பூ – 12
விடியும் நேரம் தான் வீடு வந்து சேர்ந்தான் ஷ்ரவன். வரும் போதே கோபத்துடன் வந்தவன் வாசமல்லியை எழுப்பவே இல்லை. முதல் நாளை போலவே சோபாவில் படுத்து தூங்கிக்கொண்டு இருந்தாள்.
டிவி ஓடிக்கொண்டு இருந்தது. கிட்சனிலும் விடி விளக்கு போல எரிந்துகொண்டிருந்தது. அவன் வந்ததும் கண்ணை திறந்தவள் ஏதாவது பேசுவான் என்று பார்க்க அவன் அவளை பார்க்கவே இல்லை.
தானாக எதுவும் பேசவும் தோன்றாமல் அவள் அமர்ந்திருக்க அவளை முறைத்து பார்த்தவன்,
“உள்ள வான்னு சொன்னா தான் வருவியோ?…” என்று சத்தம் போடவும் ஒன்றும் பேசாமல் எழுந்து சென்று அறையில் படுத்துக்கொண்டாள்.
“செய்யறதெல்லாம் செஞ்சுட்டு உனக்கு கோபம் வேற வருதா…” என அவளுக்கு கேட்கும் படி பேசியவன் டிவியை ஆஃப் செய்துவிட்டு உள்ளே வந்து உடை மாற்றிவிட்டு வந்து படுக்க அவன் பக்கம் திரும்பவும் மறுத்தாள் அவன் மனைவி.
“உனக்கு இது அதிகம்டி…” என்று முரட்டுத்தனமாய் அவன் பக்கம் திருப்ப கண்களை இறுக்கமாய் மூடிக்கொண்டாள்.
“போன் பண்ணாதன்னு சொன்னா ஊரே எனக்கு கால் பன்ற மாதிரி செய்வியா? செய்யறதையும் செஞ்சுட்டு எனக்கே முகத்தை திருப்பற நீ?…” என்று அவளின் காதை பிடித்து திருக்க,
“வலிக்குதுத்தான்…” என அவனின் கையை தட்டிவிட்டாள்.
“நிம்மதியா வேலை பார்க்க முடிஞ்சதா உன்னால? நல்லா வலிக்கட்டும்…” என்று இன்னும் இழுத்து அணைத்தபடி காதை திருக,
“என்கிட்டே ஒழுங்கா பேசிருந்த நான் எதுக்காம் எல்லாருக்கும் பேச சொல்ல போறேன்?…” என அவளும் திமிறினாள் அவனிடத்தில்.
“என்ன பேசலை உன்கிட்ட? சொன்னேன் தான வேலை இருக்குன்னு. புரியாதா? அப்பா, அம்மா, அத்தான்னு எல்லாரும் என்னனு கேட்கறாங்க. கொடும இதுல உன் அண்ணனும் சேர்ந்து கேட்கறாரு…” என்றவனின் கோபத்தில் வாசமல்லி லேசாய் சிரிக்க,
“செம்ம கோவத்துல வந்தேன்…” என்றவனின் கைகள் அவளின் தாடையை இறுக்கமாய் பற்ற,
“இதான் கோவமா?…” என்று இன்னும் கிளுக்கி சிரித்தாள் வாசு.
“இதுவும் கோவம் தான். நேத்து தான் முழுசா சம்சாரி ஆகிருக்கேன். இன்னைக்கு நேரத்துக்கு வீட்டுக்கு வர முடியலைன்னு கோவம். இதுவும் கோவம் தான?…” என்றவன் தனது கோபத்தை அவளிடம் காண்பிக்க,
“ஒன்னும் வேண்டாம். சாப்பிட தான வரீங்களான்னு கேட்டேன். அதுக்கு அத்தனை பேச்சு…”
“சரி, இப்ப பேசலை…”
“அப்போ பேசினீங்க தானே?…”
“ப்ச், இப்ப என்ன? அதை விடு. நீ சாப்பிட்டியா?…” என சமாதானம் செய்வதை போல மெதுவாய் கேட்க,
“ஹ்ம்ம், ரொம்ப நேரம் பார்த்தேன். பசி வேற. அதான் சாப்பிட்டுட்டேன். நீங்களும் சாப்பிடத்தான் செஞ்சீங்க. அண்ணா சொல்லுச்சு…”
“அண்ணனை வச்சு என்னை பாலோ பன்ற. உன்னை என்ன செய்யலாம்?…”
“என் புருஷன் எனக்கு பதில் சொன்னா நான் ஏன் இன்னொருதர்ட்ட சொல்லி பேச சொல்ல போறேன்…” என்றவளின் கோபமும், தவிர்ப்பும் அவனுக்கு ஒரு பொருட்டே இல்லை என்பதை போல ஷ்ரவன் அவளோடு இழைய,
“விடிஞ்சிருச்சு. நான் எழுந்துக்கறேன்…” என்று அவனை தள்ளிவிட்டாள் வாசு.
