யாரும் ஸ்ரீநிவாசை உள்ளே வா என மீண்டும் அழைக்கவில்லை. ராகா அங்கேயே தான் நின்றிருந்தாள். கனகா தான் கீர்த்தனாவிடம் நடந்ததை சொல்லி இருக்க கீர்த்தனா அமைதியாக கேட்டுக்கொண்டாள்.
இது இனி கணவன் மனைவி பிரச்சனை. வினயின் எதிர்காலம் என்று வரும் பொழுது நிறையவே நிதானமா இருக்கவேண்டி இருந்தது.
“உட்காருங்க ஸ்ரீநிவாஸ்…” என அக்னி சொல்லவும் மகனையும், குழந்தையையும் பார்த்துக்கொண்டே மெதுவாய் உள்ளே வந்து அமர,
“இல்லை நீங்களும் இருங்க. போக வேண்டாம் ஸார்…” என்றான் ஸ்ரீநிவாஸ் அவசரமாக.
“ஆர் யூ சூர்…” என்று அக்னி கேட்க,
“ஹ்ம்ம், ஆமா…” என்றதும்,
“கீர்த்தி வினயையும், பாப்பாவையும் மாடில கொண்டு போய் சந்தான அக்காட்ட கொஞ்சம் நேரம் பார்த்துக்க சொல்லி விட்டுட்டு வா…” என்றதும் இருவரோடும் மாடிக்கு சென்று அங்கு சூப்பர்வைசராக இருக்கும் சந்தானலட்சுமியிடம் விட்டுவிட்டு பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு கீழே வந்தாள்.
“ஹ்ஹ்ம்ம் பேசனும் தான். நிறைய பேசனும்னு நினைச்சிருந்தேன். இப்பவும் நிறைய சொல்லனும்னு தோணுது…” என்றவன்,
“ப்ளீஸ் ராகா, முன்னாடி வந்து நில்லு. பேசிட்டு போய்டறேன். எனக்கு முதல்ல உன்னை பார்த்து தான் பேசனும்…” என்றதும் மெதுவாய் வந்து நின்றாள் ராகா.
“உண்மையை சொல்லனும்னா நான் தெரியாம பண்ணிட்டேன்னு உன் கிட்ட சொல்ல மாட்டேன். எல்லாமே தெரிஞ்சு தான் பண்ணினேன். எல்லாரையும் எனக்கு எதிரியா நினைச்சு தான் செஞ்சேன். தெரிஞ்சு பண்ணினதுக்கான தண்டனையை நான் அனுபவிச்சிட்டேன். இனியும் அனுபவிக்கறதா இருந்தாலும் பண்ணிக்கறேன்…”
“அதுக்கு முன்னால என்னை பத்தி உனக்கு தெளிவுபடுத்திக்கறேன். உண்மையா உன்னை பிடிச்சு தான் கல்யாணம் பண்ணினேன். அதுலயும் என்னோட சுயநலம் இருக்குது தான். இந்த வீடு. கல்யாணம் ஆச்சுன்னா இந்த வீடும் எனக்கு. எனக்கு வர போற மனைவி எப்படி இருக்கனும்னு நான் நினைக்கும் போது நீ தான் தெரிஞ்ச…”
“அமைதியா, எந்நேரமும் முகத்துல ஒரு சிரிப்போட எனக்கு அதை பார்க்கும் போதே ப்ரெஷா பீல் ஆகும். வீட்டுல பேசி உன்னை கல்யாணம் செஞ்சுக்க ஆசைப்பட்டேன். அம்மா மாமாக்கிட்ட வரதட்சனை அதிகமா கேட்கும் போது கூட எனக்குள்ள ஒரு இறுமாப்பு, என்னை மாதிரி ஒருத்தன் உங்களுக்கு அதிகம்னு நினைச்சேன். அப்போ நீங்க எனக்கு செய்யறதுல தப்பில்லைன்னு தோணுச்சு. அதான் தடுக்கலை…”
நிமிர்ந்து பார்த்தவளின் பார்வை அவனை துண்டுதுண்டாய் வெட்டி போட்டது. தெரிந்தது தான், ஆனாலும் அவனின் வாயால் கேட்க இன்னும் கோபமாய் வந்தது.
