ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள சென்னிமலை சுப்ரமணியசுவாமி திருக்கோவில்.
மறுவாரம் தை பூச திருவிழா இருக்க அதற்கான ஏற்பாடுகள் கோவில்களில் நடைபெற்றுக்கொண்டு இருந்தது.
காலையில் வந்ததில் இருந்து ஞானசம்பந்தம் தனது மனைவி கமலா ஓரிடத்தில் முதுமையின் காரணமாக ஒதுங்கி அமர்ந்து இருந்தார்கள்.
வெயில் வேறு அடித்து கொளுத்த அதற்கு இணையாக மலை காற்றும் இதமாய் வீசியது.
“என்னத்த காத்தடிச்சாலும் இந்த வெக்கை குறையமாட்டிக்கே. உள்ள அவியுது…” என தனது சட்டையின் முதல் மூன்று பட்டன்களை அவிழ்த்து பின்னால் ஏற்றிவிட்டுக்கொண்டார் சம்பந்தம்.
“ஹ்ம்ம், ஒரு வீசு குளுகுளுன்னு இருந்தாலும் ரெண்டு வீசு அனலா இருக்குது…” என சொல்ல,
“என்ன மாமா தனியா வந்து உக்கார்ந்துட்டீங்க?…” என வந்தமர்ந்தார் அனலரசு.
மருமகன் வரவுமே அங்கு அமர்ந்திருந்த கமலா எழுந்துகொண்டார். கையில் இருந்த விசிறியை எடுத்து சம்பந்தத்திடம் தந்துவிட்டு,
“ஷோபா என்ன செய்யறான்னு பார்த்துட்டு வரேன்…” என்று நகர்ந்துவிட்டார்.
ஷோபா ஞானசம்பந்தம், கமலா தம்பதியினரின் மருமகள். மகன் இளங்கோவின் மனைவி.
மருமகளை தேடி வர அவர் பாவமாய் நின்றுகொண்டு இருந்தார் ஒரு ஓரத்தில். அருகே இளங்கோவும் அவரின் தங்கை வேதவல்லி பேசிக்கொண்டு இருக்க ஓவியா ஷோபாவின் கையை பிடித்தபடி சிரிப்புடன் நின்றாள்.
“என்ன மசமசன்னு இங்க வந்து கும்பலா நின்னுட்டு இருக்கீங்க? வேலை இல்லையா? எந்நேரம் ஆரம்பிக்க?…” கமலா வந்து கேட்க,
“என்னால அவன்கிட்ட பேச முடியாது. கிட்ட போனாலே முறைக்கிறான். இங்க வந்தும் உர்ருன்னு இருக்கான் பாருங்க…” ஷோபா மாமியாரிடம் குறைபட்டார் மகனை பற்றி.
“ஹ்ம்ம், அவன் உன் மேல கோவிச்சு நீயும் தாளிச்ச? போவியா. என்னவோ இன்னைக்கு நேத்து நீ இதை பன்ற மாதிரி அவன் முடுக்குக்கும், நீ தடுக்குக்கும் நின்னுட்டு…” இலகுவாக சொல்லிவிட்டார் கமலா.
“ம்மா, அப்ப நீங்களே போய் கூப்பிடுங்க…” வேதவல்லி சொல்ல,
“இவ எவடி இவளா இருக்கா? வேண்டுதல் என்ன நானா வச்சேன்? பெத்தவளே பம்மிக்கிட்டு இருக்க நான் போய் வாங்கவா?…” என்றவர்,
“இளங்கோ, நீ போப்பா…” என மகனிடம் சொன்னார்.
“யாரு நானா? ம்மா போம்மா…” என அவரும் பின்வாங்கிவிட ஓவியாவிற்கு தான் போய் அவனை அழைக்க ஆசை தான்.
ஆனாலும் தயக்கம். தாயும் எதுவும் சொல்லாமல் இருக்க தானாக எப்படி செல்வது என ஓவியா வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றாள்.
“வேதா நீ போக மாட்ட. அப்ப உன் மகளை அனுப்பு. நல்ல நேரத்துல முடி இறக்க வேண்டாமா?…”
“ஹ்ம்ம், வேண்டினவளும் போவாம, யாருக்காக வேண்டினாளோ அவனும் போவாம நல்லா வந்து வாய்ச்சிருக்கீங்க…” என மகன், மருமகள் இருவரையும் முறைத்துவிட்டு நகர்ந்தார் கமலா.
