்லிட வேண்டியதுதான்” என நினைத்துக் கொண்டே அவனும் காதல் கடிதங்களை எழுதலானான்.
மறுநாள் கல்லூரிக்கு விரைவாகவே வந்து விட்டார்கள் கவினும் கமலியும்
”இன்னும் யாரும் வரலையே, எதுக்கு இப்படி அவசர கதியில கூட்டிட்டு வந்திருக்க கமலி”
”அவங்க ரெண்டு பேரும் எப்படி வர்றாங்கன்னு பார்க்கனும்”
”எப்படின்னா”
”கோபமாவா இல்லை அமைதியா வர்றாங்களான்னு பார்க்கனும், கடிதத்தை பார்த்துட்டு என்ன செய்யப் போறாங்கன்னு தெரிஞ்சிக்கனும்“
”ஒருவேளை பிரின்சிபால்கிட்ட புகார் கொடுக்க போயிட்டா“
”இல்லை அவங்களை பத்தி எனக்குத் தெரியும், அவங்களே விரட்டுவாங்களே தவிர இதுவரைக்கும் பிரின்சிபால் வரைக்கும் அவங்க போனதில்லை“
”ஆமாம் கரெக்ட்தான் ஆனா அவங்க கடிதத்தை படிச்சாங்களான்னு தெரியலையே”
”எப்படியும் அதை கொண்டு வந்து சம்பந்தப்பட்ட ஆள்கிட்ட தருவாங்கள்ல அப்ப பார்க்கலாம்”
”தராம கிழிச்சிருந்தா“
”கிழிச்சிருக்க மாட்டாங்க, கிழிச்சிருந்தா மறுபடியும் மறுபடியும் கடிதம் வரும்னு அவங்களுக்கு தெரியும் அதனால கிழிக்க மாட்டாங்க, நேரா கொண்டு வந்து தருவாங்க, இன்னிக்கே கண்மணி குணாவை அவமானப்படுத்தறதை நான் என் இரண்டு கண்ணாலயும் பார்த்து சந்தோஷப்படப்போறேன்”
”ஆஹா என்ன ஒரு ஆசை உனக்கு“
”ஏன் உனக்கில்லையா”
”இருக்கு இருக்கு எனக்கும்தான், கண்மணி அவமானப்படறதை பார்த்து நான் ரசிக்கப் போறேன்“ என சொல்லும் போதே குணாவும் கமலியும் மற்ற மாணவர்களுடன் வர அதைக்கண்டதும்
”அதோ அதோ அவங்க வந்துட்டாங்க” என கமலி சொல்லிவிட்டு சட்டென ஒரு பக்கமாக சென்று ஒளிந்துக் கொண்டாள்
அதைக்கண்ட கவினோ கண்மணியைக்கண்டு வேறு பக்கமாக சென்று ஒளிந்துக் கொண்டான், குணா தனது பைக்கை ஸ்டான்டில் விட்டுவிட்டு பையுடன் தன் வகுப்பை நோக்கி விரைந்தான், கண்மணியும் தனது வகுப்பை நோக்கி நடந்தாள்.
முன்னால் அவள் நடக்க பின்னால் 4 அடி தள்ளி குணா நடந்தான், அவள் அணிந்திருந்த கால் கொலுசு சத்தம் அவனுக்கு நன்றாக கேட்டது, அவன் தலைகுனிந்தபடியே நடந்தான், அவளோ தலை நிமிர்ந்து நடந்தாள், அதைகண்ட கமலியும் கவினும் ஒன்று சேர்ந்து
”பாரு அவன் பொண்ணாட்டம் தலை குனிஞ்சி நடக்கறான், அவள் ஆம்பளையாட்டம் தலை நிமிர்ந்து நடக்கறா, சரியான ஜோடிங்க இரண்டும்” என கவின் புலம்ப கமலியோ
”ரொம்ப முக்கியம், அவங்க சண்டை போடலைன்னு வையேன், நேத்து நாம எழுதின கடிதங்களை நேத்து போலவே இன்னிக்கும் அவங்க அசந்த நேரத்தில அவங்க பையில வைச்சிடனும் சரியா, வா வா அவங்க ஏதாவது பேசிக்கறதுக்குள்ள போயிடலாம் வா” என அவனை இழுத்துக் கொண்டு வகுப்புக்குள் சென்றாள்.
