நிலா – 6
கோபாலசுவாமி சொல்லியது தான் தாமதம். உமாவிற்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. உயிர் மண்ணில் பாவவில்லை. அப்படி ஒரு சந்தோஷத்தில் மிதந்துகொண்டு இருந்தார்.
ஹரிணி திருமண விஷயம் அறிந்திருந்த சொந்தபந்தகளுக்கு மத்தியில் கேட்கும் கேள்விகளுக்கு உமாவால் பதில்சொல்லி மாளவில்லை.
அதுவே ஒரு கோபத்தை கொஞ்சம் கொஞ்சமாய் விசிறிவிட்டிருந்தது. இப்போது இந்த திருமணம் பற்றி கோபாலசுவாமி பேசாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக ஹரிணி திருமணத்தில் மனது கேளாமல் முகத்தை காட்டியிருந்திருப்பார்.
இப்போது நினைத்து நினைத்து பூரித்து மகளை பார்க்கும் நேரமெல்லாம் முகத்தை வழித்து நெட்டிமுறித்தார். திவ்யாவிற்கு தான் கலக்கமாக இருந்தது. உள்ளுக்குள் அழுகை பொங்கியது.
கத்தி கூச்சல் போட்டு ‘இந்த திருமணம் எனக்கு வேண்டாம்’ என்று ஊர் கேட்க சொல்லவேண்டும் போல இருந்தது.
சூர்யாவை பார்க்க அவனோ எப்போதும் போல இன்னும் அவளை அதட்டிக்கொண்டு தான் இருந்தான். திருமணம் என்ற பேச்சு வந்தும் கூட கனிவு என்று ஒன்று அவனிடத்தில் இல்லை.
‘இவரை கட்டிக்கிட்டா காலத்துக்கும் அடிமை, அதட்டல், மிரட்டல் தான்’ என மனது அந்த சங்கிலியிலிருந்து அறுத்துக்கொண்டு வெளியேற நினைத்தது.
முடிந்தளவு திருமணப்பேச்சில் கலந்துகொள்வதை தவிர்த்தாள். யார் எது கேட்டாலும் அம்மாவிடம் கேளுங்கள் என்றுவிடுவாள்.
இது அர்ச்சனாவுக்கு ஒன்றும் பெரிய வித்தியாசமாக தோன்றவில்லை. சிறுவயதிலிருந்தே திவ்யாவிடம் கருத்தையும் கேட்டு அவளின் தேர்வை அறிந்து பின், ‘இது உனக்கு பொருத்தமில்லை’ என தன் விருப்பத்தை தான் மகளிடம் திணிப்பார்.
உமா செய்வதை கண்டு சில நேரங்களில் திவ்யா உங்க இஷ்டம் என விலகி செல்ல அர்ச்சனாவும் இதை பலமுறை கண்டித்திருக்கிறார்.
“அவளுக்கும் ஆசை இருக்கும் உமா. நீ பன்றது தப்பு. இந்த ட்ரெஸ் அவளுக்கு புடிச்சிருக்கா? அவளுக்கு எப்படி ஜ்வேல் போடனும்னு ஒரு ஆசை இருக்கும்ல. என்ன பன்ற நீ? அவ எதை செலெக்ட் பண்ணினாலும் வேண்டாம்னு சொல்ற…” என கேட்க,
“அண்ணி அவளுக்கு என்ன தெரியும்? நாம தான் நல்லது எதுக்கு சொல்லி வளர்க்கனும். அவளுக்கு எந்த ட்ரெஸ் பொருத்தமா இருக்கும்னு எனக்கு தெரியாதா?…” என்பார் உமா.
“அப்ப அவக்கிட்ட முதல்ல ஒபீனியன் கேட்கவே கூடாது நீ. திவ்யாட்டையும் கேட்டு அவளும் சூஸ் பண்ணி அதை பார்த்து நீ அவளோட செலேக்ஷனை கமென்ட் பண்ணி இது தேவையா?…” என்பார் அர்ச்சனா.
ஆனாலும் உமா தன்னை மாற்றிக்கொள்ளவே இல்லை. முடிந்தளவு திவ்யா எதையும் பெரிதுபடுத்தாமல் இருந்துகொள்ளவே நினைத்தாள்.
