அவரிடம் தலையாட்டிக்கொண்டு காமாட்சியை அழைத்துக்கொண்டு வெளியே சென்றவன்,
“எப்படிம்மா உங்களால இவ்வளோ பயமில்லாம அவர்க்கிட்ட பேச முடியுது?…” என,
“யாருக்கு பயமில்லை? எனக்கும் பயம் தான். ஆனாலும் வெளில காமிச்சுக்க கூடாது. அவருக்கு தெரிஞ்சிட்டா அவ்வளோ தான். மனுஷன் என்னை கண்ணாலையே உருட்டி மிரட்டி மூலையில உட்கார வச்சிடமாட்டாரு…”
இருவரும் பேசி சிரித்துக்கொண்டே கோவிலை நோக்கி சென்றனர் நடக்க போகும் விபரீதம் தெரியாமல்.
இன்னும் சிறிது நேரத்தில் நிச்சயதார்த்தம் என்னும் நிலையில் வீட்டிற்குள் புயலாய் நுழைந்தான் அனய்.
அவனை சற்றும் எதிர்பார்க்காத வைத்தியநாதன் அவனை தடுப்பதற்குள்,
“மலர். மலர்…” என உக்கிர குரலெடுத்து கத்தினான்.
நடு வீட்டில் நின்று கத்த மாடியில் இருந்த உறவு பெண்களின் சலசலப்பின் மத்தியில் அமர்ந்திருந்தவளுக்கு ஒன்றும் கேட்கவே இல்லை.
மீண்டும் மீண்டும் அனய் ஆவேசமாய் கத்த அப்பொழுதுதான கீழிருந்து ஒரு பெண்,
“மலரக்கா கீழ யாரோ ஒரு ஆளு உங்க பேரை சொல்லி கத்திட்டு இருக்காங்க. ஒரே கூச்சலா இருக்கு…” என சொன்னதுமே உண்டான நிசப்தத்தில் அனய்யின் குரல் தெளிவாய் கேட்க தூக்கிவாரி போட்டது.
“போச்சு, இங்கயும் வந்துட்டாங்க. மாமா தான் அனய் பிரச்சனையை பார்த்துக்கறதா சொன்னாங்களே? பின்ன எப்படி வந்தாங்க. இப்படி எதுவும் நடந்திட கூடாதுன்னு தான் நான் என்கேஜ்மென்ட் பத்தி என் ப்ரெண்ட்ஸ்ட்ட கூட சொல்லலை…”
சிந்தனை முழுவதும் அவன் எப்படி வந்தான் என்பதிலேயே இருக்க மீண்டும் அவனின் அலறல் அவளை தரையிறக்கிறது.
வேகமாய் எழுந்து கீழே சென்று பார்க்க தன் சொந்தபந்தங்கள் அனைவரும் அவனை வெளியேற்ற முயன்றுகொண்டிருந்தனர். அத்தனை பேரின் தடைகளையும் தகர்த்து அவள் முன் வந்து நின்றவன் மலரை பாதம் முதல் தலைவரை மேலும் கீழுமாய் பார்த்தான்.
மணமகளுக்கே உரிய அலங்காரத்தில் தேவதையென அவள் ஜொலிக்க யாருக்காக இந்த அலங்காரம் என நினைக்கும் பொழுதே அவனின் உடலில் தீப்பற்றுவதை போல எரிய ஆரம்பித்தது.
கோவத்தில் கண்கள் சிவக்க அவளை உறுத்து விழித்தவன் இது ஆத்திரப்படுவதற்கு உகந்த நேரமில்லை என நினைத்து தன் ஆவேசத்தை கொஞ்சம் தணித்துக்கொண்டு,
“வா போகலாம் மலர்…” என சொல்லி அவளின் கையை பற்ற அதுவரை பார்த்திருந்த மலரின் வீட்டு ஆண்கள் அனய்யின் மீது பாய்ந்தேவிட்டனர்.
“யாரடா நீ? எங்க முன்னாடியே எங்க வீட்டு பொண்ணை கையை பிடிச்சு இழுக்க? உன்னை இன்னைக்கு காணாபொணம் ஆக்கிடறோம்டா….”
“உங்களால முடிஞ்சதை பார்த்துக்கொள்…” என்பதை போல இறுக்கமாய் நின்றவனின் கரங்களுக்குள் மலரின் தளிர்விரல் வலிகொண்டது.
