திருமணத்திற்கு வர முடியாதென்றும், இப்பொழுது பேச நேரமில்லை என்றும், கூடவே திருமண வாழ்த்துக்களையும் சேர்த்தே அனுப்பியிருக்க படித்து பார்த்தவளுக்கு எரிச்சல் மண்டியது.
“இவன் சாமியாராக தான் லாயக்கு” என சாபம் கொடுத்தவளாக போனை வைத்துவிட அவள் தான் அனுப்பிய மெசேஜை பார்த்துவிட்டதன் குறிப்பு தெரியவும் சிரிப்புடன் வைத்துவிட்டு வேலையை பார்த்தான்.
பேசினால் பேசிக்கொண்டே தான் இருப்பாள் அஞ்சலி. அதனாலேயே பேச்சை குறைத்தான்.
அஞ்சலியிடம் சொல்லியபடி படிப்பு முடிந்து வந்தவன் தனது கனவுகளை நனவாக்க தொழிலை தொடங்குவதற்கான அனைத்து வேலைகளையும் துரிதப்படுத்தினான்.
அரசாங்கத்திரம் தொழிற்சாலை நிறுவதற்கான அனுமதிகள் பெற்று தாமதமின்றி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது.
அதுவரை தேங்காய்களையும், தேங்காய் எண்ணையையும் மட்டுமே செய்து கொண்டிருந்த தொழிலை பலமடங்கு விரிவாக்கம் செய்தான் அக்னிசெல்வன்.
தங்களுக்கு சொந்தமான தோப்பில் இருந்து வரும் காய்கள் பத்தாமல், இன்னும் தேங்காய்களை கணிசமான தொகைக்கு கொள்முதல் செய்து இன்றுவரை அவர்கள் நிறுவனத்திற்கென ஒரு தனி சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.
“ஸார்…” என்று ஸ்ரீநிவாஸ் வந்து நிற்க,
“டிப்போவுல உரிச்ச மட்டைகள் எல்லாம் பாதி நேத்து மழையில நனஞ்சிருக்குது. அதை கவனமா அடுக்காததை என்னண்ணி விசாரிச்சீங்களா ஸ்ரீநிவாஸ்?…” என கேட்க,
“அதை சொல்ல தான் வந்தேன் ஸார். ரொம்ப இல்லை. ஒரு மூட்டை உரிச்ச மட்டை தான்…”
“ஒரு மூட்டைன்னா? அதுல எத்தனை கட்டிருப்பாங்க சொல்லுங்க…” என கேட்க திருதிருவென விழித்தான் அவன்.
“எதையுமே ஈஸியா சொல்ல பழகாதீங்க. ஒரு தேங்காயோட மட்டைன்னாலும் அது எனக்கு நஷ்டம் தான். புரியுதா?…” என கேட்டு இன்னும் அவனை ஒருவழி செய்தவன்,
“போய் சாப்பிடுங்க. நானும் வீட்டுக்கு கிளம்பறேன். அப்பா வருவாரு அவர் கூட உள்ள ரவுண்ட்ஸ் போகனும் நீங்க. அப்ப வேண்டாம்னு சொன்னாலும்…” என சொல்லிவிட்டு தனது மொபைலையும் பைக் சாவியையும் எடுத்துக்கொண்டு வெளியேற வானம் இருண்டு கொண்டு கொட்டித்தீர்க்க காத்திருந்தது.
அந்த குளுமையை வெகுவாய் ரசித்தவன் பைக்கை ஸ்டார்ட் செய்து வீட்டை நோக்கி கிளம்பினான்.
———————————————————-
“அம்மா இன்னும் எவ்வளவு நேரம்? பசிக்குது…” என்றவளின் குரலில் “ஐயோ” என அலுத்துக்கொண்ட கனகா வேகமாய் ஓடினார் அடுக்களைக்கு.
