பூ – 10
கோவை வந்ததும் ஷ்ரவனுக்கு அழைத்து சங்கர் விரவத்தை சொல்லிவிட்டு அவனிடம் பேசிவிட்டு போனை வைத்தவன் நீலகண்டனுடன் இருந்துகொண்டான்.
அவர்களிடமிருந்து போன் வரும் வரை பலதரப்பட்ட யோசனைகளுடன் அங்கேயே அமர்ந்திருந்தவனை வாசுவும் எந்த தொந்தரவும் செய்யவில்லை.
அவளுமே அபியின் பேச்சில் தானே உழன்றுகொண்டு இருந்தாள். அதனால் வீட்டில் மௌனம் சூழ்ந்துகொள்ள இருவருமே பேசிக்கொள்ளவில்லை.
வாசுவிற்கு தான் வருத்தம், ஆற்றாமை எல்லாம மறைந்து கொஞ்சம் கொஞ்சமாய் கோபம் தலைக்கேற ஆரம்பித்தது.
சங்கரின் மனைவி என்ற காரணம், அதையும் தாண்டி தன் கணவனை பற்றி அறிந்திருந்தவள் என்ற காரணமே அபியை நம்ப வைத்தது.
‘இந்த மதினிய நம்பினா என்னை என்ன ஏப்பை சாப்பைன்னு நினைச்சுட்டாங்களா?’ என கோபத்துடன் நினைத்துக்கொண்டாள் அவள்.
இப்படி இருவருமே அபியின் வார்த்தைகளில் இருக்க சங்கரும் அழைத்து வந்துவிட்ட விரவத்தை ஷ்ரவனிடம் மட்டும் சொல்லி வைத்துவிட்டான். அதன் சத்தம் கேட்டு எழுந்து வந்த வாசு,
“அத்தான் என்ன சொன்னாங்க? பேசிட்டீங்களா? மாமாவுக்கு காய்ச்சல் எப்படி இருக்காம்?…” என கேட்டாள்.
“ஹ்ம்ம், இப்போ கொஞ்சம் பரவாயில்லை. ஆனா உடனே விடாது தானே? அத்தையும் மாமாவும் கூட அங்க தான் இருக்காங்க. சங்கரத்தான் நாளைக்கு கிழமை சொல்லி சொல்லிடாங்கலாம்…”
“ஹ்ம்ம், அப்ப சரி. அதுவும் நல்லதுக்குத்தான். நீங்க சாப்பிட வாங்க. எவ்வளவு நேரம் இப்படியே உட்கார்ந்திருப்பீங்க?…” என பேசியபடி உள்ளே செல்ல நாதன் அழைத்திருந்தார் அவனுக்கு.
“வாசு, நீ சாப்பிடு. நான் ஒரு ஒருமணி நேரத்துல வந்திடறேன்…” என்று சொல்லி ஷ்ரவன் கிளம்பிவிட,
“இந்நேரம் திடுதிப்புன்னு கிளம்பறீங்க?…” என கேட்டுக்கொண்டே அவனின் பின்னே ஓடிவந்தாள்.
“ப்ச், ஒரு முக்கியமான கேஸ். வந்து விவரமா சொல்றேன். சாப்பிட்டு படு. நான் வந்து கதவை திறந்துப்பேன்…” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.
சாப்பிடாமல் செல்கிறானே என்ற கவலையுடன் சிறிது நேரம் அமர்ந்திருந்தவள் பின் சிறிது நேரம் டிவி பார்த்திருந்துவிட்டு சோபாவில் தனது பெட்ஷீட்டை கொண்டுவந்து போட்டு படுத்துக்கொண்டாள்.
அவளுக்கும் உடல் அலுப்பாக இருக்க வேலைகள் அப்படியே கிடந்தது. மறுநாள் பார்த்துக்கொள்ளலாம் என்று படுத்துவிட உடனே தூங்கியும் போனாள்.
கண்ணை மூடி இருபது நிமிடம் நிமிடம் தான் இருக்கும். அதற்குள் அபியிடமிருந்து போன் வந்துவிட்டது வாசுவிற்கு.
நல்ல உறக்கக்கலக்கத்தில் போனை எடுத்தவள் யாரென்று பார்க்காமல் அட்டன் செய்து காதில் வைத்ததும்,
“சொல்லுங்க அத்தான்…” என்றாள்.
