“அப்படித்தான் பேசுவேன். வாழ்க்கையில படு கேவலமா தோத்துப் போயிருக்கேன். அழகுன்னு நம்பி ஒரு அசிங்கத்தைக் கல்யாணம் பண்ணியிருக்கேன். நான் பேசக்கூடாதா?” அந்த அறையே அதிரும்படி அலறினான்.
“மிஸ்டர்.விக்னேஷ். ஐ வார்னிங் யூ. ஒரு பொண்ணைப் பேசுறதுக்கும் வரைமுறையிருக்கு. நீங்க எல்லை தாண்டுறீங்க. தெரிஞ்சி அவங்க எந்தத் தப்பும் செய்யலையே. அப்படியிருந்தும் ஏன் இப்படி?” பதிலுக்கு சக்தியும் காட்டமாகவே கேட்க…
“அட போங்க டாக்டரம்மா. பொண்ணுங்களைத் தாயாய் மதிக்கிறவன் நான். அதனாலதான் இவளோட வலுக்கட்டாயமா குடும்பம் நடத்தாம, இவளைக் குணப்படுத்தி வாழலாம்னு நினைச்சேன். இவளோட ப்ளாஷ்பேக் அத்தனையும் குப்பை. இவளோட அப்பன் ஊமைப் பெண்ணைக் கூட விட்டு வைக்கலையாம். இவள் பெரிய அண்ணன் வீட்டுக்கே வர்றதில்லை. அவன் அங்க என்னென்ன செய்றானோ யாருக்குத் தெரியும்? சின்ன அண்ணன் பக்கா தண்ணிவண்டி. சின்னது இவளோட தப்புக்கெல்லாம் கூட்டாளி. இவளோட அம்மா பகல்ல வீட்டுலயே தங்குறதில்லையாம். அவ…”
“ஏய்ய்ய்…” என சத்தமிட்டு இருக்கையிலிருந்து எழுந்தவள், “வேண்டாம். என் அம்மா பற்றி தப்பாப் பேசாத. அவங்களை தப்பாப் பேசின கொன்னுருவேன். அவங்க எப்படின்னு உனக்கென்ன தெரியும்? புருஷன் சரியில்லாம பிள்ளைங்களுக்காக மட்டுமே வாழ்றவங்க. பகல் இரவுன்னு இல்லாம விறகு வெட்டிக் கஞ்சி ஊத்தினவங்க. உன்னால அந்த வேலையை ஒருநாள் செய்ய முடியுமா? செஞ்சி பாரு அதுல உள்ள வலி தெரியும். கைகால்ல சின்னதா கீறினாலே ஐயோ அம்மான்னு கத்திக் கதறவோம். அவங்களுக்கு நாளெல்லாம் முள் குத்தும், அருவாள் வெட்டும்தான் மிஞ்சும். இருந்தாலும் வலியைத் தாங்கி நிதமும் போறாங்களே ஏன்? பெத்த பிள்ளைகளுக்காக!”
“உனக்கென்ன டைவர்ஸ்தான வேணும். நான் தர்றேன்” என்றாள் ரௌத்திரம் குறையாது.
கோபமென்றால் என்னவென்று கேட்டவள். இன்றோ கோபத்தின் உச்சத்தில்! அந்த உணர்வையும் அறிந்து கொண்டாளோ!
“அப்ப எப்படான்னுதான் காத்திட்டிருக்க. எப்படி டைவர்ஸ் வாங்கினதும் சாமியாரா ஆகப்போறியா? இல்ல சம்சாரியாவா? அப்படியும் இல்லன்னா தனியா பிசினஸ்… அதான்மா வயசுக்கு வர்றதுக்கு முன்ன பண்ணுனியே அதைப் பண்ணப்போறியா?”
