புன்னகை – 27
கோவிலுக்குள் பலரும் பலதரப்பட்ட பார்வையினை மலரை நோக்கியும் அவளது மொத்த குடும்பத்தை நோக்கியும் வீச கொஞ்சம் நடுங்கத்தான் போனாள்.
யாரின் பேச்சையும் காதுகொடுத்து கேட்காமல் கண்டுகொள்ளாமல் போகும் மலர் அல்லவே. இப்பொழுது யாரேனும் தவறாக பேசிவிட்டால் அது தன் குடும்பத்தையும் பாதிக்குமே என யோசித்து குழம்பி நின்றாள்.
அவளின் முகத்தில் தெரிந்த குழப்பத்தை கண்டதுமே ஆறுதலாய் அணைத்துக்கொண்ட அனய்,
“ரோஸ்பட் பேஸ்மட்டம் வீக்கா இருந்தாலும் பில்டிங் ஸ்ட்ராங் அப்டின்னு நாம காட்டி தான் ஆகனும். பயத்தை மறைச்சு முகத்தை விறைப்பா வச்சிக்க…”
அவளின் தயக்கத்தை தடுமாற்றத்தை மாற்ற அனய் பேச அது அப்படியே அவளிடம் பிரதிபலித்தது. அவனை முறைத்தவள்,
“எனக்கென்ன பயம்? அதுவும் இவங்களை பார்த்து. நான் எந்த தப்பும் செய்யலை. இவங்களுக்காக போலியாவும் நான் தைரியமா இருக்கிறதை மாதிரி காமிச்சுக்கனும்னு இல்லை. இவங்க என்னோட வேதனையில களங்கத்தை ஏற்படுத்தினவங்க. இவங்க என்ன நினைப்பாங்கன்னு எனக்கு தேவை இல்லை…”
சொல்லியவள் அவனின் கரத்தோடு தன் கையை கோர்த்துக்கொண்டவள் நிமிர்வான நடையோடு உள்ளே சென்றாள்.
அனய்யின் குடும்பம், வைத்தியநாதன், காமாட்சி மற்றும் ரிஷியின் குடும்பம் இவ்வளவே தான் வந்திருந்தனர். அவர்களோடு சிவராமனின் அண்ணன் உசிதமணியும் திலகாவும் கூட.
ஊர்மக்கள் யார் என பார்த்தாலும் அனய்யின் குடும்பத்தின் பாதுகாப்பிற்கென சேத்தனும் அவனோடு இன்னும் ஐந்து பேர் வந்திருந்தனர். அவர்களை கண்டு யாரும் வைத்தியநாதனிடம் பேச கூட அஞ்சி ஒதுங்கி நின்றே பார்த்தனர்.
ஓரிடத்தில் பெரிய ஜமுக்காளம் இரண்டை விரித்து அனைவரும் அமர கொண்டு வந்த பொருட்களில் அப்போளுதுக்கு தேவையானதை மட்டும் ஒவ்வொன்றாய் எடுத்து வந்து தங்களுக்கு அருகினில் வைத்துக்கொண்டனர்.
வைத்தியநாதனையும் மற்றவர்களையும் பார்த்துவிட்டு கோவிலின் நிர்வாகி மயில்சாமியும் பொறுப்பாளரும் இவர்களை நோக்கி வந்துவிட அவரும் எழுந்து நின்றார்.
“வாங்க வாங்க வைத்தியநாதன் அண்ணே. எத்தனை வருஷம் ஆச்சு நீங்க இந்த கோவிலுக்கு வந்து. ரொம்ப சந்தோஷம்…” என்று அவரின் கையை பிடித்துக்கொள்ள அவரும் இன்முகமாக புன்னகைத்தார்.