அவனின் கையிலிருந்து மலரின் கையை பிரிக்க ஆனமட்டும் முயற்சித்து அனய்யை தாக்க அவனோ எதற்கும் சளைக்காமல் தன்னை காத்துக்கொண்டே அவர்களை நிதானமாய் கையாண்டான்.
அவனுக்கு மலர் வேண்டும். இந்த திருமண ஏற்பாட்டை நிறுத்தியாக வேண்டும். அதற்கு உணர்ச்சிவசப்பட்டால் நல்லதல்ல என அவனின் மூளை அறிவுறுத்த அதனால் வந்த நிதானம் அது.
வைத்தியநாதனுக்கோ அவ்வளவு கோபம். கண்மண் தெரியாத ஆத்திரம் ஆண்டாள் மீதும் அனய் மீதும்.
“எத்தனை படித்து படித்து சொன்னேன். எங்கள் பெண்ணை விட்டுவிட சொல்லி. எத்தனை ஜம்பமாய் தாங்கள் பார்த்துக்கொள்வதாய் பேசினார்கள். இன்று எது நடக்க கூடாது என நினைத்தேனோ அது நடந்தே விட்டது. கடவுளே இதை எப்படி சரிசெய்ய?”
அதிர்வு நீங்காமல் அப்படியே சிலையாய் நின்றவருக்கு நெஞ்சில் சுருக்கென்று முள் தைத்தது போன்ற வலி எடுக்க தன் மார்பை பிடித்துக்கொண்டு சரிந்தவரை அங்கிருந்தவர்கள் தாங்கி பிடித்தனர்.
அவருக்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்த, அதற்குள் மலரை இழுத்துக்கொண்டு வாசலை தாண்டி வெளியே வந்துவிட்டான் அனய்.
மலரின் திமிறலையும் பொருட்படுத்தாமல் அவளை தன்னோடு அழைத்து செல்வதிலேயே குறியாய் இருக்க வாசலை தாண்டி நடுரோட்டிற்கே வந்துவிட்ட இந்த பிரச்சனையை வேடிக்கை பார்த்த ஊர்மக்களும் உறவுகளும் கண் காத்து வைத்து பேச ஆரம்பித்துவிட்டது.
“இவன் இம்புட்டு தகிரியமா வந்து கூட்டிட்டு போறானே? அவ இஷ்டமில்லாமையா இது நடக்கும்?…”
“அட நீங்க வேற மதினி, அவன் கையை உதறிட்டு இந்த புள்ளையால வரமுடியாதாக்கும். நம்ம ஊரு மனுஷங்க மத்தியில இந்த பொண்ண விருப்பமில்லாம இப்படி கூட்டிட்டு போவ முடியுமா? அவளுக்கும் விருப்பமாத்தேன் இருக்கும். அதான் பூனையாட்டம் போகுது…”
ஆளாளுக்கு வாய்க்கு வந்தபடி கதைகட்ட ஆனந்தி நெஞ்சில் அடித்துக்கொண்டு கதற ஆரம்பித்தார்.
“அய்யோ குடிமுழுகி போச்சே. சாதிசனங்க மத்தியில என் மானம் மரியாதை எல்லாம் போச்சே. இப்படி சந்திசிரிக்க வச்சிட்டாளே?…” அழ ஆரம்பித்தார் அவர்.
அதை கண்டுகொள்ளாதவன் அங்கிருந்து மலரை அழைத்துசெல்வதிலேயே குறியாய் இருக்க அவனின் பின்னாலே வந்து அனய்யை தாக்க முயன்ற ஒருவனை தன் பலம் கொண்டமட்டும் தூக்கி வீசி,
“எவனாச்சும் கிட்ட வந்தீங்க, உயிரோட விடமாட்டேன். இவ என்னோட வொய்ப். என்னால் நீங்க பன்றதை எல்லாம் பார்த்திட்டு இருக்க முடியாது…” கை நீட்டி அனைவரையும் எச்சரித்தவன்,
“மலர் கார்ல ஏறு…” என அவளை பலவந்தம் செய்த அனய் என்னும் மனிதனை அவன் கொண்ட காதல் பெரும் தீவிரவாதியாய் மாற்றிக்கொண்டிருந்தது.
