அத்தியாயம் 29
இன்ஸ்பெக்டர் எப்போது வருவார் என்று படபடப்புடன் அமர்ந்திருந்ததாள் மாதுரி. திடீரென்று திபுதிபுவென்று சிலர் உள்ளே நுழைவதைப் பார்த்தாள். அவர்களின் உடையைப் பார்த்ததுமே அவர்கள் மனநல காப்பக ஊழியர்கள் என்று தெரிய, எழுந்து ஓட முயற்சித்தாள். இவ்வளவு தூரம் உயிரை கையில் பிடித்துத் தப்பித்து வந்தது இவர்களிடம் மாட்டிக்கொள்ளவா? முடியவே முடியாது! தன்னைப் பிடிக்க வந்தவர்களைத் தன் முழுப் பலத்தையும் ஒன்று திரட்டி தள்ளிவிட்டவள், அடித்துபிடித்துக்கொண்டு வெளியே ஓடினாள்.
“யோவ்! கான்ஸ்டபிள் அவளைப் பிடிங்கையா!” சப் இன்ஸ்பெக்டர் கத்தவும், வாசலில் காவலுக்கு நின்றிருந்த கான்ஸ்டபிள் இருவர் அவளை மடக்கி பிடிக்க, அவர்களின் பலத்துக்கு முன்னாள் மாதுரியால் தாக்குபிடிக்க முடியவில்லை. “சர் நான் பைத்தியம் இல்லை. நான் ஒரு லாயர்! தயவு செஞ்சு என்னை நம்புங்க சர்!” என்று கத்திக்கொண்டு திமிறியவளை அப்படியே இறுக்கிப் பிடித்தனர்.
அதற்குள் அவள் அருகில் வந்துவிட்ட காப்பக ஊழியர்கள், அவள் தோளில் மயக்க ஊசியைச் செலுத்தினர்.
“நான் பைத்தியம் இல்லை! நான் பைத்தியம் இல்லை! பப்பாஆஆஆஆ!!” அந்த நரகத்துக்கு மீண்டும் செல்லப் போவதை நினைத்து மிரண்டவள், மடங்கி அமர்ந்து ‘ஓ’ வெனக் கதறினாள். மருந்தின் வீரியம் வேறு அவளை இழுக்க, அப்படியே கண்கள் சொருக மயங்கினாள்.
மாதுரி தப்பிய விஷயம் நந்தாவுக்குத் தெரியவர, அதிர்ந்து போனான். “போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போயிட்டாளா? கொஞ்சம் மிஸ் ஆகி இருந்தா…” நினைக்கவே திக்கென்று இருந்தது. உடனே கௌஷிக்கை தொடர்புகொண்டவன் அவனை வாங்குவாங்கு என்று வாங்கிவிட்டான்.
“எப்போதும் நான் அவ கூட இருக்க முடியுமா நந்தா! குளிக்கப் போன இடத்தில தப்பிச்சு ஓடி இருக்கா அதுக்கு நான் என்ன பண்ணட்டும்?” அவனும் பதிலுக்குக் குரலை உயர்த்த,
“அப்போ அவளை முடிச்சிடு!” பட்டென்று சொன்னான்.
“முடிக்கிறதா?!” அதிர்ந்தான் கௌஷிக்.
“ஆமாம்! இவ்ளோ தூரம் தப்பிச்சு வந்தவளுக்கு மறுபடியும் தப்பிக்க முடியாதா? அதிலும் மாதுரியை பத்தி எனக்கு நல்லா தெரியும். இனி அவளை உயிரோட விடுறது ரிஸ்க். அவளைக் கொல்றது தான் இனி இருக்கிற ஒரே ஆப்ஷன். அவளைப் பைத்தியம் ஆக்குறது, ஆணியைப் புடுங்குறது எல்லாம் இனி வேண்டாம். ஒரேடியா பரலோகம் அனுப்பிடலாம்.” கட்டளையாகச் சொல்லிவிட்டான்.
“ஆனா எப்படி? அவளைத் தனியா ஏதாவது பண்ணா வெளியே தெரிஞ்சிடுமே?” தயங்கினான் கௌஷிக்.
“தனியா வேண்டாம். ஆக்சிடென்ட் மாதிரி செட் செஞ்சு முடிச்சிடலாம்.”