திவ்யாவின் ஒரே எண்ணம். சூர்யாவுடன் இந்த திருமணம் வேண்டாம். இன்னொன்று திருமணம் என்று ஒன்றாகி தனக்கு பிடித்தமுறையில் தான் வாழவேண்டும் தாயின் தலையீடு இல்லாமல். இப்படி தான் எண்ணிக்கொண்டு இருந்தாள்.
இரண்டுக்கும் வாய்ப்பென்பதே இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் அவளின் கண்களில் அப்பட்டமாக பிரதிபலித்தது.
எப்போதுமே சூர்யா வீட்டில் இருக்கும் பொழுது அவள் வந்தால் அவளின் பார்வை அப்படித்தான் இருக்குமென்பதால் வீட்டினருக்கு பெரிதாய் ஒன்றும் தோன்றவில்லை.
இன்னொன்று திருமணம் என்பதால் உண்டான டென்ஷன் இருக்குமென்று அவர்களே யூகித்துக்கொள்ள திருமணம் என்று சொல்லி பத்துநாட்கள் கடந்துவிட்டது.
அன்று காலை தியானத்தின் பின்னர் பத்திரிகை பிரதி வந்திருக்க அதனை எடுத்துக்கொண்டு வந்து தந்தார் அர்ச்சனா.
“இன்னும் இருபது நாள் தான் இருக்குது. பட்டுத்துணி எல்லாம் எடுக்கனுமே?…” என சொல்ல,
“நமக்குன்னு டெய்லர் தச்சு தருவாங்களே. அப்பறம் என்ன கவலை? அவரை வீட்டோட இருந்து என்னவெல்லாம் வேணும்னு குடுத்துடு. புடவைக்கடைக்கு கால் பண்ணினா கொண்டுவந்து குடுத்திருவாங்க. செலெக்ட் பண்ணிக்கோங்க. வேறென்ன?…”
பத்திரிக்கை பிரதியை பார்த்தபடி அவர் அர்ச்சனாவிடம் கேட்க கடைக்கு செல்லவேண்டும் என்று எப்படி சொல்வது என கையை பிசைந்துகொண்டு இருந்தார்.
“என்ன அண்ணி பத்திரிக்கை வந்திருக்குதாம்?…” என்று வந்துவிட்டார் உமா.
‘மூக்குல எப்படித்தான் வேர்க்குமோ? உள்ள கொண்டுவந்து குடுத்துட்டு போனவர் தலை மறையுமுன்ன வந்தாச்சு’ என நினைத்த அர்ச்சனாவிற்கு சமீபமாக உமாவின் பேச்சில், நடையில் எதுவோ மாற்றம் இருப்பதை போல தோன்றியது.
முன்பானால் கோபாலசுவாமியிடம் பேசுவதற்கு கூட அர்ச்சனாவிடம் கேட்டு அவர் தன் கணவரிடம் கேட்டு சொன்ன பின்னால் தான் பேசவே வருவார்.
இந்த திருமணம் முடிவானதில் இருந்தே எதுவோ ஒரு அலட்சியபாவமும், ஒரு தன்னைமிஞ்சியதனமும் இருப்பதை போலவே தோன்றியது.
அர்ச்சனாவிற்கு உமா கோபாலசுவாமியிடம் நேரடியாக பேசுவதை பற்றி ஒன்றுமில்லை. ஆனால் அதை தன்னை ஒரு அலட்சியத்துடன் ‘ இனி நீ என்ன இடையில்?’ என்பதை போல தன்னை அகற்றுவதை போலவே உணர்ந்தார் அர்ச்சனா.
ஆனாலும் காட்டிக்கொள்ளவில்லை. இதை தானே முன்பே அர்ச்சனாவும் சொல்வார்.
“அவர் முதல்ல உனக்கு அண்ணன் உமா. நீ என்னை வச்சு அவர்க்கிட்ட பேசனும்னு என்ன இருக்குது? நேரடியாவே பேசவேண்டியது தானே?…” என சொல்ல,
“என்ன இருந்தாலும் உங்களை தாண்டித்தானே அண்ணி. நீங்க வேற அண்ணன் வேறையா?…” என பாசாங்காய் சொல்பவர் இன்று அலட்சியம் செய்து எனக்கு அண்ணன், பிறகு தான் நீ என்பதை போல நடந்துகொள்ளும் முறை அப்பட்டமாகவே தெரிந்தது.
கோபாலசுவாமிக்கு இது புரிந்தாலும் ஒரு புருவச்சுளிப்புடன் அதை கண்டுகொள்ளாமல் இருந்துகொண்டார்.