அங்கே தோசை கல்லை அடுப்பில் ஏற்றி பசியின் வாட்டம் முகத்தில் தெரிய களைப்புடன் நின்றாள் இனியகீர்த்தனா.
“இன்னும் எட்டு மணி கூட ஆகலைடி. அதுக்குள்ளே இந்த பாடு படுத்தற?…” என்று சலிப்புடன் உள்ளே வந்தார். பிரிட்ஜ்ல் இருந்து மாவை எடுத்தவர் அதனை பார்க்க,
“என்னம்மா கிணத்துக்குள்ள தேடறீங்க?…” என்ற மகளை முறைத்துவிட்டு,
“கொஞ்சம் பேசாம இரு. அப்பாவுக்கும் புள்ளைக்கும் நைட்டு சோறு இறங்காது…” என சொல்லி மிக்ஸியை எடுக்க,
“குழம்பு இருக்குன்னு சொன்னீங்க. சட்னி செய்ய போறீங்களா?…” என்றால் சிரிப்புடன் தன் தாயை அறிந்தவளாய்.
“ஆமா, கொஞ்சமா பொரிகடலை சட்னி செய்யறேன். பூண்டு குழம்பும் அதுவும் சரியா இருக்கும்…” என சொல்ல,
“இன்னைக்கும் டிங்கரிங்கா? இதெல்லாம் அநியாயம்…” என சோர்வுடன் முறைக்க,
“நல்லா தான் இருக்கும். பேசாம் இரேன்…” என்றவர் பெரிய ஜாரில் மதியம் வைத்த மீந்த சாதத்தை உப்பும், தயிரும் விட்டு மையாக அரைத்தவர் தோசை மாவுடன் கலந்தார்.
“இந்த டச்சப் என்னைக்கு அப்பாவுக்கு தெரியுமோ அன்னைக்கு ஒரே அப்பு தான்…” என சிரிக்க,
“வேலை பார்க்கற பொண்ணு மாதிரியா பேசற? வாயை குறை. எப்ப பார்த்தாலும் லொடலொடன்னு…” என சொல்லிய கனகா படு சாமர்த்தியம்.
எந்த பொருளும் அவரிடத்தில் வீணாகாது. அது உணவோ, உடையோ வீட்டு பொருளோ. கீழே போடவே மனதில்லாமல் அதனை ஏதாவது சரிசெய்து உபயோகிக்க தான் பார்ப்பார்.
அவர் மாவை கரைக்கும் பொழுதே வெங்காயத்தை எடுத்து உரிக்க போன மகளிடம் இருந்து அதனை பறித்தவர்,
“இந்த தோசைக்கு வெங்காயம் போட்டா நல்லா இருக்காது. நாளைக்கு மாவு அரைச்சு நாளான்னைக்கு போட்டு தரேன்…” என்று செல்லமாக சொல்லவும் உருகினாள் இல்லை மகள்.
“ஆஹா, அம்மா கனகா தானே? நீ செய்வ…” என கிண்டல் பேசியவள் பின் சிரிப்புடன்,
“ஆசப்பட்ட வாழ்க்கை கிடைக்கலைன்னா கிடைச்ச வாழ்க்கையை ஏத்துக்கனும். திரிசா இல்லைன்னா திவ்யா…” என்று சொல்ல,
“என்னடி உளர்ற…” என்றார் புரியாமல்.
“நான் ஒன்னும் உளறலை. வெங்காய தோசை கிடைக்கலைன்னா பரவாயில்லை. தோசையே கிடைக்கலைன்னா? அதான் அதுக்கு தத்துவம் சொல்லிட்டு இருக்கேன்…”
“தோசை வேணுமா வேண்டாமா?…” என முறைக்க,
“நீயெல்லாம் ஒரு அம்மா. போடு இதுல…” என திட்டிவிட்டு தட்டை நீட்டி தோசையை வாங்கிக்கொண்டாள் இனியகீர்த்தனா.
