நிலா – 7
அதிகாலை ஐந்தரையிலிருந்து ஏழு முகூர்த்தம் என்பதால் மண்டபம் நடு இரவே பரபரப்புடன் காணப்பட்டது.
சொந்தங்கள் முதல் தளத்தில் தயாராக இரண்டாம் தளத்தில் குடும்பத்தினர் இருந்தனர். அதில் கடைக்கோடியில் வெற்றி குடும்பத்தினருக்கும் இரண்டு பெரிய அறைகள் கொடுக்கப்பட்டிருந்தது.
அதில் பாலா, மோகனா, ஜெயஸ்ரீ மூவரும் ஒன்றில் தாங்கிக்கொள்ள, இன்னொன்றில் சந்திரனும், வெற்றியும் இருக்க அவர்களுடனே சூர்யாவும் வந்து இருந்துகொண்டான். இரவு முழுவதும் சிறிதும் உறங்கவில்லை நண்பர்கள் இருவரும்.
மூன்று மணிக்கெல்லாம் எழுந்து மோகனாவும், ஜெயஸ்ரீயும் குளித்து கிளம்பிவிட பாலா இன்னும் நன்றாக உறங்கிக்கொண்டு இருந்தாள்.
“பாலா எழுந்துக்கோ. நேரமாகுது. இப்ப நீ ரெடி ஆனா தான் உன்னால புடவை கட்டிட்டு வர முடியும். அதுக்கப்பறம் தலை சீவ மேக்கப்ன்னு எவ்வளவு இருக்குது…” என போர்வையை இழுக்க,
“ம்மா, என்னை ரொம்ப படுத்துற நீ. கல்யாணம் அஞ்சரைக்கு தானே? ஏன் இப்பவே எழுப்பற? இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கிக்கறேன்…” என்றவள்,
“நான் ஒன்னும் ரொம்ப மேக்கப் போடலை. ட்ரெஸ்க்கு மேட்ச்சா லைட்டா டச்சப். ஆமா நான் எப்ப அவ்வளோ மேக்கப் போடு பார்த்த நீ?…” என வேகமாய் எழுந்து சண்டைக்கு கிளம்பிவிட,
“அப்படியே குளிச்சுட்டு வந்து கேட்பியாம். மணி இப்பவே நாலாக போகுது. போடா…” என மகளை கூட்டிக்கொண்டு பாத்ரூமில் அடைக்க,
“ம்ம்மா, ஹீட்டர் போட்டியா?…” என்றாள் உள்ளிருந்தே.
“இரு வரேன்…” என்று அவளுடைய பேஸ்ட், ப்ரெஷ் எல்லாம் எடுத்து அவளின் டவலுடன் சென்றவர்,
“இங்க ஹாட்வாட்டர் ட்வென்டி ஃபோர் ஹவ்ர்ஸ் சர்வீஸ் தான். போய் குளிடி. சும்மா போட்டு தொணதொணன்னு…” என அவளை உள்ளே தள்ளி கதவை இழுத்துவிட பாலா உள்ளிருந்தே பூட்டிக்கொண்டாள்.
சற்று நேரத்தில் குளித்து முடித்து தலையை உலர்த்தியபடி முட்டிவரை நீண்ட ஒரு கவுனில் வந்தவள்,
“நான் பாட்டுக்கு என்னோட சோளி, லேஹெங்கான்னு போட்டு ப்ரீ ஹேர்ல ஜாலியா இருந்திருப்பேன். என்னை போய் சேலை கட்ட வச்சு…” என சலித்தபடி அங்கிருந்த ட்ரெஸிங் டேபிள் கண்ணாடியின் முன்னால் இருந்த இருக்கையில் அமர,
“இப்படியே உட்காராம போய் சேரிக்கு போடறதை போட்டுட்டு வா…” என மோகனா விரட்ட,
“ம்மா, உட்கார கூட விடமாட்டியா? குளிருது ஒரு காபி சொல்லேன்…” என கால்களை மடக்கிக்கொண்டு அவள் அமர்ந்துகொகொண்டாள்.
