கரை சேர்ந்த ஓடங்கள் – 10
முடிந்தது.! எல்லாம் எல்லாம் முடிந்திருந்தது..! முரளியின் குடும்பத்திற்கு அழகாய் விடிந்த அவ்விடியல் அபஸ்வர லயமாய் முடிந்திருந்தது விதியின் செயல் அல்ல. கொடூர மனம் கொண்ட பகைவர்களின் சதியின் வலை பின்னல்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் முரளியும் மனோகரியும் திருச்சியில் இருந்து நாங்குனேரி வந்திருந்தனர். சாருவைப் பார்ப்பதே பெரியவர்களுக்கு பெரிய வேலை. இதில் கோவில் சம்மந்தமாக அலைவதென்றால் சிரமம் என்பதால் தான் இந்த முன்னேற்பாடான இவர்களின் வருகை. அதோடு கணவன்-மனைவி இருவரும் தன்னுடைய வேலையை திருநெல்வேலிக்கே மாற்றல் கேட்டு விண்னப்பித்திருக்க, அதுவும் சரியென்ற ஒப்புதலுடன் அவர்களுக்காக காத்திருக்க, அதற்கான நன்றி செலுத்துதலுக்கும் சேர்த்து தான் இந்த வழிபாடு..
நாங்குனேரியில் இருந்து ஒரு மணி நேர பயணத் தூரத்தில் இருந்தது அவர்களது குலதெய்வ கோவில். பங்காளி முறையில் அனைவரையும் அழைத்திருக்க, விஸ்வத்தின் மேல் உள்ள மரியாதையில் அனைவரும் வருவதாக கூறியிருக்க, அவர்களுக்கு முன்னமே தாங்கள் சென்று நிற்க வேண்டும் என்று விடியலுக்கு முன்னமே கிளம்பியிருந்தனர் குடும்பத்தினர். மனோகரியின் அண்ணன் செல்வம் மட்டும் தாமதமாக வருவதாக கூறி, தங்கையிடம் ஏச்சும் பேச்சும் வாங்கி ஒரு வழியாக வந்திருந்தான்.
வழிபாடுகள் அனைத்தும் முடிய பல நாள் பார்க்காத சொந்த பந்தங்களைப் பார்த்து, அவர்களோடு அளவளாவி, ஊர்க்கதைகள் பேசி என நேரம் அழகாக நகர்ந்து கொண்டிருந்தது. அப்போது செல்வத்திற்கு போன் வர அவன் பேசிக்கொண்டே நடந்து கோவிலின் வெளிப்புறம் வந்திருந்தான். நேரம் மாலையைத் தொட, கிளம்பலாம் என சாரு நச்சரிக்க, குழந்தையை சமாளிக்க முடியாமல் அனைவரும் அப்போதே கிளம்ப ஆரம்பித்தனர்.
சொந்த பந்தங்கள் அனைவரும் சொல்லிக்கொண்டு கிளம்ப, வீட்டாட்களான இவர்களும் கிளம்பி வெளியில் வர அப்போது பார்த்து கோவில் நிர்வாகிகளும், அவரின் சில பங்காளிகளும் கோவில் விஸ்தரிப்பு பற்றி பேச விஸ்வத்தைப் பிடித்துக் கொள்ள, தந்தையைப் பின்பற்றி முரளியும் அங்கே நிற்க, ஆனால் அவன் கையில் இருந்த சாருவோ போகலாம் என நச்சரிக்க ஆரம்பித்திருந்தாள்.
பேத்தியின் ரகளையைக் கண்ட விஸ்வம் மகனை முன்னாடி சென்று காரில் இருக்குமாறு அனுப்பிவிட, அவனும் வேறுவழியின்றி சரியென்று செல்வத்தைப் பார்த்து தலையசைத்து விட்டு, வீட்டுப் பெண்களை அழைத்துக் கொண்டு காருக்குக் கிளம்பினான்.