“இப்பத்தான நான் தூங்க வந்திருக்கேன். தூங்கு. டிபன் வெளில சொல்லிக்கலாம்…” என்று அவளையும் சேர்த்து இழுத்துக்கொண்டான் ஷ்ரவன் தன்னோடு.
எழுந்து குளித்து முடித்து எளிமையாய் சேமியா கிச்சடி செய்தவள் ஷ்ரவனுக்காக காத்திருக்க இடுப்பில் பெல்ட்டை போட்டு ஷர்ட்டை இன் பண்ணிக்கொண்டே வந்தவன்,
“இன்னைக்கும் கால் பண்ணிடாத. இந்த கேஸ் விஷயமா கோர்ட்டுக்கு போகனும். இன்னைக்கும் லஞ்ச்க்கு வர மாட்டேன். புரியுதா?…”
“இனி கால் பண்ணினேனா என்னனு கேளுங்க…”
“பார்க்கலாம், பார்க்கலாம்…”
“என்ன பார்க்கலாம்? நைட்டாச்சும் போன் பண்ணி சொல்லிருந்தா நாதன் அண்ணே வீட்டுக்கு நானாச்சும் போய்ட்டு வந்திருப்பேன்ல…” என்று கேட்க,
“தனியாவா?…” என முறைத்தான் ஷ்ரவன்.
“ப்ச், அவங்களோட வெளில நடக்க போறேன் தான? வீட்டுக்கு போனா என்ன?…”
“அதுவும் இதுவும் ஒண்ணா வாசு? உன்னை என்னதான் பன்றது?…”
“ஒன்னும் பண்ண வேண்டாம்…”
“சொல்றது ஒன்னு செய்யறது ஒன்னு…” என்று விஷமமாய் ஷ்ரவன் சிரிக்க,
“நீங்க முதல்ல கிளம்புங்க. எல்லாம் பேசிட்டு கடைசில என்னை தான் சொல்வீங்க…”
“இருக்கலைன்னாலும் சண்டை போடற. இருந்தாலும் சண்டை போடற. டிபிகல்ட் பொண்டாட்டியா நீ?…”
“அப்டின்னா?…”
“அப்டின்னா யூ பொண்டாட்டி ஆல் பொண்டாட்டி மாதிரி…” என்று சொல்லியவன் கை கழுவ செல்ல அவன் என்ன சொல்லி சென்றான் என்பதை யோசித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் அவள்.
“தலையில மிச்சம் மீதி இருந்தா யோசிச்சு வை. ஈவ்னிங் சீக்கிரம் வரேன். வெளில போய் பேசலாம்…” என்று சொல்லிவிட்டு தனது தொப்பியை எடுத்துக்கொண்டு செல்ல அவனின் பின்னோடே சென்று கை அசைத்து அவனை அனுப்பிவிட்டு வந்தாள்.
அவனிடம் பேசவேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருந்தவள் மறந்துவிட்டிருக்க அன்று மாலை ஷ்ரவன் வரவும் கிளம்பி வெளியே சென்றனர்.
சொல்லலாமா வேண்டாமா என யோசித்து யோசித்து அமர்ந்திருக்க அவளை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டிருந்த ஷ்ரவன்,
“இன்னுமா முடியலை?…” என்று கேட்க,
“என்னது முடியலை? அத்தான் புரியற மாதிரி பேசுங்க. உங்கட்ட ஒன்னும் சொல்லவும் செய்யனும்…” என்றதும் அவளை பார்த்தவன்,
“சொல்லலாமே. வீட்டுலையே சொல்லிருந்தா அங்கயே என்னன்னு கேட்டிருந்திருப்பேன். இங்க வந்துட்டு சொல்லனும்னா?…”
“ப்ச், சொல்லனும் தான். ஆனா அப்ப மறந்துட்டேன். திரும்ப மறந்துட்டா? அதான் சொல்லிடறேன்…”
“ஓகே, ஆனா அங்க வந்து சொல்லு….”