“என்னை விடுங்க முதல்ல. ஏன் இப்படி மிருகத்தனமா நடந்துக்கறீங்க?…” அவனிடமிருந்து விடுபட முயல அதற்குள் இன்னொரு கார் வேகமாய் வந்து நிற்க அதை திரும்பி பார்த்தவன்,
“மலர் என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. நீ என்னோட வா. என்னால உன்னை விட முடியாது. முடியவே முடியாது…” என சொல்லிக்கொண்டே காருக்குள் அவளை திணித்து தானும் ஏற முயல,
“அனய் என்ன காரியம் செய்துட்டிருக்க?…” என்றபடி வேகமாய் ஓடி வந்தாள் நேத்ரா. அவளோடு ஆண்டாளும், பாலகிருஷ்ணனும் கூட.
அதற்குள் மலர் மறுபக்கம் வேகமாய் இறங்கியவள் அழுதுகொண்டே தாயிடம் சென்று,
“அம்மா…” என்று அழைக்க,
“என்னை தொடாதடி. இதுதான் நீ பட்டணத்துக்கு படிக்க போன லட்சணமா? இப்படி கமுக்கமா இருந்து குழில தள்ளிட்டியேடி…” என்று மலரை கன்னம் கன்னமாய் அறைந்து தள்ளினார்.
கோவிலுக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த சரவணனுக்கு தங்கள் வீட்டின் முன்னால் பெரும் கூட்டம் கூடியிருப்பதை கண்டு உதறல் எடுக்க,
“அம்மா, நம்ம வீட்டு வாசல் முன்னால ரொம்ப கூட்டமா இருக்கும்மா…” என்று சொல்லி தன் பைக்கை அங்கேயே நிறுத்த,
“என்ன இம்புட்டு கூட்டம்?…” என பதறிக்கொண்டே ஓட்டமும் நடையுமாக கூட்டத்தை விலக்கி பார்க்க, ஆனந்தி நடு வீதியில் வைத்து மலரை அடித்துக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ந்தார்.
வேகமாய் மலரருகே ஓடியவர் ஆனந்தியிடமிருந்து அவளை பிரித்து தன்னோடு அணைத்துக்கொண்டவர்,
“அடியாத்தி, நீயெல்லாம் ஒரு மனுஷியாடி. ராட்சசி. பெத்த பொண்ணுக்கு பாசத்தை தான் காண்பிக்கலை. அவளை நிம்மதியா வாழவும் விடமாட்டியா?…” என கத்த,
“அடிச்சதுக்கே இப்படி கோவப்படறீங்களே? அவ செஞ்சதுக்கு வெட்டி கூறுபோடனும்…” ஆவேசம் தணியாமல் மலரின் தலைமுடியை பற்ற வர,
“போதும் இதுக்குமேல அவ மேல ஒரு அடி விழுந்தாலும் நான் மனுஷனா இருக்க மாட்டேன். என்ன அம்மா நீங்களாம்?…” என சீறிக்கொண்டு அனய் வர,
“அனய் போதும். நீ பண்ணினதெல்லாம். நீ வா நாம நம்ம ஊருக்கு கிளம்புவோம்…”
ஆண்டாள் வேகமாய் அவனின் முன்னால் வந்து நிற்க அவரை தள்ளிக்கொண்டு மீண்டும் மலரை நெருங்கியவன் அவளின் கை பிடித்து,
“வா நாம போய்டலாம். இவங்க எல்லோரும் உன்னை அடிப்பாங்க. என்னால அதை பார்க்க முடியாது மலர்…” கிட்டத்தட்ட இறைஞ்சுதலையும் மிஞ்சியது அவனின் பேச்சு.
நேத்ராவிற்கோ தாளமுடியவில்லை தன் அண்ணனின் நிலைகண்டு. அதையும் விட தன் தோழியை நினைத்து இன்னமும் வருந்தினாள். அதோடு கோபமும் கூட.
“முதலிலேயே தன்னிடம் சொல்லியிருந்தால் இந்தளவிற்கு விபரீதத்தில் இதை முடிய விட்டிருக்க மாட்டேனே?” என வேதனையோடு நினைத்துக்கொண்ட நேத்ராவிற்கு அனய்யை பார்க்க பார்க்க அழுகை வரும் போல் ஆனது.
மாலை நேரம் ஆனாலும் வெயில் மண்டையை பிளக்க நடு வீதியில் ஊரார் குழுமியிருக்க புழுதியின் மத்தியில் கிட்டத்தட்ட ஒரு பைத்தியக்காரனை போல் தன் காதலுக்காக போராடும் அவனை பார்க்க தாங்கமுடியாமல் மனம் விம்மியது.
