“ம்ஹூம், ஆனா என்னவோ மாதிரி இருக்குது. வெய்ட்டா கால்ல வச்சு எடுத்தா நல்லா இருக்கும் போல…” என்றதுமே உடனே அவளின் கையை எடுத்துவிட்டு சுவற்றின் பக்கம் சாய்ந்து தன் கால்கள் இரண்டையும் அவளின் முழங்காலில் போட்டவன்,
“இப்போ ஓகே தானே?…” என்று கேட்கவும் புன்னகைத்த கீர்த்தனா,
“எதை?…” என்று லேப்டாப்பில் ஒரு கண்ணும் அவளிடம் ஒரு கண்ணும் வைத்துக்கொண்டு கேட்க,
“தூங்கிட்டேன்…” என கீர்த்தனா இரு கைகளாலும் முகத்தை மூடிக்கொள்ள வாய்விட்டு சிரித்தவன்,
“பேசிட்டே இருக்கும் போது தூக்கம் வரது பெரிய பிரச்சனை தெரியுமா?…” என்றவன்,
“இப்போ சொல்லு, என்னை மிஸ் பண்ணின தானே?…” என கேட்க மெதுவாய் தலையை அசைத்தாள்.
ராகாவின் பிரச்சனையில் இருந்து அருகருகே அமர்ந்து பேசும் தருணங்கள் கூட பொதுவான பேச்சுக்களாகவும், ஆறுதல்களாகவுமே இருக்க அவர்களுக்கென்ற ரகசிய பேச்சுக்களோ, சின்ன சின்ன பிரத்யோக ஸ்பரிசங்களோ எதுவும் இல்லை.
அதை பற்றி நினைக்க நேரமில்லை என்றாலும் மனதின் மூலையில் அவனின் அருகாமையை மனம் நாடியதென்னவோ உண்மை.
“ஆனா நான் ரொம்ப மிஸ் பண்ணினேன். உன்னை ரொம்பவே தேடினேன். அதை விட நீ என்னை மிஸ் பண்ணுவியே, அந்த நினைப்பு தான் என்னை உன்னை விட்டு நகரவிடலை. அதான் உன்னோடவே இருந்தேன்…” என்றவனை பார்த்தபடி இருந்தவள்,
“வெறும் உரசிட்டே பக்கத்துல பக்கத்துல உராஞ்சிட்டு இருக்கறது மட்டும் அன்பு இல்லைன்னு புரிஞ்சுட்டேன் நான். சின்ன சின்ன ஒத்தாசைகளும், புரிதல்களும், என்னோட பிடித்தங்களுக்கான உங்க பிரதிபலிப்புகளும் தான் தாம்பத்தியம். அது மட்டும் தான் கடைசி வரை வாழ்க்கையை சுவாரஸியமாய் சலிப்பில்லாம வாழ வைக்கும். இது எனக்கு நல்லாவே புரிஞ்சிருச்சு…”
“எனக்கு என் மேல ஒரு கான்பிடன்ட் இருந்துச்சு, எப்படியான சூழ்நிலையிலும் பொருந்தி போக கூடிய குணாதிசியம் என்னோடதுன்னு. அது சுக்குநூறா உடைஞ்சது உங்கக்கிட்ட தான். இங்க நான் நிறைய ஒத்துப்போக முடியாம தடுமாறினேன். அது கோபமா மாறிடுச்சு…”
“அந்த இடத்துல நான் கொஞ்சமாச்சும் யோசிச்சிருக்கனும். இது என் வீடுன்ற நினைப்பு என்னவோ வரவே இல்லை. அது என்னோட மன பிரம்மையாவும் இருந்திருக்கும். என்னை நானே ரொம்ப அண்டர்எஸ்டிமேட் பண்ணிக்கிட்டேன். அந்த நேரம் தான் ஸ்ரீநி மாமா உங்க ஆபீஸ்ல பண்ணிவச்ச குழறுபடி. அது இன்னும் பயத்தை குடுத்துச்சு…”
“இப்பத்தான கல்யாணம் ஆகி வந்திருக்கா. அப்போவே தொழில்ல பிரச்சனை. வந்த நேரம் அது இதுன்னு பேச்சு வந்திருமோன்னு எனக்குள்ள சுருண்டுட்டேன். எல்லாமே என்னோட திங்கிங். ஓவர் திங்கிங்…” என்று சிரிக்க,
“இன்னும் மாமா, அத்தைக்கு, ராகாவுக்கு தெரியாதுல…”
“ம்ஹூம், சொல்லலை. தெரியுமா என்னன்னும் கேட்டுக்கலை. ஒருவேளை தெரியாம இருந்திருந்தா? அதையுமே ரொம்ப யோசிச்சேன்…” என தன் குழப்பங்களை எல்லாம் சொல்ல சொல்ல கேட்டுக்கொண்டே இருந்தவனுக்கு வேலை மட்டும் ஓடவில்லை.