அங்கு கோவிலுக்கு வெளியே ஒரு வயதான தம்பதியர் பதனீரும், நுங்கும் விற்றுக் கொண்டிருந்தனர். முரளி குடும்பம் வெளியே வர அந்தப் பதனீர் விற்கும் பெண்மணி மனோகரியைப் பார்த்து சினேகமாகப் புன்னகைத்தார், கள்ளம் கபடமில்லாத அந்த வெள்ளைப் புன்னகையில் கவர்ந்த மனோகரியும் பதிலுக்குப் புன்னகைத்து அவரிடம் பேச ஆரம்பித்தாள்.
வெறுமனே பேசிக்கொண்டு மட்டும் இருக்க முடியாதே என்பதை உணர்ந்த மனோகரி கணவனைப் பார்க்க, மனைவியின் விழி மொழியில் அவளது எண்ணத்தை உணர்ந்து கொண்டவன், எல்லொருக்கும் நுங்கு வாங்கிக் கொடுக்க, சாருவோ அவளது பங்கை வாங்கிக் கொண்டு, விஸ்வத்தை நோக்கி மீண்டும் கோவிலுக்குள் ஓடிவிட, அப்போதுதான் அந்த அசம்பாவிதம் நடந்தது. மிகவும் வேகமாகத் தன் கட்டுப்பாடுகளை இழந்து தாறுமாறாக சாலையில் வந்த ஒரு மணல் லாரி, சாருவை பிடிக்க அவளின் பின்னே வந்த முரளியைத் தூக்கி வீசிவிட்டு, அவர்கள் காரை இடித்துத் தள்ளி சுக்கு நூறாக நொறுக்கிவிட்டு நிற்காமல் சென்றிருந்தது.
நொடியில் நடந்து முடிந்திருந்த சம்பவத்தில் அங்குள்ள அனைவருமே ஸ்தம்பித்து நிற்கையில், முதலில் சுதாரித்தது பதனீர் கடையில் இருந்த பெண்மணி தான்.
‘அய்யோ..’ என அப்பெண்மணி கத்தவுமே சுற்றியிருந்த மக்கள் அனைவரும் கூடிவிட, செல்வமும் அரக்கபரக்க ஓடிவர, அதிர்ச்சியில் நின்றிருந்த விஸ்வத்தை அவரின் பங்காளிகள் நினைவுக்கு கொண்டு வர, அவசரமாக தன் கயைப் பிடித்திருந்த பேத்தியைப் பார்த்தார். அவள் அதற்கு முன்னமே அதிர்ச்சியில் மயங்கியிருந்தாள். அதைப் பார்த்தவர் மொத்தமாய் சுருண்டுக் கீழே விழுந்திருந்தார்.
அக்கம் பக்கம் உள்ளவர்கள் எல்லாம் ஆம்புலன்ஸிற்கும், போலிஸிற்கும் தகவல் தர, சாலை முழுவதும் உதிரம் செந்நிற ஆறாக ஓட, அதைப் பார்த்ததுமே புரிந்து போனது மூவருமே உயிருடன் இல்லை என்பது. சற்று முன் சிரித்துப் பேசிய மூவரும் தற்போது உயிருடன் இல்லை என்பதை மற்றவர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை எனும்போது உற்றவர்களால் எப்படி முடியும்..
விஸ்வத்தையும் சாருவையும் தெரிந்த ஒருவரின் காரில் ஏற்றிக் கொண்டு ஆம்புலன்ஸிற்கு பின்னே பறந்தான் செல்வம். கைகால்கள் என உறுப்புகள் நசுங்கியும் தனித்தனியாகவும் இருக்க, அதைப் பார்த்து பார்த்து சொல்லில் அடங்கா வலி செல்வத்திற்கு. சாருவையும், விஸ்வத்தையும் பார்க்கவே விடவில்லை அவன்.
தங்கையின் வாழ்க்கைக்காக தன் வாழ்க்கையைத் தியாகம் செய்தான். எத்தனையோ முறை தங்கையும், தங்கை குடும்பத்தினரும் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய போதும் அவன் ஒத்துக் கொள்ளவே இல்லை. ஏனோ மண வாழ்வில் அவனுக்கு மனதில் நாட்டமே இல்லாமல் போயிருந்தது.