“இப்பதான் வரனும்னு விதி இருக்கறப்ப நாம நினைச்சா வந்துடமுடியுமா? அதுவும் குலசாமி. அவுக உத்தரவு கொடுத்தா தானே நாம வந்து பாக்க முடியுது…” காமாட்சியும் மரியாதையாக எழுந்து நின்று சொல்ல,
“அண்ணி இன்னும் மாறவே இல்லை. இப்பவும் மனசுல பட்டதை அப்படியே சொல்லிடறாங்க. நீங்க தான் வாய திறந்து நாலு வார்த்தை பேச இம்புட்டு யோசிக்கிறீங்க…”
என்றவருக்கு அத்தனை வருத்தம் தன்னிடம் வருவதாக தகவல் சொல்லும் பொழுது கூட வார்த்தையை அளந்து பேசும் வைத்தியநாதனை நினைத்து. எப்பொழுதும் தங்களிடம் அப்படி இருந்ததில்லை என்பதால் உண்டான வருத்தம். அவராகவே,
“அதை விடுங்கண்ணே, நீங்க சொன்னது மாதிரியே ஏற்பாடு எல்லாம் செஞ்சிட்டேன். நாளைக்கு மொட்டை போட்டு காதுகுத்தினதும் கெடா விருந்து. அதுக்கு எல்லாம் தயாரா இருக்குது. நீங்க நிம்மதியா சாமியை கும்பிடலாம்…” என சொல்லி,
“மருதா நீ நம்ம பூசாரியை கூட்டியா…” என்று பொறுப்பாளரை அனுப்பிவிட்டு,
“அடடே மலரு, உம்மவ பெரிய புள்ளையாகிட்டா. நீ எப்படிம்மா இருக்க?…” உண்மையாக அக்கறையோடு நலம் விசாரிக்க,
“நல்லா இருக்கேன் மாமா…”ஒற்றை வார்த்தையில் முடித்துக்கொண்டாள்.
“உன் மனசுக்கு நீ நல்லா தான்மா இருப்ப. நம்ம வீட்டு மாப்பிள்ளைக்கு நா யாருன்னு சொல்லுத்தா. அப்பா தான நாளைக்கு வந்து போறப்ப பார்த்து பேச சுளுவாருக்கும்…” வெள்ளந்தியாக பேசிய மனிதரை கண்டு தன்னையே திட்டிக்கொண்டவள்,
“மன்னிச்சிக்கிங்க மாமா, நான் ஏதோ ஞாபகத்தில…” எனவும்,
“நீ பேசாம இருக்கிறதுல நான் என்ன நினைக்க போறேன்…”
மலரிடம் சொல்லிவிட்டு ரிஷியையும் அனய்யையும் மாறி மாறி பார்த்தார். அவருக்கு அனய்யை மலரோடு எப்பொழுதோ பேப்பரில் பார்த்திருந்தாலும் சரியாக ஞாபகம் இல்லாது போனது.
அதனால் குழப்பமாக பார்க்க ரிஷி அவரிடம் சொல்ல போக அனய் வேண்டாம் என தலையசைத்து அவரை குறும்பாய் பார்த்தான் தன்னை கண்டுகொள்கிறாரா இல்லையா என.
இது என்ன விளையாட்டு? என்று அவனை முறைத்த மலர்,
“மாமா இவர் தான் என் வீட்டுக்காரர்…” என சொல்ல எழுந்துகொண்ட அனய்,
“சரியா சொல்லு ரோஸ்பட், என்னை ஹவுஸ் ஓனர்னு நினைச்சிடபோறாரு…” என்று அவளை பார்த்து கண்ணடிக்க அவரோ வாய்விட்டு சிரித்தார்.
“நல்ல புள்ளதான் நீங்க…” என்று சிரித்தவர்,
“நல்லா இருங்க தம்பி. நானு வைத்தி அண்ணனுக்கு ஒண்ணுவிட்ட தம்பியாகனும். எங்க புள்ளையை கட்டியிருக்கீங்க. அப்பன் ஆத்தாளா அவுக மாமாவும், அத்தையும் இருந்தாலும் நாங்களும் அவளை எங்க புள்ளையா தான் நினைக்கிதோம். ஆனா அவளுக்கு தான் புரியலை. மொத்தமா வெறுத்துட்டு போய்டுச்சு…” என்றவர் கண்கள் கலங்கியேவிட்டது.
“அது அப்படி போனதுக்கும் குத்தம் சொல்லமுடியாது. ஏனா இந்த ஊர் ஜனங்க நடந்துக்கிட்டது அப்படித்தேன். அதுக்கு மொத்தமா வேண்டாம்னு போய்டுச்சு. இனியாச்சும் வந்து போய் இருந்த ரெம்ப சந்தோசமா இருக்கும். நாங்களும் அந்த புள்ளைக்கு இருக்கோம்னு மனசுல ஒரு நினைப்பிருக்கட்டும்…”
அவர் குரல் உடைந்து போய் பேச மலரின் கண்களில் கரகரவென கண்ணீர் இறங்கியது. உண்மை தானே. யாரோ சிலருக்காக மொத்தபேரையும் விலக்கிவைத்திருந்தாள் தானே.