“இன்னும் என்ன அங்கயே நின்னுட்டு, அவ போய் சொல்லிட்டு வரட்டும். நாம போய் தட்டு எடுத்து தயார் பண்ணுவோம். வாங்க…” என சொல்லி அழைத்துக்கொண்டார் மற்றவர்களை.
வேதவல்லி மகளிடம் சொல்லி அனுப்ப ஓவியா அவனை நோக்கி நடந்து சென்றாள்.
கைப்பிடி சுவற்றில் கை பதித்து கீழே தெரிந்த ஊரின் எல்லையை பார்வையால் அளந்துகொண்டிருந்தவன் கொலுசு சத்தம் கேட்க யார் என தெரிந்தும் திரும்பவில்லை.
“அத்தான்…” என்ற அழைப்பில் முகத்தை திருப்பி பார்த்துவிட்டு மீண்டும் தூரத்தில் வேடிக்கை பார்த்தான் வனமுகிலன்.
“உங்களை கூட்டிட்டு வர சொன்னாங்க. நேரமாச்சாம்…”
“சரி நீ போ. வரேன்…”
“இல்லை, நல்ல நேரத்துல முடி இறக்கனுமாம். வாங்க…”
“வரேன்னு சொல்றேன்ல. நீ போ…”
“அம்மாச்சி திரும்ப கேப்பாங்கத்தான்…” என்றதும் பொறுமையிழந்து திரும்பி நின்று அவளை முறைத்தான்.
“அதான் சொல்றேன்ல வரேன்னு. வராம இருந்தா மொட்டையடிக்காம விட போறாங்களா?…”
அதட்டலாய் சத்தம் கூட்டாமல் அவளிடம் முறைப்புடன் சொல்ல ஓவியாவிற்கு புரிந்தது அவன் நிலை.
“சாமி காரியம். முழு மனசோட செய்யனும். இவ்வளவு கோபப்படாதீங்க…”
ஓவியா சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே தூரத்தில் இருந்து அனலரசு எழுந்து நின்று இவர்களை கவனித்துக்கொண்டு இருந்தார்.
முகிலனுக்கு அவர் பார்ப்பதை கண்டதும் ஓவியாவை அங்கிருந்து அனுப்பத்தான் பார்த்தான்.
“நீ கோவிலுக்குள்ள போ. உங்கப்பா பார்க்க ஆரம்பிச்சாச்சு. கிளம்பு ஓவி…”
“இல்லை, நல்ல நேரம்…” என தனது கையில் இருந்த கடிகாரத்தை பார்க்க,
“என் பேச்சை நீயும் கேட்டுடாத…” என சொல்லி அவளை தாண்டிக்கொண்டு முன்னால் சென்றான்.
ஓவியா தன் சொந்த அத்தை மகள். உறவிருந்தும் உரிமை இருந்தும் எட்டவே நின்றுகொள்பவன் முகிலன்.
இப்போது இருவருக்கும் பரஸ்பர பிடித்தம் தான். பெரியோர்களின் பேச்சு சிறுவயதில் விளையாட்டாகி, பின் அது தான் உண்மை என புரிய தொடங்கிய பருவம் தொட்டு தங்கள் இருவருமே கண்காணிப்புக்குள் இருக்கிறோம் என உணர்ந்துகொண்டான்.
முகிலனுக்கு இப்படி யாரேனும் கவனித்துக்கொண்டே இருப்பது சங்கோஜத்தையும், சங்கடத்தையும் விளைவிக்க தானே விலகி நின்றுவிட்டான்.
இவர்கள் இவர்களாகவே முடிவும் செய்து, இயல்பாய் இருக்கவிடாமல் இப்போது கண்காணித்துக்கொண்டே இருக்க அதுவே ஓவியாவிடம் நெருங்கவிடாமல் தள்ளியே நிறுத்தியது.
மிக சாதாரண பேச்சுக்கள் மட்டுமே இருவரிடத்திலும். யாரும் பார்த்து எதுவும் சொல்லிவிட கூடாதென்பதில் ஏனோ அத்தனை கவனம் அவனுக்கு.
முகிலனது வேலை குடும்பத்தினருக்கு பிடித்தமான வேலை. படிப்பு முதற்கொண்டு மாமனும், தகப்பனும் நிர்ணயித்தது.
