புன்னகை – 25
ஒருவருடம் எப்படி கடந்ததென்றே தெரியவில்லை. அவன் யுஎஸ் வந்து நாட்கள் சடுதியில் ஓடியே விட்டது. அலுவலகம் சம்பந்தமாக வந்தவன் அங்கேயே தன்னுடைய வேலையை நீட்டித்து இருந்துகொண்டான்.
மீண்டும் சென்னை வரும் உத்தேசமோ யாரையும் பார்க்கும் தைரியமோ எழவே இல்லை. எதற்குமே விருப்பப்படவில்லை.
“வேண்டாம், எதுவும் வேண்டாம். வாழ்வில் முக்கியமானதையே இழந்துவிட்டேன். இனி எது இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன?” என்னும் மனநிலைக்கு வந்துவிட்டிருந்தான் அங்கிருந்து கிளம்பும் முன்பாகவே.
ஆனால் மலர் மட்டும் அவனின் மனதில் நீக்கமற நிறைந்து இருந்தாள். நீருபூத்த நெருப்பென அவனின் மனதில் அமர்ந்துகொண்டு முனுமுனுவெனும் ஒருவித இம்சையை தந்து கொண்டே தான் இருந்தாள்.
அனய் அவள் விஷயத்தில் மிக தெளிவாய் இருந்தான்.
“நான் காதலித்த பெண்ணிற்கும் திருவாரூர் வனமலருக்கும் ஆயிரமாயிரம் வித்தியாசங்கள். திருமணம் ஆனது அவள் குடும்பத்தின் பொம்மைக்கு தானே தவிர உயிர்ப்பான தன்னுடைய வனமலருக்கு இல்லை…”
“என் ரோஸ்பட் இன்னும் என் மனதில் பத்திரமாய் இருக்கிறாள். அவளை இந்த உலகம் மரிக்கும் வரை காதலிப்பேன். அதற்கு பின்பும் கூட. சரவணனின் மனைவி எனக்கு வேண்டாம். ஆனால் என் காதலை எந்த சூழ்நிலையிலும் நான் இழக்க மாட்டேன்”
அவனுக்கு அவனே சங்கல்பம் எடுத்துக்கொண்டதை போல தான் நடந்துகொண்டான். சென்னையை விட்டு வந்ததிலிருந்து சில நாட்கள் வீட்டிற்கு பேசாமல் இருந்தவன் ஒருகட்டத்திற்கு மேல் ரிஷியையும் நேத்ராவையும் ஒதுக்கமுடியாமல் போனது.
அதன் பின் மெல்ல மெல்ல பாலகிருஷ்ணனிடம் மட்டும் பேச ஆரம்பித்தவன் ஆண்டாளிடம் பேசவே விரும்பவில்லை. அத்தனை கோபம் இருந்தது அவனுக்கு.
அதன் பின் எத்தனையோ வற்புறுத்தலுக்கு பின் ஆண்டாள் பேச கேட்டுக்கொள்ள மட்டுமே செய்வானே தவிர்த்து பதில் பேச மாட்டான்.
மீண்டும் மீண்டும் அவனை கோபம் படுத்தும் விதமாக அவனுக்கு பெண் பார்க்கவென ஆரம்பித்தவர் அவனின் பிடிவாதத்தில் அரண்டுதான் போனார்.
ரிஷியிடம் சொல்லியும் பேச சொல்ல அனய்யிடம் எதுவும் எடுபடாமல் தான் போனது. அந்த சமயத்தில் தான் அவனின் வாழ்க்கையும் திசை மாற ஆரம்பித்தது.
தன்னுடைய நண்பன் ஒருவனை காண சென்ற இடத்தில் தெலுங்கு பட தயாரிப்பாளர் ஒருவரின் பழக்கம் ஏற்பட்டு நட்பாகி இருக்க அவருக்கும் தானே இயக்கி தயாரிக்கும் தன்னுடைய புதிய படத்தில் புதுமுகம் ஒருவனை அறிமுகப்படுத்த தேடிக்கொண்டிருக்க அனய்யின் மீது அவனின் எண்ணம் வந்து நின்றது.
அவனை நடிக்க வைக்கும் அபிப்ராயம் ஏற்பட அவனிடமும் பேசியவர் முதலில் மறுத்தவன் யோசித்து சொல்வதாகி சொல்லி வர நேத்ராவிடமும் ரிஷியிடமும் இதை பகிர்ந்தான்.
