“எனக்கு தெரியும். அது உங்க ஊர்ல எப்படியோ? இங்க பேசாம இருந்தா அரை தூக்கத்துல எந்திச்சு உக்கார்ந்துப்பா யாருமில்லைன்னு. கூட இருந்து பேச்சுக்குடுத்துட்டே இருந்தா தூங்கிருவா சீக்கிரம்…” என்றதும் கீர்த்தனன் விழித்தான்.
“இல்லையே…” என நம்பாமல் சொல்ல,
“என்ன இல்லையே?…” என்றவள் பேச்சை நிறுத்திவிட்டு சத்தமின்றி நகர்ந்து கட்டிலை விட்டு கீழே இறங்கிவிட்டாள்.
கண்ணை மூடியிருந்த குழந்தை மெல்ல விழி விரித்து பார்த்து கண்ணை கசக்கிக்கொண்டு எழுந்தமர்ந்துவிட்டது இசையை காணாமல்.
“ப்பா…” என்று உதட்டை பிதுக்கி பார்த்து தலையை சுழற்ற அங்கே இசையும் கீர்த்தனனும் நிற்பதை கண்டுகொண்டு பளீர் புன்னகை சிந்தி மீண்டும் சுழன்ற விழிகளுடன் படுக்கையில் சாய்ந்தது.
திரும்பவும் அதே போல் முணுமுணுவென்று பேச்சு தனுவிடம். ஒரு கை மட்டும் நீட்டி வா என்பதை போல் அழைக்க,
“பக்கத்துல கூப்பிடறா. கொஞ்ச நேரத்துல டீப் ஸ்லீப் போய்டுவா…” என்று இசை மீண்டும் வந்தமர்ந்து பேச அப்போதுதான் கதை என்று விளங்கியது.
“நீ கதை எல்லாம் சொல்லுவியா?…” என்றான் அவள் பேசும் விதத்தில்.
“பாடம் தான் தலையில ஏறாது. கதை எல்லாம் ஏகப்பட்டது மறக்காம ஞாபகம் இருக்கும்…” என்றதும் அவனுக்கு புரிந்தது.
தன்னை தான் சொல்கிறாள் என்று. எத்தனை முறை அவளை திட்டியிருப்பான் என்று கணக்கில்லை.
‘ஒழுங்கா படிக்கனும்னா ட்யூஷன் வா. இல்லையா வீட்டோட இரு, நீ பெயிலாகிட்டா நான் தான் சரியா சொல்லிக்குடுக்கலைன்னு சொல்லுவாங்க.’ என்ற அதட்டல்கள், தலையில் குட்டல் என்று எவ்வளவு திட்டு அவளுக்கு.
“கதை சொல்ல படிப்பு தேவை இல்லை தான்…” என்று லேசாய் சிரித்தபடி வெளியேறிவிட்டான்.
“பார்ரா, உங்கப்பாக்கு சிரிக்கவெல்லாம் வருதே. சரியான…” என்று சொல்ல,
“என்ன?…” என்றான் மீண்டும் அறைக்குள் எட்டி பார்த்து.
அவன் அறையை கடந்து செல்லாமல் அங்கே வாசலில் கதவுக்கருகே தான் நின்றிருந்தான் என்பதை இசை கவனிக்கவில்லை.
“என்ன சொன்ன?…” அவன் கேட்க,
“மாட்டு டாக்டர்ன்னு சொல்ல வந்தேன்…” இசை மாற்றி சொல்ல அவள் விழித்ததிலேயே கண்டுகொண்டான்.
“நோ, என்ன சொல்ல வந்த?…” உள்ளே வந்து கீர்த்தனன் முறைப்புடன் கேட்க,
“ம்ஹூம்…” என்றாள் தலையசைத்து.
“ஒன்னும் சொல்லமாட்டேன். பயப்படாத…”
“அட பயமெல்லாம் இல்லையே. நான் சொல்லிருவேன். நீங்க தான் பீல் பண்ணுவீங்க…” என்று சொல்ல,
“பீலிங்கா? என்னா என்னா பீலிங்?…” சத்தம் வராமல் உதடசைய சொல்லியவனுக்கு எதுவும் ஏடாகூடமாக இருக்குமோ என தோன்றியது.