அண்ணனிடம் போராடிப் பார்த்த மனோகரியும் ஒரு கட்டத்தில் முடியாமல், முரளியிடம் புலம்புவதோடு நிறுத்திக் கொண்டாள். தங்கையின் குடும்பமே தன் குடும்பம் என்று எல்லோரிடமும் பெருமையாக மார்தட்டிக் கொள்வான். காவியம் போல் வாழ்ந்தக் குடும்பத்தை நொடியில் சிதைத்து சின்னா பின்னமாக்கியிருந்தவர்களை உயிரோடு கொழுத்தி விடும் வெறி திகுதிகுவென கொழுந்து விட்டு எரிந்தது. யாராக இருந்தாலும் அவர்களது முடிவு என் கையில் தான் என மனதில் உறுதியாக எடுத்தவன், தனக்கு தெரிந்தவர்கள் மூலம் வேலையை ஆரம்பிக்க சொன்னான்.
மருத்துவமனை சம்பிரதாயங்கள் அனைத்தும் முடிந்து மூவரின் சடலங்களும் நேராக மயானத்திற்கே கொண்டு வரப்பட, கடைசி காலத்தில் தனக்கு கொள்ளி வைப்பான் என்று ஆசை ஆசையாக வளர்த்த மகனுக்கு தன் கையாலே கொள்ளீ வைக்கும் துர்பாக்கியத்தை நினைத்து நினைத்து விஸ்வத்திற்கு தாள முடியாத வேதனை. பத்து வயது பெண் குழந்தையை எப்படி வளர்க்கப் போகிறொம் என்ற பெரும் வேதனை. என்ன செய்யப் போகிறோம் எனத் தெரியாமல் அந்த வயதானவர் ஓய்ந்து போனார் மொத்தமாக.
இதில் திடமாக இருந்தது செல்வம் மட்டும் தான். தானும் ஓய்ந்து விட்டால் இவர்கள் இருவரையும் மீட்கவே முடியாது என முடிவெடுத்து, அவர்களை கவனிக்க ஆரம்பித்தான். உள்ளுக்குள் எறிந்து கொண்டிருந்த தீயை அனைக்க அவன் முயலவே இல்லை. சொல்லப்போனால் அதை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டுதான் இருந்தான். காவல்துறையில் முரளியின் மேல் இருந்த நன்மதிப்பில் அந்தக் கேசின் விசாரனையை குற்றவாளிகள் தப்பிக்க முடியாதபடி முடக்கிவிட்டனர்.
பெற்றோரை விட்டு பிரிந்து இருந்ததால் அவர்கள் நினைவு வராமல் சாருவை சுலபமாக சமாளிக்க முடிந்தது. ஆனால் கூடவே இருந்த பாட்டியை அவளால் மறக்க முடியவில்லை. தூங்கும் நேரத்தில் அலறியடித்து எழும் குழனதையை சமாளிக்கவே செல்வத்திற்கு பெரும் கஷ்டமாக போனது. அந்த நேரம் அவனுக்கு அவர்களைப் பார்த்தே ஆக வேண்டியக் கட்டாயம் செல்வத்தை அமைதியடையச் செய்தது.
முன்னர் அவன் பெரிய ஆள் இல்லைதான். ஆனால் எப்போது விஸ்வத்தின் சொத்துக்களை மேற்பார்வைப் பார்க்க ஆரம்பித்தானோ அப்போதிருந்தே மெல்ல மெல்ல தன் நிலையை மாற்றிக் கொண்டான். பணத்தின் மேல் துளியும் ஆசையில்லாதவன். அதனால் மொத்த சொத்தின் மேற்பார்வையும் அவன் கீழ் கொண்டு வந்தார் விஸ்வம்.
ஒன்றை பத்தாகும் வித்தையை விஸ்வத்திடம் இருந்து தான் கற்றுக் கொண்டான். அதுவே அவன் நிலையை வளர்த்துக் கொள்ள உதவியது. அவன் பெருக்கும் சொத்துக்கள் அனைத்தும் சாருவின் பெயரிலேயே கூடியது. அவன் செய்தால் சரியாக இருக்கும் என்று விஸ்வம் முழுதாக நம்பினார். அவரின் நம்பிக்கைக்கு உண்மையாக இருந்தான் செல்வம். செல்வம் இருப்பதால் தான் முரளியும் மனோகரியும் நிம்மதியாக திருச்சியில் வேலை செய்தனர். ஆனால் சாருவின் வயது கூட, அவள் பெற்றோரோடு இருக்க வேண்டிய கட்டாயத்தை உணர்ந்தும், அதோடு இப்போதைக்கு முரளீக்கும் இங்கு பிரச்சினைகள் இருக்காது என்று தெரிந்தும் தான் இருவரையும் மாற்றலுக்கு ஏற்பாடு செய்தார் விஸ்வம்.