“வாசு நான் அபி பேசறேன்…” என அபர்னிதா குரல் கேட்டதும் சட்டென மூளை விழித்துக்கொள்ள என்ன பேசுவதென்று யோசித்தபடி அவள் இருக்க,
“என்ன வாசு? எடுத்ததும் சொல்லுங்க அத்தான்னு சொல்ற? ஷ்ரவன் எங்க? வீட்டுல இல்லையா அவன்?…” என அவள் பேசியதில் கவனித்து கேட்க ஒரு நொடிதான் திணறினாள் வாசு.
வீட்டில் தான் இருக்கிறான் என்று சொல்ல மனம் வரவில்லை. எதற்கு பயந்து போய் சொல்லவேண்டும்? அப்படி என்னாகிவிடும் என நினைத்தவள்,
“ஆமா மதினி வெளில சோலியா போயிருக்காங்க…” என்றதும்,
“என்னது இன்னேரமா? இதுக்குத்தான் நீ வரமாட்டேன்னு சொன்னியா? பாரு கிளம்பி போய்ட்டான் உன்னை தனியா ராத்திரில விட்டுட்டு…” என்று அக்கறையாக பேசினாள்.
முன்பானால் தன் மீது எத்தனை அக்கறை என்று அவளின் பேச்சை எண்ணி சில்லாகித்திருந்தாலும் ஷ்ரவனை விட்டுக்கொடுத்திருந்திருக்க மாட்டாள். இப்போது அபியின் சுயரூபம் தெரிந்த பின்னரும் விட்டுக்கொடுக்க வாசமல்லி முட்டாள் அல்லவே.
“ஏன் மதினி உங்களுக்கு அவங்க வேலைய பத்தி தெரியும் தான? இல்ல எங்கண்ணனும் காலைக்கி போய்ட்டு சாயங்காலம் வீட்டுக்கு வந்து கூடவே இருக்காகளா? காவக்காரங்க இவங்க. இவங்க வேலை இப்படித்தான்னு உங்களுக்கு தெரியாதா என்ன?…” என்று கேட்க அபி திகைத்து போனாள்.
“இல்ல வாசு நான் அப்படி சொல்லலை. உனக்கும் நாங்க வரப்ப முடியலை இல்லையா? கூட இருந்து பார்த்துக்காம?…” என்றவளை பேசவிடவில்லை வாசு.
“கூட இருந்தா மட்டும் என்னோட நோவ அவங்க வாங்கிக்க போறாங்களா? பாத்துக்கிட்டே உட்காந்திருக்க வேண்டிதானே? இதெல்லாம் நாம்தான புரிஞ்சுக்கனும்…”
“வாசு என்ன உன் பேச்சு இன்னைக்கு ஒரு தினுசா இருக்கே?…” என அபி யோசனையுடன் கேட்க உடனே சுதாரித்தாள் வாசு.
கூடவே பழகி வளர்ந்த ஷ்ரவன் சொல்லியே அலட்சியமாக பேசியவள் தனக்கு அவள் பேச்சு தெரியும் என்று தெரிந்தால் மட்டும் என்ன மாறிவிடும்? அதனால் தனக்கு தெரியும் என்பதை காட்டிக்கொள்ளாமலே பேசினாள்.
“நீங்க பாத்து கட்டிவச்ச கல்யாணம். நான் தான சூதானமா இருக்கனும் மதினி. நானும் இப்படி பேசனும்னு தான எனக்கு ஒண்ணொண்ணா சொல்லி தாறீங்க. இப்படி உணக்கையா பேசினா தான அத்தானுக்கும் புடிக்கும்னு…”
“அப்படி நான் சொல்லவே இல்லையே வாசு. ஆனாலும் நீ சொல்றது சரிதான். நீ ரொம்ப கவனமா தான் இருக்கனும். ஏனா ஷ்ரவனுக்கு எப்ப கோவம் எப்படி வரும்னே தெரியாது. சில நேரம் எதையாச்சும் தூக்கி போடு உடைச்சிருவான். வீடே ரெண்டாகிடும்…” என்று வாசமல்லியின் பயத்தை அதிகரிக்க பார்க்க,
“அதெல்லாம் பாத்துக்கலாம் மதினி. எதாச்சும் முடியலன்னா உங்ககிட்ட தான வந்து நிக்க போறேன். என்ன பண்ணிடுவாரு? இருக்கறதா போட்டு உடைப்பாரு. அம்புட்டுதான? உடைச்சா கூட்டி அள்ளி போட்டுட்டு அடுத்த வேலைய பார்ப்போம். அவரு கோபம் எம்புட்டு நாளைக்கு?…” என பிடிகொடுக்காமல் அவள் பேச,
“வாசு, அதுக்குன்னு அமைதியா நீ இருக்கனும்னு இல்லை. சும்மா அடங்கியும் போகாத. உனக்கு நான் இருக்கேன். அவன் பேசினா நீயும் பேசு…” என சொல்ல,
“முதல்ல போனவங்க வரட்டும் மதினி. பார்த்துக்கலாம். சரி என்ன பன்றீங்க எல்லாரும்? ஆதவ் குட்டி தூங்கிட்டானா?…” என கேட்டவள் அடுத்து அபியை பதில் சொல்ல மட்டுமே வைத்துக்கொண்டு இருந்தாள்.
