உடைந்து நின்ற வேதாவை அமரவைத்த முகிலன் அவருக்கு வியர்த்திருக்க தன் அம்மாவை பார்த்தான்.
“ம்மா, என்னன்னு பாருங்க…” என ஷோபாவிடம் சொல்ல,
“இங்க இனி பார்க்க என்ன இருக்கு முகிலா? வா நாம கிளம்புவோம்….”
“ம்மா…” என அதிர்ச்சியுடன் ஷோபாவை பார்த்தான்.
ஓவியாவும், வேதாவும் மனது மரத்த நிலையில் தான் இருந்தார்கள். சஞ்சய் செய்தது ஒருவகை என்றால், அனலரசு செய்தது இன்னொருவகை அநியாயம்.
கட்டிய மனைவியின் மேல் நம்பிக்கை இல்லை என சொல்லும் கணவர். அதுவும் அத்தனைபேரின் முன்னிலையில்.
அர்த்தமற்ற ஒரு உறவில் இத்தனை நாள் இருப்பதை எண்ணி அழ கூட முடியவில்லை அவருக்கு.
ஆசைகள் துறந்து, விருப்பங்கள் தளர்த்தி கொண்ட உறவு மேன்பட, பிள்ளைகளின் நலனை முன்னிறுத்தி என தன்னுடைய மொத்த வாழ்க்கையையும் அர்பணித்த பெண்மணியின் கூக்குரல் மனதிற்குள்ளேயே ஒலித்து ஓய்ந்தது.
“கிளம்புவோம் முகில். வேதா வந்தா கூட்டிட்டு போவோம். இங்க வேண்டாம். மதிப்பில்லைன்னு தெரியும். ஆனா சக மனுஷத்தன்மையும் இல்லைன்னு இப்போ தான் புரியுது…” அனலரசுவை பார்த்துக்கொண்டே ஷோபா சொல்ல பதில் சொல்லும் நிலையில் அனலரசுவும் இல்லை.
உறக்கத்திலிருந்து விழிப்பவராக தனது போனை எடுத்து மகனுக்கு அழைத்தார் வேகமாய்.
அழைப்பு செல்லவே இல்லை. மீண்டும் மீண்டும் முயற்சித்து, வீட்டு எண்ணிலிருந்தும் அழைப்பு விடுக்க அதுவும் செல்லவில்லை.
கண்கள் கலங்கி சிவந்து போக பார்த்தவரின் முகம் இப்போது ஆங்காரத்தை பூசியது.
தான் மகனின் செயலில் முகம் கறுத்து உடைந்து நின்றதும், குலைந்து போனதும் முகிலனின் கேள்வி வரைக்குமே.
தன்னையே நிறுத்தி கேள்வி கேட்பவனின் முன் தான் தாழ்ந்து போவதா? அதுவும் மகள் வேறு பேசி தன்னுடைய நிலையை தாழ்த்தியதாக நினைத்தவருக்கு உண்மை புரிந்தாலும் ஏற்கும் மனநிலையில் இல்லை.
தன்னை இந்த இடத்தில் நிறுத்தியதில் பெரும்பங்கு முகிலனுக்கு உண்டு என்றே இன்னும் நினைத்து அவனை முடக்கிவிட பேசலானார்.
“உன்னால தான். எல்லாமே உன்னால தான்டா. என் பிள்ளை இப்படி முடிவெடுக்க காரணமே நீ தான்…” மீண்டும் முகிலன் மீது தான் பாய்ந்தார் அவர்.
“இல்லன்னா, இல்லன்னா என்னம்மா பண்ணுவ? இவன் மட்டும் அன்னைக்கு என்னை எதிர்த்து பேசலைன்னா இன்னைக்கு என் மகனுக்கு என் மேல ஒரு பயம் இருந்திருக்கும்…” என்று சொல்ல ஓவியாவிற்கு வெறுத்துவிட்டது தந்தையின் பேச்சில்.
