நிஜம் – 17
விழுப்புரத்தில் இருந்து கிளம்பியதில் இருந்து மருதவேல் விமலாவின் பிடித்த கையை விடவே இல்லை. முன்பக்கம் வாசுதேவகிருஷ்ணன் வண்டி ஓட்ட அவனருகே அபூர்வா அமர்ந்துகொண்டாள்.
பின்னால் விமலாவும் மருதவேலும். முதலிலேயே தம்பியிடம் சொல்லிவிட்டான் அவன். அவனை புரிந்தவனாக காரை மிதமான வேகத்திலேயே செலுத்த வழக்கமான நேரத்திற்கும் இரண்டுமணி நேரம் தாமதமாகவே வீடு வந்து சேர்ந்தனர்.
வரும் வழியில் இடையிடையே அங்கங்கே காரை நிறுத்தி ஏதாவது வாங்கி குடிக்க கொறிக்க என்று இருந்தார்கள்.
சென்னை வரவும் நேராக முத்துவேல் வீட்டிற்கு தான் சென்றனர். இந்த முறையும் நிறைய பலகாரங்களை செய்து அனுப்பியிருந்தார் பூங்கோதை.
முக்கியமாக முத்துவேலுக்கு பிடிக்குமென பரப்பட்டட்ட செய்தியின் விளைவால் ஒரு பெரிய எவர்சில்வர் வாளி நிரம்ப தேன்மிட்டாய்கள் ஜீராவில் குளித்துக்கொண்டு இருந்தது.
“எங்கடா பெரியவனை?…” என அன்பு கேட்க,
“அவன் கடை வாசல்லையே இறங்கிட்டான். நீங்க இதை எல்லாம் எடுத்து வைங்க. நான் ப்ரெஷ் ஆகிட்டு வரேன்…” என்றான் வாசுதேவகிருஷ்ணன்.
மருமகள்களுடன் ஹாலில் இருந்தவற்றை எல்லாம் பிரித்து எடுத்து வேறு வேறு காற்று புகா பாத்திரங்களில் போட்டு வைக்க,
“திரும்பவும் மறுசீரா?…” என அலுத்துக்கொள்வதை போல பார்த்தலும் முத்துவேலின் கண்கள் என்னென்ன என்பதையும் கவனித்துக்கொண்டது.
“எப்ப கிளம்பி எப்ப வந்து சேர்ந்திருக்காங்க?…” முத்துவேல் எரிச்சல் குரலில் சொல்ல,
“ட்ராபிக்கா இருக்கும்ங்க…” அன்பு சமாளிக்க,
“என்னம்மா விமலா, அங்க இருன்னு சொன்னதும் சட்டுன்னு இருந்துட்ட போல?…” என கேட்க,
“நீங்க வேண்டாம்னு ஒரு வார்த்தை சொல்லியிருந்தாலும் அவ அங்க இருந்திருப்பாளா? நாம சொல்லவும் தான் இருந்தா. அதுவும் அவங்க கேட்டும் நாம மறுத்தா உங்களுக்கு கௌரவமா இருக்காது பாருங்க…” என்று விமலாவிற்கு பதில் அன்புக்கரசியே பதில் சொல்ல அவரை முறைத்தார் முத்துவேல்.
அதை கண்டுகொள்ளாத அன்புக்கரசி வேலையில் தீவிரமாய் இருப்பதை போல காட்டிக்கொண்டவர்,
“விமலா அடுப்படில இன்னும் ரெண்டு டப்பாவை எடுத்து வச்சிருக்கேன். போய் எடுத்துட்டு வா…” என்று அவளை அனுப்ப முத்துவேல் அடுத்து அபூர்வாவின் பக்கம் திரும்பினார்.
“சின்ன மருமகளே…” என ஆரம்பிக்க,
“பூர்வா என் மொபைல் கார்ல இருக்கு. எடுத்துட்டு வா…” என்று மாடியில் இருந்து வாசுதேவகிருஷ்ணன் குரல் கொடுக்க எரிச்சலானது முத்துவேலுவுக்கு.