“மாமா…” என்று கை கூப்பி அழ அவளின் கூப்பிய கரத்தை பிடித்துக்கொண்டவர் தானும் தன் வயதை மறந்து அழுதார்.
“அழாத ஆத்தா, அழாத…” என சொல்ல அதற்குள் வயதான ஒரு பெண்மணி வந்துவிட,
“அடியாத்தி, வருஷம் செண்டு வந்திருக்கிற புள்ளைய இப்படி கண்ணீர் கரைய விட்டுட்டீங்க. இதுக்குத்தான் ஆளுக்கு முன்ன பாக்க வந்தீகளோ?…” என்று சொல்லி மலரின் கண்ணீரை துடைத்தவரின் தோளில் அத்தை என சொல்லி சாய்ந்துகொண்டாள் மலர்.
அவ்விடமே ஒரு உணர்ச்சிமயமாக இருந்தது. அவர்களின் பாசப்பிணைப்பை பார்த்து மற்றவர்களும் கலங்கிதான் இருந்தனர்.
“அழாதத்தா, மலரு அழாத. காமாட்சி சொல்லுத்தா…” என்ற அவர் அவளை நிமிர்த்தி,
“இப்படி அழுதுட்டேவா உன்னைய பார்க்கனும். போதும்…” என கடிந்தவர் ஆண்டாள் புறம் பார்த்து,
“நா பேச்சி, மலருக்கு அத்தையாகனும். இவரோட சம்சாரம்…” என சொல்லி அனைவரையும் பார்த்து சிரிக்க அவரருகே வந்த அனய்,
“நான் அனய். மலருக்கு புருஷனாகனும். இவங்க எல்லாம் என்னோட குடும்பம்…” என்று ஒவ்வொருவராய் சொல்லி அறிமுகப்படுத்த அனைவரையும் பார்த்து வணக்கம் வைத்தவர்,
“உங்களுக்காக தான் பூசைக்கு சொல்லியிருக்கு. வந்தீகனா சாமிய கும்பிட்டு ஆற அமர பாடு பேசலாம்…” என சொல்லி,
“இங்காருங்க, கூட்டிட்டு வாங்க…” என கூறி காமாட்சியை கூட அழைத்து சென்றுவிட மயில்சாமியும் முன்னே நடக்க ஆரம்பித்தார்.
“என்ன மனுஷங்க இவங்க அமேஸான். எப்படி நீங்க இவங்களை மிஸ் பண்ணின?…” நேத்ரா வியந்துகொள்ள,
“ஆமாம் நேத்ரா எவ்வளோ இயல்பா பழகறாங்க. நாம தான் அவங்களை யாருன்னு தெரிஞ்சிருக்கனும். கொஞ்சமும் யோசிக்காம அவங்களே நாம யாரு என்னனு கேட்டு பேசிட்டு போறாங்க…” சுமங்கலியும் நேத்ராவோடு பேச,
“இங்கயும் சிலர் இப்படி இருக்கத்தான் செய்யறாங்க. இன்னும் இருக்காங்க. இன்னைக்கு எப்படியும் எல்லோருமே வந்துடுவாங்க. இப்போ போய் சாமி கும்பிட்டு வருவோம்…”
மலர் எழுந்துகொள்ள அனைவரும் அவளோடு கோவிலை நோக்கி சென்றனர்.
கோவிலுக்கு சாமி கும்பிட்டு விட்டு வந்து அமர்ந்தவர்களை ஒருவர் பின் ஒருவராக ஊர்மக்கள் வந்து பார்த்து பேச ஒரு சிலர் தூரமே நின்று பார்த்துவிட்டு மட்டும் சென்றனர்.
சில வம்பு பெண்களும் மலரிடம், “இவரு தானே உன் நிச்சயத்தப்ப வந்து பிரச்சனை பண்ணினது?…” என்று கிசுகிசுப்பாய் வேண்டுமென்றே சீண்டலுடன் கேட்டு இகழ்வாய் ஒரு பார்வை பார்த்து கேவலமாய் சிரித்தனர்.
அதையெல்லாம் மலருக்கு கேட்டு பற்றிக்கொண்டு வந்தாலும் அவர்களை கண்டுகொள்ளாமல் பேச்சை அசட்டை செய்தாள்.
இரவு நெருங்க நெருங்க இருள் சூழ்ந்திருந்தாலும் கோவிலை சுற்றி ட்யூப் லைட் வெளிச்சத்தால் பகலாக காணப்பட்டது.
