பேசிக்கொண்டே அவர்கள் வீட்டிற்கு வந்தவன் சென்னைக்கு வரும்படியும் அழைப்பு விடுத்திருக்க இசையின் குடும்பத்தினர் அகமகிழ்ந்து போனார்கள்.
விரைவில் நல்லநாள் பார்த்து அங்கே புறப்பட்டு வருவதாக சொல்லி பேசிக்கொண்டிருக்க இசையும் வந்துவிட்டாள் குழந்தையுடன்.
காலை உணவு தடபுடலாக ஏற்பாடு செய்ய இருக்க சைவம் போதும் என்றிருந்தான் கீர்த்தனன்.
அதில் ஏக வருத்தம். காலையே கறி எடுத்துவந்திருக்க அதனை செய்யமுடியாது போன வருத்தத்தை முகத்தில் காண்பிக்க,
“நிஜமாவே சைவம் போதும் மாமா. நான் ட்ரைவ் பண்ணிட்டு போகனும். அதுக்காக தான் சொல்றேன். அடுத்து ஊருக்கு வரப்போ செய்ங்க. இல்லையா நீங்க அங்க வந்து செஞ்சு குடுங்க…”
அவன் சொல்லுவதும் நியாயமாக பட்டது. கூடுதலாய் அவனை வற்புறுத்தவும் முடியவில்லை அவர்களால்.
அடுக்களைக்கு வந்தவள் அங்கே இட்லியுடன் சாம்பாரும், சட்னியும் என்று வகை வகையாய் இருக்க,
“ம்மா காலையில அப்பா கறி எடுக்க போனாங்க?…” என்றாள் மகள்.
“உன் வீட்டுக்காரர் தான் வேண்டாம்ன்னு சொல்லிட்டார்டி. என்ன செய்ய?…”
“ம்மா, அங்க கறி நம்ம ஊர் கறி மாதிரி இருக்காதாம். அத்தை சொல்லியிருக்காங்க. பார்த்து வாங்கனும்னு….”
“அதுக்கு என்னடி செய்யனும்ங்கற? உனக்கு வேணும்னா கொஞ்சூண்டு வறுக்கட்டா? வேக வச்சுட்டேன்…”
“இப்ப என்ன? உப்பு, மஞ்சள் போட்டு வேகவச்சதை அப்படியே பாத்திரத்துல போடு. கையலம்பாமா போடு. ஏசி கார் தான். ஒன்னுமாகாது. ஊருக்கு போய் வரட்டல் பண்ணிருவோம்…” என்றவர்,
“என்ன இசக்கி சரிதானே?…”
“இது போதும்…” என்று அப்படி ஒரு சிரிப்பு இசையிடம்.
ராக்குவும், அரசியும் பார்த்துக்கொண்டு இருந்தார்கள் மகளை. முகமெல்லாம் புன்னகையுடன் சுணக்கமின்றிய பேச்சுக்கள் அவளின் மனதை சொல்லியதை போல தோன்றியது.
வேறு என்ன வைத்திருக்கிறார் என ஒவ்வொன்றையும் ருசிபார்த்தபடி இசை இருக்க அரசி ராக்குவை தனியே நகட்டிக்கொண்டு வந்தாள் பின்னால் வேலை இருப்பதை போல.
“இல்லைங்கல. ஆனாலும் பார்த்த தானே? கலகலன்னு முன்ன போல அந்த பேச்சு. சாப்பாடு என்னன்னு கேட்டு முரண்டுன்னு. போதும்டி. அவ மனசு குளிர்ந்துருக்கு. முகமே சொல்லுது. அப்பறம் என்ன?…”
இருவரும் பேசிவிட்டுவர சுந்தரியிடம் வளவளத்தபடி இருந்தாள் இசை. தோசைக்கு கல்லை போட்டுவிட்டு சாப்பிட அழைத்துவிட்டார் ராக்கு.
பாயை விரித்து தண்ணீரை எடுத்து வைக்கவும் ஆண்கள் வந்து அமர ராக்குவின் பார்வை அசைவில்,
“டாக்டரோட நீயும் உக்காரு இசக்கி. அப்பறம் புறப்பட நேரமாகும்ன்னு சொல்லுவாங்க…” அரசி சொல்ல கீர்த்தனன் ஒன்றும் சொல்லவில்லை.
அவனருகே வந்து இசை அமர்ந்தாலும் மடியில் மகளை அமர்த்தியபடி அவளுக்கும் கொடுத்து தானும் சாப்பிட்டான்.
