உருக்கம் – 4
பவித்ராவின் அந்த முடிவை அத்தனை சீக்கிரம் வீட்டினர் ஒத்துக்கொள்ளவில்லை. அதிலும் வசந்தி மகளை பேசாத பேச்சில்லை.
“இவ மட்டும் படிக்கிறேன்னு இந்த வீட்ட விட்டு வெளில போகட்டும். அன்னைக்கோட இவளோட பேச்சே இல்லை எனக்கு. பெத்தவளை மறந்திட சொல்லிருங்க…” என பார்வதியிடம் எகிறியவர்,
“இதுலயும் உங்க பங்கு இருக்கா?…” என்று வேறு கேட்க அருமைநாயகம் அனல் பார்வை பார்த்தார் பார்வதியை.
“இங்க நானா எந்த முடிவும் எடுக்க கூடாதா?…” என கலங்கி போய் பார்வதியை ஆதரவென பிடித்துக்கொண்டவள் மனது இப்போது சஞ்சலம் கொண்டது.
வசந்தியே இதற்கு மொத்தமாக மறுப்பு சொல்லி தன்னை விடமாட்டாரோ என்று பயந்து போய் ஜோதியையும் ரஞ்சனியையும் பார்த்தாள்.
“இங்க பாருங்க மாமா. இப்போதைக்கு கல்யாணப்பேச்சை ஆற போட்டுட்டு அப்புவை படிக்க அனுப்புவோம். எனக்கு இதுதான் சரின்னு பட்டது. அதுக்கு மேல உங்க இஷ்டம்…” என்றவன்,
“அதுவும் அவளா ஒன்னும் படிக்கிறேன்னு சொல்லலை. நானா தான் கேட்டேன்…” என்று ஜெகனே தன் மீது சொல்லிக்கொள்ள அனைவரும் திகைத்து பார்த்தார்கள்.
“என்ன மாப்பிள்ளை? என்ன சொல்றீங்க? நீங்களா எதுக்கு படிக்க வைக்கனும்னு நினைக்கறீங்க?…” என தன்னுடைய அதிருப்தியை அதிர்ச்சியாக வெளிப்படுத்தினார் அருமைநாயகம்.
“வேற என்ன பண்ண சொல்றீங்க? எல்லாம் நம்ம கை மீறி போய்டுச்சு. யோசிச்சு செய்ய வேண்டியதை யோசிக்காம செஞ்சு இப்படி கொண்டுவந்து நிறுத்தியாச்சு. இனியாவது நிதானமா முடிவெடுக்கனும் இல்லையா?…” என்றான்.
“அதுக்குன்னு படிக்க அனுப்பினா சரியா போய்டுச்சா?…”
“இல்லை தான். எதுவும் சரியாகலை தான். ஆனா நமக்கு ஒரு யோசனை கிடைக்கும்ல. அதுவரைக்கும் வீட்டுக்குள்ளயே அவளை வச்சுட்டு போக வர பார்த்து பார்த்து நாமளும் வருத்தப்பட்டு அவளையும் போட்டு வார்த்தையால வாட்டி எடுக்கறதுக்கு…”
“ஹ்ம்ம்…” என யோசனையான அருமைநாயகம்,
“பழனி நீ என்னப்பா சொல்ற?…” என்றார்.
“உங்களுக்கு தெரியாததாண்ணே? நீங்க என்ன சொல்றீங்களோ அப்படியே…” என்றார் வழக்கம் போல.
“சின்ன மாமா என்னைக்கு உங்க பேச்சை மீறியிருக்காங்க? இப்பவும் நீங்க அப்புவுக்கு நல்லது தான் செய்வீங்கன்னு எவ்வளவு நம்பிக்கையா இருக்காங்க. அதுக்காக தான் சொல்றேன்…” என்றான் ஜெகன்.
அங்கே ஜெகனையும், அருமைநாயகத்தையும் தவிர ஒருவரும் அந்த பேச்சில் இடைபுகவில்லை.
வசந்தியோ மெல்லிய குரலில் முணுமுணுத்துக்கொண்டே இருந்தாலும் யாரும் அவரை கண்டுகொள்ளவில்லை.
அதற்கும் மேலாக வசந்தி இந்த நான்கு நாளில் பவித்ராவை பேசிய பேச்சுக்களும், அழுத அழுகையும் சொல்லி மாளாதளவிற்கு இருந்தது.
இப்போது யோசனையுடன் வசந்தியையும் பார்த்த அருமைநாயகத்திற்கு வீட்டிலும் நிம்மதி வேண்டும் என்றால் பவித்ராவை ஜெகன் சொல்லியதை போல படிக்க அனுப்பலாம் என்று தான் நினைத்தார்.