மகளை முறைத்தபடி மோகனா தான் ஹேர் ட்ரையர் கொண்டு அவளின் தலையை உலர்த்தி கொண்டே,
“கேட்கவே மாட்டென்ற பாலா. என்னதான் நாம கல்யாணத்துக்கு வந்திருக்கோம்ன்னாலும் அவங்களா எங்கன்னு நம்மளை கேட்கறதுக்கு முன்னாடி நாமளும் கிளம்பி போய் முன்னாடி நின்னா தானே நமக்கும், வெற்றிக்கும் மரியாதை. கல்யாணம் முடிஞ்சதும் வீட்டுக்கு கிளம்பிருவோம். அங்க போய் தூங்கு. யாரும் ஒன்னும் சொல்லமாட்டோம்…”
மோகனா சொல்ல வெற்றி என்ற பெயரில் பாலாவும் பெரிதாய் நேரத்தை கடத்தாமல் தாய்க்கு உடன்பட்டாள். அதற்குள் வெற்றியிடமிருந்து போன் வந்தது.
“ஜெய் என்ன பன்றீங்க? எழுந்தாச்சா?…” என கேட்க,
“நாங்க குளிச்சு ரெடி ஆகிட்டோம். இன்னும் பாலா தான் ரெடி ஆகனும். இப்போ தான் குளிச்சுட்டு வந்தா…”
“என்னது இப்போதானா? என்ன ஜெய் நீ?…” என சலிக்க,
“அது இருக்கட்டும். பூ வாங்கிட்டு வாங்களேன். தலைக்கு வைக்க பூ இல்லை…” என சொல்ல,
“ஓகே, முதல்ல கிளம்புங்க. அஞ்சு நிமிஷத்துல கதவை திற. பூ கொண்டு வரேன்…” என்றதும் ஜெய் அவன் சொல்லியதை போல ஐந்து நிமிடம் கழித்து கதவை திறக்க பெரிய கவர் நிறைய மல்லிகை பூக்கள் சரம் சரமாய் இருந்தது.
“என்ன இவ்வளவு பூ?…” என ஜெய் கேட்க,
“அஸ்வி தான் கொண்டு வந்தா. இப்போ என்ன பூ நிறைய இருந்தா வச்சுக்கோங்க. டெய்லியா இவ்வளவு பூ வைக்க போறீங்க?…” என்று சொல்லிவிட்டு வெற்றி கிளம்ப மீண்டும் கதவை அடைத்துக்கொண்டு உள்ளே வந்து அதை வைத்தவள்,
“அண்ணி பாலாவுக்கு வச்சு விடுங்க. அவளுக்கு பூ ரொம்ப இஷ்டமே…” என்ற ஜெய் தனக்கு கொஞ்சமாய் கட் செய்து தலையில் வைத்துக்கொள்ள,
“ஏன் உங்களுக்கு புடிக்காதாக்கும்?…” என கேட்டபடி புடவையை கட்ட ஆரம்பித்தாள்.
“பாலா கொஞ்சம் கச்சிதமா கட்டு. இங்க இழுத்து பிடி….” என மோகனா சொல்ல,
“ம்மா, பின் குத்தி அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்…”
“ப்ச், ஒரு சேலைக்கு ஒன்பது பின் குத்துவியா? ஒன்னோ ரெண்டோ குத்தினா போதும். கட்ட பழகிட்டா வந்திரும்…”
“என்ன வந்திரும்? எனக்கென்னவோ சேரி கட்ட தெரியாத மாதிரி…”
“உண்மையை ஒத்துக்கோ பாலா. நீ அள்ளி சொருகிட்டு வரதுக்கு பேரு புடவைக்கட்டா?…” என ஜெய் கிண்டல் பேச,
“நல்லா புடவை கட்டுறீங்கன்ற ஆணவம். இருக்கட்டும்…” என்றவள்,
“உங்களுக்கு கட்டி விட சொன்னா செம்மையா கட்டிவிடுவேன். எனக்குன்னு வரும் போதுதான் சொதப்பிடுது…” என அசடுவழிய,
“அழகுடி நீ…” என்றாள் ஜெய்.