“இந்த டிஸைன் தான் சொல்லிருந்தீங்களா பத்திரிக்கைக்கு? அன்னைக்கு இதை விட காஸ்ட்லியா இன்னும் ரெண்ட் கார்ட் இருந்ததே அண்ணா. அதை குடுத்திருப்பீங்கன்னு நினைச்சேன்…” என சொல்லிவிட்டு கோபாலசுவாமியை பார்க்க அவர் ஒற்றை பார்வையில் தன் கண்டனத்தை தெரிவிக்க,
“ஹரிணிக்கும், மாப்பிள்ளைக்கும் இதுதான் பிடிச்சிருந்தது உமா. அதான் இதையே குடுத்தாச்சு…” என அர்ச்சனா சொல்ல,
“என்ன அண்ணி நீங்க? ஹரிணி மட்டும் தான் கல்யாண பொண்ணா? திவ்யாவும் தானே? நான் திவ்யாட்ட சொல்லிருந்தேனே அந்த லைட் க்ரீன் வித் லெமன் எல்லோ டிஸைன சூஸ் பண்ணுன்னு…” என்று சொல்லிவிட்டு அர்ச்சனாவை பார்க்க,
“நான் கேட்டதுக்கு ஹரிணி சூஸ் பண்ணின டிஸைனே நல்லா சிம்பிளா இருக்குது. அதையே குடுத்திருங்கன்னு சொல்லிட்டா…” என்றதும் உமா கோபமாய் எதுவோ சொல்ல வாயை திறக்கும் முன்,
“உன் அண்ணனுக்கும் இந்த டிஸைன் தான் சரியா இருக்கும்னு தோணுச்சு. இதையே குடுக்கலாம்னு சொல்லிட்டார்…” என்றதும் பேச இருந்த வாயை கப்பென்று மூடிக்கொண்டார்.
“ஏன் உமா பகட்டா பத்திரிக்கை இருந்தா தான் நல்லா இருக்குமா? யார் பார்வையும் உறுத்தாம எந்தக்கண்ணும் படாம நல்லபடியா கல்யாணம் நடந்தா போதும்னு நினை…” என சொல்லிவிட்டு அர்ச்சனா நகர்ந்துவிட உமாவிற்கு திக்கென்று ஆனது.
“இல்லை அண்ணா, நம்ம வீட்டு முதல் விசேஷம். அதான் கொஞ்சம் கிராண்டா செஞ்சா நல்லா இருக்குமேன்னு தோணுச்சு….” என அண்ணனை சமாதானம் செய்ய பார்க்க,
“அதான் அர்ச்சு சொல்லிட்டாளே. விடு. எனக்கு கொஞ்சம் வேலை இருக்குதும்மா. நீ கிளம்பு…” என்று சொல்லிவிட்டார்.
சாதாரணமாக இருந்தாலும் உமாவிற்கு அது வருத்தமாக மாறியது. உரிமை கொண்டாடவேண்டும் என்று நினைத்தாலும் கோபாலசுவாமி தங்கையிடம் அத்தனை ஒட்டுதல் இல்லை.
அர்ச்சனா வந்த பிறகு அவரோடு நன்றாக பழகி இருந்தாலும் அர்ச்சனாவிடம் சென்று அதன் பின் அண்ணனிடம் செல்லவேண்டி இருக்கிறதே என்ற எண்ணம் முன்பிருந்தே ஆழ்மனதில் இருந்துகொண்டது.
அது பலசமயம் வெளிப்படாமல் பார்த்துக்கொள்பவர் இப்போது மகளின் திருமணம் என்றதும் அவரறியாமல் இப்படி செய்ய அது அர்ச்சனாவை பாதித்தது.
‘எப்போதும் போல இருக்கவேண்டியது தானே?’ என்ற மனத்தாங்கல் தான் அர்ச்சனாவிற்கு. மற்றபடி அவரை தவறாக நினைக்கும் ரகம் அல்லவே.
வெளியே வந்த உமா நேராக அர்ச்சனாவிடம் செல்ல அவர் மகள்களுடன் யார் யாருக்கெல்லாம் பத்திரிக்கை கொடுக்கவேண்டும் என்னும் லிஸ்ட்டை போட்டுக்கொண்டு இருந்தனர்.
