12
காலை நான்கு மணிபோல் சபரிக்கு முழிப்பு வர, சோம்பல் சற்று அதிகம் இருந்த போதும் காய்ச்சல் மட்டுப்பட்டிருந்தது. இரவு நடந்தது நினைவு வர ‘தான் எப்படி கட்டிலில்?’ என்று விழித்தவன் முழுதாய் லாக் செய்யாமலிருந்த கதவைப் பார்த்துத் திரும்ப, “வெள்..ள..ச்சி” என வாய் முணுமுணுத்தது.
சாய்ந்த வாக்கில் தலைசரித்து கால் நீட்டி அமர்ந்தபடியே தூங்கியிருந்தவளை என்ன செய்வதென்று தெரியவில்லை. இரவு அவ்வளவு காய்ச்சலிலும் லாட்ஜின் சுற்றுப்புறம் அறிந்திருந்தான். சற்று மட்டமான லாட்ஜ் என்பது ஒரு சில ஜோடிகளைப் பார்த்ததுமே புரிந்தது. அதிலும் காலையில் வம்பு செய்த முத்துகுமார் ஒரு பெண்ணைக் கூட்டிச் சென்றதையும் பார்த்தான். அவன் இவர்கள் தனியாக இருப்பதைப் பார்த்துவிடக் கூடாதென்றுதான் அவளை அவசரப்படுத்தி அனுப்பியது.
‘திரும்பவும் எப்பொழுது வந்தாள்? நல்லவேளை போலீஸ் ரெய்ட் என்று எதுவும் நேற்றிரவு வரவில்லை’ என மூச்சை இழுத்துவிட்டுப் பல் தேய்த்து முகம் கழுவி வந்தவன், “உதயா எழுந்திரு” என்று மெல்லத் தோள் தொட… யாரோ தன்னைத் தொடும் உணர்வில் உடலில் எதிர்ப்புடன் சட்டென்று விழித்து நகர… “ஹேய் நான்தான்மா உன் மச்சான்” என்றான்.
ஊப் என்று காற்றை வெளியிட்டு, “பயந்தே போயிட்டேன். எப்ப எழந்திருச்சீங்க? இப்ப உடம்புக்குப் பரவாயில்லையா?”
“இப்ப நார்மல்தான். நீ ஏன் இங்க உட்கார்ந்திருக்க? உன்னைதான் ஆட்டோ ஏத்தி அனுப்பினேன்ல?”
“நீங்க நல்லாயிருந்தா வந்திருக்கமாட்டேன். அதிக காய்ச்சல்ல வாமிட் செய்து சோர்ந்து போய் இருக்கிற உங்களை விட்டுட்டுப் போக மனசாட்சி இடம் கொடுக்கலை மச்சான். அதான் தெரு தாண்டிப் போயிட்டு வந்துட்டேன். உள்ள வந்தா சுயநினைவில்லாம கிடைக்குறீங்க. அப்படியே விட்டுட்டுப் போகச் சொல்றீங்களா? கீழ ரிசப்ஷன்ல போய் அங்கிருந்த பையனைக் கூட்டிட்டு வந்து உங்களைத் தூக்கிப் படுக்க வச்சோம்.”
“சரி நீ உடனே கிளம்பு.”
“எங்க?”
“உன் ஹாஸ்டலுக்குதான்.”
“ஏன் அவ்வளவு அவசரம்? விடிஞ்சதும் கிளம்பலாம். முதல்ல நீங்க ரெஸ்ட் எடுங்க.”