“எதையாச்சும் பேச விடுறீங்களா? அம்மாவும் புள்ளையும் மாத்தி மாத்தி உசுரை வாங்கறீங்க…” என கத்த,
“மெதுவா பேசுங்க, அப்பறம் அவன் பாட்டுக்கு இப்பவே பொண்டாட்டியை கூட்டிட்டு போயிட போறான். நானே நாளைக்கு போன்னு சொல்லி வச்சிருக்கேன்…” என மெல்லிய குரலில் அன்பு சொல்ல,
“இது என் வீடு. நான் எப்படி பேசனும்னு நீ சொல்லுவியோ?…” என்று மீண்டும் அவர் எகிற காரில் இருந்த மொபைலை எடுத்து வந்த அபூர்வாவிற்கு முகம் கன்றியது அவர் சொல்லிய என் வீடு என்பதில். ஆனாலும் காட்டிக்கொள்ளாமல் கேட்காததை போல கடந்து மாடியேறிவிட்டாள்.
“கேட்டிருப்பாளோ, போய் வாசுக்கிட்ட சொல்லிருவாளோ?…” என மீண்டும் அன்பு கேட்க,
“கேட்டிருப்பான்னு தான் தோணுது. ஆனா முகத்தை பார்த்தாலும் கணிக்க முடியலையே. அவன்கிட்ட சொல்லுவாளா? இது என்ன பழக்கம்? குடும்பத்தை பிரிக்கிற சோலி….” என்று முகம் சுளிக்க,
“உங்கக்கிட்ட சொல்லாம நான் மறைச்சா உங்களுக்கு எப்படி இருக்கும்?…”
“அதெப்படி நீ என்கிட்ட மறைப்ப? நீ என் பொண்டாட்டி. என்கிட்டே தானே எல்லாம் சொல்லனும்…”
“அதை மருமக செஞ்சா மட்டும் குடும்பத்தை பிரிக்கிறதா?…” என கேட்கவும் முத்துவேல் தீயாய் முறைக்க,
“இப்ப நான் என்ன தப்பா சொல்லிட்டேன்னு முறைக்கறீங்க? நீங்க கேட்டது தான பதில் சொன்னேன். சரி அதை விடுங்க. இந்தாங்க உங்களுக்கு புடிக்கும்னு உங்க சம்பந்தியம்மா தேன்மிட்டாய் செஞ்சு குடுத்திருக்காங்க…” என்று காண்பிக்க,
“இவ்வளவா?…” என அதை பார்த்து வாயை பிளந்தார்.
பாக்கெட் போட்டு விற்றால் எத்தனை போடலாம் என அவரின் கண்கள் சட்டென கணக்கில் தாவ உடனே மூடியை போட்டு மூடிய அன்புக்கரசி,
“அப்பறமா எடுத்து தரேன்…” என சொல்லிவிட்டு அதை தூக்கிக்கொண்டு அடுப்படிக்குள் சென்றுவிட்டார்.
“அத்தை மாமா கடைக்கு போகலையா?…” என விமலா கேட்க,
“என்னமோ தெரியலை மனுஷன் நகரவே இல்லை. இங்கனவே இருக்காரு…” என்று அன்புக்கரசியும் சொல்ல,
“லட்சுமி எங்க?…”
“அவ மாடிக்கு வாசுக்கிட்ட போன் குடுக்க போனா. வரட்டும் வா நாம இதை எடுத்து வைப்போம்…” என விமலாவை வெளியே அனுப்பாமல் தன்னுடனே வைத்துக்கொண்டார்.
இளையமகன் இறங்கி வருவதற்காக காத்திருந்தார் முத்துவேல். பார்வை வாசலுக்கும், மாடிப்படிக்குமாய் தாவிக்கொண்டு இருந்தது. அவ்வப்போது எட்டி எட்டி பார்த்துக்கொண்டிருந்த அன்புக்கரசியின் மனது குடுகுடுவென மூளையின் ஆராய்ச்சிக்கூடத்திற்கு ஓடியது.
