அமராவது அப்போதுதான் கல்லூரி மூன்றாம் ஆண்டு படித்து முடித்துவிட்டு வங்கித் தேர்வுகளுக்காக கோச்சிங் சேர்ந்திருந்தாள். அன்றும் கோச்சிங் வகுப்பு முடிந்து அவள் பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்தாள். பேருந்து வருவதற்காக காத்திருக்க , பக்கத்தில் ஒருவன் வந்து நின்று,
“ஹலோ” என்றான். யாரென பார்த்தவளுக்கு நினைவு வந்துவிட்டது. அவனின் பெயர் கூடத் தெரியாது. ஆனால் அவன் அவளுக்கு ஒரு பெருமுதவி செய்திருந்தான்.
அவள் கல்லூரி படிக்கும்போது சந்தோஷ் என்பவனைக் காதலிக்க, அவனோ ஆள் சரியில்லை என தெரிந்து இவள் விலக, சந்தோஷ் அவளைத் தேடி வந்து தொந்தரவு செய்து கொண்டிருந்தான். வீட்டிலும் சொல்லத் தயக்கம், அவர்களைப் பயமுறுத்த அவளுக்கு விருப்பமில்லை, அதைவிட அமராவதி துணிச்சல் உள்ள பெண்.
சந்தோஷ் அவளை நித்தமும் பின் தொடர்ந்து வம்பு செய்ய, அவளோ தெளிவாய் இருந்தாள். சந்தோஷ் சரியில்லை, அதனால் விலகுவதே சாலச் சிறந்தது என்பது அவள் எண்ணம். அதை விட இப்போது வயதும் கூடியிருக்க பக்குவமும் பாவைக்கு வந்து சேர்ந்திருக்க முடிவில் உறுதியாய் இருந்தாள்.
அப்படி சந்தோஷ் இவளிடம் வம்பு செய்த அன்று வந்து அவனை மிரட்டி இவள் வழிக்கு வராமல் செய்தவன்தான் அவளருகே நிற்பவன் என்று அமராவதிக்குத் தெரிந்தது. அன்று அவனிடம் நன்றி சொல்லியதுடன் அவனைக் காண முடியவில்லை.
இவன் என்ன செய்தானோ தெரியாது, சந்தோஷின் தொல்லை அறவே இல்லை.
“ஹலோ, நீங்க இங்க எங்க?” என்று இவளும் புன்னகையுடன் பேச, அவனோ இவள் எதிர்ப்பாரா சந்திப்பு என நினைத்திருக்க, இவளை எதிர்ப்பார்த்து நிற்கிறேன் என்றான்.
அமராவதி அவனை நன்றாய் நிமிர்ந்து பார்த்தாள். கரையிட்ட வேஷ்டியும் வெள்ளை சட்டையும் அணிந்திருந்தான். முகத்தில் கிண்டல் கேலி எதுவும் இல்லை, அவ்வளவு தீர்க்கமாய்ப் பேசினான்.
“இங்க பாருங்க ஸர், இந்த கண்டதும் காதல் எல்லாம் நான் நம்புற ஆள் இல்லை, நீங்க எனக்கு ஹெல்ப் பண்ணீங்க, ரொம்ப தேங்க்ஸ் தட்ஸ் ஆல். உங்க மேல ஒரு மரியாதை இருக்கு, ஓகே நீங்க உங்க விருப்பம் சொல்லிட்டீங்க, பட் எனக்கு அதுல விருப்பமில்லை. ஸோ மரியாதையா விலகிடுங்க” என்றாள் இவளும் நிமிர்வாக. தயக்கமின்றி தெளிவாய் தேவையான பேச்சு அவ்வளவுதான்!
“கண்டதும் காதல் எல்லாம் இல்லை வதிம்மா, நீ காதலிச்சவன் தப்பானவன்னு தெரிஞ்சதும் அதை போல்டா வேண்டாம்னு முடிவு செஞ்ச, சிலருக்குத் தப்புன்னு தெரிஞ்சாலும் அவனை மாத்திடலாம், இல்லை காதலிச்சிட்டோம்னு ஒரு டாக்சிக் ரிலேஷின்ஷிப்ல இருப்பாங்க. நீ அப்படி இல்லை, கொஞ்சம் கூட உன் பேச்சுல பயமில்லை, எனக்கு உன்னோட தைரியம் ரொம்ப பிடிச்சது” என்று அமராவதியின் கண்பார்த்து காதல் சொன்னான் கார்வண்ணன்.