“டேய்ய்ய்!” என்று கன்னத்தில் பளாரென்று மாறி மாறி வைத்து, “உன்னை நல்லவன்னு நினைச்சதுக்குத் தண்டனை தர்றியா? எல்லா ஆம்பளைங்களும் மோசமானவங்கதான்டா. என்னைக் கல்யாணம் பண்ணிக்கோன்னு நானாடா கூப்பிட்டேன். நீங்களே வந்து, நீங்களே பழிபோட்டு… ச்சீய்… நீயெல்லாம் ஒரு மனுஷன். நல்லவேளை உன்னோட வாழலை. அப்படி வாழ்ந்திருந்தா பணத்தை எடுத்துக் குடுத்திருப்ப. ஏற்கனவே என்னைப் பார்த்து அந்த மாதிரிப் பொண்ணுன்னு கேட்டவன்தான நீ” என ஆத்திரம் தீரும் மட்டும் திட்ட…
“நல்லவ மாதிரிப் பேசினா நீ பெரிய பத்தினியாகிருவியா?” இன்னும் வன்மம் குறையாது கேட்டான்.
“ஆமாடா! நான் பத்தினிதான். அதுல உனக்கென்ன சந்தேகம்? அதான் டெஸ்ட் உண்மையைச் சொல்லியிருச்சில்ல. அதுக்கும் மேல என்ன வேணும்?” என்றாள் ஆத்திரம் குறையாது.
இருவருக்கும் இடையில் இடையிடாமல் ருத்ரனும் சக்தியும் வேடிக்கை மட்டுமே பார்த்திருந்தார்கள். சரியோ தவறோ அவர்கள் பேசி முடித்து அதன்பின் தாங்கள் பேசிக்கொள்ளலாம் என்ற எண்ணமே அவர்களிடம்.
“ஹான்! சொல்லிச்சி சொல்லிச்சி. ஆனா ஒரு சந்தேகம்? என்ன சந்தேகம்னு கேட்கமாட்ட. சரி நானே கேட்கிறேன். நான் உன்னைக் கட்டிப்பிடிச்சா முத்தம் கொடுத்தா மூட் வரலையே! அவன் பிடிச்சா மட்டும் வருமா? அதான்மா அந்த சபரி” என்று இன்னுமே அவளின் ஆத்திரத்தைத் தூண்டினான்.
[the_ad id=”6605″]
“அநாவசியமா சபரி மச்சானை இழுக்காத. என்னோட பிரச்சனை என்னோட மட்டும்” என்றாள் கறாராய்.
“அது சரி. ஆமா உன்னைப்பற்றிய உண்மை தெரிஞ்சா அந்த சபரி உன்னைக் கல்யாணம் செய்துப்பான்னு நினைக்கிற? வேணும்னா வச்சிக்கக் கேட்கலாம்” என்றான் நக்கலாக.
“சபரி மச்சான் ஒண்ணும் உன்னை மாதிரி கிடையாது. ஆண்கள்ல விதிவிலக்கா சில நல்லவங்களும் இருப்பாங்க.”
“நீதான் மரத்தமிழச்சியாச்சே! இன்னொரு கல்யாணம் எப்படி முடிப்ப? சோ சேட்னா” என்றான் தோள்குலுக்கி.
“நீ கல்யாணம் முடிக்காம இருக்கப் போறியா என்ன?” அவனின் நையாண்டிப் பேச்சி இப்பொழுது அவளிடம்.
“எனக்கென்ன தலையெழுத்தா? டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பின அடுத்த நிமிஷமே பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிருவேன். என்னோட குடும்பம் நடத்தி குழந்தை பெத்துக்குற பொண்ணா பார்த்து கட்டிப்பேன். நீதான் என்னையே நினைச்சிட்டு காலமெல்லாம் கன்னியாவே இருப்ப. ஏன்னா நீ வளர்ந்த விதம் அப்படி.”
“நான் ஏன்டா உன்னை நினைக்கணும்? கல்யாணம்ன்றது ஒரு பெண்ணுக்கான பாதுகாப்பு வேலியா இருக்கணும். எனக்கது இல்லைன்னு ஆகிருச்சி. இனி அதைச் செய்யாதன்னு சொல்ல உனக்கு உரிமை கிடையாது. நான் கல்யாணம் முடிச்சா உனக்கென்ன? முடிக்கலன்னா உனக்கென்ன? உனக்குத் தேவை டைவர்ஸ் வாங்கிட்டுப் போயிட்டேயிரு.”
“அதேதான். நான் வாங்கிட்டுப் போயிருவேன். நீ என்னை நினைச்சிட்டே காலமெல்லாம் கதறி அழு” என்றான் பல்லைக்கடித்தபடி.
