26
ஒரு வருடம் கடந்திருந்த வேளையில்!
நிறைய முறை கணவனுக்கு போன் முயற்சித்து கடைசியில் அவனைக் கூப்பிட்டாள்.
“வி..விக்னேஷ்” என்றழைத்தாள் சூர்யோதயா.
“சூர்யா! என்னமா? ஏன் வாய்ஸ் ஒரு மாதிரியாயிருக்கு?” என்று பதற…
“எ..எனக்குப் பிரசவ வலின்னு நினைக்கிறேன். மச்சானுக்கு லைன் போகல. அத்தை மாமா ஊருக்குப் போயிருக்காங்க. சியாமளா அண்ணி ரொம்ப வருஷம் கழிச்சி இப்பதான் மாசமாயிருக்காங்க. அதனால அவங்களைக் கூப்பிடலை. சியாமளா அண்ணி ஹஸ்பண்டுக்கு கால் பண்ணினா என்கேஜ்டா இருக்கு.”
“ஆகக் கடைசியாதான் நண்பன் ஞாபகம் வந்திருக்கு” என்று கோபமாகக் கேட்க…
“சா..சாரி விக்னேஷ். டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு…”
“ப்ச்… எதாவது காரணம் சொல்லாத. வீட்டுக் கதவு திறந்திருக்கா?”
“திறந்துதான் இருக்கு.”
“சரி பாப்பா எங்க?”
“பாப்பா ஸ்கூல் போயிருக்கா.”
“தினேஷ் சபரியில இருக்கானா? இல்ல எதாவது வேலையா சபரி அண்ணா வெளியில அனுப்பியிருக்காங்களா?”
விக்னேஷின் பெரிய தம்பி தினேஷிற்கு சென்னை பிராஞ்சில் முக்கிய பொறுப்பைக் கொடுத்திருக்கிறான் சபரி. அவனில்லாத நேரங்கள் அங்கு பொறுப்பாய் பார்த்துக்கொள்வது தினேஷின் வேலை.
இந்திய அளவில் சிறந்த டிசைனராக சபரிநாதன்! சூர்யோதயா! ரவி! மூவரின் பெயர்கள் மெல்ல வெளியே பிரபலமாகிக் கொண்டிருந்தது. இன்னும் காலங்களும், வாழ்க்கையும் இருக்கிறது… அவர்களின் முன்னேற்றத்திற்கான படிக்கட்டுகளாய்!
“அவங்க வெளிய போயிருந்தா தினேஷ் அங்கதான் இருப்பான் விக்னேஷ்.”
“அப்ப அவனுக்கு போன் செய்து வீட்டுல விடச் சொல்லிடுறேன். அம்மா கூட்டிட்டு வரட்டுமா? இல்ல காவ்யாவை அழைச்சிட்டு வரவா சூர்யா?”
“அத்தை மட்டும் போதும். காவ்யா வேண்டாம். அவங்க பூக்குட்டியைப் பார்த்துக்கணும்” என்றாள்.
விக்னேஷ்-காவ்யாவிற்கு குழந்தை பிறந்து ஆறு மாதங்களாகிறது. பெண் குழந்தை பிறக்க, “பூவரசி” என்ற பெயரை தன் பெண்ணுக்கு வைத்துவிட்டான் விக்னேஷ். அப்பெயர் வைத்ததில் மனதை அழுத்திய எதுவோ விலகிய உணர்வு அவனுக்கு.
சூர்யாவிற்குமே தன் தாயையே பார்ப்பது போன்ற பிரமை உண்டு அக்குழந்தையிடம்.
“சரி அம்மாவையே கூட்டிட்டு வர்றேன். இப்ப வலி எப்படியிருக்கு?”
“எதுக்கு இவ்வளவு கேள்வி விக்னேஷ்? வர எவ்வளவு நேரமாகும்?”
“ப்ச்… வலி எப்படியிருக்கு கேட்டேன்” என்றான் அழுத்தமாக.
[the_ad id=”6605″]
“உங்ககிட்ட பேசிட்டிருந்ததுல வலி தெரியலை.”
“குட். அப்படியே வெளில வா.”
“வந்துட்டீங்களா?” என்றாள் ஆச்சர்யமாய்.
“ம்.. வந்தாச்சி” என்று போனை கட் செய்ய… வேகமாக வந்த விமலா, “ஆளில்லைன்னா என்னைக் கூப்பிட்டிருக்கலாம்ல?” என்றார்.
“காலையில்தான் அத்தை கிளம்பினாங்க. நாள் இருக்கிறதாலயும், நீங்கள்லாம் பக்கத்துல இருக்கிற தைரியத்துலயும் கிளம்பினாங்க” என்றாள் புன்னகைத்து.
