Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

03. சிவயாழினி - மௌனமாய் ஒரு மோகனம்

மெளனம் 30

சின்னபொண்ணு இன்டர்வியூ முடித்து வந்ததும் வசீகரன் மனைவியின் முகத்தை ஆராய்ச்சியாக பார்த்தான். அவள் முகத்தில் தெரிந்த தன்னம்பிக்கையில் அகம் மகிழ்ந்தவன் கைகளை கட்டிக்கொண்டு அவளின் முழு உருவத்தையும் கண்களால் விழுங்கினான். வசீகரனின் வசியப்பார்வையில் முகம் சிவக்க அவன் முன்னால் வந்து நின்றாள். அவன் அசையாமல் அவளை பார்வையால் உருக்கிக் கொண்டிருந்தான். 
அனலில் உருகும் நெய்யாக அவள் மனம் அவன் பார்வையில் கரைய, “ஏன் மாமு சிலை மாதிரி நிக்கறீங்க? இன்டர்வியூல நான் எப்படி பண்ணேன்னு கேக்கவே இல்லையே?” மெல்லிய குரலில் சிணுங்கலுடன் கேட்டாள். 


Advertisement

செல்ல குட்டி உன்ன காண
சிலையாக நிக்குறன் வாடி

Advertisement

அள்ளிகிட்டு போகப் போறன்

Advertisement

அழகா  நீ உன்னையும் தாடி
மனதிற்குள் அவளை அள்ளி தின்னும் பேராவல் கொண்டவன், “நீ நல்லா பண்ணியிருப்பேனு உன் முகத்தை பாத்தாலே தெரியுது சின்னு. உன்னோட ஒரு கனவை நிறைவேத்திட்டேன், இன்னொரு கனவையும் உடனே நிறைவேத்தணும்”

