“வா…” என்று எழுந்து அவளுடன் செல்ல பொம்மை போல தான் சென்றாள்.
அதிரனுக்கு அத்தனை ஆற்றாமை, ‘இதை கூட தன்னிடம் கேட்க கூடாதா தன் மேகம்?’ என்று உள்ளூர பொங்கியது.
அறைக்குள் வந்ததும் அவனின் முகத்தயே திரும்பி திரும்பி பார்க்க அவனுக்கும் வருத்தமாகி போனது.
“என்னடா மேகா?…” என்றான்.
“ம்ஹூம், ஒன்னுமில்லையே?…” என்றவள் தானாகவே அவனின் அணைப்பிற்குள் வர,
“எதுவும் சொல்லமாட்டியா நீ? நன் உன்னோட ஹஸ்பன்ட் மேகா? அதுக்கான ரைட்ஸ் என்னன்னு தெரியும் தானே?…” என அவளின் முகம் பற்றி நிமிர்த்தி கேட்க,
“நிஜமா எதுவும் இல்லையே? என்ன சொல்லனும்?…” இப்படி அவனுக்காக பார்த்து சொல்ல,
“சரி தூங்கு…” என சொல்ல அப்போதும் சரி என்று தான் திரும்பினாள்.
“நான் சொல்றதை மட்டும் தான் செய்வியா நீ? ஏன்டா இப்படி பன்ற?…” தாளமாட்டாமல் கேட்டும்விட அவன் என்ன சொல்ல வருகிறான் என புரிந்து போனது.
“இல்லை நீங்க ப்ரீயா இருந்தா சொல்லிருப்பீங்க தானே? வேலை எதுவும் இருக்கோன்னு தான் கேட்கலை…” என்றதும் ஐயோவென்றானது அதிரனுக்கு.
“ஹ்ம்ம், நீ கேட்கட்டும், நீ கூப்பிடனும்னு நான் வெய்ட் பண்ணேன் பொண்ணே. இது கூட புரியலையா மேகா?…” என்றதும் மேகாவிற்கு சந்தோஷமும், பதற்றமும்.
“உங்களை தொந்தரவு…” என்ற மேகாவின் இதழ்களை கை கொண்டு மூடியவன்,
“கிளம்பு போகலாம்…” என்றான் அதற்கு மேலும் அவளை வருத்தாமல்.
எத்தனை சொன்னலும் அவளாக தன்னிடம் எதையும் கேட்க போவதில்லை என தெரிந்துபோனது அதிரனுக்கு.
“நிஜமா?…”
“என்ன நிஜமா?…”
“இல்லை காலையில இருந்து கால், ஏதோ டிஸ்கஷன்னு இருந்தீங்க. இது எனக்காகவா? வேலை இருந்தா வேண்டாம்…” என்றவளை இடுப்பில் கை வைத்தபடி மிதமான முறைப்புடன் பார்க்க மேகா சிரித்துவிட்டாள்.
“முடியலை. வா போகலாம்…” என்று அப்படியே அழைத்துக்கொண்டு கிளம்பியவன் சுபத்ராவிடம் சொல்லிவிட்டு கிளம்பினான்.
காரில் மேகா வழியெல்லாம் மீண்டும் மீண்டும் அவனை திரும்பி பார்த்துகொண்டு வர,
“ஷ், மேகா…” என்றான் முன்னால் அமர்ந்திருக்கும், ட்ரைவரையும், ஹர்ஷத்தையும் காண்பித்து.
“ஓகே ஓகே…” என்று திரும்பினாலும் மீண்டும் மேகா அவனை பார்த்துவர இடதுகையால் மேவாயை மூடிக்கொண்டவன் கண்கள் சிரித்தது.
“நான் பார்க்கலையே…” என்றாள் அவனின் சிரிப்பை கண்டு வேகமாய்.
“ஹ்ம்ம்…” என ஒற்றை தலையசைப்புடன் அதிரனும் புன்னகைக்க பாதுகாவலர்கள் சூழ வீடு வந்துவிட்டனர் அதிரனும், மேகாவும்.
மீண்டும் ஒரு ஆரத்தி. அக்கம்பக்கத்து வீடுகள் அடுத்தடுத்து கார் வந்து நிற்கவும் வழக்கம் போல எட்டி பார்த்து போட்டோ எடுத்துக்கொண்டு இருக்க வீட்டிற்குள் நுழைந்ததும் ஓடிவந்து தாவிக்கொண்டான் அஷ்வின்.
“ஹாய் சேம்ப்…” என்று அவனை தூக்கிக்கொண்டவன் அனைவரையும் பார்த்து புன்னகைத்தான்.