“அண்ணி…” என உமா அழைத்ததும்,
“வா உமா. உட்கார். யாருக்கெல்லாம் இன்விடேஷன் வைக்கன்னு லிஸ்ட் போட்டுட்டு இருக்கோம். நீயும் இதை பாரேன். யாரையாச்சும் நான் விட்டிருந்தா கூட நீ ஞாபகப்படுத்துவ…” என அர்ச்சனா அவரை தன்னருகே அமர்த்த உமாவிற்கு என்னவோ போல் ஆனது.
ஆனாலும் குற்றவுணர்வை காட்டிக்கொள்ளாமல் அர்ச்சனாவோடு சேர்ந்தமர்ந்து அதனை சரிபார்த்து பெயர்களை சொல்ல ஆரம்பித்தார்.
“நல்லவேளை நீ சொன்ன. இல்லன்னா உன் அண்ணன் என்னை தொலைச்சிருப்பார். இதுக்குத்தான் உமா வேணும்ன்றது…” என சிரித்தவர்,
“ஹரிணிக்கு ஏற்கனவே ட்ரெஸ் எல்லாம் இருக்குது உமா. இன்னும் புதுசா என்ன வாங்கலாம்னு வேற பார்க்கனும். எனக்கு அதுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணேன்…” என்றும் அவரை தங்களுடன் இழுத்துக்கொண்டார்.
அர்ச்சனாவிற்கு தெரியும் கோபாலசுவாமி அறையில் இருந்து வரும் பொழுதே உமாவின் முகம் சிறுத்துப்போய் இருப்பதை பார்த்துவிட்டார். அதனால் அவரின் மனநிலையை மாற்ற சூழ்நிலையை கையிலெடுத்துக்கொண்டு உமாவின் மனதை திசைதிருப்பினார்.
“இன்னும் கல்யாணத்துக்கு ட்ரெஸ் பர்ச்சேஸ் பண்ணலையே அண்ணி…” என உமா கேட்க,
“பாலாவை இன்னைக்கு வர சொல்லிருக்கேன் உமா. வெற்றி கூட்டிட்டு வருவான். இருபது நாள்ல அவளால என்ன முடியும்னு பார்க்கனுமே…”
“அதுக்குத்தான் நம்ம டெய்லரையும் சேர்த்துக்கலாம்னு சொல்றேன். அவருக்குத்தான் கச்சிதமா தைக்க முடியும். அந்த லேடியை வர சொல்லி பாலாவும் பேசட்டுமே…” உமா சொல்ல,
“இது இன்னும் நல்ல ஐடியாவா இருக்கே…” என்றார் அர்ச்சனா.
சொல்லியதை போலவே மாலை பாலாவை அழைத்துக்கொண்டு வெற்றி வந்துவிட உமாவும் தங்களுக்கு வழக்கமாக தைக்கும் பெண்மணியை வர சொல்லிவிட்டார்.
இருவரும் கலந்து பேசி அங்கேயே இருந்து தைத்து தருகிறேன் என அப்பெண்மணி சொல்ல பாலாவும் தன்னுடைய தோழியுடன் வந்து உடைகளை வடிவமைப்பதாக சொல்லிவிட அதை பற்றி கோபாலசுவாமியிடம் பேசினார் அர்ச்சனா.
“எதுக்கும் பட்டு எடுக்க கடைக்கு போனா இன்னும் நல்லா இருக்குமேன்னு தோணுது…” என அன்று இரவு உணவிற்கு பின் அர்ச்சனா சொல்ல,
“யார் சொன்னா?…” என்றார் கோபாலசுவாமி.
“நம்ம பாலா தான்…” என வேகமாய் அர்ச்சனா சொல்ல,
“என்ன?…” என்றார் அவர்.
“இல்ல, வெற்றியோட அக்கா பொண்ணு. பாலா. அந்த பொண்ணுதான் சொல்லுச்சு…” என்று மீண்டும் தயக்கமான குரலில் சொல்ல,
“ஓஹ்…” என யோசனையுடன் பார்த்தவர் பின்,
“ஹ்ம்ம், நாளைக்கு நாள் நல்ல நாள் தான். சேர்ந்தே போய்ட்டு வந்திருங்க…” என சொல்லவும்,
“நீங்களும் வாங்களேன்….” என அழைக்க,
“என்ன?…” என்றார் மீண்டும்.