“இதை சொல்றதால உனக்கு இன்னும் கோபம் வரலாம். வரட்டும். இதுக்கு மேலையும் மேம்போக்கா பேசி உன்னை சமாதானம் செய்ய நான் விரும்பலை. இதுதான் நான்னு சொல்லிடறேன். இனியும் உன்கிட்ட நடிக்க கூடாது இல்லையா? பொய்யா இன்னொரு தடவை நிக்க விரும்பலை. இன்னொரு வேஷம் போட வேண்டாம் பாரு…” என்றவன்,
“என்னால இப்பவும் போலியா உங்கம்மாப்பாவை கடைசி வரை பார்த்துக்கறேன்னு சொல்ல முடியலை. இதுவரைக்கும் என்னோட சுயநலத்துக்காக இடத்துக்கு தகுந்த மாதிரி இருந்துட்டு போய்ட்டேன். அப்படி இனியும் உன்கிட்ட பொய்யா நடிக்க வேண்டாம்னு ஒரு முடிவுக்கு வந்துட்டேன். இது நீ நம்பனும்னு இல்லை…”
“என்னமோ எனக்கு ஒட்டுதல்ன்னு என் வீட்டுலையும் வரலை, உன் வீட்டுலையும் வரலை. ஆனா உன்னை, என் புள்ளையை என்னால விடமுடியலை. ரொம்ப தேடுது மனசு. அதான் திரும்ப திரும்ப வரேன். நீ மன்னிச்சுடு, ஏத்துக்கோன்னு கேட்கலை. அதே நேரம் பார்க்க வரதை தடுக்காத ப்ளீஸ். உன்னை எந்த வகையிலும் தொந்தரவு செய்யமாட்டேன்…”
“என்னோட தப்பு எல்லாம் ரியலைஸ் பண்ணிட்டேனான்னு கேட்டா. தெரியலை. என்னை என்னால மாத்திக்க முடியலை. இப்பவும் நீயும், பையனும் தான் வேணும்னு தோணுது. குடும்பமா வாழனும்னு ஆசையா இருக்குது…”
“பொண்டாட்டி போனா சகலமும் போச்சுன்னு சொல்லுவாங்க. மத்த எந்த உறவுக்கும் சொல்லமாட்டாங்க. நான் அதை உணர்ந்துட்டேன். உன்னோட அன்பை திரும்ப பெற முடியுமான்னும் எனக்கு தெரியலை. இன்னொரு சான்ஸ் குடுன்னு நான் கேட்க போறதில்லை. ஆனா வினய்க்கு ஒரு அப்பாவா உனக்கு அட்லீஸ்ட் ஒரு கார்டியனா இருக்க மட்டும் அனுமதிச்சா போதும்னு கேட்கறேன். இனி எந்த விதத்திலையும் உன்னை நான் வற்புறுத்த மாட்டேன் ராகா…”
ஸ்ரீநிவாஸ் பேசி முடிக்க அங்கே அப்படி ஒரு அமைதி. அனைவரும் ஏதோ ஒருவகையில் அவனின் வெளிப்படையான பேச்சில் நிம்மதியாகினார்கள்.
இதில் ராகா மட்டுமே முடிவெடுக்க வேண்டியவள். அதனால் எந்த கேள்வியும் கேட்கவில்லை. எந்த ஆலோசனையும் சொல்லவில்லை. கனகா கூட வாயை திறக்கவில்லை.
“ராகா…” என்று மீண்டும் ஸ்ரீநிவாஸ் அழைக்க,
“இதையும் நம்பனுமா நான்? இல்லை இப்போ சேர்ந்துக்கறது மாதிரி சேர்ந்துட்டு திரும்பவும் இதையே செய்ய மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்? இப்படி தானே அவ்வளவு சாஃப்ட்டா பேசினீங்க என்னை கல்யாணம் செய்யறதுக்கு பொண்ணு கேட்டப்போ. நம்பித்தானே எங்கப்பா உங்களுக்கு என்னை கட்டி வச்சாரு…”
ராகா கண்ணீருடன் பேச ஆரம்பித்ததும் அக்னி கீர்த்தனாவிற்கு கண்ணை காண்பித்து வெளியே அழைத்து வந்துவிட அவளுடனே தங்கதுரையும் கனகாவும் பின் தொடர்ந்து வெளியேறிவிட்டனர்.
அவர்கள் இருவர் மட்டுமே வீட்டில் இருக்க ராகாவின் அழுகை எதையும் நிறுத்தும் தைரியமற்றவனாய் அவளருகே கூட செல்லமுடியாமல் அமைதியாய் நின்றான்.