“பார்ரா பாராட்டெல்லாம் பலமா இருக்குது?…” பாலா சிரிக்க,
“இந்த சேரியும் இதுக்கு நீ தச்சிருக்கற ப்ளவுஸ், அதோட டிஸைன் ப்பா அப்டி இருக்கு பாலா. ஆனாலும் உனக்குன்னு போடறப்போ டாப் தான் போ…” என்றாள் ஜெய். அதை கண்டுகொள்ளாத பாலா,
“ம்மா, கொஞ்சம் நேரம் தான் கட்டுவேன். தாலி கட்டி முடிஞ்சதும் சேரியை மாத்திருவேன். இது அவங்க எடுத்துக்குடுத்த மரியாதைக்குன்னு நீ சொன்னதால தான்…” இப்படியாக பேசியபடி தலையை வார மோகனாவுக்கு இன்னும் கோபம் வந்தது.
“ஒரு சேலைக்கு நல்லா தலைய தழைய பின்ன வருதா? அங்கங்க சிலுப்பிக்கிட்டு நிக்குது. இன்னொருக்க இந்த ஹேர்க்கட் பண்ணு. பேசிக்கறேன்…”
“ம்மா இதுக்கு பேர் லேயர் கட். கர்ல்ஸ் பன்றப்போ இப்படி இருந்தா தான் அழகா இருக்கும்…” என்றவள் கர்லரை எடுத்து முடியை சுருட்ட,
“இப்படியே விரிச்சு போட்டுட்டு வருவியா? உதைப்பேன். இதென்ன காலேஜா?…” என்று முறைக்க,
“ப்ச், எதுக்கு டென்ஷன் அண்ணி? நான் பார்த்துக்கறேன்…” என்ற ஜெய் பாலாவை அமர வைத்து முன்புறம் மட்டும் லேசாய் பஃப வைத்து அதிலிருந்து பிரன்ச்பேக் பின்னல் போட்டு கிளிப் போட்டவள் படர்ந்திருந்த கூந்தலை சுற்றிலும் மல்லிகை பூவை நான்கு சரமாய் கோர்த்தவள் அடி முடியிலிருந்து அழகாய் சுற்றி வைத்து அதற்கு பின் குத்திவிட அதுவும் அழகாய் இருந்தது.
“நீளமா இருந்தா தான் பண்ண முடியுமா? இப்படியும் பண்ணலாம். எப்டி இருக்குது?…” என ஜெய் புருவம் உயர்த்த,
“ஹ்ம்ம், என்னவோ போ…” என்றவர் நகைகளை எடுத்து போட்டுவிட அதில் இருந்த இன்னொரு பெட்டியை பார்த்த பாலா,
“இதை நைட்டே கிப்ட் பண்ணனும்னு அம்மா சொன்னாங்க. இன்னும் குடுக்கலையா?…” என ஜெய்யை பார்த்து கேட்க,
“உன் மாமா தான் வேண்டாம்னு சொன்னாங்க. கல்யாணம் முடியவும் குடுத்துப்போம்னு…”
மணமக்களுக்கு தங்கத்தில் நகை பரிசாக தர எடுத்திருந்தான் வெற்றி. அதை முதல்நாளே தர இருக்க வெற்றிதான் திருமணம் முடியவும் தரலாம் என சொல்லிவிட்டான்.
மொத்தமாய் மூவரும் தயாராகி முடித்து அறையை ஒழுங்குபடுத்தி தங்கள் உடமைகளை எடுத்து வைத்து முடிக்க மணி நாலரையை எட்டியது. கதவு தட்டும் ஓசையில் திரும்பிய பாலா,
“நான் திறக்கறேன். மாமாவா தான் இருக்கும். சீக்கிரம் எழுந்ததுல பசிக்க வேற ஆரம்பிச்சிடுச்சு…” என்று சொல்லிக்கொண்டே லேசாய் புடவையை தூக்கிப்பிடித்தபடி சென்று கதவை திறக்க அங்கே கோபாலசுவாமி நின்றிருந்தார்.