அவர்கள் அவனின் விருப்பம் என்றுவிட ஆண்டாளுக்கு தான் பொறுக்கமுடியவில்லை. போனில் அவனை காய்ச்சி எடுத்துவிட வேண்டுமென்றே அப்படத்தில் நடிப்பதாக உறுதிகொண்டவன் தனக்கும் ஒரு மாற்றம் தேவை என விரும்பினான்.
பொழுதுபோக்காக ஆரம்பித்த ஒரு மாற்றத்திற்கென நடிக்க ஆரம்பித்த அனய் அங்கே ஆதித்யவர்மாவாய் உருமாறினான். முதல் படமே வெற்றிப்படமாகி அவனை இளைஞர்கள் கொண்டாட சினிமா உலகம் வாரிக்கொண்டது.
கொஞ்சம் கொஞ்சமாய் அதில் மூழ்கியவன் மொத்தமாய் தன்னுடைய முழு கவனத்தையும் கலையுலகில் செலுத்தினான். அதிலும் அவனின் சுபாவமும் அழகும் அவனுடன் நடிக்கும் பெண்கள் யாரையும் நெருங்க வைத்தது.
அவனிடம் பழக வைத்தது. அதன் காரணமாகவே பத்திரிக்கையில் அதிகளவில் கிசுகிசுக்கப்பட்டான் அனய். அப்படி வரும் வதந்திகளை கண்டு ஆண்டாள் எங்கே ஏதாவது ஒரு நடிகையை கட்டிக்கொண்டுவிடுவானோ என அஞ்சாத நாளில்லை.
“பொண்ணை பெத்து தங்கமா கட்டிகுடுத்துட்டேன். இவனை பெத்துட்டு இத்தனை வருஷம் கழிச்சு இப்படி அவஸ்தை படறேன்…” என பாலகிருஷ்ணன் காதில் ரத்தம் வரும் அளவிற்கு புலம்புவார்.
அவரின் புலம்பலிலும் தவிப்பிலும் எங்கே உடம்பிற்கு வந்துவிடுமோ என பயந்து பாலகிருஷ்ணன் நேத்ராவை அழைக்க நேத்ரா அனய்யை ஒரு பிடி பிடிப்பாள்.
ஆனால் அனய்யின் போக்கில் எந்த மாற்றமும் இல்லை. இப்படியே மேலும் இரண்டு வருடம் செல்ல ஆண்டாளின் வீட்டிற்கு அனய் வருவதாகவே தெரியவில்லை.
படங்களில் நடிக்க ஆரம்பித்த பிறகு ஆந்திராவில் இருந்தவன் சென்னை வந்தாலும் தனக்கென ஒரு வீட்டை வாங்கி அங்கே தான் இருப்பான்.
அவனுக்கு கோபம். ஆண்டாள் நினைத்திருந்தால் நிச்சயம் மலர் தன் வாழ்வில் தன் மனைவியாக இருந்திருப்பாள் என. தன்னுடைய காதல் பற்றி தெரிந்தும் மலரின் திருமண விஷயம் அறிந்தும் அதை மறைத்து பிரச்சனையன்று அவரே மலரை தவறாக பேசியதை ஏற்கவே முடியவில்லை.
அதனாலேயே அவருக்கு பிடிக்காத விஷயங்களை மாற்றிக்கொள்ள விரும்பவே இல்லை.
ஆண்மகனான அவனுக்கென்று ஆசைகள் இருந்தும் அவனின் துறையில் அதை மீறுவதற்கான சந்தர்ப்பங்கள் ஏராளம் இருந்தும் அதை தன்னுடைய காதல் கொண்டு கண்ணியம் காத்தான்.
பெண்களின் பழக்கவழக்கத்தை அளவோடு ஒரு எல்லைக்குள் வைத்துக்கொண்டான். தனக்கென ஒரு தடைவிதித்து அதை தாண்டி யாரும் வந்துவிடாமல் பார்த்துக்கொண்டவன் நாளுக்கு நாள் இமயம் என வளரத்தான் செய்தான்.
திரையுலகில் குறுகிய காலத்திலேயே முக்கியமாணவனாகவும், அனைவரும் விரும்பப்படும் கதாநாயகனாகவும் கோலோச்சிக்கொண்டிருந்தான்.