“லாஸ்ட் செக்கப்ல நீ பர்பெக்ட்ன்னு டாக்டர் சொன்னாங்க…” என்றான் ரகசியமாய்.
“ஹ்ம்ம் ஆமா சொன்னாங்க…” என அவனை போலவே கீர்த்தனா சொல்ல அவளின் காதோர குறுகுறுப்பு மூட்டியவன் இதழ்கள் பின்னங்கழுத்தை முத்தங்களால் நிரப்ப,
“அட்வைஸபில் இல்லை தீப்பொறி…” என அவள் முணங்க,
“உன் தீப்பொறி தானே? லைட்டா பத்திக்கிட்டா தப்பில்லை….” என வேண்டுமென்றே அவளை சீண்ட சீண்டி உண்மையில் சீண்டலுக்கு ஆளானான் அக்னி. அவனின் மொபைல் சப்தமிட,
“ப்ச், இனி ரூம்க்குள்ள வந்தா மொபைலை ஆஃப் பண்ணிடனும்…” என்ற எரிச்சலுடன் அவளை விட்டு விலகி எழுந்தவன் எடுத்து பேச,
“சாப்பிட வர சொன்னாங்க உன்னை. அப்பா, பெரியப்பா எல்லாம் வந்துட்டாங்க…” என சுரேன் சொல்ல,
“நல்ல நேரம் பார்த்து கூப்பிட்ட போ…”என்று கத்திவிட்டு போனை வைக்க அவனின் அவஸ்தையில் அடக்கமாட்டாமல் சிரித்தாள் கீர்த்தனா.
“பிரச்சனைக்கே பிரச்சனை இங்க…” என கேலி வேறு பேச,
“செம்ம கடுப்புல இருக்கேன். போடி…” என்று சொல்லிவிட்டு ஒரு டிஷர்டை எடுத்து அணிந்துகொண்டு அவளுடன் வந்தான்.
“ஒரு நாளைக்கு எத்தனை தடவை மேலையும் கீழேயும் ஏறி இறங்கிட்டு இருப்பீங்க? கீழே உள்ள ரூம்க்கு ஷிப்ட் ஆகிக்கோன்னா கேட்கறதே இல்லை…” என சந்திரிகா புலம்ப,
“விடுக்கா, இன்னும் ரெண்டு மாசம், கீர்த்தி வீட்டுல வளைகாப்பு போட்டு கூட்டிட்டு போவாங்க. அப்பறம் குழந்தை பிறக்கவும் தானே வருவா. அதுவரைக்கும் மேல இருக்கட்டும். எக்ஸர்சைஸ் தானே?…”
சுபா என்னவோ இதை பொதுவாக தான் சொன்னார். சந்திரிகா இதை கப்பென்று பிடித்துக்கொண்டார்.
“அப்போ ஏழாம் மாசம் நல்ல நாள் பார்க்கனும்ல. அட இன்னும் நாள் கணக்குல முப்பது நாள் தானே இருக்கு. அஞ்சாம் மாசம் கடைசி. இன்னும் ரெண்டு நாள்ல ஆறாம் மாசம் ஆரம்பிச்சிடும். ஆனா மாசக்கணக்குல தான நாம வளையல் போடுவோம்…”
இப்படி சந்திரிகா அப்போதிருந்தே வளைகாப்பு பற்றி பேச ஆரம்பிக்க அடைக்கலமும் பன்னீர்செல்வமும் தலையை ஆட்டியபடி இருக்க அக்னி ‘போச்சுடா’ என்பதை போல தலையை உலுக்கிக்கொண்டான்.
இன்னும் வளைகாப்பு முடித்து அனுப்பும் வரை சந்திரிகாவின் வாயை மூட முடியாது. இதை பற்றி பேசி பேசியே மாய்ந்துபோவார்.