“கீர்த்தி…” தந்தை தங்கதுரையின் குரல் கேட்க,
“அப்பா, சாப்பிட்டுட்டு இருக்கேன்…” என்று அடுக்களைக்குள்ளே இருந்தே பதில் பேசினாள்.
“மழை வருதும்மா…” என்றதுதான் தாமதம்,
“போச்சு இந்தா வந்துட்டேன்…” என சத்தம் போட்டுக்கொண்டே தட்டை அங்கே வைத்து தோசையை மூடி விட்டு கையை கழுவிக்கொண்டு மாடிக்கு ஓடினாள்.
“தெய்வமே புயல் வேகத்துல போறேன். அதுவரைக்கும் சொட்டு தண்ணி எதுவும் துணில படாம பார்த்துக்கோ…” என வேகமாய் ஓடினாள்.
அதற்குள் லேசாய் தூறல் போட்டு துணிகளில் அங்காங்கே மழை துளிகளின் அடையாளங்கள் வட்டவட்டமாய் தன் இருப்பை காட்டிக்கொண்டு இவளுக்காக காத்திருந்தது.
“போச்சு போச்சு…” என கோபத்துடன் அந்த புடவையை எடுத்தவள் அதே வேகத்துடன் வெளியே வந்தாள்.
“சொன்னேன்ல நான், நானே வந்து இதுக்கு மஞ்சள் வைக்கறேன்னு. இப்ப பாருங்க…” என கீழே வந்து சோகமாய் சொல்ல,
“கீர்த்திம்மா, அம்மா கை தவறி தான் மஞ்சள் பட்டுருச்சு…” என்று தாய் வருத்தமான குரலில் சொல்லவும்,
“அச்சோ இதுக்கு போய் பீல் பண்ணுவாங்களா? விடுங்கம்மா, இது இல்லைன்னா வேற புடவை…” என சமாதானம் செய்தவள் அந்த புடவையை தன் படுக்கையறையில் கட்டிலில் விரித்துவிட்டு பேனை போட்டுவிட்டு வந்து மீண்டும் சாப்பிட ஆரம்பித்தாள்.
“அது ஆறிடுச்சேடா. வச்சுரு. வேற வார்த்து தாரேன். இதை நான் சாப்பிட்டுக்குவேன்…” என கனகா சொல்ல,
“ம்ஹூம், இதுவே போதும். இன்னும் ஒரு குட்டி தோசை…” என வாங்கிக்கொண்டவள் உண்டுமுடித்து வெளியே வர தங்கதுரையும் சாப்பிட்டு முடித்திருந்தார்.
“அம்மாவை சாப்பிட சொல்லுடா…”
“இதோ ஊத்திட்டு இருக்காங்கப்பா…” என்று சொல்லி அவர் சாப்பிட்டு வைத்திருந்த தட்டை வாங்கி சென்று அங்கே இன்னும் கொஞ்சம் குவிந்திருந்த பாத்திரங்களுடன் போட்டு அனைத்தையும் கழுவ ஆரம்பித்தாள்.
“கீர்த்தி அம்மா உன்னோட சேலையில ஒன்னு எடுத்து தரேன். திருவிழாவுக்கு அதை கட்டிக்கோயேன்…” என சாப்பிட்டுக்கொண்டே சொல்ல,
“இப்ப என்ன இதையே கட்டிக்குவேன். அப்பறம் அக்கா கோச்சுப்பா, நான் எடுத்து தந்ததை கட்டலைன்னு…”
“ராகாட்ட நான் சொல்லிக்கறேன்டி இப்படின்னு…” என சொல்ல,
“சரி பார்ப்போம்…” என்று வேகவேகமாய் கழுவி கவிழ்த்தி வைக்க அதற்குள் அடுப்பை எல்லாம் துடைத்துமுடித்து வேலையை முடித்துக்கொண்டு ஹாலிற்கு வந்து அமர்ந்தனர்.
