யாரின் இடையூறுமின்றி அவ்வீட்டில் தனி ராஜாங்கமே நடத்திக்கொண்டிருந்தார்கள் கீர்த்தியும், அக்னியும்.
இங்கே ஸ்ரீநிவாஸ் நிலையோ மண்டைக்குடைச்சல். திடீரென சொல்லாமல்கொள்ளாமல் வந்திறங்கியிருக்கும் மாமனார், மாமியார். கூடவே அவர்கள் பேசிக்கொண்டதன் சாராம்சம் இன்னும் எரிச்சலாக இருந்தது.
தங்கதுரையின் வேலை காலம் இன்னும் இருந்தாலும் அவரின் உடல்நிலை சொல்லிக்கொள்ளும்படி இல்லாததால் கட்டாய விருப்ப ஒய்வு வாங்கினால் என்னவென்னும் யோசனையில் இருப்பதாய் பேசியதே அவனின் கடுப்பிற்கு காரணம்.
ராகாவுடன் அவர்கள் பேசிக்கொண்டிருந்த பொழுது குழந்தையை பார்க்கவென மேலே சென்றவனின் காதில் விழுந்தவைகள்.
“கீர்த்தி புள்ளையை பெத்துக்கறதுக்குள்ள வி.ஆர்.எஸ் வாங்கிட்டா என்னன்னு இருக்குதும்மா. அப்பாவுக்கு முன்ன போல வேலை பார்க்க முடியல…” என தங்கதுரை பரிதாபமாக சொல்ல,
“பொள்ளாச்சி வீட்டை நீங்க அடமானம் வச்சவர்ட்டையே குடுத்துட்டு மிச்ச பணத்தை கடனை அடைச்சுட்டு இங்க வந்திருங்கப்பா…”
“எல்லாம் சரிதானம்மா. ஆனா கடைசியா இங்க வந்து? என்னம்மா செய்ய சொல்ற?…”
“இங்க வந்து உங்க வீட்டுல இருங்க. கீழே வீட்டை வாடகைக்கு விடுங்கப்பா. நான் அவர்க்கிட்ட எப்படியாவது பேசி இங்க இருந்து போய்டறோம். அந்த வருமானம் போதாதா? உங்க வி.ஆர்.எஸ். ல வர பணத்தை பேங்க்ல போட்டு வச்சுக்கோங்க…”
“சின்ன புள்ளையா ராகாம்மா நீ?…”
“அப்பா நிஜமா தான் சொல்றேன். இல்லைன்னா இல்லைன்னா…” என வேறு என்ன யோசனை சொல்லலாம் என யோசிக்க ஒன்றும் புலப்படாமல் கண்ணீருடன் தந்தையை பார்க்க அவளின் தலையை அப்படியே மடிமீது சாய்த்துக்கொண்டார் தங்கதுரை.
“அப்பா உனக்கு ரொம்ப கஷ்டத்தை குடுக்கறேன்ல. ஏன்டாம்மா இவ்வளவு யோசிக்கற? நாங்க பார்த்துக்கறோம். நீ கஷ்டப்படாத…” என்று அவளின் தலையை வருட அதுவரை இருவரின் பேச்சில் கலந்துகொள்ளாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கனகா,
“ப்ச் ராகா, இப்ப எதுக்கு அழுதுட்டு இருக்க? அப்பாவுக்குத்தான முடியலை, அம்மா நான் நல்லா தான் இருக்கேன். எல்லாம் நாங்க சமாளிச்சுக்குவோம். நீ பாட்டுக்கு அவர்க்கிட்ட வீட்டை காலி பண்ணனும்னு உளறி வைக்காத…” என கண்டிக்க,
“நீயெல்லாம் திருந்தவே மாட்ட. அப்பாவை கூட சமாளிச்சுடலாம். நீ இருக்கியே…” என்று தனது இயலாமையை தாயின் மீது ஆதங்கத்துடன் கொட்ட,
“திட்டனும்னா திட்டிக்கோடா. இதனால என்ன குறைஞ்சிட போறேன்…” என கனகா சிரிக்க,
“அம்மா…” என அவரின் தோளில் சாய்ந்த நொடி,
“ராகா…” என அழைத்தான் ஸ்ரீநிவாஸ்.