“அத்தை நீங்க கிளம்புங்க. பேசினாலும் புரிஞ்சிக்க மாட்டாங்க. விட்டுடுங்க….” என ஓவியா சொல்ல,
“என்ன இன்னைக்கு பேச்செல்லாம் அதிகமா இருக்குது? என் பிள்ளை தப்பு பண்ணிட்டான் தான். ஆனா நான் நினைச்சா அடுத்த நிமிஷமே அவனை என் காலடில கொண்டு வந்து போட முடியும். இப்பவும் எனக்கு பயந்து தான் சொல்லாம போயிருக்கான்…” என்றார் இறுமாப்புடன்.
“பார்த்துக்கிட்டே இருங்க. இப்ப இப்பவே நான் ஏர்போர்ட் போய் அவனை கையோட கூட்டிட்டு வரேன்…” என சொல்லியவர் அவ்விடத்திலிருந்து கிளம்ப அத்தனைபேருக்கும் ஆயாசமாய் இருந்தது.
“என்ன, என்ன முகிலா இது? இவர் ஏன் இப்படி இருக்கார்?…” ஷோபா வேதாவை பார்க்க,
“அத்தை நீங்க இருங்க…” என சொல்லி வேதாவிற்கு குடிக்க தண்ணீரை எடுத்து வர சென்றாள் ஓவியா.
“வேதா நீ கிளம்பி வா, நம்ம வீட்டுக்கு போவோம்…” ஷோபா அழைக்க,
“ம்ஹூம், வேண்டாம்…” வேதா வெகு நேரம் கழித்து பேசினார்.
வேதாவின் முகம் மிகவும் இறுகி இருந்தாலும் ஒரு முடிவுடன் இருப்பதை போல இருந்தது.
“நீங்க கிளம்புங்க, நான் பார்த்துக்கறேன் அண்ணி….” என்றார் வேதா.
“என்ன பேசற நீ? பார்த்த தானே? நடந்ததை தெரிஞ்சும் கூட இப்பவும் முகில் மேல தான் தப்புன்றார். என்ன நினைக்கார்னே புரியலை எங்களுக்கு. இப்ப போய் சஞ்சய்யை கூட்டிட்டு வருவேன்னு கிளம்பிட்டார்…”
“ம்மா, கண்டிப்பா சஞ்சய் வர மாட்டான்…” முகில் சொல்ல,
“எனக்கும் அதுதான் தோணுது. அவன் வரமாட்டான். இங்க இருந்தவரைக்கும் பாசம்ன்றதை தாண்டி தன்னோட வாழ்க்கைன்னு வரும் போது யாரும் தேவை இல்லைன்னு நினைச்சவன். கண்டிப்பா வரமாட்டான். அப்பா தனியா தான் வருவார்…” ஓவியாவும் சொல்ல,
“அப்படி வந்தா இன்னும் தேவை இல்லாம சண்டை வரும் ஓவி. இங்க இருந்தீங்கன்னா உங்களை ரொம்ப பேசுவார். எனக்கு சரியா படலை…” ஷோபாவிற்கு அவர்களை அப்படியே விட்டு செல்ல மனதில்லை.
“இனியும் அம்மாவை பேச நான் விடமாட்டேன் அத்தை. நான் பார்த்துக்கறேன்…” என ஓவியா சொல்ல அவளை பார்த்து முறுவலித்தார் வேதா.
“என் பொண்ணுக்கு இப்ப தான் பேசனும்னு தோணிருக்கு போல. ஆனா நான் பாக்கியசாலி தான். எனக்காக இத்தனை பேர் இருக்கீங்களே?…” வேதா சொல்ல,
“உனக்காக நாங்க எப்பவும் இருப்போம் வேதா. நீ ஏன் அதை வேற மாதிரி நினைக்க? இருக்கனும்னு அதிகாரமா சொல்லு. வேதா எப்பவும் அப்படித்தானே இருக்கனும். அந்த வேதா தானே எங்களுக்கும் பிடிக்கும்…” ஷோபா சொல்ல அவரின் தோளில் சாய்ந்துகொண்டார் வேதா.
