செல்வம் அமுதினியன் வீட்டிற்கு வந்திருந்தார் தன் மனைவி சுகந்தியுடன்.
உடன் மகன் முருகனும், பிரபாவும் கூட வந்திருக்க மலர் தான் வர சொல்லியிருந்தார் அவர்களை.
“உடனே பேசனும் வாங்கன்னு சொல்ற அளவுக்கு என்னம்மா? என்ன பிரச்சனை?…” என்று செல்வம் கேட்க,
“நம்ம வரு கல்யாண விஷயமா தான் மாமா…” என்றார் அவரிடம்.
அமுதனும், பல்லவனும் அமைதியாக இருந்தார்கள். மலர் தான் நின்றுகொண்டிருந்தார்.
“என்ன மலரு? இப்போ போய் கல்யாணம் பத்தி?…” என்றார் சுகந்தி.
“அக்கா, வருவுக்கு உடனே பண்ணிடறது நல்லதுன்னு தோணுது. பையன் வசதி வாய்ப்பு எப்படி இருந்தாலும் பரவாயில்லை. ஆனா நல்ல பையனா இருந்தா சொல்லுங்க…” என்றார் மலர் பதட்டத்துடன்.
“என்ன ஆச்சு? இந்த நேரத்துல இப்படி பயந்துட்டு?…” சுகந்தி பார்க்க மோனிகாவும் ஒன்றும் சொல்லாமல் முகம் இறுகி போய் நின்றிருந்தாள்.
“வீட்டுல எதுவும் சண்டையா?…” செல்வம் அமுதனிடம் கேட்க,
“சண்டை எல்லாம் இல்லை மாமா. நான் கொஞ்ச நாள் போட்டும்ன்னு சொன்னேன். இவங்க எல்லாம் இப்பயே முடிச்சிருவோம்ன்னு சொல்றாங்க…” என்றாள் மோனிகா.
“என்னம்மா இது?…” என சுகந்தி மலரிடம் கேட்க,
“என்ன அமுதா? திரும்பவும் பிரச்சனையா?…” என செல்வம் தம்பியிடம் கேட்டார்.
“எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலைண்ணே. சாயந்தரம் கடைக்கு வியாபார சங்க தலைவர் வந்திருந்தார். பேச்சுவாக்குல இந்த விஷயமும் பேசினார்…”
“வியாபாரத்துக்கு வந்தவங்க எதுக்கு குடும்பத்தை பேசறாங்கப்பா? என்னவாம்? இந்த விஷயம் அவருக்கு ஏனாம்?…” என்றார் செல்வம் ஆதங்கத்துடன்.
கிளம்பி வந்ததோ இரவு ஒன்பது மணி. அப்போதுதான் சாப்பிட்டு முடித்து உறங்க ஆயத்தமாகி இருக்க மலர் அழைத்துவிட்டார்.
பரமசிவம் கேட்டதற்கு இங்கே வருகிறேன் என செல்வம் சொல்ல என்ன ஏதென்று கேட்டு அங்கேயும் ரகளை.
பேசி முடித்து வந்து சொல்வதாக செல்வம் சொல்ல அதற்கும் அத்தனை ஏச்சுக்கள் செல்வத்திற்கும்.
“என்னடா ஒன்னு கூடிட்டீங்களோ? அப்ப இம்புட்டு நாள் கஷ்டப்பட்டு இந்த குடும்பத்தை காப்பாத்தினதுக்கு?…”
ஆதியிலிருந்து அன்றுவரை தன்னுடைய சாதனைகளை வரிசைப்படுத்த செல்வம் ஒன்றும் பேசாமல் கிளம்பிவிட்டார்.
இந்த ஒருமாதமாக அவர் எத்தனை பார்த்துவிட்டார் தம்பி அமுதனை. இத்தனை சோதனைகளா? என நினைக்காத நாளில்லை.
இப்போது மலரே அழைத்து இருக்க என்னவோ என்று பதட்டம் தான் கூடியது. மகனை அழைத்துக்கொண்டு வந்துவிட்டார் மருமகளுடன்.
சந்திராவின் பெண்ணாக பிரபா இருந்தாலும் பொறுப்பானவள். சரியாக யோசிக்கும் பெண்ணும் கூட.
இப்போது வந்ததில் இருந்து குடும்பத்தினரை காண அவர்கள் முகமே வெளிறி இருந்தது.
வந்ததும் அவர்களை வரவேற்றுவிட்டு உள்ளே சென்ற பெண் மேகா. பல்லவன் அனுப்பிவிட்டான் மேகாவை.