“இதோ வந்துட்டேன்…” என்று மெதுவாய் எழுந்து வெளியே வந்தவள் உள்ளே வருமாறு கூட சொல்லாமல்,
“வாங்க போகலாம். வினய் தூங்கறான்…” என அவனை கீழே அழைத்து செல்வதில் முனைப்பாக இருக்க ஸ்ரீநிவாஸ் முகம் கடுகடுவென இருந்தது.
“வாங்க மாப்பிள்ளை…” என கனகா வந்து வரவேற்க,
“ஹ்ம்ம்…” என்றுமட்டும் சொல்லிவிட்டு கீழே சென்றுவிட்டான்.
எப்போ வந்தீங்க? என்ன ஏதென்று எதுவும் கேட்காமல் நலம் விசாரிப்பு கூட இல்லாமல் அவன் இறங்கி சென்ற வேகம் கனகாவை கவலைக்குள் ஆக்கியது.
ஆனால் ராகாவிற்கு அப்படி எந்த கவலையும் இல்லை. அவனின் முகத்தில் இருந்த ஆத்திரத்தை வைத்தே அவன் அனைத்தையும் கேட்டிருக்கிறான் என்று புரிந்துகொண்டாள்.
அவளும் அவனே கேட்கட்டும் என்று அமைதியாக கீழ் வந்தவள் அவனுக்கு குடிக்க டீ தயாரிக்க ஆரம்பிக்க,
“என்ன ராகா திடீர்ன்னு உன் வீட்டுல இருந்து கிளம்பி வந்திருக்காங்க?…” என்றான் உடை மாற்றிக்கொண்டே அங்கிருந்து சத்தமாக.
“ஆமாங்க, வந்து ரொம்ப நாள் ஆச்சு. வீட்டை பராமரிக்கனும்ல. பூட்டுல வீட்டை அப்படியே விட்டா பூனை, நாய்ன்னு வந்து இதான் சாக்குன்னு அடைஞ்சுட்டா. அப்பறம் துரத்த மனசு வராது பாருங்க…” என்று சற்று நக்கலாகவே ராகா சொல்ல,
“ராகா நீ என்ன பேசற?…” என கோபமாக அவன் வர அதிராமல் திரும்பி பார்த்தவள்,
“ஆமாங்க, அம்மா அப்பா இங்க வந்து ரொம்ப நாள் ஆச்சா, நம்ம தெருவுல ஒரு நாய் சுத்திட்டே இருக்குமே. அது இங்க மேல பால்கனில வந்து வந்து பதுங்கிட்டு இருந்து அப்பப்ப கொஞ்சம் கொஞ்சமா டோர்மேட்ல படுக்கறதும் போறதுமா இருந்துட்டு இப்ப கடைசியில மொத்தமா இங்கயே இருக்க பாக்குது…”
“முன்னாடி நான் ச்சூன்னு சொன்னா கூட எந்திச்சு போய்டும். போன வாரம் அத்தனை விரட்டியும் அசையாம சட்டமா இருக்குது. அதான் ஆளில்லாத வீடுனா நாய்க்கு கூட எகத்தாளம் தான் போல. அம்மா வரவும் விரட்டி விட்டு இப்ப கீழே நின்னு நின்னு ஒளிஞ்சு பார்த்துட்டு இருக்குது…”
“இவங்க எப்படா போவாங்க, நாம போய் வீட்டை ஆட்டைய போடலாம்னு. அதாவது அந்த இடத்தை புடிக்கறது. விட்டா மடத்தை கூட புடிக்கும் போல. இங்கயே குட்டிய போட்ருச்சுன்னா துரத்தறது கஷ்டம்…”
அவனின் முகம் பார்க்காமல் பேசிக்கொண்டே டீயை போட்டவள் அதை ஊற்றிக்கொண்டு திரும்பி,
“நீங்க போய் ஹால்ல உட்காருங்க. நான் டீ எடுத்துட்டு வரேன். அம்மா பஜ்ஜி போடறேன்னாங்க. நான் தான் வேண்டாம்னு சொல்லிட்டேன். பழைய பக்கோடா இருக்குது. எடுத்துட்டு வரேன்…” என்றவளை நன்றாக முறைத்துக்கொண்டு சென்று அமர்ந்தவனுக்கு ராகாவின் எள்ளல் பேச்சு முழுதாய் விளங்கவில்லை.