“அப்படின்னா மேரி கோம் மாதிரி எத்தனையோ தைரியமான பொண்ணுங்க இருக்காங்க, என்னை விட பலசாலியா அப்படி ஒருத்தங்களைப் பாருங்க ஸர்” என்றாள் கடுப்பாக.
“தைரியம் உடல்ல இல்லை, மனசுல இருக்கு. அது உனக்கு நிறைய இருக்கு, உன்னை நேசிக்க ஆரம்பிச்ச நொடியில இருந்து மனைவியா நினைச்சிட்டேன் வேற யாரையும் என்னால நினைக்க முடியாது” என்றான் உறுதியாக.
“ஷட் அப்! உங்க பெயர் கூட எனக்குத் தெரியாது, இப்படி வந்து உளறிட்டு இருக்கீங்க” என்றாள் எரிச்சலாக.
“ம்ம், பெயரை இப்படி கூட கேட்கலாம் போலயே, என் பெயர் கார்வண்ணன்” என்றான் புன்னகையுடன்.
“எதிர்க்கட்சித் துணைத் தலைவர் வீகே தெரியுமா வெங்கட கிருஷ்ணன் அவரோட பையன்” என்றபோது அதுவரை இல்லாத அச்சம் அமராவதியின் மனதில்.
“என்ன ஷாக் ஆகிட்ட?” என்று அவளின் அமைதியின் கார்வண்ணன் கேட்க
“இல்ல..நீங்க அரசியல்வாதியா?” என்றாள் திணறலாக.
“ஆமா” அவளின் எண்ணவோட்டம் தெரியாமல் இவன் பேசினான்.
“எனக்கு இப்போ அந்த ராஸ்கல் சந்தோஷ் பார்த்து கூட பயமில்லை, உங்களைப் பார்த்துதான் பயமா இருக்கு, அவனையாச்சும் போலிஸ்ல கம்ப்ளையெண்ட் செய்யலாம், இப்போ நான் உங்க ப்ரோபோசலுக்கு ஒத்துக்கலன்னா என்னைக் கடத்திட்டுப் போய்டுவீங்களா? ரேப் பண்ணுவீங்களா?” என்ற அமராவதிக்கு இப்போது அவ்வளவு பயம். கார்வண்ணனிடம் இருந்து இன்னும் நாலடி தள்ளி நின்றாள்.
அவள் பேச்சைக் கேட்டவனுக்கு அதிர்ச்சியாகப் போயிற்று.
“அமரா, என்ன பேசுற? நிறைய சினிமா பார்ப்பியா?” என்றான் கோபமாக.
“இங்க பாருங்க, எனக்கு இந்த அரசியல்வாதிங்களை சுத்தமா பிடிக்காது, போலிஸ்ல கூட நல்ல போலிஸ் கெட்ட போலிஸ் இருப்பாங்க, ஆனா அரசியல்வாதிங்க எல்லாருமே கெட்டவங்க, ஐ அம் ஸாரி. என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க” என்றவள் விறுவிறுவென சிறிது தூரம் சென்று ஷேர் ஆட்டோவில் ஏறி வீடு போய்விட்டாள்.
ஆனால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் அவளைக் காண்பதை வழக்கமாக்கியிருந்தான் கார்வண்ணன். அவன் வரும் நேரம் பேருந்து வந்துவிட உடனே ஏறிவிடுவாள். இன்றும் அப்படியாகிவிட உடன் கார்வண்ணனும் ஏறிவிட்டான்.
“என்ன செய்றீங்க நீங்க?” பதட்டமாய் அமராவதி கேட்க
“காமராசர், அண்ணா எல்லாம் அரசியல்வாதிங்களா இல்லை மந்திரவாதிங்களா?” என்று அவன் கேட்க இவள் முழித்தாள்.
“சும்மா பொத்தாம்பொதுவா எல்லாரையும் பேசக் கூடாது அமரா, என் கூட பழகிப் பார்த்துட்டு என்னைப் பிடிக்கலன்னா ஏத்துக்க முடியலன்னா சொல்லு நான் விலகிடுறேன். எனக்குப் புரியுது சந்தோஷ்” என்றவனை கோமபாய் இடைமறைத்தவள்
“அவன் மேல எனக்கு இருந்தது ஜஸ்ட் ஒரு க்ரஷ், அவ்வளவுதான். அதை நான் தப்பா நினைச்சிட்டேன், இன்னொரு வாட்டி அவனைப் பத்தின பேச்சு நமக்குள்ள வேண்டாம்” என்றாள் கோபத்துடன்.