“அங்கன்னா? எங்க கூட்டிட்டு போறீங்கன்னே சொல்லலை…”
“பைக்காரா வாட்டர் பால்ஸ் போய்ட்டிருக்கோம். அங்க வந்து பாரு. பேசிட்டே போகவும் நல்ல பிளேஸ். பார்க்கவும் நல்லா இருக்கும்…” என்று சொல்ல,
“ஹ்ம்ம், அதுவரைக்கும் தலையை சாய்ச்சுக்கறேன்…” என்று கண்ணை மூட,
“ஒரே தள்ளு. இங்க இருந்தே உன்னை உருட்டி விட்ருவேன். ஒழுங்கா பார்த்துட்டு வா…” என மிரட்ட அவள் கண்ணை மூட அவன் பேச என்று வாக்குவாதத்திலேயே வரும் இடம் வந்து சேர்ந்தனர்.
கிட்டத்தட்ட அங்கே விசிட்டர்ஸ் டைம் முடியும் நேரம் நெருங்க ஷ்ரவனின் அதிகாரத்தின் பெயரில் அவர்களை உள்ளே அனுமதித்தனர்.
நீர்வீழ்ச்சியை பார்த்து முடித்து ஓரிரண்டு பேரே திரும்பி வந்துகொண்டிருக்க வாசுவின் கையை பற்றிக்கொண்டே இறங்கி நடந்துகொண்டிருந்தான் ஷ்ரவன்.
“இப்ப கூட்டிட்டு வந்திருக்கீங்க. எல்லாரும் போய்ட்டாங்க…”
“அதனால என்ன? அதான் இப்ப கூட்டிட்டு வந்தேன்…” என்றவன் அவ்விடத்தை பற்றி சொல்லிக்கொண்டே வர உம் கொட்டியபடி கேட்டுக்கொண்டே வந்தாள் வாசு.
சற்று நெருங்கியதுமே தண்ணீர் செல்லும் சத்தம் கேட்கவுமே அவனின் கையை உதறிவிட்டு வேகமாய் ஓட சிரித்தபடி தானும் சென்றான்.
“இவ்வளவு நேரம் குளிருதுன்னு சொல்லிட்டு இப்ப இந்த ஓட்டம் ஓடி வர…” என்று வந்தவன் அவளை தோளோடு அணைத்துக்கொண்டான்.
“இந்த இடம் பிடிச்சிருக்கா?…” என கேட்டு அவளின் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தில்,
“ஹ்ம்ம், வாசுவுக்கு பிடிச்சிருக்கு தான் போல. வாயை திறந்து சொன்னா என்னவாம்?…”
“எனக்கு பிடிச்சிருக்கே. உங்களை மாதிரியா? உங்களுக்குத்தான் என்னை பிடிக்காது…” என எதுவோ சொல்ல ஆரம்பித்து இப்படி சொல்லி சட்டென நாக்கை கடித்தவளாக அவனை பார்க்க அவளை முறைத்துக்கொண்டு தள்ளி நின்றான்.
“அச்சோ கோவமாகிட்டீங்களா? கை போட்டுக்கோங்க அத்தான்…” என அவனின் கையை எடுத்து தனது கழுத்தின் மேல் போட்டுக்கொண்டவள்,
“நான் வேணும்னு சொல்லலை. தானா வந்திருச்சு…” என பாவம் போல சொல்ல,
“போகலாமா?…” என்றான் வெற்று குரலில்.
“சத்தியமா தானா வந்துருச்சு. சொல்லனும்னு இல்லைத்தான்…” என்றாள்.
“ப்ச், கிளம்புவோம் வாசு. டைம் ஆகிடுச்சு. இருட்டிரும்…” என்று முன்னால் நடக்க ஆரம்பிக்க அவளுக்கு அத்தனை கஷ்டமாக போனது.
எத்தனை மகிழ்ச்சியுடன் தன்னை அழைத்து வந்தான். ஒற்றை வார்த்தையில் இப்படி செய்துவிட்டோமே என்று கவலையுடன் அவனை பார்த்தபடியே நடந்தவள் அந்த உயரத்தை கவனியாமல் நடக்க கால் இடறி கீழே சாய்ந்தாள்.
“வாசு பார்த்து…” என்று அவளை தாங்கிக்கொண்டவன் அவளின் காலை பார்க்க கால் விரல் நகம் லேசாய் விலகி இருந்தது.
