பூ – 14
திடீரென்று சங்கர் வந்து நின்றதும் அபர்னிதா அவனை எதிர்பார்க்காத அதிர்ச்சியில் வாயடைத்து நிற்க,
“நாளைக்கு கோவிலுக்கு போகனும். அதனால அபியை கூட்டிட்டு போகலாம்னு வந்திருக்கேன்…” என்று சங்கர் சொல்லவும் ஷ்ரவன் அழுத்தமாய் அபியை பார்த்தான்.
“நாளைக்கு தான் நாங்க வரப்போ கூட்டிட்டு வந்திருப்போம்ல அண்ணே. அத்தை போன போட்டு சொன்னாங்க மதினியை கூட்டிட்டு வர சொல்லி…” என வாசமல்லி சொல்லவும்,
“இருக்கட்டும்மா, எனக்கும் அங்க ஆதவ் இல்லாம ஒரு மாதிரி இருந்துச்சு. அதான் கிளம்பி வந்துட்டேன். டூ ஹர்வ்ஸ் தானே? இதுல என்ன கஷ்டம்?…” என்றவன்,
“இன்னும் தூங்காம என்ன பன்றீங்க?…” என்றான் மகனை தூக்கி தோளில் வைத்துக்கொண்டு.
“இதோ இப்ப தான் துணியை எடுத்து வச்சுட்டு இருந்தேன். நீங்க வந்துட்டீங்க. சாப்பிடறீங்களாண்ணே?…”
“இல்லம்மா, பசிக்கலை. கொஞ்சம் தண்ணி குடு. போதும்…” என்று சொல்லிவிட்டு சோபாவில் அமர்ந்தவன் மகனுடன் பேச,
“வாசு நீ பழம் கட் பண்ணி எடுத்துட்டு வா எனக்கும் சேர்த்து. பாலையும் காய்ச்சிடு…” என்ற ஷ்ரவன் சங்கரின் அருகில் அமர்ந்துகொண்டான்.
“புருஷனும், பொண்டாட்டியும் இதுல ஒன்னு. சொல்லாம கிளம்பி வரதுல…” என ஷ்ரவன் சொல்ல,
“தலையெழுத்து, வேற என்ன சொல்ல?…” என சொல்லியபடி அபியை பார்க்க அவள் அவனிடம் ஒரு வார்த்தையும் பேச முயற்சிக்கவில்லை. நின்ற இடத்திலேயே நின்றாள்.
சங்கர் வேலை நிமித்தமாக ஷ்ரவனிடம் பேசிக்கொண்டு இருக்க பழங்களை கட் செய்து எடுத்து வந்த வாசு,
“மதினி நீங்களும் எடுத்துக்கோங்க…” என அவளுக்கு ஒரு தட்டை நீட்டினாள்.
“எனக்கு வேண்டாம். நீங்க சாப்பிடுங்க…” என்ற அபி,
“ஆதவ், வா மம்மிட்ட…” என்று மகனை அழைக்க அவன் தந்தையின் தோளை கட்டிக்கொண்டு மாட்டேன் என்று தலையசைத்தான்.
“ஆதவ்…” என்று வேகமாய் கத்தினாள் அதற்கும்.
“ப்ச், இப்ப என்ன? என்னோட தான இருக்கான்? ஏன் கத்தற?…” என சங்கர் கடுமையாக சொல்ல அவனை வெறுப்பாய் பார்த்தவள்,
“என் மகனை நான் கூப்பிடறேன்…”
“அபி, பேசாம இரேன். அத்தான் இப்ப தான் வந்திருக்கார். ஆதவ் அவரோட இருந்தா என்ன? இவ்வளவு நேரம் அவனை கண்டுக்காம இருந்துட்டு இப்ப என்ன உனக்கு?…” என்றான் ஷ்ரவன் சங்கரின் முன்னிலையிலேயே.
“அத்தான், நீங்க சும்மா இருங்க…” என்று முறைத்த வாசு,
“நீங்க இருங்க மதினி…” என அவளுடன் அமர்ந்துகொண்டாள்.
இவர்கள் பேசிக்கொண்டிருக்க ஆதவ்விற்கு பாலை ஆற்றியவள் அவனிடம் நீட்ட அதையும் சங்கர் வாங்கி மகனுக்கு புகட்டினான்.
“வாசு உன் போன் அடிக்குது பாரு…” என பேசிக்கொண்டிருந்த ஷ்ரவன் கிட்சனில் அவளின் மொபைல் சத்தம் கேட்டு சொல்ல,
“அட ஆமா, சத்தமே சரியா கேக்கலையே…” என்று எழுந்து சென்றாள்.
“சொல்லுங்க மதினி…” என்றவளின் குரலை இங்கு கேட்ட அபியின் உடல் விறைக்க பார்வை சங்கரை தான் நோக்கியது.