“அப்போ வேற என்ன பேச்சுவார்த்தை வைச்சிக்கலாம் நம்மக்குள்ள?” என்றவனின் கேள்வியில் தான் விட்ட வார்த்தைகள் புரிய
“எனக்கு நிஜமா பயமாயிருக்கு ஸர், இங்க பாருங்க நான் மிடில் கிளாஸ். இதெல்லாம் செட் ஆகாது, உங்களுக்கு இந்த போலிஸ், மீடியா எல்லாம் சகஜமா இருக்கும், என்னால அந்த லைஃப்ஸடைலுக்கு எல்லாம் ஒத்துக்க முடியாது, அதைவிட எனக்கு உங்க மேல ஒரு ஃபீலிங்கும் வரல. ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க”
“அதைத்தான் நானும் சொல்றேன் அமரா, புரிஞ்சிக்கோ. எங்கூட ஜஸ்ட் ஒரு ப்ரண்டா பழகிப்பாரு, நான் லிமிட் க்ராஸ் செய்ய மாட்டேன். ஒரு மாசம் என்னோட பேசி பழகு, உனக்கு அப்பவும் என் மேல கொஞ்சமும் பிடித்தம் இல்லைன்னா நான் விலகிடுறேன், ஐ ப்ராமிஸ்” என்றான் உறுதிபட.
அந்த உறுதியை அவள் உள்ளத்தில் நுழையும்வரை காப்பாற்றினான் கார்வண்ணன்.
மூன்று மாதங்கள் சென்றிருக்க, அவளும் அவனுமாக பேருந்து பயணம். ஏதோ பொதுவான பேச்சுதான், இன்றில்லை எப்போதும் அப்படித்தான். அவனைப் பற்றி, அவன் குடும்பம் பற்றி சொல்வான், அதைத்தாண்டி மிக மிக பொதுவான பேச்சுகள்.
அப்படி பேசுகையில் அமராவதி கார்வண்ணனிடம்,
“எதிர்க்கட்சி ஆளுங்கட்சியாகிடும்னு நினைக்கிறேன்” என்று விழிகளில் காதல் சுமந்து இதழ்களில் முறுவலுடன் சொல்ல
“கண்டிப்பா, இன்னும் ஆறுமாசம்தானே எலெக்ஷனுக்கு நாங்கதான் ஆட்சிக்கு வருவோம், நீ பாரேன் வதி” என்றான் மிகவும் நம்பிக்கையாக.
அவளோ அவனை கோபத்துடன் முறைக்க “என்ன தப்பா சொல்லிட்டேன், நீதானே இந்த பேச்செடுத்த” அவன் புரியாமல் சொல்ல
“கரைவேட்டி! இப்படி பேசினா கடைசிவரைக்கும் காமராசராத்தான் இருக்கனும்” என்றாள் கிண்டலாக.
“என்ன கரைவேட்டியா?” என்று சிரித்தவன்
“கொஞ்சம் புரியற மாதிரி சொல்லு வதிம்மா” என்றதும்
“உங்க காதல் ப்ரச்சாரம் வொர்க் ஆவுட் ஆகிடுச்சுன்னு சொல்றேன், இந்த கரைவேட்டியைப் பிடிச்சிருக்குன்னு சொல்றேன், புரிஞ்சதா?” என்றாள் கொஞ்சம் சத்தமாகவே.
“ஹேய்! மெதுவா” என்றவனுக்கு இனிய இதமான நிமிடங்கள். அமராவதியின் கரம்பற்றியவன் சில நிமிடங்கள் ஆழ மூச்செடுத்து அவள் சொன்னதை உள்வாங்கினான்.
“நிஜமாவா?” என்றவனின் கண்ணில் எதிர்ப்பார்ப்பு மட்டுமே.
“அமராவதியாகிய நான் கரைவேட்டியின் மனைவியாக…” என்று அவள் சிரிப்புடன் சொல்ல ஆரம்பிக்க
“பரவாயில்லையே அரசியல்வாதி ஆகிடுவ போல நீ” என்றான் கார்வண்ணனும் சிரிப்புடன்.
“தேங்க்ஸ், உன்னைப் பார்க்க வைச்ச கடவுளுக்குத்தான் நன்றி சொல்லனும்” என்று கணவன் காதலாய் சொன்ன வார்த்தைகள் இன்றும் காதில் நீங்கா இசையாய் ஒலித்தது.
காதல் சொல்லி கரம்பிடித்து எல்லாமுமாக அவனுடனான வாழ்க்கை இனித்தது. அவளுடன் சண்டை வந்தாலும் கூட இவள் இரங்க மாட்டாள், அவன்தான் மன்னிப்புக் கேட்பான் , அவன் மீது தவறில்லை என்றாலும் கூட.
