அவன் உள்ளே வரை வந்திருக்க சற்றே நெரிசலான இடம். வீதிக்குள் இருக்கும் மண்டபம் வேறு.
உடனடியாக காரை திருப்பவும் முடியாமல் ட்ரைவர் அதனை பார்த்துக்கொண்டிருக்க வசந்த்திற்கு அழைத்தான் ஹர்ஷத்.
அவர்களுக்கு பின்னே இருந்த இன்னொரு வாகனத்தில் இருந்த பாதுகாவலர்கள் அதிரன் இறங்கிவிடுவானோ என்று இறங்கி நின்றனர்.
“ஸார் வசந்த்…” என்று அதிரனுக்கு நீட்டவும் வாங்கியவன்,
“வசந்த் மேகா எங்க?…” என்றான்.
“இங்க மேம் பக்கத்துல தான் ஸார் இருக்கேன்…” என்று சத்தமாய் சொல்ல அதிரனுக்கு சத்தத்தில் சரியாய் கேட்கவில்லை.
“வசந்த் கேட்குதா?…” மீண்டும் அழைத்தவன் அவனுக்கு கேட்கவில்லை என்றதும் உடனே வீடியோவில் அழைத்தான்.
“மேகாட்ட மொபைலை குடு வசந்த்…” என அதிரன் சொல்ல அவனின் சைகையும் அதிரன் அங்கே இருப்பதையும் பார்த்தவன் மேகாவின் அருகே சென்று போனை நீட்டினான்.
“அதி…” என்று திரையில் தெரிந்தவனை பார்த்து புன்னகைக்க அதிரனால் எதுவும் செய்யமுடியவில்லை இத்தனைபேரை வைத்துகொண்டு.
அவளை அணைக்க பரபரத்த கைகளையும், மனதின் தவிப்பையும் முயன்று அடக்கியவன் அடுத்து மண்டபத்தின் வாயிலை காட்ட மேகாவின் விழிகளில் அத்தனை ஆச்சர்யம்.
“அதி…” என்றவள் சத்தம் கூட அவனுக்கு கேட்கவில்லை.
ஆனால் அவளின் முகம் காட்டிய ஜாலங்கள் அப்பப்பா. மனதின் ஆழம் வரை ஜில்லிட்டது அதிரனுக்கு.
வா என்று மேகாவை நோக்கி விரலசைத்து அதிரன் புன்னகைக்க இருக்குமிடம் எல்லாம் மறந்தது மேகாவிற்கு.
அவளை சூழ்ந்திருந்தவர்கள் மேகாவையும், போனில் தெரிந்த அதிரனையும் கவனித்துக்கொண்டிருப்பதும் மறந்தது.
“வெளில வரேன்…” என்று அவள் வேகமாய் வசந்திடம் மொபைலை நீட்ட அவன் வாங்கி வைத்துவிட்டு மேகாவின் உடனே தான் வந்தான்.
மேகா வந்ததில் இருந்து அவளையும், அவளின் அசைவுகளையும், பேச்சுக்களையும் மட்டுமே கவனித்து இருந்தவர்கள் பார்வையில் அவள் அதிரனுடன் பேசுவதையும் கவனித்துவிட்டனர்.
போனில் பார்த்துவிட்டதற்கே அத்தனை ஆர்ப்பாட்டம் கொண்டவர்கள் வெளியில் கைக்கெட்டும் தூரத்தில் இருப்பவனை காணாமல் இருக்க முடியுமா?
புவனாவிடம் சொல்லிவிட்டு மேகா கிளம்ப புவனாவின் உறவுகளும் வசந்த்தை போலவே பாதுகாப்பாக அவளை அழைத்துக்கொண்டு வெளியேற முயன்றனர்.
அதற்குள் மேகா அதிரனை பார்த்ததும், பேசியதையும் அவன் வெளியே இருப்பதையும் கவனித்து ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ள அது அப்படியே மண்டபம் முழுவதும் பரவியது மேகா வாசலை எட்டும் முன்.
“அதிரன் வந்திருக்காராம்…” என்ற கூச்சல் மேகா வாயிலை நெருங்கவுமே மண்டபத்தையே அதிர வைத்தது.
உள்ளே இருந்தவர்கள் எல்லாம் அவனை காணவென்று திமுதிமுவென்று உள்ளிருந்து ஓடி வர திடீரென்று கிளம்பிய கும்பலிலும் அதன் சத்தத்திலும் வசந்த் பதறி போனான்.