“நீ ஏன்டா இப்படி ஆகிட்ட?. வேண்டாம்னு சொல்ற பொண்ணை விருப்பத்துக்கு மாறா நீ மேரேஜ் பண்ணிக்க நினைச்சா நானே உன் மேல் கம்ப்ளைன்ட் கொடுப்பேன் பார்த்துக்க…”
தன் அண்ணனையே மிரட்ட அவனோ பரிதாபமாய் அவளை பார்த்தவன்,
“நீ கூட என்னை புரிஞ்சுக்கலை நேத்ரா. மலர்…” என்றவன் விழிகள் கசிந்து உடைப்பெடுக்க,
“அவளை பாரு அண்ணா. விட்டுட்டு. அவளுக்கு இந்த லைப் தான் பிடிச்சிருக்கு. உன்னோட சந்தோஷத்துக்காக அவளை கஷ்டப்படுத்தாத. வா போவோம்…”
நேத்ரா சொல்லவும் மலரின் முகத்தை பார்த்தவன் தலை கலைந்து அழுது சிவந்துபோய் பயத்தில் வெடவெடத்து நின்றிருந்தவளின் பிம்பத்தில் ஒரு நிமிடம் விலகி சென்றுவிட்டால் என்னவென்று தான் நினைத்தான்.
ஒரு நொடியே, ஒரு நொடி மட்டுமே. வேறொருவனுக்கு சொந்தமான பின் அவளில்லாத வாழ்க்கையை நினைத்தவன் தலையை உலுக்கி உடல் விரைத்தான்.
“நோ என்னால இவளை விடமுடியாது, வேணும்னா என்மேல கம்ப்ளைன்ட் குடுத்துக்க….” என சொல்லி திரும்ப சரவணன் அவனை மறித்து நின்றான்.
“ராஸ்கல், எவ்வளோ தைரியம் இருந்தா எங்க வீட்டு பொண்ணையே நீ கூட்டிட்டு போக நினைப்ப?…” அனய்யை அடிக்க பாய சரவணனின் உடையில் அவனை உணர்ந்துகொண்டவன்,
“நீயெல்லாம் மலருக்கு மாப்பிள்ளையா?. அதுக்கு உனக்கு என்ன தகுதி இருக்கு?…”
அனய் என்னவோ இதை கோபத்தில் கேட்டான். தன் காதலிக்கு தான் மட்டுமே சரியானவன், பொருத்தமானவன் என்னும் எண்ணத்தில்.
ஆனால் அது சரவணனின் அடிமனதை சென்று ஆட்டிப்பார்த்தது. அவனின் ரகசியத்தை அறிந்து தன்னை ஏளனம் செய்வதற்காகவே இவன் இப்படி பேசுகிறான் என குருட்டுத்தனமாய் எண்ணியவனுக்கு அனய்யின் மீது சொல்லொண்ணா கோபமும் குரோதமும் பெருகியது.
அந்த நிமிடம் தன் நிலையை மறந்தான். அவனின் குற்ற உணர்வு மறைந்தது. வாழ்நாள் முழுவதும் மலரின் வாழ்க்கையை பலி கொள்ளும் தன் சூழ்நிலையை மறந்தான்.
அந்த நிமிடம் முடிவு செய்தான் அத சொல்லவும் செய்தான் சவாலாக. இருவருக்கிடையில் ஒரு பெண்ணின் உணர்வுகள் சிதறிக்கொண்டிருந்தது.
ஒருவன் பலவருடங்களாய் காதல் கொண்டு அவளை மணம் செய்து வாழ்நாள் முழுவதும் அவளை கொண்டாடிட நினைத்தான்.
இன்னொருவனோ நொடிநேர தவறான புரிதலினால் ஆத்திரம் கொண்டு அறிவிழந்து தன்னுடைய வாழ்க்கையோடு அவளை பிணைத்து உரிமையை நிலைநாட்டி வெற்றிபெற நினைத்தான்.
இருவரின் பாதையும் பார்வையும் வேறெனில் எண்ணம் ஒன்றே. பெண்ணவளை மணம் செய்வது மட்டுமே.