“எப்படி?”
தன் திட்டத்தைச் சொன்னான் நந்தா.
முழுவதையும் கேட்ட கௌஷிக், “ஃபயர் ஆக்சிடென்டா?! நிறைய உயிர் இழப்பு ஏற்படுமே நந்தா! விசாரணை அது இதுன்னு வந்தா?”
“பார்த்துக்கலாம். இப்போ அது முக்கியமில்லை. எனக்கு அவ சாகுறது தான் முக்கியம். அவ உயிரோட இருக்கிற வரைக்கும் என் கழுத்துக்கு நேரா கத்தி தொங்கிட்டு இருக்கிற மாதிரி தான். அது ரிஸ்க். முடிச்சிட்டு எனக்கு ஃபோன் பண்ணு.” சொல்லிவிட்டு வைத்துவிட்டான்.
கௌஷிக்கிற்குத் தான் இதயம் படபடவென அடித்துக்கொண்டது. இருந்தாலும் நந்தாவின் வார்த்தையை மறுக்க முடியாது. தாலி கட்டிய மனைவியையே கொல்ல துணிந்தவன் தன்னையும் கொன்று விடுவான் என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும்.
யாரோ தன்னை உலுக்கவும் எழுந்தாள் மாதுரி. செவிலியர் நின்றிருந்தார். சுற்றிப் பார்த்தாள். அதே அறை! மற்ற நோயாளிகள் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அவள் முன் ஒரு தட்டை வைத்துவிட்டுச் சென்றார் செவிலியர். உணவை சாப்பிட தோன்றவில்லை. அழுகை அழுகையாக வந்தது. மீண்டும் இந்த நரகம்! நினைக்க நினைக்கக் கண்ணீர் வழிந்தது. உணவு தட்டை வெறித்தப்படி அமர்ந்திருந்தாள். ஆனால் அது சிறுது நேரம் தான். பின் எப்படி இங்கிருந்து தப்பிக்கலாம் என்று கணக்குப் போட ஆரம்பித்தாள்.
ஒருமுறை தப்பியவர்கள் அதம் பின் மீண்டும் மீண்டும் தப்பிக்க முயற்சி செய்து கொண்டே இருப்பார்களாம், மனித குணங்களைப் பற்றிய ஆராய்ச்சி சொல்கிறது.
இங்கு மாதுரியும் அப்படித் தான் மண்டையைக் குடைந்து கொண்டு இருந்தாள். அப்பொழுது ஒரு யோசனை அவளுக்குத் தோன்றியது. இது சரிவருமா என்று அவளுக்குத் தோன்றவில்லை. ஆனால் செய்து பாப்போமே என்று தோன்றியது. ஆனால் பகலில் இல்லாமல், இரவில் தான் முயன்று பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டவள், காத்திருக்க ஆரம்பித்தாள்.
இரவு உணவு முடிந்து நேரம் நள்ளிரவை தாண்டிச் சென்று கொண்டிருந்த நேரம் ரவுண்ட்ஸ் சென்று கொண்டிருந்த நர்ஸ், மாதுரி இருந்த அறையில் இருந்து முனங்கள் சத்தம் வரவும், வேகமாக வந்து பார்த்தார். ஏற்கனவே சாதத்தைக் குழைத்து வாயில் ஒதுக்கி வைத்திருந்த மாதுரி, அதை வாந்தி எடுப்பது போல எடுத்தாள். அதைப் பார்த்துவிட்ட அந்தச் செவிலியர், “ஐயோ! இது வேறையா!” என்று சலித்தபடிக் கதவை திறந்து அறைக்குள் நுழைந்தவர், மாதுரியை அழைத்துக்கொண்டு வெளியே வந்து, கதவை பூட்டிவிட்டு, அவளைக் குளியல் அறைக்கு அழைத்துச் சென்றார்.