“இல்லை, நீங்க வந்தா சூர்யாவும் வருவான். இல்லைன்னா நீங்களே எடுங்கன்னு சொல்லிருவான். அதுக்குத்தான்…” என்றதும் ஆமோதிப்பாக தலையசைத்தவர்.
“சரி அவன்கிட்ட சொல்லிடு. நாளைக்கு ஒரு ரெண்டுமணிநேரம் நம்மளோட வரனும்னு. நான் சொன்னேன்னு சொல்லிரு…” என்றதும் தான் அர்ச்சனாவின் முகம் முழுமையாக மலர்ந்தது.
சொல்லியதை போலவே மறுநாள் கிளம்பி முகூர்த்த உடைகளும், குடும்பத்தினருக்கு உடைகளும் எடுக்க உடன் பாலாவையும் ஜெயஸ்ரீயையும் அழைத்துக்கொண்டார் அர்ச்சனா.
பாலாவை ஹரிணியும், அஸ்வினியும் அங்குமிங்கும் விடவே இல்லை. இது எப்படி இருக்கும். இந்த உடைக்கு எந்த விதமாக ப்ளவுஸ் போடவேண்டும், இந்த கலர் சரியா என கேட்டு ஒருவழியாக்கினார்கள்.
இதற்கிடையில் உமா வேறு திவ்யாவிற்கு பார்த்து பார்த்து எடுக்க அவள் பொம்மை போல இருந்தாள்.
“என்ன சூர்யா, திவ்யாட்ட போய் அவளுக்கு எது பிடிச்சிருக்குதுன்னு கேளு. போ…” என மகனை அர்ச்சனா அனுப்ப பார்க்க,
“ம்மா, எனக்கு இப்படி என்னையும் கூட்டிட்டு வந்து நிக்கவச்சிருக்கறதே பிடிக்கலை. இதுல நான் போய் செலெக்ட் பண்ணனுமா? போங்கம்மா. இதெல்லாம் எனக்கு செட்டே ஆகாது…” என ஒதுங்கிக்கொண்டான்.
வந்ததில் இருந்து போனும் அவனுமாக தான் இருந்தான். கோபாலசுவாமியும் மகனை பார்ப்பதும், திவ்யாவை பார்ப்பதுமாகவே இருந்தார்.
“அர்ச்சு…” என மெதுவாக மனைவியை தனியே அழைத்தவர்,
“மறக்காம வெற்றி பேமிலிக்கும் ட்ரெஸ் எடுத்துடு…” என சொல்ல,
“இதை நீங்க சொல்லனுமா? கண்டிப்பா எடுத்துடுவோம்ங்க…” என்றார் அர்ச்சனா.
“நான் பேசறதை முழுசா கேட்டுட்டு பேச பழகுன்னு உனக்கு எத்தனைவாட்டி சொல்றது?…” என அதட்டிவிட அர்ச்சனாவின் முகம் கலங்கிவிட்டது.
“இல்லைங்க…”
“மூச். பேசாம இரு…” என்று சொன்னவர்,
“இங்க பாரு. நீ நல்லா எடுத்து குடுத்தாலும் நம்ம சொந்தங்களுக்கு ஒரு புடவையோட விலை என்னவா இருக்கும்னு பார்த்ததுமே தெரிஞ்சிடும். வெற்றி நம்ம பையனுக்கு பிஸ்னஸ் பாட்னர் வேற. அதனால நம்ம வீட்டுக்கு எடுக்கறது மாதிரியே உசத்தியா எடுக்கனும்…”
“ஹ்ம்ம், சரிங்க…”
“பார்க்கறவங்க நிச்சயம் வெற்றியையும் எடை போடுவாங்க. இது நம்ம கௌரவம் சம்பந்தப்பட்டது. எந்த விதத்திலையும் கல்யாணத்துல சின்ன பேச்சுக்கூட வந்திர கூடாது. அஸ்விக்கு எடுக்கறது மாதிரியே அந்த ரெண்டு பொண்ணுங்களுக்கும் எடுத்துரு. வெற்றி அக்காவுக்கு உனக்கு மாதிரியே எடு…”
“ஹ்ம்ம், சரிங்க…”
“வெற்றிக்கும் சூர்யாவுகுமே அப்படியே எடு. ஏனா அவங்களா உசத்தியா கட்டிட்டு வருவாங்களான்னு தெரியாது. நம்மளோட பழக்கம் வச்சிருக்கறவங்களும் நமக்கு சமமா இருக்கனும். இல்லைன்னா நாம மாத்திக்கனும். அவங்களுக்கு இந்த விசேஷத்துக்கு எடுத்துக்குடுக்கறதால நாம குறைய போறதில்லை…” என,
“ஹ்ம்ம், சரிங்க…”
“இங்கையே வச்சு உங்களுக்குன்னு சொல்லாத. பத்திரிக்கை குடுக்கும் போது சூர்யாக்கிட்ட குடுத்தனுப்பிப்போம். இப்ப சொன்னா வேண்டாம் அது இதுன்னு சொல்லிட்டு இருப்பாங்க. புரியுதா?…” என்று சொல்லிவிட்டு அவர் செல்ல,
“ச்சே, அன்புள்ள எடுத்து குடுக்கறது வேற. இப்படி கௌரவம், மத்தவங்க பேசிட கூடாதுன்னு எடுத்துக்குடுக்கறதுக்கு குடுக்காமலே இருக்கலாம்…” என புலம்பிக்கொண்டே வந்தார் அர்ச்சனா.
