“சரி ஜிப் போட்டுக்கோ…” என சொல்ல போடமுடியாமல் திணறினாள்.
“இது சிக்குது அத்தான்…” என்று அவனிடமே வந்து நிற்க,
“வாய் மட்டும் கேளு. டாப்பு டக்கரு…” என்ற கிண்டலுடன் அவள் சிக்க வைத்திருந்ததை நேர் செய்து மீண்டும் ஒன்றுபோல ஜிப்பை மாட்டி போட்டுவிட்டவன் பார்வை அவளின் நெற்றியிலிருந்து கண், மூக்கு, இதழ்கள் என்று வகைதொகையின்றி பார்வையிட,
“அத்தான் போட்டாச்சு. போட்டாச்சு…” என அவனுக்கு ஞாபகமூட்டினாள்.
“ஹாங், என்ன?…”
“இல்ல ஜிப்பை போட்டுட்டு என் மூஞ்சியை பாத்துட்டே நின்னீங்க. இருங்க கண்ணாடிய பார்த்துட்டு வரேன்…” என்று வேகமாய் அவன் கூப்பிட கூப்பிட உள்ளே ஓடியவள் தன்னை சரிபார்த்துவிட்டு,
“ஒண்ணுமில்லைல….” என மீண்டும் அவனிடமே வந்து கேட்க,
“ஒண்ணுமே இல்லை. அதான் ஏதாவது இருக்கான்னு பார்த்தேன்…” என்று சொல்லியவன் முன்னால் நடக்க அவனோடே கிளம்பியவள் போன் இடித்தது.
“சொல்லுங்க மதினி. வெளில போறோம்…” என்று வாசு பேசவுமே சட்டென நின்றவன்,
“மொபைலை தா…” என்று வாங்கி அதை ஆஃப் செய்து தனது பாக்கெட்டில் போட்டுக்கொண்டான்.
“என்னத்தான் இது? பேசிட்டிருந்தேன்ல. மதினி என்னவாச்சும் நினைச்சுப்பாங்க. போன கொண்டாங்க. ரெண்டுவார்த்த பேசிட்டு நானே வச்சுடறேன்…” என வாசு அவனிடம் கை நீட்ட,
“முதல்ல வண்டில ஏறி உட்கார் வாசு. வெளில கிளம்பும் போது இப்படி ஆர்க்யூ பண்ணாத…” என்றவனின் மொபைல் அடித்தது இப்போது.
வாசமல்லி எண்ணிற்கு அழைத்துவிட்டு அவளது ஸ்விட்ச்ஆஃப் என்றதும் ஷ்ரவனின் மொபைலுக்கு வந்துவிட்டாள்.
“சொல்லு அபி…” என்றவனின் இறுகிய குரலில்,
“உன் பொண்டாட்டிக்கிட்ட போன குடுடா. அவட்ட பேசறப்பவே கட் ஆகிடுச்சு…” என சொல்ல,
“நாங்க பிஸி. நீ இப்போ பேச வேண்டாம்…”
“ப்ச், ஷ்ரவா…”
“அபி, உன்னோட டிக்டேஷன் எல்லாம் இப்போ வச்சுக்காத. பிஸின்னு சொல்றேன்ல…” என்று அழைப்பை துண்டித்துவிட்டான்.
“பாவம் மதினி ரொம்ப சங்கட்டப்படுவாங்க…” என அவனிடம் வாசு சொல்ல,
“உன் மதினி ஒன்னும் கண்ணீர் விட மாட்டா. நீ முதல்ல முகத்தை தூக்கி வைக்காம ஒழுங்கா வா…” என்று ஜீப்பை கிளப்பினான்.
“ஹ்ம்ம், இப்ப நேரா எங்க போறோம்?…”
“முதல்ல கோவிலுக்கு. அப்பறம் ஷாப்பிங்…” என்று சொல்லவும் ஒன்றும் பேசவில்லை.
போகும் பாதைகளை வேடிக்கை பார்த்தவள் பாதையில் இருந்த கடைகளை கடந்து தேயிலை பயிரிட்டிருந்த பகுதிக்கு செல்லவும் மலைமீது ஏற துவங்கவுமே படக்கென்று கண்ணை மூடி ஷ்ரவன் பக்கமாய் பார்த்து சாய்ந்துகொள்ள அவளின் செயலில் இப்போது அவனுக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.