“எதுவும் புரிஞ்சுக்கறதில்ல. லூஸாடி நீ? கீழே பார்த்து நடக்கமாடியா? என் மூஞ்சில என்ன இருக்குது?…” என்று திட்ட,
“இப்படி திட்ட வேணா செய்யுங்க. அது ஏன் மூஞ்சியை தூக்கிவச்சுட்டு போனீங்க அத்தான்?…” என்றவளை முறைத்தான்.
“இதுல ஒன்னும் குறைச்சல் இல்லை. நடக்க முடியுமா?…”
“ஹ்ம்ம், நடப்பேன்…”.
“எழுந்துக்கோ. கை பிடி…” என்று தன்னுடன் அணைத்துக்கொள்ள மொத்தமாய் அவன் மேல் சாய்ந்தாள்.
“ப்ச், என்னையும் தள்ளிடாம தள்ளி வா வாசு. இப்படி சாஞ்சா இங்கயே இன்னைக்கு முழுக்க இருக்க வேண்டியது தான்…” என்று அவளை நேராக பிடித்துக்கொண்டு நடந்தவன் மனதில் வாசமல்லியின் பேச்சு தான் ஓடிக்கொண்டு இருந்தது.
சேர்ந்து வாழ ஆரம்பித்த பின்பும் இப்படி ஒரு எண்ணம் அவளின் மனதில் ஆழ புதைந்திருப்பது நல்லதில்லையே என்று தான் நினைத்தான்.
“வாசு…”
“ஹ்ம்ம் சொல்லுங்க அத்தான்…”
“எங்களை பத்தி என்ன தெரியும் உனக்கு?…” என்றான் அவளின் கையை பிடித்து நடந்துகொண்டே.
“யாரை பத்தி? எங்களைன்னா? என்ன தெரியும்னா?…” என அவள் பதில் கேள்வி கேட்க, முதலில் பொறுமையாய் அவளிடம் பேசுவதென்று நினைத்தான்.
“எங்களைன்னா என்னை, அப்பாவை, அம்மாவை எல்லாரையும் தான்…”
“தெரியும், உங்க தாத்தா ஊர்ல வேலை சரிவர அமையாம மில்ட்ரில சேர்ந்துட்டாரு. மாமாவும் இந்தபக்கம் வராம அங்கயே இருந்துட்டாருன்னு சொன்னாங்க அப்பா. அதான். வேற என்ன?…”
“ஹ்ம்ம், நாங்க இருந்தது ஹரியானா. தெரியும் தானே?…”
“தெரியும். பாத்திருக்கேன்…” என்று சிரிப்புடன் சொல்ல,
“எங்க எப்போ? நீ அபி மேரெஜ் முடியவும் கூட அங்க வரலையே…” என்று ஆச்சர்யமாக கேட்க,
“பாண்டியம்மா வெறியானா படுத்துரும் ஹரியானா…” என சொல்லி சிரிக்க,
“அறிவு அறிவு. அப்படியே பத்தரமா வச்சுக்கோ…” என நறுக்கென்று தலையில் குட்டியவன்,
“நேரம் கிடைக்கும் போது போகலாம்…”
“ஹ்ம்ம், சரி. சொல்லுங்க த்தான்…”
“என்னத்த சொல்ல? எப்ப பாரு பிடிக்கலைன்னு சொல்லிட்டே இருக்க. ஏன் எதுக்குன்னு யோசிக்காம…” என சலிக்க,
“இனி சொல்லமாட்டேன்…” என்றாள் வேகமாய்.
“இப்படித்தான் சொல்ற. ஆனா சொல்லுவ. உன் வாய் இருக்கே…” என்றவன்,
“நான் வளர்ந்தது வாழ்ந்தது எல்லாமே வேற இடம் வாசு. தாத்தாவுக்கு அங்கயே வேலைன்னு இருந்ததால அப்பாவால இங்க வந்து போய் இருக்க முடியலை. எனக்கு அதை பத்திய நினைப்பே இல்லைன்னு வச்சுக்கோ. இந்த ஊர் எப்போவாச்சும் அப்பா சொல்லி கேட்டிருக்கேன். பெருசா எந்த ரியாக்ட்டும் பண்ணமாட்டேன்…”
“ஹ்ம்ம்…”
“இப்படி படிப்பு, பிடிச்ச வேலைன்னு எதிர்காலத்தை பத்தி எப்படியெல்லாமோ நினைச்சுட்டு இருந்தப்போ உன்னோட கல்யாணம்னு பேச்சு. எனக்கும் ஷாக் தானே? திடீர்ன்னு கல்யாணம். யார் என்னன்னு தெரிஞ்சுக்காம என்னோட சைட் கேட்காம…” என்று நிறுத்தியவன்,
“உனக்கு புரியுதா?…” என்று அவளின் முகம் பார்த்து கேட்க,
“ஹ்ம்ம்…” என வேகமாய் தலை ஆட்டினாள்.