காரை திருப்பிவிட்டு அங்கு வந்த விக்னேஷ், “இப்ப சிரி” என்று அவளைத் திட்டி, “அம்மா கதவைப் பூட்டிட்டு காருக்கு கூட்டிட்டு வாங்க” என கோபம் குறையாமல் காருக்கு சென்றான். வரும்போதே ஹாஸ்பிடலுக்கு போன் செய்து சொல்லிவிட்டான் விக்னேஷ்.
சூர்யாவிற்கு ஏழாவது மாதமே வளைகாப்பு போட்டாகிற்று. இப்பொழுதுதான் எட்டாவது மாதம் முடிந்து ஒன்பதாவது மாதமே தொடங்கியிருக்கிறது. இன்னும் ஒரு மாதம் டெலிவரிக்கான நாட்கள் இருக்கின்ற தைரியத்தில் ராஜாங்கமும் சரளாவும் ஒரு முக்கிய வேலையாக இராமேஸ்வரம் சென்றுவிட்டார்கள்.
‘குழந்தைப் பிறப்பும்! பெண் பூப்பெய்வதும்! எப்பொழுதென்று யாரால் கணிக்க முடியும்?’
ஹாஸ்பிடல் நுழைந்ததுமே சபரிக்கு லைன் கிடைக்க விஷயத்தை சொல்லி துர்கா ஹாஸ்பிடல் வரச்சொன்னான் விக்னேஷ்.
பிரம்மசக்தி வந்து செக்கப் செய்தபடி, “பாப்பா எங்க சூர்யா?” எனக்கேட்க…
“தினேஷை கூட்டிட்டு வரச்சொல்லி, காவ்யாகிட்ட விடச் சொல்றேன்னு விக்னேஷ் சொல்லிட்டார்.”
“சபரி எங்க?”
“ரவிண்ணா அவசரமா வரச்சொல்லி கால் பண்ணினதால கேரளா போயிருக்காங்க. விக்னேஷ் அவங்க நம்பருக்கு ட்ரை பண்ணிட்டிருக்கார். வந்திருவாங்க.”
“சரிமா. அவர் வர்றப்ப வரட்டும். இன்னும் டூ ஹவர்ஸ்ல உனக்கு டெலிவரியாகிரும்.”
“அவ்வளவு நேரமாகுமா? இப்பவே ரொம்ப வலிக்குதே” என்றாள் பல்லைக் கடித்து வலியைப் பொறுத்தபடி.
“உடலும் உயிருமா ஒரு குழந்தை வேணும்னா சும்மாவா?”
“அமால்ல. உங்க டெலிவரியப்ப ருத்ரன் அண்ணா இருந்திருப்பாங்கதான?”
“ம்… முழுக்க முழுக்க கூடவே இருந்து பார்த்துக்கிட்டாங்க. பையனை முதல்ல வாங்கியதே அவங்கதான்” என பழைய நினைவுகளில் சென்ற மனதை சூர்யாவின் புறம் திருப்பினாள் சக்தி.
“அப்ப என் மச்சான் வரவும் குழந்தை பிறக்கட்டும். வாழ்க்கையில் இது ரொம்ப முக்கியமான நேரம். அவங்களும் இருந்தா சந்தோஷமாயிருக்கும்.”
“சபரி வர நேரம் ஆகுமேமா? அதுவரை குழந்தை இருக்கமாட்டேன்னு அவசரப்பட்டு வந்துட்டான்னா..?”
“செல்லமா நாலு… இல்ல ஒரு அடி போடணும் அண்ணி” என்றவள் வந்த வலியை குறைக்க வாயிலிருந்து காற்றை வெளியிட்டாள்.
“இவ்வளவு நேரம் இந்த அண்ணி எங்க போச்சாம்?”
“சும்மா உங்களை மாதிரி இந்த ஹாஸ்பிடலுக்கு ரௌண்ட்ஸ் போயிருந்திச்சி. எனக்கு வயிறு ஒரு மாதிரியிருக்கு அண்ணி” என்றாள் வலியுடன் அந்த உணர்வை எப்படி சொல்வதென்று தெரியாது.
“இனிமா கொடுத்திருக்கு சூர்யா. அப்படித்தான் இருக்கும். நர்ஸ் பாத்ரூம் கூட்டிட்டுப் போங்க” என்று வெளியே வர…
“எப்படியிருக்கா டாக்டர்? சூட்டு வலியா? பிரசவ வலியா?”
“பிரசவ வலிதான் விக்னேஷ். சபரிக்கு லைன் கிடைச்சதா?”
“சொல்லிட்டேன் டாக்டர். சீக்கிரம் வந்திருவேன்னு சொன்னாங்க.”
“அம்மா எங்க காணோம்?”