அவ்வப்போது கீர்த்தனன் சாப்பிடுவதை கவனித்து என்ன வேண்டும் என்று கேட்டுக்கொண்டாள் இசை.
இசையின் விழிகள் லேசாய் செவ்வரியோடியிருக்க கிளம்புவதால் வந்த கவலையின் கண்ணீரோ என நினைத்தான்.
உண்டு முடித்து அங்கேயே சாமி கும்பிட்டு தங்கள் வீட்டிலும் சாமி கும்பிட்டு வீட்டை அவர்களின் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு கிளம்பிவிட்டனர்.
அக்கம்பக்கத்தினர் வேடிக்கை பார்ப்பதும், அருகே வந்து கேட்கவும் அவர்களிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பினார் சுந்தரி.
பெருமாளுக்கு கண்கள் கலங்கி இருக்க எங்கே தான் அழுதால் மகள் உடைந்துவிடுவாளோ என பல்லை கடித்தபடி சிரிப்போடு இருந்தார்.
ராக்குவிடம் அத்தனை சொல்லியிருந்தாள் இசை. தகப்பனை பார்த்துக்கொள்ளும்படி.
யாரேனும் பேசினால் திருப்பி கொடுக்கும்படி என ஆயிரம் அறிவுரைகள். முன்பும் சொல்வது தான்.
முதல்நாள் ராக்கு மகளிடம் பேசியதற்கு ஈடாக இருந்தது இசையின் அன்றைய பேச்சுக்கள்.
இப்படி ஒரு மகளை பெற எத்தனை தவமிருந்தாரோ இந்த மனிதர் என்றுதான் தோன்றியது கீர்த்தனனுக்கு.
தன்னை போல் தன் மகளை பார்த்தான். இந்த அளவிற்கு தானும் தன் பெண்ணை இப்படி வளர்த்துவிட வேண்டும் என்னும் ஒரு அவா.
சொல்லிக்கொண்டு அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு காரில் ஏறினார்கள்.
இசையை முன்பக்கம் ஏறு என சொல்வதற்குள் குழந்தையுடன் அவள் பின்னே வந்து அமர்ந்துகொண்டாள்.
கீர்த்தனன் எதுவும் சொல்லவில்லை. ஆனால் மாணிக்கம், சுந்தரிக்கு எப்படி முன்னால் அமர சொல்ல என்று தயக்கம்.
எங்கே அவளை முன்னே உட்கார் என சொல்லி இசை மறுத்து, கீர்த்தனன் ஏதாவது கேட்டு என பேச்சை வளர்க்க வேண்டாம் என விட்டுவிட்டனர்.
“பார்த்துக்கங்க மதினி…” என்ற ராக்குவின் கையை பிடித்த சுந்தரி,
“சீக்கிரம் ஊருக்கு வாங்க எல்லாரும்…” என்றவர்,
“அரசி உன் புருஷனையும் கூட்டிட்டு வா. இப்பவே சொல்லி வச்சிரு…” என்று சொல்ல சரி என தலையசைத்தாள் அரசி.
அக்கா தங்கை இருவரும் தலையசைத்துக்கொள்ள இசையின் பார்வை பெருமாளிடமே நின்றுவிட பொங்கிய அழுகையை அடக்கியபடி தலையசைத்தாள்.
கார் நகர ஆரம்பிக்கவும் பெருமாளின் பாதங்கள் அதன் பின்னே நடக்க கண்ணீர் இறங்கிவிட்டது மனிதருக்கு.
“என் மக மனசே இல்லாம போறா ராக்கு…” என யாருமற்று கார் சென்ற பாதையில் நடந்தபடியே தனியே பேசிக்கொண்டு சென்றார்.
வீதியின் வளைவு வரை இசை பின்னால் பார்த்தபடியே இருந்தாள். பெருமாள் நடந்து வருவது தெரிய,
“ப்பா வீட்டுக்கு போங்க…” என முணுமுணுத்து சொல்ல,
“ப்பா…” என்றது தனுக்குட்டி.
இசை அப்பாவை தான் அழைக்கிறாளோ என்று நினைத்து சுந்தரியின் கையிலிருந்து திமிறி முன்னால் சாய்ந்து கீர்த்தனனின் சட்டையை பிடித்து இழுத்தது.
“என்னப்பா?…” என மகளிடம் அவன் கேட்டபடி அடுத்த தெருவிற்கு தாண்ட,
“ப்பா…” என இசையை காண்பித்தது குழந்தை.