“என்னத்தை யோசனையா இருக்கீங்க?…”
“உன் மாமாவை பார்த்து தான். சோழியன் குடுமி சும்மா ஆடாது. இவர் இந்த நேரம் இங்குட்டும் அங்கிட்டுமா சுத்திட்டு இருக்காரே. யார் வர போறான்னு யோசிக்கறேன்…”
“உங்களுக்கே தெரியலையா? ஆச்சர்யம் தான்…” என விமலா சிரிக்க,
“என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியுது?…”
“வாசுவுக்கு அம்மா மாதிரி தெரியுது…” என அவளும் சொல்லி சிரிக்க அவளின் சிரிப்பை பார்த்தவர்,
“அங்க சந்தோஷமா இருந்தியா? அந்த மூளை கெட்டவன் உன்கிட்ட சிரிச்ச முகமா இருந்தானா?…” என கேட்க,
“ஹ்ம்ம், ரொம்ப சந்தோஷமா தான் இருந்தோம். உங்களை தான் மிஸ் பண்ணோம்…”
“ஆமா அங்கயும் என்னை நினைக்கறதை விடாத…” என்று அவளின் தலையில் கொட்டியவர்,
“மாத்திரை எதுவும் எடுத்துட்டு போகலையே. ஒன்னும் பிரச்சனை இல்லை தானே? நாளைக்கே ஹாஸ்பிட்டல் போய் பார்த்துட்டு வருவோம்…” என சொல்லவும் தலையசைத்தாள்.
மேலே வாசுவின் அறையில் அபூர்வா ஜன்னலில் நின்று வேடிக்கை பார்த்தபடி இருக்க அவன் யாரிடமோ போனில் மிக மெல்லிய குரலில் தீவிரமாக பேசிக்கொண்டிருந்தான்.
ஆனால் பார்வை மட்டும் அவளின் முகத்திலேயே படிந்திருந்தது. பேசி முடிக்கும் வரை அபூர்வாவும் திரும்பவில்லை. மொபைலை வைத்தவன்,
“பூர்வா இங்க வா…” என அழைக்கவும் திரும்பியவள் அவனருகே சென்று அமர்ந்தாள்.
“என்ன வீட்டை நினைச்சு கவலையா இருக்கியா நீ?…” என கேட்க,
“ஹ்ம்ம், ம்ஹூம். ஆமா…” என மாற்றி மாற்றி அவள் ஆம், இல்லை என்று தலையசைக்க,
“என்னாச்சு உனக்கு?…” என யோசனையாக பார்த்தான்.
“இல்லையே ஒண்ணுமில்லை….” என மறுத்தவள்,
“எனக்கும் ட்ரஸ் சேஞ்ச் பண்ணனும். பெட்டி கீழே கார்ல இருக்கு. எடுக்கனும்…” என சொல்ல,
“ஓகே வா, நான் எடுத்து தரேன்…” என்று கீழே இறங்க அவனுடன் சேர்ந்து அபூர்வாவும் வரவும் முத்துவேல் நிமிர்ந்து அமர்ந்தார்.
“இவர் என்ன கடைக்கு செல்லாமல் இந்நேரம் இங்கிருக்கிறார்?” என்ற யோசனையுடன் பார்த்தபடி வாசலுக்கு விரைந்தான்.
பெட்டியை இறக்கியவன் இன்னொரு பேக்கை எடுத்து அதை மட்டும் அவளிடம் கொடுத்துவிட்டு தங்கள் பெட்டிகளை எடுத்து தங்களுடைய காருக்கு மாற்றினான்.
“என்ன மேல கொண்டு வரலை? பேக் மட்டும் இருக்கு…” என,
“நாளைக்கு காலையிலையே நாம நம்ம வீட்டுக்கு போய்டுவோம். அங்க ஒரு நாள் ரெஸ்ட்…”
“நிஜமாவா?…” என சட்டென மலர்ந்த சிரிப்புடன் அவள் கேட்க அதுவரை வாடியிருந்த முகத்தில் தெரிந்த வெளிச்சத்தில்,
“அப்பா ஏதாவது சொன்னாரா பூர்வி?…” என்றான் கண்டுகொண்ட பாவனையில். அவள் அமைதியாக இருக்கவும்,
“நினைச்சேன். என்ன பேசினார்…” என கேட்க,
“அதை விடுங்க. நாளைக்கு எப்போ போறோம்? அதை சொல்லுங்க. இந்த பேக்ல என்ன இருக்கு?…” என வரிசையாய் கேட்டு பேச்சை மாற்ற,
