கமலிக்கு தான் மனதே சரியில்லாமல் போனது. மாமியார், நாத்தனார் என அவர்களிடம் பேசியே ஒரு வருடமாக போகிறது. இப்போது திடீரென அங்கே போய் நின்றால்…..? என்னாகுமோ! என மிகவும் சங்கடபட்டு போனாள்.
ஆனால் அந்த சங்கடங்கள் உனக்கு எப்போதும் தேவையே இல்லை என்பதை போல கிரி அவளை அழைத்து வந்தது அவர்களது வீட்டிற்கு தான்.
“அப்போ அங்கே போவோமா..” என வேகமாய் இவன் வண்டியை திருப்ப.. “இல்லையில்லை.. இங்கேயே எனக்கு ஓகே தான்” என பட்டென பதிலுறைத்தவளை பார்த்து உதட்டுக்குள்ளேயே சிரிப்பை அடக்கி கொண்டான். கேட்டிற்கு வெளியேயே வண்டியை நிறுத்திட, இவள் இறங்கிட, பின்னோடு இவனும் ஸ்டான்ட் போட்டுவிட்டு வந்தான்.
கையில் இருந்த சாவியால் கேட்டை திறந்து, “போ” என அவளை முதலில் அனுப்பி விட்டு, வண்டியை தள்ளிக்கொண்டு உள்ளே வந்தான். பின் மர நிழிலில் வண்டியை நிறுத்திவிட்டு பூந்தொட்டியின் கீழ் இருந்த வீட்டு சாவியை எடுத்து கதவை திறந்தான்.
இவளோ அங்கிருந்த மரம் செடி கொடிகளை பார்வையிட்டு கொண்டிருந்தாள்.
Advertisement
“ஓய்.. என்ன?” இவன் கேட்டிட, ஒன்னுமில்லை என தலையசைத்து கொண்டு, இவனிடம் வந்தாள்.
Advertisement
இப்போது தான் முதல் முறையாய் இவள் வீட்டிற்குள் வருகிறாள். ஆம் வந்த இரண்டு முறையும், அதுவும் இரவு வருகையோடு, மாடியோடு முடித்து கொண்டாள்.
இப்போது பார்வை வீட்டிற்குள் அலைபாய்ந்தது. “போ.. போய் பாரு” என இரு கதவுகளையும் திறந்துவிட்டபடி இவனும் சிறு சிரிப்போடு சொல்லிட, அவனிடம் தலையசைத்துவிட்டு மெதுவாய் நடந்த கால்கள் வீட்டை வட்டம் அடித்தது. ஹால், சமையலறை, சின்னதாய் கப்போர்ட்டுக்குள் அடங்கி இருந்த பூஜையறை என சுற்றி வந்தவள் இறுதியில் வந்து நின்ற இடம் படுக்கை அறை.
பொருட்கள் எதுவும் இல்லை, இவனது உடைகள் பொருட்கள் என ஒரு ஸ்லாப்பை மட்டுமே, ஆக்ரமித்திருக்க, மற்றவைகள் காலியாக கிடந்தது. அதிலும் புதிதாய் மாற்றப்பட்ட கட்டில், மெத்தையில் ஒரு நிமிடத்திற்கும் மேலாக படிந்து மீண்டது இவளது பார்வை.
Advertisement
அவளையே பார்த்திருந்தவன், அனாவசிய கேள்விகளை தவிர்த்து “வீடு புடிச்சிருக்கா கமலி” என கேட்டிட
கட்டிலை விட்டு இவன் புறமாய் திரும்பி “ம்.. அந்த வீட்டை விட இது ரொம்ப காம்பேக்ட்டா நல்லாருக்கு, வீட்டு வெளிய மரம் செடி கொடியோட இன்னும் நல்லா இருக்கு, அதுவும் அந்த மல்லிகை செடி” என்றவள் அவனை கண்டு ஸ்நேகமாய் முறுவலிக்க, இவனது பார்வையோ இவளில் தான். ரசித்து பார்த்து கொண்டிருந்தான் மனைவியை.
குடையாய் விரிந்த அனார்கலியில், தான் வாங்கி தந்திருந்த வளையல், ஜிமிக்கியில், அம்சமாய் இருந்தவளை விட்டு பார்வையை இவனால் திருப்பவே முடியவில்லை.