முன்னால் இருந்த கண்ணாடியின் வழியே விழிகளை உயர்த்தி இசையை பார்த்தவன்,
“சரியாகிடும்டா பாப்பா…” என்றான் மகளிடம்.
மகளுக்கும், அவளுக்கும் பொதுவாக சொல்லியதை போல பெற்றோர்கள் எடுத்துக்கொண்டனர்.
இசை கீர்த்தனன் பேசியது கவனத்தில் பதிந்தாலும் அந்த நிமிடம் தந்தையை பற்றிய சிந்தனை மட்டுமே.
ஒன்றும் சொல்லாமல் கண்களை மூடிக்கொண்டாள் இசை. இனி தன்னிருப்பிடமே வேறல்லவா என்ற எண்ணங்களின் கனம் அழுத்தியது.
நெஞ்சை கவ்வி பிடித்த வலியை மென்று விழுங்கியபடி வந்தவளின் உணர்வுகள் யாரின் கண்ணிற்கும் அகப்படவில்லை.
சுந்தரி ஒரு கதவை ஒட்டியும், இசை ஒரு கதவை ஒட்டியும் அமர்ந்திருக்க நடுவே குழந்தையை படுக்க வைத்திருந்தார்கள்.
சொன்னதை போல காலை எட்டரை மணிக்கே கிளம்பியிருந்தவர்கள் பதினோரு மணி போல ஒரு இடத்தில் காரை ஓரம் கட்டிவிட்டு டீ குடிக்க நிறுத்தினார்கள்.
“இசக்கி வா பாத்ரூம் போட்டு வருவோம். அப்படியே டீ குடிச்சுட்டு…” என்றதும் இறங்கியவளுக்கு இப்போதைக்கு கொஞ்சம் தேவலாம் போல் இருந்தது வெளிக்காற்று.
ஏசி காரில் இவ்வளவு தூரம் பயணம் செய்ததில்லை இசை. அதுவே தலையை பிளக்க செய்தது.
ஏசியை அணைத்து ஜன்னலை திறந்துவிட நினைத்தாலும் மற்றவர்களின் சௌகரியத்தை பார்த்து ஒன்றும் சொல்லவில்லை.
அமைதியாக இறங்கி சுந்தரியுடன் சென்றுவிட்டு வந்தவளுக்கு டீ தயாராக இருக்க மாணிக்கத்துடன் பேசியபடி கீர்த்தனன் குடித்துக்கொண்டு நின்றான்.
காரில் குழந்தை இன்னும் நன்றாக உறக்கத்தில் இருக்க ஒரு பக்கம் நன்றாக திறந்து வைத்திருந்தனர்.
மீண்டும் காரில் ஏற மாணிக்கம் சுந்தரி சொல்லியதை போல முதலில் பின்பக்கத்தில் ஏறி அமர்ந்துகொண்டார்.
“மாமா நீங்க…”
“ஒண்ணுமில்லம்மா, தூக்கம் வருது. முன்னாடி அவனோட இருந்து தூங்கிட்டா அவனுக்கு தூக்கம் வந்திரும்ல. அதான். நீ தூங்கமாட்டியே? கொஞ்ச நேரம் முன்னாடி உட்கார். அடுத்த ஆல்ட்ல நான் மாறிக்கறேன். உன் அத்தைக்கு முன்னால ஒத்துவராது…”
அவள் வேறெதுவும் பேசிவிடாமல் மறுத்துவிடாமல் இருக்க கடகடவென்று மனப்பாடம் போல செய்தியாய் வாசிக்க கீர்த்தனனுக்கு சிரிப்பு வந்தது.
“உட்கார்…” என திகைப்பாய் நின்ற இசையிடம் சொல்லிவிட்டு சுற்றிக்கொண்டு சென்று காரில் ஏறினான் கீர்த்தனன்.
மாணிக்கம் எங்கே தான் தூங்கவில்லை என்பதை மருமகள் கவனிப்பாளோ என கண்ணை மூடிக்கொள்ள அதுவே ஆழ்ந்த உறக்கத்திற்கு இட்டு சென்றது.
இசை கண்களை மூடுவதும் திறப்பதுமாக தலையை ஒரு கையால் பிடித்தபடி அமர்ந்திருக்க அவளை பார்த்தவன்,
“நீ தூங்கு இசை. எனக்கு நோ இஷ்யூஸ்…” என்றான் கீர்த்தனன்.