பூ – 6
நடு இரவில் முணங்கும் சப்தம் கேட்க சட்டென விழித்துவிட்டான் ஷ்ரவன். திரும்பி பார்க்க வாசமல்லி தான் குளிரில் நடுங்கிக்கொண்டு இருந்தாள்.
“வாசு…” என அழைக்க,
“அத்தான் ரொம்ப குளிரா இருக்குது…” என்று பற்கள் தந்தியடிக்க அவள் முணங்க,
“ஹ்ம்ம், கீழே தான் ரஜாய் இருக்கே. போர்த்திக்கவேண்டியதுதானே? அதையும் சொல்லனுமா?…” என்றவன் காலுக்கு கீழே பார்க்க அங்கே இல்லை.
ஒரு பெருமூச்சுடன் எழுந்து சென்று கப்போர்டில் இருந்து ஒன்றை உருவி வந்து அவளுக்கு போர்த்தி தானும் நுழைந்துகொண்டான்.
“இனி குளிராது. பேசாம தூங்கு வாசு…”
ஐந்து நிமிடம் ஆகியிருக்காது, கண்ணை மூடி உறங்கும் முன் அவள் போர்த்தியிருந்ததை விலக்கிவிட்டு எழுந்து அமர்ந்துகொண்டாள்.
“என்ன வாசு?…” என்று அயர்வுடன் அவன் கேட்க,
“இது எனக்கு புடிக்கலை அத்தான். போர்த்த முடியலை. ஒரு மாதிரி அழுத்துது…” என சொல்ல,
“இங்க இதான் இருக்கு வாசு. இதை தான் போர்த்தனும். அப்போதான் குளிர் தாங்கும்…”
“இல்லை எனக்கு நம்மூர் போர்வை தான் சரி…”
“அதுக்கு எங்க போக? பேசாம அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. நாளைக்கு வாங்கலாம். படு வாசு…” உறக்கம் கண்களை சுழற்ற பெசியவனிடம்,
“இருக்கே அத்தான். இருங்க…” என்றவள் கட்டிலை விட்டு இறங்கினாள்.
அதே குளிருடன் கைகளை இருக்க கட்டியபடி மெதுவாய் நடந்து பெட்டிகள் இருந்த இன்னொரு அறைக்கு செல்ல என்ன செய்ய போகிறாள் என பார்க்க அவனும் பின்னால் சென்றான்.
அவள் பெட்டிகள் என்று கொண்டு வந்திருந்த ஒன்றை திறந்து அதில் இரண்டு புது போர்வைகளை எடுத்து வந்து அவனுக்கு நீட்டினாள்.
“இதை தூங்கறதுக்கு முன்னவே எடுத்து வைக்க வேண்டியது தானே? போ. போய் படு. நான் தண்ணி குடிச்சுட்டு வரேன்…” என்று அவளிடம் சொல்லிவிட்டு கிட்சனுக்குள் சென்றான்.
மீண்டும் அவன் வரும் பொழுது ஒரு போர்வையை போர்த்தி இன்னொன்றை ஷ்ரவன் படுக்கும் இடத்தில் வைத்திருந்தாள்.
“எனக்கு இது வேண்டாம். எப்படியும் கொஞ்சம் நேரத்துல கிடுகிடுன்னு பல்லை கடிச்சுட்டு முணங்குவ…” என சொல்லி அதையும் அவளிற்கே போர்த்திவிட்டவன் ரஜாயை போர்த்திக்கொண்டு உறங்கினான்.
அதன் பின்னர் நல்ல விடியலில் தான் கண்விழித்து இருந்தான். எழுந்து அமர்ந்ததுமே வீட்டுனுள் நெய்யின் மணம் கமகமக்க அப்படியே எழுந்து கிட்சனிற்கு செல்ல அங்கே சமையலை முடித்திருந்தாள் வாசமல்லி.
“வாசு எப்போ எழுந்த?…” என,
“குளிச்சுட்டு வாங்க அத்தான். சாப்பாடு ரெடி…”
“எதுவும் இல்லையே. எடை வச்சு ரெடி பண்ணின?…” என கேட்டு அவளை பார்த்தபடி வந்தவனின் காலை எதுவோ இடறிவிட கீழே விழ இருந்தவன் சுதாரித்து நின்றான். ஆனாலும் காலில் பெருவிரல் வலித்தது.