ஆனால் மனிதன் நினைத்ததெல்லாம் நடந்து விடுமா என்ன.? நொடியில் நடந்து முடிந்த கொலைகளை என்ன செய்ய..? கடவுளின் சித்து விளையாட்டு ஆரம்பிக்கப்பட்டதா..? விடை தெரியா கேள்விகளோடு நின்றிருந்தார் செல்வம்.
அந்தக் கொலையை செய்ய சொன்னது.. ஆம் அது கொலை தான். முரளி சிறைக்கு அனுப்பியவன் தான் வெளியே வந்து இந்த வேலையைப் பார்த்திருந்தான். அவன் தான் என்றுத் தெரிந்ததுமே அவனைக் கொன்று விடும் ஆத்திரம் தலைக்கு ஏறியது. ஆனால் வீட்டின் நிலவரம் அப்போது சரியில்லை. ஒருவேளை போலிசில் பிடிபட்டால், இவர்களைப் பார்த்துக் கொள்ள ஆள் இல்லாமல் போகும் என்பதால் மட்டுமே அமைதியாக இருந்தான். ஆனால் அவன் அப்படியே இருப்பானா என்ன..? தனக்குத் தெரிந்த ஆட்களைக் கொண்டு வேலையில் இறங்கி விட்டான்.
தன் குடும்பத்தை அழித்தவர்களை உண்டு இல்லையென்று ஆக்கும் வெறி மட்டும் நாளுக்கு நாள் அதிகமாக, இந்தக் கேசை விசாரிக்கும் காவல்துறை அதிகாரியச் சந்தித்து, அந்தக் கொலையை விபத்து என கேசை முடித்து விடும்படி பேச, அவரும் செல்வத்தின் நியாயமான கோபத்தை உணர்ந்து அப்படியே செய்தார்.
அன்றோடு சாருவின் குடும்பம் இந்த உலகில் இருந்து மறைந்து ஒரு மாதமாகி இருந்தது. குழந்தையை அழைத்துக் கொண்டு இருவரும் பக்கத்தில் இருக்கும் ஸ்ரீ வைகுண்டம் சென்று வந்தனர். அப்போது வரும் வழியில் ஒரு பெரும் விபத்து. கார் சுக்கு நூறாக நொறுங்கி அதில் இருந்த ஆட்கள் அனைவரும் உருத் தெரியாமல் சிதைந்துக் கிடக்க, ஆம்புலன்சின் சைரன் சத்தமும், காவல்துறையின் சைரன் சத்தமும் அந்த இடத்தை அதிர வைத்துக் கொண்டிருந்தது.
வண்டியை நிறுத்தி என்னவென்று பார்க்கலாம் என சொன்ன செல்வத்திடம் குழந்தையை வைத்துக் கொண்டு வேண்டாம் என்று விட்டார் பெரியவர். சாலையில் ஆறாக ஓடிய உதிரத்தைப் பார்த்துக் கண்களை மூடிய விஸ்வத்திற்கு அன்றைய நாளின் எண்ணவோட்டங்கள். கை தானாக பேத்தியை இறுக்கிக் கொண்டது. பெரியவரின் நிலை அதுவென்றால் செல்வத்தின் நிலையோ வேறு.. கண்களில் தெரிந்த குரூரம் கலந்த வெற்றி, என் குடும்பத்தை அழித்த உன்னை அப்படியே விட்டுவிடுவேன் என்று நினைத்தாயா..? என்ற அவரின் பெருங்கோபம். பெரியவரின் முன் எதையும் காட்டாமல் அமதியாக அந்த இடத்தைக் கடக்க முயன்றார். ஆனால் முடியவில்லை.