முதலில் அக்னி சாப்பிட்டு முடித்து எழுந்துகொள்ளவும் அனைவருமே அவனை நிமிர்ந்து பார்க்க,
“இல்லை பசியில்லை. எனக்கு போதும்…” என்று சொல்லிவிட்டு ஹாலில் அமர்ந்துகொள்ள அதற்கு மேல் கீர்த்தனாவுக்கும் இறங்கவில்லை. அவளும் எழுந்துகொண்டாள்.
“அதானே பார்த்தேன்…” என்று சுரேன் கிண்டலடிக்க புன்னகையுடன் கை கழுவ செல்ல,
“ப்ச், அங்க பிளானே வேற. நீங்க என்ன பப்ளிக்கா பேசிட்டு இருக்கீங்க?…” என்று சாதனா அவனை அடக்க,
“முதல்ல நீங்க கத்துக்கோங்க. அப்பறமா நாங்க கத்துக்கறோம்…” என்று அவனையே வாரிவிட,
“உங்கிட்ட கேட்டேன் பாரு…” என்றான் சுரேன்.
“மாலதி ஹாட்பேக்ல பேக் பண்ணி அக்னி ரூம்ல கொண்டு போய் வச்சிடு. ப்ளாஸ்க்ல பால் நிறைய வை. மாசமா இருக்கற பொண்ணு, நைட்ல தான் பசிக்கும். அந்நேரம் இறங்கி வந்திட்டு இருக்கமுடியாது…” என சுபா சொல்ல மாலதியுடன் சேர்ந்தே உள்ளே சென்ற கீர்த்தனா,
“அம்மா கீர்த்தி, இந்த வீட்டுல மத்தவங்களுக்கு தெரியாம இருக்கும். எனக்கு நல்லாவே தெரியும்…”
“என்ன என்ன தெரியும்?…” என கீர்த்தனா அகேட்க,
“அப்பப்ப ரூம்க்கு சாப்பாடு கொண்டு போறது தான். அதனால உங்களுக்கு எப்ப வேணும்னு சொல்லுங்க. நானே கொண்டு வந்து தரேன். இப்ப நீங்க சொன்ன மாதிரியே செய்யறேன்…” என சொல்லி சிரிக்கவும் கீர்த்தனா அவரின் கன்னத்தை கிள்ளி,
“ச்ச்சோ ச்ச்ச்வீட்…” என்றாள்.
“சரி சரி நீங்க போங்க…” என்று அனுப்பிவிட்டு சொன்னபடி இருவருக்கும் உணவை எடுத்துக்கொண்டு மாடிக்கு சென்று அறைக்கு வெளியே வைத்துவிட்டு வந்துவிட்டாள்.
அறைக்கு வந்ததுமே அந்த உணவை பிரித்து தட்டில் வைத்து கீர்த்தனாவிடம் நீட்ட முறைப்புடன் வாங்கிக்கொண்டவள் அவனுக்கு ஊட்ட ஆரம்பித்தாள்.
“எல்லாரும் பொண்டாட்டிக்கு ஆசையா ஊட்டுவாங்கன்னு கண்டிருக்கேன். நீங்க என்னடான்னா என்னை ஊட்டவச்சு வாங்கிட்டு இருக்கீங்க…” என திட்டிக்கொண்டே ஊட்ட,
“உனக்கு ஞாபகம் இருக்கா? மறுவீடு போய்டு வந்த மறுநாள் உனக்கு சாப்பாடு எடுத்துட்டு வந்தன்னைக்கு சாப்பிட முடியாம வேஸ்ட் பண்ணவும் விரும்பாம நீ சாப்பிட முயற்சி பண்ணினது. அன்னைக்கு என்னை அறியாம உன் கையால் சாப்பிட ஆரம்பிச்சேன். அப்ப இருந்தே இதுல எனக்கொரு கிக். அதெல்லாம் அனுபவிச்சா தான் புரியும்…”
அக்னி ரசித்து சாப்பிட்டுக்கொண்டே அவளிடம் சொல்ல அவனின் அன்பில் என்றைக்கும் போல இன்றும் எல்லையில்லாத வான்பரப்பில் மிதந்தாள்.
வாழ்க்கையின் சுவாரஸியங்கள் ஒன்றுக்கொண்டு குறைந்ததில்லை. சிலருக்கு சுவாரசியங்கள் ரசனைகளுடன் கூடி வரும். சிலருக்கு அனுபவத்தை தேடி தரும். எதுவானாலும் அனைத்தும் நினைவுப்பெட்டகத்தில் தங்களுக்கென அந்தந்த இடங்களை தேர்ந்தெடுத்து தங்களை நிரப்பிக்கொள்ளும்.