“பக்கத்துல கோவிலுக்குப் போயிருக்காங்க. இதோ வந்துட்டாங்களே.” வந்து கொண்டிருந்த தாயைக் காண்பிக்க…
“என்னமா? எப்படியிருக்கா சூர்யா? டெலிவரிக்கு நேரமாகுமா? நார்மல்தான?” என்றார் பதற்றமாக.
[the_ad id=”6605″]
“நார்மல்தான்மா. எப்ப வேணும்னா டெலிவரியாகலாம். இப்பதான் இனிமா கொடுத்து அனுப்பியிருக்கேன். நல்லா வலி வந்ததும் நர்ஸ் கூப்பிடுவாங்க” என்று தன் அறைக்குச் செல்ல… விமலா சூர்யா இருக்குமிடம் சென்றார்.
அடுத்த அரைமணி நேரத்திற்கெல்லாம் நடக்க முடியாமல் நிற்க முடியாமல் இன்னும் வலி அதிகரிக்க, பனிக்குடம் உடையவும் பிரசவத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.
சூர்யாவிற்கு கணவன் அருகிலிருக்க வேண்டுமென்று ஆசை. முடிந்தளவு வலியைத் தாங்கிக்கொண்டிருக்க, கணவன் வருவது போல் தெரியவில்லை என்றதும், “அத்தை மச்சான் இன்னும் வரலையே?” என்றாள் வாசல் பார்த்தபடி.
“அதுக்காக குழந்தையைக் காத்திருக்க வைக்க முடியுமா? நேரத்துல பிரசவம் நடக்கலைன்னா குழந்தை தண்ணி குடிச்சிருவான். வேற மாதிரியான பிரச்சனைகள் வரும். பேசாம டாக்டர் சொல்றதைக் கேளு” என்று கொஞ்சம் அதட்டலாகவே சொன்னார்.
“மே ஐ கம் இன்” என்ற குரலில்… முகம் பளிச்சென்றாக “சபரி மச்சான்” என்றவளின் விழிகள் பளிச்சிட்டு புன்னகைக்க, “அத்தை சபரி மச்சான்” என்றாள்.
“அதான் உன் புருஷன் வந்தாச்சில்ல. இன்னும் அலும்பு பண்ணாம உன் மகனை வெளிய அனுப்பு” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றார்.
சபரி மனைவியின் அருகில் வந்தமர்ந்து, “சாரிமா. இப்பப் பார்த்து உன்னோட இல்லாமல் போயிட்டேன். ரொம்ப வலிக்குதாமா?”
“உங்களைப் பார்த்துட்டேன்ல மச்சான் வலியெல்லாம் பறந்து போயிரும்” என வலி தாங்கி புன்னகைத்து… “மச்சான்…” என்றழைத்து எதுவோ சொல்ல வந்து நிறுத்த…
“என்னமா?” என்றான் ‘என் அத்தனை காதலும் உனக்கே!’ என்பதான உருகல் குரலில்.
“இதயப்பூர்வமா உங்களைக் காதலிக்கிறேன் மச்சான்!” என்றாளவள்.
“உதயா!” என்றவன் கண்கள் ஆனந்தத்தில் மின்ன, “நானும்தான்” என்று அவள் கையை அழுத்தமாக பற்றிக்கொண்டான்.
சூர்யாவின் ‘மச்சான்’ என்ற வார்த்தை சற்று சத்தமாக வர, புன்னகைத்த சக்தி, “உனக்கு எல்லாமே மச்சான்தானா?” என்க…
“மச்சான் மட்டும்தான் என்னோட எல்லாமே அண்ணி. அதைக் கண்டுபிடிச்சது கூட நீங்கதான். மச்சான் இல்லைன்னா நான் இல்லவே இல்லை அண்ணி.” ஆத்மார்த்தமாக வந்தது சூர்யோதயாவின் வார்த்தைகள்.
“உலகறிந்த ரகசியம்தான் நீயும்! உன் மச்சானும்!”
அவ்வலியிலும் புன்னகைத்து, “என் முதல் டெலிவரி நீங்க பார்க்கணும் சொன்னீங்க. அப்படி ஒண்ணு நடக்கப்போறதில்லைன்னு நினைச்சிருந்தேன் அண்ணி. இப்பப் பாருங்க உங்க வாக்கு பலிச்சிருச்சி” என்றவள் குரலில் அவ்வளவு நெகிழ்வு.
“எமோஷனலைக் குறைச்சிட்டு உன் பையனை வெளில அனுப்ப ட்ரை பண்ணு” என கேலி செய்து குழந்தை வருவதற்கான முயற்சியில் இறங்க…
[the_ad id=”6605″]
சில நிமிட நேரத்தில் கேட்டது சபரிநாதன்-சூர்யோதயாவின் மகன் “பூவரசன்” அழுகைக்குரல்.