வழக்கமான இடத்தில் குணாவும் கண்மணியும் அமர்ந்தார்கள், இன்னும் சில மாணவ மாணவிகள் மட்டுமே இருந்தார்கள், இன்னும் பெல் அடிக்கவில்லை, கவினும் கமலியும் பதுங்கி பதுங்கி தங்களின் இடத்தில் வந்து சத்தமின்றி அமர்ந்தார்கள், ஆனாலும் அவர்களின் பார்வை பக்கத்தில் இருந்தவர்களை கண்காணித்தபடியே இருந்தது.
குணாவோ நேற்று புது லாட்ஜில் இட வசதியில்லாமல் சரியான சாப்பாடு இல்லாமல் கஷ்டப்பட்டு தங்கியிருந்தபடியால் தனது பையை கூட அவன் திறந்து பார்க்கவில்லை, காலையில் அரக்க பரக்க குளித்து விட்டு வருவதற்கே சரியாக இருந்தது அவனுக்கு, அதனால் இப்போதுதான் அவன் தனது பையை பிரித்து உள்ளிருந்து நோட்டுக்களை எடுக்க அதில் இருந்து கடிதம் ஒன்று கீழே விழவும் அப்போதுதான் அதையே கவனித்தான்
குழப்பத்துடன் என்ன இது என்பது போல் பார்த்தபடியே அந்த கடிதத்தை எடுத்துப் பிரித்துப் பார்த்தான், அதில் முதல் லைனை படித்த உடனே வெறுப்பாகி அதை அப்படியே கசக்கி தூக்கி எறிய நினைத்தான், ஆனால் வகுப்புக்குள் குப்பை போடகூடாது என நினைத்து எழுந்துச் சென்று ஜன்னல் வழியாக வெளியே வீசிவிட்டு தனது இருக்கையில் வந்து அமர்ந்தான், அவனது செயலைக் கவனித்தபடி இருந்த கவினோ தலையில் அடித்துக் கொண்டான்
”அட நல்லவனே, நீ இப்பதான் இந்த கடிதத்தையே பார்த்தியா, முதல் லைன் படிச்சதும் தூக்கி போட்டுட்ட சூப்பர், இதைதான் நான் எதிர்பார்த்தேன், இரு இரு, சாயங்காலம் நீ போறதுக்குள்ள இன்னொரு கடிதத்தை உன் பைக்குள்ள வைச்சிடறேன்” என நினைத்துக் கொண்டே கமலியைப் பார்த்தான்.