அதே நேரம் மாதுரி இருந்த லேடீஸ் வார்ட் அறையை நோக்கி வந்து கொண்டிருந்தான் கௌஷிக். சுற்றும் முற்றும் பார்வையைச் செலுத்திவிட்டு, யாரும் இல்லை என்பது உறுதி செய்து கொண்டவன், தன்னிடம் இருந்த ஸ்பேர் சாவியைக் கொண்டு கதவை திறந்து உள்ளே சென்றான். பின் அங்குள்ள மின்சாரப் பாக்சை திறந்தான். தன் கையில் மறைத்து வைத்திருந்த அந்தச் சிறிய பாட்டிலைத் திறந்தான். உள்ளே நிறமில்லாத திரவம் மிதந்து கொண்டிருந்தது.
அது ஒரு வகை ரசாயன திரவம். அதற்கு வாசனையும் கிடையாது, நிறமும் கிடையாது. இந்தத் திரவம் எந்தப் பொருளையும் மெல்ல மெல்ல உருக்கி, அதைத் தீ பிடிக்க வைக்கக் கூடிய ஆற்றல் பெற்றது. அதே நேரம் காற்றோடு காற்றாக ஆவியாகி கலந்துவிடுவதால், அத்திரவம் இருந்த தடமே தெரியாது.
கையில் இருந்த பாட்டில் மூடிய திறந்தவன், அதை அப்படியே கவிழ்த்து மின் இணைப்பு வயரின் மேல் சொட்டு சொட்டாக ஊற்றிவிட்டு, மடமடவெனப் பாட்டிலை மூடி, பாக்கெட்டில் வைத்தவன், கதவை பூட்டிவிட்டு, வந்த தடம் தெரியாமல் திரும்பி சென்றுவிட்டான்.
மின்சார வயரில் ஊற்றப்பட்ட திரவம் மெல்ல மெல்ல அந்தச் சிவப்பு நிற பிளாஸ்டிக்கை உருக்க ஆரம்பித்தது.
அங்கே குளியல் அறையில் மாதுரியின் ஆடையை அந்தச் செவிலியர் குனிந்து சுத்தப்படுத்திக் கொண்டிருக்க, நின்று கொண்டிருந்த மாதுரி, சட்டென்று அவர் எதிர்பார்க்காத நேரம், அவரின் நடு முதுகில் தன் கை முட்டியை கொண்டு ஓங்கி குத்த, குண்டாக இருந்த அவருக்கு முதுகில் சதை பிடிப்பு ஏற்பட்டு, மூச்சுப் பிடித்துக்கொண்டது. மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டவரை நிமிர்த்தி, மூக்கில் ஒரு குத்து குத்த, ரத்தம் கசிய சுருண்டு விழுந்தார் அந்தச் செவிலியர்.
அடுத்த நொடி குளியல் அறையில் இருந்து வெளியே வந்தாள் மாதுரி. சுற்றும் முற்றும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, மடமடவென அங்கிருந்து பின்பக்க வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
அந்த நீள வராண்டாவில் சிறிது தூராம் நடந்திருப்பாள், யாரோ வரும் சத்தம் கேட்டது. சட்டென்று பக்கத்தில் இருந்த அறைக்குள் நுழைந்து கொண்டாள். இதயம் குதித்து வாய் வழியே வந்து விழுந்துவிடும் போல! அந்த அளவுக்குத் தாறுமாறாகத் துடித்தது. வாயை கையால் இறுக மூடிக் கொண்டாள்.
சரக் சரக்கென்று கேட்ட செருப்புச் சத்தம் வெகு அருகில் கேட்டுப் பின் தூரமாக நகர்ந்தது. அதன்பின் சில நிமிடங்கள் கழித்து, கதவை லேசாகத் திறந்து வெளியே எட்டி பார்த்தாள். தூரத்தில் இரண்டு நர்ஸ் பேசிக்கொண்டு இருந்தனர். இப்பொழுது வெளியே செல்லமுடியாததால், சலிப்புடன் அறைக்குள்ளேயே நின்றாள். அப்பொழுது அவள் கண்ணில் விழுந்தது, டேபிளில் இருந்த தொலைப்பேசி.
வேகவேகமாக அதன் அருகில் சென்றவள் ரிசீவரை எடுத்துக் காதில் வைத்தாள். கனெக்க்ஷன் இருந்தது. மடமடவெனச் சாதனாவின் நம்பரை நினைவுக்குக் கொண்டு வந்து டயலை அழுத்தினாள். ஆனால் ஏதோ ராங் நம்பர் போல. சாதனா என்று யாரும் இல்லை என்று சொன்னவர்கள், யார் வேண்டும் என்று கேட்க, பட்டென்று ஃபோனை வைத்துவிட்டாள். சாதனா கொடுத்திருந்த மற்றொரு நம்பர் நினைவுக்கு வந்தது.
