வீட்டினுள் வசந்தா செல்லும் போது, படுக்கை அறை கதவு திறந்திருக்க, அதன் வழியே கிரி டிராலியில் துணிகளை அடுக்கி கொண்டிருப்பதை பார்த்து, “எங்கடா போற..” என விரைந்தார் அவனிடம்.
அவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் தன் வேலையில் கவனமெடுத்தான் கிரி.
“கிரி, தனிகுடுத்தனம் போக மாட்டேனு சொல்லியிருக்க கிரி” நியாபகபடுத்தினார் வசந்தா.
Advertisement
“தனி குடுத்தனம் போகலையே” இவன் வார்த்தைகளை கடித்து துப்பிட
“பிறகு வேறெங்க போற!” விழிகளில் தெரிந்தது பயம்.
“வீட்டோட மாப்பிள்ளையா போக போறேன். அதான் என் திங்க்ஸை பேக் பண்ணிட்டு இருக்கேன்” மின்னாது முழங்காது இடி ஒன்றை இறக்கினான் கிரி.
Advertisement
அவனது பதிலில் ஆடிப்போனவர் “வீட்டோட மாப்பிள்ளையா.. அது.. அசிங்கம் கிரி..” திக்கி திணற
Advertisement
“நீ அசிங்கபடுத்துறதை விடவா..” இவனும் பதில் கூற, தேள்கொடுக்காய் கொட்டியது அவனின் வார்த்தைகள்.
ஆனால் அப்போதும் அவரது ஈகோவே தலைதூக்கிட, “கிரி இங்க பாரு” குரல் உயர்த்தியதில், துணி அடுக்குவதை விடுத்து நிமிர்ந்து பார்த்தான். “நீ வீட்டோட மாப்பிள்ளையா போ.. ஆனால் அதுக்கு முன்னாடி என் பொணத்துக்கு கொள்ளி வச்சிட்டு போ” என நிதானமாய் பேச
சுள்ளென உச்சிக்கு கோபம் ஏறி நிற்க, தன்னை வாழவே விடமாட்டாரா என்ற இயலாமை அவன் தலையில் ஏறி அமர, டிராலியை தூக்கி விசிறி அடித்தான்.
Advertisement
அதிர்ந்து நின்று விட்டார் வசந்தா. விசிறி அடித்ததில் ஹாலில் போய் விழுந்து சிதறியது டிராலி. பிரம்மை பிடித்தார்ப்போல நின்றிருந்த வசந்தாவை இழுத்து கொண்டுவந்து அறைக்கு வெளியே தள்ளி, கதவை அறைந்து சாத்தினான் கிரி.
சுவரில் அடிக்கப்பட்ட டிராலி, அறைந்து சாத்தபட்ட கதவு இரண்டையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் வசந்தா அப்படியே நின்றுவிட்டார்.
இதை செய்தது என் மகனா! கிரிக்கு இத்தனை கோபம் வருமா! என முதல் முறையாய் தடுமாறி நின்றார். என்ன நடந்தாலும் தன் பின்னே இருப்பான் என்ற எண்ணத்தை சுக்குநூறாய் உடைத்து விட்டானே என அதிர்ச்சியிலிருந்தவருக்கு, அப்படி உடைப்பதற்கும், அறை கதவை அறைந்து சாத்துவதற்கும், அவர் தான் காரணம் என்பதை மட்டும் உணரவில்லை.
அறைக்குள் சென்று கதவை வேறு சாத்தியிருக்கிறானே என பயம் முதல் முறையாய் இவரை பிடித்து கொள்ள, மெதுவாய் கதவை நெருங்கி “கிரி கிரி” அழைக்க துவங்கிட, எத்தனை அழைத்தும் அறையினுள்ளிருந்து எந்த பதிலும் வராது போக, மனமெல்லாம் பயம் பயம் மட்டுமே…
அறைக்கு வெளியே வசந்தா “கிரி, கதவை திறடா” என கத்தியபடி, அறைகதவை தட்டிக்கொண்டிருக்க, அந்நேரம் தான் உள்ளே வந்தனர் ராஜியும், செந்திலும்.
வசந்தாவின் கத்தலில் செந்தில் நிலைமையை உணர்ந்து கொண்டு, பிரணியை ராஜியின் கையில் கொடுத்துவிட்டு, வசந்தாவை விலக சொல்லிவிட்டு “கிரி.. டேய்..” அறை அதிர, இவன் கதவை உடைக்க துவங்கிவிட்டான்.
கதவு உடைபடும் சத்தத்தில், செந்திலின் குரலில் அடைத்து கொண்டு வந்த நெஞ்சை தடவிவிட்டு கொண்டு போய் கதவை திறந்தான்.
வெளியே குடும்பமே நின்றிருக்க, ஒரு அவர்களின் மீது படிந்த பார்வை, பின் யாரையும் நிமிர்ந்தும் பாராமல் சோபாவில் போய் அமர்ந்தான் கிரி.
ஏனைய மூவருமே இவனை தான் பார்த்து வைத்தனர். செந்திலோ காலையில் மண்டபத்தில் பார்த்த சந்தோஷம் தாண்டவமாடிய அந்த கிரிக்கும் இப்போது தாடை இறுகி, முகம் கருத்து அமர்ந்திருக்கும் இந்த கிரிக்கும் இருக்கும் ஆயிரமாயிரம் வித்யாசங்களை கணக்கெடுத்து கொண்டிருந்தான்.