“ஐயோ! நான் எடுத்த ரெஸ்டெல்லாம் போதும் தாயே. நீ எழுந்திரு” என்று தான் எழுந்து அவளுக்கும் கைகொடுக்க…
கை பிடிக்காமல் தானே எழுந்தவள், “ஏதோ ப்ளைட் மிஸ் பண்ணப்போற பயணி மாதிரி, எதுக்கு அவசரப்படுறீங்க தெரியல?” அங்கு ஓரமிருந்த ஹேண்ட் பேக்கை எடுத்து, “நான் போறேன். நீங்க இங்கயே ரெஸ்ட் எடுங்க” என்று வாசல் சென்றவள் திரும்பிப் பார்த்து, “ஊருக்குப் போய் போன் பண்ணுங்க மச்சான்” என்று சொல்லித் திரும்பி எட்டெடுத்து வைக்க… திபுதிபுவென இரண்டு பெண் போலீஸ் உட்பட ஆறு போலீஸ் அங்கே.
[the_ad id=”6605″]
எல்லா அறைக்குள்ளும் உள்ள ஆண் பெண்களை அள்ளியெடுக்க, இவர்கள் அறையில் சூர்யாவின் எதிரில் வந்து நின்றார்கள்.
அவளோ பயந்து நிற்க… ‘ஏன் போகாம நிற்கிறா?’ யோசனையுடன் அவளை நெருங்கி வந்த சபரி போலீஸைக் கண்டதும் வந்த அதிர்வை மறைத்து, “சார் ஏன் இங்க நிற்கிறீங்க? நீ இன்னும் போகலையா உதயா?” என்றான்.
“இதோங்க” என்று நகரப்பார்க்க…
“அவசரமா எங்க போறீங்க ஜி?” என்று அவளை நிறுத்தினார்கள்.
“என்ன சார் வேணும்?” என அமைதியாகவே கேட்டாள்.
“கையும் களவுமா மாட்டிட்டு அப்பாவியா நடிக்கிற நிறைய கேஸ்களைப் பார்த்திருக்கோம். பிகு பண்ணாம வண்டியில ஏறுறீங்களா?”
“என்னது கேஸா? சார் நீங்க தப்பா…”
“தப்பான இடத்துல தப்பாதான் பேச முடியும். வண்டியில ஏத்துங்க” என்று இன்ஸ்பெக்டர் உத்தரவிட…
அப்பொழுதுதான் சபரியைப் பார்த்தாள். ‘இதற்குத்தான் என்னை விரட்டினாயா’ என்ற பார்வை அது.
அனைவரையும் வண்டியில் ஏற்ற அவர்களுடன் செல்ல மறுத்து நின்ற சபரி-சூர்யாவின் முகத்தில் கேமரா ப்ளாஷ் அடிக்க சட்டென்று முகம் மறைத்து சபரியின் பின்னால் நின்றாள்.
அவளின் உடல் நடுக்கமே அவளின் பயத்தைச் சொல்ல, “இன்ஸ்பெக்டர் ஒரு போன் பண்ணிக்கிறேன்” என்றவன் முகத்தில் ஓங்கி அடித்திருந்தார் அந்தப் போலீஸ்.
“ஏன் சார் அடிக்கிறீங்க? நாங்க எந்தத் தப்பும் செய்யல.”
சபரிக்காக கேள்வி கேட்டுத் தன் முன்னால் நின்ற சூர்யாவை கேவலமாகப் பார்த்து, “யோக்யம் மாதிரிப் பேசுறியா?” என்று கையை ஓங்க… அவர் கையைத் தடுத்துப் பிடித்தவன், “என்ன நடந்ததுன்னு விசாரிக்காம தண்டனை கொடுக்காதீங்க” என்றான்.
“இந்த அசிங்கத்தை விசாரிக்க வேற செய்யணுமா?”
“விசாரிக்கணும் சார். சரியோ தப்போ என்ன நடந்ததுன்னு விசாரிக்க வேண்டியது உங்க கடமை” என்று எதிர்த்து நின்றான்.
“எனக்கே கடமை சொல்லித் தர்றியா?”
அந்நேரம் அவர்களுடன் பிடிபட்ட… இரவில் அவர்களுக்கு உதவிய பையன், “சார் அவங்க மத்தவங்களை மாதிரி கிடையாது. சாருக்கு உடம்பு சரியில்லன்னு வேற இடம் கிடைக்காமல்தான் இங்க வந்தாங்க.”