Advertisement

“என்ன கனவு?” என்று அவள் யோசிக்க, அவளை அழுத்தமாக பார்த்துவிட்டு காரில் அவளை அழைத்துக் கொண்டு ஆக்ராவில் தாஜ்மஹாலை சுற்றிக் காட்டிவிட்டு அன்றிரவு யமுனை நதிக்கரையை ஒட்டியிருந்த ரிசார்டில் மனைவியுடன் தங்கினான். அங்கே இருந்த பால்கனியில் சின்னபொண்ணு காதலின் சின்னமான தாஜ்மஹாலையும் யமுனை நதிக்கரையையும் ரசித்து பார்த்திருக்க, வசீகரன் தன் சின்னுவை பார்வையால் விழுங்கி கொண்டிருந்தான்.
“மாமு, தாஜ்மஹாலை பாக்கணும்னு நான் உங்க கிட்ட கேட்டதேயில்லயே, இதையா இன்னொரு கனவுனு சொன்னீங்க?” என்றாள் ஜன்னல் கம்பியில் சாய்ந்து இயற்கை அழகை ரசித்தவாறு
அவளை பின்னாலிருந்து அணைத்தவாறு நின்றவன், “உன்னோட இன்னொரு கனவு நம்ம பர்ஸ்ட் நைட்ல உனக்கு வந்தது, அத தான் நிறைவேத்த போறேன்” என்றதும் அவள் திடுக்கிட்டு திரும்ப, அவளை தன் இருகரங்களில் ஏந்திக் கொண்டான். அவன் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் நாணத்தில் அவள் அவன் தோளில் சாய்ந்துக் கொள்ள, “சின்னு உனக்கொரு சீக்ரெட் சொல்லட்டா?” என்று அவள் காதில் மீசை உரச கேட்டான்
“ம்”
“அன்னைக்கு நடந்தது கனவில்ல, பாதி வரைக்கும் நிஜம் தான்” 
“என்ன?” என்று அவள் அதிர்ந்து அவனை பார்த்து விழிவிரிக்க, அவளை பார்த்து குறும்புடன் கண்சிமிட்டினான்.
“ஆனா நான் முழுசா களமிறங்கறதுக்குள்ள சுதாரிச்சுக்கிட்டேன். கல்யாணத்துக்கு முன்னாடி நாள் சுத்தமா தூங்காததனால நான் யோசிக்க நேரம் எடுத்துக்கிட்ட கொஞ்ச நேரத்துல நீ நல்லா தூங்கிட்டே.  சரிதான்னு உன் டிரஸ்ஸை சரி செஞ்சுட்டு எதுவுமே தெரியாத மாதிரி உன்னை எழுப்பி படிக்க வச்சேன்”
“வசியக்கார மாமு இல்ல நீங்க, பொய்க்கார மாமு, எனக்கு அப்பவே உங்க மேல டவுட்டா தான் இருந்துச்சு, எப்ப பாரு யாருக்கும் தெரியாம என்னை சீண்டிட்டே இருக்கறது. செய்யறதெல்லாம் செஞ்சுட்டு எதுவுமே செய்யாத மாதிரி முகத்தை வச்சுக்கிட்டு என்னை முறைக்கிறது” என்று அவன் நெஞ்சில் குத்தினாள். 
“இனிமே செய்யறதெல்லாம் உனக்கு தெரிஞ்சே தான் செய்யப்போறேன்” என்றபடி அவளை கட்டிலில் கிடத்தி அவள் மேல் படர்ந்தான். அதற்கு மேல் அவளை பேச விடாமல் தன் முத்தங்களால் அவளை மூழ்கடித்தான். வசியின் விரல்களும் இதழ்களும் தன் தேகத்தில் செய்யும் மாயத்தில் அவனுக்குள் சிதறி கிடந்தவளை சேர்த்து அணைத்தான். அவனில் லயித்து போயிருந்தவளிடம் தன் லட்சியத்தை முடித்தான்.
இதழோடு இதழ் சேர்த்து, உயிரோடு உயிர் கோர்த்து, மலரெனும் பெண்மை மீண்டும் மலர, வசியெனும் வண்டு தன் மலரில் நீங்காத ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது.
*******
சில மாதங்களுக்கு பிறகு காவேரி ஜமுனாவிற்கு போன் செய்தாள். “அக்கா டிவியில நியூஸ் பாத்தியா?”
“இல்லியே? ஏன்டி”
“மொதல்ல பாரு” என்றதும் ஜமுனா தொலைக்காட்சியை இயக்கினாள்.
“ஆதியூரை சேர்ந்த வேண்டாம் பொண்ணு என்கிற பெண், ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்” என்று தலைப்பு செய்தி ஒளிப்பரப்பாகி கொண்டிருந்தது.