“மேம் சீக்கிரம்…” என்று வசந்த் மேகாவை துரிதப்படுத்த பின்னால் வந்தவர்கள் எல்லாம் மேகாவை நெருங்குவதை காரில் இருந்தே பார்த்துவிட்ட அதிரன்,
“மேகா…” என பதட்டத்தில் இறங்கிவிட்டான்.
“ஸார்…” என்று ஹர்ஷத்தின் குரலை கூட அதிரன் கண்டுகொள்ளவில்லை.
தன்னை கவனித்து தான் வருகிறார்கள் என்று தெரிந்தது. இந்த கூட்டத்தில் மேகா மாட்டிக்கொண்டால் அவளால் வெளிவர முடியாதென அதிரன் ஓட இறங்கி நின்றிருந்த பாதுகாவலர்களும் சேர்ந்து அவனை பாதுகாக்க சென்றனர்.
மேகா தனக்கு பின்னால் ஓடி வருபவர்களை பார்த்துவிட்டு திரும்ப அதிரன் அவளை நோக்கி வருவதில் அதிர்ந்து போனாள்.
“அதி…” எங்கே அவன் கூட்டத்தில் சிக்கிக்கொள்வானோ என அவனை நோக்கி வேக எட்டுக்களில் வர அதற்குள் கும்பல் சுற்றிவளைக்க சரியாய் மேகாவை தனது கைகளுக்குள் கொண்டு வந்திருந்தான் அதிரன்.
அவனை பாதுகாவலர்களும் சுற்றிக்கொண்டனர் யாரும் நெருங்காமல். ஆனால் அதுவும் பலனற்று போனது.
“அதி பாப்பா…” என்றவளின் மெல்லிய திணறல் அவனின் காதோரம் அலைபாய இன்னும் தனக்குள் இறுக்கிக்கொண்டான்.
அவனின் கையை பிடிக்க முயன்றவர்கள் ஆவேசத்துடன் பாதுகாவலர்களை இழுத்துவிட்டு நெருங்க அதிரனின் கையை ‘தலைவா’ என பிடித்து இழுத்தனர்.
நெரிசல் அலைமோதியது. திடீரென தோன்றிய கும்பல் ஏன் என்று சுற்றுவட்டாரங்கள் கவனிக்க அவர்களும் அதிரன் என்றதும் அங்கே கூட ஆரம்பித்துவிட்டனர்.
அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து கார் இருக்கும் இடத்திற்கு செல்வதற்குள் போதும் போதும் என்றானது.
“உள்ள போ மேகா…” என்று அவளை பாதுகாப்பாய் காருக்குள் அனுப்பியவன் தான் ஏறும் முன் மீண்டும் பிடித்து இழுக்கப்பட்டான்.
“யோவ் விடுங்கய்யா முதல்ல…” என்று புவனாவின் உறவுகளும், வசந்த் ஹர்ஷத் இருவரும் போராடினார்கள்.
ரசிகர்கள் அதிரனை அருகில் பார்த்துவிட்டதிலும், தொட்டுவிட்டதிலும், அவனை அருகில் வைத்து புகைப்படம் வீடியோ எடுப்பதிலுமே தங்களின் கவனத்தில் வைத்திருக்க அங்கே அதிரன் என்னும் மனிதன் அவர்கள் கண்ணில் தெரியவில்லை.
நடிகன் அதிரன் தேவராஜ் என்பவன் மட்டுமே தெரிய அவனை சுற்றி வளைத்து செல்லவிடாமல் மறித்தனர்.
தூரத்திலிருந்து பார்த்த நட்சத்திரத்தை அருகில் பார்த்ததும் அத்தனைபேரின் சிந்தனையும் மழுங்கி அந்த நட்சத்திரத்தை பிடித்து தன்னுடன் நிறுத்திக்கொள்ள பார்த்தது ரசிக மனம்.
அதிரனின் சத்தங்கள், அதட்டல்கள் எதுவும் அங்கே எடுபடவில்லை அவர்களின் ஆராவாரத்தில்.
இதனை லைவ்வில் காண்பிக்கிறேன் என்று சோஷியல் மீடியாவில் அவரவர் தங்கள் முகநூல் பக்கத்தில் நேரலை போட்டுவிட அத்தனை நண்பர்களும் அதனை பகிர விஷயம் மீடியா வரை சென்றது.