‘யார் வீட்டுப் பிள்ளைகளோ..’ என வருத்தப்பட்ட பெரியவரைப் பார்த்து அரசன் அன்று கொல்வான்.. தெய்வம் நின்று கொல்லும்.. அது முன்னாடி.. இப்போ எல்லாம் தெய்வம் இன்றே நின்று கொல்லும்..” என அடக்கப்பட்டக் கோபத்தில் சொன்னவன், “வினை விதைத்தவன் வினை அறுப்பான்..” என்றான் பட்டென..
“என்ன் சொல்ற.. அப்போ இது யாருன்னு உனக்குத் தெரியுமா..? யாரு.. அவனா..? அவனே தானா..? கடவுளே.. என் குடும்பத்தையே வேரறுத்துட்டானே.. இந்த பச்ச மண்ணை வச்சிட்டு நான் என்ன செய்ய போறேன்..” என அத்தனை நாட்களீல் முதன் முறையாக குமுறி அழுதார் விஸ்வம். அதைப் பார்த்த செல்வத்தின் கண்களிலும் நீர் நிறைந்திருந்தது. உறங்கிக் கொண்டிருந்த சாரு, அழும் சத்தத்தில் அரண்டு எழுந்துவிட, ஆண்கள் இருவரும் பட்டென அழுகையை நிறுத்தி விட, செல்வம் காரை எடுக்க, விஸ்வம் பேத்தியைப் பார்த்து நிறைவாக புன்னகைத்தார்.
அந்தப் புன்னகையில் இருந்த வலி, வேதனை, கொலைகாரர்களுக்கு கிடைத்த தண்டனையில் உண்டான மகிழ்வு, நிறைவு என அனைத்துமே அந்தப் புன்னகையில் தெரிந்தது. அது செல்வத்திற்கும் புரிந்தது. தன் குடும்பத்திற்கு நடந்த கொடூரத்திற்கு நியாயம் கிடைத்து விட்டதாகவே இருவரும் நினைத்தனர். உதவி செய்த காவல்துறை அதிகாரி மூலமாகவே இந்த விபத்தையும் ஒன்றுமில்லாக்கி இருந்தார். அவரும் முரளியின் மேல் இருந்த அன்பில் செய்து கொடுத்தார்.
அடுத்து விஸ்வம் செல்வத்திடம் சாருவைப் பார்த்துக் கொள்ள திருமணம் செய்தே ஆகவேண்டும் என நிர்பந்திக்க, செல்வம் ஒத்துக் கொள்ளவே இல்லை. இத்தனை சொத்துக்களை வைத்துக் கொண்டு திருமணம் செய்தால் வருபவள் எப்படி இருப்பாளோ என்ற பயம் அவரி வெகுவாகத் தாக்க முடியவே முடியாது என்று விட்டார். விஸ்வமும் அவன் கூற்றில் இருந்த உணமையில் பேத்தியின் வாழ்க்கை முன்னே வர, அந்தப் பேச்சை அப்படியே விட்டு விட்டார்.
முதலில் சாருவை அந்தப் பயத்தில் இருந்து வெளிக் கொணரவெ பெரும்பாடு பட்டனர். சில நாட்களீல் இரவில் அலறி எழுபவளை சமாளீக்கவே முடியாது போக, வேறுவழி இல்லாமல் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல, அங்கே அவளுக்கு மனரீதியாக மருத்துவம் கொடுக்கப்பட, கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து வெளியே வந்தாள் சாரு.
நாட்கள், மாதங்களாக வருடங்களாகவே மாற, காயங்கள், ரணங்கள், வேதனைகள் அனைத்தும் வடுக்களாக அவர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்தன. அதிலிருந்து வெளீயே வர முடியாதே.. வெளி வேலைகள் மொத்தமும் செல்வம் பார்த்துக் கொள்ள, சாருவின் மொத்த வேலைகளையும் தனதாக்கிக் கொண்டார் விஸ்வம். அவர்களின் காலச் சக்கரமும் அடுத்தக் கட்டத்தை நோக்கிப் பயணிக்க, சாருவும் தன்னுடைய மருத்துவப் படிப்பின் முதல் வருடத்தை சென்னையில் தொடங்கினாள்.