கமலியோ கண்மணியையே பார்த்தபடி ஏதோ ஒரு நோட்புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தாள், கமலியும் தனது பையில் இருந்த எல்லா பொருட்களையும் எடுத்து பென்ச் மீது வைத்தாள், புது ஹாஸ்டல் தங்க இடமில்லாமல் கிடைத்த இடத்தில் தங்கி, கொசு கடியில் சரியாக உறங்காமல் சரியான சாப்பாடு இன்றி ஏதோ சாப்பிட்டு விட்டு உறங்கி காலையில் எழுந்தாள்
அனைவருக்கும் பொதுவாக 3 பாத்ரூம் என்பதால் கால்கடுக்க பாத்ரூம் முன் நின்று காத்திருந்து குளித்து முடித்து ரெடியாகி வெளியே வந்தாள், கான்டீனில் சமைக்கப்பட்ட சுமாரான டிபன் தரப்பட்டது, அதை வாங்கி சாப்பிட்டு மதியம் டிபனுக்கும் எடுத்துக் கொண்டு புறப்பட்டு வந்து சேர்ந்துவிட்டாள்
இதில் எங்கே அவள் பையை பிரிப்பது, அதனால் இப்போது அவள் பையில் இருந்து ஒவ்வொன்றையும் எடுத்து வைக்கும் போது ஒரு கடிதம் கிடைக்கவே அதை எடுத்துப் பிரித்துப் பார்த்தாள், முதல் லைனை படிப்பதற்குள் அமைதியாக அந்த கடித்தத்தை கசக்கி ஜன்னல் வழியாக தூக்கி எறிந்துவிட்டு மற்ற வேலைகளை கவனிக்கலானாள்,
அதைக்கண்ட கமலிக்கு சலிப்பே வந்தது, ஆனாலும் தன் கையில் கெண்டு வந்திருந்த கடிதத்தை பார்த்துவிட்டு
”இதை இன்னிக்கே அவள் பையில வைக்கனும் வைக்கிறேன்” என நினைத்துக் கொண்டே அவகாசம் எப்போது கிடைக்கும் என ஆவலாக பார்த்தபடி இருந்தாள்
பெல் அடித்தது, வகுப்புகள் நடந்தது, இன்று வாத்தியார்கள் பாடம் நடத்தினார்கள், அதை அனைவரும் கவனமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள், ஆனால் கவினும் கமலியும் பாடத்தில் ஒரு கண், பக்கத்தில் இருப்பவர்களின் மீது ஒரு கண் என வைத்து இருந்தார்கள்.
மதியம் உணவு இடைவேளையின் போது அனைவரும் எழுந்து கான்டீன் நோக்கிச் செல்ல கண்மணி மட்டும் தான் கொண்டு வந்த டிபனை வகுப்பிலேயே அமர்ந்து சாப்பிடலானாள், குணாவோ கான்டீனுக்கு விரைவாகவே சென்றுவிட்டான், பசி வேறு, காலையில் சரியாக சாப்பிடாமல் வந்துவிட அடித்து பிடித்து கான்டீனுக்குள் சென்று ஏதோ பசிக்காக சாப்பாடு வாங்கி சாப்பிட்டு முடித்து வந்தான்.
அந்நேரம் பலத்த காற்று அடிக்க பேப்பர்கள் அங்கு இங்கு பறக்க அதில் குணாவிடம் அவன் கசக்கி எறிந்த கடிதம் வந்து சிக்க அவனோ அதைப் பிரித்து படித்தபடியே வராண்டாவில் நடந்து தன் வகுப்பிற்குள் சென்று தன் இருக்கையில் அமர்ந்தான்
”கண்மணியா யார் இது? பேப்பரை கசக்கி தூக்கி எறிஞ்சும் திரும்பி நம்மகிட்டயே வருது, இங்க போட்டா வீணா மத்தவங்க கையில கிடைச்சி பாவம் அந்த பொண்ணுக்கு ஏதாவது பிரச்சனை வரும், நாம இதை லாட்ஜ்ல இருக்கறப்ப நெருப்பில போட்டு எரிச்சிடலாம் அதுதான் சரி” என நினைத்துக் கொண்டே அதை தன் பையில் பத்திரப்படுத்தினான்.