கோவிலில் மறுநாள் தான் காலை மதியம் என சாப்பாடு என்பதாலும் அனைவரும் அவ்வூர் மக்கள் என்பதாலும் இரவு உணவை வீட்டிலிருந்தே எடுத்துவந்திருந்தனர்.
வைத்தியநாதன் ஏற்கனவே சொல்லியிருந்ததால் இரவு உணவை அங்கே பக்கத்தில் வாங்கிக்கொள்ள ஏற்பாடு செய்ய அவசரமாய் ஓடிவந்தனர் மயில்சாமியும், பேச்சியும்.
“என்ன காரியம் செய்ய பார்த்தீக. அம்புட்டு தொலவுல இருந்து வந்துட்டு ஓட்டல் சாப்பாடா? நாங்க எல்லோரும் உசுரோடத்தேன் இருக்கோம். என்ன காமாட்சி உனக்கும் கூட சொல்லனுமோ?…” என்று பேச்சி கடுகடுக்க,
“இல்லை பேச்சி, இத்தனை பேருக்கு எப்படி? உனக்குத்தேன் கஷ்டம். நாங்களே கொண்டாந்திருப்போம். ரொம்ப தூரம் தொலவெட்டு. அதான்…”
“வாய்ல வந்துரும் சொல்லிப்போட்டேன். அங்கன பாரு. நம்ம எல்லாருக்கும் இங்கதேன் சாப்பாடு. பாரு நம்ம நாட்டுப்பட்டை சமையக்காரவகள முன்னகூடியே சொல்லிவச்சிட்டோம் நீங்க வரீகன்னதும். இன்னும் பத்து நிமிஷத்துல ஆகிப்போடும்…”
பேச்சி உரிமையாய் கடிந்துகொள்ள பார்க்கவே அத்தனை ஆச்சர்யமாக இருந்தது ஆண்டாளுக்கும், பாலகிருஷ்ணனுக்கும்.
“வெளியில வாங்குறாகலாம்ல வெளியில. அந்தளவுக்கா இங்க உரிம கெட்டுப்போச்சு…” மலரின் கன்னத்தில் ஒரு இடி இடித்தவர்,
“மருவாதியா எல்லாரயும் கூட்டியா…” என சொல்லும் பொழுதே மயில்சாமியும் வந்துவிட்டார்.
“வாங்க சாப்பாடு தயாராகிடுச்சு…” என வந்து அழைத்து செல்ல மறுக்கமுடியாமல் அனைவரும் சென்றனர் நெகிழ்ச்சியோடு.
ஒரு வழியாக மறுநாள் காலை வருணிக்கு ரிஷியின் மடியில் வைத்து மொட்டையடித்து காதுக்குத்தவும் தான் வைத்தியநாதனுக்கும் காமாட்சிக்கும் நிறைவாய் இருந்தது.
மொட்டை போடும் பொழுது கூட லேசான சிணுங்கலோடு இருந்தவள் காது குத்தும் பொழுது ஆர்ப்பாட்டம் செய்து ஊரையே கூட்டிவிட்டாள். அழுது அழுது முகம் சிவந்துகிடந்த குழந்தையை பார்த்து மறுப்புறம் மலர் அழ ஆரம்பிக்க யாரை சமாதானம் செய்வதென கஷ்டமாய் போனது.
“சில புள்ளைங்க அப்படித்தான் அழுவாங்க. அவங்களை தேத்துறதை விட்டுட்டு அழுதுட்டு இருக்க நீ. சாமிக்கு குடுக்கிற காணிக்கை இப்படி கண்ணீரோட குடுப்பாங்களா?…” ஆண்டாள் நேரடியாகவே அதட்ட அதற்கும் தேம்பி அழ ஆரம்பித்தாள் மலர்.
அதற்குள் காதுகுத்தி முடிக்க காமாட்சியும் வைத்தியநாதனும் வருணியை குளிக்க வைக்க தூக்கி சென்றனர். உடன் உசிதமணியும், பாலகிருஷ்ணனும், சிவராமனும் காலாற நடந்துவிட்டு வர கிளம்பினார்கள்.
“அச்சோ அம்மா பேசாம இருங்க. அவளே அழுகையை நிறுத்தியிருப்பா. நீங்க வேற…” என்று நேத்ரா ஆண்டாளிடம் கோபம் கொள்ள,
“ம்மா, ம்மா…” என நேத்ராவின் புடவையை பிடித்து இழுத்தான் அவளின் அருமை புதல்வன்.