இவனது குறுகுறு பார்வையில் கொஞ்சமாய் நெளிந்தவள் “காய்ச்சல் சரியாகிடுச்சா.. வாமிட் எதுவும் இல்லை தானே” என கேட்க
அவளது கேள்வியில் தெளிந்து, “ம்ஹூம்.. இப்போ எந்த தொந்தரவும் இல்லை” பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டு கொண்டு இவன் பேச, அப்போது தான் கவனித்தாள், ஆலிவ் க்ரின் டீசர்ட்டும், ஜீனுமாய் இருந்தவனை.
காலர் டீசர்ட் ரவுண்ட் நெக் டீசர்ட்டாகவும், டிராக் பேண்ட் ஜீனுமாகவும் மாறியிருந்ததும், டீசர்ட், டிராக்கை விட, இந்த உடை பாந்தாமாய் இவனுக்கு பொருந்தி போய் இருப்பதையும் ரசித்தபடி இருந்தாள்.
“சாப்பிடிங்களா? மாத்திரை போட்டிங்களா?” என்ற கமலியின் கேள்விக்கு
“ம்ஹூம்” என இவன் மறுப்பாய் தலையசைக்க, இவன் தலையசைத்த விதமே வசந்தா எதுவும் செய்யவில்லை என காட்டிட, “இருங்க வரேன்” என அறையை விட்டு வெளியேறி சமையலறைக்குள் சென்றாள்.
இவனோ அப்படியே கட்டிலில் அமர்ந்து கொண்டான். ஆயிற்று ஐந்து நிமிடங்கள் பத்து நிமிடங்கள் ஆகியும் ஆளை காணவில்லை என இவனும் எழுந்து அறையை விட்டு வெளியே வந்தான்.
சோபாவில் இவளது துப்பட்டா இருக்க, அதன் அருகிலேயே கிரி இவளுக்காக வாங்கி கொடுத்த போனும் இருந்தது. அதை பார்த்தபடியே நின்றிருந்தவன், மிக்ஸியில் ஏதோ அரைபடும் சத்தம் கேட்டு, போனை மட்டும் எடுத்து கொண்டு அங்கே சென்றான்.
“சிம் வாங்கிட்டியா.. சொல்லவே இல்லை” என்றபடி இவளருகில் வந்தான்.
“ம்.. நேத்து நைட் தான் அண்ணா வாங்கி கொடுத்தான் கிரி. மார்னிங் போனில் போட்டு செட் பண்ணியாச்சு”
“அதே நம்பர் தானா, இல்லை புது நம்பரா?”
“அதே நம்பர் தான் கிரி, புதுசலாம் வாங்கலை” என்றிட, போனை அன்லாக் செய்ய, வால்பேப்பரில் இருந்தனர் கிரியும் கமலியும். அதுவும் கிரி இவளுக்கு தாலி கட்டும் அந்த வைபவத்தை வால்பேப்பரில் வைத்திருந்தாள் கமலி.
ஏனோ பெருவிரல் மெதுவாய் நகர்ந்து, புதுபெண்ணிற்கான அத்தனை உணர்வுகளோடும் இருந்த அந்த கமலியின் முகத்தை வருடிவிட்டது.
நிமிர்ந்து இந்த கமலியையும் பார்த்தான். இரண்டிற்கும் நான் எத.தனை வித்யாசம். அந்த கமலியிடம் இளக்கமும், மென்மையும் அப்பட்டமாய் தெரிந்திட, இந்த கமலியிடமோ இறுக்கமும், கடுமையும் தெரிந்தது. எத்தனை நேரம் அந்த போனையே பார்த்திருந்தானோ, ஒரு கட்டத்தில், போனை சமையல் மேடை மீதே வைத்துவிட்டு, இவளிடம் திரும்பினான்.
இட்லி ஒரு பக்கம் வெந்து கொண்டிருக்க, ஒரு பக்கம் சட்னி அரைத்த சட்னியை பாத்திரத்திற்கு மாற்றி கொண்டிருந்தாள் கமலி.
“என்ன கமலி பண்ற” இவளிடம் கேட்க
“அத்தை மாவு வச்சிட்டு போயிருந்தாங்க போல, அதான் சிம்பிளா இட்லி, மல்லி சட்னி” என்றவள், ஒரு பக்கம் வைத்திருந்த கடுகு தாளிப்பை எடுத்து சட்னியுடன் கலந்து வைத்தாள்.
“ஹாலில் போய் இருங்க கிரி, இட்லியை மட்டும் எடுத்துட்டு வரேன்” என இவள் கூறவும்,
“எதுக்கு ஹாலுக்கு போகனும்.. இங்கயே இப்படியே சாப்பிட்டுப்பேன்” என சமையல் மேடையில் ஒரே உந்தலில் ஏறி அமர்ந்துவிட்டான்.