“தெளிவா சொல்றேன் வாசு, ஒரு வேளை உங்க ஊருக்கு நான் அடிக்கடி வந்து பழகி உன்னை உன் பிஹெவியரை பிடிச்சு போய் கூட நானே விரும்பி உன்னை கல்யாணம் பண்ணியிருந்திருப்பேனோ என்னவோ? ஆனா அதுக்கு எந்த வாய்ப்பும் யாரும் தரலை…”
“தமிழ்நாட்டுக்கு வந்தேன். ஒரு தடவை மட்டுமே உன்னோட ஊருக்கு வந்து உனக்கு பிடிச்சதால இந்த கல்யாணம். எங்கப்பாவுக்கு அவர் ஊரோட ஒரு பிணைப்பு வேணும். அபிக்கு அவ புருஷன் பக்கத்துல ஒரு பிடி வேணும். உனக்கு நான் வேணும். ஆனா என்னை யாருமே யோசிக்கலை…” என்று சொல்ல,
“மதினிக்கா?…” என்று அவனை பார்க்க,
“உன்கிட்ட அதையுமே பேசனும். இன்னைக்கு வேண்டாம். ஆனா பேசுவோம். இப்போ நான் முழுசா சொல்லி முடிச்சிடறேன்…” என்றவன்,
“உண்மையை சொல்லனும்னா உன்னோட இந்த பேச்சு எல்லாமே எனக்கு பிடிச்சிருக்குது தான். ஆனா மாத்திக்கனும்னு நீ முயற்சி பண்ணினது தான் எனக்கு பிடிக்கலை. பிடிக்கவும் பிடிக்காது. நீ எப்பவும் நீயா இரு. யார் பேச்சையும் கேட்காம நீ நீயா இரு. அதுவே போதும். என்னவோ எனக்காக நீ மாறறது எனக்காக தியாகம் பன்ற மாதிரி எனக்கு பிடிக்கலை…”
“இல்லைத்தான், இனிமே அப்டி இல்லை. நிஜமா…”
“இல்லைன்னா சரிதான். எதாச்சும் விளங்குச்சா?…” என கேட்க அதற்கும் பெரிதாய் தலையை ஆட்டினாள் வாசமல்லி.
“என்ன புரிஞ்சதோ. எதோ சொல்ற. நம்பிட்டேன்…” என்றவன் பேசி முடிக்க மேலே ஜீப் இருக்குமிடம் வந்து சேரவும் சரியாக இருந்தது.
இருள் பரவ ஆரம்பிக்க குளிரும் வாட்டியது. ஜீப்பை எடுத்தவன் அந்த காட்டுப்பாதையை கடந்து டவுனிற்குள் வர வாசமல்லி அலுப்பில் உறங்கிப்போயிருந்தாள்.
சாப்பிடுவதற்காக அவளை எழுப்ப வேகமாய் கண்விழித்தவள் எங்கு இருக்கிறோம் என்று தெரியவே நேரம் பிடித்தது.
“அவ்வளவு டயர்டா உனக்கு? சாப்பிட வேண்டாமா? இறங்கு கீழே…” என்று சொல்லவும் இறங்கியவள் கையை ஜெர்க்கினுக்குள் நுழைத்துக்கொண்டாள்.
“அத்தான் வீட்டுக்கு போகலையா?…” என்று பற்கள் தந்தியடிக்க தலையை ஆட்டியபடி பேச,
“கால் வலிக்கும்ல. இதோட வீட்டுக்கு போய் சமைக்க முடியாது. அதனால இங்கயே சாப்பிட்டு போய்டுவோம்…” என்று சொல்ல அங்கே சாப்பிட்டுக்கொண்டே,
“அத்தான் தேவகி மதினிட்ட பேசினேன்…” என்றதும் வியப்பாய் பார்த்தவன்,
“என்ன திடீர்ன்னு அவங்கட்ட?…” என்றான்.