“ஏய் காவேரி, நம்ம சின்னபொண்ணாட்டம் இருக்கேடி” ஜமுனா அதிர
“ஆமாம்க்கா, என்னால நம்பவே முடியல. அப்பா வீட்டுக்கு எதிர் வீட்ல இருப்பானே ராசு, அவன் தான் போன் பண்ணி விவரம் சொன்னான். ஊர் முழுக்க நம்ம சின்னபொண்ணு படம் போட்டு பேனர் வைக்கணுமாம். போட்டோ கேக்கறான், என்கிட்ட அவ கல்யாணத்துல எடுத்த போட்டோ தான் இருந்துச்சு, அதை அனுப்பிட்டு உனக்கு போன் போட்டேன்”
“நான் ஒரு பேச்சுக்கு கலெக்ட்டர் வேலையா பாக்க போறேன்னு கேட்டேன், உண்மையாவே கலெக்ட்டராயிட்டாளேடி. ஆள பார்த்தா அமுக்குனி மாதிரி இருப்பா. அவளுக்குள்ள இம்புட்டு திறமையானு எனக்கே ஆச்சரியமா இருக்கு” என்று ஜமுனா பேசிக் கொண்டிருக்கும் போதே சின்னபொண்ணு தொலைகாட்சியில் பேசினாள்.
“வணக்கம், ஆதியூர்ங்கிற சின்ன கிராமத்துல அஞ்சாவதா யாருக்கும் வேண்டாத பொண்ணா நான் பொறந்துட்டேன். பேரையும் வேண்டாம்னே வச்சிட்டாங்க. இந்த வேண்டாவை வேணும்னு கட்டிக்கிட்ட என்னோட கணவர் வசீகரன் தான் என்னை கலெக்ட்டராக்கி பாக்கணும்னு ஆசப்பட்டாரு.
நம்ம ஊர்ல பெண் குழந்தைங்களை பாரமா நினைச்சு, வேண்டாம் பொண்ணு போதும் பொண்ணுனு பேர் வைக்கற பழக்கமிருக்கு, அப்படி பேர் வச்சா அடுத்தது பொண்ணு பொறக்காம பையன் பொறக்கும்ங்கிறது அவங்களோட நம்பிக்கை. ஆனா அந்த பேராேட வாழ்க்கை முழுக்க பயணிக்கிற எங்களுக்கு அது எவ்வளவு மன வேதனைய கொடுக்குதுனு உங்களுக்கு தெரியுமா?
நான் நினைச்சிருந்தா அந்த பேரை என்னால மாத்திக்க முடியும். ஆனா அந்த பேரோடையே வாழ்க்கையில எதாச்சும் சாதிக்கணும்னு இருந்தேன். என்ன சாதிக்கணும்னு தெரியாது, ஆனா முன்னேறணும்ங்கிற வெறி மட்டும் மனசுல இருந்துச்சு. என்னோட கணவர் வழிகாட்டுதல்ல நான் இப்போ கலெக்ட்டரா உங்க முன்னாடி நிக்கறேன்.
நல்ல படிப்பும் வளர்ப்பும் இருந்தா யார் வேணும்னாலும் வாழ்க்கையில சாதிக்கலாம். வேண்டாம் பொண்ணுனு நினைக்கறவங்க உங்க அம்மாவும், அக்காவும், மனைவியும் பொண்ணு தான்னு ஏன் நினைக்க மாட்டேங்கறீங்க” என்று தன் ஆதங்கத்தை கொட்டினாள்
வசீகரன் அவள் கரத்தை அழுத்தி அவளை சமன் செய்ய முனைந்தான். “எனக்கு வசீகரன்னு தங்கமான கணவர் கிடைச்சதால நான் வாழ்க்கையில முன்னேறி வந்துட்டேன். ஆனா எத்தனையோ பேர் என்னை போல பேரோட இன்னும் ஏதோ ஒரு மூலைல பொறந்த வீட்டுக்கும் புகுந்த வீட்டுக்கும் வேண்டாதவளா வாழ்ந்துட்டு தான் இருக்காங்க. அவங்களுக்கும் பெண் குழந்தையே பொறந்துட்டா இன்னும் நிலைமை ரொம்பவே மோசம். இந்த நிலைமை மாறதுக்கு பெண்களாகிய நாம இன்னும் நிறைய சாதிக்க வேண்டியிருக்கு. நம்மளோட முன்னேற்றம் தான் ஆணும் பெண்ணும் சமம்னு நினைக்க வைக்கும். அதுக்காகவாவது நாம போராடி தான் ஆகணும், அப்படி போராட தயாரா இருக்கறவங்களுக்கு ஒரு கலெக்ட்டரா என்னென்ன உதவி செய்ய முடியுமோ அதை கண்டிப்பா நான் செய்வேன்” என்று பேசிய மனைவியின் தன்னம்பிக்கையில் வசீகரனுக்கு மட்டுமில்லாது அவன் மொத்த குடும்பத்திற்கும் ஏன் தொலைக்காட்சியில் சின்னபொண்ணுவின் நேரடி உரையை பார்த்துக் கொண்டிருந்த அவள் ஊர்மக்களுக்கும், காவேரிக்கும் ஜமுனாவுக்குமே உச்சி குளிர்ந்து போனது.