அவளும் எதுவும் மறுக்கவில்லை சென்றுவிட்டாள். முகத்தில் எப்போதும் குறையாமல் இருக்கும் புன்னகை இப்போது துளியுமில்லை.
எதையோ இழந்ததை போல களையிழந்த முகம். பொம்மையை போல அவர்கள் சொல்லியதை கேட்டு சென்ற பெண்ணை கண்கொண்டு பார்க்க முடியவில்லை.
இப்போது அவளுக்கு திருமணம் முடித்தே ஆகவேண்டும் என்று மலர் நிற்க செல்வத்திற்கு சுத்தமாக விருப்பமில்லை.
“எனக்கு சரியா படலை அமுதா. இன்னும் எதுவும் ஓயலை. இப்ப போய் மாப்பிள்ளை பார்க்கனும்ன்னா. என்னதான் அவர் சொல்லிட்டாருன்னு நீ இப்படி சொல்ற?…” செல்வம் தம்பியிடம் கேட்க,
“மாமா ஒருநிமிஷம். மாமா ஒன்னும் உடனே கல்யாணம் பண்ணனும்னு சொல்லலை. அத்தை தான் பிடிவாதமா இருக்காங்க. இப்ப உங்க பையனும் அது சரின்னு சொல்றாங்க…” என்ற மோனிகா,
“மூட்டைபூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்தனும்னு ஒத்தை கால்ல நிக்கிறாங்க ரெண்டுபேரும்…” என கடுப்புடன் சொன்னாள்.
“என்னத்தை? எதுக்கு அவசரப்படறீங்க?…” என பிரபாவும் கேட்க,
“என்ன செய்ய சொல்ற? வரவன் போறவன் எல்லாம் வருவை அந்த பையனுக்கே கட்டி குடுக்க வேண்டியது தான, நீங்க பிரச்சனை பன்றீங்களான்னு கேட்கறாங்க….” என்ற மலர்,
மலர் கொதித்து போய் பேசிக்கொண்டு இருந்தார். உள்ளே மேகாவிற்கு எல்லாம் கேட்டபடி தான் இருந்தது.
எந்த பிரதிபலிப்பும் இல்லை அவள் முகத்தில். உணர்வுகளை தொலைத்ததை போல ஒரு முகம்.
“இங்க பாரு மலரு, ஆயிரம் பேசத்தான் செய்வாங்க. அதுக்குன்னு அவசரப்பட்டு முடிவுக்கு வருவியா? கொஞ்சம் நாள் போகட்டும்…” செல்வம் சொல்ல,
“இல்ல மாமா, என் பொண்ணை பார்த்தீங்கல்ல. அவ முகத்துல சிரிப்ப பார்த்தே ரொம்ப நாள் ஆச்சு. எதையோ தொலைச்சது மாதிரியே இருக்கா. நாங்களும் பொறுமையா பார்த்துட்டோம். யார் யாரோ சொல்லி இப்ப முக்கியமானவர் வந்து பேசறார்…” மலர் விடாமல் பேசினார்.
“என்னம்மா நீ? சம்பந்தப்பட்டவங்க எதுவும் பேசாம இருக்கும் போது இதெல்லாம் எதுக்கு நினைச்சு வருத்தப்படனும்? அன்னைக்கு அந்த பையன் ஏதோ காப்பாத்த முயற்சி செஞ்சது இப்படி நியூஸ் ஆகிருச்சு. டிவில சொல்றதெல்லாம் சீரியஸா எடுத்துட்டு…” என்ற செல்வம்,
“அதுவும் அந்த பையன் எப்படி நம்ம பொண்ணை? அவங்களுக்கு நாம யாருன்னு கூட தெரிஞ்சிருக்காது. பொறுமையா வேற வேலையை பார்ப்போம். இப்போதைக்கு வரு படிக்கட்டும்…”
“என்னத்த படிக்க? அதான் மிச்ச பரிட்சையை எழுத முடியாம போச்சே? அவ படிக்க மாட்டா….” மலர் சொல்ல,
“என்ன பேச்சு பேசற மலரு? அடுத்த பரிட்சைக்கு இன்னும் நாள் இருக்கே?…” என்ற செல்வம்,
“எதுக்கு இவ்வளவு பயந்து போய் இருக்கீங்க? உண்மையை சொல்லுங்க…” என்றார் அதட்டலாக.
மலரும், பல்லவனும் மாற்றி மாற்றி பார்த்துக்கொள்ள, மோனிகா என்னவும் செய்யுங்கள் என்று பார்த்தாள்.
அத்தனை கோபம் அவளுக்கு. இவர்கள் நினைத்ததும் மாற்றியமைக்க இதென்ன பரமபதமா? மகளின் வாழ்க்கை என்று கூட பார்க்கமாட்டார்களா? என பார்த்தவளுக்கு தனது மாமனாரை பார்க்க பாவமாக இருந்தது.
