ஆனால் எதற்கும் மனமில்லை. கலவையான உணர்வில் நின்றிருக்க கதவு திறக்கப்படும் ஓசை.
இதோ வந்துவிட்டது அவனின் மேகம். தன்னை கவனித்திருப்பாளா? இல்லையா? என யோசிக்கும் பொழுதே,
“அதி…” என்று அழைத்துவிட்டாள்.
பார்த்துவிட்டாளே? பரிதவிக்கும் குரலுடன் இதோ அழைத்தும் விட்டாள். மனதில் அவள் மீது இருந்த வருத்தத்தை கூட இழுத்து பிடிக்கமுடியவில்லை அதிரனால்.
அந்த குரலுக்கு பின் மொத்தமாய் அவளதிகாரமாய் அதிரன் மாறியிருக்க பாராமுகத்தை காண்பித்துவிட முடியுமா அவனால்?
மெல்ல திரும்பியவனின் விழிகள் பனித்துக்கிடந்த மேகத்தின் கண்களை சந்தித்தது.
ஒரு கையை கட்டு போட்டு கழுத்தோடு இணைத்திருக்க அதன் வலியின் சாயல் முகத்தில் தெரிய மேகாவிற்கு தாளமுடியவில்லை.
நின்ற இடத்திலேயே மடங்கி அமர்ந்து அழ, தொண்டையில் ஈரமில்லை அவளுக்கு.
“மேகாடா…” என்ற அழைப்பில் நிமிர்ந்தவள் அவனின் இடது கை தன்னை நோக்கி நீளவும் ஓடிசென்று அணைத்துக்கொண்டாள்.
“ஸாரி அதி, ஸாரி…” என்று புலம்பிக்கொண்டே அழுது முடிக்க அவளை நிறுத்தவில்லை அவன்.
உண்மைக்கும் மனதோரம் சிறிய பயம். எங்கே தாயின் பேச்சில் தவறாக நினைத்து வருந்தி மீண்டும் மேகா பாதுகாப்பின்றி உணர்ந்துவிடுவாளோ என்று இருந்தது.
இப்போது தன்னை பார்த்ததும் அழைத்து அழுவது கூட மனதின் பாரத்தை கரைக்குமே என்று அமைதி காத்தான்.
“மேகா…” என முதுகை வருடியபடி அவளை ஆற்றுப்படுத்த,
“வலிக்குதா?…” என்று அவனின் கையை பார்த்து கேட்டவள்,
“இனிமே எங்கயும் போகமாட்டேன். சத்தியமா, சத்தியமா போகமாட்டேன். இங்கயே இருப்பேன்…” என்று கண்ணீருடன் சொல்ல அது அதிரனுக்கு இன்னும் வலியை தான் தந்தது.
“இல்லடா, உன்னால இல்லை. இங்க பாரு. இதெல்லாம் ஒண்ணுமே இல்லை. இல்லைன்னா என்னை உடனே வீட்டுக்கு அனுப்பியிருப்பாங்களா?…” என்றான் அவளின் முகம் நிமிர்த்தி கண்ணீரை துடைத்துவிட்டு.
கொஞ்சம் அழுகை குறையவும் அவளுடன் வந்து கட்டிலில் அமர்ந்தவன் தலையை கோதிவிட்டான்.
“ஆமா, அம்மா சொன்னா உடனே கிளம்பிடுவியா நீ? இதுவே இந்த கையும் நல்லா இருந்தா உன்னை…” என்று காதை பிடித்து திருகியவன்,
“அத்தை கிளம்புன்னு சொல்லும் போது வேற என்ன செய்ய? என்ன காரணம்ன்னு தெரியலை. என்னால இப்படி ஆகிருச்சேன்னு கவலை. அதோட அத்தை என்கிட்டயும் சொல்லி, வசந்த்தை கூப்பிட்டு கூட்டிட்டு போன்னு சொல்லிட்டாங்க…”
“நானும் இருக்கேன்னு சொல்லலாம் தானே? உன்னோட ரைட்ஸ எந்த இடத்திலயும் விட்டுக்குடுக்காதடா. அது என்னையே விட்டு குடுக்கற மாதிரி…”
“அதி…”
“எனக்கு அப்படி ஒரு பீல் குடுக்காத நீ. அது யார் சொல்லியிருந்தாலும். அம்மா காரணமா சொன்னா உன்னோட மனசை நீ புரிய வை மேகா…”
“ஹ்ம்ம்…”
“என்ன ஹ்ம்ம்? சரி சொல்லு…” என்று சொல்ல அவளின் பார்வை எல்லாம் கையில் தான் இருந்தது.