அமுதினியன், பல்லவன், மலர், மோனிகா, செல்வம் என அனைவரும் அவர்களின் வரவில் மகிழ்ந்தாலும் முகத்தில் முதல் நாள் நிகழ்வின் சுவடு இன்னும் மறையவில்லை.
“ஆமா மாப்பிள்ளை, காலையில தான் கிளம்பினாங்க. அண்ணன் சொன்னார் நீங்க இன்னைக்கு வரீங்கன்னு, தெரிஞ்சிருந்தா இருந்திருப்பாங்க…” என்றார்.
“என்னப்பா உடம்பு எதுவும் முடியலையா? கண், முகமெல்லாம் வீங்கி இருக்கு?…” என்ற மேகா அனைவரின் முகத்தையும் பார்க்க எல்லோர் முகமுமே அப்படித்தான் களையிழந்து இருந்தது.
“என்னாச்சு?…” என்றதும் அதிரன் மேகாவை பார்த்தான்.
‘ம்ஹூம் தாங்கமாட்டாளே? தெரிய வேண்டாம். தெரியாமலே போகட்டும்’ என எண்ணியவன்,
“உன்னை நினைச்சு தான் போல மேகா…” என்றான் அவனாகவே.
மோனிகாவும் அதிரனின் பார்வையை கவனித்தவளாக உடனே சுதாரித்துக்கொண்டாள்.
“ஆமா நேத்து வீட்டுக்கு வந்ததுல இருந்து உன் நினைப்பு தான். அதான் நைட்டெல்லாம் முழிச்சிருந்து எல்லாரோட பேசிட்டிருந்துன்னு அப்படியே நேரம் போயிருச்சு…”
“சரிங்கண்ணி…” என்றவள் மலரை பார்க்க அந்த தாய் மனது பதறியது.
மகளின் முகத்தையே பார்த்திருந்தார். எத்தனை சந்தோஷமும், சிரிப்பும், அவள் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்பதன் அடையாளமாய் அந்த பூரிப்பும் என்று காண தெவிட்டவில்லை.
அதே நேரம் பரமசிவம் சொல்லியதும் காதில் கேட்க பதட்டமாக வெளியே சென்றவர் வேகமாய் ஒரு பேப்பரில் கொஞ்சம் மண்ணை எடுத்துக்கொண்டு வந்தார்.
வேகமாய் உள்ளே வந்து உப்பு மிளகாய் என்று எல்லாம் திருஷ்டி கழிக்க எடுத்து வந்து,
“மாப்பிள்ளை, இப்படி வாங்க, வருவோட நில்லுங்க…” என்றார்.
கண்ணீர் முட்டிக்கொண்டு இருந்தாலும் மகளுக்காக நெஞ்சம் வலிக்க அதனை விழுங்கிக்கொண்டார்.
அதிரன் உணர்ச்சி துடைத்த முகத்துடன் அவரின் வேதனையை கவனித்தபடி எழுந்து மேகாவின் அருகே அவர் சொல்லிய திசையில் நிற்க திருஷ்டி கழிக்கையில் தன்னை போல அழுகையும் வந்துவிட,
“இப்ப வந்திடறேன்…” என்ற மலர் தீப்பெட்டியுடன் வாசலுக்கு விரைந்தார்.
“அண்ணி என்னாச்சு அம்மாவுக்கு? அழறாங்க?…” என கேட்க,
“எதாச்சும் கனவு கண்டிருப்பாங்களா இருக்கும். அதோட உங்களுக்கு அவ்வளோ திருஷ்டி. மண்டபத்துலையே எடுக்கனும்னு சொல்லிட்டே இருந்தாங்க. இப்ப வரவும் எடுத்துட்டாங்க…” மீண்டும் மோனி சமாளிக்க மலர் வந்துவிட்டார்.
“என்ன சாப்பிடறீங்க மாப்பிள்ளை?…” என்றதும்,
“ம்மா, நானே டீ போடறேன்…” என்றாள் மேகா வேகமாய்.
அவள் வேகமாய் குதித்துக்கொண்டு சொல்லிய விதத்தில் அதிரன் பக்கென்று சிரித்துவிட்டான்.
எதற்கென்றே தெரியவில்லை என்றாலும் அவனின் புன்னகை மற்றவர்களையும் தொற்றியது.
அதிலும் மேகாவின் அந்த வேகமும், திருதிருத்தலும் எதையோ உணர்த்த மலரும் சரி என அழைத்துக்கொண்டு உள்ளே சென்றாள்.
“நீயும் போய் எல்லாருக்கும் காபி எடுத்துட்டு வா…” என பல்லவன் மோனியை அனுப்பினான்.
அதிரனின் மொபைலை வாங்கிக்கொண்டு அருகே அமர்ந்து அவனின் மேல் சாய்ந்து கொண்டான் அஷ்வின்.