‘திருமண வீட்டில் மனைவியை அழைக்க சென்ற அதிரன் தேவராஜ் ரசிகர்களின் பெருந்திரளில் சிக்கிக்கொண்டு மீளமுடியாமல் தவித்தார்’ என தலைப்புடன் செய்திகளை வெளியிட ஆரம்பித்திருந்தது.
அருகிருக்கும் காவல்நிலையத்தில் இருந்து வந்துவிட்டார்கள். அவர்கள் வரும் நேரம் அதிரனும் காரில் ஏறி இருந்தான்.
ஆனால் ஒரு இஞ்ச் காரை நகற்ற முடியவில்லை. ரசிகர்கள் கூட்டம் சுற்றி வளைத்திருக்க மேகாவிற்கு படபடவென்று வந்தது.
அதிரனே திண்டாடி போயிருந்தான். ஆளாளுக்கு பிடித்து இழுத்திருக்க போதாததிற்கு நடந்து வந்ததில் கூட்டத்தில் ஆழமாக என்னவோ கிழித்திருந்தது அவனின் கையை.
எப்போதும் காருக்குள் இருக்கும் டவலை எடுத்து கையை சுற்றிக்கொண்டான் அதிரன்.
எங்கே மேகா பார்த்தால் பதறிவிடுவாளோ என்று வலியை காண்பிக்காது பல்லை கடித்து அடக்கிக்கொண்டான்.
“சில் மேகா…” என்றவனுக்கு அப்போது அவளிடம் பேசமுடியவில்லை.
“ஹர்ஷத் என்னாச்சு?…”
“ஸார் போலீஸ் வந்திட்டிருக்காங்க. நான் கால் பண்ணும் போதே அவங்களும் விஷயம் கேள்விப்பட்து கிளம்பிட்டாங்களாம்….”
வெளியே வசந்த் கத்திக்கொண்டு இருந்தான் வழி விடும்படி. அத்தனை பேரும் காருக்குள் இருக்கும் அதிரனையும் மேகாவையும் வளைத்து வளைத்து படம் எடுப்பதில் தான் குறியாய் இருக்க சைரன் சத்தத்தில் கூட அவர்கள் கவனம் திசை திரும்பவில்லை.
அவ்விடமே பதட்டம் சூழ்ந்தது. ஆராவாரம் குறைந்து காவலர்கள் கும்பலை விரட்ட மண்டபத்திற்குள் பாதிபேர் கிளம்ப, சுற்றியிருந்தவர்களையும் கட்டுப்படுத்த முடியவில்லை.
அதிரனுக்கு அந்த சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்றும் தெரியவில்லை. தன் மீதுகொண்ட வெறித்தனமான அன்பு அவர்களை இப்படி செய்ய வைக்கிறது என தெரிந்தாலும் அது தவறாகிற்றே.
ஒரு நொடி தான் நெருங்கியிறாவிட்டால் மேகாவின் நிலை? தான் வந்தது தான் இத்தனை பெரிய பிரச்சனைக்கு காரணம் என்றும் விளங்காமல் இல்லை.
முகம் வெளிறி அமர்ந்திருந்தவளை பார்த்தவன் கண்களால் அமைதிப்படுத்தினான்.
மனதின் பதட்டம் கொஞ்சமும் தணியவில்லை. கையில் வலி வேறு உயிர் போனது.
காவலர்கள் வந்து நிலைமை ஓரளவு கட்டுக்குள் வர அதன் பின்னர் அதிரனை நெருங்கினார்கள்.
“ஸார் இப்ப நீங்க கிளம்பலாம்…” என்ற இன்ஸ்பெக்டர்,
“என்ன இருந்தாலும் இப்படி பாதுகாப்பில்லாம வரலாமா உங்களை மாதிரி செலிபிரிட்டீஸ்? இது உங்களுக்கும் கஷ்டம் எங்களுக்கும் கஷ்டம்…” என்றார்.
“இது அன்-எக்ஸ்பக்டட் ஸார்…” என அதிரனும்.
“எனிவே நானும் உங்களோட ஃபேன் தான் சார், உங்க படங்கள் எல்லாம் விரும்பி பார்ப்பேன்…” என்றவரை எரிச்சலுடன் மேகா பார்க்க, புன்னகைத்தான் அதிரன் அவரிடத்தில்.