ராகாவின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் நிகழத்தான் செய்தன. தங்கதுரை விருப்ப ஒய்வு பெற்று சொந்த ஊரிலேயே தங்கிவிட பொள்ளாச்சி வீட்டை வாடகைக்கு விடலாம் என்று அக்னியிடம் கேட்க அவன் வேண்டாம் என்றுவிட்டான்.
அவனுக்கு வாழ்க்கையின் பல பக்கங்களை உணர்த்திய வீடு அல்லவா? இன்றளவும் அன்றைய நாளின் தேன் சிந்தும் நினைவுகளில் லயித்து போவான். கூடலில்லாத ஊடலின் பல பரிமாணங்களை கண்டவனுக்கு அந்த வீட்டை வேறேவரேனுக்கும் தர விருப்பமில்லை.
ஒருவழியாய் அந்த வீட்டை கீர்த்தனாவின் பேருக்கு அவனே விலைகொடுத்து வாங்கிக்கொள்ள இதில் அவளின் பெற்றோர்கள் தான் அதிர்ந்தனர். அவனிடம் மறுக்கவும் பிரியமின்றி கடைசியாக ஒப்புக்கொண்டனர்.
தங்களின் தொழிற்சாலைக்கு வேலைக்கு வர சொல்லி அடைக்கலமும், அக்னியும் சொல்ல அதற்கு மறுத்துவிட்டாள் ராகா.
தொழில் தொடங்குவதற்கு உதவினால் மட்டும் போதுமானது என்று அவள் பிடிவாதமாய் இருக்க அக்னியே உறுதி கையப்பமிட்டு அவளுக்கு லோன் வாங்கி தர அதை கொண்டு பத்து தையல் மிஷின்களை வாங்கி போட்டு வேலைக்கு ஆட்களை அமர்த்தி பள்ளிச்சீருடைகள், நைட்டிகள் தைத்து தரும் தொழிலை நடத்த ஆரம்பித்தாள்.
முதலில் மாடியில் உள்ள வீட்டை வாடகைக்கு விட்டிருக்க தொழில் தொடங்கவும் அதனை பயன்படுத்திக்கொண்டாள்.
தெரிந்த ஆட்களை வைத்து ஆடர்களை வாங்கி தர மட்டுமே அக்னியும், அடைக்கலமும் உதவ அதனை தன்னுடைய திறமையால் பற்றிக்கொண்டாள் ராகா.
வீட்டில் தகப்பனும், தாயும் உறுதுணையாய் இருக்க வாழ்க்கையை நிம்மதியாய் வாழ்ந்து வந்தாள்.
ஸ்ரீநிவாஸ் அவ்வூரிலேயே இல்லை. கோவையில் வேலைக்கு சேர்ந்துவிட்டவன் வாரம் ஒருமுறை மட்டும் வந்து வெளியே இருந்தபடி இவர்களை பார்த்து செல்வான்.
முன்பே பெற்றோரிடம் ஸ்ரீநிவாஸ் அந்தளவுக்கு நெருக்கம் காண்பித்ததில்லை. ராகாவுடனான பிரச்சனையின் பின் சாரதாவின் பேச்சு எல்லை மீற வாக்குவாதம் வலுத்து மொத்தமாய் அவர்களை தூக்கி எரிந்து சென்றுவிட சாரதாவும் எங்கே போய்விட போகிறான் என்னும் அலட்சியத்தில் கண்டுகொள்ளவில்லை.
ஒரு வருடத்தில் இத்தனை மாற்றம். வினயின் மறுவருட பிறந்தநாளில் மகனை காண வர ராகா அதற்கு அனுமதிக்கவே இல்லை.
மகனை பார்த்து ஒரு வாழ்த்தாவது சொல்லி அவனை தூக்கி கொஞ்சவேண்டும் என்ற பிடிவாதத்தில் ஸ்ரீநிவாஸ் வாசலிலேயே அமர்ந்துகொண்டான்.
இந்த ஒருவருட தனிமை அவனுக்கு நிறையவே பாடங்களை கற்றுகொடுத்துக்கொண்டு தான் இருந்தது. ஆனாலும் சில அடிப்படை குணங்களை அவனாலேயே மாற்றமுடியவில்லை.
பிடிப்பு என்று ஒன்று இருந்ததென்றால் அது மனைவி, மகனிடம் மட்டுமே தான்.