நிலா – 15
காலை எழுந்ததுமே உணவை முடித்துவிட்டு ஒவ்வொரு லக்கேஜாய் பேக் செய்திருந்தவற்றை எல்லாம் வெற்றியோடு கார் டிக்கியில் ஏற்றினான் சூர்யா.
“முடிஞ்சதுடா. இனி பாலா ஹேண்ட்பேக் உன்னோட பேக் மட்டும் தான். பின் சீட்ல போட்டுக்கோ…” என கையை தட்டியபடி வெற்றி சொல்ல,
“இன்னைக்கு நான் கம்பெனிக்கு வரலைடா. பார்த்துக்கோ. எப்போ கிளம்பற?…” சூர்யா கேட்க,
“நீயும், பாலாவும் கிளம்பினதும் நானும் கிளம்ப வேண்டியது தான். நான் பார்த்துக்கறேன். நோ ப்ராப்ளம்…” என்றபடி வீட்டினுள் வந்தவன்,
“ஜெய் குடிக்க எதாச்சும் தாயேன்…” என்றான் வெற்றி.
“இந்த நாலு லக்கேஜ் ஏத்தினதுல உனக்கு அதுக்குள்ளே பசிச்சிடுச்சாக்கும்?…” என்று சூர்யா கிண்டல் பேச,
“உனக்கும் வேணும்னா வாங்கிக்கோ…”
“அதெல்லாம் வேண்டாம்…” என்றவன் ஜெய்யிடம் மற்றவர்கள் எங்கே என்பதை போல கையை விரித்து கேட்க உள்ளே இருப்பதாய் ஜெயஸ்ரீ சைகையில் காண்பிக்க மூவருமாக மெதுவாய் அந்த அறையை எட்டி பார்த்தனர்.
கட்டிலில் பாலா அமர்ந்திருக்க அவளுக்கு இரு புறமும் சந்திரனும் மோகனாவும் அமர்ந்து அவளுக்கு அறிவுரை போல நிறைய சொல்லிக்கொண்டு இருந்தனர். கேட்டுக்கொண்டிருந்தவள் முகம் அத்தனை அமைதியாய் இருக்க,
“இவங்க அவளை பேசியே பயம் காட்டிடுவாங்க…” என்றால் ஜெயஸ்ரீ முணுமுணுப்பாய்.
“ப்ச், அவங்க பேரன்ட்ஸ். அப்படித்தான் இருப்பாங்க…” என வெற்றி சொல்ல,
“அதுக்குன்னு இப்படி உட்கார வச்சு உடனே மாறிடு மாறிடுன்னா. சின்ன பொண்ணு. மிரண்டுட மாட்டாளா ? என்னவோ செய்யுங்க….” என்ற ஜெயஸ்ரீ அங்கிருந்து நகர்ந்துவிட,
“பாலா…” என்றான் சூர்யா.
அவனை பார்த்ததுமே பேச்சை நிறுத்தியவர்களாக எழுந்து வெளியே வந்தனர். அதன் பின் இருவரின் காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கொள்ள நிறைவாய் இருந்தது அனைவருக்கும்.
“கிளம்பறோம் மோகனாக்கா…” என்ற சூர்யா,
“என்னைக்குடா ஊருக்கு போறாங்க?…” என்றான் வெற்றியிடம்.
“இப்போதைக்கு ட்ராவல்ஸ தெரிஞ்சவங்க பார்த்துட்டு இருக்காங்க. இன்னும் பத்துநாள் இருங்கன்னு சொல்லியிருக்கேன்…” என்றான் அவன்.
“இல்லை சூர்யா, கிளம்பனும். ரொம்பநாள் இன்னொருத்தர் கையில தொழிலை கொடுக்க முடியாதுல. நான் போனா தான் சரியா வரும்…” என சந்திரன் சொல்ல,
“இங்க ஷிப்ட் ஆகி வாங்க மாமா. டெவலப் பண்ணிடலாம்…” என்று சூர்யா சொல்ல,
“இதைத்தான நானும் சொல்றேன். கேட்டா தானே?…” என்றாள் ஜெய்யும்.