கண்மணியோ சாப்பிட்டு முடித்து கைகழுவ சென்றாள் அங்கு அவள் தூக்கி எறிந்த கடிதம் காற்றடித்து அவளின் பாதம் முன்பு வந்து விழ அவளோ அவசரமாக கைகழுவிவிட்டு அந்த கடிதத்தை எடுத்துக் கொண்டு தன் இருக்கையில் வந்து அமர்ந்து அதை பிரித்து முழுவதுமாக படித்தாள்
”குணாவா? இந்த பெயரை நான் கேள்விப்பட்ட மாதிரியே இல்லையே, யாரா இருக்கும்? யார்ன்னு கேட்டு கொடுத்துடலாமா இல்லையே, இந்த க்ளாஸ்தானா இல்லை வேற க்ளாஸா? எப்படி இது நம்ம பையில வந்தது? நம்ம பை நம்மகிட்டதான் இருக்கும், அப்பன்னா இந்த க்ளாஸ்லதான் குணா இருக்கான் போல, நேரா அவன்கிட்டயே இதை கொடுத்துடலாம், கொடுத்துட்டு அவனை நல்லா வார்ன் பண்ணிடனும், அப்பதான் திரும்பவும் இதுபோல கடிதம் எழுதி தரமாட்டான், ஆரம்பத்திலேயே கண்டிச்சி வைக்கலாம்” என நினைத்துக் கொண்டே அந்த கடிதத்தை தனது பைக்குள் பத்திரப்படுத்தினாள்.
அவர்கள் செய்ததை அறியாத கவினும் கமலியும் அடுத்த திட்டத்தை செயல்படுத்த முயன்றார்கள்
”கவின் அங்க பாரு குணா லைப்ரரிக்கு போயிருக்கான், சரியான தருணம் டக்குன்னு போய் கடிதத்தை வைச்சிடு போ”
”சரி சரி போறேன், நீ கண்மணியை கவனி“ என சொல்லிவிட்டு அவன் செல்ல கமலியோ கண்மணியையே பார்த்துக் கொண்டிருந்தாள்
இன்று பார்த்து அவள் எங்கும் அசையவில்லை, என்ன செய்வது? ஏது செய்வது? நேரம் வேறு ஓடிக் கொண்டிருக்கிறதே என அவள் பதட்டமாக வகுப்பில் எடுக்கும் பாடத்தைக்கூட கவனியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.
கடைசி பெல் அடிக்கும் சமயம் கண்மணியை வாத்தியார் போர்டில் ஏதோ எழுதி சொல்லி அனுப்ப அவளும் சென்றாள், அவள் போர்டில் எழுதுவதை அனைவரும் தங்களது நோட்டில் எழுதிக் கொண்டிருந்தார்கள், முத்து முத்தான அவள் கையெழுத்தைக்கண்டு அனைவரும் வியந்தார்கள்
அப்படியே புத்தகத்தில் அச்சடிக்கப்பட்ட எழுத்துக்களைப் போல நேர்த்தியாக இருந்தது அவளது கையெழுத்து, அதைக்கண்டு கமலி ஆச்சர்யத்துடன் இருக்க கவின் பார்த்தான், நொந்துப் போய் தனக்கு முன் இருந்த மாணவனிடம் சொல்லி கமலியை தன்னை பார்க்குமாறு செய்யும்படி சொல்ல அவனும் அவனுக்கு முன் இருந்த மாணவனிடம் சொல்ல அவனும் அவனுக்கு முன்பிருந்த மாணவன் என முன்னேறி கமலியிடம் விசயத்தை சொல்லவும் அவள் திரும்பி பார்த்தாள்
கவினோ கோபமாக முறைத்து கடிதத்ததை பையில் போடுமாறு ஞாபகப்படுத்த அவள் உடனே புரிந்துக் கொண்டு அக்கம் பக்கம் சுற்றி முற்றி பார்த்தாள், அனைவரும் எழுதுவதில் முனைப்பாக இருக்கவே சட்டென கடிதத்தை கண்மணியின் பைக்குள் வைத்துவிட்டு நிம்மதியாகி தானும் நோட்டில் எழுதலானாள்.