“ஒன்னொன்னும் ஏமாத்தி ஏமாத்தி தினமும் ஏமாந்து வாழற கொடுமை என்னன்னு உங்களுக்கு தெரியுமா? எந்த நம்பிக்கைல பேசறீங்க நீங்க? உங்களோட இந்த நாலு வருஷத்துல நான் சந்தோஷமா இருந்த நாளை எல்லாம் விரல் விட்டு எண்ணிடலாம்….”
“என்னை சந்தோஷப்படுத்தற மாதிரி ஏதாவது நீங்க செஞ்சாலே அதுக்கு பின்னாடி என்ன வரும்னு நினைச்சு நினைச்சு பயப்பட வேண்டியதா இருந்துச்சு. எத்தனை கஷ்டத்தை குடுத்தீங்க என்னோட பெத்தவங்களுக்கு. இப்ப இந்த நிமிஷம் கூட நான் இந்த வீடு எனக்கு வேணும்ப்பான்னு கேட்டுட்டா யோசிக்காம குடுத்திருவாரு…”
“என் தங்கச்சிக்கும் என் சந்தோஷம் தான் முக்கியம். அவளும் இதுக்கு குறுக்க வரமாட்டா. ஆனா அவங்க பொண்ணா எனக்கு மனசாட்சி இருக்காதா? நானே அவங்க கழுத்த பிடிக்க முடியுமா? சொல்லுங்க…”
“எப்டி எப்டி? நான் ஒட்டுதல் இல்லாமலே வளர்ந்துட்டேன். அதனால இப்படி ஆகிட்டேன்னு சொல்றீங்களே, அப்பறம் உங்க பையனுக்கு மட்டும் என்ன நல்லதை உங்களால சொல்லி தந்திட முடியும்? எதிர்காலத்துல என் மகனும் இன்னொரு குடும்பத்தோட கண்ணீருக்கு காரணமாவான். அதை என்னால அனுமதிக்க முடியுமா?…”
“இப்ப கூட நீங்க நிஜமாவே மாறி தான் வந்துட்டீங்கன்னு எங்க வீட்டுல நம்பிட்டு இருக்காங்க. நீங்க எதிரியா நினைச்ச கீர்த்தி வீட்டுக்காரர் உங்களை இப்பவும் மதிச்சு பேசறார். எல்லாம் யாருக்காக தெரியுமா? எனக்காகன்னு நினைச்சீங்களா? அது ரெண்டாம்பட்சம் தான். வினய்க்காக. அவனுக்காக அவன் அப்பா இல்லாம நின்னுட கூடாதென்ற பரிதவிப்பு…”
“நீங்க பெத்த உங்க ரத்தத்துல உண்டான உங்க மகனுக்காக மத்தவங்க எல்லாம் யோசிக்கறாங்க. நீங்க நினைச்சீங்களா? எவ்வளவு தான் சுயநலக்காரனா இருந்தாலும் பெத்த தாயே பொண்டாட்டியை தப்பா பேசறப்போ கேட்டுட்டு இருக்க மாட்டான். நீங்க கேட்டுட்டு தான நின்னீங்க. நாளைக்கே என் மேல எதாச்சும் பழியை போடமாட்டீங்கன்னு என்ன நிச்சயம்? சொல்லுங்க…”
ராகாவின் கேள்விகளை அன்று போல் கவனியாமல் விடாமல் ஒவ்வொன்றையும் உள்வாங்கிக்கொண்டு அமைதியாக நின்றான்.
“என்னால உங்களை நம்ப முடியலை. இன்னொரு தடவை நம்பி ஏமாந்து நிக்கமுடியாது. சத்தியமா செத்துடுவேன். போன தடவை மீண்டு வந்துட்டேன். இன்னொருதடவை அதை தாங்கற சக்தி எனக்கு சுத்தமா இல்லை. என்னை இப்படியே விட்டுடுங்க…” என்றவள் கண்ணீரை துடைத்துவிட்டு,
“வினயை பார்க்க வரதை இனியும் நான் தடுக்கமாட்டேன். அதே நேரம் அவனை வச்சு என்னை மாத்திடலாம்னு கனவு காணாதீங்க. முடிவா சொல்லிட்டேன்…” என்றவள் பேச்சை நிறுத்திக்கொள்ளவும் நின்ற இடத்திலேயே இருந்தான் ஸ்ரீநிவாஸ்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் வினய் உள்ளே ஓடி வந்தவன் தயங்கி தயங்கி நின்று தகப்பனின் அருகே வந்தான். அவன் வந்ததை கூட உணராமல் ராகாவையே பார்த்தபடி இருந்த ஸ்ரீநிவாஸ் மகனின் தொடுகையில் திரும்பி பார்க்க,
“வந்துட்டேன்…” என்று சொல்லவும் நொடியும் தாமதிக்காமல் அவனை அள்ளிக்கொண்டவன் முத்தத்தால அர்ச்சிக்க குழந்தை மிரண்டான்.