அபர்னிதாவும் வேறு ஏதாவது பேசுவோமா என பார்க்க பார்க்க வாசமல்லியிடம் இருந்து கேள்விகள் வந்துகொண்டே இருந்தது. அபி பேசவே அவள் இடம் கொடுக்கவில்லை.
“வாசு என்னை பேசவிடு. எல்லாரும் கிளம்பி வந்துட்டோம். உனக்கு தனியா இருக்க கஷ்டமா இருக்குமேன்னு தான் கூப்பிட்டேன். நீ என்னன்னா?…”
“அதை விடுங்க மதினி. ஒரு முக்கியமான விஷயம் பேச நினச்சேன். அண்ணன் இங்க வந்தப்பவே கேட்டிருப்பேன். மறந்துட்டேன்…” என்று சொல்ல,
“என்ன என்கிட்டே சொல்லு. நான் சொல்லிக்கறேன். சொல்லு வாசு…” என்றாள்.
வாசமல்லிக்கும் இப்போதைக்கு அவளை அவள் வழியில் சென்று தான் சரிபண்ண முடியும் என்று தோன்றியது. அதிலும் சங்கர் மேல் வேறு கோபமாக வந்தது. ஒருபக்கம் பாவமாகவும் வருத்தமாகவும் இருந்தது.
“நான் சந்தோஷமாவே இல்லை…” என்று அழுத அபர்னிதாவின் முகம் மனக்கண்ணில் தோன்ற இப்போது புரிந்தது சந்தோஷம், நிம்மதியிழந்து யார் இருக்கிறார்கள் என்று.
சங்கரை எண்ணி வருந்தியவள் அவனுக்காக பரிதாபபட்டாள். அதே நேரம் இதை சரி பண்ணாமல் ஏன் இப்படி விட்டிருக்கிறார் என்றும் தோன்றாமலில்லை.
“வாசு சொல்லு. என்ன ஒன்னும் பேசலை?…” என்றவளின் குரலில் மீண்ட வாசு,
“இல்ல மதினி, அண்ணன்கிட்ட குடுங்க…” என்று அழுத்தமாய் சொல்ல அபிக்கு மூளை குடைந்தது.
“என்கிட்டே சொல்லமாட்டியா வாசு?…” என இரக்கமாய் கேட்க,
“உங்களுக்கு சொல்லாமலா மதினி? அண்ணன்கிட்ட பேசிட்டு சொல்றேன்…” என்றவள் மேலும் ஒன்றும் பேசவில்லை.
“சரி இரு…” என்று அபி சங்கரை தேடி செல்ல மகனை மடியில் போட்டபடி அவனிடம் ஏதோ கதை பேசிக்கொண்டு இருந்தான்.
“உங்க தங்கச்சி உங்கட்ட பேசனுமாம். ரகசியமா…” என சொல்லி போனை கொடுத்தவள் அங்கேயே அமர்ந்துகொண்டாள் என்ன பேசுகிறார்கள் என்று கவனிக்க.
“சொல்லும்மா, சாப்பிட்டியா?…” என்று கேட்டவனின் முகம் கனிந்து மலர்ந்து தெரிய அவனையே பார்த்தபடி இருந்தாள் அபர்னிதா.
தன்னுடன் ஒருநாளும் இப்படி அவன் பேசியிருக்கவில்லையே என்று நெஞ்சம் பொருமியது. அப்படி தானும் நடந்துகொள்ளவில்லை என்று அவள் உணரவில்லை.