“நீங்க கேட்டதும் மனசுக்கு ஒருமாதிரியாயிட்டு. அதான் பேசினேன்…”
“நல்லது. எப்படி இருக்காங்க?…”
“இருக்காங்க. ரெண்டு வார்த்தை தான் பேசினேன். உனக்கு யார் இந்த நம்பர் குடுத்ததுன்னு கேட்டாங்க. நான் பதில் சொல்லலையா. அவங்களுக்கு புரிஞ்சிருச்சு போல. அப்பறமா பேசறேன்னு சொல்லி வச்சுட்டாங்க…”
“அதெப்படி? புரிஞ்சது?…”
“அதான் எனக்கும் தெரியலை. ரெண்டு பேரும் பேசி கூட பார்த்ததில்லை நான். ஆனா அண்ணனுக்கு அம்புட்டு இஷ்டம். இப்பவும் மதினி கல்யாணம் பண்ணாம இருக்கறது அண்ணன நினச்சுதான்னு ஊருக்குள்ள பேசிக்கறாங்க…”
“ஓஹ், இது வேறையா?…”
“ஆமா எல்லாருக்குமே தெரியும். அண்ணனுக்கு கல்யாணம் முடிஞ்ச பின்னால அபி மதினி தேவகி மதினிய கோவில்ல பாத்து பேசினாங்க. என்னன்னு எல்லாம் தெரியலை. தனியா பேசினாங்க. பேசி முடிச்சு வரப்ப தான் அபி மதினி அழுதுட்டே வந்தாங்க…”
“ஏனாம்?…”
“அவங்க நல்லதுக்கு பேசினதுக்கு தேவகி மதினி திட்டிட்டாங்கன்னு சொல்லி மட்டும் தான் அழுதாங்க. அப்ப வேற ஒன்னும் சொல்லல. எனக்கு கூட அதுல கோவமாத்தான் வந்துச்சு. நல்லது சொல்ல போனா திட்டுவாங்களான்னு…”
“ஹ்ம்ம். சரி சாப்பிடு. வீட்டுக்கு போய் பேசிப்போம்…” என்றவன் அந்த யோசனையிலேயே சாப்பிட்டு முடித்து வீட்டு வந்து சேர வந்ததும் வாசமல்லி அப்படியே சென்று படுத்துக்கொண்டாள்.
“உன்னையெல்லாம ட்ரெக்கிங் கூட்டிட்டு போனா என் நிலைமை அவ்வளோ தான் போல…” என அவன் புலம்ப,
“தொணதொணன்னு இல்லாம இருங்க அத்தான், தூங்கனும்…” என்று அருகில் படுத்திருந்தவன் வாயை கையால் மூடியவள் அப்படியே உறங்கி போனாள்.
ஷ்ரவனுக்கு அந்த வாழ்க்கை எதிர்பாராமல் திருப்பங்களை தந்திருந்தாலும் அதை முழுமனதாய் ஏற்றுக்கொண்டு விரும்பியே வாழ ஆரம்பித்தான்.
ஓரளவு வாசமல்லியும் அவனை புரிந்துகொண்டு நடந்தாலும் அவ்வப்போது இந்த பிடித்தம் என்னும் வார்த்தை பல சண்டைகளை உண்டாக்கி கொண்டே தான் இருந்தது.
இரண்டு மாதங்கள் சென்றதே தெரியாமல் நாட்கள் விரைந்திருக்க அபர்னிதாவும் வாசுவிடம் பேச முயற்சிக்க அவள் முடிந்தளவு ஏதாவது காரணம் சொல்லியே தவிர்த்துக்கொண்டே தான் இருந்தாள்.
அதில் இன்னுமே அபர்னிதாவிற்கு கோபம் தூண்டப்பட எல்லோருமே தன்னை பற்றி அறிந்து விலக்கி வைப்பதாகவே மனதிற்குள் நினைத்துக்கொண்டவளுக்கு எல்லாமே அதிருப்தியை தந்தது.
பசி, உறக்கம் இழந்து எப்போதும் ஏதோ யோசனையிலேயே இருக்க அவளின் நடவடிக்கைகளின் உச்சம் இன்னும் அதிகமாகிக்கொண்டே இருக்க அதில் உண்மையில் சங்கர் தான் பயந்து போனான்.
அதனை கொண்டே மகனை முடிந்தளவுக்கு பெற்றோர் உடன் இருந்து பார்த்துக்கொள்ளுமாறு கவனித்துகொண்டான்.
நாளுக்கு நாள் அபர்னிதா மனநிலை முற்றிலும் வேறாகி வந்துகொண்டே தான் இருந்தது.