“அம்மாட்ட, அம்மாட்ட…” என திணறவும் தான் தன் தவறை உணர்ந்தவன்,
“ஸாரி ஸாரிடா குட்டி. அப்பாவை மன்னிச்சிடு, அப்பாவை மன்னிச்சிடு…” என்றவன் அவனின் பாதங்களில் முத்தமிட வினயின் பார்வை எல்லாம் தாயிடமே இருந்தது.
மகன் பார்ப்பதை உணர்ந்ததும் கண்ணீரை துடைத்தவள் சிரிப்புடன் இருந்தாள். அவளின் கண்ணீர் வினயை அந்தளவுக்கு பயம்காட்டியது. பலநாள் உறக்கத்தில் எழுந்து அழும் குழந்தை தன் பிஞ்சு விரலால் தாயின் கன்னத்தில் கண்ணீரின் தடம் உள்ளதா என்று ஆராய ராகா சிதறிப்போவாள்.
கண்ணீர் என்ற ஒன்று வந்தாலும் கூட மகனிடம் காட்டாமல் அவனை தைரியம் சொல்லி சொல்லி வளர்த்தாள். அன்பு காட்ட கற்றுத்தந்தாள். அரவணைக்க கற்றுத்தந்தாள்.
இப்போது தந்தையின் கண்களை துடைத்தவன் அவனை ஆறுதலாய் அணைத்துக்கொண்டான்.
ஒரு ஆதரவு தரும் பாங்கே அவனின் செயலில். உரிமையாய் என்று இல்லை. மகனின் அந்த விலகல் தன்மை அவனை உடைத்துபோட்டது. தான் இழந்த சொர்க்கத்தின் அருமை உணர்ந்தவன் இனியாவது மனைவி, மகனுக்காகவேணும் இன்னும் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைத்தான்.
“பை அப்பா…” என கையை ஆட்ட அவனிடம் பேசவேண்டும் என்ற வார்த்தைகளை தொண்டைக்குள் விழுங்கிக்கொண்டான்.
பேச்சுக்களும், சமாதானங்களும் நிகழ்ந்துவிட்ட பிழையை சரி செய்ய போவதில்லை என்பது உணர்ந்துகொண்டான். கண்கெட்ட பின்பு சூரியநமஸ்காரம். மூச்சை ஆழ இழுத்துக்கொண்டவன் ஒரு சிரிப்புடன்,
“அப்பா உன்னை வந்து பார்ப்பேன்…” என்று மட்டும் சொல்லிவிட்டு செல்ல வெளியே அக்னியுடன் கீர்த்தனா மாடி படியில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க மாடியில் கனகாவும், தங்கதுரையும் இருந்தனர்.
“நான் கிளம்பறேன் ஸார்…” என ஸ்ரீநிவாஸ் வந்து சொல்லவும்,
“என்ன முடிவு பண்ணியிருக்கீங்க ஸ்ரீநிவாஸ்?…” என்றான் அவன்.
“என் முடிவுன்னு எதுவும் இல்லை. எதையும் எதிர்பார்க்கவும் இல்லை. இதோ இப்ப வந்து பார்க்கறதுக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சதே போதும்னு தோணுது. இனி வேணும்னு நினைக்கிறதை விட போதும்னு நினைக்க கத்துக்கனும். கிளம்பறேன்…” என்று சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டான் அவன்.
“இவர் மாறுவாருன்னு நினைக்கறீங்க?…” என கீர்த்தனா கேட்க,
“மாற்றம் ஒன்றே மாறாதது. பார்க்கலாம். அட்லீஸ்ட் வினய்க்காக மாறினா கூட போதும். ஒன்னு மட்டும் புரிஞ்சது. ரெண்டு பேருமே இன்னொரு துணையை தேடனும்னு நினைக்கலை. பார்ப்போம்…” என்றான் அக்னிசெல்வன்.