வியப்பாய் ஒரு பார்வையை இவனிடம் விட்டுவிட்டு, இட்லி வெந்துவிட்டதா என பார்த்தாள். வெந்துவிட்டது என கண்டுகொண்டு, தட்டில் நான்கு இட்லிகளை போட்டு கிரியின் கையில் கொடுத்து, சட்னியை எட்டி எடுத்து அவனுக்கு பரிமாற, ஒரு கையில் தட்டை பிடித்திருந்தவன், மறுகையில் அவளிடமிருந்து சட்னியை பிடுங்கி ஒரு ஓரமாய் வைத்துவிட்டு, கைநீட்டி அவளை தன் பக்கமாய் இழுத்து கொண்டான்.
“கிரி.. என்ன” என விலக இருந்தவளை, “நில்லுடி” என அடிக்குரலில் உறுமி தன் அருகிலேயே நிறுத்தி கொண்டான் கிரி. மேடையில் இவன் கால்களை தொங்கவிட்டு அமர்ந்திருக்க, இவளோ அவன் கால்களை ஒட்டினாற்போல் சமையல் மேடையில் சாய்ந்து நின்றிருந்தாள்.
‘எதுக்கு இப்படி நிப்பாட்டி வச்சிருக்கான்’ என யோசிக்கையிலேயே இட்லியை பிட்டு அவள் இதழுக்கருகில் கொண்டு செல்ல, பெரிதாய் விரிந்த விழிகளோடு இவனை பார்த்தாள்.
“வேணாமா” இவளமைதியை கண்டு இவன் கேட்க, சிரிப்புடன் வாயை திறந்து வாங்கி கொண்டாள்.
அன்று இவள் ஊட்ட, இன்று இவன் ஊட்டிக்கொண்டிருந்தான். தன்னை கண்டாலே எதிர்திசைக்கு ஓடி மறைபவன், இப்போது நிழல் போல ஒட்டிக்கொண்டிருக்க, ஒருவேளை எல்லாம் கனவோ என இப்போதும் பயம் கொள்கிறது அவள் மனம்.
முதலிரவில் இவள் இருப்பதையே மறந்தவனாய், தூங்கி போனதும், காலையில் சொல்லாமல் கொள்ளாமல் எழுந்து வீட்டை விட்டு போனதும் நேரங்காலம் தெரியாமல் இவள் மூளைக்குள் வர, பூரித்தமுகம், ஒரீரு நொடிகளிலேயே சுருங்கி போனது.
அப்போது விட்டு போனதை நினைத்து அடைந்த விரக்தி.. இப்போது ஒட்டிக்கொண்டு நிற்கும் நெருக்கத்தை உடைத்து சுக்கு நூறாக்கிவிட்டது.
உணவுண்டபடியே கிரியை இவள் பார்க்க, சர்வசாதாரணமாய் இவன் உணவுண்டு கொண்டிருந்தான். எப்படி முடிகின்றது இவனால்? என்னை போல் பழைய நினைவுகளெல்லாம் எழுந்து இவனை ஆட்டிபடைக்காதா? இவள் மனம் அனலில் வெந்து கொண்டிருந்தது.
இப்படி இவள் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கையிலே ஒரு வாய் தனக்கு, ஒரு வாய் இவளுக்கு என கிரியின் கையாலேயே இருவரும் உண்டு முடித்தனர்.
கிரிக்கு வயிறும் நிறைந்து, மனம் அதை விட சற்று அதிகமாகவே நிறைந்து போனது. கமலியோ விட்டகுறை, தொட்டகுறை என நின்றிருந்தாள்.
உண்டு முடித்து கைகழுவிவிட்டு வெளியே வந்தனர்.
சோபாவில் அமர்ந்தபடி, அவளையும் தன் அருகில் இருத்தி கொண்டு “அப்போ இந்த வீட்டிலேயே இனி இருந்துக்கலாமா கமலி? அந்த வீட்டுக்கு மாற வேணாமா!” என இவன் திடீரென கேட்கவும்
பல எண்ணங்களில் இருந்தவள் “என்ன சொல்றீங்க.. புரியலை” என இவள் அவனை பார்க்க
“அது..” “இந்த வீடு வாடகை வீடும் இல்லை.. அந்த வீட்டை விக்கவும் இல்லை” என இவன் புதிர் போட