உருக்கம் – 12
சென்னையிலிருந்து கிளம்பியவர்களுக்கு திருவனந்தபுரம் செல்லும் முன்பே சரோஜாவிடம் இருந்து போன் வந்துவிட்டது.
தூத்துக்குடி கன்னியாகுமரி வழியாக திருவனந்தபுரம் சென்றுகொண்டு இருக்க தூத்துக்குடியை தாண்டி ஓரிடத்தில் காரை நிறுத்தினார்கள்.
காலை டீ குடிப்பதற்கு என ஓரிடத்தில் வண்டியை நிறுத்தி விஜய்க்கு அழைத்து எங்கு வந்து இருக்கிறோம் என்று சொல்லி இன்னும் எத்தனைமணி நேரத்தில் ஊர் சென்றுவிடுவோம் என்றும் பேசியிருந்தார்கள் மூவரும்.
டீயை குடித்து முடித்திருக்க அடுத்ததாக சரோஜாவிடம் இருந்து போன் வந்துவிட்டது மதுவின் எண்ணிற்கு.
“யாரு?…” என்றார் மாதவன்.
“சரோஜாக்கா தான் பேசறாங்க…” என்று மது மாதவனை பார்த்தார்.
“ஹ்ம்ம். பேசு…” என்று சொல்லி அவர் ஆகாஷுடன் பேச,
“ஐயோ என்னக்கா சொல்றீங்க?…” என்று கேட்கும் பொழுதே அழ தொடங்க என்னவோ என்று வந்தார்கள் இருவரும்.
“மது என்னாச்சு?…” என்று வந்து மாதவன் கேட்கவும்,
“எங்கம்மா, எங்கம்மாங்க…” என்று அழ மாதவனுக்கு புரிந்து போனது.
“ஆகாஷ் பிடிடா, கார்ல உட்காரவை…” என்று சரோஜாவிடம் தானே பேசினார்.
“என்னம்மா ஆச்சு?…” என்று கேட்க,
“யாரு மது வீட்டுக்காரங்களா?….” என்ற சரோஜா,
“இங்க மது அம்மா தவறிட்டாங்க ஸார். இன்னைக்கு விடியக்காலையில போல. அப்பவே போன் பண்ண வேண்டாம்னு இருந்தேன். இங்க என்னன்னா முடியாம இருந்த உடம்பு, ரொம்ப நேரம், தாங்காதுன்னு உடனே தகனம் பண்ணனும்னு சொல்றாங்க. மதுவுக்கு தெரியுமா இல்லையான்னு தெரியலை. அதான் போன் பண்ணேன்…” என்று சொல்ல,
“சரிங்கம்மா, சொன்னதுக்கு ரொம்ப நன்றி…” என்றவர் போனை வைத்துவிட்டார் மாதவன்.
“ப்பா, என்ன பன்றது?…” என ஆகாஷ் கேட்க அவர் மதுவை பார்த்தார்.
“என்ன மது செய்யலாம்?…” என அவரின் அழுகையை கண்டு கலங்கியவராக கேட்க,
“எனக்கு கடைசியா எங்கம்மாவை பார்க்கனும் போல இருக்கு. என்ன செய்ய?…” என்றார் பாவமாய்.
அதற்கு மேலும் தாங்கவில்லை மாதவனுக்கு. உடனே சம்மதித்தவர் காரை பழனிக்கு விட சொன்னார்.
“ப்பா, விஜய்க்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிருவோமே?…” என்றான் ஆகாஷ்.
“இல்லடா, சொன்னா டென்ஷன் ஆகிருவான். இது துக்கவீடு தானே? ஊரோட நின்னு பார்த்துட்டு வந்துருவோம். அதோட இது மதுவுக்கான உரிமை. அவளை அங்க யாரும் எதுவும் சொல்லமுடியாது…” என்றார் அவர்.
செல்லும் வரை மகன் அழைத்துவிட கூடாதே என்று நினைத்துக்கொண்டு இருந்தார். அவர் நினைத்ததை போல விஜய் அழைக்காமல் மெசேஜ் மட்டும் போட்டுவிட்டு காலேஜ் சென்றுவிட்டான்.