“நான் ஏன் அழணும்? உலகத்துலயே நீ ஒருத்தன்தான் ஆம்பளை கிடையாது. எனக்கானவன் என்னைத்தேடி வருவான்” என்றாள் அவனுக்குப் பதில் சொல்ல வேண்டுமென்று யோசிக்காது.
“ஹா..ஹா இரண்டாயிரத்து இருபதுக்கான ஹாட் ஃபர்ஸ்ட் பெஸ்ட் காமெடி. அப்படியே நீ கல்யாணம் பண்ணிக்கிட்டாலும், உன்னையெல்லாம் ஷோ கேஸ் பொம்மையா வச்சி அழகு பார்க்கலாமே தவிர குடும்பம் நடத்த முடியாது.”
“அதை என்னைக் கட்டிக்கிறவன் முடிவு பண்ணட்டும். இந்த உலகம் ரொம்பச் சின்னது விக்னேஷ். வாழ்க்கையில எப்பவாவது நாம சந்திக்காமலா போகப்போறோம். வருவேன் புருஷன் பிள்ளைன்னு…”
“எது அந்த சபரியோட முதல் பொண்ணா? அதுக்கு ஏன் கல்யாணம் முடிக்கிற?” என அவளை முடிக்கவிடாமல் நையாண்டி செய்ய…
“நான் சொன்னது என் வயித்துல வர்ற குழந்தையை. கடவுள் இருக்கிறது உண்மைனா கண்டிப்பா நாம மறுபடியும் மீட் பண்ணுவோம்… என் ஹஸ்பண்ட் அறிமுகத்தோட” என்றாள்.
“ஓ… அப்ப இப்ப பூவாக்கு என்ன பண்றதா ப்ளான்? நான் சொன்ன…”
“ச்சீய் நிறுத்து. அது என் பிரச்சனை. நான் மியூச்சுவல் டைவர்ஸ்கு சம்மதிக்கிறேன். அதைக்கூட டாக்டர் வச்சி சைன் பண்ணிக்கிறேன். இனி உன் முகத்துலயே முழிக்கமாட்டேன். நீ போகலாம்” என்று அழுத்தமாய் அவனைப் பார்த்தாள்.
“அப்ப தாலி? அதை எப்படி கழட்டுவாய்? நீதான் தமிழச்சியாகிற்றே!” என்று கேலியாய் பார்க்க…
தனக்குள் சில நிமிடப் போராட்டம். கண்மூடியபடியே தாலியில் வைத்த கை நடுங்கினாலும், ‘அவனாவது நினைத்த வாழ்க்கையை வாழட்டும். அதற்கு நாம் ஏன் தடையாயிருக்க வேண்டும்’ என்று வேகமாகக் கழட்டியவள் சட்டென்று டேபிளில் வைத்து, ‘பாவம் செய்ய வச்சிட்டியே கடவுளே!’ என்று கடவுளைத் திட்டி, “எடுத்துட்டு போகச் சொல்லுங்க டாக்டர்” என்றாள் மூடிய விழிகளைத் திறவாமலேயே!
அவனின் “தேங்க்ஸ்” என்ற வார்த்தை மட்டுமே கேட்டது சூர்யோதயாவிற்கு.
“இதோ நடந்து எட்டு மாதங்களுக்கும் மேலாகிருச்சி. நான் வந்ததுக்குப் பிறகு என்ன நடந்ததுன்னு தெரியாது. ஏதோ வெளிமாநிலம் போயிட்டதா கேள்விப்பட்டேன். குறிப்பிட்டு தெரியாது” என்றான் விட்டேத்தியாய்.
“ஆக உன்னோட சுயநலத்துக்காக ஒரு பொண்ணை வீட்டைவிட்டு விரட்டிட்ட?”
“அப்கோர்ஸ்யா!”
“உடல் தேவை மட்டுமே வாழ்க்கையாடா?” என்றான் காட்டமாகவே.