“நாளைக்கு எப்போ புறப்படனும்ங்க? கீர்த்திக்கு லீவ் இல்லைன்னு சொல்லிருக்காங்க…” என கனகா பேசிக்கொண்திருக்க,
“கனகாக்கா…” என்று வந்தாள் பக்கத்து வீட்டில் இருக்கும் குமாரி.
“வாம்மா, குமாரி…” என்று வெளியே எழுந்து சென்று கேட்க,
“அவசரமா நாளைக்கு ஓர் விசேசத்துக்கு பூ கேட்டாங்க. கட்டி தரீங்களா?…” என கேட்க,
“அதுக்கென்ன? போயி எடுத்துட்டு வா…” என கனகாவும் சொல்ல,
“எடையெல்லாம் போட்டுட்டேன். மவகிட்ட குடுத்தனுப்புதேன். கட்டிட்டா ஒத்த சத்தம் குடுங்க. இல்லைன்னா விடியக்காலையில வந்து வாங்கிக்கறேன். காசு காலையில தரேன்…” என சொல்லவும் சரி என்று அனுப்பிவிட்டு உள்ளே வர,
“இன்னும் இந்த வேலை வேணுமா கனகா? என்னத்துக்கு போட்டு அலுத்துக்கற?…” என கவலையுடன் கேட்டவரை பார்த்த கனகா மகளை தேட பார்வையை ஓட்ட,
“குடிக்க வெந்நீர் கேட்டேன். வைக்க போயிருக்கா…” என சொல்லவும்,
“அவளுக்காகத்தான். ஒத்த ஒத்த பைசாவா இருந்தாலும் நாளைப்பின்ன ஊறுகா மாறினாலும் உதவும்ல. அதுக்குத்தான். நான் என்ன கல்லா சுமக்கறேன். ஒக்காந்த இடத்துல பேசிக்கிட்டே செலாத்தலா பூவ கட்டிருவேன். இதுக்கு போட்டுக்கிட்டு…” என சொல்லியவர் பூ வந்ததும் வாழை நாரை தண்ணீரில் ஊற வைத்தார்.
உள்ளே இருந்த கீர்த்தனாவின் காதில் தாயின் மெல்லிய குரல் கூட கேட்கத்தான் செய்தது. லேசாய் கண்கள் கலங்குவதை போல இருக்க சிங்க் பைப்பை திறந்துவிட்டு முகத்தை கழுவியவள் வெந்நீரை தம்ளரில் ஊற்றிக்கொண்டு வந்தாள்.
“அப்பா மாத்திரை போட்டுடுங்க அப்படியே. குடிக்கற பதத்துல தான் இருக்குது…” என சொல்லி மாத்திரைகளை பிரித்து தர,
“அப்படியேவா வச்ச? கொதிக்கலையா தண்ணி?…” என்று கேட்டுக்கொண்டே நாரை உருவி பூவை கட்ட ஆரம்பித்தார்.
இரண்டு கவர் நிறைய இருந்தது பூ. மல்லிகையும், கனகாம்பரமும் இருக்க கட்டி முடிக்கவே நடுஜாமம் எட்டும் என்பதை பார்த்துக்கொண்டே மாத்திரையை தந்தைக்கு கொடுத்துவிட்டு,
“நல்லா கொதிக்க வச்சு ஆத்தி தான் கொண்டு வந்திருக்கேன். போதுமா?…” என சொல்லி தாயருகே அமர்ந்தவள் இன்னொரு நாரை எடுத்து கனகாம்பரத்தை கட்ட ஆரம்பித்தாள்.
“நீ போய் படு கீர்த்தி. நான் கட்டிக்கறேன்…” என சொல்ல,
“விடிய விடிய கட்டுவீங்களா? சும்மா இருங்கம்மா…” என்று அவருடன் பேசிக்கொண்டே தானும் வேகவேகமாய் கட்ட ஆரம்பித்தாள். சிறிது நேரம் அவர்களுடன் அமர்ந்திருந்த தங்கதுரை மாத்திரை போட்டதற்கு உறக்கம் தள்ள எழுந்து உள்ளே படுக்க சென்றுவிட்டார்.