அவர்கள் ஐந்துமணி நேரத்தில் பழனியை அடைந்து அருமைநாயகத்தின் வீடு வந்து சேர்வதற்குள் எல்லாம் முடிந்திருந்தது.
அப்போதுதான் காலை கழுவிக்கொண்டு வீட்டிற்குள் வந்து மரகதத்தின் படத்திற்கு வணங்கிவிட்டு மீண்டும் பந்தலுக்கடியில் வந்து அமர்ந்து இருந்தார்கள் அருமைநாயகம் மற்றும் பழனியப்பன் அவர் உறவினர்கள் என்று எல்லாம்.
கேட்டின் அருகே கார் வந்து நின்றதும் அத்தனைபேரும் திரும்பி பார்க்க மதுவந்தி இறங்கி அழுதுகொண்டே கேட்டை தாண்டி உள்ளே ஓடி வந்தார்.
“ஏய் நில்லு கழுத….” என்று அவரை பார்த்ததுமே அருமைநாயகம் ஆங்காரத்துடன் முன்னால் வர வீட்டினுள் இருந்த பெண்களும் வெளியே வந்துவிட்டார்கள்.
ஏற்கனவே துக்கத்திற்கு வந்தவர்களும் மதுவந்தி வந்து மரகதத்தை பார்த்துவிட்டு சென்றதையும், விஜய் பவித்ரா விஷயத்தையும் தோண்டி துருவி அவரவருக்கு தோன்றிய நியாய, அநியாயங்களை பற்றி பேச பேச எரியும் நெருப்பென இருந்தவர் இப்போது மதுவை பார்த்ததும் எரிமலையானார்.
“எல்லாம் உன்னால, என்னைக்கு உன்னை திரும்ப பாத்தேனோ அன்னைக்கு பிடிச்சது சனி. நல்லா இருந்த குடும்பத்தை காவு வாங்க ஆரம்பிச்சுட்ட. இப்ப அடுத்து என்னத்துக்கு இங்க வந்திருக்க?…” என்று அடிப்பதை போல பேச,
“என்னை என்ன வேணா சொல்லிக்கோங்க. ஆனா அம்மாவை தான் பார்க்க முடியலை. அப்பாவையாவது பார்க்க விடுங்க. பார்த்துட்டு போயிடறேன். உங்களை கையெடுத்து கும்பிடறேன்…” என்று மது அங்கேயே அழ,
“நாயகம், அதான் தான் பார்த்துட்டு போறேன்னு சொல்லுறாளே? கேளேம்ப்பா….” என ஒருவர் சொல்ல,
“சம்பந்தி துக்கம் விசாரிக்க யார் வேணா வரலாம். உங்க சொந்த பிரச்சனையை வச்சு இப்படி நடந்துக்காதீங்க…” என்று ஜெகனின் தந்தை பேசினார்.
“யப்பா இப்ப மது பொண்ணு அவ அப்பனை பார்க்கறதால என்ன குறைஞ்சிற போகுது. அதுக்கும் சொந்த ரத்தம்னு இருக்கும்ல…”
இப்படி மாற்றி மாற்றி மதுவிற்கு ஆதரவாகவும் நாயகத்திற்கு அறிவுரையும் சொல்ல சொல்ல நிதானமிழந்து வெறியாகி போனவர்,
“அவ இந்த வீட்டு வாசப்படி ஏறக்கூடாதுன்னு சொல்லிட்டே இருக்கேன். அவனவன் அவன் சோலிக்கழுதைய பார்த்துட்டு போங்க. இது என் வீட்டு விவகாரம். ஒருத்தனும் தலையிட கூடாது…”
அறிவுரை சொல்லியவர்கள் அனைவரையும் ஏகவசனத்தில் பேசியவர் மதுவந்தியையும், மாதவனையும் வாய்க்கு வந்தபடி இங்கிதமில்லாது பேச ஆரம்பித்துவிட்டார்.
“யோவ், உனக்கு இஷ்டம் இல்லன்னா அதோட நிறுத்திக்கோ. மதும்மாவையும், அப்பாவையும் எதாச்சும் பேசின?…” என்று கோபத்துடன் ஆகாஷ் எகிற,
“அப்படித்தான்டா பேசுவேன். எதுக்குடா என் வீட்டு படியேறி வரீங்க? வந்தா பேசத்தான் செய்வேன்…”
“உங்களுக்கு இந்த வீடு என்ன உரிமையோ, அதே உரிமை மதும்மாவுக்கும் இருக்கு. நீ யாருய்யா நோ சொல்ல?…” என்றான் ஆகாஷ்.