“ஹ்ம்ம் கண்டிப்பா சொல்லுவேன். நீ தான் பார்த்துக்கனும்…” என்றதும் வேகமாய் அவனின் கையை எடுத்தவள்,
“ப்ராமிஸ் அதி. ஏன் நம்பமாட்டேன்னு சொல்றீங்க?…” என்றாள் எங்கே அதிரன் தன்னால் அவனை பார்த்துக்கொள்ள முடியாதென நினைக்கிறானோ என்று.
“ஏன்டா பீல் பன்ற? நீ மாட்டேன்னாலும் நான் உன்னை பார்த்துக்க வைப்பேனே?…” என்று கண்சிமிட்ட,
“அதி புரியலை…”
“அப்பப்ப க்ளவர் மேகா எங்கையோ ஒளிஞ்சுக்கறா போல?…” என்று அவளை அணைத்தவன் மச்சத்தில் முத்தமிட மேகாவிற்கும் புரிந்துவிட,
“அச்சோ அதி…” என்றவளால் அவனை வேகமாய் விலக கூட முடியவில்லை.
எங்கே அது அவனை வலிக்க செய்துவிடுமோ என்று அசையாமல் இருக்க அதிரனுக்கு அத்தனை சிரிப்பு.
“ஹ்ம்ம் இதுவும் நல்லா இருக்கே. இந்த பொண்ணு என்னை விட்டு அசையாம, நெளியாம, கூசாம கைக்குள்ளயே இருக்கறது…” என்றான் அவளின் நெற்றியில் லேசாய் முட்டி.
“உங்களுக்கு கை வலிக்குமே?…”
“அதான் பார்த்துக்க மேகா பொண்ணு இருக்கே…” என்றான் மீண்டும் சிரிப்புடன்.
பேசிக்கொண்டே அதிரனின் கை அவளின் தோளில் இருந்து இடையை தாண்டி வயிற்றை தொட்டவன் விரல்கள் மிதமான நடுக்கத்தை காட்ட சிலிர்த்தாள் மேகா.
‘எப்படி மறந்தோம்?’ என்று மெல்ல அதிரனின் கையை இறுக்கமாய் பற்றியவள் அவன் முகம் காண எதையோ எதிர்பார்க்கும் பாவனை அதிரனிடம்.
ஆனால் அதனை வெகுவாய் மறைத்துக்கொண்டு மேகாவை சாதாரணமா பார்த்தான்.
“உங்ககிட்ட ஒன்னு சொல்லனும் அதி…”
“என்னடாம்மா?…” என்றான் கையை எடுத்து அவளின் கன்னத்தை பிடித்தபடி.
“அது…” என்றவள் முகம் சட்டென மாற்றம் பெற,
“என் கூட வாங்க. நான் சொல்லவும் தான் கண்ணை திறக்கனும்….” என்றதும் தலையசைத்தான்.
இருவரின் இதயங்களும் பலமாய் அடித்துக்கொண்டது. தன்னிடம் மேகா சொல்லும் தருணத்தை எதிர்பார்த்து அதிரனும், அதிரனின் சந்தோஷத்தை பார்க்க மேகாவும் என்று அந்த நொடியை நோக்கி வேகமாய் நகர்ந்தனர்.