“ஏய் எந்தி வாசு. இனி இங்கதான் உன்னோட லைப். சும்மா சும்மா கண்ணை மூடிட்டே இருந்தா? இதை எல்லாம் பாரு. பழகிரும்…” என்று அவளின் தலைய இடதுகையால் பிடித்து எழுப்ப,
“அத்தான் வண்டியை ஓட்டுங்க. ஒத்த கையால ஓட்டாதீங்க…” என்று அதற்கும் அவள் பயப்பட,
“நீ கண்ணை முழிச்சு இதை எல்லாம் பார்க்காம வந்தா கண்டிப்பா ரெண்டு கையும் எடுத்துருவேன்…” என மிரட்டவும் அவனை பார்த்து முறைத்தாள்.
“இதுக்கு நான் வீட்டுலையே இருந்துப்பேன்…” என்று சிணுங்க,
“நீ என்ன பழனி மலைக்கெல்லாம் போனதே இல்லையா?…” என்றபடி அவளிடம் பேச்சுக்கொடுக்க,
“ஏன் போகாம? அதெல்லாம் நல்லா போனோம். அடிக்கடி போயிருக்கோம். ஆனா சைட்ல பாக்கமாட்டேன். நடுவால தான் போவேன்…” என்று சொல்ல மேல மெல்ல ஊர்கதைகளை பேச வைத்து கடந்து செல்லும் ஒவ்வொரு இடத்தையும் காண்பித்தபடியே அவன் ஜீப்பை செலுத்தினான்.
நேராக முதலில் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்றவர்கள் அங்கே சாமி கும்பிட்டு முடித்து அதன் பின்னர் வீட்டிற்கு தேவையான ஒவ்வொன்றாய் பார்த்து வாங்க ஆரம்பித்தனர்.
வாங்கிய ஒவ்வொன்றிற்கும் அத்தனை நுணுக்கம் பார்த்தாள் வாசமல்லி. அதற்கே ஷ்ரவனின் பொறுமை பறக்க இருந்தது. ஆனாலும் பொறுமை காத்தான்.
போதாததிற்கு அவ்வப்போது தலைசுற்றல், அங்காங்கே வாங்கி சாப்பிட்டவை எல்லாம் மூன்றுமுறை வாமிட் செய்துவிட்டு அழுதுவிடுபவளை போல ஷ்ரவனை பார்த்து நிற்க அவனுக்கு கஷ்டமாகிபோனது.
“ப்ச், விடு. போக போக பழகிடும். நான் ஒன்னும் சொல்லலை. இப்படி முகத்தை வச்சுக்காத. இதத்தான் பாக்க முடியலை…” என்று அவளை சமாதானம் செய்ய அதுவே அவளுக்கு போதுமானதாக இருந்தது.
போதாததிற்கு முகமும், உடலும் சோர்வுதட்ட லேசாய் அயர்ந்து போனாள் வாசமல்லி. ஆனாலும் வாங்கிய எதையும் ஏனோதானோவென்று வாங்காமல் நிதானமாக பார்த்து தான் வாங்கினாள்.
பேரம் பேச, பின் இது சொட்டை, இதற்கு இவ்வளவு தான் விலை என்று அவள் வாயாடியதில் ஆரம்பத்தில் கடுப்பாகியவன் போக போக அவனுக்கு ஒரு பொழுதுபோக்காக போனது. சுவாரசியத்துடன் பார்த்து நின்றான்.
அவனிடம் இது வேண்டுமா என்று கேட்டு காசு கொடுக்க என்று மட்டுமே அவனை அருகே வர அனுமதித்தாள் அவள்.
அனைத்தும் புதிதாக இருக்க ஒரு உற்சாகத்துடனே அன்றைய நாள் நகர்ந்தது அவனுக்கு.
ஒருவழியாய் காய்கறிகள் முதற்கொண்டு வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் அங்கே வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர மாலை நெருங்கிவிட்டது.
வீட்டிற்கு வந்ததுமே கொண்டு வந்ததை எல்லாம் எடுத்து கிட்சனில் வைத்தவள் பாலும் வாங்கி வந்திருக்க ஷ்ரவனுக்கும் தனக்கும் டீ போட ஆரம்பித்தாள்.
வீட்டிற்குள் நுழைந்ததுதான் தாமதம் மழை வேறு ஊற்ற ஆரம்பித்தது. அதை கிட்சன் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தபடி பாலை ஊற்றி காய வைத்துக்கொண்டிருக்க,
“வாட் தி ஹெல்?…” என்ற ஷ்ரவனின் சத்தத்தில் அடித்துப்பிடித்து ஓடி வந்தாள்.