பின் கோபாலசுவாமி சொல்லியதை போலவே உடையை தேர்ந்தெடுத்தவர் அங்கே வைத்து அவர்களுக்கு தான் என்று சொல்லவில்லை. உமா கேட்டதற்கும் பிறகு சொல்கிறேன் என்றுவிட்டார்.
உடைகள் எடுத்து முடித்து வந்ததுமே அதை வடிவமைக்கும் பணியை துவங்கிவிட்டாள் பாலா.
அந்தந்த பட்டுப்புடவைக்கு ஏற்ற ப்ளவுஸ் டிஸைனை வரைந்து காட்டி காட்டி அவர்களிடம் ஒப்புதல் வாங்கிவிட்டு அஸ்வினியுடன் அதற்கு தேவையான பொருட்ளை வாங்கவும் கிளம்பிவிட்டாள்.
திருமணத்திற்கு ஒரு வாரம் என்று இருக்கும் வடை வேலை அவளை அங்குமிங்கும் நகரவிடவில்லை. அதிலும் மாற்றி மாற்றி அனைவருக்குமே செய்ய ஒவ்வொருவருக்கும் மூன்று நான்கு விதங்களில் தேவைப்பட்டது.
தைத்து முடித்து எல்லாம் பக்காவாக தயாராகி வர ஹரிணியும், அஸ்வினியும் கொண்டாடிவிடனர் பாலாவை. அதிலேயே பாலா உற்சாகமாகி போனாள்.
“ஒன்னொன்னும் அவ்வளோ யூனிக் தெரியுமா? ப்ச், இத்தனை நாள் மிஸ் பண்ணிட்டேன்…” என அஸ்வினி சொல்ல,
“போச்சு பாலா,இனி உன்னைவிடவே மாட்டா போ…” என ஹரிணி கிண்டல் பேச,
“அதான் கிடைச்சுட்டால்ல. இனி எனக்கு எப்பவுமே பாலா தான்…” என அவளை கட்டிகொண்டாள் அஸ்வினி.
ஏற்கனவே பத்திரிக்கைகள் கொடுக்க ஆரம்பித்திருந்தனர். இதோ இன்னும் ஒருவாரத்தில் திருமணம்.
அப்போதுதான் வெற்றி வீட்டிற்கு இன்னும் கொடுக்கவில்லையே என அர்ச்சனா சூர்யாவிடம் கேட்க,
“என்னம்மா நீங்க? நானா போய் குடுக்க முடியும்? ஒன்னுக்கு ரெண்டு கல்யாணம். வெற்றி என்னோட ப்ரென்ட் மட்டுமில்லை, பிஸ்னஸ் பாட்னர். மோகனாக்கா எனக்கும் எவ்வளோ ஸ்பெஷல்ன்னு உங்களுக்கு தெரியாதா? ஈஸியா என்னை போய் தர சொல்றீங்க? இது என்ன மரியாதை?…” என கத்திவிட்டான்.
“நான் என்ன பன்றது சூர்யா? அப்பா ஏதாவது சொல்லுவாருன்னு பார்த்தேன். அவர் என்னனா இதை பத்தி பேசவே இல்லை. நானும் ரெண்டுதடவை ஞாபகப்படுத்தும் போதும் உன்னை தான் குடுக்க சொன்னார். அப்படியே இந்த ட்ரெஸ்…”
“ட்ரெஸ் எப்போ எடுத்தீங்க?…” என்றான் ஆச்சர்யமாக.