அனைவரும் எழுதி முடிக்கவும் கண்மணி தன் இடம் வரவும் பெல் அடிக்கவும் சரியாக இருந்தது, அனைவரும் கிளம்பிச் சென்றார்கள், கவினோ கமலியை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினான்
குணாவோ தனது பைக்கில் லாட்ஜை அடைந்தான், அவனுக்கென ஒதுக்கிய அறையில் இவனோடு சேர்த்து மொத்தம் 10 பேர் தங்கியிருந்தார்கள், இவன்தான் மாணவன் மற்றவர்கள் ஏதேதோ வேலைகளை செய்பவர்கள், அவனே தனக்கும் ஏதாவது வேலை வேண்டும், பார்ட்டைம் வேலைக்கு ஆட்களிடம் சொல்லியிருந்தான், அதன்படி அவன் வரவும் அவனுடன் தங்கும் ஒருவன்
”இங்க பார்ட் டைம் வேலைன்னா நிறைய இருக்கு, நீ வேற பைக் வைச்சிருக்க, எப்படி பைக்ல போய் வர்ற மாதிரி வேலை செய்றியா இல்லை கடையில நின்னு வேலை செய்றியா”
”நான் காலேஜ்க்கு வேற போகனும், பைக்ல அலைய முடியாது, ஏதாவது கடையில வேலை இருந்தா பாருங்க, நான் பிஎஸ்சி முடிச்சிருக்கேன், கம்ப்யூட்டர் பத்தி நல்லாவே தெரியும், ஏகப்பட்ட கோர்ஸ் பண்ணியிருக்கேன்“
”வேணா ஒண்ணு பண்ணலாம், கம்ப்யூட்டர் கோர்ஸ் சொல்லிக் கொடுக்கற வேலையை செய்றியா”
”செய்றேன்”
”சரி கிளம்பு வா இப்பவே உன்னை அங்க சேர்த்துவிடறேன்“
”ரொம்ப தூரமா என்ன“
”இல்லைல்ல இங்கிருந்து 2 தெரு தள்ளிதான், அப்புறம் உன்னோட சர்டிபிகேட் எல்லாம் எடுத்துக்க அவங்க கேட்டா தருவ” என சொல்ல அவனோ
”இருங்க நான் குளிச்சிட்டு ரெடியாகி வரேன் இப்படியே என்னைப் பார்த்தா நல்லாயிருக்காது“
”உனக்கென்னப்பா அழகா சினிமால வர்ற ஹீரோ போலதானே இருக்க”
“இருந்தாலும் முதல் நாள் வேலைக்குப் போறேன், கொஞ்சம் நல்லா இருக்கனும்ல அதுக்குதான்”
”சரி சரி சீக்கிரமா வா நான் கீழே வெயிட் பண்றேன்” என சொல்லிவிட அவனும் அவசர அவசரமாக ரெடியாக சென்றான். அரை மணி நேரத்தில் அவன் கிளம்பி மாடல் போல வந்தான் கோட் சூட் அணிந்திருந்தான்
”என்ன தம்பி இது கம்பெனி முதலாளி போல வந்து நிக்கற”
”சொல்லிக் கொடுக்கற வாத்தியார்கள் இப்படித்தான் இருக்கனும் அப்பதான் படிக்க வர்றவங்க மதிப்பாங்க”
”இப்படியே உன்னைப் பார்த்தா கண்டிப்பா வேலை தந்துடுவாங்க சரி சரி சர்டிபிகேட் எல்லாம் எடுத்துக்கிட்டியா”
”எடுத்துக்கிட்டேன்”
”சரி வா போகலாம்” என அவனை அழைத்துக் கொண்டு கிளம்பினான்
பிரபல கம்ப்யூட்டர் கோர்ஸ் சொல்லிக் கொடுக்கும் பயற்சி பள்ளி அது, அதற்குள் இவர்கள் நுழைந்தார்கள், நேராக அதை நடத்துபவரிடம் சென்று நின்றார்கள், குணாவை கண்டதுமே அவருக்கு பிடித்துவிட்டது, அவனது சர்டிபிகேட் தர அதை வாங்கிப் பார்த்து மிரண்டார்