“அக்கா இந்த குடிகார புருஷனுங்கள நம்பி அங்கங்கே கடன் வாங்கி கொடுத்துட்டு இருக்கறதுக்கு, சின்னபொண்ணு சொல்ற மாதிரி நாமளே எதாச்சும் செஞ்சா என்ன?” என்றாள் காவேரி
“ஆமாடி, எனக்கும் அதான் தோணுது. நாம ரெண்டு பேரும் சேர்ந்து வீட்ல இருக்கற சாமான்களை வச்சு சின்னதா டிபன் கடை வைச்சா என்ன?” ஜமுனா கேட்க
“சரிக்கா, அப்படியே செஞ்சுடலாம், இதுக்கு மேல யாரையும் பணம் கேக்க முடியாது, நாமளே எதாச்சும் சம்பாதிச்சா தான் உண்டு” என்றாள் காவேரி
“காவேரி எனக்கென்னவோ நம்ம சின்னபொண்ணை பாத்து பேசணும்னு மனசு அடிச்சுக்குதுடி”
“எனக்கும் நம்ம தங்கச்சி கலெக்ட்டரானு ஆச்சர்யமா இருக்கு, அப்பா இருந்திருந்தா எவ்ளோ சந்தோஷப்பட்டிருப்பாரு? அவளை பாக்கணும் போலவும் இருக்கு. ஆனா  நாம போறப்போ எல்லாம் பணத்துக்காக தான் அவவீட்டுக்கு போனோம். இப்போ போனாலும் அவ வீட்ல அப்படித்தான் நினைப்பாங்க, அதனால வேணாம்கா” என்று காவேரி சொன்னதும் ஜமுனா அமைதியாகி விட்டாள்.
சில வாரங்களுக்கு பிறகு வசீகரனிடமிருந்து இருவருக்கும் போன் வந்தது. “மாமா வாழ்ந்த வீட்டை ரிஜிஸ்ட்ரேஷன் பண்றதுக்கு ஊருக்கு வர்றோம்” என்று தகவல் சொன்னான்.
வசீகரன் வருவதாக சொன்ன நாளன்று இருவரும் முத்துமாணிக்கம் வாழ்ந்த ஊருக்குள் சென்றனர். ஊர் எல்லையில் தொடங்கி வீதியெங்கும் சின்னபொண்ணுவின் படம் தாங்கிய விளம்பர பதாகைகள் (பேனர்) வைக்கப்பட்டிருந்தது. 
‘எங்கள் ஊரின் வீரமங்கை  சின்ன பொண்ணு என்னும் சிங்க பொண்ணு இப்போது கலெக்ட்டர் பொண்ணாக வீரநடை போட்டு வரவிருக்கிறார். வேண்டாம் என்று பெயர் வைத்த ஊர்மக்களை வேண்டி அழைக்க வைத்துவிட்ட வேண்டாம் பொண்ணுவை வேண்டி விரும்பி அழைக்கிறாம், கலெக்ட்டர் வேண்டா வசீகரன் அவர்களை வருக வருக என்று ஆதியூர் மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறாம்’ என்று விதவிதமாக அச்சிடப்பட்ட பதாகைகளும் பெரிய அளவு உருவப்படங்களும் ஆங்காங்கே இருந்தது.
இருவரும் அரசு பதிவு அலுவலகத்தில் சின்னபொண்ணு மற்றும் வசீகரனுக்காக காத்திருந்த போது ஊர்மக்கள் அங்கே கூடியிருந்தனர், அரசாங்க காரில் திருமதி. வேண்டாவசீகரன் ஐஏஎஸ் நிமிர்வுடனும் தன்னிம்பிக்கையுடனும் வந்திறங்க, அவளுடன் அவளின் அன்பு கணவன் வசீகரன் ஆளுமையுடன் வந்திறங்கினான். அவர்கள் இருவரையும் கண்டதும் ஊர்மக்கள் அவர்களை சூழ்ந்துக் கொண்டனர்.
ஊர் தலைவர், கிராமநிர்வாக அதிகாரி மற்றும் முக்கியஸ்தஸ்கர்கள் ஒவ்வொருவராக சின்னபொண்ணுக்கு மாலை மற்றும் சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். வசீகரன் விரிந்த புன்னகையுடன் கைகளை கட்டிக் கொண்டு மனைவியை பெருமையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