“அதி மெதுவா வாங்க…” என்றவள் அவனை அந்த வீணையின் முன் நிறுத்த,
“முதல் ராகத்தை கண்டுபிடிச்சிட்டியா மேகா? வாசிக்க தான் கூட்டிட்டு வந்தியா?…” என உடல் குலுங்க அவன் சிரித்தான் ஆர்ப்பாட்டமாய் அலையடிக்கும் தன் மனதை மறைத்து.
“நான் வாசிக்கவா? இது நீங்க வாசிச்சதுக்கான கிஃப்ட் அதி…” என்றவள் அவன் விழிகளை மூடியிருந்த தனது கையை எடுத்தவள் தனது சுட்டுவிரலை அதனை காண்பித்து நீட்ட அதிரன் தனது கையில் எடுத்து பார்த்தான்.
அவனின் பின்னால் நின்றிருந்தவள் தலையை மட்டும் நீட்டி அவன் என்ன உணர்க்கிறான் என முகத்தை பார்க்க இடதுகையால் அவளை வளைத்து தன் முன்னே நிறுத்தியவன் பார்வையில் தான் எத்தனை பாஷைகள்.
“பாப்பா, இங்க…” என அவனின் கையை தனது வயிற்றில் வைக்க அதிரனின் பார்வை தன் மேகத்தின் முகத்தினை விட்டு அகலவில்லை.
“அதி பாப்பா இருக்கு…” என்று அவனை மீண்டும் தன் வயிற்றின் பக்கம் கவனத்தை திருப்பியவள் கண்கள் கலங்கி இருந்தது.
“டேய் பொண்ணே நீ அம்மா இப்போ…” என்றான் சிரிப்புடன்.
அவனின் பாவனைகளை கவனிக்க அவள் நினைக்க அதிரன் மேகத்தின் உணர்வுகளை உள்வாங்கிக்கொண்டிருந்தான்.
“அதி அப்பா…”
“ஹ்ம்ம் டா பொண்ணே…” என்றவன் மெல்ல அவளின் நெற்றியில் முத்தமிட்டவன் வயிற்றை வருடினான் விரல் கொண்டு.
அவள் சொல்லாத போதே அத்தனை உணர்ச்சிவசப்பட்டிருந்தவன், தனக்கு தெரிந்திருந்தும் இப்போது மேகா சொல்லிய பொழுது இன்னுமே புதிதாய் ஒரு உணர்வு.
தன் மேகத்தின் சந்தோஷம், கண்ணீர், தன்னிடம் பகிர்ந்த மகிழ்ச்சி என்று ஒவ்வொன்றாய் அதிரனின் மனது ஸ்வீகரித்து அவன் உயிரை இன்னுமே உருக்கியது.
ஆனால் மேகா மனது துவண்டிருன்தது ஒருவகையில். எத்தனை சந்தோஷமாய் இதனை சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தால்?
விஷயத்தை சொல்லவும் தன்னை தூக்கி சுற்றியிருப்பான், இரு கைகளாலும் அள்ளி கொஞ்சியிருப்பான். முத்தமிட்டு தன்னை மூச்சடைக்க செய்திருப்பான்.
இப்போது நெஞ்சமெல்லாம் பொங்கும் மகிழ்ச்சியை காண்பிக்க கூட அவனால் முடியாத நிலை.
மேகாவிற்கு மீண்டும் அழுகை. ஏனென்று தெரியாத ஒரு அழுகை. அவனிடம் சொல்லிவிட்டதன் நிறைவு.
அவனின் சந்தோஷத்தை பார்த்துவிட்டதன் நிம்மதி. அவனின் புன்னகையில் உயிர்த்துவிட்ட தன் உணர்வுகள் என்று மேகா கண்ணீருடன் அவனை அணைத்துக்கொள்ள அவளின் எதிர்பார்ப்புகள் பொய்க்கவில்லை.
அதிரனின் முத்தங்கள் மேகத்தின் முகத்தை நிறைக்க அதிரனின் ஒரு கையால் சுற்றிக்கொண்ட அழுத்தமான அணைப்பில் மேகம் கரைந்தது.