“நானும் தான் சொல்றேன். இல்லையா என்ன?…” என வெற்றியும் சேர்ந்துகொள்ள,
“சரி, சரி எல்லாரும் தான் சொல்றீங்க. பார்த்துக்கலாம். யோசிச்சு முடிவு பண்ணுவோம்…” என மோகனா சிரிப்புடன் முடித்துவைக்க,
“மோகனா நல்ல நேரம் போகுது…” என சந்திரன் சுட்டி காண்பிக்க,
“ஆமா, ஆமா. நானும் பேசிட்டே இருக்கேன்…” என்ற மோகனா,
“பாலா அம்மா சொன்னது எல்லாம் ஞாபகம் இருக்குது தானே?…” என்றதும் தலையசைத்தவள்,
“உடம்பை பார்த்துக்கோங்கப்பா. ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ணிக்காதீங்க. எல்லாருமே சொல்லிட்டாங்க உங்களை இங்க வர சொல்லி. இதுவரைக்கும் நான் கேட்கலை. இப்போ நீங்க இங்க வந்தா நல்லா இருக்குமோன்னு தோணுதுப்பா…” என்றாள் கலங்கிய விழிகளுடன்.
“எனக்காக இங்க வரதுக்கு முயற்சி பண்ணுங்களேன். ப்ளீஸ்…” என தந்தையை கட்டிக்கொண்டு அவள் பேச மோகனாவுக்கும் மனது தாளவில்லை. என்னதான் தங்களை பிரிந்து படிப்பு என்று மகள் இங்கே இருந்தாலும் திருமணம் முடித்து செல்வதென்பது வேறல்லவா.
அதிலும் மோகனாவின் பயமே மகள் எப்படி ஒரு குடும்பத்தில் பொருந்தி இருப்பாள்? என்பது தான். அன்று அர்ச்சனாவிடம் தனது மனக்கவலைகளை கொட்டியவருக்கு ஆறுதலாய் அர்ச்சனா சொல்லிய வார்த்தைகள் தான் மோகனாவை இப்போது தைரியமாக இருக்க செய்தது.
அர்ச்சனா பார்த்துக்கொள்வார். சூர்யா இருக்கிறான் இப்படி இவைகளே மகளை முழு நம்பிக்கையுடன் அவர்களுக்கு கொடுக்க சம்மதித்தது.
“வரட்டுமாம்மா?…” என தாயை கட்டிக்கொள்ள ஆறுதலாய் தலை கோதியவர்,
“நல்லபடியா போய்ட்டு வாடாம்மா…” என்று சொல்லவும் சூர்யாவுடன் சேர்ந்து வெளியே வந்தாள்.
மற்றவர்கள் உடன் வந்து வழியனுப்பி வைக்க கார் மறையும் வரை நின்றுவிட்டு வெற்றியும் தனது பைக்கில் கிளம்பினான்.
“என்னடா அதுக்குள்ளே நீயும் கிளம்பிட்ட?…” என்றார் மோகனா.
“இன்னைக்கு சூர்யா வரலை. நான் தான் பார்த்துக்கனும். அதான் கிளம்பிட்டேன்க்கா. லஞ்ச்க்கு வரது டவுட். அதனால அனுப்பி வைச்சிடு…” என்று சொல்லிவிட்டு ஜெய்யிடமும் தலையசைத்துவிட்டு கிளம்பிவிட்டான்.
மோகனா உள்ளே வரவும் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அர்ச்சனா அழைக்கவும் சரியாக இருந்தது.
“சொல்லுங்க அஸ்விம்மா…” என கல்மிஷமில்லா மோகனாவின் குரலில் அர்ச்சனாவுக்கு தான் அத்தனை குற்றவுணர்வாக போனது.
பெண்ணையும் கொடுத்துவிட்டு தங்களிடம் இத்தனை தணிந்தும் பேசும் இவர்களை ஒரே நாளில் என்னவெல்லாம நினைத்துவிட்டேன்? தன் வீட்டு தலைவர் செய்த செயல் தெரிந்தால் அதை எப்படி எடுத்துக்கொள்வார்களோ என்ற அச்சம் உள்ளூர கத்தியை சொருகியது.