“ஆகாஷ் பேசாம இரு…” என மாதவன் தடுத்தார்.
அவருக்கு இப்படியாப்பட்ட தரமில்லாத பேச்சுக்கள் என்றைக்கும் பிடிக்காத ஒன்று. அதற்கு பதிலுக்கு பதிலும் நிற்கமாட்டார். உன் தரம் இவ்வளவு தான் என்று ஒதுங்கிவிடுவார்.
ஏற்கனவே அருமைநாயகத்தின் குணம் இப்படித்தான் என்று அறிந்திருந்தவராகிற்றே.
இந்த மனிதனின் வாயிலிருந்து இப்படித்தான் வரும் என்று சட்டைசெய்வதில்லை. இப்போது பதிலுக்கு ஆகாஷும் பேச மனைவியை பார்ப்பதா, ஆகாஷை சமாளிப்பதா என்று திணறினார்.
“எனக்கும் தெரியும்டா அங்க சுத்தி இங்க சுத்தி நீங்க இதுக்குத்தான் வருவீங்கன்னு. சொத்துக்காகவா அலையறேங்க…” என்று அருமைநாயகம் சொல்லவும்,
“உன் புத்தி இவ்வளவுதான்ய்யா. கொஞ்சம் கூட மனசுல ஈரம் இல்லாம பேசற. என்ன மனுஷன்? உனக்கு யாரை பத்தியும் கவலை இல்லை இல்ல? சொத்து யாருக்கு வேணும்? என் மாதவப்பா சேர்த்து வச்சிருக்கற மரியாதைக்கும், சொத்துக்கும் கால் தூசி வருவியா நீ?…” என பேசியவன்,
“இங்க பார், உன் சொத்தை நீயே வச்சுக்கோ. மதும்மாவை அவங்கப்பாவை பார்க்க விடு. இல்ல…” என்று விரல் நீட்டி எச்சரிக்க இப்போது அத்தனை ஆத்திரமும் மதுவந்தியின் மேல் பாய்ந்தது.
கொஞ்சமும் யாரும் யோசிக்காதவண்ணம் அங்கே அடுக்கி வைக்கப்பட்டிருந்த செங்கலை எடுத்து,
“நீ இருக்கற வரைக்கு எனக்கு நிம்மதியும் இல்ல. மதிப்பும் இல்ல…” என்று எரிய முதல் செங்கல் மதுவின் மேல் படாமல் ஆகாஷ் தடுக்க அவனின் கண்பட்டையின் மேல் விழுந்து காயம் ஏற்பட, அடுத்தது மாதவனின் பின்னந்தலையில் பலமாக விழுந்தது.
“என்ன பன்ற நாயகம்?…” என்று அதற்குள் அருமைநாயகத்தை பிடித்துக்கொண்டனர்.
மாதவன், ஆகாஷ் இருவரும் மதுவை காப்பாற்ற பிடித்திருக்க அத்தனை பேரையும் உதறிவிட்டு மதுவை நெருங்கி பிடித்து கீழே தள்ளினார் அருமைநாயகம்.
“வெளில போகல சாவடிச்சிடுவேன்…” என்றவரின் குரலில் ஸ்தம்பித்து நின்றார் மதுவந்தி.
என்ன நடந்தது என்று கூட உணரமுடியாமல் அவர் அதிர்ந்து நின்றிருக்க மெல்ல கண்கள் சொருக மயங்கி சரிந்த நேரம் பைக்கில் வந்தான் ஜெகன்.
இத்தனை கலவரத்திலும் ஒருவரும் மதுவையோ, மாதவன், ஆகாஷையோ வந்து பார்க்கமுடியவில்லை.
“ஐயோ உடனே ஆஸ்பத்திரி போங்க…” என்று நெருங்கியவர்களையும்,
“அவக்கிட்ட போனா அவ்வளவு தான். உறவே வேண்டாம். ஒன்னு நான் வேணும்னா பேசாம நில்லுங்க. இல்லன்னா போங்க…” என்று சொல்ல ஒருவரும் நெருங்கவில்லை அதன்பின்னர்.