அவருக்கு பின்னால் அர்ச்சனாவும், உமாவும். உடன் சூர்யாவும் வெற்றியும் கூடவே. வெற்றிக்கு அருகே சந்திரன் வெற்றியுடன் எதையோ விவாதித்தபடி இருந்தார். இல்லை வெற்றி எதையோ அவருக்கு மட்டும் கேட்கும் வகையில் சொல்லிக்கொண்டு இருந்தான்.
அங்கு வந்ததுமே சூர்யாவின் இதயம் தாளம் தப்பி துடித்தது. இதுவரை நடந்த களேபரத்தில் பெரிதும் சோர்ந்திருந்தவன் இப்போது ஏன் மோகனா தங்கியிருக்கும் அறைக்கு தங்களை அழைத்துக்கொண்டு வந்திருக்கிறார் என்று புரிந்தும் புரியாத நிலை.
“உள்ள போம்மா…” என்று பாலாவிடம் சொல்ல திகைப்பிலிருந்து வெளிவந்தவள்,
“வாங்க அங்கிள்…” என்று வழிவிட்டு கதவருகே நிற்க,
“உள்ள போய் அம்மாகிட்ட நில்லும்மா…” என்றார் கோபாலசுவாமி.
“ஹ்ம்ம்…” என தலையசைத்து மோகனாவின் அருகே சென்று நின்றுகொண்டாள்.
ஒன்றும் புரியவில்லை அங்கிருந்தவர்களுக்கு. அனைவருமே ஏன் சூர்யாவின் குடும்பத்தினருமே கோபாலசுவாமியின் முகத்தை பார்த்தபடி நின்றனர்.
“என்னாச்சு வெற்றி?…” என்ற மோகனா அர்ச்சனாவை பார்க்க உமாவும் அர்ச்சனாவும் அழுது ஓய்ந்திருந்தனர்.
“கதவை சாத்து வெற்றி…” என்ற கோபால்சுவாமி வெற்றி கதவை மூடிவிட்டு வரவும் தன் தொண்டையை செருமிகொண்டார்.
“திவ்யா இப்போ இந்த மண்டபத்தில இல்லம்மா…” என மோகனாவை பார்த்து சொல்ல திக்கென்றானது அவர்களுக்கு.
“என்ன சொல்றீங்க ஸார்? எங்களுக்கு புரியலையே…” என மோகனா அதிர்ச்சியாக பார்த்தார்.
“இப்ப அதை சொல்லி விளக்க நேரமில்லை. உங்கக்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்னு தான் வந்திருக்கேன்…” என பாலாவை பார்த்தார்.
ஜெய்யின் கையை பற்றியபடி பாலா அங்கிருந்தவர்களை பார்க்க சந்திரன் மோகனாவின் அருகே வந்து நின்றார். உமா மீண்டும் அழ ஆரம்பிக்க,
“அர்ச்சு, அவளை அழாம இருக்க சொல்லு…” என கோபாலசுவாமி அதட்ட ஸ்விட்ச் போட்டதை போல அழுகை நின்றாலும் கண்ணீர் வடிந்தது.
“இப்ப விஷயம் அது இல்லை. உங்ககிட்ட ஒரு உதவி கேட்க தான் வந்திருக்கேன். பாலாவை சூர்யாவுக்கு தர முடியுமான்னு கேட்க…” என அவர் முடிக்கும் முன்னர்,
“அப்பா…” என்ற சூர்யாவின் குரல் உச்சஸ்தானியில் எகிற,
“சூர்யா, மூச்…” என்றார் அதட்டலாக கோபால்சுவாமி.
“நீங்க பன்றது தப்பு? இது இது என்ன பேச்சு? இல்லை. இதை நீங்க எப்படி பேசலாம்?…” என அவன் கொதித்து போய் கேட்க,
“என்னங்க இது?…” என்றார் அர்ச்சனா.