ஆனால் இருவருமே அவளின் மேல் அன்பு கொண்டவர்கள் தான். ஆனால் அவளது உணர்வுகள், விருப்பங்கள், ஆசைகள் புரியாமல் போனதுதான் விந்தை.
அனய்க்கோ தன் காதலை புரியவைத்து மலரை தன்னோடு அழைத்துசென்றுவிடும் வேகம்.
அனய்யின் பேச்சில் சீண்டப்பட்ட சரவணனுக்கோ எப்படியாவது மலரை திருமணம் செய்து அனய்யின் முகத்தில் கரியை பூசிவிடவேண்டும் என்கிற ஆவேசம்.
மலரின் மனதை புரிந்துகொள்ளாமல் காதலால் அவளை வற்புறுத்துவதை அறியாமல் அனய். தான் செய்யவிருக்கும் துரோகத்தின் முகம் மறைத்து தன்னுடைய ஈகோவால் அவளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் சரவணன்.
இருவரின் மத்தியில் மலரவள் சிறிது சிறிதாய் சிதறிக்கொண்டிருந்தாள்.
“என் கையால தான் மலரோட கழுத்தில் தாலி ஏறும். நான் தான் மலரை கல்யாணம் செய்துப்பேன். அவ எனக்குத்தான் மனைவி ஆவா. உன்னால் முடிஞ்சதை நீ பார்த்துக்கோ…”
சரவணனின் சவாலில் நிதானம் இழந்தான் அனய். தன்னை மறந்தான். தன் காதலை நிலைநாட்டிவிடும் வேகம் பிறக்க கைக்குள் பிடித்திருந்த அவளின் கரத்தை சுண்டி இழுத்தவன் நொடியும் தாமதிக்காமல் அவளிதழ்களை சிறைசெய்துவிட்டான்.
கண்ணிமைக்கும் நேரத்தில் அனைவரின் மத்தியில் நிகழ்ந்துவிட்ட இந்த செயலில் சரவணன் சினம் ஏற அவனை பிடித்து இழுத்தான்.
மூச்சுக்கு போராடிய மலர் தன்னுடைய கரங்களால் சரமாரியாக அடித்தும் அனய்யை சமாளிக்க முடியவில்லை.
போராடி தோற்ற அவள் அரை மயக்க நிலைக்கு செல்ல அவளின் உடல் தளர்ந்து தொய்ய ஆரம்பிக்கவும் தான் அனய்யின் வேகம் குறைந்து தான் அவளின் நிலையை உணர்ந்து விலகினான்.
தன் கைவளைவில் அவளை நிறுத்தி கன்னத்தை தட்ட நொடியில் சுதாரித்தவள் அவனை தள்ளிவிட்ட பின்புதான் சுற்றத்தாரின் முகச்சுளிப்பை உணர்ந்தாள்.
அவர்கள் பார்வைக்கான அர்த்தத்தை கிரகித்துக்கொண்டவளுக்கு உடல் கூச முகத்தை மூடிக்கொண்டு கதற ஆரம்பித்தவளை தன் தோளில் சாய்த்துக்கொண்ட சரவணன்,
“இதுதான் நீங்க பிள்ளை வளர்த்திருக்கிற லட்சணமா?. என்ன குடும்பம் உங்களோடது?…” என வாய்க்கு வந்தபடி ஏச ஆண்டாளுக்கு அப்படி ஒரு கோபம் பொங்கியது.
அனய்யின் இந்த திடீர் செயலில் ஆண்டாள் மட்டுமல்லாது நேத்ரா, ஆனந்தி, காமாட்சி, வீட்டினுள் இருந்து தள்ளாடியபடி வந்த வைத்தியநாதன் என அனைவரும் ஸ்தம்பித்து தான் நின்றனர்.
தன் ஒட்டுமொத்த கோபத்தையும் திரட்டி அனய்யின் கன்னத்தில் தன் கரத்தை இடியென இறக்கிய ஆண்டாள்,
“இந்தளவுக்கு நீ தரம் இறங்கி போவன்னு நான் நினைக்கவே இல்லை அனய். போயும் போயும் நீ காதலிக்க இப்படி ஒரு குடும்பத்தை சேர்ந்த பொண்ணுதானா கிடைச்சது?…” என்றவர் வைத்தியநாதனை கண்டதும் இன்னமும் முகம் சிவந்தார்.
