பூ – 11
காலை எழுந்ததில் இருந்து ஷ்ரவன் ஒவ்வொன்றிற்கும் வாசமல்லியை இங்குமங்குமாக இழுத்தடித்துக்கொண்டே இருந்தான் வேண்டுமென்றே. பொறுத்து பொறுத்து பார்த்தவள்,
“எதுக்குத்தான் இத்தனைவாட்டி கூட்டிக்கிட்டே இருக்கீங்க? சமைக்க வேண்டாமா?…” என்று பொங்கிவிட,
“அதை என் மூஞ்சியை பார்த்து கேளேன். ஏன் யார்ட்டையோ கேட்கற மாதிரி சிலுத்துக்கற?….” என்று புன்னகையை அடக்கிய குரலில் சீண்டலாய் கேட்க,
“அதெல்லாம் முடியாது. வேலை இருக்குது…” என்றவளை மறித்துக்கொண்டு நின்றான்.
“இப்ப என்ன நடந்துருச்சுன்னு ஓடி ஒளிஞ்சிட்டே இருக்க வாசு?…” என கேட்டு வாய்விட்டு சிரித்தவன்,
“இப்படி வெக்கப்பட்டு ஓட ஓடத்தான் உன்னை இழுத்துப்பிடிக்க தோணுது. ஈஸியா இரேன்…” என்று அவளின் கன்னத்தை பற்றியவன் முகம் நோக்கி வர,
“அடுப்புல சாம்பார்…” என அவனை தள்ளிவிட்டு ஓடினாள்.
“கிளம்பற வரைக்கும் கூட இருந்தா என்னவாம்?…” என்று கத்திக்கொண்டே உடையை மாற்றி வந்து சாப்பிட அமர்ந்தான் ஷ்ரவன்.
“அத்தான் சட்னி போட்டு சாப்பிடுங்க…” என அவனுக்கு தட்டில் தோசையை வைத்து சட்னி கிண்ணத்தை நகர்த்த,
“சாம்பார் கொதிக்குதுன்ன?…”என்றபடி சாப்பிட்டான்.
“இருங்க தாளிச்சுட்டு வரேன்…” என முடித்து அதை தூக்கிக்கொண்டு வந்தாள்.
“இன்னைக்கு நாதன் வீட்டுல நைட் டின்னருக்கு கூப்பிட்டிருக்காங்க. போய்ட்டு வரலாம்…” என சொல்ல,
“ஹ்ம்ம், என்கிட்ட காலையிலையே அவங்க வந்து சொன்னாங்க. நானும் அவங்க வீட்டுக்கு போனதில்லை தானே?…” என்று பேசிக்கொண்டே சாப்பிட்டு முடிக்க,
“அப்பறமா வீட்டுக்கு போன் பண்ணி அப்பா எப்படி இருக்காங்கன்னு பேசிக்கோ வாசு. நான் ஸ்டேஷன் போய்ட்டு கால் பண்ணிடறேன். அம்மா கேட்டா சொல்லிடு…” என்று சொல்லி தன்னுடையதை எல்லாம் எடுத்துக்கொண்டு அவன் வெளியேறிவிட்டான்.
ஷ்ரவன் கிளம்பியதும் சாப்பிட்டு முடித்தவற்றை எல்லாம் ஒழுங்குபடுத்தியவள் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு வந்து தனது போனை எடுக்க சங்கர் தேவகியின் எண்ணை அனுப்பியிருந்தான்.
இப்போதே தேவகிக்கு போசுவோமா வேண்டாமா என்று யோசனையுடன் இருந்த வாசு முதலில் மாமியாருக்கு அழைத்து பேசினாள்.