“என்னடா அபிக்குட்டி?…” என்று குனிந்து அவனிடம் கேட்க,
“அவங்க பேபிக்கு வலிக்குதேன்னு அத்தை அழறாங்கள. எனக்கும் வலிக்கும் போது நீங்க அழுதீங்களா?…” என கேட்க நேத்ரா திருதிருவென முழித்தாள். ரிஷியால் சிரிப்பை அடக்கமுடியவில்லை.
“சொல்லுங்க அழுதீங்களா?…” மீண்டும் விடாமல் அவளிடம் கேட்க,
“ஆங் அது வந்து…” என்ன சொல்ல என தெரியாமல் ரிஷியை பார்க்க,
“சோ நீங்க அழலை. ரைட்…” விடாப்பிடியாக கெட்டு தானே பதில் சொன்னவன்,
“ஏன் அழலை?…” என்றான் அடுத்ததாக.
“அம்மு…” பரிதாபமாய் அவனை பார்க்க,
“அழுதிருந்தா ஆமான்னு சொல்லியிருப்பீங்க. அழலை. அதான் சொல்லலை. சொல்லுங்க…” அவளை விடாமல் கேட்க என்னவென சொல்லுவாள்.
அவளுக்கும் பயம் தான் அழுகையும் வந்தது தான் அபினவ்க்கு காதுகுத்தும் பொழுது. ஆனாலும் வீம்பாக அடக்கிக்கொண்டு நின்றாள். யாரின் முன்பும் அழவும் இல்லை.
இன்னொன்று இது இயற்கை. எந்த குழந்தைக்கும் நடக்கும் விசேஷம் தான். இதில் அழ என்ன இருக்கிறது? என்று தான் நினைத்தாள். குழந்தை தாய் அழுவதை பார்த்தால் இன்னமும் அழும் என்பதால் அமைதியாகவே இருந்தாள்.
அதை எப்படி அவனிடம் சொல்லி புரியவைக்க? திரும்பவும் விடாமல் கேள்வி கேட்ட மகனை கடுப்போடு பார்க்க,
“ஆன்சர் மீ ம்மா…” என்று தோளை பிடித்து உலுக்க,
“ஐயோ ராமா இந்த கொசுத்தொல்லை தாங்கலையே. ஏங்க…” என்று தனக்கு பின்னால் நின்ற ரிஷியை அழைத்து திரும்ப அங்கே சிவராமன் சரியாய் வந்து நின்றார்.
பேயறைந்ததை போலானவள் தன் மாமியாரை பார்க்க சுமங்கலியோ இடுப்பில் கைவைத்து அவளை முறைக்க,
“சத்தியமா நானில்லை…” என்று கத்திக்கொண்டே அங்கிருந்து ஓட்டம் பிடித்தாள் நேத்ரா.
“தக்காளி நில்லு…” என்றபடி ரிஷியும்,
“அம்மா சொல்லிட்டு போங்க…” என்று அபினவ்வும் அவளின் பின்னாலே ஓட அனைவரும் அதை புன்னகையோடு பார்த்திருந்தனர்.
மலரின் விழிகளில் கண்ணீர் பளபளக்க அதை துடைத்த அனய்,
“அசடு, இதுக்கெல்லாம் அழுவாங்களா?…” என்று அவளின் தலையில் தட்டினான்.
இவர்கள் அனைவரையும் தாண்டிக்கொண்டு சுமங்கலியிடம் வந்த சிவராமன்,
“இதெல்லாம் தானாவே நடக்குதா? இல்லை நடத்திக்கிறாங்களா? ஒண்ணுமே புரியலை…” என்று சந்தேகமாய் கேட்க,
“அவங்க சின்னப்புள்ளைங்க. நீங்களே இப்படி நினைக்கலாமா?…” என்று பரிந்து பேச,
“என்ன பேசலாமா? மருமக பேசாம இருந்தாலும் உன் மகன் எடுத்துக்கொடுப்பான் எமகாதகப்பையன்…”
“பெருமைப்பட்டுகோங்க…” சுமங்கலியும் புன்னகையோடு அவரிடம் பேசி அனுப்பிவிட்டு திலகாவுடன் பேச ஆரம்பித்தார்.
அனைத்தும் நல்லவிதமாக முடிய முதலில் வரவே யோசித்த ஆண்டாளும் பாலகிருஷ்ணனும் கூட முழுமனதாக நிகழ்வை ஏற்றுக்கொண்டு கடவுளை வணங்கினர்.