“அஸ்விம்மா, லைன்ல இருக்கீங்களா?…” என மீண்டும் மோகனா கேட்க,
“ஹாங், இருக்கேன் மோகனா. சும்மா தான் கால் பண்ணேன்…” என்று மழுப்ப,
“பாலாவும் சூர்யாவும் கிளம்பிட்டாங்க. இப்போ தான் அஞ்சு நிமிஷம் இருக்கும்….” என அர்ச்சனா கேட்காமலே மோகனா சொல்ல,
“இல்லை அதுக்கில்லை மோகனா. வேற ஒரு விஷயமா பேசத்தான் கூப்பிட்டேன். இப்ப நேர்ல பேசினா நல்லா இருக்கும்னு தோணுச்சு. இந்த வார கடைசில வீட்டுக்கு வர முடியுமா?…” என அர்ச்சனா கேட்க,
“அதுக்கென்ன வந்துட்டா போச்சு. நாங்களும் ஒரு முக்கியமான விஷயம் பேசனும். நேர்ல தான் பேசனும். அங்க நிலவரம் சரியாகிடுச்சான்னு தெரிஞ்சா வரலாம்னு நினைச்சுட்டு இருந்தோம்…” என மோகனா சொல்ல அர்ச்சனாவிற்கு அத்தனையும் மறந்து முதல்நாள் நிகழ்வு மட்டுமே ஞாபத்தில் இருக்க,
“என்ன நிலவரம்? எல்லாம் எப்பவும் போல தானே?…” என சொல்ல,
“இல்லை உமா அவங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லியிருந்தீங்க. நிறைய ரிலேட்டிவ்ஸ் வந்திருக்காங்கன்னு. அதான் நாங்க வரத்து சௌகரியப்படுமான்னு கேட்டுட்டு வரலாம்னு இருந்தோம்…” என்றார் மோகனா.
மோகனாவின் இந்த தன்மையான புரிதல் பேச்சில் அர்ச்சனாவின் மனது இன்னும் குத்த ஆரம்பித்தது.
“இல்லை மோகனா நீங்க வாங்க. எப்போ வேணாலும் வாங்க. எல்லாம் சரியாகிட்டாங்க. உமா நல்லா இருக்கா…” என்றதும்,
“நாங்க அவங்களை பார்க்க வரலாம்ங்களா? ஏனா சொந்தம்னு ஆனா பின்னால பார்க்காம இருந்தாலும் தப்பாகிடும் தானே? அதான்…” என்றார் மோகனா தயக்கமாக. அதற்கு பதில் சொல்லத்தான் அர்ச்சனாவால் முடியவில்லை.
“அதுக்கென்ன இங்க வரும் போது பார்த்துக்கலாம். யாரும் எதுவும் நினைக்கவோ தவறா புரிஞ்சுக்கவோ மாட்டாங்க…” என பொதுவாய் சொல்லிவைத்தார்.
“சரிங்க, அப்போ வரும் போதே பார்த்துக்கறோம்…” என பேசிவிட்டு போனை வைத்ததும் அர்ச்சனா அப்படியே அமர்ந்திருந்தார்.
“என்னம்மா, போன் பேசிட்டு அப்படியே உட்கார்ந்துட்டீங்க? சாப்பாடு எடுத்து வைங்க. பசிக்குது…” என அஸ்வினி வர,
“அப்பவே சாப்பிட வான்னு சொன்னேன்ல…” என கடிந்தபடி மகளுக்கு உணவை எடுத்து வைக்க சென்றார்.
“ஏன் சொல்ல மாட்டீங்க? அத்தையை பார்த்துக்கோன்னு சொல்லி அங்க அனுப்பினா தூக்கமே வரலை எனக்கு. அத்தை வேற புலம்பிட்டே இருக்காங்க. காலையில எழுந்து குளிச்சுட்டு திரும்ப அப்படியே தலை சாய்ஞ்சுட்டேன். அது ஒரு விஷயமா? என்னைக்கோ ஒரு நாளைக்கு இத்தனை பேச்சு…” என்று எரிச்சலாய் சொல்ல,
“இனி இதையெல்லாம் நீயே எடுத்து வைக்க பழகிக்கோ அஸ்வி. எல்லாத்துக்கும் என்னை தேடாத. டேபிள்ல இருக்கறதை எடுத்து வச்சு சாப்பிடறதுக்கு உனக்கு ஒரு ஆளா?…” என்றார் அர்ச்சனா.