“என்னம்மா சாப்பிட்டாச்சா? ஷ்ரவன் கிளம்பிட்டானா?…” என எடுத்ததுமே அமலா பேச,
“ஆச்சு அத்தை. அவர் கொஞ்சம் முன்ன தான் போலீஸ் ஸ்டேஷனுக்கு கிளம்பினாரு. எனக்குத்தான் வெருக்குன்னு இருக்கு எல்லாரும் கிளம்பிட்டது…” என்று சொல்ல,
“அதுக்கென்னம்மா? அவனுக்கு அடுத்து லீவ் எப்போன்னு பார்த்து இங்க வந்து இருங்க. உன் மாமனாருக்கு இந்த கோயம்பத்தூர் குளிரே தாங்காது. மார்கழி மாசம் நான் தான் அல்லோல்ப்படனும். ஊட்டி ஒத்துக்குமா?…” என்று சொல்லி சிரிக்க,
“வெயிலப்போ வாங்கத்தே. அந்நேரத்துக்கு சேரும் தானே?…”
“இல்லைடாம்மா, எல்லாம் வந்து பாத்தாச்சு. என்ன செய்ய? இப்ப என்ன நாங்க ஊட்டிக்கு வரட்டி என்னவாம்? நீ அதையெல்லாம் நினைச்சு வருத்தப்படாத…”
“ஹ்ம்ம், மாமாவுக்கு இப்ப எப்படி இருக்குதுத்தை? ஊசி போட்டீங்களா?…”
“சங்கர் தான் நாம வழக்கமா பாக்கற டாக்டரை கூட்டிட்டு வந்தான். இன்னைக்கு பரவாயில்லை. நாளைக்கு தெம்பா எழுந்துக்குவார். இன்னைக்கே சும்மா ரெஸ்ட் எடுக்கட்டும்னு தான் விட்டிருக்கு…” என்று அமலா சிரிக்க,
“சரித்தான். பாத்துக்கங்கத்தை…” என்ற வாசு,
“அம்மாவும், அப்பாவும் கிளம்பிட்டாங்களா?…”
“ராத்திரியே போகனும்னு சொன்னாங்க. நாங்கதான் இருக்க சொன்னோம். இன்னைக்கு என்னன்னா எந்திச்சதும் போனாலே ஆச்சுன்னு கிளம்பிட்டாங்க. என்னத்த?…”
“சரி விடுங்கத்த. இத்தன நாளு வீட்ட அப்படியே போட்டுட்டு வந்ததே பெருசு…” என்றவள் மேலும் சில நிமிடம் பேசிவிட்டு நீலகண்டனிடமும் பேசி முடித்து வைத்தவள் ஷ்ரவனுக்கு அழைத்தாள்.
இரண்டு முறைக்கு பின் மூன்றாம் தடவை தான் போனை எடுத்தான் அவன். எடுத்ததுமே,
“ஒருதடவை போன் எடுக்கலைன்னா விட்டுடு வாசு. வேலையா இருந்தா எடுக்க மாட்டேன். ஏற்கனவே உன்கிட்ட சொல்லிருந்தே தானே?…” என்று கடிந்து பேச,
“இல்ல, அத்தைட்ட, மாமாட்ட பேசிட்டேன். அதான் உங்களுக்கு ஞாபகப்படுத்த…” என்றவள் வார்த்தைகளை முழுங்க,
“நான் நேரம் கிடைக்கும் போது பேசிப்பேன். நீ பேசிட்டேல. ஓகே. வேறென்ன?…” என கேட்க,
“ஒண்ணுமில்லை. ஒண்ணுமே இல்லை. போனை வச்சிடறேன். இனி கூப்பிடவே மாட்டேன்…” என்று அவளும் முறுக்கிக்கொண்டு அழைப்பை துண்டித்துவிட அவளின் அந்த கோபத்தை எல்லாம் கணக்கிலெடுக்க சுத்தமாக அவனுக்கு நேரமில்லை.