“இல்லையா பின்ன. ஏன் நீ அது இல்லாம இருந்திருவியா? கல்யாணம் முடிச்சதும் குடும்பம் நடத்திக் குழந்தையும் பெத்துக்கிட்டதான? உனக்கொரு நியாயம் எனக்கொரு நியாயமா? இது எந்த ஊர் நியாயம் ஆபீஸர்?” என்று விஷமமாகக் கேட்க…
“எங்களுக்குத் தெரிவிச்சிருக்கலாமேடா. பூவைக் கசக்கித் தூக்கியெறிஞ்ச மாதிரி அவள் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கி வச்சிருக்கியே. ஒரு போன் செய்திருந்தா என் தங்கை வீட்ல கூட இருக்கச் சொல்லியிருப்பேன். இப்ப எங்க அத்தைக்கு என்ன பதில் சொல்றது? சமீபமா போன் பண்ணும் போதெல்லாம் நீ ஏதேதோ காரணம் சொல்லி மழுப்பியிருக்க. இதை எப்படி அவங்களால ஜீரணிக்க முடியும்?”
“நான் எதுவும் செய்ய முடியாது. அவளைத் தேடிப்பிடிச்சி கல்யாணம் பண்ணிக்கோ. இல்லையா, உன் பொண்ணுக்கு ஆயா வேலைக்கு வச்சிக்கோ. அதுக்கும் அவள் ரெடியாதான் இருப்பா. இல்லன்னா…” என்று நிறுத்த…
“உன் நேரம் நீ பேசுற. அவள் மட்டும் கிடைக்கலைன்னு வச்சிக்க. உன் குடும்பத்தையே இல்லாமல் பண்ணிருவேன்” என்றான் மிரட்டலாய்.
“பார்றா! அவங்க இவருக்காக உருகுவாங்களாம்! இவர் அவங்களுக்காக எங்களை அழிச்சிருவாராம்! நல்லா நடிக்கிறீங்கடா ரெண்டு பேரும். அவளைப் பார்த்துட்டனா என்கிட்ட கல்யாணம் செய்துக்கப் போறதா போட்ட சபதத்தை முடிச்சிட்டாளா கேட்டுச் சொல்லு?”
“ரொம்பச் சீண்டுற விக்னேஷ். முதல்ல உதயா கிடைக்கட்டும். நாங்க எப்படி வாழ்றோம்ன்றதை நாங்க முடிவு செய்துக்கறோம். அன்ட் இந்தப் பொண்ணையாவது கைவிட்ராத. குட் பை.”
“இப்ப ஹாஸ்பிடல் வர என்னோட உதவி தேவையில்லையா?”
[the_ad id=”6605″]
“இப்பன்னு இல்லை எப்பவும் உன் உதவி தேவையில்லை. அந்த ஹாஸ்பிடல்ல நானே போய் விசாரிச்சிக்கிறேன்” என்று நடந்த சென்றவன் திரும்பி வந்து, “ஏதோ ஒண்ணு குறையுது விக்னேஷ். சாரி மறந்துட்டேன்” என்று தன் வேகம் முழுவதையும் கைக்குக் கொடுத்ததில் விரல்கள் ஐந்தும் சத்தத்துடன் அவன் கன்னத்தில் பதிய, “இனி உதயாவைப் பற்றித் தப்பா பேசின கொன்னுருவேன்” என விரல் நீட்டி மிரட்டிச் சென்றான்.
விக்னேஷின் மனைவியோ கண்ணீர் வழிய கன்னம் தடவிவிட்டாள். சரி தவறு என்றில்லை. அவளைப் பொருத்தவரை அவள் கணவன் சொல்வது செய்வது அனைத்திலும் உடனிருப்பதில் ஒரு சுகம். ஏனெனில் அவளுக்கு அவன்மேல் அவ்வளவு நேசம்.
துர்கா ஹாஸ்பிடல் நெட்டில் தேடி ஒன்பது மணிக்கெல்லாம் ஹாஸ்பிடலில் ஒரு அப்பாய்ண்ட்மெண்ட் போட்டு அமர்ந்துவிட்டான் சபரி. எதுவுமே புரியவில்லை அவனுக்கு. ‘ஒருமுறை பார்த்த என்மேல் காதலா? அப்பொழுது அதற்கான வயதும் அவளுக்கு இல்லையே. அதிலும் கல்யாண மாப்பிள்ளையாகதானே சந்தித்தேன். எப்படி நிகழ்ந்தது இம்மாற்றம்? இது ஏன் விக்னேஷின் புரளியாக இருக்கக்கூடாது’ என்று ஒரு மனம் நினைக்கத்தான் செய்தது. “எங்கயிருக்க வெள்ளச்சி? வீட்டுக்கு என்ன பதில் சொல்வேன். முதல்ல நீ நல்லாயிருக்கிறன்னு தெரிஞ்சாலே மனசு நிம்மதியாகும்.”