மலர் அவள் வாழ்க்கையில் நிம்மதியாக சந்தோஷமாக இருக்கிறாள். எனக்கென்று ஒரு பாதை. நிம்மதியாக இருக்கிறேன். அதை தாண்டி திருமணம், குடும்பம் என யோசிக்க என்றுமே விருப்பம் கொள்ளவில்லை.
நேத்ரா அவனின் திருமணம் பற்றி கேட்ட போதும்,
“இன்னும் நூறு ஜென்மம் ஆனாலும் அவள் மேல நான் வச்சிருக்கிற காதலே என்னை சந்தோஷமா வாழவைக்கும். இப்ப இருக்கிற நிம்மதியை தொலைச்சு சந்தோஷத்தை பறிச்சு நான் நடைபிணமாகி இன்னொரு பொண்ணோட வாழ்க்கையையும் சூனியமாக்க சொல்றியா நேத்ரா?…” என கேட்டு வாயடைக்க வைத்தான்.
அனய்யின் காதலை கண்டு மலைத்துத்தான் போனாள் நேத்ரா. இப்படி ஒரு காதலோடு வாழ மலருக்குத்தான் கொடுத்து வைக்க வில்லை என நினைத்து அதற்கு தன்னையே நிந்தித்துக்கொண்டாள் அவள்.
“என்ன நினைப்பு இது? கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் ஆச்சு அவளுக்கு. இன்னும் நான் எப்படி நினைக்கிறேன்?” என தன்னையே திட்டிக்கொண்டாள்.
மலர் திருமணத்திற்கு பின் தன் தோழிகள் யாரோடும் தொடர்பில் இல்லை. அதை வேண்டுமென்றே தான் துண்டித்துக்கொண்டாள். நேத்ராவும் வலிய சென்று பேச வேண்டாம். அவள் நிம்மதியாக இருக்கட்டும் என விட்டுவிட்டாள்.
ஆனால் அனய்யும் அதை போல இருக்கமுடியுமா?
கடவுளும் இன்னாருக்கு இன்னார் என்று படிக்கும் பொழுதே அனய்யின் பெயருக்கு நேராக வனமலரின் பெயரை எழுதி இருக்க அதை மனிதர்கள் நினைத்தால் மாற்றிவிடமுடியுமா?
மீண்டும் அவளின் வாழ்வில் அனய்யை பிணைக்க விதி தன்னுடைய வேலையை மிக சரியாக செய்தது. அது அனய்யே எதிர்பாராதது தான்.
அதிகாலை வந்த செய்தியை நம்பமுடியாமல் தன் காரில் கிளம்பி திருவாரூர் சென்றுகொண்டிருந்தான் அனய்.
ஆம், சரவணன் இறந்துவிட்ட செய்தி அனய்யை வந்தடைந்தது.
மலரின் வாழ்க்கை இப்படியாகும் என கனவிலும் எதிர்பாராதது. அவன் நினைத்திருந்தால் எப்படிவேண்டுமென்றாலும் மலரை தன்னுடைய மனைவியாக்கியிருக்கலாம் அவளின் விருப்பம் இல்லை என்றாலும்.
ஆனால் அதை அவன் விரும்பவில்லை. இன்று அவளின் நிலையை எண்ணி அத்தனை வருந்தினான். அப்பொழுது கூட மலரின் வாழ்க்கைக்குள் தான் நுழைய எந்த எண்ணமும் இல்லை.
சரவணனின் இறுதி சடங்கில் யாரோ ஒருவனை போல கூட்டத்தில் ஒருவனாக நின்றுவிட்டு கிளம்பி வந்துவிட்டான். அவனால் மலரை அந்த நிலையில் பார்க்கவே முடியவில்லை.
மீறி நின்றால் எங்கே தன்னை காட்டிக்கொள்ள நேர்ந்துவிடுமோ? தன்னை இப்படி ஒரு சூழ்நிலையில் பார்த்தால் அவளுக்கு எப்படி தோன்றுமோ என அஞ்சியே அங்கிருந்து கிளம்பிவிட்டான்.
அதிலும் ஐந்துமாத கர்ப்பிணியாக அவளின் கோலம் மனதை பிசைந்தது. ஒரு பருத்தி புடவையில் உடை கசங்கி தலை முடி கலைந்து அழுது ஓய்ந்த விழிகளோடு நிராதரவான தோற்றம் அவனின் உயிரை வெட்டி சாய்த்தது.
