நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இப்படியே நாட்கள் ஓடியது.
லட்சுமி நினைத்தபடியே இனிப்பு செய்து கொடுத்தார். அதில் அவருக்கு நல்ல வருமானம் கிடைத்தது. அந்த பணத்தை வங்கியில் சேர்த்து வைத்தார். வார நாட்களில் வேலை என்று மூவரும் ஓட வார இறுதியில் மூவரும் சேர்ந்து ஒன்றாக பேசி சிரித்த படி நேரம் கழித்தனர்.
கவிதா வார விடுமுறையில் ஊர் வரும் பொழுதெல்லாம் வெண்மதி வீட்டிற்கு வந்து நடப்பவைகளை தெரிந்துகொண்டு சிறிது நேரம் பேசி விட்டு செல்வாள். இப்படியே வெண்மதிக்கு வாழ்க்கை அவள் நினைத்தபடியே மாறிக்கொண்டிருந்தது.
அன்று வெண்மதி வீடு திரும்பியபோது லட்சுமி வாசலில் நின்றுகொண்டு வெளியே பார்த்துக் கொண்டிருந்தார். இதனை கவனித்த வெண்மதி
“யாரைமா எதிர் பார்த்துட்டு இருக்கீங்க?”
என்றாள்.
அதற்கு லட்சுமி “சோமு வர்றானானு பாத்துட்டு இருக்கேன்.” என்று வாசலை பார்த்தபடியே கூறினார் லட்சுமி.
“எதுக்கு சோமுவை தேடுறீங்க அம்மா?” வீட்டுக்குள் வந்து கைப்பையை வைத்தபடி கேட்டாள் வெண்மதி.
“5 கிலோ சர்க்கரை வேணும். வாங்கிட்டு வரச்சொல்லி சொல்லலாம்னு தான். முத்து, சேகர் ரெண்டு பேரும் வீட்டுக்கு போயிட்டாங்க. அவங்க கிட்ட சொல்ல மறந்துட்டேன்.”
இவர்கள் இருவரும் அவரிடம் வேலைக்கு சேர்ந்து இருந்த 19 வயது மதிக்கத்தக்க இரு பையன்கள்.
“இன்னைக்கு வாங்கி வச்சா தான் நாளைக்கு காலையில எட்டு மணிக்கெல்லாம் ஸ்வீட் பண்ண ஆரம்பிக்க முடியும். இல்லன்னா காலையில 10 மணிக்கு தான் கடை திறப்பாங்க. அது வரைக்கும் வெயிட் பண்ணி வாங்கிட்டு வந்து தான் ஸ்வீட் செய்யணும். காலையில் சீக்கிரமா ஆரம்பிச்சா சீக்கிரம் வேலை முடிஞ்சிடும். அதுக்குதான் பாத்துக்கிட்டு இருக்கேன்.”
“நான் வாங்கிட்டு வரட்டுமா அம்மா?” என்று வெண்மதி சோபாவில் உட்கார்ந்தபடி கேட்க.
“நீயே இப்பதான் வர்ற. எதுக்குமா உனக்கு கஷ்டம்?” என்று யோசித்தபடி கூறினாள் லட்சுமி.
“வெண்மதி இதுல என்னம்மா கஷ்டம் இருக்கு? பக்கத்துல இருக்கிற கடை தானே. நான் டிவிஎஸ் 50 ல போயிட்டு வந்துடுறேன்.”
“இப்பதானே வந்த. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு போ.”
“இல்லம்மா பரவா இல்லை. நான் போய் வாங்கிட்டு வந்துடுறேன்.”
“சரி மதி. இந்தா. இப்ப எல்லாம் அண்ணாச்சி பிளாஸ்டிக் கவர்ல எதையும் கொடுக்கிறது கிடையாது. அதனால பை வச்சுக்கோ.” என்று கையில் இருந்த பையையும் பணத்தையும் அவளிடம் நீட்டினார்.
அதனை வாங்கிக்கொண்ட வெண்மதி “அதுதான் நல்லது அம்மா. நான் எப்பவுமே பிளாஸ்டிக் கவர் கடையில வாங்கவே மாட்டேன். அவங்க கொடுத்தாலும் வேண்டாம்னு திருப்பி கொடுத்துட்டு பையில தான் எல்லாத்தையும் வாங்கிட்டு வருவேன். ஆனா ஒரு சிலர் இதை ஃபாலோ பண்றது கிடையாது. அவங்களும் ஃபாலோ பண்ணினா. இந்த பூமிக்கு நல்லது.” என்று கூறிவிட்டு இரண்டையும் வாங்கிக் கொண்டு தன்னுடைய சிங்க வாகனமான டிவிஎஸ் 50யை எடுத்து கொண்டு கடைக்கு சென்றாள்.
கடைக்கு பக்கத்தில் வண்டியை நிறுத்தி ஸ்டாண்டில் போட்டவள் கடைக்காரரிடம்
“அண்ணாச்சி. எனக்கு அஞ்சு கிலோ சர்க்கரை கொடுங்க.” என்று கேட்டாள் வெண்மதி.