தங்கதுரை ஒரு தனியார் வங்கியில் கிளார்க் பணியில் இருப்பவர். இரு பெண்பிள்ளைகள். ராகதேவி, இனியகீர்த்தனா. பெருகிய வருமானமில்லை என்றாலும் கையை கடிக்காதளவிற்கு தான் இருந்தது.
ராகதேவியை மனம் முடித்து கொடுத்திருப்பது தன்னுடைய சொந்த ஊரில் இருக்கும் உடன்பிறந்த அக்கா மகனிற்கு தான். என்னதான் பெண்ணை அக்காவின் பையனுக்கே தந்திருந்தாலும் சீர்வரிசைகளில் எந்தவித சமரசமும் செய்துகொள்ளவில்லை அவரின் உடன்பிறந்த அக்கா.
மகனின் ஆசைக்காக உன்னிடம் பெண் எடுக்கிறேன் என்னும் பேச்சுக்கள் பெரும்பாலும் எரிச்சலை தந்தாலும் அவர் சொல்வதிலும் உண்மை இருந்தது. அவரின் மகன் நல்ல வேலையில், நல்ல சம்பளத்தில் இருந்தும் ராகாவைத்தான் திருமணம் செய்வேன் என்பதில் உறுதியாக இருந்ததனால் மட்டுமே அந்த திருமணம் நடந்தது.
கடன்களை வாங்கியேனும் சிறப்பாக திருமணத்தை முடித்து மூச்சுவிட நினைத்தவருக்கு அப்பொழுதுதான் இன்னொரு மகளின் நினைவே வர கலங்கித்தான் போனார்.
அதன் பின்னர் வாங்கிய சம்பளமும் பாதி லோனிற்கு கழிய மீதி வெளியில் வாங்கியதில் கரைய கனகா இல்லை என்றால் கஷ்டஜீவனம் தான். அதிலும் தோள் கொடுக்க சிறுவர் பள்ளியில் வேலைக்கு சென்று பாடம் சொல்லித்தர ஆரம்பித்திருந்தாள் மகள்.
ராகாவையும் சரி, கீர்த்தனாவும் சரி குடும்பத்தின் சூழ்நிலையை அறிந்து நடந்துகொள்ளும் பெண்கள். ஆசைகள் என பெரிதாய் அவர்களுக்கு இருந்ததில்லை.
வாரம் ஒருநாள் கறி சாப்பாடு. மாதம் ஒருநாள் சினிமா. பிறந்தநாள், பொங்கல், தீபாவளிக்கு புது உடைகள். அதுவும் தாயின் தேர்வே. இப்படி வாய்க்கப்பட்ட பிள்ளைகளின் வாழ்விற்காக இதை கூட செய்யவில்லை என்றால் எப்படி என்னும் நினைப்பே தங்கதுரையை இன்னமும் உயிர்ப்புடன் வாழவைத்துக்கொண்டு இருந்தது.
மூத்த மருமகன் அக்கா மகன் என்றாலும் தாயின் குணமறிந்து திருமணம் முடியவுமே தனியாக சென்றுவிட்டான். அதுவும் தங்கதுரையின் பூர்வீக வீட்டிற்கு.
பொள்ளாச்சியில் இருக்கும் வீடும் சொந்தவீடுதான் இருந்தாலும் மனதிற்கு நெருக்கமென்னவோ சொந்த வீடு தான்.
இரு பெண்களையும் கட்டி கொடுத்துவிட்டு சொந்த ஊர், சொந்தவீடென போய் கடைசி காலத்தை கழிக்க நினைத்திருக்க மருமகனோ மகளுடன் அங்கே தான் குடித்தனம்.