“நேத்து பேசலாம்ன்னு போட்டேன். நீங்க எடுக்கலையா அதான். ஹ்ம்ம் சாப்பிட்டோம். நல்லா இருக்காரு அவரும்…” என்று இப்படி பேசிக்கொண்டே ஹாலுக்கு வந்தவள் ஷ்ரவன் யாரென்று பார்த்த பார்வையில்,
“தேவகி மதினி…” என்று சொல்லிவிட்டு தன்னைப்போல சங்கரை பார்க்க அவன் மகனிடம் கவனத்தை வைத்திருந்தான்.
என்னதான் பார்க்காததை போல இருந்தாலும் காதில் விழ தானே செய்கிறது. கூடாது கூடாது என்று தோன்றினாலும் மனது பதைபதைக்கத்தான் செய்தது அவனுக்கும்.
மூச்சை ஆழ இழுத்துவிட்டுக்கொண்டவன் தன்னை சமன்படுத்த பார்க்க அபியின் கழுகு கண்களுக்கு அவனின் உணர்வுகள் தப்பாமல் விழுந்தது.
“வாசு வந்தவங்களை கவனிக்காம இந்நேரம் உனக்கென்ன பேச்சு? எனக்கு தூங்கனும். வா…” என்றவள் வேகமாய் போனை பறிக்க வர,
“அபி…” என அதட்டினான் சங்கர்.
இங்கே இந்த குரல்களை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த தேவகிக்கோ அந்த நேரம் அழைத்திருக்க கூடாதென்று தோன்ற,
“வைக்கறேன் மல்லி. நான் இன்னொருநாள் பேசறேன்…” என்று சொல்லி வைத்துவிட்டாள்.
“என்னாச்சு?…” என ஷ்ரவன் கேட்க,
“சத்தம் கேட்டிருக்கும் போல, வச்சுட்டாங்க…” என வருத்தத்துடன் சொல்லியவள் ஒன்றும் பேசாமல் அபியை பார்த்துவிட்டு உறங்கும் அறைக்கு செல்ல,
“மல்லி எங்க போற?…” என்றான் சங்கர்.
“தூங்கறதுக்குண்ணே. மதினி சொன்னாங்கல்ல. அதான்…” என்றாள்.
அவளுக்கும் அபியின் மேல் எரிச்சலும் கோபமும் அப்படி மண்டியது. ‘என்ன இது செயல்?’ என்று வாய் வரை கேட்க வந்தாலும் தங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள் என்று மரியாதை நிமித்தம் பொறுமையாக இருந்தாள்.
அதிலும் அண்ணன் வேறு வந்திருக்க ஒன்றும் பேச முடியவில்லை அவனின் முகத்தை பார்த்தே.
“தூங்க போறது சரி. உன் ரூம் எது?…” என்ற சங்கர் ஆதவை தூக்கிகொண்டு,
“ஸ்டேஷன்ல இருந்து நேரா இங்க கிளம்பிட்டேன் ஷ்ரவா. ட்ரைவ் பண்ணிட்டு வந்தது டயர்டா இருக்குது. நானும் போய் தூங்கறேன். குட்நைட்…” என்று சொல்லியவன்,
“அபி வா…” என்று அழைக்க அவள் அசையாமல் நின்றாள்.
“சரி நீயும், ஷ்ரவனும் போய் தூங்குங்க. நானும் அபியும் பேசிட்டு இருக்கோம்…” என்று சங்கர் சொல்லவும் காலை உதைத்துக்கொண்டு வேகமாய் அந்த அறைக்குள் சென்று படுத்துவிட்டாள் அபி.
ஒரு பெருமூச்சுடன் ஷ்ரவனுக்கு தலையசைத்தவன் தானும் அறைக்குள் நுழைந்து கதவை சாற்றினான்.
“நீங்க ஏன் வந்தீங்க?…” என எடுத்ததும் அவனிடம் கேட்க,
“எனக்கு தூக்கம் வருது…” என்று சொல்லி மகனை நடுவில் படுக்க வைத்தும் தானும் படுத்து கண்ணை மூட அபி வேகமாய் அவனின் மொபைலை எடுத்து பார்க்க ஆரம்பித்தாள்.
அவள் அதைத்தான் செய்வாள் என்று தெரிந்தவன் ஒன்றும் பேசாமல் இருக்க அவள் பார்த்து முடித்ததும் அப்படியே கோபமாக கட்டிலில் தூக்கி எரிய அதை எடுத்து சார்ஜில் போட்டான் சங்கர்.