ஆனால் அது அவளின் கணவனின் நம்பர் என்று சொன்னது நியாபகம் வந்தது. அதாவது கௌஷிக் நம்பர். நைட் டியுட்டி இருக்கும்போது, பல சமயம் மொபைலை வீட்டில் வைத்துவிட்டு செல்வான் என்று என்றோ சாதனா சொன்னது நியாபகத்திற்கு வர, போடலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
வெகு நேர யோசனைக்குப் பிறகு, போட்டுப் பாப்போம். கௌஷிக் எடுத்தால், கட் செய்து விடலாம் என்று யோசித்துவிட்டு, வருவது வரட்டும் என்ற முடிவுடன், இரண்டாவது எண்ணிற்குப் போட்டாள். இரண்டாவது ரிங்கில் ஃபோன் எடுக்கப்பட்டது.
“ஹலோ?!” ஒரு பெண் குரல் கேட்கவும், சாதனா தான் பேசுகிறாள் என்பது தெரிய, மடமடவெனப் பேச ஆரம்பித்தாள் மாதுரி.
“ஹலோ சாதனா?!”
“ஆமாம், நீங்க?”
“நான் மாதுரி பேசுறேன் டி!” கிசுகிசுப்பாகப் பேசினாள்.
“மாதுரி!! நீயா?! எங்க டி போன? இவ்ளோ நாளா ஆளையே காணோம்? என் வீட்டுக்காரரை விட்டு உன் வீட்டுக்காரர் கிட்ட கேட்கனும்னு நினைச்சிட்டு இருந்தேன்.”
சாதனா சொன்னதைக் கேட்டு அதிர்ந்த மாதுரி, “ஐயோ! வேண்டாம் டி. அதை மட்டும் எக்காரணம் கொண்டும் செஞ்சுடாத! நான் இப்போ ஃபோன் பேசுற விஷயம் முக்கியமா உன் புருஷனுக்குத் தான் தெரியக்கூடாது.” வேகவேகமாகச் சொன்னாள்.
அவளுக்குத் தான் தெரியுமே, நந்தாவின் அனைத்து செயல்களுக்கும் உறுதுணையாக இருப்பது கௌஷிக் என்று. அதே நேரம் சாதனாவை நினைத்து வருத்தமாக இருந்தது. அப்படி ஒருத்தனுக்கு இப்படி ஒரு குணவதி!
இங்கே இவள் பேசிக்கொண்டு இருக்க, அங்கே கௌஷிக்கோ, வந்த வேலையை முடித்துக்கொண்டு தன் அறையை நோக்கி சென்று கொண்டிருந்தான். வரிசையாக இருந்த அறைகளைக் கடந்து வராண்டாவில் நடந்து வந்து கொண்டிருந்தவனின் காதில், ஏதோ பேச்சுச் சத்தம் கேட்டது.
“ஏன் டி அப்படிச் சொல்ற?!” தோழியின் பேச்சில் தன் நினைவில் இருந்து வெளியே வந்த மாதுரி, அவளின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தயங்கும்போழுதே, காலடி சத்தம் கேட்க “வந்து சொல்றேன் டி. ப்ளீஸ்.” என்று முடித்துவிட்டாள். அந்தப்பக்கம் சரி என்றாள் சாதனா.
அதோ அந்த அறையில் இருந்து தான் வருகிறது என்பதைப் புரிந்து கொண்ட கௌஷிக், அந்த அறை ஜன்னல் கதவின் மறைவில் நின்றுகொண்டு காதை கூர்மையாக்கி கவனிக்க ஆரம்பித்தான்.
வெளியே கௌஷிக் நிற்பது தெரியாமல் தொடர்ந்து பேசினாள் மாதுரி.
“……….எனக்கு இப்போ பேச நேரம் இல்லை. நான் சொல்றதை மட்டும் கேட்டுக்கோ. நான் அன்னைக்கு உன்கிட்ட கொடுத்ததைப் பத்திரமா வச்சிருக்கத் தானே?!”