இன்னொன்று வீட்டு மாப்பிள்ளை. இங்கே அவரே முன்வந்து ஒரு முடிவெடுத்து அத்தனைபேரின் முன்னாலும் பேச அதற்கு மதிப்பு குடுத்தாகவேண்டிய இடத்தில் அருமைநாயகம் இருந்தார்.
தானே தன் மாப்பிள்ளை பேச்சிற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றால் நாளைப்பின் அது மாப்பிள்ளைக்கு தன் மேல் வருத்தத்தை தந்துவிடும் என்று தலையசைத்தபடி எழுந்தார்.
“ஹ்ம்ம், நீங்க சொல்றதா இருந்த எதையும் யோசிக்காம சொல்லமாட்டீங்க மாப்பிள்ளை. அதனால உங்களோட முடிவுக்கு நான் சம்மதிக்கறேன்…” என்றதும் வசந்தியின் முகம் மாறியது.
ஆனாலும் ஒன்றும் பேசவில்லை. பேச முடியவில்லை. அவரின் மௌனம், அதை கூட அங்கே ஒருவரும் கண்டுகொள்ளவில்லை.
“ஓகே மாமா, நானே ஒரு நல்ல காலேஜா பார்க்கறேன்…” என்று அதற்கும் ஜெகன் உத்திரவாதம் தர,
“இல்லை மாப்பிள்ளை, அவ முதல்ல படிச்ச காலேஜ்லையே…”
“மாமா, நான் எல்லாம் யோசிச்சு தான் பேசறேன். ஒரு நிமிஷம் இருங்க…” என்ற ஜெகன்,
“முதல்ல படிச்ச காலேஜ்ல நிறைய பேர் நம்ம ஊர் பிள்ளைங்க. அங்கயும் போய் இந்த பேச்சு தான் பேசுவாங்க. எதுக்கு? வேற ஒரு நல்ல காலேஜ்…”
“என்ன மாப்பிள்ளை நீங்க? திரும்பவும் படிக்க அனுப்பிச்சா அவன்…”
“எவனும் ஒன்னும் பண்ணமுடியாது. யார் வரான்னு நான் பார்த்துடறேன்….” என்றவன்,
“இன்னைக்கு நான் கிளம்பறேன். இன்னும் ஒன்றரை மாசத்துல காலேஜ் திறப்பாங்க. விசாரிச்சு ஒரு நல்ல காலேஜா பார்த்து சொல்றேன்…” என சொல்லிவிட்டு,
“ஜோதி, நீயும் விசாரி. என்கிட்டே சொல்லு…” என சொல்லிவிட்டு அன்று மாலையே ரஞ்சனியை கூப்பிட்டுக்கொண்டு கிளம்பிவிட்டான்.
“என்ன மாமா மாப்பிள்ளை சொல்றாருன்னு நீங்களும்?…” என ஜெகன் கிளம்பிய சிறிது நேரத்தில் வசந்தி கேட்க,
“நீங்களும்ன்னா? எப்ப பார்த்தாலும் நான் நான்னு முன்னாடி வராளே, இவளை வச்சுட்டு வேற என்ன செய்ய சொல்ற? இப்போதைக்கு அவர் சொல்றது தான் எனக்கும் சரின்னு படுது…” என அருமைநாயகம் சொல்ல,
“சரிங்க மாமா, உங்க விருப்பம்…” என்றுவிட்டார் அதற்கு மேல் பேச தைரியமற்றவராக.
“பழனி, பைக்கை எடு. ரைஸ்மில்லுக்கு போகனும். கொஞ்சம் கணக்குவழக்கு இருக்குது…” என்று சொல்லிவிட்டு தானும் செருப்பை அணிந்துகொண்டு கிளம்பிவிட்டார்.
“நீயும் எங்கடா கிளம்பிட்ட?…” என்றார் ஜோதியிடம் பார்வதி.
“கோவில் வாசல் கடைகளுக்கு வாடகை வசூல் பண்ணனும். நிச்சயம் முடியவும் பண்ணலாம்னு இருந்து இவ்வளவு இழுத்திருச்சும்மா. போய்ட்டு கடைக்கு போய் வரவு வச்சுட்டு டைம் இருந்தா பேங்க் போகனும்…” என்று கிளம்பிவிட்டான்.
இப்போது மூன்று பெண்கள் மட்டுமே இருக்க வசந்தி இருவரிடமும் பேசவே இல்லை. பின்பக்கத்திற்கு சென்றுவிட்டார்.
ஒரு பெருமூச்சுடன் பார்வதி பவியை அழைத்துக்கொண்டு முன்னால் இருக்கும் திண்டிற்கு அழைத்து சென்றார்.