வாசமல்லியும் தன் அண்ணனிடம் பொதுவாய் அங்கே சென்றதை பற்றியும், ஷ்ரவன் வெளியில் சென்றிருப்பதை பற்றியும் பேசிவிட்டு,
“ஒரு போன் நம்பரு வேணும்ண்ணே. உங்கட்ட இருக்குமான்னு கேக்கத்தேன் இருந்தேன்…”
“சொல்லும்மா, இருந்தா அனுப்பறேன்…” என்றான் சங்கரும்.
“தேவகி மதினி நம்பரு வேணும்…” என்று கேட்டதும் சங்கரின் மனது ஒரு நொடி அந்த பெயரில் தவித்து அடங்கியது.
“எதுக்கு மல்லி?….” என்றான் உணர்வற்ற குரலில்.
“வேணும்ண்ணே. அம்மாக்கிட்ட கேட்க முடியாது. ஏற்கனவே உங்கல்யாணத்துல இருந்தே சண்டை. என்கிட்டே ஒத்த நம்பரும் இல்ல. இப்ப பேசனும்னு தோணுது. தரியா?…” என்றதும் அபர்னிதாவை நிமிர்ந்து பார்த்தவன்,
“நம்பர் இருக்குது. உனக்கு அனுப்பி வைக்கிறேன்ம்மா. பேசிக்கோ…” என்றவன்,
“நானும் விசாரிச்சதா சொல்லிடு மல்லி…” என்றான் வருத்தம் மேலிட.
“நீங்க சொல்லனுமா? அத நான் பாத்துக்கிடுவேன். நீங்க உறங்குங்க…” என்று சொல்லி போனை வைத்துவிட்டாள் வாசு.
சங்கர் பேசி முடித்ததும் அவளிடம் போனை நீட்ட அவனை உறுத்து விழித்தபடி வாங்கியவள்,
“என்கிட்டே சொல்லாமலே வச்சுட்டா…” என்று வாங்கியவள் மகன் உறங்கிவிட்டதை கவனித்துவிட்டு,
“யார் நம்பர் அனுப்ப போறீங்க? என்கிட்டே சொல்லாம உங்கட்ட கேட்கறா?…” என கேட்க,
“தேவகி நம்பர்…” என்றான் சங்கரும் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல்.
“என்ன? யார சொல்றீங்க? எங்க இன்னொருக்க சொல்லுங்க…” என வேகமாய் அவனின் முன்னால் வந்து கேட்க,
“தேவகி நம்பர். எந்த தேவகின்னு உனக்கு விளக்கம் வேற சொல்லனுமா?…” என்றான் அசட்டையாக.
“என்ன நினைச்சுட்டு இருக்கீங்க அண்ணனும் தங்கச்சியும்? எவ்வளவு தைரியமிருந்தா அவ நம்பரை இவ கேட்பா? நீங்களும் தரேன்னு சொல்றீங்க? அப்போ இத்தனை நாள் அந்த நம்பர் உங்கட்ட இருந்துச்சா? என்னை ஏமாத்திட்டீங்க இல்ல?…” என்று கத்த,
“யார் யாரை ஏமாத்தினா?…”
“நீங்க தான். நீங்களும் உங்க தங்கச்சியும் தான். இதை நான் சும்மாவே விடமாட்டேன். என்னை நிம்மதியாவே இருக்க விடமாட்டீங்கள்ள. என்ன பன்றேன் பாருங்க…” என்று கோபமாய் பேச,
“உன்னால என்னைக்கும் என் நிம்மதியை பறிக்க முடியாது அபி. அது என் மனசு சம்பந்தப்பட்டது. எப்பவும் எனக்குள்ள இருக்கும். இதை நினைச்சு விதவிதமா தப்பா கற்பனை பண்ணி உன் நிம்மதியை தான் நீ குலைச்சுட்டு இருக்க. அது உன்னோட அமைதியை தான் பாதிக்கும்…”
“அதுதான உங்களுக்கும் வேணும். அப்ப தானே தேவகியோட போகலாம்…”
“அப்படி போகனும்னா எப்பவோ போயிருப்பேன். இப்ப வரைக்கும் உன்னோட தானே இருக்கேன்…”
“ஆனா வாழலையே…”
“அது என் கையில மட்டும் இல்லை…” என்றவன் மகனை அணைத்துக்கொண்டு உறங்கி போனான்.
உறக்கம் வராமல் இங்குமங்கும் அலைந்தது அபர்னிதா மட்டுமே. கொஞ்சமும் உறங்காமல் விடிய விடிய தேவகியின் நினைவுகளில் சுற்றியவள் வாசமல்லியின் மாற்றத்தை உணராமல் விட்டுவிட்டாள்.