“என்னது?…” என குனிந்து பார்க்க அங்கே முதல்நாள் கொண்டுவந்த பெட்டிகளில் ஒன்று திறந்திருந்தது.
அதில் சிறு பெட்டிக்கடை வைக்கும் அளவிற்கு அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள், மசால் பொடிகள் என்று கடைபரப்பி இருக்க,
“இதென்ன பெட்டில இத்தனை? இதெப்படி?…” என்றவன் வாசுவை பார்க்க,
“நேத்து இதுல தான் இப்போதைக்கு சரக்கு இருக்கட்டும்னு அத்தையும் நானும் எடுத்து வச்சோம் அத்தான்…”
“சரக்கா?…”
“அதான் இந்த பலசரக்கு. உங்களுக்கு தெரிஞ்சா நீங்க திட்டுவீங்கன்னு அத்தை சொல்லாதன்னு சொல்லிட்டாங்க. நான் தான் பெட்டில வைக்கலாம்னு சொன்னேன்…” என்று வாசு சொல்ல,
“சுத்தம். ஊர்ல இருக்கற எல்லார் பேச்சையும் கேளு. புருஷன் பேச்சை மட்டும் காதுலையே வாங்காத…” என்று அவன் சொல்ல பளிச்சென்று சிரித்தாள் அவள்.
“என்ன சிரிப்பு? உனக்கென்ன? நான்ல இதை தூக்கமாட்டாம தூக்கிட்டு வந்தேன். நீ ஏன் சிரிக்க மாட்ட?…”
“ம்ஹூம், சிரிக்கலை…” என்று சொல்லி அதற்கும் லேசாய் புன்னகைத்தாள்.
“இதை ஒண்ணை சொல்லிடு…” என்றவன்,
“என்ன சமைச்சிருக்க?…” என்று அந்த பெட்டியை தாண்டிக்கொண்டு வந்து அந்த பாத்திரங்களை பார்த்தான்.
“காய்கறி எதுவும் இல்லையா. அதான் நேத்து வரப்போ கொண்டு வந்தத வச்சு சும்மா சப்பாத்தி, குருமா, கொஞ்சம் கேசரியும் செஞ்சேன்…”
“சாப்பிடற மாதிரி இருக்கும் தான?…” என ஷ்ரவன் லேசாய் கேலி இழையோட அவளிடம் கேட்க,
“நான் உருப்படியா கத்துக்கிட்டது அதான் அத்தான்…” என்றாள் வாசு.
சொன்னவள் எதார்த்தமாய் சொல்ல கேட்டவனுக்கு சுருக்கென்றது. ஒன்றும் பேசாமல் பெட்டியை பார்த்தவன்,
“இதை ஓரமா நகர்த்தி வை. இல்லைன்னா எடுத்து இந்த மேடை மேல வை. இதை எல்லாம் போட்டு வைக்கறதுக்கு கூட பாக்ஸ் வாங்கனும்…”
“அதெல்லாம் வேணாம் அத்தான்…”
“ப்ச், வேணாம்னா? இப்படியே பிரிச்சு போட்டு வைப்பியா? சரி நான் குளிச்சுட்டு வரேன். வெளில போய் ஷாப்பிங் முடிச்சிடுவோம். இன்னைக்கே என்னென்ன வாங்கனும்னு வாங்கிடலாம். எனக்கு அடுத்து டைம் கிடைக்குமான்னு தெரியலை…”
“ஹ்ம்ம்…”
“நான் போய் குளிச்சுட்டு வரேன். சாப்பாட்டை எடுத்து வை…” என்று சொல்லி திரும்பியவன் மீண்டும் அவளை பார்த்து,
“தலையை உலர்த்தாம என்ன பன்ற நீ? இங்க உனக்கு செட் ஆகற வரைக்கும் கொஞ்சமாவது கேர்ஃபுல்லா இரு வாசு…” என சொல்லிவிட்டு சென்றதும் கீழே இருந்தவற்றை எல்லாம் எடுத்து வைத்து அந்த காலி பெட்டியை மடித்து கொண்டு வைத்துவிட்டு வந்தாள்.