எதிர்வீட்டு பெண்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் அங்கே கூடியிருக்க, அவர்கள் சின்னபொண்ணுவின் ஆளுமையான தோற்றத்தையும் பேச்சையும் கண்டு, “முத்துமாணிக்கம் கடைசி மவ வேண்டாவா இது? ஆளே மாறி போயிருக்காளே? பக்கத்துல இருக்கறது அவளோட புருஷனா? ஜம்முனு இருக்காரே, ம் பாவம் அந்த மனுஷனுக்கு இதையெல்லாம் பாக்க கொடுத்து வைக்கல” என்று தங்களுக்குள் பெருமூச்சு விட்டுக் கொண்டனர்.
முத்துமாணிக்கம் வாழ்ந்த வீட்டை சின்னபொண்ணுவின் பெயருக்கு மாற்றியிருந்தான் அவள் கணவன். காவேரியும் ஜமுனாவும் கையெழுத்து போட்ட பின்னர் தயக்கத்துடன் அவளை பார்த்து தாங்கள் கிளம்புவதாக தலையசைக்க, வசீகரனிடமிருந்து காசோலையை வாங்கி அவர்களிடம் நீட்டினாள். எந்த தொகையும் கழிக்காமல் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய தொகை அதில் எழுதி கையொப்பம் இடப்பட்டிருந்தது.
இருவரும் கேள்வியாக வசீகரனை பார்க்க அவன் மெளனமாக புன்னகைத்தான்.
“அக்கா, வீடு என் பேர்ல இருந்தாலும், அது நம்ம எல்லாருக்கும் பொறந்த வீடு. எப்போ உங்களுக்கு நம்ம வீட்ல இருக்கணும்னு தோணுதோ ரெண்டு நாள் வந்து தங்கிட்டு போங்க. வீட்டு சாவி எல்லார்கிட்டயும் இருக்கற மாதிரி செய்யறேன். ஊர்திருவிழா வரும் போது நாமெல்லாம் நம்ம வீட்ல ஒண்ணா இருப்போம். சரியா அக்கா” என்று தான் ஒரு கலெக்ட்டர் என்ற சிறு கர்வம் கூட இல்லாமல் வழக்கம் போல பேசிய சின்னபொண்ணுவை கட்டிக் கொண்டு அழுதுவிட்டனர்.
“நீ எங்கள விட சின்னவளா இருந்தாலும் எப்படி வாழணும்னு எடுத்துக்காட்டா வாழ்ந்திருக்கே, உன்னை பாத்து எங்களுக்கும் தன்னம்பிக்கை வந்திருக்கு, நாங்களும் சொந்த கால்ல நிக்க முயற்சி பண்ணுவோம், இனிமே யார்கிட்டயும் பணம் கிடைக்குமானு பாக்க மாட்டோம். உன்னோட முப்பது லட்சம் பணத்தை உன் பேர்லயே டெபாசிட் பண்ணிடறோம்”
“பரவால்லக்கா, உங்க வீட்டுக்காரங்க சரியில்ல, நீங்க என்ன பண்ணுவீங்க? எப்படியாவது முன்னேறிட மாட்டாங்களானு பாத்தீங்க. பணமெல்லாம் திருப்பி கொடுக்க வேணாம், இந்த பணத்தை உங்களோட பசங்க பேர்ல டெபாசிட் பண்ணுங்க. அவங்களோட படிப்புக்கு உதவும்” என்றவளை இருவரும் நன்றியோடு பார்த்தனர்
“மாமு கிளம்பலாமா?” என்று கணவனை கேட்டாள்.
“நீ வளர்ந்த வீட்டை பாக்க வேணாமா?” வசி கேட்க
“பாக்கணும், ஆனா வீடு ரொம்ப பழைசு. இத்தனை நாளா மூடியே கிடந்துச்சு. அதை சரிசெஞ்சா தான் உள்ளே போக முடியும் மாமு”
“பரவால்ல வா, ஒரு முறை போய் பார்த்துட்டே போகலாம்” என்றான்
கணவன் பேச்சை மறுக்காமல் அவனுடன் கிளம்பினாள். அதே வீதியில் பழைய பாவாடை சட்டையுடன் வலம் வந்தவள் இன்று காட்டன் புடவை மற்றும் கழுத்துவரை மூடிய சட்டை அணிந்து கம்பீரமாக நடந்து வருவதை கண்டு ஊர்மக்கள் வாயில் கைவைத்துக் கொண்டனர்.
சின்னபொண்ணு வீட்டை அடைந்ததும் அதன் முன்னே  தோரணங்களும் வாழைமரமும் வாசலில் கட்டப்பட்டிருந்ததை பார்த்து ஆச்சர்யத்துடன் கணவனை பார்த்தாள். வசீகரன் வழக்கம் போல வசியப்புன்னகை புரிய “மாமு” என்று அவன் தோள்களை பற்றியபடி ஆசையாக வீட்டை நோக்கி வேக நடை நடந்தாள். அவள் பிறந்து வளர்ந்த வீடு முத்துமாணிக்கம் வாழ்ந்தபோது இருந்த அதே பழைய கலைநயத்தோடு புனரமைக்கப்பட்டு இருந்தது. 