ஆனாலும் அதை தனக்கு சொல்வதை போலவே தான் தோன்றியது. அதுதான் உண்மை என்பது கூட அவனுக்கு புரியவில்லை.
பெற்றோரின் பேச்சும் வேதனையும் ராகாவை மனதை வருத்த செய்ய ஸ்ரீநிவாஸ் வந்து ஒட்டுக்கேட்டது வேறு எரிச்சலடைய செய்ய பொதுவாய் சொல்வதை போல தன் ஆதங்கத்தை காட்டிவிட்டாள்.
ஏற்கனவே அக்னி, கீர்த்தனா திருமணம் முடிவான பொழுது வீட்டை எழுதித்தர சொல்லி மேம்போக்காய் கேட்டவனாகிற்றே. இன்றும் அப்படி ஒரு எண்ணத்தில் இருக்கிறானா என தெரியவில்லை. ஆனால் இதை அப்படியே விடவும் மனதில்லை.
“இந்தாங்க டீ…” என கொண்டு வந்து தர,
“உன் வீட்டுல ஏன் இப்ப வந்திருக்காங்கன்னு கேட்டா பதில் சொல்லமாட்டியா நீ?…”
“கீர்த்தனா வீட்டுக்காரர் அங்க போயிருக்கார் போல. ரெண்டு நாள் ஆகும். அதான் இங்க இருக்கலாம்னு வந்துட்டாங்க. அதோட கீர்த்தி அங்க போகாம இருந்தா போனவாரம் வரதா தான் இருந்திருக்காங்க….”
“என்னது அக்னி ஸார் அங்க போய்ருக்காரா?…” என பார்த்தவன்,
“அதான் இன்னைக்கு காலையில் இருந்தே அவரை பார்க்கலை…” என்று நினைத்தலும் இன்னொருபுறம் திடுக்கிட்டது.
“ரெண்டுநாளா? அப்ப அந்த ரெண்டுநாளும் சுரேன் கூடத்தான் மாரடிக்கனுமா?…” என வாய்விட்டே புலம்பிவிட,
“ஏன் அவர் இருந்தா உங்களுக்கென்ன?…”
“உனக்கு ஒன்னும் தெரியாது. வாயை மூடு, பொங்கி வச்சியா, புள்ளைய பார்த்தியான்னு இருக்கனும். என் ஆபீஸ் விஷயம் உனக்கெதுக்கு?….” என எரிந்து விழுந்தவன்,
“சரி அதை எல்லாம் விடு…” என்று ராகாவை அவன் அழுத்தமாய் பார்த்ததே அவளுக்கு பெரிதாய் எதையோ சொல்ல போகிறான் என்ற பயத்தை உண்டுபண்ணியது.
“இங்க பாரு ராகா, உன் தங்கச்சி இப்ப பெரிய இடத்துல எனக்கே முதலாளியா இருக்கற இடத்துல வசதியா வாழ போய்ட்டா. அவங்களுக்கு இருக்கற சொத்துக்கு சுகத்துக்கு இந்த வீடெல்லாம் எம்மாத்திரம். அதனால என் பேச்சை கேளு…”
“உன் தங்கச்சி அளவுக்கு நம்ம அந்தஸ்து உயரலைன்னாலும் ஓரளவுக்கு நாமளும் பெருசா வளரனும்…”
“ஹ்ம்ம்…”
“நாளைப்பின்ன இப்ப இருக்கற கீர்த்தி உன்னையே மதிக்காம போனாலும் ஆச்சர்யமில்லை. உனக்குன்னு சம அந்தஸ்து வரலைன்னாலும் இந்த மாதிரி ஒரு பிடிமானம் வேணும்ல…”
அவன் சுற்றி வளைத்து எங்கே வருகிறான் என்று ராகாவிற்கும் தெரியும். அதற்காக உடன்பிறந்தவர்களுக்கிடையே கலகத்தை மூட்ட பார்ப்பவனை வெறுப்புடன் பார்த்தபடி இருந்தாள்.