“உங்களை விட்டு நிம்மதியா இங்க ரெண்டு நாள் இருக்கலாம்ன்னா முடியுதா? ஏன் பின்னாடியே வரீங்க?…” என்று அதற்கும் கேட்க,
“குட்நைட்…” என்று சொல்லியவன் மீண்டும் படுத்து கண்ணை மூட ஆதவ் அவனின் கழுத்தை கட்டிக்கொண்டான்.
தாயும் தந்தையும் சேர்ந்து இருந்தாலே இருவருக்கும் வாக்குவாதம் முற்றி தாய் எதையாவது தூக்கி போட்டு உடைப்பதை பெரும்பாலும் பார்த்து வளர்ந்த குழந்தை அவன்.
இங்கேயும் அபர்னிதா சண்டையை துவங்க சங்கரின் கழுத்தை கட்டிக்கொண்டு கண்ணை மூடிக்கொள்ள அபர்னிதாவிற்கு இன்னும் கோபமாக வந்தது.
“இவனை சுமந்து பெத்தது நானு. ஆனா…”
“ஸ்டாப் இட் அபி. இதுக்கு மேல பேசின இப்பவே உன்னை கூட்டிட்டு கிளம்பிடுவேன்…” என்றவனின் அதட்டலில் கம்மென்று படுத்துவிட்டாள்.
கோபம், கோபம். அப்படி ஒரு கோபம். மகன் மேலும் கோபம் என்று அபர்னிதாவின் மூளை சூடாகியிருந்தது.
“தேவகி எதுக்கு வாசுவுக்கு கால் பண்ணினா?…” என மீண்டும் சங்கரிடம் எட்டி பார்த்து கேட்க அவனிடத்தில் பதில் இல்லை.
“அவ பேசறா. அடிக்கடி பேசறா. ஆனா என்ன பேசறான்னு எனக்கு தெரியலை. எல்லாரும் சேர்ந்து எனக்கு என்னவோ பன்றீங்க இல்ல. பார்த்துக்கறேன்…” என்று சூளுரைத்தவள் பேசிக்கொண்டே தான் இருந்தாள்.
விடிய விடிய பொட்டு தூக்கமின்றி வாய் வலிக்க வலிக்க பேச சங்கருக்கும் உறக்கம் என்பது இல்லாமல் போனது. ஆனால் உறங்குவதை போலவே அசையாமல் படுத்துவிட்டான்.
விடியற்காலை போல அவள் கண்கள் சொருக அசந்து தூங்க மகன் எழுப்பவும் அவனுடன் எழுந்து குளித்து கிளம்பி வெளியில் வந்தான் சங்கர்.
ஷ்ரவன் அமர்ந்து டீ குடித்துக்கொண்டு இருக்க அவனருகே வாசமல்லி எதுவோ பேசியபடி இருந்தாள்.
“வாங்கண்ணே…” என அவனை பார்த்ததும் எழுந்தவள்,
“ஆதவ்க்குட்டி வாங்க…” என்று அவனை தூக்கிக்கொண்டாள்.
“உட்காருங்கத்தான்…” என அவனுக்கு நகர்ந்து அமர்ந்தவன்,
“வாசு டீ…” என்றதும் ஆதவ்வுடன் சேர்ந்து கிட்சனிற்குள் நுழைந்தாள்.
“பல்லு தேச்சிட்டியா ஆதவ்?…” என்று கேட்டு அவனுக்கு பாலை காய்ச்ச,
“குளிச்சுட்டேன் அத்தை. அப்பா…” என்று சொல்லவும் அவனிடம் பேசிக்கொண்டே அவனுக்கு பாலும், சங்கருக்கு டீயும் எடுத்து வந்தாள்.
“என்னண்ணே எந்திச்சதும் குளிச்சே வந்தாச்சா? செத்த நேரம் செண்டு குளிக்கவேண்டிதானே? கிளம்ப இன்னும் நேரமிருக்குது. மத்தியான சாப்பாட்டுக்கு தான போவ போறோம்…” என்று அவள் சொல்ல,
“இல்லம்மா, நாங்க இப்ப கிளம்பறோம். நேரா அவினாசிக்கு…” என்றதும் ஷ்ரவனும் பார்த்தான்.
“அப்பறம் ஷ்ரவா அனுசுயா அத்தை வராங்க இன்னைக்கு. நீ கல்யாணம் முடியவும் எப்போ கிளம்பி வருவ?…” என,
“அத்தான் நாளைக்கு காலையில முகூர்த்தம். முடிஞ்சதும் கிளம்ப வேண்டியது தான். அனுசுயாம்மாவா? அவங்க வரதை பத்தி சொல்லலை யாரும்…”
“நான் தான் வர சொல்லிருக்கேன்…” என்றவன் வாசமல்லியையும், மகனையும் பார்க்க,
“ஆதவ் அத்தை கூட வா. பின்னால போவோம்…” என்று கூட்டிக்கொண்டு அவள் செல்லவும் வேதனையுடன் கண்ணை மூடினான் சங்கர்.