காரணமே இல்லாமல் மகளை கடிந்துகொண்டு இருக்க கோபாலசுவாமி வந்து ஹாலில் அமர்ந்தார்.
“அர்ச்சு, என்ன சத்தம் போட்டுட்டு இருக்க?…” என அங்கிருந்தே கேட்க,
“இல்லை சாப்பிட அப்பவே கூப்பிட்டேன். அதான்…” என சொல்ல கோபாலசுவாமி மகளை பார்த்தார்.
தந்தையின் பார்வையை உணர்ந்தவள் வாயை திறக்கவே இல்லை. தலை கவிழ்ந்தபடி உணவு தட்டில் பார்வையை வைத்திருக்க,
“இதென்ன நினைச்ச நேரத்துல சாப்பிடறது? இன்னைக்கு தான் இது கடைசி…” என கண்டிப்புடன் சொல்ல அர்ச்சனா மகளை கேட்டுக்கோ என்றபடி பார்த்தார்.
“அர்ச்சு இங்க வா…” என மனைவியை அழைத்தவர்,
“அஸ்வி சாப்பிட்டு முடிச்சதும் நீயும் வா…” என்றதும் வேகமாய் உண்டுவிட்டு தாயுடன் சேர்ந்தே சென்று அமர்ந்தாள்.
“சூர்யா எப்போ வரானாம்?…” என கேட்டவர்,
“வந்ததும் என்ன செய்யனும்னு தெரியும் தானே?…” என சொல்ல,
“பாலாவுமா வரா?…” என்றாள் அஸ்வினி.
“என்ன சொன்ன?…” என தகப்பன் கேட்கவும் திடுக்கிட்டு பார்த்தவள்,
“பாலாவும் வராளான்னு கேட்டேன்ப்பா…” என அவரின் கோப பார்வையில் மெதுவாய் சொல்ல,
“பாலா யாரு?…” என்றார் கோபாலசுவாமி.
மகள் பதில் பேசாமல் மௌனமாய் இருக்க அர்ச்சனாவிற்கும் அப்போதுதான் புத்தியில் உரைத்தது மகள் பாலாவிடம் பேச்சு வைத்துக்கொள்ளவில்லை என்று.
அன்று தான் பாலாவிற்கு உணவு அனுப்பும் போதும் முகத்தை தூக்கிவைத்துக்கொண்டு வாங்கி சென்றதும் இப்போது மனதில் பட,
“அஸ்வி அப்பா கேட்கறாங்க தானே?…” என அர்ச்சனா சொல்ல,
“பாலா வெற்றி அண்ணாவோட அக்கா பொண்ணு…” என்றாள் அஸ்வினி கொஞ்சம் திண்ணக்கமாக.
“அஸ்வி…” என அர்ச்சனா அதிர்ச்சியுடன் பார்க்க,
“அது மூணு நாளைக்கு முன்னாடி. இப்போ அவ யாருன்னு தெரியும் தானே?…” என அதட்டலாக அவர் சொல்ல,
“எல்லாரும் பேசறாங்கப்பா. எனக்கு புடிக்கலை…” என்று அஸ்வினி சொல்லும் பொழுதே அவளின் கண்ணில் இருந்து நீர் இறங்கிவிட்டது.
“அர்ச்சு, இதை எல்லாம் நீ கவனிக்க மாட்டியா? பொண்ணுன்னா சூழ்நிலையை அறிஞ்சு நடந்துக்கனும். என்ன இது?…” என மனைவியை கோபத்துடன் பேச,
“அம்மாவை சொல்ல வேண்டாம். எனக்கே முடியலை. என்னோட ப்ரெண்ட்ஸ் எல்லாம் கேட்கறாங்க. வந்த சொந்தக்காரங்க எல்லாம் பேசறாங்க. எனக்கு இதை ஏத்துக்க முடியலைப்பா…” என்றாள் மீண்டும்.