“………..”
“அதைப் பத்திரமா வச்சுக்கோ. நான் கூடிய சீக்கிரம் அதை வாங்க வரேன். என்னைத் தவிர யார்கிட்டையும் இதைப் பத்தி மூச்சு விட வேண்டாம்.” என்றுவிட்டு ரிசீவரை வைத்துவிட்டாள்.
வெளியே நின்று கொண்டிருந்த கௌஷிக், மாதுரியின் குரலைக் கேட்டுவிட்டு, ‘இந்தக் குரல் மாதுரியுடையது ஆச்சே! அவ எப்படி வெளிய வந்தா?’ என்று அதிர்ச்சி ஆனவன், குரல் வந்த அறைக்குள் வேகமாக நுழைந்தான்.
ரிசீவரை வைத்துவிட்டு திரும்பிய மாதுரி, வாசலில் கௌஷிக் நிற்பதை பார்த்து, குலை நடுங்கி போனாள். ‘இவன் எங்க இருந்து வந்தான்?!’ அதிர்ச்சியில், உடல் வேர்த்துக்கொட்ட, கைகால் எல்லாம் நடுங்க ஆரம்பித்தது.
கதவை அடைத்துவிட்டு வேகமாக மாதுரியின் அருகில் வந்த கௌஷிக், ஆத்திரத்தோடு அவளின் கழுத்தைப் பற்றியவன், “சொல்லு! யார் கிட்ட பேசிட்ட இருந்த?” என்று அடிக்குரலில் கர்ஜித்தான்.
கழுத்தில் பதிந்திருந்த அவனின் விரல்களின் அழுத்தத்தில், கழுத்து எலும்பு நொறுங்குவது போல் இருக்க, நரம்புகள் புடைத்து, கருவிழிகள் பிதுங்க ஆரம்பித்தது. இருந்தும் பயப்படாமல், ‘சொல்ல முடியாது’ என்பது போலத் தலையை ஆட்டினாள்.
ஆத்திரத்தில் அவளின் கழுத்தை மேலும் நெருக்கினான் கௌஷிக். முஹூம்! அவள் அசைந்து கொடுக்கவில்லை. ஓங்கி பளார் என்று அறைந்தான். தூரப் போய் விழுந்தாள். விளுந்தவளின் ஆடையைக் கொத்தாக பற்றித் தூக்கினான். அதில் அவளது ஆடையை லேசாகக் கிழிந்தது. அதையும் பொருட்படுத்தாமல் அவளின் முடியை கொத்தாக பற்றி இழுத்தான்.
கௌஷிக் என்னென்னவோ செய்தும் மாதுரி வாயையே திறக்கவில்லை. ஆத்திரத்தில் அவளை உதறித் தள்ளினான், சோர்ந்து போய் மயங்கி விழுந்தாள். அடுத்து என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தான்.
மாதுரி பேசியதை கேட்டால், எவிடென்சின் இன்னொரு காப்பியை எங்கோ மறைத்து வைத்திருப்பது போலத் தெரிந்தது. அது எங்கு இருக்கிறது என்று தெரிந்தாக வேண்டுமே? இவளை இப்படியே கடத்தி சென்று விடலாமா? முஹூம்! அது முடியாத காரியம்! இப்போது என்ன செய்வது? தரையில் கிடந்த மாதுரியை பார்த்தான். இவள் வெளியே போனால் தானே எவிடென்ஸ் லீக் ஆகும். பேசாமல் இவளை கொன்று விட்டால்? அதுதான் சரி. எவிடென்ஸ் பற்றிய உண்மை இவளோடு புதைந்து போகட்டும். விஷயத்தை நந்தாவிடம் சொல்லிவிடுவோம். மற்றதை அவன் பார்த்துக்கொள்ளட்டும்.
முடிவெடுத்தவன், அறைக்கு வெளியே எட்டிப் பார்த்தான். யாரும் இல்லை. மடமடவென மாதுரியை தூக்கிக்கொண்டு வராண்டாவின் பின்பக்கம் வந்தான். இருட்டாக இருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தான். கண்ணனுக்கு எட்டிய தூரம் வரை யாரையும் காணவில்லை. பின் வேகமாக அவள் இருந்த வார்டுக்கு வந்தான்.