அவர்களுக்கென படித்தும், வேலைக்கும் சென்று பெருமை சேர்த்துவிட்டான். ஆனால் தனக்கென்ன பிடிக்கும் என்பது யாரும் கேட்டதும் இல்லை. வாய்விட்டு அவனாக சொன்னதும் இல்லை.
இதுதான் நல்லது, இப்படிதான் இருக்க வேண்டும், இதுதான் மரியாதை என பாடம் எடுப்பவர்களிடம் சிறுவயதில் பயந்து சம்மதித்தவன், வளர வளர மரியாதைக்கு ஒப்புக்கொண்டவன், அதன் பின்னர் அவர்களின் சந்தோஷத்திற்கு என விட்டுவிட்டான்.
ஆனால் ஞானசம்பந்தத்திற்கு தெரியுமே? விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இளங்கோவிற்கு அதனை பாதுகாக்க எல்லாம் விருப்பம் இல்லை.
விடிந்ததில் இருந்து அடையும் வரை வயல், வரப்பு, தோப்பு என்றா சுற்ற முடியும்? அவர் எண்ணமோ சிட்டியில் நல்ல வேலையிலிருக்க வேண்டும் என்பதே.
படிப்பு, ஆர்வமும் கைகொடுக்க சரி போகிற வரை போகட்டும், அதன் பின்னர் இங்கே தானே வர போகிறான் என விட்டுவிட்டார் சம்பந்தமும்.
தனது தங்கைக்கும் தன்னை போல வேலை செய்யும் மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்து வேதவல்லியை திருமணம் செய்து வைத்துவிட விவசாய வாசமே அறியாத அனலரசுவின் குடும்பத்திற்கு மருமகளானார் அவர்.
அனலரசு குடும்பத்தினர் சொந்தங்கள் என அத்தனைபேரும் நகரத்திலேயே பிறந்து அந்த வாழ்க்கை முறையில் ஊறி போனவர்கள்.
விவசாயமென்பது அந்தளவிற்கு பெரிதாய் அனலரசுகு தோன்றாத ஒன்று. அதில் என்ன இருக்கிறது என்னும் அலட்சியம் கூட.
ஆனால் வனமுகிலன் அப்படி அல்ல. தாத்தா ஞானசம்பந்தத்தை கொண்டு பிறந்தவன்.
இயற்கையும், கிராமமும் தரும் நிம்மதியும், சந்தோஷமும் அலாதியானது என நினைப்பவன்.
சிறுவயதில் இருந்தே தாத்தாவின் கிராமம் என்றால் போதும். பெற்றோர்களை தேட மாட்டான்.
அந்தளவிற்கு அங்கே லயித்துவிடுபவனை இழுத்துக்கட்டி வைத்திருந்தார்கள் இளங்கோவும், அனலரசுவும்.
தகப்பன்கள் ஒருவிதமென்றால் பெண்கள் இன்னொருவிதம். சாந்தமே உருவான ஷோபா.
மகனின் சிறு முறைப்பிலும் பாவமாய் ஓரம் தங்கிவிடுபவர். வேதவல்லி நேர்மாறாக பயந்து எல்லாம் போகாதவராக இருந்தாலும் அனலரசு பேச்சு தான் அங்கேயும்.
இன்று முடியிறக்கும் வேண்டுதல். வேண்டியது ஷோபா. வேண்டுதல் கணவனுக்காக. முடி கொடுக்க போவதோ வனமுகிலன்.
“முகிலா…” தாத்தாவின் குரலில் உள்ளே சென்றவன் நின்று திரும்பி பார்க்க,
வேறு உடையை மாற்றிவிட்டு சட்டையை கழற்றிவிட்டு மேலே ஒரு பெரிய வெள்ளை துண்டை போர்த்திக்கொண்டு வந்து அமர்ந்தான் வனமுகிலன்.
காணிக்கை வைக்கப்பட்டு வந்தவர் அவனின் தலைமுடியை மழிக்க ஆரம்பிக்க எங்கும் குறை வந்துவிடாதபடி இருக்கவேண்டுமே என வேண்டுதலுடன் ஷோபா குனிந்து பார்த்துக்கொண்டு இருந்தார்.
முடியை இறக்கிக்கொண்டிருந்தவரின் கையை லேசாய் தொட்டு நிறுத்தும்படி சொன்னவன் அவர் நிறுத்தியதும் பாதி எடுத்த மொட்டை தலையுடன் நிமிர்ந்து தாயை பார்த்தான்.