ஷ்ரவனுக்கு தேவையான சாப்பாட்டை எடுத்து டேபிளில் வைத்துவிட்டு கதவை திறந்துகொண்டு வெளியில் சென்று நிற்க குளிர் அந்த நேரத்திலும் வாட்டியது.
தலையை உலர்த்தியபடி வேடிக்கை பார்த்துக்கொண்டே நின்றவள் ஷ்ரவனின் குரலில் மீண்டும் உள்ளே வந்தாள்.
“சாப்பிட்டியா?…” என கேட்டபடி முழுநீள கை கொண்ட அந்த டிஷர்ட்டை முழங்கை வரை இழுத்துவிட்டவன் சாப்பிட அமர்ந்தான்.
“இல்லை, இனிமே தான்…”
“ஓகே, ஓகே, வந்து உட்கார் வாசு. சாப்பிட்டு கிளம்புவோம்…” என்று சொல்லி அவளுக்கும் ஒரு பிளேட்டை வைத்து சப்பாத்தியை வைக்க,
“நானே வைக்கறேன். நீங்க சாப்பிடுங்க அத்தான்…” என சொல்ல,
“ப்ச், இதுல என்ன இருக்குது? இவ்வளவு நேரம் சமைச்ச, தனியா தான செஞ்ச? சாப்பிடு…” என்று பரிமாறி தனக்கும் வைத்து சாப்பிட ஆரம்பித்தான்.
வாசு அவனை பார்ப்பதும் சாப்பிடுவதுமாய் இருந்தாலும் உணவை தள்ளவில்லை. அவளுக்கு தேவைக்கு திருப்தியாகவே உண்டாள்.
ஆனாலும் ஷ்ரவன் கேட்ட வார்த்தைகளுக்கு மட்டுமே பதில் வந்தது. அவனும் அதை கவனித்துக்கொண்டு தான் இருந்தான். முதல்நாள் பேசியதன் விளைவு என்றும் புரிந்தது.
அவளுக்கு அது கஷ்டம் தரும் என்று தோன்றினாலும் சிறிது நாளைக்கு இப்படியே இருக்கட்டும் என்றே நினைத்தான். அதுதான் அவளுக்கு நல்லதென அவனே நினைத்துக்கொள்ள அவனின் எண்ணங்களுக்கு அப்பாற்பட்டவளாக இருந்தாள் வாசமல்லி.
“ஹ்ம்ம், நாட் பேட்…” என்றவன் சட்டென,
“ரொம்ப நல்லா இருக்கு வாசு. இங்க வந்ததுல இருந்து அம்மா சமையல மிஸ் பண்ணேன். வெளில, கேண்டீன்ல இப்படித்தான் சாப்பாடு வரும். அப்பப்ப நாதன் வீட்டுல ஏதாவது விசேஷம்னா வீட்டு சாப்பாடு வரும். மத்தபடி ஊருக்கு போனா தான் வீட்டு சாப்பாடு…”
“ஹ்ம்ம்…” என்றாள் அவளும். அவன் ஆங்கிலத்தில் ஆரம்பித்து உடனே மாற்றி பேசியதை கவனித்தவள் மனம் லேசாய் வெம்பியது. ஆனாலும் காட்டிக்கொள்ளாமல் அவனை பார்த்தபடி இருந்தாள்.
“என்ன ஹ்ம்ம்? சாப்பாடு நல்லாருக்குன்னு சொல்றேன், ஹ்ம்ம் சொல்ற?…” என கேட்க,
“என்னால முடிஞ்சளவு உங்களுக்கு தொந்தரவில்லாம உங்கள பாத்துப்பேன் அத்தான்…” என மனதில் பட்டதை அப்படியே வாசு சொல்லிவிட,
“வாசு…” என்றான் லேசாய் அதிர்ந்த பார்வை பார்த்து.
“ஐயோ உளறிட்டேன். இல்ல இல்ல…” என சமாளிப்பாக பாவமாய் அவள் சொல்ல அவனுக்கு தான் சொல்லும் போது இல்லாத ஒரு உணர்வு அவள் சொல்லிக்காண்பித்த பொழுது உண்டானது.
“என்ன பேச? என்ன பதில் சொல்ல? எனக்கு தெரியலை அத்தான். நான் இதை எடுத்து வச்சுட்டு வரேன்…” என்றவள் அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு வர அவன் அங்கேயே அமர்ந்திருந்தான்.