செந்திலின் இதழ்கள் விரக்தியாய் விரிந்து கொள்ள, அவனருகில் போய் அமர்ந்து “ஏண்டா உன்னை நீயே கஷ்டபடுத்திக்குற” செந்தில் கேட்க, கிரியிடமிருந்து வெறுப்பான ஒரு பார்வை மட்டும் வந்தது.
எல்லாம் தெரிந்த செந்திலோ இதற்கு மேல் இவனை அப்படியே விட கூடாது என தோன்ற “தனியா வீடு பாரு கிரி, வாழ்ந்து முடிச்சவங்களுக்காக, உன் வாழ்க்கையை விட்ராத! ஆக வேண்டியதை பாரு இப்படி உக்கார்ந்தா ஆச்சா” என செந்தில் அவனுக்கு ஆறுதல் கூற
“ராஜி உன் புருஷனை கிளம்பி போக சொல்லு. தேவையில்லாமல் குடும்பத்துக்குள்ள வம்பிழுக்க வேணாம்னு சொல்லு” வசந்தா அடங்குவேனா என ஆரம்பிக்க
“நானாவது திருந்திட்டேன், நீ என்னைக்கு தான் திருந்த போறியோ.. அவனை சாகடிக்காமல் விட மாட்டல்ல” வசந்தாவிற்கு மேல் கத்தினாள் ராஜி.
“என்னடி நீயும் இப்படி பேசுற, உன் புருஷன் என்னடான்னா தனியா போக சொல்றான். அவன் வீட்டோட மாப்பிள்ளையா போறேன்னு நிக்குறான்” வசந்தா பேச, அப்போது தான் சிதறி கிடந்த டிராலியின் மீது பார்வை படிந்து மீண்டது மற்ற இருவருக்கும்.
“வீட்டோட மாப்பிள்ளையா போறேன்னு சொன்னியா” செந்தில் கேட்க, அதற்கும் இவன் ஒரு பார்வை மட்டுமே பதிலாய் கொடுக்க
“என்ன கிரி..” இவன் முகம் பார்க்க முடியாமல் கேட்க
“கமலிய அப்படியே விட்டுட்டு வந்துட்டேன் செந்தில். எப்போவுமே அவ கூட நிக்க மாட்றேன். விட்டுட்டு விட்டுட்டு வந்துடுறேன். எனக்காக அவ காத்திட்டிருப்பா” சொல்கையிலேயே முகம் இன்னுமே இறுகி கண் எல்லாம் கலங்கி போனது கிரிக்கு.
செந்திலின் பார்வை ராஜியின் பக்கமாய் செல்ல, ராஜிக்கு மனதெல்லாம் உறுத்தியது.
ராஜியை விட்டு செந்திலின் பார்வை மீண்டும் இவனிடம் வர “நீ எடுத்த முடிவு சரிதான்.. நீ கமலி வீட்டுக்கு கிளம்பு” என செந்திலும்
“அவர் சொல்றதும் சரி்தான் கிரி, இங்க அம்மா படுத்துற பாடுக்கு, நீ கமலி வீட்டிலாவது நிம்மதியா இருப்ப” ராஜியும் சொல்ல
“அவன்.. அவன்.. போயிட்டா நான் எப்படி இருப்பேன்” வசந்தா திக்கி திணறி பேச
“அவன் கத்தாரில் இருந்தப்போ, நீங்க தனியா தானே இருந்தீங்க. இப்போவும் அப்படியே இருந்துக்கோங்க” வள்ளென விழுந்தான் செந்தில்.
“கல்யாணத்துக்கு முன்னாடி வராத மகன் பாசமெல்லாம் கல்யாணமானதும் எங்க இருந்து தான் வருமோ” கடுப்போடு முனுமுனுத்தது நன்றாகவே எல்லார் காதுகளிலும் போய் விழுந்தது.
“சும்மா வில்லி அளவுக்கு என்னை பேச வேண்டாம்.. நான் கிரியோட அம்மா நியாபகம் வச்சுட்டு பேசு செந்தில்” வசந்தா கண்டிக்க
“எனக்கு அம்மா கமலி தான்மா.. நீயில்லை” கிரியின் வார்த்தைகள் குண்டூசி விழுந்தாலும் கேட்கும் படி கணீரென வந்து விழுந்தது.
“கிரி” என வசந்தா இழுக்க
“வந்து ஒரு வாரம் ஆகலை, அவ உசத்தியா போயிட்டா.. பிறந்ததில் இருந்து உன் கூடவே இருக்குற நான் தரம் தாழ்ந்து போயிட்டேன்ல” வசந்தா குரலுயர்த்திட
“தரம் தாழ்த்திகிட்டீங்க” வெடுக்கென சொன்னவன், “பாரினில் இருந்தப்போ உங்க கிட்ட இருந்து போன் வந்தாலே பணம் பணம் பணம் மட்டும் தான் உங்க வாயில் இருந்து வரும். ஆனால் கமலி ஒருத்தி தான் ‘சாப்பிட்டிங்களானு’ கேட்பா. அவ அம்மாவா, இல்லை நீங்களா?” இவன் கேட்க, பெரும் நிசப்தம் அவர்களிடம். ராஜிக்கு நெருப்பில் நிற்பது போல இருந்தது.
“கிரி.. ஏற்கனவே சொன்னது தான், கமலி வீட்டுக்கு போ கொஞ்ச நாளைக்கு, அருமை அப்போவாவது புரியும்” வசந்தாவை பார்த்தபடி பேசினான் செந்தில்.
“விட்டுட்டு தான் மறுவேலை பார்ப்பாங்க” அறை அதிர கத்தியவனை கண்டு வசந்தா இரண்டடி பின் நகர்ந்தார்.