மகளின் இந்த துடுக்கான பேச்சில் அடக்கமுடியாத கோபத்துடன் எழுந்து நின்றவர் மனைவியை பார்த்து,
“அர்ச்சு, இதுதான் இவ இப்படி பேசறது கடைசியா இருக்கனும். அந்த பொண்ணு இங்க வந்த பின்னாடியும் இப்படி இருந்தா பார்த்துக்க. பாலா நான் கொண்டுவந்த மருமக. அவ மனசு சந்தோஷமா இருந்தா தான் நம்ம குடும்பம் சுபிட்சமா இருக்கும். புரியுதா?…” என்று சொல்லிவிட்டு வேகமாய் தன் அறைக்குள் நுழைந்துகொண்டார்.
கணவர் சொல்லிய சுபிட்சம் என்னவென்று மனைவிக்கு தான் நன்றாக தெரியுமே. அது அஸ்வினிக்கு தெரிய வாய்ப்பில்லையே.
“என்ன அஸ்வி இது? ஏன் அப்பாட்ட இப்படி பேசிட்ட?…” என்று மகளை கடிய,
“போங்கம்மா, அண்ணா எப்பவும் உர்ருன்னு தான் இருப்பான். திவ்யான்னி அவ்வளோ ப்ரெண்ட்லி. என்னோட அண்ணி எனக்கு ஸ்பெஷலா இருப்பாங்கன்னு நினைச்சு எவ்வளவு சந்தோஷமா இருந்தேன் தெரியுமா?…”
“எல்லாம் புரியுது அஸ்வி. பாலா ஒன்னும் தானா வந்து கல்யாணம் பண்ணிக்கலையே. உன் கோபத்தை அவட்ட ஏன் காமிக்கிற?…” என்றார் அர்ச்சனா. தானும் இதை செய்ததை எண்ணி தற்போது வருந்தியவராக.
“நான் கோபத்தை ஒன்னும் காமிக்கலை. யாரா இருந்தாலும் சொந்தம்னு வேற. ஆனா பாலா நமக்கு எந்த சொந்தமும் இல்லை…” என சொல்ல,
“அஸ்வி, என்ன பேச்சு இது? படிச்ச பொண்ணு மாதிரி பேசு. இது தப்பு…”
“சொல்லிக்கோங்க. என்ன இருக்கட்டும் பாலா வேற தானே? ப்ரெண்ட்ஸ் எல்லாம் பேமிலி மெம்பர்ஸ் ஆகிட முடியுமா?…” என கேட்க,
“வெற்றிக்கிட்ட இதுவரைக்கும் ப்ரெண்ட்லியாவா பழகினீங்க? அவனை அண்ணனா தான பார்த்தீங்க?
“அம்மா, அது வேற இது வேறம்மா. பெரியம்மா கூட சொன்னாங்க தெரியுமா, நாளைக்கு பாலா தான் உங்களுக்கு அடுத்து இந்த குடும்பத்தை பார்த்துக்கனும்னு நிறைய சொன்னாங்க. நாங்க பாலாவை அனுசரிச்சா தான் இந்த வீட்டுல இருக்க முடியுமாமே?…”
“சுத்த பைத்தியக்காரத்தனம் அஸ்வி. உனக்கு சுய புத்தி இல்லையா? ஆளாளுக்கு ஒண்ணொன்னு சொல்ல தான் செய்வாங்க. சூர்யாவை நினைச்சியா?…”
“அண்ணன் சும்மாவே முறைப்பான். என்னைக்கு ஆசையா பேசிருக்கான்? எனக்கு பெரியம்மா சொன்னது தான் நடக்குமோன்னு தோணுது. அதான் வெற்றி அண்ணாட்ட கூட பேசவே மனசு வரலை…”
அஸ்வினியின் காரணங்கள் சிறுபிள்ளைத்தனமாக தெரிய அதை எப்படி மாற்ற என்று அர்ச்சனாவிற்கு புரியவில்லை.
“உன்னை விட வயசுல சின்ன பொண்ணு பாலா. இப்படி நீ பேசறது தெரிஞ்சா…”
“பார்த்தீங்களா இப்பவே நீங்க பாலா என்ன நினைப்பாளோன்னு தான் நினைக்கறீங்க…” என்று அஸ்வினி மீண்டும் அழ,