கோவிலுக்கு சென்று வந்து இரண்டு மாதங்கள் ஓடியே விட்டது. இன்னமும் மலரின் நடவடிக்கையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் அப்படியேதான் இருந்தாள்.
அனய்க்கு பார்த்து பார்த்து செய்வதாகட்டும் கவனிப்பதாகட்டும் எந்த ஒரு குறையும் இல்லாது பார்த்துக்கொண்டாள். ஆனாலும் அவனிடம் நெருங்கவோ அதற்கு மேலும் செல்லவோ முயற்சிக்கவே இல்லை.
தயக்கத்தை தாண்டியும் தனக்கு இந்த சந்தோஷமே போதும் என்னும் அளவில் வாழ ஆரம்பித்தாள். அனய்யும் இன்னும் எத்தனை நாள் தான் இப்படியே இருப்பாள் என பார்த்துக்கொண்டே தான் இருந்தான்.
ஆனால் இதை அனைத்தையும் கண்டும் காணாமல் கவனித்த ஆண்டாளுக்கு இது மட்டும் போதாதே. இருவரும் இன்னமும் தாம்பத்திய வாழ்க்கையை வாழவே ஆரம்பிக்கவில்லை என்பது அவருக்கு நிச்சயம்.
ஆனால் என்ன சொல்லி இருவரையும் சேர்ப்பது என புரியாமல் மண்டை காய்ந்துகொண்டிருந்தார். இதை பாலகிருஷ்ணனிடம் சொல்லலாம் என்றால் அவர் அனய்யிடம் எதுவும் பேசிவிட கூடாதே என தவிர்த்துவிட்டார்.
நேத்ராவிடம் சொல்ல நினைக்கும் பொழுதெல்லாம் ஏதாவது ஒருவித தயக்கம் வந்து ஒட்டிக்கொள்ளும்.
இத்தனை நாள் இல்லாத அக்கறை இப்ப மட்டும் என்ன என்று மகள் தன்னிடம் கேட்டாலோ? பழைய விஷயத்தை பேசி உன் வேலையை பார் அவர்கள் வாழ்க்கையை பார்த்துக்கொள்ள அவர்களுக்கு தெரியும் என்றோ கூறிவிட்டால் என்ன செய்வது என யோசித்தே தள்ளிப்போட்டார்.
அதிலும் சமீபமாக மகனின் பார்வை மலரை வெளிப்படையாகவே தீண்டி தீண்டி ஏமாற்றம் கவிழும் விழிகளோடு விலகிக்கொள்ளும் மகனை பார்க்க தாளமாட்டாமல் நேத்ராவிடம் அழைத்து அனைத்தையும் சொல்லிவிட்டார்.
“இதை ஏன் முன்னமே நீங்க சொல்லலை?…” என அதற்கும் கடிந்துகொண்டவள் தான் பார்த்துக்கொள்வதாக சொல்லி அவரை அமைதிப்படுத்தினாள்.
இதை எப்படி செயல்படுத்துவது என யோசித்துக்கொண்டிருக்க சரியாக ரிஷியும் அவளுக்கு அழைக்க வழக்கம் போல் பேசிக்கொண்டிருந்தவர்கள் மறுநாளை நடக்கவிருக்கும் காட்சி பற்றி அவளிடம் கூறிக்கொண்டிருக்க நேத்ராவின் மூளையில் பொறிதட்டியது.
“எஸ், காட் இட்…” என கூச்சலிட,
“தக்காளி, என்ன இது?…” உண்மையில் பயந்துபோய் தான் கேட்டான் ரிஷி.
“அதை நாளைக்கு சொல்றேன். நாளைக்கு ஷூட்டிங்க்கு அமேஸான் வருவா. அப்போ அங்க நான் சொல்றது போல தான் நீங்க நடந்துக்கனும்…” என,
“என்ன விளையாடுறியா? உன்னோட சேட்டையை எல்லாம் வீட்டோட வச்சிக்க. ஷூட்டிங்ல எதாச்சும் ரகளை பண்ணின பார்த்துக்க…” என்று எச்சரிக்க,
“ஆமாமா, பெரிய உலக சினிமா எடுக்காங்க. நாங்க ரகளை பன்றோம். யோவ் சொன்னதை செய் ய்யா. மிஸ்டர் பெரியசாமி கடமை, கண்ணியம், கட்டுபாடு…” என உத்தரவாக சொல்ல,
“என்னடி செய்ய போற?…” ஏதாவது சொல்வாள் என பார்த்தால் அவளோ இறங்கி வரும் வழியை காணோம். கடைசியில் ரிஷிதான் நேத்ராவின் பேச்சிற்கு ஒப்புக்கொள்ள வேண்டியதாகிற்று.