மூட்டையில் இருந்த சர்க்கரையை அளந்து காகிதத்தால் ஆன பையில் கட்டியவர் வெண்மதியிடம் நீட்டி
“வெண்மதி பை எடுத்துட்டு வந்து இருக்கியா? நான் பிளாஸ்டிக் கவர் கொடுக்கிறது கிடையாது.” என்று அண்ணாச்சி கேட்டார்.
“தெரியும் அண்ணாச்சி. பை எடுத்துட்டு வந்திருக்கேன்.” என்று பையை காட்டினாள்.
அதில் அவர் அந்த சர்க்கரையை போட்டார்.
வாங்கி வண்டியில் மாட்டிய வெண்மதி
“வரேன் அண்ணாச்சி.” என்று கூறிவிட்டு வீட்டுக்கு வண்டியை திருப்பி ஓட்ட ஆரம்பித்தாள்.
அப்பொழுது அந்த ரோட்டில் ஒரு குடிகாரன் வெண்மதியின் வண்டியை கவனிக்காமல் அவளுக்கு வழிவிடாமல் இங்குமங்கும் தள்ளாடியபடி நடந்து கொண்டிருந்தான். வெண்மதி மணி அடித்தாள்.
ஆனால் அவன் அதை கண்டுகொள்ளாமல்
நான் யாரு நான் யாரு.
கொய்யால நீ கேளு
நான் ராஜா. நான் ராஜா
என்று பாடிக் கொண்டே அந்த சாலை அவனுக்கு மட்டுமே சொந்தம் என்பது போல ஆடியபடி நடந்து கொண்டிருந்தான்.
வெண்மதி வண்டியை ஒரு ஓரமாக பொறுமையாக ஓட்டிக்கொண்டு இருந்தாள். அப்பொழுது எதிர்பாராத நேரத்தில் அவன் இவள் பக்கம் வரவும் அவன்மீது மோதுவதை தவிர்க்க சாலை பக்கத்தில் இருந்த சிறு பள்ளத்தில் வண்டியை இறக்க அந்த பள்ளத்தில் முன்தினம் பெய்த மழையினால் தேங்கியிருந்த சேர் அந்தப்பக்கம் நின்றுகொண்டிருந்த ஒருவன் முகத்திலிருந்து கால் வரை வாரி அடித்தது.
குடிகாரனை கவனித்து கொண்டு வந்த வெண்மதி இவனை கவனிக்காமல் அந்த பள்ளத்தில் வண்டியை இறக்க சேர் அவன் மீது தெறித்தது.
வண்டியை சமாளித்து நிறுத்திய வெண்மதி அப்பொழுதுதான் அவனை பார்த்தாள்.
அவன் முகத்தில் வழிந்த சேற்றை துடைத்தான். அவளுக்கு அவன் முகம் தெளிவாக தெரிந்தது. அவன் வசந்த்!. அவனை பார்த்ததும் பதறினாள்.
“அய்யோ இவனா?” என்று நினைத்தவள் பேச்சு வராமல் தவித்தாள்.
முகத்தில் வழிந்த சேற்றை துடைத்து கண்களை கசக்கி திறந்தவன் திருதிருவென்று விழித்துக் கொண்டு வண்டியில் உட்கார்ந்திருக்கும் வெண்மதியை பார்த்தான்.
அந்த நிலையிலும் அவனுக்கு அவள் மீது கோபம் வரவில்லை. தூரத்தில் வண்டியில் வந்து கொண்டிருந்த வெண்மதியை பார்த்த இவன் அவளிடம் பேசுவதற்காக அவளை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தான். அப்பொழுது வெண்மதி இவனை கவனிக்காமல் குடிகாரனை பார்த்தவாறு வந்து வண்டியை பள்ளத்தில் இறக்க அவன் முகத்தில் சேர் தெறித்தது.
அவள் வண்டியை நிறுத்தி ஸ்டாண்ட் போட்டு விட்டு .
“சாரி சார் நான் நிஜமாகவே வேணும்னு செய்யவே இல்லை.” என்று தடுமாறியபடி மன்னிப்பு கேட்டாள்.
“மன்னிப்பு கேட்டா சரியா போயிடுமா?” இந்த ஒயிட் டிரஸ் கிளீன் ஆயிடுமா? பொண்ணு பாக்க வந்துட்டு வேணாம்னு சொன்னதற்கு என்னை நீங்க நல்லா பழி வாங்கி விட்டீர்கள்.” என்று கோபமாக கூறுவது போன்ற பாவனையில் கூறினான்.
இதனை கேட்ட வெண்மதி “ஐயோ அப்படி எல்லாம் இல்ல சார். நான் அதை அன்னைக்கே மறந்துட்டேன். இது தெரியாம நடந்த விஷயம். எனக்கு உங்க மேல எந்த கோபமும் கிடையாது.” என்று அவனை சமாதானப் படுத்தும் குரலில் கூறினாள் அவள்.
இதனை கேட்ட அவனுக்கு உள்ளுக்குள் ஆனந்தமாக இருந்தது.
“அப்போ உங்களுக்கு என் மேல எந்த கோபமும் இல்லையா?” என்று திரும்ப அவள் முகத்தை பார்த்தபடியே கேட்டான்.