செல்வி சின்னபொண்ணுவிடம் வீட்டுசாவியை கொடுத்து, “வேண்டா உன்னோட மாமு தான் எனக்கு போன் பண்ணி வீட்டை ஒழுங்குபடுத்தறதுக்கு ஆள் பாத்துவிட சொன்னாரு. நான் ராசு அண்ணன் கிட்ட சொல்லிவிட்டேன். அவர் உங்கப்பா இருந்தப்ப வீட்டுக்கு என்ன கலர் பெயிண்ட் அடிப்பாரோ அதுவரைக்கும் எல்லாத்தையும் கரெக்ட்டா செஞ்சிட்டாரு, வசி சாரும் பணத்தை போன்லயே அனுப்பிட்டாரு” என்றாள்.
சின்னபொண்ணு கணவனை நன்றியுடன் பார்க்க, அவனோ குறும்புடன் சிரித்து ஒற்றை கண்ணை சிமிட்டினான். யாராவது பார்த்துவிட்டார்களா என்று அவசரமாக சுற்றும் முற்றும் பார்த்தவள் செல்வி கொடுத்த சாவியை வைத்து வீட்டை திறந்து உள்ளே சென்றாள். பின்கட்டில் மா என்ற சத்தம் கேட்டதும் பின்பக்கம் துள்ளிகுதித்து ஓடினாள். அவள் ஆசையாக வளர்த்த லஷ்மி மற்றும் இரண்டு கறவை மாடுகள் இருந்தது. அவள் வளர்த்த கன்னுகுட்டி இப்போது நன்றாக வளர்ந்து விட்டிருந்தது. அதன் அருகில் செல்வியின் அம்மா அதற்கு தீவனம் வைத்துக் கொண்டிருந்தார்.
சின்னபொண்ணுவின் கண்களில் ஆனந்த கண்ணீர் கரைபுரண்டு ஓடியது. அவளுடைய அப்பா வாழ்ந்த வீடு, அவள் ஆசையாக வளர்த்த மாடு, அவளின் கனவு என அனைத்துமே திரும்ப கிடைத்துவிட்டது. ஆனால் அவளுடைய அப்பா? கண்களில் கண்ணீர் தளும்ப அவர் வாழ்ந்த அறைக்குள் சென்றாள். அங்கே முத்துமாணிக்கத்தின் ஆளுயர புகைப்படம் இருந்தது. அருகே சென்று தன் தந்தையை வணங்கினாள். 
வசீகரன் அவளின் தோள்களை அழுத்தி, “சின்னு அழாதடி, உன் அப்பாவும் நம்ம கூட தான் இருப்பாரு” என்றவனை இறுக கட்டிக் கொண்டாள்.
“இதே ரூம்ல அப்பா இறந்து கிடந்தப்போ, இனி எனக்கு யாருமே இல்லயே, இந்த உலகத்துல எப்படி வாழப்போறேனு கலங்கி போய்ட்டேன் மாமு. எனக்கு அப்பாவா, ஆசானா, கணவனா, நண்பனா எல்லாமுமா நீங்க தான் இருக்கீங்க மாமு” என்று அவன் மார்பில் முகத்தை புதைத்துக் கொண்டாள்.
அவன் அவளின் நாடியை ஒற்றை விரலால் நிமிர்த்தி அவள் கண்களை தன் கண்களோடு கலக்கவிட்டு “அவ்வளவு தானா? நான் உனக்கு காதலனா இருக்கலையா சின்னு?” என்றான் ஆழ்ந்த குரலில் 
கண்ணீருடன் சிரித்தவள், “குளு குளு பொய்கள் சொல்லி, என்னை வெல்வாய் அது தொிந்தும் கூட அன்பே மனம் அதையேதான் எதிா்பாா்க்கும். எங்கேயும் போகாமல் தினம், வீட்டிலேயே நீ வேண்டும் சில சமயம் விளையாட்டாய், உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்” என்று மெல்லிய குரலில் பாட, 
“இப்பவே உன் ஆசைய நிறைவேத்தறேன்” என்று அவனுடைய சட்டை பட்டனை கழட்டி அவளை தனக்குள் இறுக்கி அணைத்து கொண்டு அவள் உச்சந்தலையில் அவன் நாடியை வைத்து அழுத்திக் கொண்டான். இருவரின் இதயங்களும் ஒரே தாள லயத்தோட இணைந்து இசைத்துக் கொண்டிருந்தது.
(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!