“ஆமா சார். வேணும்னா நேத்து பார்த்த டாக்டர். ஆட்டோ டிரைவர் சாட்சிக்கு இருக்காங்க.”
“எல்லாம் ப்ளான்லதான் வந்திருக்கீங்க போல” என நக்கலாகக் கேட்க…
“சார் எல்லாம் நிஜம். இன்னுமே இவங்க ஹெல்த் சரியாகலை” என்றாள்.
“அப்படியா? பார்த்தாத் தெரியலையே? எதுவாயிருந்தாலும் ஸ்டேஷன்ல வந்து பேசுங்க.” அவரும் பிடிவாதமாக நிற்க…
“உதயா ஏறுமா. ஸ்டேஷன்ல போய்ப் பார்த்துக்கலாம்” என்றான் சபரி.
“போலீஸ் ஸ்டேஷனா? இல்ல மச்சான் நான் வரமாட்டேன். நீங்க ருத்ரன் அண்ணாவுக்கு போன் பண்ணுங்க” என்றாள்.
‘இவங்க சரிப்படமாட்டாங்க’ என நினைத்த இன்ஸ்பெக்டர் லேடி கான்ஸ்டபிளுக்கு கண்ணைக்காட்ட அவர்கள் சூர்யாவை இழுத்துப்போக… அவளோ கண்ணீர் வழிய சபரியைப் பார்க்க… ‘நான் பார்த்துக்கறேன் போ’ என்று கண்களால் சொல்ல அழுத ஈர விழிகளுடன் சம்மதித்து ஏறினாள்.
ஏனோ விபச்சாரிகளுடன் தன்னை ஒப்பிட்டுப் பேசின விக்னேஷ் நினைவு வந்தான். இதோ அதேபோல் பெண்களுடன் ஒரே வண்டியில். தன் நிலையை எண்ணி மனம் குமைந்தது அவமானத்தில்.
போலீஸ் ரைடில் முத்துகுமார் மட்டும் எஸ்கேப் ஆகியிருக்க. அவனுடன் வந்த பெண் மட்டும் சிக்கியிருந்தாள்.
[the_ad id=”6605″]
ஸ்டேஷன் வாசலில் இறங்கி உள்ளே வர மறுத்த சூர்யாவிடம் வந்த அப்பெண், “ஏன்மா உனக்கும் அந்தத் தமிழ்நாட்டுக்காரனுக்கும் எதாவது பிரச்சனையா?” எனக்கேட்டாள்.
“ஜி” என நிமிர்ந்தவள், “யா..யாரைச் சொல்றீங்க?” என்றதும், முத்துகுமாரின் அங்க அடையாளங்களைச் சொல்லி “நைட் என்னோடதான் இருந்தான். லாட்ஜ் வாசல்ல உங்களைப் பார்த்தவன் யாருக்கோ போன் பண்ணி ரொம்ப நேரமா அவர் இருந்த அறையைப் பார்த்துட்டிருந்தான்” என்று சபரியைக் காண்பித்து, “நடு ஜாமத்துல ஒரு டைம் அந்த ரூம்கு வந்து பார்த்துட்டு வந்தவன் திரும்பவும் போன் செய்தான். அனேகமா இந்த ரைடே உங்களுக்காகத்தான்னு நினைக்கிறேன்” என்று தனக்குத் தெரிந்ததைச் சொன்னாள்.
“எங்களுக்காகவா? அவன் ஏன் என்னை… மச்சான் அடிச்சதுக்காகவா? எங்கேயோ ஒரு மூலையிலுள்ள கிராமத்தில் வளர்ந்தவன் இந்தளவு யோசிப்பானா? அவன் பேசின ஆள் யார்? ஏன்டா என்னை நிம்மதியா இருக்க விடமாட்டீங்களா?”