“படிக்க போக சொல்றாங்களே, நீ என்னடா யோசிக்கிற? உனக்கு சரிதானே?…” என கேட்க,
“ஹ்ம்ம், பெரிம்மா. இப்போதைக்கு அதுதான் சரியா இருக்கும். போறேன்…” என்றாள் விட்டேற்றியாக.
“யாத்தே, போறேன்னு என்னடி பேச்சு இது? அப்படியெல்லாம் நினைக்காம நல்லபடியா போய்ட்டு வா. உனக்கு அந்த கடவுள் என்ன வச்சிருக்கான்னே தெரியலையே?…” என்று அவளின் முகத்தை கவலை தோய்ந்த வாஞ்சையுடன் தடவியபடி பேசினார்.
“இனி வைக்க என்ன இருக்கு பெரிம்மா?…” என்றாள் பவித்ரா.
எல்லாம் விட்டுப்போன மனநிலை என்று சொல்லமுடியவில்லை என்றாலும் அனைத்தும் வெறுத்துவிட்டிருந்தது.
புரிந்துகொள்ளாத தாய், நம்பிக்கை இல்லாத பெரியப்பா, பாசமிருந்தும் காட்டமுடியாமல் தந்தை, தன்னை போலவே நிந்திக்கப்படும் ஜீவனான பெரியம்மா, அண்ணன் என்று இருந்தும் தன் பக்கம் நிற்க முடியாதவன் இப்படி உறவுகளாலேயே தனியாக நின்றாள்.
“என்னடா என்னவோ யோசனையாவே இருக்க?…” என மகளை கேட்க,
“நான் முன்னாடி நின்னது தான் தப்புன்னு சொல்றாங்களே பெரிம்மா…”
“ச்சே, ச்சே, அப்படி நீ நினைக்காத அப்புக்குட்டி. பேசினா பேசிட்டு போகட்டும். உன் பெரியப்பாவுக்கு கோவம், எத்தனை முயற்சி செஞ்சும் அந்த பையனை சமாளிக்க முடியலையேன்னு. அதை தான் உன்கிட்ட காமிச்சுட்டு போறார்…”
“ஹ்ம்ம், இதுக்கு தான் முதல்லையே இந்த நிச்சய ஏற்பாடு வேண்டாம்னு சொன்னேன்…” என்று அவள் முணுமுணுக்க,
“அப்பு, உனக்கு நம்பிக்கை இருந்ததா விஜய் தம்பி வரும்ன்னு…” என்றார் அவளை வியப்புடன் பார்த்துக்கொண்டே.
“நம்பிக்கைன்னு இல்லை பெரியம்மா, ஆனா ஒரு பயம் இருந்துட்டே இருந்துச்சு. வந்துட்டா என்னாகுமோன்னு பயம்…” என வெளிப்படையாக சொல்ல பார்வதியும் மௌனமானார்.
பார்வதியிடம் சொல்லிவிட்டாள் தான். ஆனால் சொல்லாத ஒன்று விஜய்யின் அந்த ஆவேச தொடுகை கொடுத்த அந்த அச்சம்.
காட்சியாகவும், அவனின் வாய்வார்த்தையாகவும் கேட்டவர்களுக்கு எப்படியோ? ஆனால் அவனை உணர்ந்தவளுக்கு. அவனின் கோபத்தின் வேகத்தில் தாக்கப்பட்டவளுக்கு தெரிந்திருந்ததே?
அதுவே ஆழ்மனதில் பதிந்து போய்விட அவன் எப்படியும் வந்து பிரச்சனை செய்வான் என்ற பயம் இருந்துகொண்டே தான் இருந்தது.
இருவருமே சில நொடிகள் ஒன்றும் பேசாமல் அமர்ந்திருக்க பின்பக்கத்தில் யாரோடோ வசந்தியின் பேச்சு கேட்க பதறி எழுந்தார் பார்வதி.
தங்கள் இருவரையும் இப்படி பார்த்தால் இப்போதிருக்கும் மனநிலைக்கு மீண்டும் நோகும்படி ஏதாவது பேசிவிடுவார் என்று நினைத்த பார்வதி,
“சரி இப்படியே இருக்காத. தாத்தாவுக்கு சத்து கஞ்சி செஞ்சு தரேன். எடுத்துட்டு போய் குடு. கொஞ்சம் நேரம் அவரோட பேசிட்டு இரு…” என்று சொல்லிவிட்டு அவளையும் கூடவே அழைத்துக்கொண்டு அடுக்களைக்குள் சென்றார் அவர்.