“கேட்கிறியா நீ?…” அவளின் அசையாத பார்வையில் எரிச்சலுடன் ஸ்ரீநிவாஸ் கேட்க,
“கேட்டுட்டு தான் இருக்கேன். நீங்க சொல்லுங்க…” என்றாள் உணர்வற்ற குரலில்.
“அதனால இந்த வீட்டை உன் பேருக்கு மாத்தி தர சொல்லி உன் அப்பாக்கிட்ட பேசு….” என்றவனின் நயமான பேச்சில் அப்போதுதான் அதிர்ச்சியாவதை போல பார்க்க,
“ராகா நான் அவங்க நல்லதுக்காகவும் தான் சொல்றேன். அவங்க காலம் வரைக்கும் பொள்ளாச்சி வீட்டுல இருக்கட்டும். முடியாதப்போ இங்க வந்துரட்டும். நாம கடைசி வரைக்கும் வச்சு பார்த்துப்போம். கீர்த்தி பார்ப்பான்றது யோசிக்க முடியாது…”
“அதுக்கு?…”
“என் பேர்ல கூட வேண்டாம். உன் பேர்ல வீட்டை எழுதி வாங்கிட்டா அப்பவும் இது அவங்க வீடு தான். இப்ப அவங்க வந்து போய் இருக்கற மாதிரியே அப்பவும் அவங்க வந்து போக இருக்கட்டும். எனக்கொண்ணும் இதுல ஆட்சேபனை இல்லை. இதுவுமே உனக்காக தான் சொல்றேன்…” என்று சொல்லி ராகாவின் முகத்தை பார்த்தான்.
அவனின் பேச்சில் உள்ளுக்குள் எரிமலைக்குழம்பு வெடித்தாலும் பல்லை கடித்துக்கொண்டு அதை அடக்கியபடி யோசிப்பதை போலவே தான் முகத்தை வைத்திருந்தாள்.
அவனின் பேச்சிற்கு மறுப்பு சொன்னாலோ? இல்லை எதிர்த்து பேசி சண்டையிட்டாலோ இது இன்னும் பெரிய இக்கட்டில் கொண்டு போய் விடும் என்பதால் இப்போதைக்கு இதை அப்படியே அடக்கி வைக்க நினைத்து,
“எனக்கு குழப்பமா இருக்குங்க…” என அவனை பார்த்து சொல்ல ஸ்ரீநிவாஸ் முகம் பளீரிட்டது.
ராகா தன் பேச்சில் யோசிக்க துவங்கிவிட்டாள் என்ற உற்சாகத்தில் உள்ளுக்குள் துள்ளியவன்,
“ஒன்னும் குழப்பமில்லை. யோசி. நான் சொன்னதை நல்லா யோசி…” என மேலும் பேசி அவளின் யோசனையை தடை செய்ய வேண்டாம் என்று அவளை அப்படியே விட்டான்.
“டீ ஆறிடுச்ச…” என ராகா கேட்க,
“ஒன்னும் பிரச்சனை இல்லை. இதை விட்டு வேற டீ போட்டு கொண்டு வா…” என்றவன் அங்கிருந்த நாளிதழ் ஒன்றை எடுத்து புரட்ட ஆரம்பித்தான்.
ஆனாலும் இதை ராகா எப்போது அவள் வீட்டில் பேசுவாள் என நினைத்து இவன் தான் அதிகமாய் யோசிக்க ஆரம்பித்தான்.
அதனால் அவளின் முகத்தையே உற்று உற்று பார்த்து வைக்க அவ்வவப்போது அவனை சந்தேகத்துடன் பார்ப்பதை போல ராகாவும் ஓரிரு முறை பார்த்துவிட அடக்கிவாசித்தான்.
