கல்கியிடமிருந்து தன்னைப் பிடிக்கும் என்ற வார்த்தைகளைக் கொஞ்சமும் சிரஞ்சீவி எதிர்ப்பார்க்கவில்லை. திடீரென சொன்னாலும் தித்திக்கவே செய்தன அவள் வார்த்தைகள்.
“அவுனு?” என்று அவன் சிரிப்புடன் கேட்க
“அவுனு அவுனு” என்றாள் அவனைப் போல. அவன் பார்வையில் இன்னும் கேள்வி மிச்சமிருக்க, கல்கியே பேசினாள்.
“இல்லை முன்னாடியெல்லாம் ரொம்ப சண்டைப்போடுவோம்ல, இப்போதான் தெரியுது நீங்க கொஞ்சம் ஸ்வீட்னு”
“ஓஹ், கொஞ்சம்தானா?”
“கொஞ்சம் ஸ்வீட், கொஞ்சம் காரம்” என்றதும் அவன் புருவங்கள் உயர,
கல்கியோ
“எனக்குக் காரமும் பிடிக்கும்” என்றாள்.
கல்கியின் பேச்சு மிக மிக இயல்பாய் வந்ததை வரப்ரசாத் உணர்ந்தான். ஆனால் அந்த ப்ரியமும் பேச்சும் எல்லாம் அத்தை மகன் என்ற அளவில் நின்றது. அதைத் தாண்டவில்லை!
———————————————————–
அவளுடன் பேச நினைத்தது அவளுக்காக என்பதை விட அவனுக்காக என்பதே உண்மை! கல்கியின் மன நிலை அவனை மிகவும் பாதித்தது. அவள் விளையாட்டில் கூட தோற்கக் கூடாதென நினைக்கும் அவன் மனம் நேற்றையை அவளின் அனுபவத்தினால் அவள் எத்தனை தவித்திருப்பாள் என்று புரிந்தது. அதனால் அவளுடனான நேரங்களை நீட்டித்தான்.
“ஒரு நாய் கடிக்கும்னா நம்ம யாரும் வீட்டைப் பூட்டிட்டு உள்ள இருக்கறதில்லையே, அனிமல்ஸ் எல்லாம் கடிக்கும்னு அதைத்தான் கூண்டுக்குள்ள அடைச்சு வைக்கிறோம்., ஆனா சில பேர் இந்த மாதிரி தப்பு செய்றாங்கன்னா அவங்களைத் தண்டிக்காம எங்களை வீட்டுக்குள்ள அடைச்சு வைக்கிறது என்ன வெங்காய லாஜிக் எனக்குப் புரியலை”
“எங்களை மட்டும் அடங்கி நட, அடக்கமா பேசு சொல்றாங்க. ஆனா ஆண்களைப் பொண்ணுங்க கிட்ட ஒழுங்கா நடன்னு ஏன் இந்த அம்மா அப்பா சொல்லி வளர்க்கிறதில்லை. தப்பு செய்றவங்களை அடக்காம தண்டிக்காம தப்பால பாதிக்கப்பட்டவங்களை அடக்குறது என்ன மாதிரி முட்டாள்த்தனமான மன நிலை ?” என்று அவன் முகம் பார்க்க
“நீ அழகா பேசுற கல்கி” என்றதும் சிரித்து விட்டாள்.
“ஓய்! என்ன சிரிக்கிற. இட்ஸ் ரியலி எ காம்ப்ளிமெண்ட்” என்றான் சீரியஸாக.
“இல்லை, இப்படியெல்லாம் வீட்ல பேசினா ரொம்ப பேசுற சொல்வாங்க. நான் பேசுறதை பொறுமையா கேட்கிறீங்க இல்லை, பெரிய விஷயம்தான்” என்றாள் அவளும் புன்னகையுடன்.
அவன் கேளாமலே அவள் அகம் திறக்க, தன்னிடமாவது இதையெல்லாம் சொல்லி ஆறுதல் பட்டுக்கொள்ளட்டும் பெண் என்று நினைத்தவன் அவள் பேச்சை அமைதியாய்க் கேட்டிருந்தான்.
———————————————————–
“அது என்ன என் கூட வரும்போதும் அவனுக்கு மெசெஜ்?” ஜெகதிஷால் காதலையும் மறைக்க முடியவில்லை. மறைத்த காதல் தரும் அழுத்தத்தையும் தாங்கமுடியவில்லை.
சொல்லாத காதல் சுகமில்லை என்பதை உள்ளத்தால் உணர்ந்தான். சொல்லிவிட தவிப்பு எழுந்தாலும் இன்னும் படிப்பைக் கூட முடிக்காத பெண்ணிடம் மனம் திறக்க மனம் இடம்கொடுக்கவில்லை.
“மாம்ஸ் ! எப்பவும் அனுப்பி பழகிட்டேன். இதுல என்ன இருக்கு?” என்றாள் இயல்பாக.
“எங்கூட வரும்போது நீ செக்யூர்டா ஃபீல் பண்ண மாட்டேங்கிற அப்படின்ற மாதிரி தோணுது எனக்கு. நான் உன்னை பத்திரமா வீடு கொண்டு சேர்க்க மாட்டேனா?” என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன்.
“உன் மண்டை ரொம்ப சூடாகிச்சு நினைக்கிறேன். ஓவராப் பேசுற டா நீ, எப்பவும் அனுப்புற பழக்கத்துல அனுப்பிட்டேன். நீ பத்திரமா பார்த்துப்பேன்னு தான் நானும் வந்தேன்” என்றாள் கல்கி பல்லைக் கடித்து.
—————————————————————-
கல்கி ஊருக்குப் போகிறேன் என்று சொன்னபோது ஒன்றும் தோன்றவில்லை. அனுப்பிவிட்ட வந்த பின் தனிமை பலமாய்த் தாக்கியது.
எப்போதும் ஜாக்கிங் செல்லும்போது இயல்பாய் அவன் எதிர்ப்பக்கம் நடக்கும் கல்கியின் மீதே பார்வை வைத்து பழகியவனுக்கு இன்று அவள் இல்லை என்பது என்னவோ வித்யாசமாய் இருந்தது.
தனியாய் இருக்கும் தருணங்கள் எல்லாம் அவனுக்கு மிகவும் பிடித்தவை. வீட்டில் இருக்கும்போது இஷ்டப்பட்ட பாடலைக் கேட்டுக்கொண்டு கேஸுக்காக யோசித்துக் கொண்டு இருந்தவனின் வழக்கங்களையும் பழக்கங்களையும் கல்கி இத்தனை மாதங்களில் மாற்றி இருந்தாள்.
இரவு உணவு அவன் உண்ணும்போது அவள் கதை சொல்ல, கேட்டுக்கொண்டுதான் உண்பான். அன்றாட நிகழ்வில் அவள் அவனுடன் கலந்திருக்க, அவள் இல்லாத தனித்த பொழுதுகள் தனிமை பொழுதுகளாயின!
யமுனாவிடம் பேசும்போது இது குறித்து சொல்ல,
“எப்பவும் வீட்ல இருந்துட்டு இப்ப இல்லைன்னா அப்படித்தான் இருக்கும்” என்று இயல்பாய் சொல்ல, அப்படித்தான் இருக்குமோ என்று நினைத்தான் சிரஞ்சீவி வரப்ரசாத்.
ஆனால் அது அப்படியில்லை என்று அவனுக்கு கூடிய விரைவிலேயே புரிந்து போனது.