“என்னாச்சி உதயா? ஏய்! ஏன் கலங்கிப்போற? நான் இருக்கேன் சொன்னேன்ல?”
“அ..அந்த முத்துகுமார் நம்மளை ப்ளான் பண்ணி சிக்க வச்சிருக்கான் மச்சான்.”
“நான் அடிச்சதுக்காகவா?”
“தெரியல மச்சான். அப்ப நம்மளை விடமாட்டாங்களா? தப்பான பொண்ணுன்னு பேப்பர்லலாம் வருமா? அம்மாவுக்குத் தெரிஞ்சா… ஐயோ! எங்கம்மா எக்காரணம் கொண்டும் என்னைத் தப்பா நினைக்கக்கூடாது மச்சான். அப்படி ஒண்ணு நடந்தா நான் உயிரோடவே இருக்கமாட்டேன்” என்று அழ ஆரம்பிக்க…
“உதயா வாயை மூடு. இன்னும் கொஞ்ச நேரத்துல போயிரலாம். நாம வந்த ஆட்டோ நம்பர் தெரியுமா?”
“அந்த டிரைவரோட நம்பர் என்கிட்டயிருக்கு மச்சான்.”
“நல்ல வேலை செய்திருக்க. முதல்ல அதை எனக்கு மெசேஜ் பண்ணு” என்றதும் தன் செல் எடுத்து வேகமாக அனுப்பி ஹேண்ட் பேக்கில் வைத்தாள்.
“உள்ள என்ன நடந்தாலும் கண்டுக்காத. நம்ம வாயிலயிருந்து அவங்களுக்குத் தேவையான பதிலை வாங்கப் பார்ப்பாங்க. ஜாக்கிரதையாயிரு” என்றான்.
தப்பு செய்ததாக ஒத்துக்கொண்ட அனைவரையும் செல்லில் போட்டு, மறுத்த இவர்கள் இருவரையும் நிறுத்தி வைத்து, “ஆக தப்புப் பண்ணினோம்னு ஒத்துக்கிட்டு சைன் பண்ணமாட்டீங்க?”
“எங்களை அரஸ்ட் பண்ணச்சொல்லி ஓவர் பிரஸரா சார்?” கேலியாகவே கேட்டான் சபரிநாதன்.
“தெரிஞ்ச மாதிரி பேசாதீங்க. முடிஞ்சா நிரூபிச்சிட்டுக் கிளம்புங்க” என்று அவன்மேல் பாய்ந்தார் இன்ஸ்பெக்டர்.
“ஒரு கால் பண்ணிக்கிறேன் இன்ஸ்பெக்டர்” என்றதும் குனிந்து பைல் பார்த்தபடி சம்மதமாக கையை அசைக்க, தன் லீகல் லாயரை அழைத்தவன் சொல்ல வேண்டியதைச் சொல்லி செய்ய வேண்டியதைச் செய்ய, அடுத்த ஒரு மணிநேரத்தில் சபரிக்கு ட்ரீட்மெண்ட் எடுத்த டாக்டரும், ஆட்டோ டிரைவரும் சாட்சியாக நின்றார்கள்.
“ஏன் சார் உடம்பு சரியில்லாதவரை இப்படியா ட்ரீட் பண்ணுவீங்க? நேத்து நைட் நூற்றினாலு டிகிரி காய்ச்சல் சார். ட்ரிப்ஸ் ஏத்தியும் நிற்கக்கூட முடியாமல் இருந்தார். வேணும்னா அவர் கையில சலைன் ஏற்றி அகற்றின பேண்டேஜ் இருக்கு பாருங்க” என்றவர், “ஹாஸ்பிடல்னா ரெண்டு நாள் பெட் ரெஸ்ட் எடுக்கச் சொல்லியிருப்பேன். அவர் உடல்நிலை அந்தளவு மோசமாயிருந்தது. இப்பக்கூட அவர் ஒய்ஃப்காகதான் தன்னைப் பார்த்துக்காம நிற்கிறார். ஒய்ஃபாவே இருந்தாலும் இந்த மாதிரி நேரத்துல, இப்படி ஒரு தப்பு… எப்படி சார்? கொஞ்சம் யோசிங்க?” என்று இன்ஸ்பெக்டரிடம் கேள்வி கேட்டு சூர்யாவிடம் திரும்பியவர்… “மிஸஸ்.சபரிநாதன் நீங்க ஏன்மா ரூம் பிடிச்சீங்க?” என்றார் ஆதங்கமாய்.