“அர்ச்சு, உன் மகனுக்கு கல்யாணம் நடக்கனுமா வேண்டாமா? ஏற்கனவே கல்யாணத்துல ஒரு பிடிப்பே இல்லாம இருக்கறவன் இப்ப இப்படி ஒரு அவமானத்துக்கு பின்னாடி கல்யாணம் பண்ண சம்மதிப்பானா?…” என கேட்க,
“கண்டிப்பா சம்மதிக்கறேன். யாரை வேணும்னாலும் கட்டி வைங்க. வாழ தயாரா இருக்கேன். ஆனா இது இது மட்டும் வேண்டவே வேண்டாம்…” என அவன் வாதாட,
“என் பொண்ணு போய்ட்டான்றதுக்காக. யாரையோ…” என உமா கத்த அவர் வார்த்தையை விடும் முன்னர் ஒரு விரலை நீட்டி எச்சரிக்கும் பார்வையுடன் தங்கையை அடக்கினார் கோபாலசுவாமி.
“அப்பா அத்தையை சொல்றதை விடுங்க. இது என்ன பேச்சு? அதுவும் மோகனாக்கா…” என்றவன் அப்போதுதான் அவர்கள் பக்கம் திரும்பி பார்க்க இன்னும் கேட்டது உண்மையா என்னும் அதிர்ச்சியில் இருந்து அவர்கள் வெளிவரவே இல்லை.
அதிலும் பாலா அப்படி ஒரு அதிர்ந்த பார்வை பார்த்து நின்றாள். சூர்யா அவளின் முகத்தில் ஒருநொடி பார்வையை நிலைக்கவிட்டவன் மனது அத்தனை தவித்தது.
‘என்ன நினைத்திருப்பாள் இவள்?’ என நினைக்கும் போதே அந்த எண்ணமே பிடிக்காமல் போனது அவனுக்கு.
“அவங்களை பாருங்கப்பா, இப்பவாச்சும் இது வேண்டாம். நான் சாரி கேட்டுக்கறேன் நீங்க பேசினதுக்கு. வாங்க போய்டலாம். ப்ளீஸ்…” என மகன் கெஞ்ச கோபாலசுவாமி கொஞ்சமும் அசைந்துகொடுக்கவில்லை.
“இன்னைக்கு கல்யாணம்னு நடந்தா அது ரெண்டு கல்யாணம். இல்லைன்னா என்னோட வார்த்தையை வாங்காத சூர்யா. நான் சொன்னா அது நடந்திரும். உனக்கும் தெரியும் தானே?…” என மகனை லாக் செய்ய,
“இது ஹரிணி வீட்டுக்கும், நம்ம ரிலேட்டிவ்ஸ்க்கும் தெரிஞ்சா எவ்வளவு பெரிய பிரச்சனை ஆகும்? உங்களோட உங்களோட…” என்றவன் அதை சொல்ல கூட முடியவில்லை அவனால்.
அவரின் தொழில் தான் அவர் உயிர். அதற்கே பங்கம் வந்துவிடும் அல்லவா? அது கோபாலசுவாமியின் அடையாளம். அதுவே பறிபோகும்.
“உனக்கேன் அந்த கவலை? எனக்கு என் மகனுக்கு அப்பறம் தான் எல்லாமே? இப்ப நான் பேசறதை நீ கேட்கறயா? என்னை மதிக்கிறது உண்மைன்னா அமைதியா இரு…” என்றவர் பேச்சை மீறும் தைரியம் வராமல் இயலாமையுடன் நின்றான்.
“நீங்க சொல்லுங்கம்மா, சந்திரன் இது உங்க பொண்ணோட எதிர்காலம். நான் கேட்கறேனேன்றதை விட உங்களுக்கு சம்மதமான்னு சொல்லுங்க. எங்க மேல நம்பிக்கை இருந்தா உங்க பொண்ணை குடுங்க. தங்கமா பார்த்துப்போம். யோசிச்சு சொல்லுங்க. ஆனா கொஞ்சம் சீக்கிரம். இன்னும் கொஞ்சம் நேரத்துல மணவறைக்கு போகனும் என் பொண்ணும் பையனும்…”
இரு திருமணமும் நடக்கும் என்பதை போலவே அவர் சொல்ல மோகனாவிற்கும், சந்திரனுக்கும் வார்த்தை வரவில்லை.