“என்னத்தான் திடீர்ன்னு?…” என இரக்கத்துடன் அவனை பார்க்க,
“திடீர்ன்னு தான் எல்லாமே நடக்குதுடா. என்ன பண்ண? எனக்கே இதுல என்ன முடிவெடுக்கன்னு தெரியலை. அபியை சரிபண்ண தெரியலை…” என்று கையை விரிக்க ஷ்ரவனுக்கு அத்தனை வேதனையாய் போனது.
தான் ரோல்மாடலாய் நினைத்த ஒருவன் இன்று துவண்டு போய் இருப்பதை காணவே சகிக்கவில்லை.
“பார்த்துக்கலாம் அத்தான். நானும் கல்யாணம் முடிஞ்சதும் கிளம்பி வரேன். அதுக்குள்ளே நீங்க இங்க வந்திருவீங்களா?…” என கேட்க,
“ஹ்ம்ம், பூஜை முடியவும் கிளம்பனும்…” என்றவன் அபியை எழுப்ப சென்றான்.
“வாசு காபி…” என்று அப்போதுதான் எழுந்து அமர்ந்திருந்தவள் உள்ளிருந்தே ஆடர் போட.
“அபி குளிச்சு கிளம்பு. ஊருக்கு போகனும்…” என்றான் அவளிடம்.
“இப்போவா? ஷ்ரவன் கிளம்பனும்னு சொன்னானா?…” என்று வேகமாய் எழுந்து நிற்க,
“நாம கிளம்பறோம்…”
“இல்லை…” என்று மேலும் பேசும் முன் அவள் கொண்டுவந்திருந்த உடமைகளை தூக்கிகொண்டு அறையை விட்டு வெளியேற போனவன் மீண்டும் அவளருகே வந்தான்.
“சத்தமில்லாம கிளம்பி வா. வந்தா உனக்கு நல்லது. இல்லைன்னா…” என்றவனின் முகம் அத்தனை கடுமையாய் இருக்க எரிச்சலுடன் குளித்து கிளம்பி வெளியே வந்தாள்.
“மதினி காபி…” என்று வாசு நீட்ட,
“ஒன்னும் தேவையில்லை. நான் கிளம்பறேன்…” என்று வேகமாய் சென்று வெளியே நின்ற சங்கரின் வண்டியில் ஏறி அமர்ந்துகொண்டாள்.
“வரேன்டா. நாளைக்கு பார்க்கலாம்…” என்றவன் தங்கையிடமும் விடைபெற்று செல்ல ஷ்ரவனின் முகத்தில் அப்படி ஒரு கவலை.
“என்ன அத்தான் இதெல்லாம்? இவங்க இப்படி இருக்காங்க…” என சொல்ல,
“நாளைக்கு அபி அம்மா வராங்க வாசு. அத்தான் நம்மளை வர சொல்லிருக்கார். பார்க்கறதுக்கு மட்டும் இல்லைன்னு நினைக்கறேன்…” என்றவன்,
“ஓகே, நடக்கறது நடக்கட்டும்…”
“சாப்பிடாம போய்ட்டாங்களே. ஆதவ்க்கு மட்டும் தான் குடுத்தேன். அவனும் சரியா சாப்பிடலை…” என்று வருத்தப்பட,
“ஓகே, பார்த்துக்கலாம்…” என்றவன்,
“நாமளும் கிளம்புவோமா? ரெண்டு மணிநேரம் கழிச்சு கிளம்பலாம்னு இருந்தேன். இப்ப இப்பவே போனா என்னன்னு தோணுது…” என சொல்ல,
“நானா வேண்டாம்ங்கறேன். கொஞ்சம் முன்ன சொல்லியிருந்தா அண்ணே கூடவே போயிருக்கலாம்ல…”
“உன்னை திருத்தவே முடியாது. அத்தான் காரணமில்லாமலா கூட்டிட்டு போனாரு? நீ வாயை மூடு…” என்றவன் கிளம்ப ஆயத்தமானான்.
“நீங்களும் இன்னும் சாப்பிடலையே…” என அவனின் பின்னால் வாசமல்லி வர,
“ப்ச், மனசே சரியில்லை. எனக்கு வேண்டாம் வாசு. நீ சாப்பிடு…” என்றவன் பின் அவளின் முகம் பார்த்தான்.
பசி தாங்கமாட்டாள் மனைவி என்று தெரிந்திருந்தவன் ஒரு பெருமூச்சோடு அவளை அழைத்துக்கொண்டு வந்து இருவருக்கும் எடுத்துவைத்தான்.
“சாப்பிடு…”
“எல்லாருக்குமே செஞ்சேன் அத்தான். நிறைய இருக்கே…”