“ஆத்தி, என்ன பெல்லுன்னு தெரியலையே…” என அவன் சொல்லியதை முழுதாய் கவனியாமல் அவன் எதையோ தேடுவதை கண்டு தானும் குனிந்து தேட,
“வாட்ஸ் கோயிங் ஆன்?…” என பேசிக்கொண்டே பெட்ரூமிற்குள் நுழைய வாசமல்லிக்கு புரிந்தவரை செயலாற்ற ஆரம்பித்தாள்.
ஓடி ஓடி அத்தனை விளக்குகளையும் அனைத்து அறையிலும் எரியவிட படுக்கையறைக்கும் நுழைந்து ஷ்ரவனை தாண்டி அங்கேயும் விளக்குகளை போட்டுவிட்டு வர அவளின் பின்னே வந்தவன்,
“வாசு நில்லு…” என்றான்.
“அந்த ரூம்லயும் போட்டுட்டு வரேன் அத்தான்…” என போக இருந்தவளை பிடித்து நிறுத்தி,
“நான் கொஞ்சம் நேரம் கழிச்சு கூப்பிடறேன் நாதன்…” என்றவன் காதில் இருந்த ப்ளூடூத்தை கழற்றிவிட்டு,
“ஓஹ் இதுல பேசிட்டா இருக்கீங்க?…” என்றவளிடம்,
“என்ன பண்ணிட்டிருக்க? அங்கயும் இங்கயும் ஓடிட்டு…” என கேட்டான்.
“நீங்க தான வாசு கோயிங் ஆன் சொன்னீங்க. எதைன்னு சொல்லலை. அதான் எல்லாத்தையும் ஆன் பண்ணிவிட்டேன். என்னமோ தேடிட்டிருந்தீங்க. அதான்…” என்று அவள் அண்ணாந்து விளக்குகளை பார்க்க, இடுப்பில் கை வைத்தபடி புன்னகைத்தவன்,
“அதுக்கு எல்லா லைட்டையும் போடுவியா நீ?…” என தலையில் கொட்டினான்.
“அப்ப லைட் போட சொல்லலையா?…” என தலையை தடவியபடி கேட்க,
“வலிச்சிருச்சா?…” என்று அவளின் கையை எடுத்துவிட்டு தானே தேய்த்துவிட்டான்.
“ப்ச், விடுங்கத்தான்…” என்று அவனின் கையை எடுத்துவிட,
“ஏன் நான் தேய்ச்சுவிட்டா என்ன? நில்லு பேசாம…” என்று இன்னும் அவளை நிறுத்தி தேய்க்க,
“வலிக்கவே இல்லை. நான் சும்மா கருக்குன்னுச்சுன்னு தேச்சேன். நீங்க விடுங்க…” என தள்ள,
“அதுக்குத்தான் நானும் தேச்சேன்…” என்று சமாளித்தவன் கைகள் மெல்ல கீழிறங்கி அவளின் கன்னத்தை வருடிவிட்டே விலக அதை எல்லாம் கவனிக்கும் நிலையில் அவள் இல்லை.
“என்னமோ தேடிட்டிருந்தீங்க? என்னனு சொல்லுங்கத்தான். எடுத்து தரேன். அப்பறம் நாபாட்டுக்கு வீட்ட கூட்டி குப்பைய கொட்டிற போறேன்…” அவள் தெரிந்துகொள்வதற்கென கேட்க,
“ஹ்ம்ம், ஆமா. ஒரு சின்ன பென்ட்ரைவ். கீழே விழுந்திருச்சு. அதான் போன் பேசிட்டே தேடிட்டிருந்தேன்…” என்றான் அவனும்.
“அதான் லைட் போட சொன்னீங்களா? இந்த வெளிச்சத்துலையும் தெரியலையா என்ன?…” என்றவள் அவனின் பதிலை எதிர்பாராமல் டீயை பார்க்க செல்ல அங்கே பால் சுண்ட ஆரம்பித்திருந்தது.
“போச்சு…” என்று இன்னும் கொஞ்சம் தண்ணீரை காய வைத்தவள் பின் அதை பாலில் கலந்து அதன் பின்னர் டீ தூளை போட்டு சர்க்கரையை கலந்தாள்.