“இல்லை நீ சொல்லு. என்ன சொல்ல வந்த?…” அவள் கூறவந்ததை தெரிந்துகொண்டே ஆக வேண்டிய உணர்வு முட்டியது.
“நாய் டாக்டர், நாய் டாக்டர்ன்னு சொல்ல வந்தேன்…” என்று அவள் சொல்லிய விதம், ‘நாய்சேகர்’ என்று நியாபகப்படுத்த,
“அடிப்பாவி…” என்று வேகமாய் வந்து அவளின் தலையில் நறுக்கென்று குட்டுவைத்தான்.
“ஆஆ டாக்டர்…” என்று தலையை பிடித்தபடி அவள் மெல்ல அலற,
“உன் வாய் மட்டும் குறையவே இல்லை. இன்னொருதடவை இதை சொல்லு வச்சிக்கறேன்…”
“பின்ன, நாய்க்கு ஊசி போட்டா உங்களை வேற என்ன சொல்ல?…” தலையை தடவியபடி இசை எழுந்து நின்றுவிட்டாள்.
“டாக்டர்ன்னு மட்டும் சொல்லு…”
“அதுக்குத்தான விரும்பி படிச்சீங்க? அப்பறம் அதை சொல்ல உங்களுக்கு என்ன கூச்சம்? எனக்கு அப்படித்தான் தோணுது…”
“உனக்கு தோணினா சொல்லுவியா? நான் நாய்க்கு மட்டுமா ட்ரீட்மென்ட் பன்றேன்?…”
“ஆனா அதுக்கு தானே கிளினிக் தனியா வச்சிருக்கீங்க?…” கொஞ்சமும் பின்வாங்காமல் அவள் பேச பேச கீர்த்தனனுக்கு பதில் கொடுக்கமுடியாத திகைப்பு.
மனதளவில் இன்னும் நெருக்கமில்லை. ஏன் இந்த திருமணத்தையே இன்னும் ஏற்கமுடியவில்லை. அதற்குள் இவ்வளவு உரிமையாக ஒரு பேச்சும், அருகாமையும்.
முன்பு இசையை இப்படி பேசவே கொஞ்சமும் அனுமதித்திடாதவன் இந்த கீர்த்தனன். ஆனால் இப்போது?
என்னவோ மனதிற்குள் பெரும் போராட்டம். எப்படி சாத்தியம்? தன்னால் இந்த வாழ்க்கையில் பொருந்திவிட முடியுமா? என்று ஏகப்பட்ட கலக்கத்துடனான குழப்பங்கள்.
ஆனாலும் அத்தனையும் கடந்து இவளிடம் இத்தனை இலகுவாக இப்படி பேசுகிறேனே என்ற வியப்பும் தொற்றியது.
இசையை பற்றி இன்னுமே பிரமிப்பாக இருந்தது, திருமணத்தை நிறுத்த அவள் முயற்சி செய்ததும், அடுத்து தன்னை மணக்க வேண்டிய நிர்பந்தம், தொடர்ந்த இப்போதையே பேச்சுக்கள்.
எல்லாம், எல்லாமே அவனை தடுமாற வைத்தது. தன்னைக்குறித்த ஆச்சர்யம் குறைந்து அவளின் இயல்பு என்னவோ செய்தது.
இத்தனை யோசனையிலும் பேண்ட் பாக்கெட்டில் கையை நுழைத்துக்கொண்டு அவளை பார்த்தபடியே தான் அவன் இருந்தான்.
கீர்த்தனனின் சிந்தனை இங்கில்லை என்றாலும் அந்த அசையாத ஆழ்ந்த பார்வை இசையை அவஸ்தையுற செய்ய,
“டாக்டர் வேற பக்கம் பார்க்கலாம்…” என்றாள் மெல்லிய குரலில்.
“நானா? என்ன சொல்ல வந்தேன்?…” இன்னும் குழம்பினான் கீர்த்தனன்.
“எனக்கென்ன தெரியும்? நீங்க தான் சொல்லனும்…”
“நிஜமாவா?…”
“ஆமா, முக்கியமான விஷயம்ன்னு வேற சொன்னீங்க…”
“ஓஹ்…” என அதை பற்றி யோசிக்க ஆரம்பித்துவிட்டான்.