ஓவென கதற துடித்த மனதை அடக்கிக்கொண்டு கசிந்த விழிகளோடு புறப்பட்டுவிட்டான் அனய். இனி அவளின் எதிர்காலம் தான் என்ன? என்று யோசித்தவன் தனக்கு சொந்தமாக்கிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கவும் இல்லை.
ஆனால் அடுத்த ஒன்றரை மாதத்திலேயே அவளிடமே அதை சொல்லு சூழ்நிலைக்கு சென்றான் அனய்.
——————————————————————
திருமணம் முடிந்ததிலிருந்து சிறுபிள்ளை போல தன்னை பாவிக்கும் சரவணனிடம் எந்த குறையும் சொல்லமுடியாத அளவிற்கு தன்னுடைய மன ரணங்களை காட்டிக்கொள்ளாமல் இயல்பாக பழக ஆரம்பித்தாள் வனமலர்.
ஒரு தம்பதிகளுக்குள் வேண்டிய எந்த நெருக்கமும் ஏற்படாமல் தன்னை சங்கடத்திற்கு ஆளாக்காமல் சரவணன் நடமாட அதில் இன்னமும் அவனின் மேல் அன்பு வைத்தாள் அவள்.
எந்தவிதமான எதிர்பார்ப்பும் இன்றி பழகும் அவனுக்கு தான் எந்த விதத்தில் நன்றி செலுத்த போகிறோம் என்று தெரியாமல் தவித்தவள் அனய் உண்டாக்கிய வலியை முற்றிலும் மறந்துதான் போனாள்.
ஒரு வழியாக தன் மனதை தேற்றி அவனோடு வாழும் முடிவிற்கும் வந்துவிட்டாள். ஆனால் அதற்குள் அவள் இழந்தது தான் அதிகம்.
ஆம், தந்தையும் தாயையும் ஒரே நாளில் பறிகொடுத்தாள் அவள். திருமணமாகி நான்கே மாதத்தில் தந்தை உடல்நிலையின்றி இறந்துவிட அதற்கு சென்றவளை ஆனந்தி திரும்பியும் பார்க்கவில்லை.
ஏற்கனவே ஊர்காரர்கள் மகளின் மீதான அவரின் கோபத்தை வற்றவிடவில்லை.
அவருக்கு அத்தனை ஆத்திரம். அவளால் தான் தன் கணவன் உடல்நிலை குன்றி மனநிம்மதி இன்றி இறந்துவிட்டார் என்று நம்பியவர் துக்கத்திற்கு வந்த மகளை தன் அருகில் கூட நெருங்கவிடவில்லை.
அப்படி அழுது கரைந்தவர் கணவரை இடுகாட்டிற்கு எடுத்து சென்று தகனம் செய்து வரும் பொழுது ஆனந்தியும் தனது உயிரை விட்டிருந்தார்.
ஊரார் மொத்தமும் வனமலரைதான் சாடியது. யாரிடமும் எந்த பதிலும் பேசாமல் திக்ப்ரம்மை பிடித்தவளை போல இருந்தவளை சரவணனுக்கு பார்க்கவே பொறுக்கவில்லை. மறுநாளே விசேஷம் வைத்து அவளை அழைத்துக்கொண்டு உடனே கிளம்பிவிட்டான்.
இயற்கையிலேயே நல்ல குணம் கொண்டவன் தான் சரவணன். மலர் மீது தீராத அன்பும், பாசம் கூட. காதல் உள்ளதா என கேட்டால் சத்தியமாக இல்லை என்றுதான் சொல்லுவான்.
அழுது அழுது கரைந்தவளை தாயைப்போல் மடிதாங்கியவன் அவளை தேற்றவே படாதபாடு பட்டான். ஆனாலும் மிக பொறுமையாகவே அவளை கையாண்டான். மலரின் கஷ்டங்களை எண்ணியே தள்ளியிருப்பதை போல் தங்களுடைய தாம்பத்திய வாழ்க்கையை ஆரம்பிக்காமலே மலருக்கே அந்த நினைப்பு வராத அளவிற்கு மிக சாதுர்யமாக நடந்துகொண்டான்.