“இருந்தாலும் உனக்கு சூடு சொரணையே இல்லை கரைவேட்டி, பொசுக்குன்னு மன்னிப்புக் கேட்கிற” அமராவதி கிண்டல் செய்தாலும் கூட
“அதெல்லாம் எதுக்கு? என் வதிம்மா கிட்ட மன்னிப்புக் கேட்கிறதல என்ன குறைஞ்சிடப் போறேன் நான்?” என்பவனைக் கொஞ்சத்தான் தோன்றும்.
அப்படியான ஒரு வாழ்வு இன்று அஸ்தமனம்! அதில் அடிப்பட்டது என்னவோ அவள் மனம் மட்டுமே! வாழ்க்கையே மாறிவிட்டது.
இன்று இவன் முன்னால் இந்த பேச்சைக் கேட்கும் நிலை, நினைக்கவே நெஞ்சம் கசிந்தது. இது போல், இதைவிட மோசமான பேச்சையெல்லாம் நீதிமன்றத்தில் வைத்துக் கேட்டுவிட்டாள். ஆனால் இதோ இந்த சில மாதங்களாய் அவளுக்கு ஒரு விடுதலை.
ஒருவித அமைதியில் வாழ்ந்து கொண்டிருந்தாள் அமராவதி. நதியாய் நங்கை வாழ்க்கைத் தன்னைக் கொண்டு செல்லும் பாதைகளில் போய்க்கொண்டிருந்தாள். போராட்டங்களைத் தவிர்த்திருந்தாள்.
அந்த நிம்மதி கெடும்வகையில் இப்போது மீண்டும் விசாரணை, இவள் மீளவே கூடாதென முடிவு செய்துவிட்டார்கள். அவர்களின் குழந்தையை அவள் கணவனின் குழந்தைதான் என்று நிரூபிக்க ஒரு சோதனை, அதை வைத்துத்தான் அவளை நம்புவார்களா?
கசந்தது காரிகை மனம்! கசிந்தன அவள் விழிகள்!
சிரஞ்சீவி அவள் முகம் பார்த்தாலும் அவன் இரங்கவில்லை. அவனைப் பொருத்தவரையில் ஆண் பெண் பேதமில்லை. யாராய் இருந்தாலும் அவன் பேச்சு செய்கை இப்படியே!
அந்த அறையில் நின்றிருந்த பரத்திற்கு வேதனையாக இருந்தது அமராவதியின் அழுகைக் கண்டு. அவன் அவளை நேரில் பார்த்ததில்லை. இதுவே முதல்முறை. அவள் மேல் இரக்கமும் ஒருவேளை இந்த பெண் குற்றம் செய்யவில்லையோ என்று கூட நினைத்தான். ஆனால் அதை சிரஞ்சீவியிடம் சொல்லத்தான் முடியவில்லை.
அமராவதி அவன் பேச்சைக் கேட்டு வெகுண்டிருக்க, அவளை வெடிக்கவே செய்தன அவன் பேச்சுகள்.
“சொல்லுங்க அவரோட உடல் நிலை தெரிஞ்சும் கூட, ஏன் அவரை ஊட்டிக்கு அழைச்சிட்டுப் போனீங்க?”
“இட்ஸ் நான் ஆஃப் யுவர் பிஸ்னஸ்” சிரஞ்சீவி சீறினான்.
“என்னை மட்டும் கேள்வி கேட்கிறீங்க?”
“நீங்க ஒரு குற்றவாளி”
“அது உங்களோட பார்வையில”
“யூ ஆர் அரெகண்ட்” என்றான் கோபத்துடன்.
“எஸ் ஐ அம்” என்றாள் பயமின்றி.
“இந்த அரெகன்ஸீதான் உங்க ஹஸ்பண்டை நியுரோ டாக்சின் வைச்சுக் கொல்ல வைச்சதா? அதுவும் உங்க கள்ளக்காதலுக்காக? ப்ளான் பண்ணி செகண்ட் ஹனிமுன்னு சொல்லி அவரை மர்டர் பண்ணிருக்கீங்க? டெல் மீ, அவுட் வித் ட்ரூத்” என்றான் அதிகாரமாக.
கள்ளக்காதல் என்ற வார்த்தை அவளைக் கொதி நிலைக்குக் கொண்டு செல்ல, யோசிக்காமல் தன் முன்னே இருந்த தண்ணீர் க்ளாஸை அப்படியே சீரஞ்சீவியின் முகத்தில் வீசியடித்தாள் அமராவதி.