“இது போதுமண்ணி, வேற என்ன பெருசா நான் சாதிக்க போறேன்?…” என்று பேச, ஷோபா அவருக்கு தைரியமான வார்த்தைகளை சொல்லி தேற்றிக்கொண்டிருந்தார்.
“ஓவி இங்க வா…” என அவர்கள் பேசட்டும் என ஓவியாவை தனியே அழைத்து வந்தவன்,
“யார் ஸ்ரேயா?…” என்றான்.
“அத்தான்…”
“நீ அந்த பேர் சொல்லவும் அவ்வளோ ஷாக் ஆனா. அதே நேரம் ரொம்ப பயந்து போன. என்னாச்சு? உனக்கு அந்த பொண்ணை தெரியுமா?…”
“முழுசா உங்களுக்கு தெரியாதா த்தான்?…”
“ம்ஹூம், ஒரு தடவை போட்டோல காமிச்சான். கூட வொர்க் பன்ற பொண்ணு. ஆனா வேற பிராஞ்ச் இப்டித்தான் சொன்னான். வேற எந்த டீட்டேய்லும் சொல்லலை…”
“த்தான் அவங்க ஏற்கனவே லிவ் இன் ல இருந்தவங்க வேற ஒருத்தரோட…” என முகிலனின் முகம் போகும் போக்கை கவனித்துக்கொண்டே கேட்க அவனுக்கு அதிர்ச்சி.
“வாட்?…”
“ஆமா, அவங்க பேமிலி எவ்வளவோ சொல்லியும் கேட்காம எனக்கு பிடிச்சதை தான் செய்வேன்னு வெளியூர்ல பர்ஸ்ட் வேலை பார்த்த இடத்துல ஒருத்தரோட சேர்ந்து வாழ்ந்திருக்காங்க…”
“இது சஞ்சய்க்கு தெரியுமா?…”
“தெரியும். தெரியாம இருக்க வாய்ப்பில்லை…” என்றாள் கசந்த முகத்துடன்.
“அவரோட ஒத்து வரலைன்னு தான் இங்க வந்தாங்க. ஆனா இங்க அண்ணாவோட பழக்கமாகி கல்யாணம் வரைக்கும் போவாங்கன்னு நான் நினைக்கல. இதுவே எனக்கு ஷாக். சத்தியமா அவங்களோட அண்ணாவுக்கு செட் ஆகாது. அவங்க மென்டாலிட்டியே வேற…”
ஓவியா சொல்லும் பொழுதே அப்படி ஒரு பிடித்தமில்லாத, ஏற்றுக்கொள்ளமுடியாத உணர்வு அவள் முகத்தில்.
“உனக்கு எப்படி தெரியும்? அந்த ஸ்ரேயாவோட இவ்வளோ டீடெய்ல்ஸ் உனக்கு எப்படி?…”
“அவங்களோட சிஸ்டர் என்னோட தான் டான்ஸ் அகாடமிக்கு வராங்க. ரொம்ப க்ளோஸ் சர்க்கிள் இல்லைன்னாலும் ப்ரென்ட் தான். நிறையதடவை ரெண்டுபேரும் சேர்ந்தே ஸ்டேஜ் பெர்பாமென்ஸ் பண்ணிருக்கோம். அந்த பொண்ணை பார்க்க அவங்க அடிக்கடி வந்திருக்காங்க..”