போனை வைத்துவிட்டு கையில் இருந்த பைலில் ஆழந்து போனான். முக்கியமான ஒரு கேஸ் போய்க்கொண்டு இருந்தது. ஒரு ஆக்ஸிடன்ட் கேஸை ஆராய்ந்துகொண்டு இருந்தான்.
விபத்து என்று முடிக்க சொல்லிய கேஸ் அவனுக்கு பல சந்தேகங்களை தர அது விபத்தல்ல திட்டமிட்ட சதி என்பது கொஞ்சம் கொஞ்சமாய் தெரிய ஆரம்பித்தது. கடந்த சில நாட்களாக அதில் தீவிரமாய் இருந்தவன் இன்று முக்கிய ஆதாரம் பற்றிய கோப்பை தான் பார்த்துக்கொண்டிருந்தான்.
“ஸார், விபூதிமலைல ஒரு சந்தேகத்துக்குரிய ஆள் நடமாட்டம் இருக்கறதா நியூஸ் வந்திருக்குது ஸார்…”
“ஓகே, கோ அஹெட்…” என்று கிளம்பிவிட்டான் ஷ்ரவன்.
இங்கே வாசமல்லி அதே கோபத்துடன் அவனுக்கு சமைக்க ஆரம்பித்திருந்தாள். முடியும் தருவாயில் அபர்னிதா அவளுக்கு அழைத்துவிட இதை எதிர்பார்த்ததை போல அட்டன் செய்தவள்,
“மதினி, ஒரு பத்து நிமிஷசெண்டு போன் போடுங்க. சமைச்சு முடிச்சுட்டு வரேன்…” என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட அங்கே அபர்னிதாவிற்கு சுர்ரென்று கோபம் ஏறியது.
“என்னாச்சு இவளுக்கு? இப்படி பண்ணிட்டிருக்கா நேத்துல இருந்து. தேவகி நம்பர் இவளுக்கு எதுக்கு?…” என்று வாய்விட்டு புலம்பியபடியே இருக்க,
“மம்மி, தேவகி யார் மம்மி?…” என்றான் ஆதவ்.
“யாரோ எவளோ? அவ பேரெல்லாம் நீ ஏன் சொல்லிட்டிருக்க? உன் அப்பா சொல்லிக்குடுத்தாரா?…” என்று மகனை பிடித்து கோபத்தில் உலுக்கினாள்.
“மம்மி கை வலிக்குது. லீவ் மீ. லீவ் மீ…” என்று ஆதவ் சத்தம் போட அதை கேட்டு வந்துவிட்டான் சங்கர்.
“அபி, என்ன பன்ற? விடு அவனை…” என்று வேகமாய் வந்து மகனை அவளிடமிருந்து பிரித்து தன் தோளில் போட்டுக்கொள்ள,
“இட்ஸ் பெய்னிங்…” என்று கண்ணீர் ததும்ப ஆதவ் தனது கைகளை தேய்த்துக்கொள்ள மகனின் சட்டையை விலக்கி கையை பார்த்தான்.
கன்றி போகும் அளவிற்கு சிவந்து போயிருந்தது அபர்னிதா கொடுத்த அழுத்தம். பார்த்தவனுக்கு கோபம் பொங்க மகனின் கண்ணீரை துடைத்தவன் அவனின் கன்னத்தில் முத்தமிட்டவன்,
“அம்மா மூடவுட். நீ பாட்டிக்கிட்ட போய் விளையாடுவியாம். அப்பாவும் வரேன். வெளில போகலாம். ஓகே…” என்றதும் பதிலுக்கு மகனும் தந்தையின் கன்னத்தில் முத்தமிட்டு புன்னகையுடன் கீழே இறங்கி ஓடிச்சென்றான்.