அருமைநாயகத்தின் ஆர்ப்பாட்டத்தில், பேச்சில் தான் அத்தனை கவனமும் இருந்தது.
“யாரு இது? என்னாச்சு?…” என்று ஜெகன் ஜோதியுடன் பைக்கை போட்டுவிட்டு இறங்கி பார்க்க பார்த்ததும் ஆகாஷை கண்டுகொண்டான் அவன். தன் தோழனுடைய தம்பியாகிற்றே.
“ஜெகாண்ணா…” என்று அவனும் அழைக்க,
“ஆகாஷ் நீ எங்கடா இங்க?…” என்று ஜெகன் கேட்டவன் தூரத்தே பார்க்க ஜோதி தந்தை அருகே சென்றிருந்தான்.
“என்னடா இது?…” என்று கேட்டவன்,
“வா ஹாஸ்பிட்டல் போகலாம்…” என்று சொல்லும் போதே அங்கே கூட்டத்தில் சலசலப்பு அதிகமாக அதில் வாக்குவாதம் தன் தந்தைக்கும், அருமைநாயகத்துக்கும் தான் என்று பார்த்தவன்,
“இருடா ஒரு நிமிஷம்…” என்று ஜெகன் அதை நோக்கி சென்றான் என்னவோ என்று பதறி.
“ஆகாஷ், போதும்டா. கிளம்புவோம்…” என்று மாதவன் சொல்லி இருவருமாக கை தாங்கலாக மதுவை தூக்கிக்கொண்டு காருக்கு சென்றார்கள்.
மாதவனுக்கு பின்னந்தலையில் அடிபட்டதில் ரத்தம் கசிய ஆரம்பிக்க அதை கூட உணரமுடியாமல் மதுவை பின்னால் படுக்கவைத்து தானே ஓட்ட அமர்ந்தார்.
“ப்பா, நான் ட்ரைவ் பன்றேன்…” என ஆகாஷ் சொல்ல,
“வேண்டாம்ப்பா. நைட்டெல்லாம் கார் ஓட்டிருக்க. இப்ப கண்ணுல வேற அடிபட்டிருக்கு. நானே ட்ரைவ் பன்றேன். முதல்ல இங்க இருந்து போவோம். ஹாஸ்பிட்டல் போய் பார்த்துட்டு கிளம்புவோம்…” என்றவர் தன் கைக்குட்டையை எடுத்து தண்ணீரில் நனைத்து,
“இதை கட்டிக்கோ. ப்ளட் போகுது…” என சொல்லும் போதே ஆகாஷிற்கு மயக்கம் வரும் போல ஆனது.
“ப்பா நீங்க ஓகே தானா?…” என கேட்டுக்கொண்டே சீட்டில் கண் சொருக சாய்ந்தான்.
“ஆண்டவா என் பிள்ளைகளை காப்பாத்தனும்ப்பா…” என்ற வேண்டுதலுடன் காரை கிளப்பினார் மாதவன்.
இங்கே சண்டையை விலக்கிவிட்டு ஜெகன் திரும்பி பார்ப்பதற்குள் அவ்விடமே காலியாகி இருந்தது.
“எங்க போனாங்க?…” என்று யோசிக்கும் போதே அவனின் அப்பா அழைத்தார்.
“ஜெகா, நீயும், மருமகளும் இங்க இருக்கவேண்டியது உங்க கடமை. இங்க இருந்து நம்ம என்ன செய்யனுமோ எல்லாத்தையும் குறையில்லாம செஞ்சு முடிச்சுட்டு அடுத்த நிமிஷம் கிளம்பி நம்ம வீட்டுக்கு வந்து சேருங்க….” என மகனிடம் எச்சரித்தவர்,
“இந்த மனுஷத்தன்மை இல்லாத ஆள் இருக்கற இடத்துல நான் இருக்கமாட்டேன். இவருக்கு ஆமாம் சாமி போடற கூட்டம்னு என்னை நினைச்சாரா? ரத்தம் சொட்ட நிக்கறாங்க. மனுஷனுக்கு அறிவு வேண்டாம்? என்னையும் போகவிடாம புடிச்சு இழுக்காரு…” என்றவர் அருமைநாயகத்தை பார்த்து,
“யார்க்கிட்ட எதை காட்டனும்னு பார்த்து காட்டனும். புடிச்சு இழுக்கறீங்க? அவ்வளோ தான் சொல்லிட்டேன். இந்த வேலை என்கிட்டே வச்சுக்கவேண்டாம். இதே வேற யாரும்ன்னா…” என்ற என்று எச்சரித்துவிட்டு மனைவியுடன் கிளம்பிவிட்டார்.