மறுநாள் வழக்கம் போல காலை அனய் ஷூட்டிங் சென்றுவிட தினமும் பார்க்கும் சிறி சிறுவேலைகளையும் பார்த்து மதியம் குழந்தைக்கு உணவளித்து வருணியை உறங்கவைத்து ஹாலிற்கு வர அங்கிருந்த டெலிபோனிற்கு அழைப்பு வந்தது.
இந்நேரம் யாரா இருக்கும்? என்ற யோசனையோடு அழைப்பை ஏற்றவள் ஹலோ எங்க அதை கண்டுகொள்ளாத நேத்ரா,
“அம்மா உங்களுக்கு எவ்வளோ நேரம் தான் கால் பண்ண? எங்கதான் வச்சீங்க உங்க மொபைலை. ஒரே நாட் ரீச்சபிள்…” என்று படபடவென பேச,
“நேத்ரா நான் மலர். அத்தை அவங்க ரூம்ல இருக்காங்க…” என,
“ஏய் அமேஸான் நீ வீட்லையா இருக்க?…” என்று அதிர்ச்சியாக கேட்க,
“ஆமா, இந்நேரம் வீட்ல இல்லாம எங்க போகப்போறேன்?…” சாவாகாசமாய் சோபாவில் அமர்ந்துகொண்டு மலர் கேட்க,
“அப்போ ஷூட்டிங் ஸ்பாட் போகலையா நீ?…”
“இல்லையே. ஏன் இன்னைக்கு என்ன?…”
“கொஞ்சநேரம் முன்னாடி நான் அண்ணாவுக்கு கால் செஞ்சிருந்தேன். செல்வா தான் எடுத்தான். அனய் அவன் வொய்ப் கூட பேசிட்டு இருக்கிறதா சொன்னான். அதான்…”
நேத்ரா சொல்லவும் வனமலருக்கு ஒன்றும் விளங்கவில்லை.
“நீ இங்க இருக்கும் போது அங்க யார் வொய்ப்?…” என கேட்டுக்கொண்டிருக்கும் பொழுதே எதையும் யோசிக்கும் நிலையில் இல்லை வனமலர்.
“நேத்ரா இன்னைக்கு ஷூட்டிங் எங்க?…”
மலரின் குரலில் எதையோ பறிகொடுத்துவிடுவோமோ என்கிற பரிதவிப்பு. அதை கண்டுகொண்ட நேத்ரா,
“உனக்குநான் வாட்ஸ் ஆப்ல லொகேஷன் அனுப்பி வைக்கிறேன்…”
குத்தாட்டம் கொண்டாட்டத்துடன் ரிஷி அனுப்பிய லொகேஷனை மலருக்கு ஷேர் செய்ய அதை பார்த்ததும் வாசலுக்கு விரைந்த மலர் காரை நோக்கி செல்ல சேத்தன் தன் பின்னால் வருவதை பார்த்து,
“காரை எடுக்க சொல்லுங்க…” என்றாள் இறுகிய குரலில்.
“மேம் எங்க?…” கேள்வி கேட்டாலும் காரின் முன் சீட்டில் ஏறி அமர்ந்து ட்ரைவரை காரை கிளப்ப சொன்னான்.
“இன்னைக்கு உங்க ஸார் ஷூட்டிங் எங்க நடக்குதோ அங்க…” என்றதும் தலையசைத்தவன் அனய்க்கு தகவல் சொல்ல மொபைலை எடுக்க அதை கண்டவள்,
“இன்பார்ம் செய்யவேண்டாம். நேர்ல போய் பார்த்துக்கலாம்…” என்றுவிட்டாள் வனமலர்.
செய்வதறியாது மொபைலை பாக்கெட்டினுள் வைத்தவன் ட்ரைவரிடம் இடத்தை சொல்லி பாதையை பார்க்க மலர் அங்குதான் செல்கிறோமா என நேத்ரா அனுப்பிய லொகேஷன் மூலம் சரிபார்த்துக்கொண்டே வந்தாள்.