அறையில் இருந்த சிறிய ஜன்னல் வழியே உள்ளே எட்டிப் பார்த்தான். மின்சாரப் பாஸ்கில் தீ எரிந்து கொண்டிருந்தது. சின்னப் பொறி இருந்தால் போதுமே, கப்பென்று தீ பிடிக்கக் கூடிய தன்மை கொண்டது மின்சாரம். எந்த நேரமும் பாக்ஸ் வெடிக்கலாம் என்று கணக்குப் போட்டவன், அதற்குள் மாதுரியை அறைக்குள் போட்டுவிடலாமா என்று யோசித்தான். ஆனால் அதற்குக் கட்டிடத்தின் முன்பக்கம் செல்ல வேண்டும். இருக்கும் பளீர் வெளிச்சத்துக்குத் தூரத்தில் இருந்து பார்த்தால் கூடத் தான் நிற்பது நன்றாகத் தெரியும் என்பதால், அவளை அங்கேயே போட்டுவிட்டு செல்ல முடிவெடுத்தான். எப்படியும் தீ பிடித்தால், அவள் உயிர் தப்புவது முடியாத காரியம் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.
ஆனால் மாதுரியை அப்படியே விட்டுச் செல்ல முடியாது. மயக்கத்தில் இருந்து எழுந்து கொண்டால் ஆபத்து. அப்பொழுது அவன் கண்ணில் பட்டது, சற்றுத் தள்ளி கிடந்த இரும்பு ராட். இரண்டு நாட்களுக்கு முன்பு, கட்டிட சீரமைப்பு வேலை நடந்தபொழுது யாரோ விட்டுச் செண்டிருக்கிறார்கள் போல.
அதை எடுத்து வந்தான். கீழே குப்புற கிடந்த மாதுரியின் பின் மண்டையில் ஓங்கி நச்சென்று அடித்தான். அவள் உடல் துல்லியது. பின்மண்டை பிளந்து ரத்தம் வழிய ஆரம்பித்தது. அதன்பின் சில நொடிகளில் அடங்கிப் போனாள். அவள் இறந்துவிட்டாள் என்று தப்புக்கணக்குப் போட்டுவிட்டு, வேகவேகமாக அங்கிருந்து சென்றான்.
கௌஷிக் கணக்குப் போட்டது போலவே, அவன் சென்ற சில நிமிடங்களில் வெடித்துச் சிதறிய மின்சார வயர்கள், குப்பென்ற தீ பிடித்துக்கொள்ள, அறைக்குள் மளமளவெனத் தீ பரவ ஆரம்பித்தது.
உள்ளே இருந்த நோயாளிகள் உறக்கம் களைந்து எழுந்து கத்துவதற்குள், முழு அறையும் தீ பிடித்துக்கொள்ள, பக்கத்தில் இருந்த மரங்களும் பற்றிக்கொண்டு எரிந்தது. நெருப்பின் வீரியத்தில், வார்டின் மேற் கூரை இடிந்து விழுந்தது. அதில் இருந்த ஓடுகளில் சில, கட்டிடத்தைச் சுற்றி விழ, மரகிளைகள், ஓடுகள் எல்லாம் விழுந்து மாதுரியை மறைத்தது.
கூச்சல் சத்தம் கேட்டு, ஊழியர்கள் எழுந்து வருவதற்குள் நிலைமை கைமீறிப் போயிருந்தது. மணல், தண்ணீர் எனக் கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தீயை அணைக்க முயல, சிலர் உடனே தீ அணைப்புக்கும், காவல்துறைக்கும் ஃபோன் போட்டனர். விடிந்த பின்பே செய்தி பத்திரிக்கைக்குப் பரவியது.
முற்றுபுள்ளி வைத்துவிட்டு, நிமிர்ந்தாள் மாதுரி. அறையில் அப்படி ஒரு நிசப்தம். ஆண்கள் கலங்கி போய் இருக்க, சஞ்சனாவோ கேவலுடன் வேகமாக எழுந்துவந்து மாதுரியை அணைத்துக் கொண்டாள். அந்த அணைப்பு மாதுரிக்கு தேவைப்பட்டதோ தெரியாது, ஆனால் சஞ்சனாவுக்கு நிச்சயம் தேவைப்பட்டது. அணைப்பை மேலும் மேலும் இறுக்கியவள் கதறி கதறி அழுதாள்.