“இந்த புடவையே போதுமா? வேற மாத்தனுமா?…” என அதையும் அவனிடம் கேட்டு நிற்க இன்னுமே குற்றவுணர்வாக போனது.
‘அபர்னிதாவிடம் அத்தனை திட்டிய தானே இப்பொழுது என்ன செய்து வைத்திருக்கிறேன்?’ என வருத்தமாக போனது.
“அத்தான்…” என அவனின் பதிலுக்காக அவள் நிற்க,
“இதுவே அழகா இருக்குது. போய் ஜெர்கின் எடுத்து போட்டுட்டு வா…” என்று சொல்லி கையை கழுவ செல்ல வாசமல்லி அசையாமல் நின்றுவிட்டாள்.
“போச்சு இன்னைக்கு இதுக்கும் வாங்க போறேன்…” என உதறலுடன் அவள் நின்றாள்.
“என்ன போகலையா?…” என கேட்டு கையை துடைத்துவிட்டு வந்தவன்,
“பேக் எதுவும் வேண்டாம். அங்க போய் பார்த்துக்கலாம். லஞ்ச் வெளில பார்த்துப்போம்…” என்று சொல்லி தன்னுடைய ஜெர்கினை எடுத்து போட்டுக்கொண்டவன் ஜீப் சாவியையும் எடுத்துக்கொண்டான்.
“என்ன வாசு? இன்னும் அங்கயே நிக்கற? எப்போ வேணாலும் மழை வரும். அதுக்குள்ளே எல்லாம் வாங்கனும். கிளம்புவோம்…” என்று சொல்ல புடவை தலைப்பை கையில் வைத்து விரலில் சுற்றியபடி வந்து நின்றாள்.
“என்ன? என்ன முழிக்கற? என்ன பண்ணிருக்க?…” என்று அவளின் தயக்கத்தையும் தொங்கிப்போன முகத்தையும் பார்த்து அவளிடம் கேட்க,
“திட்டுவீங்க தானே?…”
“ஓஹ், அப்போ சரி. அப்ப திட்டற மாதிரி எதோ பண்ணிட்ட? சொல்லு…”
“மதினி குடுத்த அந்த குளிர் கோட்ட இந்த பலசரக்கு பெட்டில தான் வச்சிருந்தேன். இத எடுத்து வைக்கறப்போ அத மறந்து திரும்ப எடுக்காம அங்க ஊர்லையே வச்சுட்டு வந்துட்டேன்…” என்று திருதிருவென முழித்தபடி அவள் சொல்ல,
“உன்னையெல்லாம் என்ன பன்றது? இப்ப பலசரக்கு முக்கியமா?…” என அவன் கோபத்தில் பல்லை கடித்தான்.
“இதெல்லாம் இருந்ததால தான சப்பாத்தி குருமான்னு செய்ய முடிஞ்சது. சாப்பிட்ட பின்னால சாப்பாட்ட திட்ட கூடாது. சாப்பாடு உடம்புல ஒட்டாது….” என வியாக்கியானம் பேச,
“ரொம்ப முக்கியம். இப்ப நான் உன்னை தான திட்டுனேன்…” என கடிந்தவன்,
“இரு…” என்று தன்னுடையது ஒன்றை எடுத்து வந்து தந்துவிட்டு,
“இப்போதைக்கு இதை போட்டுக்கோ. இப்போ போற இடத்துல உனக்கு வாங்கிக்கலாம்…”
“இன்னொன்னு எதுக்கு அத்தான்? அதான் இது இருக்கே?…” என்றவள் அந்த ஜெர்க்கினை போட்டுவிட்டு மேலிருந்து கீழே தடவிவிட்டவள்,
“நல்லாருக்குல. அப்படியே நைஸா. தடவ தடவ ஆசையா இருக்குது…” என்று அதை தடவி பார்த்தவள்,
“நேத்து குடுத்தது கூட நல்லாவே இல்ல அத்தான். அங்கங்க சிப்பு வச்சு தொங்கிட்டு. இது நல்லா இருக்குது…” என சொல்லி சிரிக்க ஷ்ராவனுக்கும் அவளின் செய்கையில் சிரிப்பு வந்தது.