“வந்து மாமா, இன்னைக்கு அந்த நடிகனோட அம்மா கோவில்ல என்னை பார்த்தாங்க…” என்று வெகு தயக்கத்தோடு மலர் சொல்ல செல்வத்திற்கு ஒன்றும் புரியவில்லை.
அதனால் என்ன என்றுதான் தோன்றியது. அதிரனின் விருப்பம் பற்றி அமுதினியன் குடும்பம் யாரிடமும் மூச்சுவிடவில்லை.
இப்போது சொல்லாமல் தவிர்க்க முடியாது. மலர் வெகுவாய் பயந்து போயிருந்தார் சுபத்ராவின் சந்திப்பில்.
இன்னும் அதிரனின் அந்த முகம், அவன் விருப்பத்தை கூறியவிதம் எதையும் மறக்க முடியவில்லை.
இன்னும் மகளுக்கு தெரியுமோ? தெரியாதோ? ஆனால் தங்களிடம் அதிரன் பேசியதை மேகாவிடம் சொல்ல கூடாதென்று மகன், மருமகள் என்று கட்டளை இட்டிருந்தார் மலர்.
இப்போது இப்படி ஒரு சூழ்நிலை, சுபத்ரா சந்திப்பு. ஒருவேளை அதிரன் சொல்லித்தான் வந்திருப்பாரோ என தோன்ற அமுதினியன் வேறு இப்படி கடைக்கு வியாபார சங்க தலைவர் வந்ததாக சொல்ல எல்லாம் அவரை அமைதியாக இருக்கவிடவில்லை.
“மலரு, என்னத்தையோ மென்னு முழுங்கற. என்னன்னு சொன்ன தான புரியும்?…” என்றவருக்கு குடும்பத்துடன் வராமல் தனியாக வந்திருக்க வேண்டுமோ என்று யோசித்தார்.
“அவங்களை பார்த்ததும் பயந்துட்டியா நீ?…” என அவராகவே கேள்வி கேட்து சமாளிக்க நன்றியுடன் பார்த்தார் மலர்.
செல்வம், சுகந்தியை பற்றி ஒன்றுமில்லை. ஆனால் பேச்சுவாக்கிலும் இதை வெளியே தெரியவேண்டாம் என்று நினைத்திருந்தார்.
ஒன்றுமில்லை என்பதையே இத்தனை பெரிதாக பேசிய ஊடகத்திற்கும், உறவுகளுக்கும், அதிரன் தன் பெண்ணை விரும்புவதாய் தெரியவந்தால் இன்னும் என்னென்னவெல்லாம் பேசுவார்களோ என்று பயந்துவிட்டார்.
“இதுக்கா இத்தனை பயம்? நான் கூட பிரச்சனையோன்னு நினைச்சுட்டேன்…” என்று சொல்லிய செல்வம்,
“இப்போதைக்கு இதை பேச வேண்டம். புரியுதா? என்ன அமுதா, கவனிக்கிற தான?…” என்று சொல்லவும் தலையசைத்தார் அமுதினியன்.
“நீ சும்மா இரு மோனி. ஆரம்பத்துல இருந்து தடுத்துட்டே இருக்க. முதல்ல வரன் வந்தப்பவே இப்படித்தான் சொன்ன, அவ படிச்சு முடிக்கட்டும்ன்னு. நீ கெட்டதுக்கு சொன்னன்னு சொல்லலை. ஆனா…” மலர் சொல்லவும்,
“நீங்க எதுக்கு வேணா நினைச்சுக்கோங்க. நான் மனசுல பட்டதை தான் சொல்லுவேன் த்தை. அப்பவும் வருவோட படிப்புக்காக தான் சொன்னேன். இப்பவும் அவளோட மன அமைதிக்காக சொல்றேன். இதை ஏன் யாருமே யோசிக்கமாட்டேன்றீங்க?…” என்றாள் ஆதங்கத்துடன்.
“குடும்பத்துக்கு அவமானம், குடும்பத்தோட மரியாதை போச்சுன்னு பேசறீங்களே? குடும்பம்ன்னா அவ இல்லாமலா? அவளை விட யாருக்கு பாதிப்பு அதிகம்? இனி லைஃப் லாங் அவ இதை பேஸ் பண்ணனும்….”
“எதுக்கு வாழ்க்கை முழுக்க பேஸ் பண்ண போறா? ஒரு நல்ல பையனா எல்லாம் தெரிஞ்ச பையனா?…” பல்லவன் பேச,