மகன் செல்லும் வரை அவர்கள் இருவரையுமே வெறித்து பார்த்தபடி அபர்னிதா நிற்க,
“நீ என்ன ராட்சசியா? இப்படி நடந்துக்கற?…” என்று மகனின் தலை மறைந்ததும் கதவை சாற்றிவிட்டு வந்து சங்கர் கேட்க,
“ஆமா, என்னை நீங்க எல்லாரும் அப்படித்தான நினைக்கறீங்க. அப்படியே இருந்துட்டு போறேன். எதுக்கு தேவகி திரும்பவும் நமக்குள்ள வரா? அது எனக்கு தெரிஞ்சாகனும். உங்க தங்கச்சிக்கு போன் பண்ணா சாவகாசமா பேசறேன்னு சொல்றா….” என்றவளின் முகத்தில் மிதமிஞ்சிய கோபம் தென்பட சங்கரின் இதழ்கள் லேசாய் புன்னகைத்தன.
“சோ உனக்கு விஷயம் தெரியனும். என் தங்கச்சி இப்போ உனக்கு எதுவும் சொல்லலை. அதான் இந்த கோபமா? அப்போ உனக்கு கோபம் வந்தா பிள்ளைமேல காமிப்ப. இல்ல…”
“என் பிள்ளை, நான் அடிப்பேன் என்ன வேணா செய்வேன். உங்களுக்கு என்ன?…”
“எஸ், உன் பிள்ளை தான். ஆனா அவன் குழந்தை. உன்னோட அர்த்தமில்லாத அடங்காப்பிடாரி ஆட்டத்துக்கு, அதனால வர கோபத்துக்கு என் பிள்ளை வடிகாலா? நோ வே. உன்னை நீ என்னவும் பண்ணிக்கோ. அவன் மேல கை வச்ச…” என்று மிரட்டியவன்,
“என்ன சொன்ன? தேவகி இடையில வராளா? அந்த பொண்ணு என்னைக்கும் யாருக்கும் இடைஞ்சலா வந்ததே இல்லை. இப்பவும் அவ அவ வேலையை பார்த்துட்டு தானே இருக்கா? நீ ஏன் இத்தனை பயப்படற?…” என கேட்க,
“ஆமா பயம் தான். இப்பவும் நீங்க அவளைத்தான நினச்சுட்டு இருக்கீங்க?…” என்று அபி கேட்க அதற்கும் அழுத்தமாய் இதழ்பிரியா புன்னகையை பதிலாய் தந்தவன்,
“உன்னோட இந்த அழுக்கு புத்திக்கு பதில் சொன்னா எனக்கு தான் அவமானம். சொல்லனும்னு அவசியமும் இல்லை…”
“அப்போ அது உண்மை தான். அதான் சொல்லலை. அப்படித்தானே?…” என மடக்க பார்க்க,
“வச்சுக்கோ. எனக்கொண்ணும் பிரச்சனை இல்லை. உனக்கு நிரூபிக்கனும்னு எனக்கு தோணலை…” என்றவன் சிறு தோள் குலுக்கலுடன் அங்கிருந்து அகல இருப்பதனைத்தையும் அவன் மீது தூக்கி வீசவேண்டும் என்று ஆத்திரம் எழுந்தது அபிக்கு.
“போட்டு உடைக்க இது உன் வீடும் இல்லை, என் வீடும் இல்லை. எதாச்சும் பண்ணிட்டு இருந்த…” என்றவன் விரலை நீட்டி நாக்கை மடித்து எச்சரித்தவன் கதவை அறைந்து சாற்ற போக,
“பதில் சொல்லிட்டு போங்க. வாசுவுக்கு தேவகி நம்பரை அனுப்பிட்டீங்களா?…” என்று கேட்க,
“ஆமா, அனுப்பிட்டேன். அதுக்கென்ன இப்போ?…”
“அவ நம்பர் உங்ககிட்ட எப்படி வந்துச்சுன்னு எனக்கு தெரியனும்…”
“தெரிஞ்சு…”
“நீங்க போன்ல பேசிக்கறீங்களா? அதையும் சொல்லுங்க…” என்றவளை வெறுமையுடன் பார்த்தவன் பதில் பேசாமல் அங்கிருந்து கிளம்ப அவன் சென்றதும் இன்னுமே கோபம் அதிகமாகியது அவளுக்கு.