“அப்படியே தண்ணிய பால்ல ஊத்த வேண்டியது தான?…” என ஷ்ரவன் அந்த மேடையில் ஏறி அமர்ந்துகொள்ள,
“நல்லா சுண்டின பால்ல பச்சை தண்ணி கலந்து அதுல டீ போட்டா டீயும் ருசியா இருக்காது. தனியா இப்படி போட்டா நல்லா இருக்கும்…” என சொல்லிக்கொண்டே அவனுக்கு டீயை வடித்து தர தலையாட்டியபடி வாங்கிக்கொண்டான்.
பேச கூடாது, கூடாதென நினைத்தவனால் அப்படி இருக்கமுடியவில்லை. அவளிடமே கேட்டுவிட்டான்.
“நேத்து நான் பேசினது உன்னை கஷ்டபடுத்திருச்சா?…” என்று கேட்க நிமிர்ந்து அவனை பார்த்தவள் ஒரு நொடி பதில் சொல்ல யோசித்தாள்.
“சொல்லு வாசு…”
“இல்லன்னு சொல்லமாட்டேன். ஆனாலும்…” என இழுத்தவள்,
“ஏன் அத்தான்? நான் என்னை தான நல்லா பார்த்துக்கறேன். அப்பறம் ஏன்?…” என கேட்க அவனுக்கு பதில் சொல்லமுடியவில்லை. அமைதியாக இருந்தவன்,
“நாளைக்கு காலையில ட்யூட்டிக்கு கிளம்பிடுவேன். இன்னும் இங்க உனக்கு அக்கம்பக்கம்னு தெரியாது. வாக்கிங் போகனும்னா இந்த கேம்பஸ்க்குள்ளையே போய்ட்டு வந்திடு…” என சொல்ல அவளும் தலையசைக்க,
“இல்லை, வேண்டாம். நாளைக்கு நானே வந்து கூட்டிட்டு போறேன். அதுக்கப்பறம் வெளில போய்க்கலாம்…” என்று சொல்ல அதற்கும் தலையசைத்தாள்.
“வாயை திறந்து பேசினா என்னவாம்?…” என்ற முணுமுணுப்போடு டீயை குடித்துமுடித்து கப்பை வைத்துவிட்டு செல்ல அவனையே பார்த்தபடி இருந்தவள் வாங்கி வந்தவற்றை எல்லாம் பிரித்து போட ஆரம்பிக்க,
“என்னையும் கூப்பிடவேண்டியது தானே?…” என வந்துவிட்டான் ஷ்ரவன்.
“அதெல்லாம் இல்ல, நானே பார்த்துப்பேன். நீங்க போங்க அத்தான்…” என அனுப்ப,
“சேர்ந்தே செய்யலாம். எனக்கும் எதெது எங்க இருக்குன்னு தெரிஞ்ச மாதிரி இருக்கும்…” என்று அவளுடன் இனிதே செய்ய அவனிடம் பேசவே யோசனையாக இருந்தது வாசமல்லிக்கு.
சட்டென அபர்னிதாவின் முகம் வாசுவின் மனக்கண்ணில் மின்னிமறைய அனைத்தையும் ஒதுக்கிவைத்து ஷ்ரவனுடன் பேச ஆரம்பித்தாள்.
வழக்கமான சலசலவென்ற பேச்சு இல்லை என்றாலும் பேசினாள். இத்தனை யோசித்து யாரிடமும் பேசியிறாதவள் வார்த்தைகளை தேர்ந்தெடுத்து கோர்த்து பேசும் நிலையில் இருந்தாள்.
பேசினால் அவனுக்கு பிடிக்காதோ? என்று மௌனகுடை பிடிக்க அவனோ அவளிடம் வார்த்தைகளை வாங்குவதில் குறியாய் இருந்தான்.
அதிலும் அபர்னிதாவிடம் அவன் காட்டிய கோபமுகம் வேறு வாசுவை சற்று மிரள வைத்திருந்தது.
“ஷ்ரவனுக்கு எதுவும் தெரியவேண்டாம் மல்லி…” என்ற அபர்னிதாவின் பேச்சு இப்போதும் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது அவளுக்கு.
நம்பிக்கை தான் வாழ்க்கை. ஆனால் நாம் நம்புபவர்களை பொறுத்தே அதன் நல்லதும் கெட்டதும் அதன் பின்னான வாழ்க்கையும்.
அவள் வைத்த நம்பிக்கையும் அதனை கொண்டு அவள் எடுத்த முடிவும் அவளின் இயல்பையும், நடப்பையும் முன்னுக்கு பின் முரணாக மாற்றியது.