குழந்தை வந்த அந்நிமிடம் தன் தாய் பூவரசியின் நினைவு வர கண்கள் இசக்கியைத் தேடியது. தன்னை முதலில் வாங்கி தன் முகம் பார்த்த முகத்தை, மகனும் பார்க்க வேண்டுமென்ற ஆவல் பாவையவளுக்குத் துளிர்த்ததோ!
குழந்தையை க்ளீன் செய்ய எடுத்துப்போகவும், சூர்யாவையும் தனி பெட்டிற்கு மாற்றினார்கள். குழந்தையுடன் சக்தி வர… ‘இதோ வந்துவிட்டேன்’ என்பதாய் தரிசனம் தந்தார் இசக்கி.
“அம்மா! இப்பதான் உங்களை நினைச்சேன்.”
“மகள் பிரசவத்துக்கு தாயில்லாமல் எப்படிடா? ஏதோ தோணிச்சின்னு ட்ரெய்ன்கு கிளம்பிட்டேன். வீட்டுக்குப் போனா நீ ஹாஸ்பிடல்லனு சொல்லிட்டாங்க. அதான் உடனே வந்துட்டேன்” என்று சக்தியிடமிருந்த குழந்தையை வாங்கி டாக்டருக்குப் பின் முதல் முதலாய் முகம் பார்த்தார் இசக்கி.
“அப்படியே உன்னைப் பார்த்த மாதிரியே இருக்கு வெள்ளச்சி. பையன் அம்மா ஜாடையில் பிறந்தா ராசியாம்.”
“அம்மா!”
“அட நிஜமாத்தான் வெள்ளச்சி” என்று சபரியிடம் நீட்ட… ஹரிணியைத் தூக்கிய வழக்கத்தில் தன் மகனை பக்குவமாய் வாங்க சந்தோஷத்தில் கண்கலங்கியது.
“அப்பாவும் அம்மாவும் குழந்தையைக் கொஞ்சிட்டிருங்க. நான் அப்புறமா வர்றேன்” என்று இசக்கி வெளியேற… குழந்தைக்கு முதல் பால் எப்படி கொடுக்க வேண்டுமென்று சொல்லி பிரம்மசக்தியும் கிளம்பினாள்.
சோர்ந்த நிலையிலிருந்த மனைவியின் முகம் நோக்கிக் குழந்தையைக் காண்பித்து, “சந்தோஷத்துல குதிக்கணும் போலிருக்கு வெள்ளச்சி” என்றான் முகம் முழுக்க மலர்ச்சியுடன்.
“எனக்கும்தான் மச்சான். வாழ்க்கை அவ்வளவுதான்னு நினைச்சப்ப… எதிர்பாராத விதமா கனவுல கூட நினைத்திராத டிசைனரிங் ஏரியாவுல பெயரெடுத்தேன். கணவன் குழந்தைன்னு எனக்குன்னு தனி குடும்பம் இருக்கணும்னு கண்ட கனவு நனவாகாமலே போயிரும் நினைச்சேன். வாழ்க்கை எவ்வளவு திருப்புமுனை கொண்டதுல்ல!”
“எனக்குப் பிடிச்ச என் மச்சானுக்கே மனைவியாகி… உதய ஹரிணி, பூவரசன்-னு இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகி, என் கனவையெல்லாம் நனவாக்கி எனக்குள் மாற்றம் செய்திருக்கீங்க மச்சான்.”
“பையன் பிறக்குறதுக்கு முன்ன சொன்ன இதயப்பூர்வமான காதல், என்னுள் மாற்றம் ஏற்படுத்தி, என்னை வசப்படுத்திய, என் காதலனான என் சபரி மச்சானுக்கு. இப்ப சொல்றது என் கணவனாக! என் எல்லாமுமாக இருக்கிற உங்களுக்கு…” என நிறுத்தி,
“ஐ லவ் யூ மச்சான்” என்றாள் தன் காதலை வார்த்தையில் அள்ளித் தெளித்து.
குழந்தையுடன் மனைவியை நெருங்கி நெற்றியில் முத்தமிட்டு, “என் மனதைக் கொள்ளை கொண்ட, என் வாழ்க்கையிலும் மாற்றத்தைப் புகுத்தின, என் தேவதைப் பெண்ணிற்கு லட்சம் கோடி ஐ லவ் யூக்கள்” என்று தோளோடு அணைத்து இருவருமாய் குழந்தையைப் பார்த்தார்கள்.
குழந்தை அவர்களைக் கண்டு ‘யாமிருக்க பயமேன்’ என்பதாய் புன்னகை பூக்க… அப்புன்னகை தனில் சபரிநாதன்-சூர்யோதயா மயங்கித்தான் போனார்களோ!
பிரசவ சோர்வில் கணவன் தோள் சாய்ந்து கண்மூடினாள் சபரியின் வாழ்வில் சூர்யனாய் உதித்த உதயா!
நட்புடன்
சொர்ணா சந்தனகுமார்