‘என்கிட்டையே அத்தனை திமிரா பேசினா தானே? அப்போ போன்ல பேசுவாளா இருக்கும்’ என்று ஆத்திரமாய் நினைத்தாள் அபர்னிதா.
“அவரை கல்யாணம் பண்ணினதோட உங்க வேலை முடிஞ்சது. என்னோட வாழ்க்கை எப்படி இருக்கனும்னு நீங்க சொல்லாதீங்க. அந்த உரிமையை யாருக்கும் நான் குடுக்க மாட்டேன்…” என நிமிர்வாய் தேவகி அவளிடம் சொல்லியது இன்றும் கண் முன் நிழலாடியது அபர்னிதாவிற்கு.
நினைக்க நினைக்க தலை வேறு அப்படி வலித்தது. சங்கர் தன் கை விட்டு போவதை போல பிரம்மை உண்டாக கோபம் பலமடங்காய் பெருகியது அனைவரின் மேலும்.
அசையாமல் அங்கேயே அமர்ந்திருக்க சற்று நேரத்தில் வாசமல்லி அழைத்துவிட்டாள்.
சமையலை முடித்து எடுத்து வைத்துவிட்டு ஷ்ரவன் வர காத்திருந்தவள் அதற்குள் பேசிவிடலாம் என அழைத்துவிட அபர்னிதா தனது கோபங்களை எல்லாம் ஒற்றிவைத்துவிட்டு பேச ஆரம்பித்தாள்.
“என்ன வாசு, பேசனும்னா கூட டைம் கேட்க வேண்டியதா இருக்குது போல?…” என்று ஆரம்பிக்க,
“சமையலை முடிக்க வேண்டாமா மதினி? அவங்க வந்திருவாங்கல்ல. முடிச்சுட்டு உக்காந்தா சாவாசமா பேசலாமில்ல…” என வாசுவும் இலகுவாகவே பதில் சொல்ல அபிக்கு தான் பற்றிக்கொண்டு வந்தது அவளின் பேச்சில்.
“ஹ்ம்ம், என்னமோ தெரியலை. நேத்தும் இன்னைக்கும் நீ பேசறது எனக்கு புதுசா தெரியுது. நேத்தும் உன் அண்ணன்ட்ட பேசிட்டு அப்படியே போனை வச்சுட்ட. என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லலையே நீ…” என்று சொல்லவும் அவள் எங்கே வருகிறாள் என்ற புரிந்தது வாசுவிற்கு.
“நான் பேசினதே ரொம்ப நேரம்செண்டுதான். அதன உங்களுக்கு உறக்கம் வருமேன்னு வச்சுட்டேன். இது ஒரு விஷயமா மதினி?…”
“ஹ்ம்ம், என்னவோ சொல்ற. சரி இருக்கட்டும். நான் உன் நல்லதுக்குத்தான் எல்லாம் கேட்கறேன்…”
“எனக்கு தெரியாதா மதினி உங்களை பத்தி. சரி சொல்லுங்க…” என்று கேட்க,
“என்ன சொல்ல? இங்க ஆதவ் உன்னை தேடிட்டே இருக்கான். திரும்ப அத்தையை பார்க்க எப்போ போவோம்னு சொல்லிட்டே இருக்கான்…”
“அப்படியா? அவன்கிட்ட குடுங்க நான் பேசறேன். இங்க என் கூடவே இருந்தா அவன் ஸ்கூலுக்கு போக வேண்டாமா? லீவ்ல பார்க்கலாம்னு நீங்க தான சொல்லனும்…” என்று சொல்ல இன்னும் அதிர்ச்சியானாள் அபி.