“இன்னைக்கு ட்ரெஸ் பேக் பண்ணும் போதே நான் இன்னைக்கு இங்க தங்கறதுக்கு மட்டும் எடுத்து இந்த பேக்ல வச்சுட்டேன். சும்மா பெட்டியை மேலையும் கீழயும் தூக்கிட்டு இருக்க முடியாதுல. அதான்…” என்று சொல்லி,
“நாளை மறுநாள் நாம வெளியூர் போகலாம்னு இருக்கேன். சின்னதா ஒரு ட்ரிப். இப்ப விட்டா அடுத்து சான்ஸ் எப்ப இருக்குமோ? எனக்கே தெரியாது. அதனால முடிச்சுட்டு வந்திருவோம். ஹேப்பி…”
“சோ ஸ்வீட்…” என்றாள் சந்தோஷமாய். அவள் சொல்லியதில் புன்னகைத்தவன்,
“பார்ரா கண்மணி கொஞ்சவெல்லாம் செய்யறாங்க…” என சொல்லி சுற்றிலும் பார்வையை ஓட்ட,
“நான் உள்ள போறேன்…” என்று திரும்பியவளின் கையை பிடித்து நிறுத்தியவன்,
“செய்யற வேலையை முழுசா ஒழுங்கா செய்யனும். எங்க என் கன்னத்தை பிடிச்சு சொல்லு பார்ப்போம்…” என முகத்தை அவளின் முன்னால் நீட்டி சொல்ல,
“ம்ஹூம் மாட்டேன்…” என்று வேகமாய் வீட்டுக்குள் வந்துவிட அவளை துரத்துவது போல அவனும் வேகமாய் உள்ளே வர,
“அன்பு…” என்று முத்துவேல் சத்தமிட இப்ப என்னவென்பதை போல பார்த்தவன்,
“பூர்வா நீ போய் ப்ரெஷ் ஆகிட்டு வா…” என சொல்லி,
“அம்மா ஒரு டீ…” என்று சத்தமிட்டான்.
“இந்தாம்மா நில்லு…” என அபூர்வாவை நிறுத்த மாடிப்படிக்கு சென்றவள் மீண்டும் ஹாலிற்கு வந்தாள்.
“உட்காரும்மா. பேசனும்…” என சொல்ல,
“என்ன பேசனும்?…” என்றான் வாசுதேவகிருஷ்ணன் இப்பொழுது நேரடியாக. அவனை அழுத்தமாய் பார்த்த முத்துவேல் வாயை திறக்கும் முன்,
“சீக்கிரம் சொல்லுங்க. எனக்கு அவசரமா ஒரு வேலை இருக்கு. இப்ப வெளில கிளம்பனும்…” அவன் முதலிலேயே சொல்லிவிட பல்லை கடித்தார் முத்துவேல்,
“என்ன வேலை இருந்தாலும் முதல்ல…” என்றவரை இடை மறித்து,
“எனக்கு வேலை தான் முதல்ல. அப்பறம் தான் மத்தது. இப்ப சொல்லுங்க…”
இருவரின் பேச்சுக்களின் ஆரம்பமே காரசாரமாய் இருக்க அன்புக்கரசியும் விமலாவும் முகத்தில் பயத்துடன் பார்த்தனர்.
“அன்பு பவி வரா இவங்க ரெண்டுபேரையும் பார்த்து கிப்ட் குடுக்க. இன்னைக்கு தான் ஊர்ல இருந்து வந்திருக்கா. வரவும் எனக்கு கால் பண்ணினா. உன் புள்ளையை இருக்க சொல்லு…” என சொல்ல பவி என்றதிலேயே அபூர்வாவிற்கு புரிந்துபோனது.
வேகமாய் தன் கணவனை பார்க்க அவள் நினைத்ததை விட கோபமாய் தான் இருந்தது. மனதினுள் ஏதோ முள் தைத்தது போல தோன்றியது அபூர்வாவிற்கு.
அங்கே நடக்கும் பேச்சுவார்த்தை அனைத்தும் மறந்தது. ஏன் இத்தனை கோபம் அந்த பெண்ணின் மேல்? அதுவாக இருக்குமோ? என யோசித்து யோசித்து குழம்பியவள் அமைதியாய் இருக்க,
“நீ என்னம்மா உன் புருஷனோட வேலைக்கு நீயும் கிளம்ப போறியா?…” என கேட்கவும் தான் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள்.