“சரி நீங்க யோசிங்க. பசிக்குது. நான் போய் சாப்பாட்டை பிரிச்சு வைக்கறேன்…” என்று அறையை விட்டு வெளியேற கீர்த்தனன் அமர்ந்துவிட்டான்.
எத்தனை யோசித்தும் அந்த முக்கியமான விஷயம் என்ன என்று விளங்கவே இல்லை.
கட்டிலில் அமர்ந்தவன் அப்படியே மல்லாந்து படுத்துவிட மெல்ல உறங்கியும் போனான் களைப்பில்.
வெளியே வந்த இசை அடுப்படி நோக்கி செல்ல மண்டபத்தில் இருந்து வந்த கேரியர் இன்னும் பிரிக்கப்படாமல் இருந்தது.
“என்னடி பன்ற?…” அரசியின் சத்தத்தில் கேரியரை கழற்றிக்கொண்டு இருந்தவள் திரும்பி பார்த்தாள்.
“ஹப்பா உன்னை தான் கூப்பிடனும்னு இருந்தேன். க்கா, எனக்கு வேற சேலை கொண்டுவாயேன். இதை மாத்திக்கறேன்…” என்றாள் திருமண புடவையை காண்பித்து.
செய்துவைத்த அலங்காரம் அப்படியே இருக்க திருமணம் இப்படி நடந்துவிட்டதன் தாக்கம் கொஞ்சமும் முகத்தில் தெரியவில்லை.
சோகமோ, கோபமோ, வருத்தமோ எதுவுமில்லாது ஒரு நிர்மலமான முகமாக இருந்தது தங்கையினது முகம்.
“உனக்கொன்னும் கஷ்டமில்லையே?…” அரசி கேட்க,
“என்ன கஷ்டம். இதை இப்படி பிடி. ரசத்தை தனியா ஊத்த வேண்டாமா? இப்ப ட்ரெஸ்ல கொட்டாம இதை கழட்டனும். எவ்வளவு டைட்டா இருக்கு. இதுதான் ரொம்ப கஷ்டம்…”
அரசி எதை கேட்கிறாள் என்று தெரிந்தும் இசை பேச்சை மாற்றினாள் அதற்கு பதில் சொல்லாமல்.
“மழுப்பாதடி. உன்னை தெரியாதா? இங்க பாரு…” என தன் பக்கம் திருப்ப,
“முதல்ல சேலையை கொண்டுவா. இதை எல்லாம் கழட்டனும். அந்த பெட்டியும் எடுத்துட்டு வா. நீ ஹெல்ப் பண்ணு. அப்பறமா கேளு…” என்று சொல்லியவள் அப்பளத்தை கவரில் போட்டு கட்டி வைத்தாள்.
“உன்னையெல்லாம்…” என தலையில் அடித்துக்கொண்டவள் வெளியேற சுந்தரி வந்துவிட்டார்.
“இசக்கி, என்னம்மா, எதுவும் வேணுமா?…” என கேட்க,
“எங்கத்தை போய்ட்டீங்க? சாப்பிட்டீங்களா? மத்யானம் ஆகிருச்சு. இவ்வளவு சாப்பாடும் யாருக்காம்?…” என்றாள்.
கழற்றிய கேரியர்களின் பகுதிகளின் பதார்த்தங்களை தனியே வைத்து வாழை இலையை கத்தரித்து மூடி வைத்தாள்.
“அங்க உன் வீட்டுல தான் இருந்தேன்ம்மா. இப்ப அரசி வரவும் தான் நானும் வந்தேன்…”
“நான் தான் சேலை மாத்தனும்னு சொன்னேன் த்தை. கசகசன்னு முடியலை. இந்த ஒட்டியாணம் வேற டைட்டா இருக்கு….”
“இரு நான் லூஸ் பண்ணி விடறேன்…” என சுந்தரி வர,
“இல்லத்தை, அக்காவை இதோட பெட்டியை கொண்டுவர சொல்லிட்டேன் சேலையோட. அந்த பார்லர்க்கார அக்கா சரியான கறார் பேர்வழி. எதாச்சும் டேமேஜ் ஆச்சு உயிரே போன மாதிரி வாசல்ல நின்னு இரையும்…”