“என்னமோ என் பையன் மேல தான் தப்புன்றது மாதிரி பேசினீங்க? இன்னைக்கு என் பையன் இப்படி வந்து நிற்க காரணமே உங்க வீட்டு பொண்ணுதான். உங்க பையன் என் குடும்பத்தை பத்தி பேசறானா? அந்த தகுதி இங்க யாருக்காவது இருக்கா?…”
அனய்யின் வளர்ப்பையும், தங்களின் குடும்பத்தையும் பற்றி பேசியதும் ஆண்டாளும் தன் நிதானம் இழக்க தொடங்கினார். ஆண்டாளின் பேச்சு வைத்தியநாதனை கோபம் கொள்ள செய்ய அதுவும் ஊருக்கு மத்தியில் என்னும் பொழுது அந்த இடத்தில் பேசியாகவேண்டிய நிலைக்கு சென்றார்.
“தகுதியை பத்தி நீங்க பேச வேண்டாம் ஆண்டாள் அம்மா. உங்ககிட்ட நான் பத்து நாளைக்கு முன்னாடியே இந்த கல்யாணத்தை பத்தி சொல்லி உங்க பையன் நினைப்பை பத்தியும் சொல்லிட்டேன். அவரை நீங்கதான் கட்டுப்படுத்தனும். அதை ஏன் நீங்க செய்யலை…”
ஆம், வைத்தியநாதன் சொல்லியது போல அனய்யிடம் ஆண்டாள் அவனின் காதல் பற்றி ஒரு வார்த்தை கூட கேட்கவே இல்லை. அவனே சொல்லும் பொழுது பேசிக்கொள்வோம் என விட்டுவிட்டார்.
அதுவும் இல்லாமல் வைத்தியநாதனின் பேச்சில் இருந்து வனமலரின் நிச்சயதார்த்தம் பற்றியும் அனய்க்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் திருமணம் சீக்கிரம் முடிந்துவிட்டால் அவனே அவளை மறந்து வேறு ஒரு வாழ்க்கைக்கு தயாராகிவிடுவான் என்று தானே முடிவு செய்துகொண்டார்.
ஆனால் விதி வலியது. நேத்ராவின் மூலம் அனய்க்கு தெரியவேண்டும் என்பதுதான் கடவுளின் திருவிளையாடலோ?
“அவனுக்கு இன்னைக்கு தான் தெரியும் உங்க வீட்டு மேரேஜ் பத்தி. அதுக்காக வாய்க்கு வந்தபடி அவனை பேசுவீங்களா? எங்களை சொல்ற உங்க வீட்டு பொண்ணோட லட்சணத்தை பத்தியும் தெரிஞ்சிட்டு பேசுங்க…” என்றவர்,
“மலர், என் பையன் உன்கிட்ட வந்து விரும்பறதா சொன்னப்போ நீ மறுத்திட்ட. ஆனா திரும்ப அவன் வந்து வற்புறுத்தி பேசினதையும் உன் மாமாகிட்ட பேசினதையும் ஏன் என்கிட்டே அப்பவே சொல்லலை?…”
அவர் கேட்டதும் திடுக்கிட்டு பார்த்தவள் விழிகளில் கண்ணீர் மீண்டும் நிரம்ப ஆரம்பித்தது.
“என்கிட்டே தான் சொல்லலை. என் பொண்ணு உன்னோட க்ளோஸ் ப்ரென்ட் தானே? அவக்கிட்டையாச்சும் உன் அண்ணன் இப்படி பேசறான்னு ஏன் சொல்லலை? அப்ப உனக்கும் என் பையனை உன் பின்னால சுத்தவைக்கனும்ன்ற எண்ணமா?…”
“இதுக்கு தானா உன்னை என் வீட்டுக்குள்ள அனுமதிச்சேன்?…” அவர் சொல்லியதும் கூனிக்குறுகி போனாள் வனமலர்.
“அம்மா போதும். இன்னும் ஒருவார்த்தை அவளை தப்பா பேசினீங்க பார்த்துக்கோங்க…” என்ற சத்தம் நேத்ராவிடம் இருந்தே வந்தது.
இப்படியாக பிரச்சனைகள் பேச்சுக்கள் வளர வளர அனய்யின் காதுகளில் எதுவும் விழவில்லை. சரவணனின் கை பிடித்து அவனருகே நின்றிந்த மலர் மட்டுமே அவனின் பார்வை முழுவதும் நிறைந்திருந்தாள்.