அது கனகாவிற்கு பேரும் உறுத்தலாக இருந்தது. மாடியும் கீழேயும் தனிதனி வீடுதான். மாடியில் பழைய பொருட்களை போட்டு வைத்திருக்க கீழ் வீட்டில் குடித்தனம் இருந்தார்கள்.
நாளை திருவிழாவிற்கு கிளம்பி அங்கே சென்றால் தான் தெரியும் எந்தளவிற்கு வீட்டை போட்டு வைத்திருக்கிரார்கள் என்று. மூன்றுநாள் திருவிழா. வருடாவருடம் செல்லும் திருவிழா கடந்த இரண்டு வருடங்களாக செல்லமுடியாமல் போனது.
முதல் வாரம் வந்திருந்து உடைகள் எல்லாம் எடுத்து தந்து மூத்தமகள் அழைத்துவிட்டு சென்றிருந்தாள்.
“நாளைக்கு நானும், அப்பாவும் காலையிலையே கிளம்பறோம் கீர்த்தி. நீ ஸ்கூல் முடியவும் கிளம்பி நேரா ஊருக்கு வந்துரு. உன் ட்ரெஸ் எல்லாம் நான் எடுத்துட்டு போயிடறேன். சரியா?…” என கேட்கவும் தலையை ஆட்டிக்கொண்டே அவளும் சரி என்று சொல்ல கிளம்பும் பொழுது என்னென்ன எடுத்து செல்லேவ்ண்டும் என்பதை ஒரு முறை ஞாபகமாக மகளிடம் கேட்டுக்கொண்டார்.
சொல்லியதை போலவே தாய் காலையில் கிளம்பிவிட தந்தையும் சேர்ந்து கிளம்பிவிட்டார். மதியம் போல அன்று பள்ளி முடிந்து விட பஸ்ஸை பிடித்து கிளம்பி கிராமத்தில் வந்து இறங்கிவிட்டாள்.
மழை வேறு அடித்து பெய்தது. ரோடு போடுவதாக இருந்ததனால் பஸ் எதுவும் ஊருக்குள் செல்லாமல் முன்னாடியே இறக்கிவிட்டிருக்க குடையை பிடித்தபடி மெதுவாய் நடந்துவந்துகொண்டு இருந்தாள் இனியகீர்த்தனா.
“நல்லவேளை பஸ்ல இருக்கும் போதே செல்போனை கவர்ல போட்டு கவர் பண்ணினது. இல்லைன்னா அவ்வளோ தான்…” என புலம்பிக்கொண்டு நடந்துகொண்டு இருக்க தன்னுடன் வந்தவர்களில் சிலர் வேகமாய் முன்னால் சென்றுவிட்டனர்.
தனக்கு முன்னும் பின்னும் ஆட்களின் தலை தெரியாமல் இருந்தாலும் மதியம் இரண்டரை மணிக்கு பயமில்லை என சொல்லிக்கொண்டே நடந்தாள்.
அவளை கடந்து வேகமாய் சென்றது ஒரு ராயல்என்பீல்ட் பைக். சல்லென்று காற்றை கிழித்துக்கொண்டு பறந்த வாகனத்தையும் அதில் இருந்தவனை பார்த்ததுமே மூச்சடைத்து ஒருநொடி அப்படியே நின்றுவிட்டாள்.
“ஐயோ தீப்பொறி திருமுகம்…” என அவளின் இதழ்கள் முணுமுணுக்க,
“அவன்தான் போய்ட்டானே. விடு விடு” என மனது தேற்ற அதன் ஆறுதல் அரைநொடி கூட அனுபவிக்கமுடியாமல் பைக்கை திருப்பிக்கொண்டு தன்னை நோக்கி வந்துகொண்டிருந்தான் அவன் அக்னிசெல்வன்.
குடையை இறுக்கமாய் பற்றியபடி இருந்த இடத்தை விட்டு அசையாமல் அப்படியே அவள் சிலையென நிற்க அவளருகே அவன் வந்து நின்றான்.