“அங்க வச்சுதான் இவங்க மீட் பன்னிருப்பான்களா?…”
“தெரியலை த்தான். ஆனா வாய்ப்பிருக்கு. என்னை ட்ராப் பண்ண, பிக்கப் பண்ணன்னு அண்ணா தானே அதிகமா வருவான். அந்த ஸ்ரேயா அவங்க தங்கச்சியை பார்க்க வந்திருக்காங்க. அந்த பொண்ணு வீட்டுக்கு தெரியாம பேசும்போல…”
“அது நமக்கெதுக்கு? ஆனா இவன் பண்ணிருக்கறது?…” என கழுத்தை தேய்த்துக்கொண்டவன் மனதே சரியில்லை.
வெறுமனே லவ் என்று சொன்னாலே குதிப்பவர் அனலரசு. இப்போது இதுவும் தெரிந்தால்? நினைக்கவே அச்சமாக இருந்தது.
“சஞ்சய் எல்லாமே க்ராஸ் பண்ணிட்டான் ஓவியா. உன்னோட அப்பா அதை எப்படி புரிஞ்சுப்பார். நான் வந்ததே இதை அவன் சொல்லவும் பேசி அவனுக்கு சப்போர்ட்டா இந்த கல்யாணத்தை எல்லாரையும் வச்சு செய்யலாம்ன்னு தான்…”
சொல்லும்பொழுதே முகிலனின் முகம் மாறிவிட ஓவியாவிற்கு கேட்கவே சகிக்கவில்லை.
“அப்பா சம்மதத்தோட நிச்சயம் கல்யாணம் பேச முடிஞ்சிருக்காது த்தான். அப்பா ஒத்துக்கவே மாட்டார். அதுவும் ஸ்ரேயாவோட பாஸ்ட் தெரிஞ்சா சுத்தம். எனக்கே ஏத்துக்க முடியலை…”
“அப்படி நாமளா சொல்லிற முடியாது. ஒருவேளை அந்த பொண்ணு நல்ல பொண்ணா இருந்தா? அப்படி யோசியேன்…”
“இல்லை த்தான், எனக்கு இதை ஏத்துக்க முடியலை. எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்குது. வாழ்க்கை இப்படித்தான் இவங்களோடன்னு இருக்குது. அதை விட்டுட்டு எப்படி வேணாலும் வாழ்வேன், என்னை யார் கேட்பான்னு இருந்தா?…”
இவளுக்குள் இத்தனை இருக்கிறதா என யோசித்து அவளை பார்க்க எதையும் கவனிக்கும் நிலையில் இல்லை ஓவியா.
தாயின் வாழ்க்கை அப்படி ஒரு பாடத்தை கற்று கொடுத்திருந்தது. சொல்லால் உணர்த்தாத பாடங்கள்.
அதனை அனுபவத்தில் அறிந்துகொண்டவளின் வலி குறைவில்லாத சீற்றத்தை காட்ட தயாராக இருந்தது.
அந்த சீற்றம் அனலரசுவிற்கு மட்டுமல்ல முகிலனுக்குமே என ஒருவருக்கும் புரியவில்லை.
சிறிது நேரம் மட்டுமே அங்கே இருந்தார்கள் ஷோபாவும் முகிலனும். கிளம்பும்படி வேதா சொல்ல,
“நீயும் கூட வா த்தை…” என்றான் வேதாவின் கையை பிடித்து முகிலன்.
“சொன்னா புரிஞ்சுக்கோ முகிலா. இதுக்கு மேலையும் நான் தெம்பா, திடமா தான் இருக்கேன். ஆமா எனக்கு கஷ்டமா தான் இருந்துச்சு. இப்ப நான் கிளம்பி வந்துட்டா என்னோட முகத்தை பார்த்தே நீங்க எல்லாரும் வருத்தப்பட்டுட்டு இருப்பீங்க…”
“அப்படி எல்லாம் இருக்க மாட்டோம். நீ வா. நார்மலா இரு…”
“நான் இப்ப நார்மலா தான் இருக்கேன். பாரு நல்லா பேசறேன் தானே? அப்ப நான் நார்மல் தானே? அவன் போய்ட்டா? அந்த மனுஷன் அப்படி பேசினா நான் எதுக்கு நொடிஞ்சு போகனும். அதுதான் அவங்க குணம். இதுதான் நம்ம குணம். இப்ப தான நான் இன்னுமே தைரியமா இருக்கனும்…”
வேதா மகளை நோக்கி கை நீட்ட அவரின் கைகளுக்குள் தன் முகம் தந்து வந்தமர்ந்தாள் ஓவியா.