“நீயா பேசற வாசு?…” என கேட்க,
“ஏன் மதினி? முன்னதான் ஒன்னும் தெரியாது. கூடவே இருக்கட்டுமுன்னு சொல்லுவேன். இப்பத்தான புரியுது எல்லாம்…”
“என்ன புரிஞ்சது? என்ன சொல்ற?…” என அபி பதறினாள். ஒருவேளை தான் ஷ்ரவனுடன் பேசியதை கேட்டிருந்திருப்பாளோ என்ற எண்ணம் வந்து அவளை பதட்டப்படுத்தியது.
ஆனாலும் இன்னொரு மனம் ‘வாய்ப்பில்லை. அப்படி இருந்திருந்தால் தன்னிடம் பேசியிருக்கமாட்டாளே’ என்றும் தோன்ற, தானாக எதுவும் கேட்டுக்கொள்ள வேண்டாம் என்று நினைத்தாள்.
“என்னத்த சொல்ல? ஒழுங்கா படிச்சா தான மதினி உருப்படியா வாழ முடியும். இல்லன்னா கேட்பார் பேச்ச கேட்டு சீரழியத்தான் வேணும்…” என,
“என்ன சொல்ற வாசு? இப்ப என்ன ஆச்சு?…”
“இல்ல படிக்காமத்தான் யாரு எத எதுக்கு சொல்றாங்கன்னு புரியமாட்டிக்குதே. உனக்கு ஒன்னும் தெரியாது தெரியாதுன்னே பேசறாங்க…” என சொல்ல,
“ஷ்ரவன் உன்னை என்ன சொன்னான் வாசு? சொல்லு நான் கேட்கறேன்…” என்றாள் அவள்.
“அவங்க என்ன சொன்னா என்ன மதினி? அதை விடுங்க. நீங்க என்ன பன்றீங்க? அண்ணே எங்க?…” என கேட்க,
“இப்பத்தான் வெளில போனார். அதை விடு, என்னவாம் புதுசா உறவு கொண்டாட போன் நம்பர் எல்லாம் வாங்கியிருக்க?…” என்று ஆரம்பித்தாள் அபி.
“என்ன சொல்றீங்க மதினி? புரியலையே…” என்றாள் வேண்டுமென்றே.
“அதான் தேவகி நம்பரை வாங்கினதை தான கேட்கறேன்…” என்ற அபி,
“ஏற்கனவே ரெண்டு குடும்பத்துக்கும் ஆகாது. இப்ப நீ அவ நம்பரை ஏன் கேட்ட? உங்கம்மாவுக்கு தெரிஞ்ச உன்னை தான் திட்டுவாங்க வாசு. நான் உனக்காக தான் சொல்றேன்…” என்று சொல்ல,
“தெரிஞ்சா நான் பதில் சொல்லிக்கறேன் மதினி. அம்மா புரிஞ்சுக்கும்…”
“அதுக்கில்ல வாசு, அவ திமிர் புடிச்சவ. அவ கூட நீ ஏன் பேசற? அப்படி என்ன பேச்சு?…”
“தேவகி மதினி ரொம்ப நல்லவங்க தான். எனக்கு தெரியாதா?…”
“என்னது நல்லவளா? அவளால தான் எல்லாம். வாசு நான் சொன்னா கேட்ப தானே? அவளோட ஒன்னும் பேசவேண்டாம். பேசாத நீ…” என்று சற்று அதிகாரமாக சொல்லிவிட,
“ஏன் மதினி? உங்களுக்கு மொத இருந்தே அவங்க எனக்கு மதினி தெரியும்ல. நான் பொறந்ததுல இருந்து பழகிருக்கேன். நீங்க இப்ப செத்த வருஷம் முன்ன இருந்து வந்தவங்க. கொஞ்சநாளா பேசாம இருந்ததுக்கு என்னவும் இருந்துட்டு போவட்டும். இப்ப பேசனும்னு தோணுது…”
இப்படி பட்டென்று உன்னை விட அவளை எனக்கு தெரியும் என்று எடுத்தெறிந்து அவள் பேசியது பயங்கர அதிர்ச்சிக்குள்ளாக்கியது அபர்னிதாவை.