“ஏய் எங்கடி போற?…” என பவித்ராவை நிறுத்திய வசந்தி பார்வதியை முறைத்துவிட்டு,
“மாடில துணியெல்லாம் துவைச்சு காய போடனும். கூட வா…” என்று அதட்டவும் அவளும் ஒன்றும் சொல்லாமல் மேலே செல்ல,
“ஒன்னொன்னும் சொல்லனும். இல்லன்னா தலைக்கு மேல ஏறிடறது…” என்று இருவருக்கும் பொதுவாக சொல்லியவர் வேகமாக படியேற பார்வதி ஒரு பெருமூச்சுடன் கிட்சனுக்குள் நுழைந்தார்.
அங்கே வேலைக்கு இருந்த உதவி பெண்ணை வைத்துக்கொண்டு கடகடவென சமையலையும் முடித்து மற்ற வேலைகளையும் முடித்துவிட்டு வடகத்துக்கு அரைத்து எடுத்துக்கொண்டு மாடிக்கு வந்தார்.
மாடியிலேயே வாஷிங் மிஷின் இருப்பதால் அங்கேயே துணிகளை போட்டு துவைத்து காயவைத்து எடுத்துக்கொள்வார்கள்.
மிஷின் பக்கத்தில் பவித்ரா அமர்ந்திருக்க வசந்தி சற்று தள்ளி நிழலில் அமர்ந்து அவளுக்கு அறிவுரை சொல்லிக்கொண்டு அமர்ந்திருந்தார்.
அதை பார்த்தும் பாராததை போல பார்வதி துணியை விரித்து வடகத்திற்கு அரைத்ததை கொஞ்சம் கொஞ்சமாக பரப்ப ஆரம்பிக்க அரை நிமிடம் அதை பார்த்துக்கொண்டு இருந்த வசந்தியும் எழுந்து வந்துவிட்டார்.
“கூப்பிட்டா வரமாட்டேனா? அம்புட்டுக்கா தள்ளி போய்ட்டேன்? அடிச்சாலும் புடிச்சாலும் இந்த வீட்டுல நாம தான? சும்மா இதுக்கு முகத்தை தூக்கிப்பீங்களா?…” என்று அதற்கும் வாய்க்கு வந்ததை பேசிவிட்டு தானும் சேர்ந்து உதவினார்.
பார்வதியும் பாசாங்கில்லாது பதில் பேசினார். அவருக்கு தெரியுமே வசந்தியின் குணம். ஆனாலும் பேச்சுக்கள் சுருக்கென்று தான் வந்தது.
வருத்தமாக இருந்தாலும் ஒரே வீட்டில் வாழும் போது இதை எல்லாம் கடந்துதானே செல்லவேண்டும் என்று நினைத்துக்கொள்வார்.
அதிலும் வசந்தி படபட பட்டாசு. எத்தனை தான் இருந்தாலும் பேச்சில் இன்னுமே முதிர்ச்சி இன்றி, கொண்டதே கோலம் என வார்த்தையை இறைத்துவிடுவார்.
இப்போதும் அப்படியே தானே பேசிவிட்டு இப்போது தானே வலிய வர அந்த பேச்சுக்கள் என்ன சமைத்தார் என்பதில் தொடங்கி வேறு பாதைக்கு செல்ல நிம்மதியாக அவர்கள் இருவரையும் பார்த்தபடி துவைத்த துணிகளை கொடியில் உலர்த்தினாள் பவித்ரா.
ஜெகன் சொன்னதை போல சென்னையில் உள்ள புகழ்பெற்ற கல்லூரியில் அவளுக்கு சீட் வாங்கிவிட அதற்கு அருகிலேயே தங்குவதற்கும் பெய்ட் ஹாஸ்டல் பார்த்துவிட்டான்.
“சென்னையா?…” என்று அருமைநாயகத்தின் முகம் அஷ்டகோணலாக மாறினாலும் அதை மறைத்துக்கொண்டு அவர் என்ன ஏதென்று கேட்கும் முன்னரே பவித்ராவை சேர்த்துவிட்ட படிவத்தையும் அவன் தர பின் எங்கே மறுக்க?
“இல்லை திரும்பவும் வெளியூர்ல போய் படிக்கனும்னா?…” என்று வசந்தி தான் ஜெகனிடம் ஆரம்பித்தார்.
“அத்தை பி.எஸ்.ஸி படிக்கிறதவிட அடுத்து மேல படிக்கிறது ரொம்ப முக்கியம். எங்க படிக்கிறோம்ன்றதோட அது உருப்படியா இருக்கான்றதும் முக்கியம். படிக்கிற பொண்ணு. நல்லபடியா படிச்சா அது அவளோட ப்யூச்சருக்கு யூஸ் ஆகற மாதிரி இருக்கனும்…”