“என் பொண்ணு, இவ நாளைக்கு இன்னும் தைரியமா வாழ்க்கையை வாழனும். யாரை நம்பியும் இருக்க கூடாது. அதே நேரம் இவ வாழற சூழல் இதை மாதிரி இருக்க கூடாது…”
“அத்தை நான் இருக்கேனே?…”
“இதுதான் வேண்டாம். நீ நீயா இரு. அவளுக்கு புருஷனா நீ இரு. அவளுக்கு எல்லாமா இருக்கனும்னா உன்னோட ஒத்துழைப்பை குடு. அவளோட துணையா இரு. ஆனா கைக்குள்ள போட்டு பொத்தி வச்சுக்காத வாழ்க்கையை குடுக்கனும்…”
“எனக்கு புரியுது த்தை. நானும் உன்னோட வாழ்க்கையை, என் அம்மாவோடதை பார்த்திருக்கேனே?…”
“இன்னும் என் பொண்ணுக்கு சில பாடங்கள் புரியவேண்டி இருக்குது. அவ இன்னைக்கு நின்ன மாதிரி எப்பவும் தன்னுடைய தைரியத்துல நிக்கனும். அதுக்கு நாங்க இங்க இருக்கனும். நீங்க கிளம்புங்க…”
வேதா சொல்லவும் ஷோபாவும் அவரின் பேச்சை மதித்ததோடு பெருமையாகவும் நினைத்தார்.
“எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை வேதா. ஆனா ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு நீ இப்படி பேசறது. நான் நினைப்பேன் இப்படிலாம் இருக்கனும், பேசனும்னு. ஆனா இயல்பான குணம்ன்னு ஒண்ணு அதை தாண்டி வரவிடமாட்டேங்குது…”
ஷோபாவின் கையை பிடித்துக்கொண்ட வேதா அவரை பார்த்து ஆறுதலாகவும் தைரியமாகவும் புன்னகைத்தார்.
வரும் வழியெல்லாம் அத்தனை புலம்பல் ஷோபா. இப்படியா வேதாவிற்கு நடக்க வேண்டும் என சொல்லி சொல்லி மாய்ந்து போனார்.
அங்கே விடாத கண்ணீரை இங்கே பொழிந்து காரில் மகனிடம் சொல்லி சொல்லி அழுதுகொண்டே வர முகிலனின் முகத்தில் வருத்தமே மேலோங்கி இருந்தது.
வீட்டிற்கு வந்ததும் ஷோபாவை இறக்கி விட்டுவிட்டு ஏர்போர்ட் நோக்கி தான் சென்றான் முகிலன்.
செல்லும் முன் அனலரசு வீட்டிற்கு வந்துவிட்டாரா என ஓவியாவிற்கு அழைத்து கேட்க அவள் இல்லை என்று சொல்லவும் வரவும் தனக்கு அழைக்குமாறு சொல்லி வைத்துவிட்டான்.
இன்னும் சஞ்சயின் ப்ளைட் கிளம்ப நேரம் இருக்கிறது. ஆனால் தான் அங்கே செல்வதற்குள் அவன் கிளம்பிவிடவும் வாய்ப்பிருக்க காரை கவனமாக அதே நேரம் சற்று வேகத்துடனே செலுத்தினான்.
நினைத்ததை போலவே முகிலன் அங்கே செல்லும் முன்பே விமானம் பறந்திருந்தது.
நேரத்தை பார்த்துக்கொண்டே பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு ஓவியாவுக்கு அழைத்துக்கொண்டே உள்ளே ஓடினான்.