அதற்கு அவள் “அதெல்லாம் எனக்கு இல்ல சார்.” என்று தெளிவாக கூறவும் அவனுக்கு நிம்மதியாக இருந்தது.
“சாரி சார்” என்று திரும்பவும் அவள் மன்னிப்பு கேட்க
அதற்கு அவன்” இட்ஸ் ஓகே. கார்ல போய் உட்கார்ந்தா, கார்தான் ஒரு வழி ஆயிடும். சரி பரவாயில்லை.” என்று சிறிது கவலையுடன் கூறியபடி காரை நோக்கி நடந்தான்.
“சார் சார் கொஞ்சம் நில்லுங்க.” என்று வெண்மதி அவனை கூப்பிட அவன்
“நான் நிற்கிறேன். ஆனா நீங்க என்னை சார்னு கூப்பிடாம வசந்த்னு கூப்பிடனும்.” என்று கூற
“ஓகே சார்” என்றாள்.
அவன் அவளை பார்க்க
அவள் சிரித்துக்கொண்டே “ஓகே வசந்த்” என்றாள்.
“குட். சரி சொல்லுங்க. எதுக்கு கூப்பிட்டீங்க?”
“எங்கவீட்டுக்கு வந்து நீங்க வாஷ் பண்ணிட்டு போகலாம். ப்ளீஸ் வாங்க” என்றாள்.
“சரி” என்று இவன் கூற
“சரி வண்டியில உட்காருங்க.” என்று பின் இருக்கையை காட்டினாள்.
அவன் “வண்டி நல்லா ஓட்டுவீங்களா?” என்று கேட்டுக் கொண்டே ஏறி இருபக்கமும் கால் போட்டு உட்கார்ந்து கொண்டான்.
“நல்லா ஓட்டுவேன். நம்பி உட்காருங்க.” என்று கூறியவள்
வண்டியை ஓட்டி கொண்டு வீடு வந்து சேர்ந்தாள். வீட்டுக்கு முன்பு இருந்த குழாயை பார்த்ததும் அவன்
“வெண்மதி நான் இங்கே வாஷ் பண்ணிக்கிறேன்.” என்று கூறியபடி அங்கே தண்ணீர் பிடித்து முகத்தை கழுவினான்.
பின்பு சட்டையின் மேல் அப்பியிருந்த சேற்றை கழுவினான். பின்பு பேண்ட் என்று ஓரளவு அனைத்தையும் கழுவி முடித்தபிறகு
“சரி நான் கிளம்பறேன் வெண்மதி.” என்று கூற
அப்பொழுது அங்கு லட்சுமி வந்தார். ஈரமான துணியுடன் இருந்த வசந்த்தை பார்த்த அவர்
“வாங்க வாங்க என்ன ஆச்சு? ஏன் டிரஸ் எல்லாம் ஈரமா இருக்கு? அழுக்கா வேற இருக்கு.” என்று அவனது துணியை பார்த்தபடி கேட்டார்.
அதற்கு அவன் “எல்லாம் உங்க பொண்ணு பண்ண வேலை. பொண்ணு பிடிக்கலைன்னு சொன்னதுக்கு நல்லா பழி வாங்கிட்டாங்க.” என்று கூறி குறும்பாக சிரித்தான்.
லட்சுமி வெண்மதியை முறைத்தார்.
“என்ன வெண்மதி? என்ன சொல்றாரு?”
“ஐயையோ அப்படி எல்லாம் நான் பண்ணவே இல்ல.”
“அப்புறம் யார் சேர் அடிச்சது?” என்று அவளை பார்த்து சிரித்தபடி கேட்டான்.
“அது அது நான்தான்.” என்று இவள் கூற மீண்டும் லட்சுமி வெண்மதியை முறைத்தார்.
“அம்மா நீங்க நினைக்கிற மாதிரி இல்ல. நான் வேணும்னே இப்படி பண்ணல. தெரியாம வண்டியை பள்ளத்தில் இறக்க சேர் இவர் மீது தெரிச்சிடுச்சு. அவ்வளவுதான்.” என்று விளக்கம் கொடுத்தாள்.
“நிஜமாவா?” என்று அவன் வேண்டுமென்றே எடுத்துக் கொடுத்தான்.
லட்சுமி வெண்மதியை பார்க்க
“வெண்மதி ப்ராமிஸ்.” என்று சத்தியம் செய்தாள்.
“நீங்க தப்பா எடுத்துக்காதீங்க. அவ வேணும்னு பண்ணி இருக்க மாட்டா.” என்று லட்சுமி சமாதானம் கூற
அவன் சிரித்தான்.
“எனக்கும் தெரியும். நான் சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன்.”
“சரி நீங்க உள்ள வாங்க.” என்று லட்சுமி கூப்பிட
“இல்லமா பரவாயில்லை. இன்னொரு நாள் வரேன்.” என்று வசந்த் சொல்ல “இவ்வளவு தூரம் வந்துட்டு உள்ள வராம போனா எப்படி?” என்றார் லட்சுமி.