“என்ன மாமா?…” என புரியாமல் விழிக்க,
“சரித்தான், ஒருத்தன் நான் சொல்றதை கேட்கமாட்டேன்னு பிடிவாதமா இருக்கான். அவனுக்காக நான் கொண்டு வந்த மருமக நான் என்ன பேசினேன்றதையே கேட்கலை. நல்லா குடுக்கீங்க மரியாதை…” என நக்கலாக சொல்ல,
“அம்மா டீ கேட்டேன்…” என வாசுதேவகிருஷ்ணன் ஞாபகப்படுத்த அன்புக்கரசி கெஞ்சல் பார்வையுடன் உள்ளே சென்றார்.
விமலா அங்கேயே நிற்க அவளின் போன் அடித்தது. அந்த சத்தத்தில் அவளும் உள்ளே செல்ல அதிசயத்திலும் அதிசயமாய் மருதவேல் தான் அழைத்திருந்தான். ஆச்சர்யத்துடன் எடுத்தவள்,
“என்னங்க வீட்டு லைன் கிடைக்கலையா? மாமாக்கிட்ட குடுக்கனுமா?…” என கேட்க,
“ஏய் ஏய் இருடி, கொண்டு போய் நீட்டிறாத…” என்று அலறவும்,
“மெதுவா பேசுங்க. காது கிழியுது…”
“விமலா…” என்றான் மிக மெல்லிய குரலில் கிசுகிசுப்பாக. அதில் சிரித்துவிட்டவள்,
“என்ன இதெல்லாம்?…”
“ஏன்டி போன் பண்ணலைன்னாலும் குத்தம். ஆடி ஆவணின்னு டயலாக் விட வேண்டியது….”
“ஆடி ஆவணியா?…”
“அதான் சொன்னியே பொங்கல் தீபாவளின்னு…”
“அதுக்கா?…” என மீண்டும் சிரிக்க,
“சும்மா தான் கூப்பிட்டேன். என்ன செய்யற?…” என்று ஆரம்பிக்க,
“ஒரு ரகளை நடக்க போகுது. வேடிக்கை பார்க்க நிக்கறேன்…” என்றதும்,
“அப்பாவா? உன்னை திட்டிட்டாரா? நாம அங்க தங்கினதுக்கா?…” என்றவனின் குரலில் உதறல் அப்பட்டமாக தெரிய,
“இம்புட்டு பயம் இருக்கறவரு அப்பா காலை கட்டிட்டிக்கிட்டு அப்பவே கிளம்பி வந்திருக்க வேண்டியது தானே?…” விமலா கிண்டலாய் பேச,
“கூடிப்போச்சு உனக்கு…” என்றவன் என்ன பிரச்சனை என கேட்க,
“பவி வராளாம். அதுக்கு வாசுவை இருக்க சொல்லி மாமா பேசறாங்க…”
“பேசறாருன்னு சொல்லாத. ஆடர் போடறாருன்னு சொல்லு…”
“அப்பப்பா, நீங்க தானா? போன் பண்ணினதே ஆச்சர்யம்னா இது இன்னுமே பெரிய அதிசயமால இருக்கு…” என்று சொல்லவும்,
“உன்கிட்ட பேசனும்னு கூப்பிட்டேன் பாரு…”
“அப்ப வச்சிடவா?…” என்றாள் விமலா.
“தத்தி தத்தி…” என அவளை சொல்ல,
“யாரு நானு?…”
“சரி, சரி, எதுவும் பிரச்சனைன்னா ஒரு போன் பண்ணு. அப்பா கடைக்கு வரதுக்குள்ள போன் பண்ணு…” என சொல்லி வைத்துவிட சிரித்தபடி தனது போனை வைத்துவிட்டு மீண்டும் ஹாலுக்கு வர வாசுதேவகிருஷ்ணன் டீ குடித்துக்கொண்டு இருந்தான்.
“இப்ப இவன் இருப்பானா மாட்டானா?…” என அன்புக்கரசியிடம் முத்துவேல் பொங்கி பொங்கி பேச,
“ம்மா, நான் கிளம்பறேன். சும்மா யாருக்காகவும் என் வேலையை தள்ளி போட முடியாது. இதென்ன மளிகைக்கடை வேலையா? இன்னைக்கு சரக்கு இறங்கலைன்னா நாளைக்கு பார்த்துக்கலாம்னு நினைக்க. போலீஸ்…”
அவன் மீசையை முறுக்கிக்கொண்டு சொல்லிய விதத்தில் முத்துவேலுக்கு கொதித்தது.
“ஓஹ் பதிலுக்கு பதிலா? எனக்கு அது தேவை இல்லை. இவன்…”