குற்றவுணர்ச்சியில் இருந்தவனுக்கு அனய்யின் பேச்சு உதாசீனம் செய்வதை போல் இருக்க அதனால் உண்டான கோபத்தில் தான் மலரை கைபிடித்தது. ஆனால் அதற்கு பின் எத்தனையோ நாட்கள் அவன் வருந்தியதும் உண்டு. நிம்மதியடைந்ததும் உண்டு.
இருவேறு மனநிலையில் தான் அன்றுவரை நாட்களை கடத்திக்கொண்டிருந்தான். ஆனால் எத்தனை நாள் அவன் வேதனையில் இருக்கிறாள் என்று சொல்லியே நாட்களை நகர்த்துவது.
அது முடிவுக்கு வரும் நாளும் தானாகவே அமைந்தது. ஊர் திருவிழாவிற்கென வந்தவர்களை சொந்தபந்தங்கள் அனைத்தும் பிடித்துக்கொண்டனர்.
திருமணம் முடிந்து ஒன்றரை வருடங்கள் கடந்துவிட்ட பின்னரும் இன்னமும் நல்லசெய்தி எதுவும் சொல்லவில்லை என அக்கறையாக சிலரும், அனய் பற்றி கூறி அப்படி இருக்கும் பெண்ணை எப்படி ஏற்றுகொள்வான் இவன் என்றும் சிலரும் பேசிவிட நிலைகுலைந்து போனதென்னவோ மலர் தான்.
உண்மையில் சரவணன் அந்த நினைப்போடு தான் தன்னை நெருங்கவில்லையோ என மனைவியாக யோசிக்க ஆரம்பித்தாள். ஊரிலிருந்து வந்த பின்னும் அவன் அப்படியே நடந்துகொள்ள அதை கேட்கவும் செய்துவிட்டாள்.
“மாமா, நிஜமாவே என்னை உங்களுக்கு பிடிச்சுதான் கட்டிக்கிட்டீங்களா? இல்லை…” என்று கண்கள் கலங்க கேட்கும் முன்னரே செத்துக்கொண்டிருந்தாள்.
எங்கே அவன் ஆமாம் என சொல்லிவிட்டால்? அப்படி பயந்து நின்றாள் அவனின் முகம் பார்த்து. அவளின் கலங்கிய தோற்றம் இதற்கு மேல் உண்மையை மறைக்கமுடியாமல் சொல்லிவிடவும் சொல்லமுடியாமலும் தவித்தான்.
அதன் பின் அவளை நெருங்க முயன்று நெற்றி முத்தத்தை தவிர முன்னேற முடியாமல் விலகுபவனை என்னவென்று நினைக்க என மலர் தான் பொறுமையாக இருந்தாள். ஏனோ அதுவே ஒருவித நிம்மதியாகவும் இருந்தது அவளுக்கு.
ஒருவேளை சிறுவயதிலிருந்து உடன் வளர்ந்ததால் ஏற்றுக்கொள்ள தயக்கமோ என தனக்குதானே எண்ணிக்கொண்டவள் அவனே மனம் மாறட்டும் என அமைதிகாத்தாள்.
வீட்டிலேயே இருப்பதனால் தேவையில்லாமல் எதையாவது நினைத்து குழம்புவாள் என நினைத்த சரவணன் அவளை அருகில் இருந்த தொடக்கப்பள்ளியில் வேலைக்கு அனுப்பி வைத்தான். அவளுக்கும் ஒரு மாற்றமாக இருக்கும் என்று.
ஆனால் மூன்றாம் வருடமும் தொடங்கிவிட ஊருக்கு செல்லவே அச்சமாக இருந்தது வனமலருக்கு. அதனால் அங்கு செல்வதையே குறைத்துக்கொள்ள வைத்தியநாதனும் காமாட்சியுமே வந்து சென்றனர்.
சரவணனின் அன்பும் பாசமும் மலரை எதை பற்றியும் சிந்திக்கவிடாமல் செய்ய சரவணனின் பெற்றோர் மூலம் மீண்டும் நெருக்கடி ஏற்பட்டது.
காமாட்சி சரவணனிடம் அவர்களுக்குள் எதுவும் பிரச்சனையா? ஏன் இவ்வளவு தாமதம் குழந்தை உண்டாக? என கேட்டு மருத்துவரை சென்று பார்க்குமாறு கூறி செல்ல வேறு வழியின்றி ஒரு முடிவிற்கே வந்துவிட்டான்.
அதுதான் அவனின் சுயநலத்தின் உச்சம்.