அவர் கிளம்பியதுமே ஜெகன் பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பினான். அவனும் கோவித்துக்கொண்டு கிளம்புவதாக நினைத்தார்கள் அனைவரும்.
யாரும் அருமைநாயகத்திடம் நெருங்க முடியவில்லை. அந்தளவிற்கு சூடாக இருந்தார்.
இங்கே ஜெகன் அந்த தெருவில் இருந்த அக்கம்பக்கத்தினரிடம் மது குடும்பத்துடன் எங்கே, எப்படி சென்றார்கள் என்று விசாரித்து ஆகாஷின் அண்ணனுக்கு அழைத்து ஆகாஷ் நம்பரை வாங்கி பேச முயல அவன் எடுக்கவே இல்லை.
பதட்டத்தில் தன்னுடைய நண்பர்களிடம் சொல்லி அவர்கள் வந்திருந்த காரை அடையாளம் சொல்லி தேட சொல்லியிருக்க ஏதேதோ ஞாபகத்தில் மனஉளைச்சலில் மாதவன் வண்டியை போன பாதையெல்லாம் திருப்பியவருக்கும் கண்களை மறைத்தது.
கைகள் வலுவிழக்க தலை தளர்ந்து உடல் சரியாய் மனதிற்குள் அழுதுகொண்டே மனைவியையும், விஜய்யையும், ஆகாஷையும் நினைத்தபடி கண்ணை மூடிய நொடி எதிரே வேகமாக வந்த டிப்பர்லாரியால் இடிக்கப்பட்டு முன்பக்கம் இடித்த வேகத்தில் சுழன்று பின்னால் திரும்பி நசுங்கியது அந்த கார்.
இப்படி இவ்விடத்தில் ஜெகன் சொல்லிய கார் விபத்தில் சிக்கியிருக்க ஐயோ என்ற மனதுடன் அவர்களை உடனே மருத்துவமனையில் கொண்டுசேர்க்க சொல்ல மூவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
ஜெகன் சென்ற நேரம் அங்கே பார்க்கமுடியாதென்று கையை விரித்ததும் உடனடியாக கோவை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்கள்.
மதுவின் நிலை கவலைக்கிடமாக மாதவனின் உடலிலும் பலத்த அடி. கழுத்து நரம்புகள் சிதைந்து போயிருந்தது. ஆகாஷிற்கும் கை, கால், முகம் என்று அதிகமான காயங்களே.
விஜய் வரும் பொழுதே ஆகாஷின் குடும்பத்தினரும் வந்துவிட்டிருந்தார்கள் கேரளாவில் இருந்து அவனை பார்ப்பதற்கு.
இப்படி நடக்கவிருந்தது தான் விதியோ? எங்கோ செல்ல இருந்தவர்கள் இங்கே வந்து உயிருக்கு போராடும் நிலை.
பெற்றோர்களுக்கு மகனின் கவலை. மதுவிற்கு தெரிந்துபோனது தான் பிழைக்க மாட்டோம் என்று.
விஜய் கோவை வந்த நேரம் யாரும் சுயநினைவில் இல்லை. ஜெகன் தான் தன் நண்பர்களுடன் ரத்ததானம் செய்திருந்தான்.
மதுவிற்கு ஜெகன் ரத்தம் கொடுத்து கொண்டிருக்க அப்போதுதான் விஜய் உள்ளே வந்தான்.
தாயை பார்த்ததுமே சரிந்து தரையில் அமர்ந்துவிட்டான். உயிர் துடித்தது இருவரையும் பார்க்க பார்க்க. அதோடு ஆகாஷ்.