“வாசு…” என்று குரலில் அப்பட்டமாய் அதிர்ச்சியை காண்பிக்க,
“என்ன மதினி, சொல்லுங்க…” என்றாள் அவளும் சாதாரணமாக.
“இனி சொல்ல ஒண்ணுமில்லை. அதான் இப்படி பேசிட்டியே. நான் நீதான் எனக்கு முக்கியம்னு நான் நினைச்சா சொந்தக்காரங்க ஒன்னு கூடிட்டீங்க…” என எள்ளலாய் சொல்ல,
“நீங்க அப்படி புரிஞ்சுக்கிட்டீங்களா?…” என்று சாதாரணமாக வாசு சொல்ல,
“நான் வைக்கறேன் வாசு. நீ உன் மதினிட்ட பேசு…”
“சரிங்க மதினி…” என்று அவளும் வைத்துவிட்டாள் பட்டென்று.
‘ஆளாளுக்கு என்னை அவமானப்படுத்தவா செய்யறீங்க?’ என ஆவேசத்துடன் நினைத்தவளின் மொத்த கோபமும் சங்கரிடத்தில் மையம் கொண்டது.
அபர்னிதாவிடம் பேசி முடித்ததும் ஒரு முடிவோடு தான் தேவகிக்கு அழைத்தாள் வாசு.
“யார் நீங்க?…” என்ற சின்ன குரலில்,
“மதினி நான்தான் வாசமல்லி…” என்று சந்தோஷமாய் பேச,
“நல்லா இருக்கியா மல்லி? புது ஊர் எப்படி இருக்குது?…” என கேட்டாள் அவள்.
“நான் நல்லா இருக்கேன். சும்மா உங்ககிட்ட பேசலாம்னு தான் போன் போட்டேன்…”
“என் நம்பர் உனக்கு எப்படி தெரியும்?…”
“அது வந்து…” என அவள் தயங்க அதற்கு மேல் தேவகி பேச்சை வளர்க்கவில்லை.
“சரி மல்லி. வேலை இருக்குது. நான் அப்பறமா இன்னொரு நாள் பேசறேன்…” என்று பேச்சை முடித்துக்கொள்ள வாசுவிற்கு தான் வருத்தமாய் இருந்தது.
திருமணம் முடிந்து சந்தோஷமாக இருக்கவேண்டியவள் இப்படி அண்ணன் குடும்பத்துடன் சேர்ந்து அவர்களின் குழந்தைகளை பார்த்துக்கொண்டு ஒற்றையாய் வாழ்ந்து வருவது கஷ்டமாக இருந்தது.
சங்கரின் திருமண பேச்செடுத்ததும் தன் தந்தையிடம் அவன் விருப்பத்தை சொல்லியிருக்க ஆடிவிட்டார் அவனின் தாயார். தேவகியை வாய்க்கு வந்தபடி வேறு பேச,
“ம்மா, நான் அந்த பொண்ணுட்ட ஒரு வார்த்தை கூட இப்ப வரைக்கும் பேசினதில்லை. எனக்கு புடிச்சிருக்குது. அவ்வளவு தான். கல்யாணம் பண்ணி வைங்கன்னு உங்ககிட்ட தான் வந்து சொல்றேன்…” என்று பேசியவனை ஒன்றும் செய்ய முடியாமல் தேவகியின் பெற்றோரிடம் சென்று பேச அவர்களே இந்த திருமணம் ஒத்துவராது என்றுவிட்டனர் ஒரே முடிவாக.