சிறிது நாட்களில் அந்த தெருவிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொண்ட ஸ்ரீநிவாஸ் வாரம் இரு நாட்கள் சென்று அங்கு வந்து தங்கிவிடுவான். மகனை பார்க்க பேச என இருந்துகொள்வான்.
அவ்வப்போது கனகாவும், தங்கதுரையும் கூட தாங்களே பேரனை கூட்டிக்கொண்டு சென்றுவிட்டு ஓரிரு வார்த்தைகள் தன்மையாய் பேசி வந்தார்கள்.
ராகாவிடம் எந்த எதிர்பார்ப்பும் இருப்பதை போல காட்டிக்கொள்வதில்லை அவன். இந்தளவிற்கேனும் தன்னை அனுமதிக்கிறாளே என்று நினைத்துக்கொள்வான். இன்றளவும் மாமியார், மாமனாரிடம் அதே ஓரிரு வார்த்தை தான். ராகாவிடம் பேசவேண்டும் என்றாலும் ஓரிரு வார்த்தைகள் தான் பேசுவான். அவளின் பதில்களும் அப்படித்தான்.
அவ்வப்போது தனது பெற்றோரையும் பார்த்துவிட்டு வர பேரனை பார்க்கவேண்டும் என்று சொல்லும் சாரதாவிடம் முடிவாய் சொல்லியிருந்தான் ஸ்ரீநிவாஸ்.
‘பார்ப்பதாக இருந்தால் பிரச்சனையின்றி வீட்டிற்கு சென்று பார்த்துவிட்டு வரவேண்டும்’ என்று சொல்லியிருக்க சாரதாவின் வறட்டு கௌரவம் அதற்கு இடமளிக்கவில்லை.
அப்படி ஒன்றும் பார்க்க அவசியமில்லை என்று சொல்லிவிட்டார் சாரதா. மனைவியின் பேச்சிற்கு வழக்கம் போல மகேஸ்வரனின் தலையாட்டு.
“அப்படி கூட்டிட்டு வந்து பேரனை காண்பிக்கனும்னு எனக்கும் அவசியமில்லை போ” என்றுவிட்டிருந்தான் ஸ்ரீநிவாஸ்.
வீட்டிற்கு உதவிக்கு என ஒரு ஆளை நியமித்துவிட்டு முடியும் போது ஒரெட்டு சென்று பார்வை மட்டும் தான். பிள்ளைகளின் ஒட்டுதல் தன் வளர்ப்பில் மட்டுமல்ல பக்குவமான நடத்தையிலும் என்பதை அந்த பெற்றோர் உணரவே இல்லை. மேலும் மேலும் தவறாக பேசி மகனிடம் வெறுப்பை வாங்கிக்கொண்டார் சாரதா.
அன்று சுரேன், சாதனாவின் மகன் ராமகிருஷ்ணனுக்கு முதலாம் மொட்டையும், கீர்த்தனாவின் மகள் நட்சத்திராவிற்கு இரண்டாம் மொட்டையும் போடும் வைபவம் கோவிலில் வைத்து நடைபெற விடுமுறை தினமாதலால் ஸ்ரீநிவாசும் வந்திருந்தான்.
இன்றளவும் சுரேனும் ஸ்ரீநிவாசும் பேசிக்கொள்வதில்லை. அவனின் முறைப்பை கூட சட்டை செய்வதில்லை ஸ்ரீநிவாஸ். எனக்கென்ன என்று மகனை மட்டுமே பார்வையில் வைத்திருந்தான்.
தன்னை விட சுரேனிடம் அதிக ஓடுதல் காண்பிக்கும் மகனை பார்த்தபடியே இருந்தான் ஸ்ரீநிவாஸ். சுரேனின் கையை பிடித்துக்கொண்டு அவன் எங்கு சென்றாலும் தானும் ஒட்டிக்கொண்டே சுற்ற அவனும் வினயை விடவில்லை.
“ராகா, நீ தான் வினய்க்கிட்ட சொல்லனும், அப்பாவோட இருன்னு என்ன இது?…” என்று சாதனா கேட்க,
“ப்ச், விடுப்பா. நான் அவன் போறதையும் தடுக்க மாட்டேன். அதே நேரம் போய்த்தான் ஆகனும்னும் சொல்லமாட்டேன். என் மகன் விருப்பம். அவன் இஷ்டம் போல அவன் இருந்துக்கட்டும். அவனே புரிஞ்சு உணர்ந்தா அவரை விடமாட்டான். அதுக்கு அவர் தான் ஸ்டேப் எடுக்கனும்…”