“இன்னும் அப்பா வரலையே த்தான்…” என்றாள் அவள்.
“சரி நான் கூப்பிடறேன்…” என சொல்லியவன் உள்ளே சென்று அனலரசுவை தேட ஆரம்பித்தான்.
ஓரிடத்தில் ஓரமாக மிகவும் குறுகிய முகத்தோடு அவர் அமர்ந்திருந்த விதமே முகிலனை உலுக்கியது.
போட்டிருந்த சட்டை எல்லாம் வியர்த்து போய் அவர் முகமே ரத்தபசையற்று காணப்பட வேகமாக வரைந்தான்.
“மாமா…” என இவன் அழைத்ததுமே நிமிர்ந்து பார்த்தவரின் கண்கள் சரசரவென கண்ணீரை பொழிந்துவிட அதிர்ந்து போனான்.
“முகிலா…” என தழுதழுத்த குரலில் இருக்க கண்ணீர் நிற்கவே இல்லை.
“மாமா, ஏன் அழறீங்க? அழாதீங்க. நாங்க எல்லாரும் இருக்கோம்….” என அவரை நெருங்கி கண்ணீரை துடைக்க போக அழுகையை அடக்கியவர் உடனே தன் புறங்கையால் கண்ணீரை துடைத்துக்கொண்டு வேகமாக எழுந்தார்.
உடலும், மனதும் ஏற்கனவே துவண்டிருக்க நடக்கவும் தெம்பில்லாததை போன்ற தோற்றத்தில் வலுவிழந்து மீண்டும் இருக்கையில் அமர்ந்துவிட்டார்.
“மாமா, என்ன செய்யுது? இங்க பாருங்க. இப்ப நீங்க பிடிவாதம் பிடிக்க வேண்டிய நேரமில்லை. இப்படி நடந்துக்காதீங்க…” என்றதும் அவனை பார்வையால் எரித்தவர்,
“உன் வேலை என்னவோ அதை பார்த்துக்கோ. நான் எப்படி நடக்கனும்னு நீ எனக்கு சொல்லி தரியா?…” என்றவர் முயன்று எழுந்து நின்றார்.
“மகனே இல்லைன்னு ஆனா பின்னாடி யார் இருந்தா எனக்கென்ன? போய்டு…” என்று சொல்ல,
“உங்க கோவத்தை விட்டுட்டு கொஞ்சமாவது மத்தவங்களை புரிஞ்சுக்க முயற்சி செய்ங்க….”
“எனக்கு தேவை இல்லை. நீ யார் எனக்கு? நான் ஏன் உன்னை புரிஞ்சுக்கனும்? கொள்ளி வைக்க மகனே இல்லைன்னு முடிவு பண்ணிட்டேன். உன்னை எதுக்குடா புரிஞ்சுக்கனும்? போடா போடா…” என சொல்லும் பொழுதே தொண்டை சிக்கிக்கொண்டது.
மீண்டும் முகம் கலங்கி போக கண்ணீர் ததும்பிவிட முகிலனை விட்டுவிட்டு வேகமாய் அவ்விடத்தில் இருந்து கிளம்பிவிட்டார் அனலரசு.
அனலரசு இப்போதும் அதே அனலரசுவாகவே தான் முகிலனின் கண்ணுக்கு தெரிந்தார்.
அந்த சூழ்நிலையிலும் தான் அவ்விடத்தில் என்ன தவறு செய்தோம் என யோசிக்கவும் இல்லை, தன்னுடைய கஷ்டத்தை சொல்லி தீர்க்க யாரையும் தேடவும் இல்லை.
யாரையும் நெருங்கவிடாது, தன் பலகீனத்தை காண்பிக்காது தனக்குள்ள வட்டத்திற்குள் ஒருவரையும் அனுமதிக்க அவர் விரும்பவில்லை.