”நல்ல திறமைசாலியா இருக்கியே உன்னைப் போல ஒருத்தனைதான் நான் தேடிக்கிட்டு இருக்கேன், இங்க நிறைய பேர் வர்றாங்க, அதை சொல்லிக் கொடுங்க இதை சொல்லிக் கொடுங்கன்னு கேட்கறாங்க, ஆனா அதைப்பத்தி தெரிஞ்சாதானே சொல்லித்தரமுடியும், இப்போதைக்கு உனக்கு தெரிஞ்சதை நீ சொல்லித்தந்தாலே போதும், சாயங்காலம் 6 மணிக்கு ஸ்டார்ட் பண்ணா 9 மணி வரைக்கும்தான், சம்பளம் பதினைஞ்சாயிரம் போதுமா” என சொல்ல அவனோ சிரிப்புடன் சரியென தலையாட்டினான்
”போக போக ஏத்திக் கொடுங்க சார் பாவம் பையன், விஐடியில படிக்கறான், பீஸ்லாம் கட்டனும்ல” என கூட வந்தவன் சொல்ல அதற்கு அந்த நிர்வாகியோ
”சரிப்பா, குணா சொல்லிக் கொடுக்கறதை வைச்சி நிறைய பேர் சேர்ந்தாங்கன்னா கண்டிப்பா சம்பளம் ஏத்திக் கொடுக்கிறேன் போதுமா”
”ரொம்ப நன்றி“
என சொல்லிவிட்டு குணாவை அங்கேயே விட்டுவிட்டு கூடவந்தவன் கிளம்பிச் சென்றுவிட குணாவும் ஆர்வமாக இருந்தான்
அவனை ஒரு அறைக்குள் கொண்டு சென்று விட்ட நிர்வாகி அங்கு ஏற்கனவே வந்திருந்த மாணவர்களிடம் குணாவை பற்றி சிறியதாக அறிமுகம் செய்துவிட்டு சென்றுவிட குணாவைக்கண்ட பெண்கள் பரவசமானார்கள்
ஆண்கள் அவன் மீது பொறாமைக் கொண்டார்கள், அவர்களின் உணர்ச்சிகளைக்கண்டும் காணாதது போல குணா பாடம் எடுக்கலானான், அவனது ஸ்டைலான பேச்சு, சொல்லிக்கொடுக்கும் விதம், அனைத்தும் அவர்களுக்கு பிடித்துப் போனது, நேரம் சென்றது கூட தெரியவில்லை, 9 மணி ஆகவும் அவன் பாடத்தை நிறுத்த நிர்வாகி உள்ளே வர சரியாக இருந்தது
”என்னப்பா பாடம் எடுத்தியா ஓகேவா“
”ஓகே சார்” என குணா சொல்ல அவரோ அங்கு வந்தவர்களிடம் குணாவை காட்டி
”என்னப்பா வாத்தியார் சொல்லிக் கொடுத்தது புரிஞ்சதா இல்லை புரியலைன்னா சொல்லுங்க ஆளை மாத்திடலாம்” என சொன்னதும்தான் தாமதம் அங்கு இருந்த அனைவரும் ஒரே குரலுடன்
”வேண்டாம்” என கத்த நிர்வாகியே வியந்து கலகலவென சிரித்துவிட்டு குணாவிடம்
”நல்லதுப்பா நீ கிளம்பு நாளைக்கு இதே போல வந்துடு லேட்டா வரக்கூடாது“ என எச்சரித்தார் குணாவும்
”ஓகே சார்” என சொல்லிவிட்டு அவன் வெளியே செல்ல அங்கிருந்த மாணவர்களும் வெளியேறி வந்தார்கள்
குணா அவசரகதியில் அவனது பைக்கில் ஏறிக்கிளம்ப அவனிடம் பேச நினைத்து வந்த மாணவ மாணவிகளுக்கு ஏமாற்றமாகிப் போனது, சரி நாளைக்கு பார்க்கலாம் என நினைத்துக் கொண்டே அவரவர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பினார்கள்.