எங்கும் எதிலும் தேவகியிடம் பேசவோ, அவள் என்ன நினைக்கிறாள் என்றோ கேட்கவே இல்லை. அவளும் எதையும் காட்டிக்கொள்ளாமல் இருக்க சங்கரின் திருமணத்தின் பின்பு தான் தேவகியின் மனது அங்கிருப்பவர்களுக்கு புரிந்தது.
இன்றுவரை மகளை பார்த்து வெதும்பியபடி வாழ்கின்றனர் அந்த பெற்றோர். ஊரார் மாற்றி மாற்றி இதை பற்றி பேசி பேசி அவர்களை காயப்படுத்த எதற்கும் அசைந்துகொடுக்காத கல் போலவே நின்றாள் அவள்.
தேவகி பற்றிய யோசனையிலேயே வாசமல்லி அமர்ந்திருக்க மதிய உணவு நேரமும் கடந்துவிட ஷ்ரவனை அழைக்கவே இல்லை அவன் மீதான கோபத்தில். அவளும் சாப்பிடாமல் இருக்க அதன் பின்னர் வீட்டிலிருந்து சித்ரா அழைத்துவிட்டார்.
அவரிடமும் ஊருக்கு சென்றதை பற்றி விசாரித்தவள் வீட்டில் மாமனாரை பற்றியும் தகவல் சொல்லிவிட்டு,
“ம்மா, தேவகி மதினிட்ட பேசினேன் இன்னைக்கு…” கொஞ்சம் தயங்கியே தான் ஆரம்பித்தாள்.
“ஒழுங்கா பேசிருக்கமாட்டாளே? உனக்கு ஏன்டி இந்த வேண்டாத வேலை எல்லாம்? என்னவோ உங்கண்ணனுக்கு அந்த டவுனுப்புள்ளைய நாமதான் பாத்து கட்டி வச்சதாட்டம் விரைச்சுட்டு திரியறாங்க இன்னைக்கு வரைக்கு…”
“ம்மா, பாவம்மா அவங்க…”
“பாவந்தான். அதுக்கு நாம என்ன செய்ய? உன் பெரியம்மா பகுமானத்துக்கு அவங்க வீட்டுல எடுப்பாங்களா? பாவத்த என்ன பேசிச்சோ உன் பெரியம்மா. அவங்க உன் சங்காத்தமே வேண்டாம்னு வெளிய போக சொல்லிட்டாங்க. ஹ்ம்ம்…” என்று பெருமூச்சு விட்டார்.
“மதினிக்கு எதாச்சும் சம்பந்தம் வந்துச்சா?…”
“வந்தா மட்டும் உடனே சபையேறி தாலி வாங்கிப்பாளா? அவ மனசு கொதிக்கிற கொதிக்குத்தேன் உன் பெரிம்மாவுக்கு இப்படி ஒரு வெஷம் மருமகளா வந்து வாச்சிட்டா…” என்று பேச்சுவாக்கில் சித்ரா சொல்லிவிட,
“ம்மா…” என்று வாசு அதிர்ந்து போனாள்.
“இங்காருத்தா மல்லி, இம்புட்டுநா எப்படியோ? ஆனா அங்க வந்த ரெண்டு நாளுல அந்த அபி புள்ளைய பத்தி ஓரளவு கணிச்சுட்டேன். அதுக்கிட்ட பெரிய தப்பு இருக்கு. சத்தமில்லாம குடும்பத்துக்குள்ள கலகத்த பண்ணுது. நீ சூதானமா இருடி…” என்று தாயாய் அவரின் மனம் பரிதவித்தது.
“நான் பார்த்துக்கறேன்ம்மா…” என்று சொல்லியவள் மேலும் பேசும் முன்,
“உங்கப்பா வந்துட்டாரு. போயி சாப்பாடு வைக்கறேன். அப்பறமா கூப்பிடு…” என சொல்லி வைத்துவிட்டார் அவர்.
காரணகாரியமின்றி எதுவும் நிகழ்வதில்லை.