“அன்னைக்கே எடுத்தாச்சு. அதான் இன்விடேஷனோட குடுக்கலாம்னு அப்பா சொல்லிட்டார்…” என்றதும் வேகமாய் தந்தை எப்போதும் இருக்கும் அவரின் அலுவலக அரை போன்ற அந்த அறைக்கு சென்றான்.
“அப்பா…” என்றதும் நிமிர்ந்து பார்த்தவர்,
“சொல்லுப்பா…” என்றார் கண்ணாடியை சரி செய்தபடி.
“வெற்றிக்கு இன்விடேஷன் வைக்கனும்…”
“ஆமா, அதான் சொல்லிட்டேனே உன்னை போய் வைக்க சொல்லி…” என சொல்ல,
“இல்லைப்பா அது மரியாதையா இருக்காது….” என சொல்லியவனின் குரலில் இருந்த அழுத்தம் அவரை நிமிர்ந்து பார்க்க வைத்தது. கையில் இருந்த சாஸ்திர புத்தகத்தை தளர்த்தி பிடித்தவர்,
“ஹ்ம்ம், அதுக்கு? என்ன பண்ணனும்? நானா போய் வைக்க முடியும்?…” என்றார் சற்று கோபமான குரலில்.
“தப்பா நினைக்காதீங்கப்பா. நீங்களும் அம்மாவும் போய் அழைச்சா தான் மரியாதையா இருக்கும்…”
“சூர்யா…” என அவர் அதட்ட,
“இது நம்ம வீட்டுல நடக்கற முதல் விசேஷம். அதுவும் ஹரிணிக்கும் கல்யாணம். மோகனாக்காவையும் அழைக்கனும் இல்லயா?…” என சொல்ல அவனை புருவம் சுருக்கி பார்த்தவர்,
“மோகனாக்கா நேத்து தான் வெற்றி வீட்டுக்கு வந்திருக்காங்க. நீங்க திருவண்ணாமலைக்கு கூட போக வேண்டாம்…” என சொல்ல ஏதோ யோசனையுடன் அவர் இருக்க சூர்யாவும் எதுவும் பேசாமல் நிற்க அவன் நிற்பதை பார்த்துவிட்டு,
“அர்ச்சு, நாளைக்கு காலையில போவோம்…” என சொல்லிவிட்டு மீண்டும் போய் அமர்ந்துகொண்டார்.
அதன் பின்பு தான் அங்கிருந்து கிளம்பி தன்னறைக்கு சென்றான் சூர்யா. அர்ச்சனாவிற்கு அப்போதுதான் மூச்சே வந்தது.
‘மகன் சொல்லவும் தலையை ஆட்டியாச்சு.’ என நினைத்தபடி தானும் உறங்க சென்றார்.
மறுநாள் சொல்லியபடி காலை கோபாலசுவாமி அர்ச்சனாவுடன் கிளம்பி செல்ல வெற்றிக்கு அதிசயமோ அதிசயம்.
சத்தியமாய் கோபாலசுவாமி வருவார் என நினைத்தும் பார்க்கவில்லை. வந்ததும் இல்லாமல் உடைகளை எடுத்துக்கொடுத்து கௌரவிக்க அத்தனை மகிழ்ச்சி அவனின் குடும்பத்திற்கு.
அன்று மாலை நிச்சயதார்த்தமும் மறுநாள் அதிகாலை முகூர்த்தத்தில் திருமணமும் என்று இருக்க வெற்றி அங்கேயே இருந்திருந்தான் வேலைகள் பார்த்தபடி. அனைத்தையும் எடுத்து செய்துகொண்டிருந்தான் அவன்.
மாலை நேரம் கிளம்பி மண்டபத்திற்கு வந்தனர் மோகனா குடும்பத்தினர். அதுவும் நிச்சயதார்த்தம் பாதி முடிந்த நிலையில்.
காரணம் பாலா. புடவை கட்டவே முடியாதென சொல்ல மோகனா கட்டித்தான் ஆகவேண்டும் என்று சொல்ல இப்படியே கிளம்புவதற்கு நேரமாகிவிட்டது.
நிச்சயதார்த்தமும் நிறைவுடன் நடந்துமுடிய அன்றிரவு மண்டபத்திலேயே தாங்கிக்கொண்டனர் அனைவரும்.