டாக்டரின் ஒய்ஃபிலேயே ஓய்ந்து போய் நின்றவளை ஒரு பார்வை பார்த்த சபரி, “அப்படியில்ல டாக்டர். இங்க ஹாஸ்டல்ல தங்கிதான் வேலைக்குப் போறா. நான் பார்த்துட்டுப் போகலாம்னு வந்த இடத்துலதான் ஃபீவராகிருச்சி. இந்த லாட்ஜ்ல மட்டும்தான் ரூம் இருந்தது. அப்பக்கூட இவளை ஹாஸ்டலுக்கு அனுப்பி வச்சேன். ஆனா, என்னை இப்படி விட்டுப்போக மனசில்லாமல் திரும்ப வந்துட்டா.”
“ஆமா சார். தீதி திரும்ப வரும்போது சார் மயக்கம் போட்டு விழுந்துட்டார். நான்தான் அவரை கட்டில்ல படுக்க வைக்க ஹெல்ப் பண்ணினேன்” என்று அவர்கள் மேல் தவறில்லையென்று திரும்பவும் சொன்னான் லாட்ஜில் வேலை செய்யும் பையன்.
“நான்தான் சார் வேற லாட்ஜ் கிடைக்காம இங்க விட்டேன். இப்படின்னு தெரிஞ்சிருந்தா என் வீட்டுக்குக் கூடக் கூட்டிட்டுப் போயிருப்பேன்” என்று ஆட்டோ டிரைவர் சாட்சி சொன்னான்.
[the_ad id=”6605″]
அந்நேரம் வெளியே நின்றிருந்த கான்ஸ்டபிள் முத்துகுமாரை இழுத்து வந்து, “சார் ஸ்டேஷன் வெளியில நின்னு உள்ளேயே பார்த்திட்டிருந்தான். என்னன்னு கேட்டா சரியான பதிலில்லை. நீங்க கேளுங்க சார்” என்றார்.
“யார் நீ? இங்க என்ன பண்ற?”
“சார் இவன்தான் என்னை லாட்ஜ்கு கூட்டிட்டுப் போனது” என ஆரம்பித்து சூர்யாவிடம் சொல்லியதை அப்படியே சொன்னாள் அப்பெண்.
முத்துகுமாரிடம் வந்த சபரி, “யார் சொல்லி இதெல்லாம் செய்த?” எனக்கேட்க…
“நான் எதுவும் செய்யலை.”
“மாட்டிக்கிட்ட பிறகும் தப்பிக்கலாம்னு நினைக்காதடா. யாருக்காக? எதுக்காக செய்த?”
“நீ கேட்டா நான் சொல்லணுமா?” என்றான் திமிராக.
“அப்ப நான் கேட்கிறேன். சொல்லு? சொல்லுடா? சொல்லப் போறியா இல்லையா? யார் உன்னை தூண்டிவிட்டது?” என்று அவனை அடிக்க ஆரம்பித்தாள் சூர்யா.
‘எவ்வளவு இன்னொசன்ட்டான பொண்ணு உதயா. இப்படி அவளை…’ பெண்களுக்கு இந்த ரௌத்திரமும் இருக்க வேண்டுமென்பது சபரியின் எண்ணம். அவளின் கோபத்தை ஆதரித்து அடிக்கவிட்டு வேடிக்கை பார்த்திருந்தான் சபரிநாதன்.