கைபேசியை எடுத்து தன் அத்தையை அழைத்து நடந்ததைச் சொல்ல, அவரோ அதிர்ச்சியில் மயக்கம் போட்டுவிட்டார். சில நிமிடங்கள் கழித்து ரவியிடமிருந்து போன் வர, “அத்தைக்கு என்னாச்சி?” என்று பதற்றமாகக் கேட்டான்.
“இப்பப் பரவாயில்லை மச்சான். என்னென்னவோ சொல்லிப் புலம்புறாங்க. வெள்ளச்சிக்கு என்னாச்சின்னு சொல்லுங்க?”
“ஒண்ணும் புரியலடா” என்று விக்னேஷ் தன்னிடம் சொல்லியதைச் சொல்ல… அதைக் கேட்டிருந்தவனுக்கோ கோபம் உச்சத்தில் ஏறி, “அவனை அப்படியேவா விட்டுட்டு வந்தீங்க?” என்றான்.
“கோபப்படுற நேரமில்லடா. நமக்கு நம்ம வீட்டுப்பொண்ணு கிடைக்கணும். அப்புறம் கவனிச்சிக்கலாம் அவனை” என்றான் கோபத்தை அடக்கி.
“இப்ப எங்கன்னு மச்சான் அவளைத் தேடுறது?”
“நான் விசாரிச்சிட்டு போன் பண்றேன். நீ அத்தையைப் பார்த்துக்க. பூவரசி அத்தை வீட்டுக்கு இப்போதைக்குச் சொல்ல வேண்டாம். அவளைக் கண்டுபிடிச்ச பிறகு பார்த்துக்கலாம்” என்று போனை வைத்து, “எங்கமா இருக்க? எனக்கு ரொம்ப உறுத்தலாயிருக்கு. நீ என்கிட்ட வந்திரு. உன்னை பத்திரமா பார்த்துக்கறேன்” என்று வாய்விட்டே புலம்பினான்.
“சார்.. சார்” என்று இரண்டு மூன்று முறை அழைத்த பின் நிமிர்ந்து பார்த்தவனிடம், “உங்களை டாக்டர் கூப்பிடுறாங்க” என்றதும் சுயநிலை அடைந்தவன், “தேங்க்யூ” என்று உள்ளே அனுமதி கேட்டுச் சென்றான்.
“உட்காருங்க சார். என்ன பிரச்சனை? இது கைனகாலஜிஸ்ட் ஏரியா? தனியா வந்திருக்கீங்க. உங்க ஒய்ஃப் வரலையா?”
“டாக்டர் நான் சபரி. சூர்யோதயாவோட மச்சான்.”
“சூர்யோதயா! ஹ்ம்… யா..யா தெரியுது சொல்லுங்க?”
“அவங்க எங்க இருக்காங்கன்னு தெரிஞ்சா சொல்லுங்க டாக்டர்?”
“சாரி சார். உங்களை இதுக்கு முன்ன தெரியாது. எதை நம்பிச் சொல்றது?”
“டாக்டர் ப்ளீஸ். என் பெயர் சபரிநாதன். இது என்னோட விசிட்டிங் கார்ட். என் தங்கை இங்க திருவெற்றியூர்லதான் இருக்கிறா. இது அவளோட ஹஸ்பண்ட் கார்ட்” என்று கொடுத்து, “சூர்யோதயா என் அத்தை பொண்ணுதான். ப்ளீஸ் டாக்டர் என்ன நடந்ததுன்னு சொல்லுங்க? ஒரு பொண்ணா அவளுடைய கஷ்டம் உங்களுக்குப் புரிஞ்சிருக்கும். அவளுக்கு இந்த உலகத்தை முழுசா தெரியாது டாக்டர். அவள் என்ன கஷ்டப்படுறாளோன்னு நினைச்சாலே மனசெல்லாம் பயமாயிருக்கு. அந்த விக்னேஷைக் கேட்டா என்னையும் அவளையும் சேர்த்து வச்சி… மனுஷனா டாக்டர் அவன்.” கோபத்தில் இன்னும் என்ன சொல்லியிருப்பானோ…
“மிஸ்டர்.சபரிநாதன் அமைதியா இருங்க. இந்தப் பிரச்சனை நடந்து எட்டு ஒன்பது மாசமாகுது. இத்தனை நாள் ஏன் யாருமே தேடலை? அன்பு இருந்திருந்தா முன்னாடியே வந்திருக்கணுமே? அந்தப் பொண்ணோட அம்மாவுக்குக் கூடவா அக்கறையில்லாமல் போயிருச்சி?” என்று அவர்கள் மேலுள்ள கோபத்தை சபரியிடம் காட்டினாள் பிரம்மசக்தி.