மாதுரி ஒன்றும் சொல்லவில்லை அப்படியே அமர்ந்திருந்தாள். அவள் கண்களும் கண்ணீரால் நிரம்பி இருந்தது. பின்னே நடந்தவை எல்லாம் கடந்து சென்றுவிடக் கூடியவையா? ஆறாத வடு அல்லவா! இன்று அந்து வடுக்கள் மீண்டும் கிளறப்பட, அது தந்த வலியில், தானாகவே கண்ணீர் சுரந்தது அவளுக்கு.
மிதுன், பொங்கி வந்த கண்ணீரை சட்டையின் கை பகுதியில் துடைத்துக் கொண்டான்.
சுதர்ஷன், இமைக்காமல் மாதுரியின் முகத்தைத் தான் பார்த்துக்கொண்டு இருந்தான். அவன் மனமோ மானசீகமாக அவளுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசித்துக்கொண்டு இருந்தது. எப்பேற்பட்ட சூழ்நிலையிலும் தைரியமாகப் போராடி இருக்கிறாள். இன்றும் போராடி கொண்டு இருக்கிறாள். ஆனால் அதையும் தாண்டி, அவனுக்கு ஏதோ உறுத்தியது.
சஞ்சனாவின் முதுகை தட்டிக்கொடுத்த மாதுரி, நிமிர்ந்து சுதர்ஷனை பார்த்தாள். அவன் முகத்தில் தெரிந்த குழப்பத்தைப் பார்த்துவிட்டு என்னவென்று சைகையால் கேட்டாள்.
“நீங்க ஒரு நர்சை அடிச்சு போட்டுட்டு வந்துருக்கீங்க! ஆனா அப்படி யாரும் என்கிட்டே சொல்லலையே?!” என்றான் பதிலுக்கு.
யோசித்த மாதுரி, ‘தெரியவில்லை’ என்பது போலத் தோள்களைக் குலுக்கினாள்.
“அவங்க பேர் நியாபகம் இருக்கா மாதுரி”
யோசித்துவிட்டு, ‘நந்தினின்னு ஏதோ பேர் பார்த்த மாதிரி நியாபகம்.’ பேப்பரில் எழுதி காட்டினாள்.
மனதுக்குள் அப்பெயரை குறித்துக் கொண்டான் சுதர்ஷன்.
சிறிது நேரத்தில் சஞ்சனா அழுகையை நிறுத்திவிட்டு எழ, அவளின் கண்ணீரை துடைத்து விட்டாள் மாதுரி. மாதுரியின் உள்ளங்கையைத் தன் கன்னத்தோடு அழுத்திப் பிடித்துக் கொண்டாள் சஞ்சனா.
“உங்களுக்கு இவ்வளவு கொடுமை செஞ்சவங்களைச் சும்மா விடக்கூடாது மேம்! அவனுங்களைச் சட்டத்துக்கு முன்னாடி நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுக்கணும். யார் உங்க கூட இருக்கிறாங்களோ தெரியாது, நானும் மிதுனும் உங்க கூட இருப்போம்.” அழுத்தமாகச் சொன்னாள்.
“ஆமாம் மேம்!” மனைவியின் கருத்தை அமோதித்தான் மிதுன்.
அப்பொழுது சுதர்ஷனின் ஃபோன் அடிக்க, எடுத்துப் பார்த்தான், கமிஷனர் அழைத்திருந்தார். கான்ஸ்டபிளை அழைத்துக்கொண்டு அறைக்கு வெளியே வந்து பேசினான்.
“சொல்லுங்க சர்?”
“—–“
“வாங்கியாச்சு சர்! இப்போதான் முடிஞ்சுது.”
“—–“
“ஒகே சர்! இதோ வரேன்.”
சொல்லிவிட்டு அறைக்குள் வந்தவன், தான் கண்ட காட்சியில் அதிர்ந்து போய் நின்றான்.
கட்டிலில் அமர்ந்திருந்த மாதுரி, தன் கையில் இருந்த அவளின் வாக்குமூல காகிதத்தைத் துண்டு துண்டாகக் கிழித்துக்கொண்டு இருந்தாள்.