சிறிது நேரம் கழித்து ஆண்டாளுக்கு அளித்த நேத்ரா,
“ம்மா என்ன உன் மருமக கிளம்பிட்டாளா?…” என,
“ஹ்ம்ம் இப்பதான் வேகமா கிளம்பினா. ஒன்னும் பிரச்சனை ஆகிடாதுல. உன்கிட்ட சொல்லவே பயமா இருந்துச்சு. ஏறுக்குமாறா எதாச்சும் செஞ்சிடுவியோன்னு. இப்ப என்ன ஆகுமோ?…” என்று பதட்டமாய் சொல்ல,
“ஒன்னும் ஆகாது. நல்லா சுடுதண்ணி காயவச்சுட்டு வெய்ட் பண்ணக. உங்க மகன் இன்னைக்கு அமேஸான்ட்ட வாங்குற அடிக்கு ஒத்தனம் குடுக்கனும்ல…” என்று சொல்லி போனை கட் செய்ய ஆண்டாளுக்கு திக்கென ஆனது.
அரைமணிநேர பயணத்தில் சரியாக ஒரு பங்களாவின் முன்பு கார் நிற்க அங்கு ஷூட்டிங் வேலைகள் பரபரப்பாக சென்றுகொண்டிருந்தது.
ஒருவேகத்தில் வந்துவிட்டாள் தான். ஆனால் எப்படி யாரிடம் கேட்பது என புரியாமல் விழிக்க அதை கண்ட சேத்தன்,
“மேம், நீங்க வாங்க. ஸார் ஆபீஸ் ரூம்ல வெய்ட் பண்ணுங்க. நான் போய் அழைச்சிட்டு வரேன்…” எனவும் அவனை முறைத்தவள்,
“எங்க இருக்காருன்னு கூட்டிட்டு போனா மட்டும் போதும்…” அழுத்தமாய் சொல்ல வேறு வழியின்றி அழைத்து சென்றான்.
கசகசவென ஆட்கள் இங்கும் அங்குமாய் சுற்ற அவர்களிடையே இருந்த மலரை பத்திரமாய் கூட்டி சென்றவன் பங்களாவின் உள்ளே அழைத்து செல்ல அங்கே,
“ஆக்ஷன்…” என்ற சப்தம் கேட்க திரும்பி பார்த்தவள் உறைந்துபோய் நின்றாள் அக்காட்சியில்.
அங்கே ஒரு மூலையில் பெண் ஒருத்தியின் முகத்தோடு முகம் வைத்து இழைந்துகொண்டு முத்தமுடுவதை போல் நெருக்கம் காட்டி நின்றவன் சாட்சாத் அனய்யே.
ஸ்தம்பித்து நின்றவள் பின்னால் நகர அங்கிருந்த ஸ்டூல் கீழே சாய்ந்தது. அந்த சத்தத்தில் அனைவரும் திரும்பி பார்க்க விழிகளில் நிறைந்துவிட்ட கண்ணீரோடு வனமலர்.
அவளை அவ்விடம் அப்படி ஒரு நிலையில் பார்த்த அனய் ஸ்தம்பித்து நின்றான்.
அவள் முகத்தை விடத் ஈன்ன உணர்கிறாள் என்பது புரிந்துபோனது அனய்க்கு. அவளை எப்படி கையாள்வது என புரியாமல் திகைத்து நிற்க,
“ஆதி…” என அழைத்தான் ரிஷி.
“டேக் கேர்…” மலரை காண்பித்து சொல்ல அனய் அவளை நெருங்கும் முன் மலர் அங்கிருந்த ஒரு அறைக்குள் நுழைந்துகொண்டாள்.
யாரின் முன்பும் அப்படி நிற்க பிடிக்காமல் தன் வலியை காண்பிப்பா விரும்பாமல் அருகில் இருந்த அறைக்குள் நுழைந்த பின் தான் அந்த அறையை பார்த்தாள்.
வேரோடு அடித்து வீழ்த்தப்பட்ட வலி. உயிரிருக்கும் பொழுதே துடிக்க துடிக்க சிறகினை வெட்டி வீசும் உயிர்வலி.
நெஞ்சை பிடித்துக்கொண்டு சுவற்றோடு சாய்ந்து அமர்ந்தவள் அப்படியே பிரம்மை பிடித்ததை போல அமர்ந்துவிட்டாள்.
அவளின் பின்னாலே வந்த அனய்யும் அவளின் அதிர்வை பார்த்து அருகில் நெருங்கும் முன் அவளின் பார்வை பதிந்திருந்த இடத்தை பார்க்க தலையில் கை வைத்து நின்றுவிட்டான்.