இதோ மூன்று நாட்கள் ஆகிற்று. அன்று மாலை பேக்டரியில் இருந்து ஸ்ரீநிவாஸ் வர அதே நேரம் அக்னியும் வந்துவிட்டான் கீர்த்தனாவுடன்.
“வாங்க ஸார், எப்படி இருக்கீங்க?…” என வார்த்தைகள் தன்னைப்போல வந்து விழ அவனை பார்த்துக்கொண்டே தலையை மட்டும் அசைத்துவிட்டு கீர்த்தனாவுடன் மாடிக்கு செல்ல,
“வீட்டுக்கு வாங்க ஸார். இந்த மாதிரி நேரத்துல கீர்த்தி மாடி ஏறனுமா?…” என கேட்கவும் கீர்த்தனாவிற்குமே ஆச்சர்யமே.
ஆனால் அந்த மாதிரி ஆச்சர்யம் அக்னிக்கு இல்லை. அவனுக்கு அடைக்கலம் மூலம் விஷயம் வந்துவிட்டிருந்தது.
ராகா முழுவதுமாக கீர்த்தி பற்றி ஸ்ரீநிவாஸ் பேசியதை கூறியிருக்கவில்லை. இப்படி வீட்டை மாற்றி தர சொல்லி கேட்பதாக மட்டுமே சொல்லி, தந்தையின் உடல்நிலையும், விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்க இருப்பதாகவும் சொல்லியிருக்க அடைக்கலம் தான் பார்த்துக்கொள்வதாக அவளுக்கு ஆறுதல் அளித்தார்.
“மாடி ஏறி இறங்கறது ஒரு எக்ஸர்சைஸ் தான் ஸ்ரீநிவாஸ். நீங்க கூட இதை அடிக்கடி செய்யலாம்…” என சொல்லிவிட்டு,
“கீர்த்தி மேல மெதுவா போ…” என அவளை அனுப்பியவன் மாமனார் மாமியாருக்கு பதில் சொல்லி அனுப்பிவிட்டு,
“அப்பறம் ஸ்ரீநிவாஸ் ஆபீஸ் எல்லாம் எப்படி போச்சு?…” என்று அவனிடம் பேச்சுக்கொடுக்க,
“ஹ்ம்ம், போய்ட்டு தான் ஸார் இருக்குது…” என்றவன் அக்னியின் அடுத்தடுத்த கேள்விகளுக்கு தடுமாறினான்.
“ஓகே நாளைக்கு பார்க்கலாம்…” என்றவன் மாடிக்கு சென்றுவிட,
“இவர் என்ன நினைச்சு என்கிட்டே இத்தனை கேள்வி கேட்டாரு?” என குழம்பியவனாய் வீட்டிற்குள் சென்றான்.
இரவு உணவு முடித்துவிட்டு அங்கேயே அன்று தங்கிவிட்டு மறுநாள் காலை புகுந்தவீடு புறப்பட்டாள் கீர்த்தனா.
அக்னியுடனான அந்த மூன்று நாட்கள் என்பது அவளுக்கு வாழ்வில் மறக்கமுடியாத ஒன்று. அதற்காகவேனும் அமைதியாக அங்கே ஒத்துவாழ்வது என்று முடிவுடன் தான் வந்தாள் அவள்.
“வாம்மா கீர்த்தி இப்ப எப்டி இருக்க?…” என சந்திரிகா நலம் விசாரிக்க சுபா, சாதனா, சுரேன் என அனைவரும் வந்துவிட்டனர்.
குடும்பமே இவளுக்காக வீட்டில் இருக்க பதில் சொல்லி சொல்லி மாய்ந்துபோனது தான் மிச்சம்.
அதன் பின்னர் அக்னி கீர்த்தனாவுடன் கழிக்கும் நேரங்கள் மிகவும் அதிகமே. முயன்றளவு வேலைகளை குறைத்துக்கொண்டு அவளுடனே செலவிட்டான்.