குணாவும் தனது லாட்ஜ்க்கு வந்து உடையை மாற்றி சாப்பிடச் சென்றான், ரோட்டு கடையோரம் இருந்த தள்ளுவண்டியில் அப்போது என்ன இருந்ததோ அதை சாப்பிட்டு விட்டு மறுபடியும் தன் அறைக்கு வந்தான்
அதற்குள் அறை முழுக்க ஆட்கள் வந்து படுத்து தூங்கவே ஆரம்பிக்க அந்நேரம் குணா மட்டும் தனது இடத்திற்கு வந்து படுக்காமல் படிக்கலானான், அவனது செயலை யாரும் தடுக்கவில்லை, அவனோ மனதுக்குள் படித்துக்கொண்டே பேப்பரை திருப்ப அதில் இருந்து கடிதம் வந்து விழுந்தது அதைக்கண்டு திகைத்தான்
”இது புதுசா இருக்கே நாம கசக்கி போட்டது எங்கே” என நினைத்துக் கொண்டே பையை துலாவி ஒருவழியாக பழைய கடிதத்தை கண்டுபிடித்து எடுத்துப் பார்த்தான்
”என்னது இரண்டு இருக்கு, இது கண்மணியோடது, அப்ப இது” என நினைத்துக் கொண்டே புதிதாக வந்த கடிதத்தை பிரித்துப் பார்க்க அதுவும் கண்மணிதான் எழுதியிருப்பது போல இருக்க மேற்கொண்டு அதை படிக்காமல் அதையும் மடித்து தனது பைக்குள் வைத்துவிட்டு தனது கல்லூரி பாடத்தை படிக்கலானான்.
மறுபக்கம் ஹாஸ்டலுக்கு வந்த கண்மணியோ தன்னுடன் அறையில் தங்கும் பெண்மணியிடம் வேலைக்காக கேட்டுக் கொண்டதால் அந்த பெண் பணிபுரியும் சூப்பர் மார்கெட்டிற்கு இவளை அழைத்துச் சென்றிருந்தார்.
இவளுக்கு கம்ப்யூட்டர் பற்றி நன்றாக தெரியும் என்பதால் அவளை பில் போடும் இடத்தில் அமர வைத்தார்கள், மிகவும் பிசியான நேரம் ஆட்களின் வரவு அதிகம், பில் போட போட ஆட்கள் வர வர நேரம் சென்றது கூட தெரியவில்லை, ஒருவழியாக ஒன்பதரைக்கு வேலை முடிந்ததும் அவளின் வேலை திறமையைக்கண்ட கடை முதலாளியோ அவளிடம்
”பரவாயில்லை சுறுசுறுப்பாதான் இருக்க, சட்டு சட்டுன்னு பில் போடற, தப்பான கணக்கு வராம சரியா இருக்கு, எவ்ளோ சம்பளம் எதிர்பார்க்கற“ என கேட்க அவளோ
”தினக்கூலியா கொடுங்க சார்”
”தினக்கூலியா ஏன்”
”இல்லை நான் காலையில காலேஜ்ல படிக்கப் போறேன் பீஸ் கட்டனும் நிறைய செலவு இருக்கு”
”அதுக்கு மாச சம்பளமா வாங்கிக்க”
“இல்லை சார், சில நாள் பரிட்சை வந்தா நான் லீவு எடுப்பேன், இல்லை காலேஜ்ல ஸ்பெஷல் க்ளாஸ் வந்தாலோ இல்லை ஏதாவது விழா வந்தாலோ லீவு எடுப்பேன், அதனால மாச சம்பளம் எனக்கு ஒத்துவராது உங்களுக்குதான் நஷ்டம், என்னாலயும் அடிக்கடி லீவு கேட்டு உங்ககிட்ட நிக்க முடியாது, அதனால தினக்கூலியாவே கொடுங்க சார், அதுதான் நம்ம இரண்டு பேருக்குமே லாபம்” என சொல்ல அவருக்கு அந்த விசயம் பிடித்திருந்தது
…. தொடரும்
error: Content is protected !!