“இப்படி நினைக்கலையே டாக்டர். விரும்பிக் கட்டிக்கிட்டவன் நல்லா பார்த்துப்பான்னு இருந்தோம். போன் பண்ணும் போதெல்லாம் ஏதோ ஒரு காரணம் சொல்லியிருக்கான். ஆனா, அவங்களுக்குள்ள நான் எப்படி டாக்டர்? எனக்கு அதான் புரியவேயில்லை.”
“சூர்யா உங்களைக் காதலிக்கிறது நிஜம். அதை அவங்க துளிகூட உணராதது அதைவிட நிஜம். என்ன இதை விக்னேஷ் பெருசுபடுத்தி இங்கேயே விட்டுட்டுப் போயிட்டார்” என்று நடந்ததைச் சொல்ல…
அதிர்ச்சியில் கலங்கிய மனதை அடக்கி, “நீங்க சொல்றது நிஜமா டாக்டர்?” என்றான்.
“பொய் சொல்லி எனக்கு என்ன லாபம் சார். அவங்க உங்களை விரும்புறது உண்மைதான்.”
“இப்ப எங்கயிருக்கா டாக்டர்?” என்றதும் அவள் இருக்குமிடம் சொல்ல… “மொழி தெரியாத இடத்துல எப்படி டாக்டர்? ரொம்பக் கஷ்டப்பட்டிருப்பாளே. இங்கேயே எதாவது பார்த்திருக்கலாமே?”
“இந்த அட்மாஸ்பியர் மாறணும்னுதான் அங்க அனுப்பினோம். மாற்றங்கள் அவள் மனசுக்கு மட்டுமில்ல உடலுக்கும்தான்.”
“இப்ப எப்படியிருக்கா டாக்டர்?”
“நீங்களே போய்ப் பார்த்துக்கோங்க. இதான் அட்ரஸ்” என்று சூர்யாவின் அட்ரஸ் கொடுக்க… “தேங்க்யூ டாக்டர். கடவுள் மாதிரி நீங்க செய்த இந்த உதவியை என்னைக்குமே மறக்கமாட்டேன்.”
நன்றி சொல்லி வாசல் சென்றவனை, “மிஸ்டர்.சபரி” என்ற சக்தியின் குரல் நிறுத்தி அவன் திரும்பியதும், “நீங்க சூர்யாவை லவ் பண்றீங்களா?” என்க.
[the_ad id=”6605″]
“உங்ககிட்டப் பேசுறதுக்கு முன்ன வரை அப்படி ஒரு எண்ணம் இல்ல டாக்டர். இப்ப அந்த லவ் இருக்கு” என்றான் புன்னகையுடன்.
“பெஸ்ட் ஆப் லக்.”
“தேங்க்யூ டாக்டர்” என்று புன்னகையுடன் விரைய… சக்தியினுள்ளும் புன்னகையே!
மும்பை ஃபில்ம் சிட்டி:
கையில் செல்போன் உரையாடலுடன் தோளில் சின்னதாக லெதர் பேக். தளரப்பின்னிய முடியை க்ளிப் போட்டு கட்டுப்படுத்தி, வெள்ளையும் சிகப்பும் கலந்த சுடிதாரில் சில பெண்களே கூட அவளை ரசித்துச் செல்ல… நடைமேடையில் நடைபோட்டுக் கொண்டிருந்தாள் சூர்யோதயா!